Thursday 22 April 2010

உலக புத்தக தினம்



அலமாரியில் அடுக்கப்பட்ட உயிர்த்துடிப்பு


னித வரலாற்றில் மூன்று நிகழ்வுகள் மிக முக்கியமானவை. ஒன்று ஒலிக்குறிப்புகளின் ஒருங்கிணைப்பில் சொற்களாகவும் வாக்கியங்களாகவும் உருவெடுத்த மொழியின் பரிணாமம். இரண்டு, அதே ஒலிக்குறிப்புகள் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் உருவெடுத்த எழுத்தின் பிறப்பு. மூன்று, அந்த எழுத்துக்களின் பதிவாக வந்த புத்தகத்தின் வருகை. இந்த மூன்றிற்கும் அடியிழையாக ஓடுவது கதை சொல்வதிலும் கதை கேட்பதிலும் மனிதர்களுக்கு உள்ள ஈடுபாடு.

கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால் நம் கடந்த காலங்கள் தெரியாமலே போயிருக்கும், வருங்காலத்திற்கான கனவுகளுக்கு விதை ஊன்றப்படாமலே போயிருக்கும். இன்றைய நிகழ்காலத்தையும் உருவாக்கிக்கொடுத்த அந்தக் கதை சொல்லும் மரபுக்கும், வரலாற்றுப் பதிவுகளுக்கும், கலை, அறிவியல், அரசியல் அனைத்திற்குமே செலுத்துவாகனமாக வந்ததுதான் புத்தகம்.

புத்தகங்கள் நம்மை இயல்பாகவே படிப்பாளிகளாகவும் மாற்றுகின்றன. நிலத்தின் எல்லைகளோ, காலத்தின் வரம்புகளோ இல்லாமல் புத்தகங்கள் தருகிற ஆதாயங்களுக்கு அளவே இல்லை. வெவ்வேறு வரலாறுகளுக்கும், வெவ்வேறு பண்பாடுகளுக்கும் நம்மை இட்டுச் செல்லக்கூடியவை புத்தகங்களே. நம் தொன்மைகளோடு நம்மை அடையாளப்படுத்திக் காட்டுபவை புத்தகங்களே. இலக்கிய இன்பங்களை வழங்கி வாழ்க்கை நுட்பங்களையும் புத்தகங்கள்தான் நமக்குக் கற்றுத் தருகின்றன. தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் எதையும் காட்சிப்படுத்தி கண்முன் நிறுத்துகின்றன என்பதில் ஐயமில்லை. ஆயினும் புத்தகங்களின் வரிகளினூடே கிடைக்கிற உணர்வு அனுபவம் ஈடு இணையற்றது. ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

உலகத்திற்கு விளக்கம் அளிப்பதற்காக அல்லாமல், உலகத்தை மாற்றியமைப்பதற்காக கார்ல் மார்க் வழங்கிய மூலதனம் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளுக்கும் அவர் படித்த புத்தகங்கள்தான் ஆதாரமாய் அமைந்தன.. இங்கே சிங்காரவேலரும், பெரியாரும் தங்கள் இயக்கங்களை முனைப்புடம் மேற்கொள்ள வழிகோலியதும் அவர்கள் படித்த புத்தகங்கள்தான். புத்தகங்களின் சிறப்பு பற்றி இதற்கு மேல் சொல்லவேண்டுமா என்ன?

புத்தகங்கள் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல; மாறாக அவை அலமாரிகளில் உயிரோடு இருக்கும் மனித மனங்கள், என்று கூறினார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர்ட் ஹையாட். காகிதத் தொகுப்பில் குடியிருக்கும் மனங்களைக் கொண்டாடுகிற நாள்தான் ஏப்ரல் 23. உலக இலக்கியத் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது. நாடக மேதை சேக்பியர் பிறந்தநாளும் இறந்தநாளும் இதுதான். அவர் மறைந்த அதே 1616ம் ஆண்டில் அதே ஏப்ரல் 23ல், பெயின் நாட்டு நாவலாசிரியர் கவிஞர் மிகுல் டீ செர்வான்டீ காலமானார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாரி ட்ரூவான், ஹால்டர் லாக்னெ, விளாதிமீர் நோபோகோவ், ஜோசப் பிளா, மெஜியா வாலேஜோ போன்ற சில படைப்பாளிகள் நினைவுகூரப்படுவதும் இதே நாளில்தான்.

இலக்கியத்தளத்தில் சமுதாய முன்னேற்றத்திற்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் வழியமைத்த இவர்களுக்கும், இவர்களைப் போன்றே உலகளாவிய நட்புப்பாலம் அமைக்க உதவிய இதர படைப்பாளிகளுக்கும் உலகந்தழுவிய அளவில் மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டது. புத்தக வாசிப்பு என்பதை விட வேறு மரியாதை என்ன இருக்க முடியும்? புத்தக வாசிப்பின் இனிய அனுபவத்தையும் ஆழ்ந்த தாக்கத்தையும் பற்றிய விழிப்புணர்வையும் ரசனையையும் மக்களிடையே - குறிப்பாக இளைஞர்களிடையே - வளர்ப்பதற்காகவும் இந்த நாளை புத்தக நாளாகக் கொண்டாடுவது என்று, 1995ல் பாரி நகரில் கூடிய ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பின் (யுனெகோ) மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. உலக புத்தக தினமாகவும் புத்தகங்களுக்கான காப்புரிமை தினமாகவும் இந்த நாள் அப்போதிருந்து அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளுக்கு இன்னொரு சுவையான பின்னணியும் உண்டு. பெயின் நாட்டின் கேட்டாலோனியா பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற கிறித்துவத் துறவியை நினைவுகூரும் நாளாகிய ஏப்ரல் 23 அன்று, புத்தகக் கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு ரோஜாப்பூ பரிசாகத் தருகிற பழக்கம் இருந்தது. குறிப்பாக காதலர்களுக்கிடையே இவ்வாறு ரோஜாவும் புத்தகமும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அதிலிருந்தே புத்தக தினத்துக்கான யோசனை உதித்திருக்கிறது.

யுனெகோ அலுவலகம் உள்ள அனைத்து நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகக் காட்சிகள், புதிய புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் என்று இந்த நாளில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இங்கிலாந்தில் 1998ல் இந்த நாள் தொடங்கப்பட்டபோது, பள்ளிக்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் 1 பவுண்ட் மதிப்புக்கான அடையாள வில்லை ஒன்று வழங்கப்பட்டது. குழந்தைகள் அந்த வில்லைகளை எந்தப் புத்தகக் கடையில் கொண்டுபோய்க் கொடுத்தாலும், அந்த விலை மதிப்புக்கான புத்தகம் வழங்கப்படும். கதைப் புத்தகங்கள், புதிர்விளையாட்டுப் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் என இதற்கென்றே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இப்போதும் பல்வேறு வடிவங்களில் இத்தகைய முயற்சிகள் தொடர்கின்றன.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, எந்தவொரு தகவலையும் எவரும் பெற முடியும் என்ற சுதந்திரமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தகங்களின் உள்ளடக்கங்களும் அதே போல் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன. அதே நேரத்தில் புத்தகங்களை எழுதுவோர், தயாரித்து வெளியிடுவோர் ஆகியோரது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு சவாலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், காப்புரிமையை மதித்தல் என்பதோடு இணைந்த, அனைவருக்கும் புத்தகங்கள் எளிதில் கிடைக்கச் செய்தல் என்ற காலத்திற்கேற்ற கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. காப்புரிமையை மதித்தல், சடுமதாய-கல்வி-பண்பாட்டுத் தளங்களில் புத்தகங்களின் நியாயமான இடத்தை உறுதிப்படுத்துதல் ஆகிய உலகளாவிய முயற்சியில் பங்கேற்குமாறு அனைத்து நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் யுனெகோ தலைமை இயக்குநர் இரீனா பொக்கோவா.

இந்த வேண்டுகோளை இந்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு புத்தகக் காதலர்களுக்கு நிறைய இருக்கிறது. ஆனால், இந்தி மொழி புத்தகங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் பாதி கூட மற்ற மொழிகளில் புத்தகங்கள் வெளியீட்டிற்கு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. கணினிக்கான மொழி ஆக்கத்தில் கூட, இந்தி அல்லாத பிற மொழிகளுக்கு மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை.

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் படைப்புகள் அவரது 150 வது ஆண்டு நெருங்குவதையொட்டி சீன மொழியில் கூட வெளியாகின்றன. ஆனால் இந்திய மொழிகளில் அவற்றைக் கொண்டுவர எந்த முயற்சியும் நடக்கவில்லை. தேசிய புத்தக நிறுவனம், பழைய புத்தகங்களையே மறுபதிப்புச் செய்துகொண்டிருக்கிறதேயன்றி, அண்மை ஆண்டுகளில் புதிய புத்தகங்களை மிகக் குறைவாகவே வெளியிட்டுள்ளது. அதிலும் குழந்தைகளுக்கான புதிய புத்தகங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை என்கிற அளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது என்று பதிப்புத் துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் சில நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உண்மைதான். அதே நேரத்தில், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து மக்களுக்கும் எளிய விலையில் புத்தகங்கள் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னையில் கன்னிமாரா நூலகத்தில் நிலையான புத்தகக் காட்சி - விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற ஏற்பாட்டை அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் செய்வதில் என்ன தயக்கம்? கிராமப்புற நூலகங்கள் என்று கட்டப்பட்டிருந்தாலும், அவை ஆகப்பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பரிசாக தமிழக கிராம நூலகங்களின் கதவுகள் திறந்துவிடப்படட்டும்.

அரசின் பரிசாக மட்டுமல்ல, நண்பர்கள், தோழர்கள், உறவினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிற பண்பாடு ஓங்கி வளர வேண்டும். அதற்கான விருப்பத்தையும் முனைப்பையும் உலகப் புத்தக தின விழா ஏற்படுத்தட்டும். ஏனெனில், புத்தகம் என்பது வெறும் அச்சடித்த தாள்களின் கோர்ப்பு அல்ல, அது அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் உயிர்த்துடிப்பு.

Sunday 18 April 2010

பொத்தாம் பொதுவான ஊகங்களுக்குப் பெயர் துல்லியமான கணிப்பாம்!


இணைய தள சோதிடம்:
எதற்கிந்த வலைவிரிப்பு?

லகில் பிறந்து வாழ்கிற இத்தனை கோடி மனி தர்களுக்கும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றை சரியாகக் கணிக்க முடியும் என்கிற சோதி டம் அறிவியல் அடிப்படையில் நம்பக்கூடியதுதானா?

இப்படி கிடுக்கிப்பிடி போட்டுக் கேட்டபோது திண றியவர்களுக்குத் துணையாக அன்றைக்கு அர்த்த முள்ள இந்து மதம் புகழ் கண்ணதாசன் சொன்ன விளக்கம் ஒன்று உண்டு. சோதனையின்போது மன துக்கு ஆறுதலாகத் திடம் சொல்வதுதான் சோதிடம், என்றார் அவர். சோதிடத்தை நம்புகிறவர்கள், நம் பாதவர்கள் இரு சாராரையுமே திருப்திப்படுத்த முயல்கிற தந்திரமான விளக்கம் இது.

நகரங்களின் நட்சத்திர விடுதிகளில் குளு குளு அறைகளில் மடியில் கிடத்திய கணினி முதல், பேருந்து நிலைய நடைமேடைகளில் முக்காலியில் நிறுத்தப்பட்ட கணினித் திரை வரையில் இந்த நவீன சோதிட வர்த்தகம் பெரிய அளவிலும், சாலைவியாபார அளவிலும் நடக்கிறது.

இணைய தளம் மூலமாக திருமணத் தகவல் மோசடி, மின்னஞ்சல் வழியாக நம் வங்கிக் கணக்கை யும் கடவுச் சொல்லையும் தெரிந்து கொண்டு பண மோசடி என்றெல்லாம் நடப்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் இறங்குகிறவர்களாவது அவ்வப்போது சட்டத்தின் கைகளில் பிடிபடுவதுண்டு. ஆன்மீக வலைவிரிக்கும் ஆனந்தாக்கள் கூட அவ்வப்போது அம்பலமாகிறார் கள். ஆனால் மேற்படி ஜோதிட ஸ்ரீக்கள் மட்டும் சர்வ ஜம்ப கீர்த்தியுடன் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் இணைய தள தகவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அறிவிப்பு எட்டிப்பார்த்தது. எதிர்காலத்தைத் துல்லியமாக கணித் துச் சொல்கிற சேவை என்று அதிலே இருந்தது. நம் பிக்கை வருவதற்காக, குறிப்பிட்ட மின் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு போடப்பட்டிருந்தது. உங் களைப் பற்றிய ஒரு சுருக்கமான கணிப்பை இலவச மாக அனுப்புகிறோம். அதிலே நம்பிக்கை ஏற்பட் டால் தொடர்பை உறுதிப்படுத்துங்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி மட்டும் குறிப்பிடுங்கள். ஜாதகம் இல்லா மலே நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக உங்களைப் பற்றிய சில உண்மைகளை ஆங்கிலத்தில் உங்கள் மின் முகவரிக்கு அனுப்புகிறோம். இந்த சேவை முற்றிலும் இலவசம். அதிலே உள்ள கணிப்புகள் உண்மைதான் என்று உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து முழு கணிப்பையும் அனுப்புகிறோம், என்று அந்த அஞ் சல் சொன்னது.

சும்மாதான் அந்த சேவை என்பதால், சும்மா அந்த முகவரிக்குள் சென்று என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாமே என்று அதன் மேல் சுண்டெலியை முடுக்கி விட்டேன். அப்போது திரையில் தோன்றிய அட்ட வணையில் கேட்டிருந்தபடி எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டிவிட்டேன். சில நொடிகளில் ஒரு தகவல் என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன், (இப்படி பெயர் குறிப் பிடுவது கூட ஒரு வலைதான்) உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உண்மைலேயே உங்களுக்கு எமது சேவை வேண்டும் என்பதை இந்த மின்முகவரியில் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள். நீங்கள் உறுதிப்படுத்திய தகவல் வந்த 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு எங்கள் சோதிட வல்லுநரிடமிருந்து உங்களைப் பற் றிய தொடக்கக் கணிப்பு இலவசமாக வரும். அதன் பின் நீங்கள் விரும்பினால் முழுமையான கணிப்பு அனுப்பி வைக்கப்படும், என்று இருந்தது.

இப்படியே இழுத்துக்கொண்டு போவார்கள் என்ற எண்ணம் வந்ததாலும், பணிகள் நிறைய இருந்ததாலும் அந்த உறுதிப்படுத்தும் தகவலை நான் அனுப்ப வில்லை. ஆனால், மறுநாள் ஒரு அஞ்சல் வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன் நீங்கள் உறுதிப் படுத்தியதற்கு நன்றி. (நான் எங்கேயப்பா உறுதிப் படுத்தினேன்?) உங்களைப் பற்றிய அடிப்படையான கணிப்பைத் தயாரிக்க இவ்வளவு நேரம் தேவைப் பட்டது. உங்களுடைய ஜாதகம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மிக அரிதாகத்தான் இப்படி அமையும். அதைத் தெரிந்துகொள்ள பின்வரும் வலைத் தளத்தைப் பார்க்கவும். இவண், உங்களின் தொழில் முறை சோதிடர் --- என்று அடுத்த கொக்கி போடப் பட்டிருந்தது. (சோதிடரின் பெயர் ஒரு பெண்ணின் பெயராக இருந்தது. அதுவும் ஒரு வலைதானோ?)

அதையும் பார்த்துவிடலாம் என்று, குறிப்பிடப் பட்டிருந்த வலைத்தளத்திற்குள் சென்றேன். அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது.
... சோதிடரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமையவிருக் கிறது என்பது மட்டுமல்ல, அருமையான வாய்ப்புகள் மிகுந்த ஆசிர்வதிக்கப்பட்டதொரு எதிர்காலம் உங்களுக்கு இருப்பது எனது கணிப்பில் தெரிய வந்துள்ளது. நான் இந்தத் தொழிலில் பல ஆண்டு களாக இருந்துவருகிறேன். ஆனால் மிடர் குமரே சன், உங்களுடையதைப் போன்ற அற்புதமான ஜாத கங்கள் மிக அரிதாகவே அமைகின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்... இப் போது நான் சொல்லப்போவது மிக முக்கியமானது. ஒரு முறைக்கு இரண்டு முறை நான் என் சோதிடக் கணக்கை சரி பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகி றேன்... என்று அது சொல்லிக்கொண்டே போனது.

அதன் பின், ... இதுதான் என் கண்டுபிடிப்பு: நீங் கள் இப்போது ஒரு முக்கியமான மாறுதல் கால கட்டத் தில் இருக்கிறீர்கள். விண்ணில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலைகளும் கோணங்களும் உங்க ளுக்கு மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரு வதற்கு ஏற்ற வகையில் இருக்கின்றன... அடுத்த 44 நாட் களில் உங்கள் தொழிலின் மிக முக்கியமான தருணங் களை சந்திக்கப் போகிறீர்கள். உங்கள் தொழிலைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான வெற்றியை அடைய இருக்கிறீர்கள். அது எப்படிப்பட்ட வெற்றி என்று இப்போது சொல்வது கடினம். ஆனால், யாரோ ஒரு வெளிநாட்டில் உள்ளவரோடு அல்லது ஏதோ வொரு வெளிநாட்டு நிறுவனத்தோடு நீங்கள் நடத்தப் போகிற பேச்சுவார்த்தை தொடர்பானதாக இருக்கலாம் என்று மட்டும் இப்போதைக்கு என்னால் ஊகிக்க முடிகிறது...

... மூன்று முக்கியமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, இந்த 44 நாட் கள் மிகப்பெரும் பணத்துடன் சம்பந்தப்பட்டிருக் கின்றன; இரண்டாவதாக அந்தப் பெரும் பணம் உங் களுடைய மிகப்பெரிய லட்சியம், முதலீடு அல்லது திட்டத்திற்குப் பயன்படப்போகிறது; மூன்றாவதாக உங்களது இயற்கையான வாய்ப்புகளையும் நல்ல திர்ஷ்டத்தையும் இணைத்து மேலும் முடுக்கிவிடு வதன் மூலம் அந்தப் பணம் வரப்போகிறது... இந்த வாய்ப் பைப் பயன்படுத்த நீங்கள் உங்களைத் தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்...

... இன்னும் சில உண்மைகளை நான் கண்டு பிடித்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மகத்தான சக்தி யின் அதிர்வுகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இதன் விளைவாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு எளி தாகக் கிடைத்துவிடும்... ஒரு எச்சரிக்கையும் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மற்றவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் தானாக நடக்கட்டும் என்று காத்திருப் பார்கள். ஆனால் குமரேசன், ஒரு சரியான சோதிட ரின் உதவியோடு உங்களது நட்சத்திர-கோள் நிலை களை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப உங்களது செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் அந்த சாதகமான பலன் கள் முழுமையாக உங்களை வந்தடையும்...

இப்படியே தன் கணிப்பை ஓட்டிக்கொண்டே போயிருக்கிறார் அந்தப் பெண்மணி. சுமார் மூன்று பக் கங்களுக்கு உள்ள கணிப்பில் ஒரே ஒரு இடத்தி லாவது திட்டவட்டமாக ஏதாவது சொல்லப்பட்டி ருக்கிறதா? நான் யார், எப்படிப்பட்ட தொழிலில் இருக் கிறேன் என்ற நிகழ்காலமோ, எந்தவிதமான வாழ்க் கையை இதுவரை வாழ்ந்துவந்தேன் என்ற கடந்த காலமோ, இனி என்னதான் குறிப்பாக நடக்கப்போ கிறது என்ற எதிர்காலமோ மருந்துக்காவது அடை யாளம் காட்டப்பட்டிருக்கிறதா?

பொத்தாம் பொதுவான ஊகங்களுக்குப் பெயர் துல்லியமான கணிப்பாம்! சாதாரணமாக எவரும் சிக்கி விடக்கூடிய பெரிய வலை இது என்பது மட்டும் உறுதி. இன்றைய இணையவலை நுட்பங்களைப் பயன் படுத்துகிற எவருக்கும், போட்டிகளின் வெக்கையில் வெந்துபோயிருக்கிற யாருக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கள் பற்றிய ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக் கும். பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் ஆகாய விமான உற்பத்தியாளர் வரையில் அவரவர் மட்டத் திற்குப் பெரும் பணம் தேவைப்படவே செய்கிறது. எல்லோருக்குமே எதிர்வரும் காலம் என்பது ஏதாவ தொரு வகையில் மாறுதல் காலகட்டம்தான்.

மக்களின் வாழ்க்கை ஏக்கங்களை முகர்ந்துபார்க் கக்கூடிய எவரும் இந்த கணிப்புகளுக்கு வர முடி யும்! வேறொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து வேறொரு பெயரில் இதே சோதிடரின் வலைத் தளத்தைத் தட்டியபோது, இதே கணிப்புதான் வந்தது! அன்புள்ள .... என்ற இடத்தில் மட்டும் அந்தப் புதிய பெயர் இருந்தது! இந்த இலவச முதல் சேவைக்குப் பிறகு அடுத்தடுத்த ஆழமான கணிப்புகளுக்கு சிறப்புக் கட்டணங்கள் உண்டு!

இப்படிப்பட்ட பொதுவான, எவருக்கும் பொருந்து கிற சொல்லாடல்களில் மிரண்டுபோய், மின்னஞ்சல் குறிப்புகளின்படி அடுத்தடுத்த தொடர்புகளை மேற் கொண்டு, கேட்கிற கட்டணங்களை (ஆயிரக்கணக் கான ரூபாய்கள்) செலுத்துகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

வாழ்க்கை உண்மைகளை, அரசியல் நிலைமை களை, சமுதாய சூழல்களை, இயற்கை ரகசியங்களைப் புரிந்துகொண்டால் அடுத்த நொடி எப்படி அமை யுமோ என்ற புதிரோடு, ஆக்கப்பூர்வ முயற்சிகளுக் கான முனைப்புகளோடு வாழ்வதன் சுகத்தை முழுமை யாக அனுபவிக்க முடியும். அப்படி அனுபவிக்கக் கற்றுக்கொள்கிற திட மனங்களை சோதனைகள் என்ன செய்யும்? சோதிடம்தான் என்ன செய்யும்?

Friday 16 April 2010

மக்களை விட மேலாக ஒரு சபை தேவையா?


சாசரின் மேல் கப் இருக்குமானால்

தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு மேலவை தேவை என்ற தீர்மானம் ஏப்ரல் 7 அன்று ஆளுங்கட்சியினராலும், அவர்களது கூட்டாளிகளாலும், மேலவையை ஆதரிப் போர்களாலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதன் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சில கட்சிகள் வெளிநடப்புச் செய்ய, மார்க் சிஸ்ட் கட்சி, அஇஅதிமுக ஆகியவை எதிர்த்து வாக்களித்தன. இனி முறைப்படி இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும், மத்திய அரசின் மூலமாக குடியரசுத் தலைவ ரின் ஒப்புதல் கிடைக்க வேண்டும்.

தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இதை எதிர்க்கிற மார்க்சிஸ்ட்டுகள், மேல வை என்பது நடைமுறைக்கு வருகிறபோது அதற்குப் போட்டியிடுவதில்லை என்று உறு தியளிப்பார்களா என முதலமைச்சர் கருணா நிதி தமக்கே உரிய பாணியில் கேட்டார். உணவுப் பொருள்களின் விலைவாசி உயர் வை எதிர்த்துப்போராடுகிற கம்யூனிஸ்ட்டு கள் சாப்பிடாமல் இருக்க உறுதியளிப்பார் களா என்று கேட்பது போல் இருக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு துணைத்தலைவர் நன்மாறன் தமக்கே உரிய பாணியில் பதில் கொடுத்தார்.

முதலமைச்சரும் சரி, மேலவையை ஆத ரிப்போரும் சரி முன்வைக்கிற வாதங்கள் இவைதாம்: நாடாளுமன்ற மக்களவைக்கு ஒரு மாநிலங்களவை இருப்பது போல் சட்ட மன்றத்திற்கு ஒரு மேலவை தேவை (முதல் வரின் வார்த்தைகளில், ‘கப் தேநீர் சூடாக இருக்கும்போது அதை ஆற்றுவதற்கு சாசர் தேவைப்படுவது போல்’); மேலவையின் உறுப்பினர்களாகிற அறிஞர்களின் ஆலோச னைகளைப் பெற்று முடிவுகள் எடுக்க உதவியாக இருக்கும்.

முதலில் நாடாளுமன்ற மாநிலங்களவை யும், மாநில சட்டமன்ற மேலவையும் ஒன் றல்ல. சிறிதும் பெரிதுமாக மாநிலங்கள் உள்ள இந்தியாவில், உ.பி. போன்ற ஒரு சில மாநிலங் களின் பிரதிநிதிகள் மக்களவையில் கூடுத லாக இடம்பெற முடிகிறது. இதனால் பல் வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதற்கேற்ற பிரதிநிதித்துவம் அமையாமல் போகிறது. அதை ஈடுகட்டவே, அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க மாநிலங்களவை உருவாக்கப்பட்டது. மேல வைக்கு அப்படிப்பட்ட நோக்கம் இல்லை.

மாநில மேலவை என்பது அதிகாரம் ஏது மற்ற ஒரு ஆலோசனை அமைப்பு. ஆனால் மாநிலங்களவையோ, மக்களவைக்கு நிகராக அதிகாரம் உள்ள ஒரு சபை.

சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை அல்லது ஒரு சட்ட முன்வரைவை விவாதித்து நிறை வேற்றி மேலவைக்கு அனுப்பும். அதை மேல வை விவாதித்து தானும் அதை அப்படியே நிறைவேற்றலாம் அல்லது தள்ளுபடி செய் யலாம் அல்லது திருத்தங்களுடன் நிறை வேற்றலாம். அப்படி தள்ளுபடி செய்தாலோ அல்லது திருத்தங்களுடன் திருப்பி அனுப்பி னாலோ அதை சட்டமன்றம் ஏற்க வேண்டும் என்பதில்லை. மறுபடியும் பழைய தீர்மானத் தையே தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப் பலாம். அதே போல், மூன்று மாதங்களுக்கு மேல் மேலவை ஒரு தீர்மானம் குறித்து முடிவு செய்யாமல் இருக்குமானால், அதை யும் சட்டமன்றம் மறுபடி நிறைவேற்றிக் கொள்ளலாம். அப்போது மேலவை மறுபடியும் குறுக்கிட முடியாது. மேலும், நிதி சார்ந்த தீர்மா னங்களில் தலையிடுகிற அதிகாரம் மேல வைக்கு இல்லை.

இப்படி அதிகாரமற்ற ஒரு ஆலோசனை அமைப்பு எதற்காக? ஆலோசனைகள் பெற்றுச் செயல்படுவதில் உண்மையிலேயே அரசுக்கு அக்கறை இருக்குமானால், எந்த ஒரு திட்டம் தொடர்பாகவும் அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள், ஜனநாயக அமைப்பு களைச் சார்ந்தோர், போராடுவோரின் பிரதிநிதி கள் ஆகியோரை அழைத்துப் பேசலாமே. அவ் வாறு பேசும்போது கிடைக்கிற ஆலோச னைகளை தீர்மானத்தில் இணைக்கலாமே?

மாறாக, சட்டமன்றம் முழுமையாக ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லாத ஒரு சபைக் கான பிரதிநிதிகளை கவுரவத்திற்காகத் தேர்ந் தெடுக்க, கோடிக்கணக்கில் மக்கள் பணத் தை செலவிட வேண்டிய தேவை ஏன் வந்தது?

மாநிலங்களவையோ, மக்களவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஒப்புக்கு விவாதிக்கிற, ஆலோசனை சொல்கிற கவுரவ அமைப்பு அல்ல. நேரடியாக மாநிலங்களவையிலேயே ஒரு சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்ய முடியும். அதனை அந்த அவையின் பெரும் பான்மை உறுப்பினர்கள் தள்ளுபடி செய்ய முடியும். இரண்டு அவைகளும் நிறைவேற் றினால்தான் அந்தத் தீர்மானமோ, சட்டமுன் வரைவோ நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டதாகும்; அப்போதுதான் அதற்கு குடிய ரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார்.

ஆம், மாநிலங்களவை என்பது அரச மைப்பு சாசனப்படி சட்டப்பூர்வமாக இருந் தாக வேண்டிய அதிகாரப்பூர்வ சபை. மேல வை அப்படிப்பட்டதல்ல. ஆகவே, கப் தேநீர் சூடாக இருந்து, அதை சாசர் ஆற்றிக் கொடுத் தால், மறுபடியும் அதையே சுடவைத்துப் பருக முடியும் என்கிறபோது, எதற்காக சாசர் தேவை? சாசரின் மேல் கப் இருக்குமானால் பார்க்க அழகாக இருக்கும் என்பதைத் தவிர வேறு என்ன பயன்?

அப்புறம், அறிஞர்களின் அவையாக இருக்கும் என்கிறார்கள். தற்போதைய விதிக ளின் படி, மேலவை அமைக்கப்படுமானால், சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல், 40 உறுப்பி னர்களுக்குக் குறையாமல் மேலவை உறுப்பி னர்கள் எண்ணிக்கை இருக்கும். அதன் மூன் றில் ஒரு பங்கு உறுப்பினர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன் னொரு மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பார்கள். 12ல் ஒரு பங்கு உறுப் பினர்களை மாநிலமெங்கும் உள்ள ஆசிரியர் கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்னொரு 12ல் ஒரு பங்கினரை மாநிலத்தில் உள்ள பட்டதாரிகள் தேர்வு செய்வார்கள். 6ல் ஒரு பங்கு உறுப்பி னர்களை மாநில ஆளுநர் (மாநில அரசின் ஆலோசனைப்படி) நியமிப்பார்.

அதாவது, தமிழக மேலவைக்கு 60 உறுப் பினர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களில் 20 பேரை சட்டமன்ற உறுப்பினர்களும், 20 பேரை உள்ளாட்சிகளின் உறுப்பினர்களும், 5 பேரை ஆசிரியர்களும், 5 பேரை பட்டம் பெற்ற வர்களும் தேர்ந்தெடுப்பார்கள். 10 பேரை ஆளுநர் நியமிப்பார்.

அப்படியானால், சமுதாயத்தின் இதர பிரிவு மக்கள்? தொழிலாளர்கள்? விவசாயி கள்? மாணவர்கள்? நடுத்தர வர்க்கத்தினர்? தொழில் முனைவோர்? சிறு தொழில்கள் நடத்துவோர்? முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்போர்?

ஜனநாயகம் என்பதன் அடிப்படையே, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது தான். ஆசிரியர்களும் பட்டதாரிகளும் மட்டும் தேர்ந்தெடுக்கிறவர்கள் எப்படி சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப் படுத்த முடியும்? ஒரு ஆசிரியரோ, பட்ட தாரியோ சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெறுகிறபோது இயல்பாகவே அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதி யாகிவிடுகிறார்கள். மேலவை உறுப்பினர் அப்படியல்ல. மேலும் ஆசிரியர்களும் பட்ட தாரிகளும் சட்டமன்றத் தேர்தலிலும் வாக் களித்திருப்பார்கள். மேலவைக்கும் அவர்கள் வாக்களிக்கலாம் என்றால், அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை போல் ஆகிவிடு கிறதே!

மாநில சட்டமன்றம் எடுக்கிற ஒரு முடி வை முடக்குவதற்காகவே, அடிமைப்பட்டி ருந்த இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர் கள் கொண்டு வந்ததுதான் இந்த மேலவை ஏற்பாடு. 1862ல் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் (பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி) மாகாண சபைகளுக்கான சட்டத்தைப் பிறப் பித்தார். அதன்படி ஒவ்வொரு மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னரும் ஆணை பிறப்பிக்க மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 1935ல் அந்த சபைகள் சட்டசபை, மேலவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டன. விடுதலைப் போராட்ட எழுச்சியின் விளைவாக மாகாண சபைகளில் போராளிகள் பிரதிநிதிகளாக அதிகமாக இடம்பெற்றார்கள். நம் மக்களுக்கு சாதகமாக அவர்கள் எடுக்கிற சூடான முடிவு களை ஆறப்போடுவதற்காகவே, முடக்குவ தற்காகவே, மேலவை ஏற்பாட்டை அன்றைய பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை.

எனவேதான், அடிமைப்பட்ட இந்தியா வில் இருந்த ஒரு நடைமுறை தேவையில் லை, மக்கள் பிரதிநிதிகளை விட மேலான தாக ஒரு மேலவை தேவையில்லை என்ற நியாயமான உணர்வு மேலெழுந்தது. அதன் அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில், இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்ததும் 1969 மார்ச் 21 அன்று சட்டமன்றத்தில் மேலவையை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத் தில் அதே ஆண்டு ஆகஸ்ட் 1ல் நிறைவேற் றப்பட்ட சட்டத்தின் மூலம் மேற்கு வங்க மேலவை நீக்கப்பட்டது. தமிழகத்தில் 1986ல் மேலவை நீக்கப்பட்டது. தற்போது உ.பி., பீகார், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே மேலவை இருக்கிறது.

ஆக, அரசமைப்பு சாசனப்படி கட்டாய மல்லாத ஒரு சபை, சிலரை திருப்திப் படுத்து வதற்காக அவர்களை மேலவை உறுப்பினர் களாக்கலாம், புறவாசல் வழியாக சிலரை அதிகார பீடத்திற்குக் கொண்டுவரலாம் என்பதற்கே பயன்படும். அது மக்களுக்கான தீர்மானங்களை இழுத்தடிக்கவே பயன்படும். ஒரு சிறு பிரிவினரின் பிரதிநிதிகள், பெரும் பான்மை மக்களது பிரதிநிதிகள் நிறை வேற்றிய தீர்மானங்களை முடக்க வழிவகுக் கும். ஆகவேதான், கம்யூனிஸ்ட்டுகள் வேண் டாம் என்கிறார்கள். இதற்காகப் பல கோடி செலவு தேவையில்லை என்கிறார்கள். ஒரு வேளை மேலவை வந்தால், அங்கேயும் மக்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக கம்யூ னிஸ்ட்டுகள் அதையும் பயன்படுத்துவார்கள்.

-அ. குமரேசன்

Friday 2 April 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பு எதற்காக?


மக்கள் என்போர்
வெறும்
எண்ணிக்கை அல்ல

உலகில் மனிதர்கள் தோன்றாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? விரக்தி வேதாந்தத்தில் சிக்கியவர்கள் “அந்த உலகம் அமைதியானதாக, அழகானதாக இருக்கும்” என்று பதில் கூறலாம். ஆனால், மனிதர்கள் இல்லை என்றால் இந்த உலகத்தைப் பற்றி வேறு யார்தான் அக்கறைகொள்வார்கள்? இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பவர்களும், இதைப்பற்றியெல்லாம் யோசிக்காதவர்களுமாக இந்த உலகில் இன்று சுமார் 670 கோடி மக்கள் வாழ்கிறார்கள். மிகச் சரியாக இந்த 2010ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை எவ்வளவு? ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு? இந்தியாவில் எவ்வளவு?

இதை மதிப்பிடுவதற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று (ஏப்ரல்-1) உலகின் அனைத்து நாடுகளிலும் தொடங்கியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியாவில் குடியரசுத் தலைவர் நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.

மிக பழங்காலத்து மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சீனாவில் ஹான்ஸ் பரம்பரையினர் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 200) நடந்ததாக பதிவாகியுள்ளது. அதற்கும் முன்னதாக, இந்தியாவில் கி.மு 800-600 ஆண்டுகளிலேயே ஒருவகையான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டதாக இலக்கியச் சான்றுகள் கூறுகின்றன. அப்போது இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்ததில்லை என்றாலும் அப்போதிருந்த சிறுசிறு நாடுகளின் மன்னர்கள் பல்வேறு தேவைகளுக்காக, குறிப்பாக வரிவிதிப்புக்காக, இந்த முயற்சியைச் செய்திருக்கிறார்கள். அக்பர் ஆட்சிக் காலத்தில் (1556-1605) மக்களின் தொழில்கள், அவர்களது செல்வநிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் திரட்டப்பட்டனவாம். இன்றைய நடைமுறைக்கு முன்னோடியாக அமைந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின்போது பல்வேறு பகுதிகளில் 1865 - 1872 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புதான். இந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு என்பது 1881ல் தொடங்கியது. அதன் பின் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைகூட இடையில் நிறுத்தப்படாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை உலக அளவில் எப்போது தொடங்கியது? இங்கிலாந்தில் விக்டோரியா ஆட்சி காலத்தில் 1841ல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும் அதற்கும் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1801ல் அங்கே இப்படிப்பட்ட கணக்கெடுப்புப் பணி தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சில உயிர்க்கொல்லி தொற்றுநோய்கள் பரவியதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காகவும், தப்பியவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காகவும் அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்காவில் 1790ம் ஆண்டில் குடிமக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது என அரசாங்கம் முடிவு செய்தது. எதற்காகத் தெரியுமா? போர்க்களங்களில் இறக்கிவிடுவதற்காக! ராணுவத்திற்கு எத்தனை இளைஞர்கள் கிடைப்பார்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக! பிற்காலத்தில் அரசின் பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படும் வகையில் அங்கேயும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைச் சார்ந்த நடைமுறைகளுக்காக மொத்தம் 25 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேருக்கு நேர் வீடுகளுக்குச் சென்று தகவல்களைத் திரட்டும் பணியில் குறிப்பாக ஆசிரியர்கள், பல்வேறு அரசுத்துறையினர் இதற்கென தனி ஊதியத்துடன் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களை வழக்கமான பணிகளிலிருந்து திசைதிருப்பாமல், வேலையின்றி இருக்கும் இளைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்தலாமே என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்ற நெடுந்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும். அதற்காக ‘தேசிய மக்கள் தொகை பதிவேடு’ (என்பிஆர்) முதல்முறையாக ஏற்படுத்தப்படுகிறது.

இதுவரை நடந்த கணக்கெடுப்புகளிலிருந்து மாறுபட்டதாக இதில் உயிரியல் சார்ந்த (பயோமெட்ரிக்) தகவல்களும் பதிவு செய்யப்படவுள்ளன. அதாவது கணக்கெடுக்கப்படுபவரின் கைவிரல் ரேகை, முக்கிய அங்க அடையாளங்கள் போன்றவற்றுடன் அவர்களுடைய புகைப்படங்களும் பதிவு செய்யப்படும். அத்துடன், அவர்களிடம் செல்பேசி இருக்கிறதா, கணினி இருக்கிறதா, இணையவலை இணைப்பு இருக்கிறதா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக மக்கள் குடியிருக்கும் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு இவ்வாண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கிடையே மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு தனிமனிதர் பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை நாடு முழுவதும் நாடு முழுவதும் 35 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில், 640 மாவட்டங்களில், 7,742 நகரங்களில், 6 லட்சம் கிராமங்களில் ஒரே நேரத்தில் திரட்டப்படவுள்ளன.

இந்த கணக்கெடுப்பின் வேறு சில ஏற்பாடுகளும் சுவையானவை. சேர்ந்து வாழ்கிற இருவர் தங்களை மணமானவர்கள் என்று குறிப்பிட விரும்பினால் அவ்வாறு குறிப்பிடலாம். பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கால மதிப்பீடுகளுக்காக ஒருவரிடம் அவரது வங்கிக் கணக்குகள், செல்பேசி பயன்பாடு, மடிகணினி பயன்பாடு போன்ற தகவல்களும் விசாரிக்கப்படும். உங்கள் வீட்டின் சமையலறை எந்த இடத்தில் - வீட்டிற்கு உள்ளேயா, வெளியேயா - அமைந்திருக்கிறது என்பதும் கேட்கப்படும். இரண்டாவது கட்ட கணக்கெடுப்பில் கல்வித் தகுதிகள் கேட்டறியப்படும்.

இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனிப்பட்ட குடிமக்களின் இத்தகவல்களை யாரும் பெற முடியாது. உயர்நீதிமன்றங்கள் கூட இத்தகவல்களை அளிக்குமாறு ஆணையிட முடியாது. அதே போல், ஒருவர் தன்னைப் பற்றிய தகவல்களைத் தர மறுக்கவும் கூடாது.

எதிர்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேலும் பல தகவல்கள் திரட்டப்படலாம். அப்படிப்பட்ட கணக்கெடுப்புகள் வெறும் புள்ளி விவர பட்டியல்களுக்காக அல்லாமல், மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திசையில் செலுத்துவதற்குப் பயன்பட வேண்டும். மேடு பள்ளங்களைக் கண்டறிந்து, சமத்துவப் பாதையை உருவாக்க உதவ வேண்டும். ஏனெனில் மக்கள் என்போர் எண்ணிக்கை சார்ந்தவர்கள் அல்ல... சமுதாய எண்ணம் சார்ந்தவர்கள்.
-அ.குமரேசன்