Wednesday 20 October 2010

இந்தியாவின் பெருமை? எங்குமில்லாச் சிறுமை!


(கம்யூனிசம் என்றால் - 12)


ந்தியக் கண்டத்திற்குள் நுழைந்த ஆரிய இனத்தவர்களின் வாரிசுகளாக வந்தவர்கள் நிலங்களையும் வளங்களையும் வளைத்துப்போட்டார்கள். அப்படி வளைத்துப்போட முடியாத இடங்களில், ஏற்கெனவே அவற்றைக் கைப்பற்றி மக்களை ஆண்டுகொண்டிருந்த மன்னர்களோடு சமரசம் செய்துகொண்டார்கள். அந்த மன்னர்களுக்கும் தங்களது ஆட்சியை நிர்வகிப்பதற்கு கல்வியறிவுள்ள வழிகாட்டிகள் தேவைப்பட்டது. அந்த வழிகாட்டிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டார்கள் ஆரிய வாரிசுகள்.

சமுதாயத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர் தாங்கள தயாரித்த பொருள்களைக் கொண்டுசென்று மற்றவர்களுக்கு விற்பது, அவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்வது என்ற நடைமுறையும் வளர்ந்தது. எடுத்துக்காட்டாக, சமையலுக்குத் தேவையான பானைகளைத் தயாரிப்பார் குயவர். ஆடைகள் தயாரிப்பார் நெசவாளி. அவருக்கு ஆடைகள் தேவை; இவருக்குப் பாத்திரங்கள் தேவை. இருவரும் அவரவரிடம் கூடுதலாக இருக்கிற பொருள்களைக் கொடுத்து மாற்றிக்கொள்வார்கள். இப்படியாகத் தொடங்கிய பண்டமாற்று முறை பிற்காலத்தில் திட்டமிட்ட வணிக நடைமுறையாக மாறியது. பொருள்களையே கொடுத்து வாங்கிவதற்கு பதிலாக, பொருள்களின் மதிப்பில் பணம் என்பது உருவானது.

பானை செய்கிறவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து பானையே செய்துகொண்டிருந்தார்கள். துணி நெய்கிறவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து அதையே செய்துகொண்டிருந்தார்கள். இவர்கள் அல்லாத மற்ற பிரிவினர் தொடர்ந்து வயல்களிலும் பட்டறைகளிலும் கட்டடங்கள் என பல்வேறு பணிகளில் உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஊரையும் வீடுகளையும் தூய்மைப் படுத்துகிற பணிக்கு என ஒதுக்கப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டார்கள்.

இப்படியான ஏற்பாட்டில் சமுதாயம் அமைதியாக இருந்தபோது, நிச்சயமாக சிலர் அவர்கள் வசதியாக வாழ்கிறபோது நாம் மட்டும் ஏன் இப்படி அவர்களுக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்? உழைத்துக் கொடுக்கிற நாம் ஏன் ஊருக்கு வெளியே இருக்க வேண்டும், என்றெல்லாம் கேள்வி கேட்கத் தொடங்கியிருப்பார்கள்தானே? அய்ய்யோ! அவர்கள் அப்படிக் கேள்வி கேட்டால் அது ஆபத்தாயிற்றே!

அப்படிக் கேள்வி கேட்க இயலாதவர்களாக மக்களை மாற்றுகிற மிகப்பெரிய சமுதாய மோசடி இங்கேதான் தொடங்குகிறது. படை பலத்தோடு இருக்கிற அரச குடும்பத்தினர் தொடர்ந்து ஆட்சியாளர்களாகவே இருப்பது, அவர்களுக்கு ஆலோசனை கூறுகிற குருமார்களாகத் தங்களை வைத்துக்கொண்டு மறைமுகமாக ஆள்வது, மற்ற பிரிவினர் அவரவர் வேலைகளைச் செய்வது என்கிற ஒரு சமுதாய ஏற்பாடு உருவாக்கப்படுகிறது. அந்த ஏற்பாட்டில், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு சமூகமும் எப்படியெப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது. இதைத் தீர்மானித்தது மனிதர்கள் அல்ல, எல்லா உயிர்களையும் படைத்த ஆண்டவன்தான் என்ற தத்துவம் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

உலகைப் படைத்த ஆண்டவனாகிய பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவன் - குருமார் குலத்தவனாகிய பிராமணன்; தோளிலிருந்து பிறந்தவன் - அரசகுலத்தவனாகிய சத்திரியன்; இடுப்பிலிருந்து பிறந்தவன் - மற்ற தொழில்களைச் செய்கிற வைசியன்; காலிலிருந்து பிறந்தவன் - இவர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டு உழைத்துக்கொண்டிருக்க வேண்டிய சூத்திரன் என்பதாக அந்தத் தத்துவம் உருவாக்கப்படுகிறது.

அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை விட மேலான நிலையில் பிராமணன் வைக்கப்பட்டாலும் கூட தங்களது அதிகாரத்துக்குப் பங்கம் இல்லை என்பதால் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள். வைசியர்களாகிய பிற தொழில் சமூகங்களைச் சேர்ந்தோரும் தங்களுக்கு மேலே சத்திரியனும் பிராமணனும் இருந்தால் கூட, தங்களுக்குக் கீழே சூத்திரன் இருப்பான் என்பதால் இதை அங்கீகரித்தார்கள். காட்டில் அலைந்துகொண்டிருப்பதை விட அரண்மனையில் சேவகர்களாகவோ, வயலில் உழுகிறவர்களாகவோ, மற்ற வேலைகளைச் செய்கிறவர்களாகவோ இருந்து வாழ்க்கைக்கு வழி செய்துகொள்ளலாம் என்று எண்ணி சூத்திர சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள்.

கீழே தள்ளப்பட்ட சமூகங்களுக்கிடையே, அந்த சாதியை விட நம்ம சாதி உயர்ந்தது என்ற எண்ணப்போக்குகள் ஏற்படுத்தப்பட்டு, அதிலே திருப்தி அடைந்தார்கள். இன்று கூட, அலுவலகத்தில் வேலை செய்கிற ஒரு எழுத்தர் தனக்கு மேலே தலைமை எழுத்தாளர், மேலாளர் என்றெல்லாம் இருந்தாலும் தனக்குக் கீழே உதவியாளர், துப்புரவாளர் என்றெல்லாம் இருப்பதில் திருப்தி அடைவது போன்ற ஏற்பாடு இது.

இப்படி நான்கு பெரிய பிரிவுகளாக சமுதாயம் பிரிக்கப்பட்ட ஏற்பாட்டிற்குப் பெயர்தான் வர்ணாசிரமம். அதை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பணிய வைக்க இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன. ஒன்று, இதுதான் சட்டம், மரியாதையாக இதற்குக் கட்டுப்பட்டு இருங்கள் என்று மக்களுக்கு ஆணையிடுகிற அரசியல் வழிமுறை. இன்னொன்று, அப்படி மனிதர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட மாட்டேன் என்று அடம்பிடிப்போரைப் பணியவைக்க, இவையெல்லாம் கடவுளால் தீர்மானிக்கப்பட்ட ஒழுக்கங்கள் என்று மூளைச் சலவை செய்கிற ஆன்மீக வழிமுறை.

அரசியல் வழிமுறையை திட்டவட்டமாகத் தொகுத்துக்கொடுத்த ஆவணங்களில் முக்கியமானது அர்த்தசாஸ்திரம் என்ற அக்காலத்து அரசமைப்பு சாசனம். ஆன்மீக மூளைச்சலவையை வெற்றிகரமாகச் செய்த ஆவணங்களில் முக்கியமானது பகவத் கீதை என்ற தத்துவ நூல்.

அந்தக் கால கல்வியறிவுக்கு அடையாளமாகிய வேத நூல்களை பிராமணன் மட்டும்தான் படிக்க வேண்டும் மற்ற வர்ணத்தவர்கள் படிக்கக்கூடாது என்ற விதிகள் எழுதப்பட்டன. தன் சாதிக்கான கடமைகளைச் செய்யத்தவறுகிறவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. தன் சாதியோடு நிற்காமல் அடுத்த சாதியோடு கலக்க முயல்கிறவர்களுக்கோ கொடூரமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. இந்தப் பிறவியில் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுக்கத்தோடு செய்கிறவர்கள் அடுத்த பிறவியில் மேலான நிலையை அடைவார்கள் என்பதாகவும் ஒரு நம்பிக்கை வலை விரிக்கப்பட்டது.

இப்படி அரசியல் அதிகாரம், ஆன்மீக அரிதாரம் இரண்டுமாகச் சேர்ந்துதான் இந்த சாதிக்கட்டுமானத்தை நியாயப்படுத்தி மக்கள் ஏற்கும்படி செய்தன. தலைமுறை தலைமுறையாக இந்தப் பாடம் போதிக்கப்பட்டது. இப்படி வாழ்வதே பண்பாடு, கலாச்சாரம் என்பதாக போதை ஏற்றப்பட்டது. அந்தக் காலத்திலிருந்தே, பிராமணர் ஆதிக்கத்துக்குப் போட்டியாகக் கல்வியிலும், அரசாங்க நிர்வாகம் போன்ற மற்ற துறைகளிலும் முன்னுக்குவந்திருந்த மற்ற சாதிக்காரர்களும் இருந்தார்கள். சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் மதிக்காத இவர்கள் தங்களை உயர்சாதி என்று சொல்லிக்கொண்டார்கள்.

இந்த ஏற்பாட்டில் நுட்பமாக இரண்டு பெரிய வஞ்சகங்கள் இழைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். ஒரு வஞ்சகம்: எந்த வர்ணமானாலும் அல்லது எந்தச் சாதியானாலும் அதிலே ஆண்தான் மையப்படுத்தப்பட்டான். பெண் அவனுக்கு அடங்கியிருக்க வேண்டியவளாக்கப்பட்டாள். அழகாகவும், கட்டுப்பட்டும் இருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்று மனதில் உருவேற்றுகிற கதைகளும் கவிதைகளும் புறப்பட்டன.

இன்னொரு வஞ்சகம்: தொல்குடி மக்களும், துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சாதிகளும் மேற்படி நான்கு வர்ணங்களில் எதிலேயும் சேர்க்கப்படவில்லை. சூத்திர வர்ணத்தில் கூட அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. அவர்கள் கடவுளின் கருணையைப் பெறாத மிலேச்சர்கள், சண்டாளர்கள், தெருத்தெருவாகச் சென்று அரண்மனைத் தகவல்களை பறையடித்துச் சொல்கிற பறையர்கள், ஊரின் மேட்டுப்பகுதிக்கு வரக்கூடாதவர்களாகப் பள்ளப்பகுதிகளிலேயே வசிக்க வேண்டிய பள்ளர்கள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு சாதியும் தனக்கு மேலே இருந்துகொண்டு தன் தலையை மிதிக்கிறவர்கள் பற்றிக் கவலைப்படாமல், தனக்குக் கீழே தன் கால்களால் மிதிபடுகிறவர்கள் இருப்பார்கள் என்ற ஏற்பாட்டில் ஒரு போலியான மனநிறைவும் பெருமையும் அடைகிறது. அதைக் காப்பாற்றுவதற்காக சாதிக்குள்ளேயே திருமணம் போன்ற இறுக்கமான நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவின் தனித்துவமான, மிக வலிமையான சமுதாயக் கட்டமைப்பு இது.

இதற்கும், இந்தியாவில் ஏன் கம்யூனிச இயக்கம் பெரியதொரு சக்தியாக வளரவில்லை என்ற கேள்விக்கும் என்ன தொடர்பு? தொடர்ந்து பேசுவோம்.

Wednesday 6 October 2010

மனு நீதி மானுட அநீதி



(கம்யூனிசம் என்றால் - 11)

உழவு ஒரு அடிப்படைத் தொழிலாக உருவாகியிருக்க அத்துடன் இணைந்து ஊர் உருவெடுத்தது. ஊருக்குத் தேவையான கட்டுமானப் பணிகள், தச்சு வேலைகள், ஆடை நெய்தல், பானை செய்தல், மரமேறுதல், காவல் காத்தல், துணிகளை வெளுத்தல், முடி வெட்டுதல் என்று பல்வேறு தொழில்களும் பரிணமித்தன. நிலவுடைமையைப் பாதுகாக்கவும், அவரவர் பணிகளைக் கண்காணிக்கவும், வழிகாட்டவும், கைப்பற்ற வருகிறவர்களைத் தடுக்கவும் அரசு என்ற அமைப்பு உருவானது. தங்களது உடல் வலிமையாலும், ஆள் பலத்தாலும், அறிவாற்றலாலும் அந்த அரசின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தவர்கள் அரசர்களானார்கள்.

அரசு என்ற அதிகார அமைப்பு சொத்துடைமையோடு இருந்தவர்களுக்கு சாதகமாக சட்டங்களை உருவாக்கியது. நிலம் இல்லாமல் மற்ற தொழில்களில் ஈடுபட்டவர்களைத் தொடர்ந்து அந்தப் பணிகளிலேயே ஈடுபட வைப்பதற்காக - அதாவது அவர்கள் அரசுப் பதவிகளுக்கோ, அரசாங்கத்தை நெருங்கியிருப்பவர்களின் உடைமைகளுக்கோ போட்டிக்கு வராமல் தடுப்பதற்காக - கடவுளின் கட்டளைப்படி ஒவ்வொருவரும் தங்களது குடும்பத் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஊருக்குள் வாழ முடியாமல் காடுகளுக்குள் அமைந்த கிராமங்களில் இருந்தவர்கள், குகைகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்தார்கள். அரசரையும் ஆண்டைகளையும் பார்ப்பதற்காக ஊருக்குள் வந்தபோது, அங்கிருக்கும் வசதி மிக்க வீடுகளும், தெருக்களும், சாலைகளும், குளங்களும், தானியங்களை சேமித்துவைக்கும் ஏற்பாடுகளும் அவர்களை மலைத்துப்போக வைத்தன. அத்தகைய எந்த வசதியும் இல்லாமல் காடுகளில் விலங்குகளில் தாக்குதல்களுக்கு இலக்காகிக்கொண்டு, குளிரையும் கோடை வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு, மழையில் நனைந்துகொண்டு, காட்டுத் தீயில் வெந்துகொண்டு, தானியங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறபோது சுற்றி அலைந்துகொண்டு வாழ்கிற வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது! இப்படித்தான், வசதியான வாழ்க்கை என்பது சொர்க்கம் என்றும், அவலங்களோடு வாழ்வது நரகம் என்றும் சிந்தனைகள் தோன்றின.

இந்த சொர்க்கமும் நரகமும் இங்கேதான் இருக்கிறது என்றால் சொர்க்கத்தைக் கைப்பற்றக் கலகம் வெடிக்குமே? இந்தப் பிறவியில் ஒருவர் சுகபோக சொர்க்க வாழ்க்கை வாழ்வதும், இன்னொருவர் துன்பங்கள் நிறைந்த நரக வாழ்க்கை வாழ்வதும் அவர்களது முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கும் பாவத்திற்கும் ஏற்ப பரம்பொருளால் முடிவு செய்யப்பட்டதாகக் கற்பிக்கப்பட்டது. அதை ஏற்று இந்தப் பிறவியில் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் ஏற்ப கடவுள் அவருக்கு மறுபிறவியில் சொர்க்கத்திலோ நரகத்திலோ இடம் அளிக்கிறார் என்ற கற்பனைக் கதைகள் முளைத்தன. அந்தக் கதைகளை வலுவாகச் சொல்கிறவர்களாக வந்தவர்களே பார்ப்பணர்கள்.

நிலம் வைத்திருந்தவர்கள், அதிலே உழைத்தவர்கள், மற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் எங்கேயிருந்து வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம். பார்ப்பணர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்? சமுதாயத்திற்காக மற்றவர்கள் ஆளுக்காள் ஒரு பணியைச் செய்துகொண்டிருக்க, பார்ப்பணர்கள் என்ன பணி செய்தார்கள்? எப்படி அவர்கள் எல்லாச் சாதிகளிலும் உயர்ந்த சாதியாகத் தங்களை அறிவித்துக்கொண்டார்கள்?
அரச குடும்பத்தினரை விடவும் உயர்ந்த சாதியாக எப்படி தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள்?

இன்றைக்கு சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன், ஆசியா கண்டத்தின் மத்திய வட்டாரங்களிலிருந்து வந்தவர்கள் பார்ப்பணர்களின் மூதாதையர்களாகிய ஆரியர்கள். இன்று ஈரான், இராக் போன்ற நாடுகள் அமைந்துள்ள, பாரசீக இன மக்கள் வாழ்ந்த வட்டாரம் அது. அப்போது இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இனத்தவர்கள் நிலத்தில் உழுது பயிரிடுவது, அதன் அடிப்படையில் வீடுகள் கட்டுவது, பல வீடுகள் சேர்ந்த ஊர்கள் அமைப்பது என்றெல்லாம் அக்காலத்திய நவீன வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆரியர்களோ காடுகளில் வேட்டையாடுவது, மேய்ச்சல் போன்ற தொழில்களையே செய்துவந்தார்கள்.

மேய்ச்சலுக்கும் வேட்டைக்கும் விரிந்த நிலங்களையும் காடுகளையும் தேடி பூமியின் பல்வேறு வட்டாரங்களுக்கும் அவர்கள் பரவினார்கள். அப்படித்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு வட்டாரத்திற்கு வந்தார்கள் (இன்று பஞ்சாப் இருக்கும் வட்டாரம்). அப்படி பல்வேறு நிலப்பகுதிகளையும் கடந்து வந்தபோது, இயற்கையில் ஏற்படும் புயல், மழை, வெயில் போன்ற மாற்றங்களைக் கவனித்தார்கள். அந்த அனுபவத்தில், அடிப்படையான வானியல் அறிவோடும் வந்தார்கள்.

ஆரியர்கள் இப்படி கண்டம் விட்டுக் கண்டம் இடம் பெயர்ந்தபோது, புதிய இடங்களில் நாகரிக சமூகங்களாக வாழ்ந்துகொண்டிருந்த இனங்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்த இடங்களைக் கைப்பற்றவும் செய்தார்கள்.
பூமியின் மற்ற பகுதிகளில் தங்களை ஒன்றுபட்டு எதிர்த்த மக்களை ஒடுக்குவதற்குக் கொடுமையான போர்முறைகளைக் கையாண்டார்கள். இந்தியப் பகுதிக்கு வந்தபோது, தொடக்கத்தில் அப்படிப்பட்ட அடக்குமுறைகளையும், எதிர்த்தவர்களை அழிக்கும் நடைமுறைகளையும் ஆரியர்கள் பயன்படுத்தவே செய்தார்கள். ஆயினும், அப்படிப்பட்ட அடக்குமுறைகள் இல்லாமலே இந்தியக் கண்டத்து மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆம், இங்கே மக்கள் சமூகக் குழுக்களாக - அதாவது சாதிப் பிரிவுகளாக - வேறுபடுத்தப்பட்டிருந்தது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அருமையான வாய்ப்பாகிப் போனது.

அந்தப் பிரிவினையை இறுதிப்படுத்துகிற, அதில் தங்களுக்கு உயர்வான இடத்தை உறுதிப்படுத்துகிற உத்திகளில் இறங்கினார்கள். ஏற்கெனவே இங்கே நிலங்களை வளைத்துப்போட்டு, பல ஊர்களை இணைத்து நாடுகளாக மாற்றி அவற்றை ஆட்சி செய்துகொண்டிருந்த அரசர்களோடு போரிட்டு மோதிக்கொண்டிருப்பதை விட, அவர்களோடு சமரசம் செய்துகொள்கிற உத்தி அது. அதேபோல், உடல் உழைப்பு சாராத மற்ற தொழில்களில் ஈடுபட்டு இடைத்தட்டு நிலையில் இருந்த சமூகங்களோடும் சமரசம் செய்துகொள்கிற உத்தி அது. நிலத்தில் உழுது பாடுபட்டவர்களும், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களும், முடிதிருத்துதல், சடலங்களை அடக்கம் செய்தல் போன்ற இதர அடிமைத் தொழில்களைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டவர்களும் அதே தொழில்களையே விசுவாசத்தோடு செய்துவருமாறு தீர்மானித்த உத்தி அது.

அந்த உத்திக்குப் பெயர்தான் வர்ணாசிரம கோட்பாடு. பிறப்பால் மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் உண்டு என்று இந்தியத் துணைக்கண்டத்துக்கே உரிய தனித்துவமான அந்தக் கோட்பாட்டை எழுத்துப்பூர்வமாகச் சட்டமாக்கியதுதான் மனு நீதி என்ற மானுட அநீதி. அது என்ன?

அடுத்த சந்திப்பில் அதையும் பார்த்துவிடுவோம்.

Saturday 2 October 2010

சாதிய நச்சு மரத்தின் வேர்


கம்யூனிசம் என்றால் - 10


பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபடுத்தும் சாதி என்ற அவமானம் இந்தியாவில் எப்படித் தோன்றியது என்ற கேள்வியோடு முந்தைய கட்டுரையிலிருந்து விடைபெற்றோம். இப்போது அந்தக் கேள்விக்கு விடை காண முயல்வோம்.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரிய இனத்தவர் ஆக்கிரமித்த பிறகு, அவர்களது வழித்தோன்றல்களாகிய பார்ப்பணர்களால்தான் சாதிப் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறப்படுவதுண்டு. சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடுகிறவர்களில் ஒரு பகுதியினர், பார்ப்பணர்கள்தான் சாதி வேற்றுமைக்குக் காரணம் என்று நியாயமான ஆவேசத்துடன் கூறுவார்கள். சாதிப் பாகுபாடு என்ற அசிங்கம் இந்தியாவில் கெட்டிப்படுத்தப்பட்டதில் பார்ப்பணர்களாகிய ஆரியத் தலைமுறையினருக்கு மிக முக்கியமான பங்கிருப்பதை மறுக்க முடியாது.ஆனால் அவர்களை மட்டுமே இதற்கு முழுப் பொறுப்பாக்கிவிட முடியாது. அப்படிச் செய்வது - பறையர், பள்ளர், அருந்ததியர், சண்டாளர், சக்கிலியர் என்றெல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் முக்குலத்தோர், நாடார், யாதவர், வன்னியர் என்றெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் பின்னுக்குத்தள்ளிவிட்டு, மண்ணின் வளங்களையும் அதிகார நலன்களையும் முன்பு அனுபவித்த, இப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்கிற - தங்களை முன்னேறிய சாதியினராக வைத்துக்கொண்ட பார்ப்பணரல்லாத பிற சாதிகளின் சூழ்ச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாகிவிடும். ஆரியர்கள்தான் சாதிகளை உருவாக்கினார்கள் என்றால், உலகின் பல பகுதிகளிலும் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு நடந்ததே, அங்கேயெல்லாம் ஏன் சாதிப்பாகுபாடுகள் ஏற்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

அந்தக் கால பார்ப்பணர்கள் சாதி வேறுபாடுகளை கெட்டிப்படுத்துவதற்கு ஏற்றதொரு சூழல், அவர்களது ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்பே இங்கே இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது என்ன சூழல்?நிலத்தைக் கைப்பற்றி விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்வது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டவர்கள் அப்படிப் புரிந்துகொள்ளாதவர்களை விரட்டிவிட்டு நிலங்களைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோம். அந்த நிலங்களில் உழைப்பதற்குத் தொழிலாளிகள் வேண்டுமே? நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், விரட்டியடிக்கப்பட்ட அப்பாவி மக்களைப் பிடித்து வந்து உழைக்க வைத்தார்கள்.

சொந்த நிலம், சொத்து வளம் என்றெல்லாம் அனுபவிக்கத் தொடங்கியவர்கள் தாங்கள் வசதியாக வாழ்வதற்காக வீடுகளைக் கட்டினார்கள். அவ்வாறு வீடுகள் கட்டப்பட்டதால் ஊர்கள் உருவாகின. விவசாயத்திற்கும் இதர தேவைகளுக்கும் தண்ணீர் தேவை அல்லவா? ஆகவே ஆறுகளின் கரைகளையொட்டியே அன்றைய ஊர்கள் உருவாகின.வசதியானர்களின் வீடுகளில் தங்குவதற்கான அறை, துங்குவதற்கான அறை, உண்பதற்கான அறை, கழிப்பதற்கான அறை என்றெல்லாம் அமைக்கப்பட்டன. இப்போது அந்தக் கழிப்பறைகளையும், ஊரையும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.அந்த வேலையிலும், நிலத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களும், காடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

உலக அளவில் வெள்ளையர்கள் புகுந்த அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்த கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் போன்ற இனங்களின் மக்கள் எப்படி கொடூரமான முறையில் அடிமைப் படுத்தப்பட்டு இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துவைத்திருப்பீர்கள். அதே போல் இங்கே, புதிய ஊர் அல்லது நகரங்களில் அடிமட்ட வேலைகளை, ஊரிலிருந்து விரட்டப்பட்ட மக்களும் வனப் பகுதி மக்களும் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்களுடைய வாரிசுகளும் அதே வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு அவர்களது உழைப்பை உறிஞ்சி வாழ்ந்தவர்களின் வாரிசுகளோ, தொடர்ந்து மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறவர்களாகவே இருக்கலாம் என்று விதிகள் உருவாக்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் கடவுளின் கட்டளைப்படியே நடக்கின்றன என்று கதைகள் உருவாக்கப்பட்டன. ஒருவன் சொத்துக்களை அனுபவிப்பதும், ஒருவன் அந்த சோற்றிக்கில்லாதவனாக அடிமை வேலை செய்வதும் ஆண்டவனின் தீர்மானம் என்று மூளைகளில் ஏற்றப்பட்டது. அவரவர் முன்ஜென்மத்துப் பாவ புண்ணியங்கள் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் அவர் எந்த சமூகத்தில் பிறக்க வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று இறைவனால் முடிவு செய்யப்படுகிறது என்ற சிந்தனைகள் புகுத்தப்பட்டன. இந்தப் பிறவியில் இப்படிப்பட்ட சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருந்தால், அடுத்த பிறவியில் ஆண்டவன் உன்னை உயர்ந்த குலத்தில் பிறக்க வைப்பான் என்று ஆசை காட்டப்பட்டது. அதை நம்ப வைக்கிற கற்பனைக் கதைகள் சொல்லப்பட்டன.

இதையும் மீறி யாராவது நான் ஏன் அடிமைத்தொழில் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால், அவர்களுக்குக் கசையடி, சாணிப்பால் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. படிப்படியாக பல்வேறு தொழில்கள் உருவானபோது, ஒவ்வொரு தொழிலிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது வாரிசுகளும் அதே தொழில்களையே செய்தனர்.

இப்படியாக, தொழில் அடிப்படையில், சரியாகச் சொல்வதானால் தந்திரசாலிகள் பரம்பரை பரம்பரையாக சுகங்களை அனுபவித்திருக்க, அப்பாவிகள் தலைமுறை தலைமுறையாக அடிமை வேலைகளைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் சமூகப் பிரிவுகள் கட்டமைக்கப்பட்டன. இதில் ஆதிக்கவாதிகளாக இருந்த சமூகங்கள், தங்களுடைய அதிகாரங்களுக்கும், சுகவாழ்க்கைக்கும் போட்டி வந்துவிடக்கூடாது என்று தங்களுடைய சமூகங்களுக்குள்ளேயே திருமண உறவு கொள்வது, தங்களுக்கென வழிபாட்டுச் சடங்குகளை வைத்துக்கொள்வது என்று விதிகளை உருவாக்கினார்கள். அடிமைப்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும், பாதுகாப்பு கருதி தங்களுக்குள்ளேயே திருமண உறவு, தங்களுக்கென வழிபாட்டு முறைகள் என்று ஏற்படுத்திக்கொண்டார்கள்.

இதை மீறி, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த சமூகங்களாகக் கூறப்பட்டவர்களோடு காதல் உறவு கொண்டால், மேற்படி உயர் சமூகத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி, மாறு கை மாறு கால் வாங்குவது போன்ற கொடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட்டன.

இப்படியாகக் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்பாட்டிற்குப் பெயர்தான் சாதி.

இதில் பார்ப்பண சாதியினரின் பங்கு என்ன? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.