Saturday 25 December 2010

சுனாமிக்குப் பிறகும் சுழன்றடிக்கப்படும் பெண்கள்


அதென்ன மறுகர்ப்ப அறுவை சிகிச்சை?


தமிழக மக்களும் அந்தமான் மக்களும் சந்தித்த, தங்கள் ஆயுட்காலம் முழுவதும் மறக்கவே முடியாத அந்த ஆழிப்பேரலையையும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளையும் யார்தான் மறந்துவிட முடியும்? 2004ல் தமிழகத்தில் சுமார் 8,000 பேர், அந்தமானில் 1,300 பேர், புதுவையில் 700 பேர், ஆந்திராவில் 100 பேர், கேரளத்தில் 200 பேர் என பலி கொண்டது அந்த சுனாமி.

சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள், தொழில்களை இழந்தவர்களுக்கு பொருளாதார உதவிகள், சொந்தக் குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் கண்முன் பலி கொடுத்து உள்ளம் நைந்து போனவர்களுக்கு உளவியல் வழிகாட்டல்கள் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் உண்மையிலேயே எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. இந்நிலையில் சுனாமியால் சுழன்றடிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பான புதியதொரு தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான அணுகுமுறைகள் எந்த அளவிற்கு நம் சமுதாயத்தில் கரடுதட்டிப்போயிருக்கின்றன என்பதை அந்தத் தகவல் சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் வன்முறைகள், சமூக மோதல்கள் என்றெல்லாம் வருகிறபோது அதிகமான தாக்குதல்களுக்கு இலக்காகிறவர்கள் பெண்கள்தான். இயற்கைச் சீற்றங்களும் இதற்கு விதிவிலக்கில்லை. சுனாமியைப் பொறுத்தவரையில், மறுகர்ப்ப (ரீகேனலைசிங்) அறுவை சிகிச்சை என்ற வடிவில் இந்தத் தாக்குதல் வந்துள்ளது.

ஒருமுறை கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் மீண்டும் கர்ப்பம் தறிக்க விரும்பினால் உயிர் அணுக்களும் கரு முட்டைகளும் சந்திப்பதற்கான பாதையைத் திறந்து விடுகிற ஒரு சிகிச்சைதான் மறுகர்ப்ப அறுவை. மருத்துவ அறிவியலாளர்கள் நல்ல நோக்கத்துடன்தான் இத்தகைய நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இது ஒரு வகையில், குழந்தைப் பேறு வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்கிற உரிமையைப் பெண்ணுக்கு உறுதிப்படுத்துகிறது என்ற ஒரு கருத்தும் உண்டு. ஆனால், ஆணாதிக்கம் வக்கிரங்கள் சற்றும் மட்டுப்படாத சமுதாயத்தில் இந்த அறிவியல் நுட்பமும் கூட இப்போது பெண்ணை அடக்குகிற மூக்கணாங்கயிறாகவே பயன்படுத்தப்படுகிறது. உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இம்மாதம் 10ம் தேதியன்று சென்னையில் சுனாமி பின்னணியில் பெண்களுக்கு மறுகர்ப்ப அறுவை சிகிச்சையால் ஏற்படும் தாக்கங்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிநேகா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கலந்துரையாடலில், பாதிக்கப்பட்ட பல பெண்களும் தங்களது துயரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கடலின் பசிக்குக் குழந்தைகளைப் பறிகொடுத்த பல பெற்றோர் தங்களுக்குப் புதிதாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்பது இயல்பு. இதற்கு உதவியாக சுனாமி பாதித்த பகுதிகளில் இந்த சிகிச்சையை பெண்களுக்கு மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கமான இயற்கைச் சீற்றங்களைப் போல அல்லாமல் கடுமையான உளவியல் சிக்கல்களையும் சுனாமி ஏற்படுத்தியிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த பிறகுதான் இந்த சிகிச்சை தொடங்கியிருக்க வேண்டும் என சமூகப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் கள ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலே இந்த சிகிச்சைக்கு வழி திறக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏற்கெனவே நொந்துபோயிருக்கிற பெண்கள் மேலும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த கட்டாயங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஏற்கெனவே குழந்தைப் பேற்றின்போது அனுபவித்த வலி உள்ளிட்ட கசப்பான அனுபவங்களால், இந்த சிகிச்சை இப்போது வேண்டாம் என்று மறுக்கக் கூடிய பெண்களை, தங்களது உடல் புதிய கர்ப்பத்திற்குத் தாங்காது என்று அஞ்சுகிற பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள் மறுகர்ப்பத்திற்கு வற்புறுத்துகிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு உடன்படாவிட்டால், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அச்சுறுத்துகிறார்கள். கணவன்மார்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் கூட கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படி நடந்தால் தங்கள் நிலை என்னவாகும் என்ற கவலை இந்தப் பெண்களை வாட்டுகிறது.

மறுகர்ப்ப அறுவை சிகிச்சையால் 50 விழுக்காடு அளவிற்குக் கூட பலன் கிடைத்ததில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் ஆரிய நாட்டுத் தெரு, அக்கறைப் பேட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16 பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேர் மட்டுமே மீண்டும் கருத்தரித்தார்கள். நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் 10 பெண்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதில் ஒருவர் கூட கருவுறவில்லை. கீச்சன் குப்பம் கிராமத்தில் 52 பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் கருவுற்றவர்கள் 5 பேர் மட்டுமே. மறுகர்ப்ப அறுவை சிகிச்சையின் பலன் குறித்து எவ்வித ஆய்வும் நடத்தப்படாமலே அவசர அவசரமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மீண்டும் கருத்தறிக்கவில்லை என்ற பிரச்சனையோடு முடிந்துவிடவில்லை. மாறாக, ஏற்கெனவே மன உளைச்சலில் வாடும் இந்தப் பெண்களை மேலும் வதைப்பதாக முடிகிறது. சும்மாவே ஒரு குடும்பத்தில் வாரிசு உருவாகவில்லை என்றால், ஆணின் உடலில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் பெண் மட்டுமே பொறுப்பாளியாக்கப்பட்டு அவளுக்கு மலடி என்று பட்டம் சூட்டப்படுவதுண்டு. இப்போது மறு கர்ப்ப சிகிச்சைக்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு உருவாகவில்லை என்றால் அவள் குடும்பத்தினரின் மோசமான சாடல்களுக்கு உள்ளாக வேண்டியவளாகிறாள்.

“சுனாமிக்கு என் குழந்தைகள் இரண்டு பேரும் பலியானபோது என்னுடைய ராசி தான் அதற்குக் காரணம் என்று என் கணவனும் மாமியார் மாமனாரும் உறவினர்களும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். இப்போதோ என்னை வேண்டாத விருந்தாளியாக குடும்பத்தில் தள்ளி வைக்கப்பார்க்கிறார்கள்,” என்று ஒரு பெண் கண்ணீருடன் தெரிவித்தது மனதைக் குடைந்தது.

இது கடுமையான உடல்சீர்குலைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. பொதுவாக டியூபெக்டமி என்ற அறுவை சிகிச்சைதான் பெண்களுக்கான கர்ப்பத்தடை முறையாகக் கையாளப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள், கருத்தடுப்பு உறைகள் போன்ற வழிமுறைகள் பெருமளவிற்குப் பின்பற்றப்படுவதில்லை. ஆண்களுக்கான வாசக்டமி முறை ஒன்று இருந்தாலும் கூட மிகப் பெரும்பாலான ஆண்கள் அதை மேற்கொள்வதில்லை. கருவை சுமப்பதானாலும், தடுப்பதானாலும் பெண்ணின் சுமையாகவே மாற்றப்படுகிறது.

டியூபெக்டமி அறுவை சிகிச்சை சில நேரங்களில் தோல்வி அடைவதுண்டு. கருத்தடை செய்து கொண்ட பிறகும் குழந்தை பிறந்துவிட்டது என்ற புகார்கள் அவ்வப்போது எழுவதைக் காணலாம். பல மருத்துவர்கள் இதனால் வரும் சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காக, கருக்குழாயைத் தேவையான நீளத்திற்கும் அதிகமாகத் துண்டித்துவிடுவதுண்டு. அப்படிக் கூடுதலாகக் கருக்குழாய் துண்டிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த மாற்று சிகிச்சையால் பலன் ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்ல இத்தகைய பெண்களுக்கு இது கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. முறையற்ற மாதவிலக்கு, அதிகமான ரத்தக் கசிவு, பசியின்மை, தொடர்ச்சியான அடிவயிற்று வலி, தலைசுற்றல், முதுகுவலி, தலைவலி, இடுப்பில் வலி, நெஞ்சு வலி, மயக்கம், உடல் பருமன் போன்ற உடல் பாதிப்புகளும் மன உளைச்சலுமே இவர்களுக்கு மிச்சமாகின்றன.

சுனாமியை நினைவுகூர்கிறபோது, இந்தப் பிரச்சனைகள் தொடர்பான முழு ஆய்வுகளுக்கு அரசாங்கமே ஏற்பாடு செய்ய வேண்டும். மறுகர்ப்ப அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வது அல்லது மறுப்பது பெண்ணின் உரிமை என்ற செய்தி வலுவாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த உரிமைக்கு அரசின் ஆதரவும் சமுக இயக்கங்களின் துணையும் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

(‘தீக்கதிர்’ 26.12.2010 இதழில் எனது கட்டுரை)

Monday 20 December 2010

அந்த கமிசனை இந்த ‘கமிசனை’ இந்த கமிசன் என்ன செய்யும்


“என்னப்பா இது, ஜேபிசி (கூட்டு நாடாளுமன்றக் குழு) விசாரணை தேவையில்லைன்னு கவர்மென்டு தெளிவா சொல்லியிடுச்சுல்ல. அப்புறமும் ஏன் இந்த எதிர்க்கட்சிக்காரங்க விடாம அதுதான் வேணும்னு உடும்புப்பிடியா நிக்கிறாங்க?”

“ஜேபிசி வைக்க வழியிருந்தாத்தான் கவர்மென்டே அதை வைச்சிருக்கும்ல... ஆனாலும் எதிர்க்கட்சிகளோட கோரிக்கையிலயும் நியாயம் இருக்குதுங்கிறதை ஏத்துக்கிட்டு நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமியில ஒரு நபர் விசாரணைக் கமிசன் அமைச்சிருக்காங்க. அதைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைக்க மாட்டேங்கிறாங்களே...”

“இருபத்துநாலு நாள் பார்லிமென்ட்டை முடக்கினதாலே ஜனங்களுக்கு என்ன லாபம்? இந்த லட்சணத்திலே அடுத்த பட்ஜெட் கூட்டத்திலேயும் கூட இதே பிரச்சனையை எழுப்பப்போறாங்களாம்.”

“சுப்ரீம் கோர்ட்டே இப்ப சிபிஐ விசாரணையை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கிடுச்சு. இப்படி சுப்ரீம் கோர்ட்டு ஒரு பக்கம், சிபிஐ ரெய்டு ஒரு பக்கம், போதாததுக்கு சிவராஜ் பாட்டீல் கமிசன் விசாரணை... இதுக்கு மேல என்ன வேணும்கிறாங்க? எல்லாம் பாலிடிக்ஸ்சுக்காகத்தான்...”

தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பாக இப்படியொரு விவாதம் ஆங்காங்கே கிளப்பிவிடப்படுகிறது. மத்தியில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது கவலையளிக்கிறது என்று பேட்டியளிக்கிறவர்களும், தமிழகத்தில் இதை ஒரு சாதிப்பிரச்சனையாகத் திசை திருப்ப முயன்றவர்களும் மக்களிடையே இப்படிப்பட்ட ஒரு கருத்தைப் பரப்ப முயல்கிறார்கள். ஆனால், அரசியல் விவகாரங்களை நுனிப்புல் மேய்கிறவர்கள் வேண்டுமானால் இது நியாயம்தான் என்பது போல் மவுனமாக இருக்கலாம். ஆழ்ந்த அக்கறையோடு அணுகுகிறவர்கள் அப்படி இருக்க முடியாது. உண்மையிலேயே உச்சநீதிமன்றத் தலையீடும், சிபிஐ புலனாய்வும், ஒற்றை நீதிபதி ஆணைய விசாரணையும் போதுமென விட்டுவிட முடியுமா?

நீதிமன்ற விசாரணைக்கு கால வரம்பு எதுவும் கிடையாது. குறிப்பாக இந்தியாவில் எவ்வளவுக்கெவ்வளவு ஒரு பிரச்சனை மக்களை பாதிப்பதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நீதிமன்றத்தில் அது இழுத்தடிக்கப்பட்டுவிடும் என்பதே நம் அனுபவம்.

மத்திய புலானாய்வு நிறுவனத்தைப் (சிபிஐ) பொறுத்தவரையில் சில ரெய்டு பரபரப்புகளை ஏற்படுத்த முடியும், முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறி எதிர்பார்ப்புகளைத் தூண்ட முடியும். மற்றபடி அதிகாரிகள் மட்டத்திலானவர்களன்றி அமைச்சக மட்டத்திலானவர்களிடம் விசாரிக்க முடியாது. அதற்கு பிரதமரின் ஒப்புதல் தேவை. இந்த விவகாரத்திலோ, பிரதமர் அலுவலகமே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. நீ என்னைப் போட்டுக் கொடுத்தால் நான் உன்னைப் போட்டுக் கொடுப்பேன் என்கிற நாகரிகமான அரசியல் பேரத்தில் எந்த அளவுக்கு அப்படிப்பட்ட விசாரணைகளுக்கு பிரதமரின் ஒப்புதல் கிடைக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. அதே போல் எல்லா ஆவணங்களையும் சிபிஐ எளிதில் பார்வையிட்டுவிட முடியாது. அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சிபிஐ சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை காதில் போட்டுக்கொண்டதே இல்லை.

நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலையிலான ஆணையம் இதிலே எந்த அளவுக்குச் செல்ல முடியும்? இதோ அவரே சொல்கிறார்: “என்னுடைய வேலை இதுதான்... 1999ம் ஆண்டில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை உருவானதற்கும், அதைத் தொடர்ந்து 2001ம் ஆண்டில் நான்காவது கைப்பேசி சேவை (சிஎம்டிஎஸ்) உரிமம் கொண்டுவரப்பட்டதற்கும் இட்டுச் செல்லும் வகையில், தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட சூழல்களையும், நிகழ்ச்சிப்போக்குகளையும் ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படும் ஆவணங்களைப் படித்துப்பார்ப்பதே என் வேலை.”

இதன் பொருள் என்ன என்பது தெளிவானது. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக அவர் எதுவும் விசாரிக்க மாட்டார் என்பதே இதன் பொருள். இரண்டு வாரங்களுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பணிகளைத் தொடங்கிய நீதிபதி பாட்டீலிடம் இதை நேரடியாகவே செய்தியாளர்கள் கேட்டார்கள். இந்த ஊழலின் நாயகர் என குற்றம் சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை விசாரிப்பீர்களா, என்று அவர்கள் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில், “இல்லை.”

இந்தக் குறிப்பிட்ட துறை சார்ந்த அதிகாரிகளை மட்டும் அழைத்து அவர்களது உதவியைப் பெற்றுக்கொள்வாராம். மற்றபடி சிபிஐ விசாரிக்கிற விவகாரங்களையோ, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிற பிரச்சனைகளையோ அவர் கையாளப் போவதில்லை. நாட்டிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாகவே வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலக அதிகாரிகளைக்கூட இந்த ஆணையம் விசாரிக்காது. “2001-2009 காலகட்டத்தில் உரிமங்கள் வழங்குவதிலும் இதே கால கட்டத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடுகள் அளிப்பதிலும் தொலைத்தொடர்புத் துறை கடைப்பிடித்த உள் நடைமுறைகளை ஆய்வு செய்வதோடு என்னுடைய விசாரணை எல்லை முடிந்துவிடுகிறது,” என்றும் பாட்டீல் கூறியுள்ளார்.

விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை இந்த ஆணையம் ஆராயுமாம். ஆனால் விதிகளை மீறி, முன்னாள் அமைச்சர் தயவில் இதிலே ஆதாயம் அடைந்த தனியார் நிறுவனங்களை இந்த ஆணையத்தால் எதுவும் செய்துவிட முடியாது. இந்நாள் அமைச்சர் கபில் சிபல் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அந்த நிறுவனங்களுக்கு இந்த ஆணையம் விளக்கம் கோரும் கடிதங்கள் அனுப்புமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கும் ஆணையத்திற்கும் சம்பந்தமில்லை என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர்.

ஆக, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய கறையாகப் படிந்துவிட்ட இந்த மாபெரும் ஊழல் அத்தியாயத்தில், ஆணையத்தின் வேலை ஒரு மேம்போக்கான துறைவாரி விசாரணை நடவடிக்கை போன்றதுதான். முக்கியப் பிரச்சனைகள் எதற்குள்ளேயும் செல்வதற்கு அதிகாரம் அளிக்கப்படாத இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகளும், சிபிஐ முடிவுகளும் எதற்குத்தான் பயன்படும்? ஒரு பிளாக்மெயில் அரசியல் பேரத்திற்குப் பயன்படுமேயன்றி, மக்களுக்கு வந்து சேர வேண்டிய நிதி வெள்ளம் வேறு வாய்க்கால்களுக்குத் திருப்பிவிடப்பட்டதைத் தடுக்கவோ, மீட்கவோ உதவப்போவதில்லை.

பிரதமர் உட்பட யாரையும் விசாரணைக்கு வந்து பதிலளிக்குமாறு அழைக்கவும், எந்த ஆவணத்தையும் ஒப்படைக்குமாறு ஆணையிடவும் அதிகாரம் கொண்டது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம்பெறும் நாடாளுமன்ற நாடாளுமன்றக் குழு. மக்களின் வறுமை, பிணி, கல்வியின்மை என பல்வேறு அவலங்களை மாற்றும் நோக்கங்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிதி வழிப்பறியானது குறித்து இந்தக் குழுவின் விசாரணை தேவை என்பதே மீண்டும் மீண்டும் தெளிவாகப் புலப்படுகிறது.

Thursday 2 December 2010

இன்றும் இது நடக்கிறது...


பலதார மணத்தை பாதுகாக்க ஒரு சட்டமா?

றுபதாயிரம் மனைவியர், ஒருத்தியின் மீதும் சந்தேகப்பட்டதில்லை அப்பன். ஒரே ஒரு மனைவி, ஆனால் அவள் மீது சந்தேகம் கொண்டான் மகன். இப்படியொரு குறுங் கவிதையை அண்மையில் படித்தேன். இதிகாச நாயகனின் இன்னொரு பக்கத்தைக் காட்டி ஆணிய வக்கிரத்தைச் சாடுகிற அந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர், இதுக்குத்தான் நிறைய மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள உரிமை வேணும்கிறது, என்று கூற, உடனிருந்த எல்லோரும் சிரித்தார்கள். அப்புறம் ஆளுக்காள் பலதார முறை தொடர்பான நகைச்சுவைக் கதைகளைக் கூறத் தொடங்கினார்கள்.

என் முறை வந்தது. அமெரிக்க நையாண்டி எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தாராம். அங்கே பலதார முறை ஆதரவாளர் ஒருவர் இவருடன் விவாதிக்க வந்தாராம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்கான தன் தரப்பு வாதங்களை எல்லாம் அவர் அடுக்கினாராம். கடைசியில் பல தார மணம் கூடாது என்பதற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன என்று கேட்டாராம். எல்லோரும் மார்க் ட்வெய்ன் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்க அவர் எழுந்து, ஒரே ஒரு காரணம் போதும். எந்த மனுசனும் இரண்டு எசமானர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது, என்று சொன்னாராம், என்று நான் சொல்ல மறுபடி சிரிப்பலை எழுந்தது.

ஆனால், என் மனசுக்குள் ஒரு உறுத்தல் குடியேறியது. சிரிப்புக்காகக் கூட இதையெல்லாம் நியாயப்படுத்துவது போல் பேசலாமா என்ற உறுத்தல். ஒழுக்க நெறிக் கதைகள், கட்டுப்பாடுகள் என்று என்னென்னவோ இருந்தாலும் அதையெல்லாம் மிதித்துக்கொண்டு ஒரு ஆண் தன் மனைவிக்குத் தெரிந்தோ தெரியாமலோ பல பெண்களுடன் குடும்பம் நடத்துவது இன்றளவும் அவனது ஆண்மையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல குடும்பங்களைப் பராமரிப்பது அவனது பெருந்தன்மைக்கும் பொருளாதார வலிமைக்கும் சான்றாக்கப்படுகிறது.

இதுவே ஒரு பெண் பல ஆண்களுடன் பழகினால் அவளுக்கு சதைப்பசிக்காரி என்பது போன்ற பட்டங்கள் சூட்டப்படும். ஒழுக்க வாழ்வென்பது எல்லோருக்குமான விதிதான். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றெல்லாம் போதிக்கப்பட்டாலும், நடைமுறையில் வேறு கதைதான். மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் வாழ நேரிடும் கதாநாயகனை மையப்படுத்தி, எப்படிப்பட்ட கட்டாயமான சூழலில், தவிர்க்க இயலாத நிலைமையில் அவன் அப்படியொரு முடிவை எடுத்தான் என்பதாக விளக்கி, கிட்டத்தட்ட அவனை ஒரு தியாகி அளவுக்கு உயர்த்துதாக எத்தனை திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன!

எனினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு சட்டத்தின் வடிவில் இருக்கவே செய்கிறது. பலதார மணம் என்பது இங்கே தண்டனைக்குரிய தண்டனை. தன்னை விட்டு வேறொருத்தியுடன் வாழ்வதாகத் தன் கணவன் மீது ஒரு பெண் புகார் கொடுத்தால், அவன் ஒரு அரசு ஊழியராகவும் இருந்தால் அவனுடைய வேலை போய்விடும், சிறைவாசமும் உண்டு. இப்படிப்பட்ட கடுமையான சட்டவிதிகள் இருந்தும் பல ஆண்களின் ராசலீலைகள் தொடர்கின்றன - அதற்கு முக்கியமான ஒரு காரணம் பெண் அவ்வளவு எளிதில் சட்டத்தின் துணையை நாடுவதில்லை என்ற நிலை. இரண்டாவது முக்கியக் காரணம் - ஆம்பளை இப்படி ஊர் மேயுறான்னா, பொம்பளைகிட்ட என்ன கோளாறோ, என்று வெகு எளிதாக பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவிடுகிற சமூகம். வீட்டுச் சாப்பாடு சரியா இருந்தா ஆம்பளை ஏன் வெளியே சாப்பிடப்போறான், என்று, பெண்ணின் பாலியல் தகுதியைக் கூச்சமே இல்லாமல் கேள்விக்கு உட்படுத்திவிடுகிறார்கள். கடைசியில் இருக்கவே இருக்கிறது, ஆம்பளைன்னா அப்படி இப்படி இருக்கிறது வழக்கம்தான்; பொம்பளைதான் அனுசரிச்சு நடந்துக்கிட்டு அவனை மாத்தணும், என்கிற நெடுங்கால உபதேசம்.

பலதார மணத்திற்குத் தடை விதிக்கிற சட்டம் இருக்கிற நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், அதனை அங்கீகரிக்கிற சட்டம் இருக்கிற நாட்டில் எப்படியிருக்கும்? ஈரான் நாட்டில் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தி உலகம் பழைய நூற்றாண்டுகளுக்குத் திரும்பிச் செல்கிறதா என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே திருமணமான ஒரு ஆண் தன் மனைவியின் ஒப்புதல் இல்லாமலே வேறு பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கான முன்வரைவு ஒன்று ஈரான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் வரதட்சனைக்கு வரி விதிக்கும் ஏற்பாடும் இருக்கிறது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஆதரவான மதவாதிகளும் நியாயப்படுத்துகிறார்கள்.

ஈரானில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராடுவோர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இது நாட்டை மிகவும் பிற்போக்கானதாக மாற்றிவிடும் என்றும், பெண்களுக்குக் கிடைத்துள்ள ஓரளவு உரிமைகளையும் பறித்துவிடும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளைத் திரித்துக் கூறி தங்களது நோக்கத்திற்காகப் பயன்படுத்த முயல்கிறார்கள், என்கிறார் பெண்ணுரிமை இயக்கத்தில் முன்னணியில் நிற்கும் ஜாரா ரஹனாவார்த். இவரது கணவர் மீர் ஹூசைன் முசாவி - ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகிற எதிர்க்கட்சித் தலைவர்.

சட்டத்தை ஆதரிப்பவர்கள் தரப்பில் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குடும்பச் சூழல், பொருளாதாரம், உடல் நிலை போன்ற தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டம் பெரியதொரு வாய்ப்புக் கதவைத் திறந்துவிடுகிறது என்கிறார்கள்! ஈரான் பெண்களிடையே இந்தச் சட்டத்திற்குப் பெரும் ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அரசாங்கம் நேர்மையாகப் பெண்களிடையே ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், ஆகப் பெரும்பாலானவர்கள் இதற்கு உடன்படவில்லை என்ற உண்மை தெரியவரும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். அப்படியொரு கருத்துக்கணிப்புக்கு ஈரான் அரசு தயாராக இல்லை. ஒருவேளை கருத்துக்கணிப்பு என ஒன்று நடத்தப்பட்டாலும் கூட, பெரும்பாலோர் ஆதரிக்கிறார்கள் என்று அரசாங்கம் அறிவிப்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் - ஏனென்றால் இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதே தேர்தல் மோசடிகள் மூலமாகத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

2008ம் ஆண்டிலேயே இது சட்டமாகியிருக்கும். ஆயினும் எதிர்க்கட்சிகளும் மனித உரிமை இயக்கங்களும் வலிமையாகக் குரல் கொடுத்ததால், மேற்கொண்டு விவாதிக்க விரும்புவதாகக் கூறி அப்போதைக்கு அதை நிறுத்திவைத்தார் ஈரான் குடியரசுத் தலைவர் மஹமூத் அஹமதிநேசாத். இப்போது மறுபடியும் இதனைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இஸ்லாம் கோட்பாடுகளிலேயே வரலாற்றிலும் பலதார வக்கிரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று பிற மதங்களைச் சேர்ந்த சிலர் பகையுணர்வோடு விமர்சிப்பதுண்டு. கடந்தகாலப் பண்பாட்டின் மிச்சசொச்சங்களை இன்றைய தங்களது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிற வக்கிரப்பேர்வழிகள் எல்லாச் சமுதாயங்களிலும் இருக்கிறார்கள். பரப்பப்படுகிற எண்ணங்களுக்கு மாறாக முஸ்லிம் மக்களிடையே ஒருதாரப் பண்பாடுதான் ஒங்கியிருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக ஈரான் நாட்டில் பலதாரக் குடும்பங்கள் மிகக் குறைவுதான். இருப்பினும் அந்நாட்டு அரசு இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருவதில் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? தற்கால அரசியல், பொருளாதாரச் சூழல்களை ஆராயாமல் இக்கேள்விக்கு மதவாத அடிப்படையில் மட்டும் விடை காண இயலாது.

உலகின் பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிற, இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிற, பெட்ரோலிய எண்ணை உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிற நாடு ஈரான். புவிவரைபடத்தில் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள நாடுமாகும். ஆகவே, ஈரானின் எண்ணை வளத்தைத் தங்களது ஏகபோகப் பிடியில் வைத்திருக்க உலகச் சுரண்டல் கூட்டங்கள் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டே இருக்கின்றன.

உலக நாகரிக வளர்ச்சிக்குத் தலையாய பங்களித்துள்ள பாரசீகப் பண்பாட்டின் தாயகம் ஈரான்தான். பூமியில் மனித இனம் தோன்றி, வளர்ந்து மற்ற கண்டங்களுக்குப் பரவிய தொன்மைக் காலத்திற்குச் சென்றால், ஆரியர் இனத்தின் பூர்வீகமே பாரசீகம்தான் என்பது தெரியவரும். அப்போது அங்கே இஸ்லாமிய மதம் என்பதெல்லாம் கிடையாது, ஏன் பூமியின் எந்தப் பகுதியிலுமே இன்று நாம் காண்கிற மதங்கள் எதுவும் கிடையாது. மன்னராட்சிகளும், மன்னராட்சியைப் பாதுகாப்பதற்கான மதவாத அரசியலும் மற்ற நாடுகளைப் போலவே ஈரானிலும் கோலோச்சி வந்திருக்கின்றன. மிகப் பழைய காலத்திற்குச் செல்லாமல் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றைப் பார்த்தாலே போதும், ஈரான் அரசின் இந்தப் பிற்போக்குப் பயணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நேரடி மன்னராட்சியிலிருந்து விடுபட்டு குடியரசாட்சி நிறுவப்பட்டிருந்தது ஈரானில். இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1951ல் பிரதமர் முகமது மொசாதீக் அந்நாட்டு பெட்ரோலிய எண்ணை வளத்தையும், பெட்ரோலிய நிறுவனங்களையும் மக்களின் பேராதரவோடு தேசவுடைமையாக்கினார். ஈரானின் எண்ணை வயல்களை உறிஞ்சிக்கொண்டிருந்த அந்நிய முதலாளிகள் கொந்தளித்துப்போனார்கள். அவர்களின் ஆட்சிப் பிரதிநிதிகளான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் டிவைட் ஐசனோவர் இருவரும் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்தார்கள். 1953ல் அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் புகுந்தது (1991ல் இராக் நாட்டிற்குள் ஊடுறுவியது போல). முகமது மொசாதீக் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவின் கட்டளைப்படி செயல்படக்கூடிய மன்னர் (ஷா) முகமது ரெஜா பஹலாவி சர்வாதிகாரியாக அமர்ந்தார். ஒரு பக்கம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் ஜனநாயக இயக்கங்கள் அனைத்தையும் அமெரிக்க அரசின் ஆதரவோடு ஒடுக்கினார். ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன; மன்னர் ஷா நாட்டை விட்டே ஓடினார். ஜனநாயக சக்திகளும் இடதுசாரிகளும் இணைந்தே போராடினார்கள் என்றாலும், முற்போக்கான இயக்கங்கள் வலிமையாக இல்லாத நிலையில், மதவாதத்தோடு கூடிய அயதுல்லா கோமேனி தலைமையில் ஆட்சியமைந்தது. 1979ல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்படுவதாக அறிவித்தார் கோமேனி. அரசின் உச்சநிலைத் தலைவர் (சுப்ரீம் லீடர்) அவர்தான் என்றும், அவருக்குக் கீழே குடியரசுத்தலைவர், அமைச்சகம், நாடாளுமன்றம் என்றும் புதிய அரசமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்தது.

இன்றளவும் இதே நிலைதான் தொடர்கிறது. கோமேனியின் வாரிசாக உச்சநிலைத் தலைவர் பதவியில் இருப்பவர் அலி கமேனி. அவரது ஆசிர்வாதங்களோடு வலதுசாரிப் பிற்போக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறவர் மஹமூத் அஹமதிநேசாத். ஏற்கெனவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியத் தலையீடுகளின் எதிர்வினையாகத்தான், அங்கே இப்படியொரு வலதுசாரி அரசு வந்தது. இன்று அமெரிக்க அரசு மறுபடியும் உலக அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்தவும், தன் வழிக்குக் கொண்டுவரவும் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துவருகிறது. இராக் போல் ஈரானையும் உருக்குலைக்க முயல்கிறது. இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தமது முன்னோடிகளிடமிருந்து பெரிய அளவுக்கு மாறுபட்டுவிடவில்லை. ஈரான் அரசோ, ஆட்சியதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, முற்போக்கான நடவடிக்கைகளால் மக்களைத் திரட்டுவதற்கு மாறாக, குறுகிய மனம் படைத்தோரின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்து அவர்களது ஆதரவைப் பெறுகிற முயற்சியிலேயே இறங்கியுள்ளது. அந்த முயற்சியோடு இணைந்ததுதான் பலதார சட்டம்.

உலகச் சந்தையிலும் அரசியலிலும் தலைமைத் தாதாவாக வலம் வருகிற அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பு அராஜகம் மேலோங்க மேலோங்க, பல நாடுகளில் பிற்போக்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தங்கள் பிடியை இறுக்கிக்கொள்கிறார்கள். ஈரானில் நடப்பதும் இதுவே.

பலதார முறையை சட்டப்பூர்வமாக்கிப் பெண்களை ஆண்களின் அடிமைகளாக்குவதோடு, வரதட்சனைக்கு வரி விதிப்பதன் மூலம் அந்தக் கொடுமைக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் திசையில் ஈரான் அரசு செல்கிறது. அதைத் தடுத்து நிறுத்த ஈரானிய பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்துகிற போராட்டம் அந்நாட்டின் ஜனநாயக மீட்சிக்கான போராட்டத்தோடும், உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தோடும் இணைந்திருக்கிறது. அந்தப் போராட்டம் வெல்லட்டும். மதவாத அரசியலுக்கு மாற்றான முற்போக்கு அரசியல் இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் பெண் விடுதலை இயக்கங்களுக்கும் அந்த வெற்றி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரட்டும்.