Friday 25 February 2011

பால்குடம் எடுத்தபோது நடுங்கிய என் கைகள்...

கட்டாய மதமாற்றம் எப்போது நடக்கிறது? எந்த மத அடையாளமும் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்குப் பெற்றோரும் உறவினர்களும் தங்களது மத அடையாளங்களைச் சூட்டுகிறபோது நடக்கிறது. நெற்றியில் இடப்படும் திருநீறு, தீட்டப்படும் நாமம், ஆசிர்வதித்து வரையப்படும் சிலுவை, காட்டப்படும் பிறை இன்ன பிற, இன்ன பிற சடங்குகளாக அந்த அடையாளங்கள் சூட்டப்படுகின்றன. எந்தக் குழந்தையும் இதுதான் சரியான வழி என ஆராய்ந்து சொந்த முடிவாக தான் வணங்க வேண்டிய கடவுளையோ, பின்பற்ற வேண்டிய மதத்தையோ தேர்ந்தெடுப்பதில்லை.

நானும் அப்படித்தான் குழந்தைப் பருவத்தில் ஒரு இந்துவாக மதமாற்றம் செய்யப்பட்டிருந்தேன். அப்படியாக இருந்த ஒரு நாளில் (கல்லூரிப் படிப்பை “முடித்துக்கொண்டு,” அடுத்து என்ன செய்யலாம் என்ற தேடல்களில் ஈடுபட்டிருந்த காலம்) என் அம்மா சொன்னார்கள்: “எங்கேயாவது ஊர் சுத்தப்போயிடாதே,,, அடுத்த வாரம் நாம திருச்செந்தூர் போறோம்...”

அதை விடவும் சின்ன வயதில் நான் நோய் வாய்ப்பட்டிருந்தபோது என்னைத் திருச்செந்தூருக்கு அழைத்து வந்து பால்குடம் எடுக்க வைப்பதாக நேர்ந்திருந்தார்களாம். டாக்டரின் ஊசி, மருந்து எல்லாம் போக முருகன் என்னை குணப்படுத்தினானாம். இடையில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியாமலே போனதாம். அதனால்தானோ என்னவோ, ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த (?) நான் கல்லூரியை விட்டு வெளியேறினேன், நல்ல வேலையில் சேர முடியாமல் அலைகிறேன்... ஆகவே இப்போதாவது அதை நிறைவேற்றிவிட்டால் முருகன் கோபம் தணிந்து எனக்கொரு நல்வழி காட்டுவான்... (கடவுள் என்றால் இப்படியெல்லாம் கணக்குவைத்துக்கொண்டு, நேர்த்திக்கடனை அடைத்தால் அருள்பாலிப்பது, பாக்கி வைத்தால் பழிவாங்குவது என்று இருக்கலாமோ?)

மதுரையிலிருந்து புறப்பட்டு, அம்பாசமுத்திரம் அருகில் வெள்ளங்குளி கிராமத்தில் பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து, அப்புறம் அங்கேயிருந்து அவர்களும் உடன் வர செந்தூர் முருகனின் கடன் கணக்கை நேர் செய்யக் கிளம்பினோம். அங்கே எங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருந்தார் சுப்பிரமணிய பட்டர். எங்கள் உறவினர் உட்பட பல குடும்பங்களுக்கு அவர்தான் வாடிக்கையான பட்டர். பக்தி வியாபாரத் தொழிலில் அப்படியொரு ஏற்பாடு. கோவில் சத்திரத்தில் வசதியான அறை ஒன்றை எங்களுக்கு அமர்த்தினார்.

செய்யத்தக்கன - தகாதனவற்றைப் சுப்பிரமணிய பட்டர் பட்டியலிட்டார். அவர் கூறியபடி கோவிலுக்குப் பெரியப்பாவும் அப்பாவும் போய் மறுநாளைய பூசைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு, மடப்பள்ளிக்குப் பணம் கட்டிவந்தார்கள்.

முதல் நாள் திருச்செந்தூரின் பல்வேறு சிறு குளங்களில் நான் நீராடுவது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் முதல் கட்டம். விரதம் இருப்பது இரண்டாவது கட்டம். பூசையில் உடைத்த தேங்காய், பழம் தவிர்த்து வேறு எதையும் நான் சாப்பிடக்கூடாது. வாய்திறந்தோ, மனதிற்குள்ளாகவோ நான் முருகன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும். முருகனைத் தவிர வேறு எதையும் நினைக்காமலிருக்க வேண்டும்...

முருகனைத் தவிர மற்ற எல்லா நினைப்புகளும் வந்தன. நீராடிவிட்டு வரும் வழியில் ஈரமும் வண்ணமுமாய்ச் சுற்றிவந்த தாவணிகள் முதல், அந்த ஊர் திரையரங்கிற்கு வந்திருந்த ஒரு படத்தின் சுவரொட்டிகள் வரையில் கண்களைச் சுழல விட்டன. சில சிறுவர்கள் கன்னத்தில் அலகு குத்தி, துளையைச் சுற்றி சந்தனம் அப்பி அவர்களது சொந்தபந்தங்களால் மரியாதையோடு தோள் பிடித்து இட்டுச்செல்லபட்டார்கள். அதற்கு மேல் தாவணிகளோ சுவரொட்டிகளோ ஈர்க்கவில்லை. ‘நமக்கும் இப்படி கன்னத்தில் வேல் குத்திவிடுவார்களோ?’

பெரியப்பா மகளும் என் மீது அக்கறை கொண்டவருமான வேலாக்கா சொன்னார், “பைத்தியக்காரா, உனக்குப் பால்குடம் எடுக்கிறதாத்தானே நேர்ந்திருக்கு... அதுக்குப் போயி அலகு குத்துவாகளா?”

பட்டர் சிரித்தார். “அதெல்லாம் வேறவாளுக்குத்தான் தம்பி.” அலகு குத்துவது, காவடி எடுப்பது போன்ற நேர்த்திக்கடன் சடங்குகள் சாதிச்சான்றிதழோடு படிக்கவும் அரசாங்க வேலைக்குச் செல்லவும் விதிக்கப்பட்ட சமூகங்களில்தான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

காலையில் எழுந்து தயாரானோம். சுப்பிரமணிய பட்டரும் தயாராக வந்தார். மற்றொரு நீராடல் முடிந்து என் இடுப்பில் ஒரு புதிய வேட்டி சுற்றப்பட்டது. ஊர் முனையில் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார். அங்கே, வரிசையாகப் பலர் பால்குடங்களோடு நின்றுகொண்டிருந்தார்கள்.

பிள்ளையாரிடம் புறப்படுவதற்கு ஒப்புதல் பெறுகிற பூசை முடிந்தது. என் நெற்றியிலும் மார்பிலும் வயிற்றிலும் கைகளிலும் சந்தனம், திருநீறு, குங்குமம் என்று தடவப்பட்டது. கழுத்தில் ஒரு மாலை போடப்பட்டது. ஒரு நாயனக் குழு வந்தது. அவர்கள் பக்திப்பாடல்களை வாசிக்கத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கோவில் பூசாரி உள்ளே தீபாராதனை செய்துவிட்டு, பால்குடத்தை எடுத்துவந்து என் தலையில் வைத்தார். அது ஒரு சிறிய செம்புதான். புறப்படலாம் என்று சைகையால் பட்டரிடம் கூற, அவர் பெரியப்பாவிடம் ஏதோ சொல்ல, பெரியப்பா என் அப்பாவிடம் எடுத்துரைக்க, பூசாரியின் தட்டில் அப்பா ஒரு ஐந்து ரூபாய்த் தாளை வைத்தார். அப்போது அது பெரிய தொகைதான்.

அதன் பிறகும் என் பால்குட ஊர்வலம் புறப்படவில்லை. அருள் வந்து நான் ஆடவில்லையாம். அப்படி ஆடினால்தான் புறப்பட வேண்டுமாம். நானோ அசையாமல் நின்றேன். பசி வேறு. “சீக்கிரம், சீக்கிரம்... மத்தவங்களுக்கு வழிவிடுங்க...”

திடீரென நாயனக்காரர் என் காதுக்கு நேராக நாதசுரத்தைத் தூக்கிப் பிடித்து ஏதோ ஒரு ராகத்தை ஒரு இழு இழுத்தார். மறு காதுப்பக்கம் தவில்காரர் இடித்தார். தலையைச் சிலிர்த்துக்கொண்டேன்.

“அருள் வந்துடுத்து... புறப்படுங்கோ,” என்றார் பட்டர்.

பசியின் வாட்டத்தில் தடுமாறிய என்னைப் பிடித்துக்கொண்டார்கள். ஊர்வலமாகச் சென்றோம். வழியில் எதிரில் வந்த சிலர் என்னைக் கும்பிட்டார்கள். யார் அவர்கள்? “சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தறவாளை சேவிக்கிறது ஒரு புண்ணியம்.”

முருகன் கோவிலை அடைந்தோம். அங்கே என் பெயருக்கும் என் நட்சத்திரத்துக்கும் அர்ச்சனை உள்ளிட்ட இதர சடங்குகள் நடந்தேறின. சுப்பிரமணிய பட்டர் அப்படி அர்ச்சனை செய்த தட்டிலிருந்து திருநீறு எடுத்து முதலில் என் நெற்றியில் பூசினார். எல்லோரும் அவரிடமிருந்து பக்தியோடு திருநீறு பெற்றுப் பூசிக்கொண்டார்கள். இன்னும் என் தலையிலிருந்து பால்குடம் இறக்கப்படவில்லை.

கோயிலின் சுற்றுப்பிரகார மண்டபத்திற்கு இட்டுச்சென்றார். அங்கே பக்கவாட்டுத் திண்iணை உயரத்தில் இருந்த பக்கவாட்டு மேடையில் மற்றவர்களை உட்காரச் சொன்னார். என்னிடம், “சுவாமியை நினைச்சுண்டு குடத்தை நீயே எடுத்து இறக்கி வை தம்பி,” என்றார். இறக்கிவைத்தேன். அதற்கொரு மந்திரத்தை உச்சரித்தார்.

மடப்பள்ளியிலிருந்து எங்களுக்கான பிரசாதங்களை வாங்கிவந்தார் அப்பா. பெரியம்மா எல்லோருக்கும் துண்டு வாழையிலைகளை விநியோகிக்க, அம்மா சர்க்கரைப் பொங்கல், புளியோதரையைப் பரிமாறினார். தங்கையரும் தம்பியும் அவற்றை ஒரு பிடி பிடிக்க, நான் அவர்களை விட வேகமாக வாரி வாயில் போட்டுக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது, திருச்செந்தூர் கோயில் மடப்பள்ளி தயாரிப்பு சுவையோ சுவை. இப்போது எப்படியோ?

பட்டருக்கு எவ்வளவு கட்டணம் என்ற பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. செய்த பூசைகள், அழைத்துச் சென்ற இடங்கள் என்றெல்லாம் பட்டியலிட்டு ஒரு தொகையை அவர் கூற, அது வரையில் “சரிங்க சாமி” என்று அவர் சொன்னதையெல்லாம் கேட்டுச் செய்து வந்தவர்கள், இப்போது “பட்டரே என்ன ஒரேயடியா கேக்குறீரு...” என்று பேரத்தில் ஈடுபட்டு பாதியாகக் குறைத்தார்கள். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார்.

அப்போது அப்பா என்னைப் பார்த்தபடி, “எப்படித் திங்கிறான் பாரு... மனசில ஏதாவது பக்தி இருந்தால்தானே,” என்று கிண்டலாகவும் கடுப்பாகவும் சொன்னார்.

சுப்பிரமணிய பட்டர் குறுக்கிட்டார். “அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ... தம்பி பால்குடத்தை இறக்கிவைக்கிறப்போ நான் நன்னா கவனிச்சேன்... தம்பியோட கை ரெண்டும் அப்படியே நடுங்கித்து... பக்தியில்லாம, சுவாமியோட அருள் இல்லாம அப்படி நடுங்காது... இனிமே தம்பியைப் பிடிச்ச துரதிர்ஷ்டமெல்லாம் தொலையறதா இல்லையான்னு பாருங்கோ.”

பேசிய தொகை பெரிய அளவுக்கு வெட்டப்படாத மன நிறைவுடன், ஆண்டுதோறும் எங்கள் குடும்பத்தின் பெயரில் முருகனுக்கு அர்ச்சனை செய்த திருநீறு, குங்குமத்தைத் தபாலில் அனுப்பிவைப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார் சுப்பிரமணிய பட்டர். “நாளைக்கு மெட்ராஸ்லேயிருந்து ஒரு ஃபேமிலி பால்குடம் எடுக்க வர்றது... அவாளுக்கு சத்திரத்தில ரூம் ஏற்பாடு செய்யணும்...”

பேருந்து நிலையத்துக்கு நடைபோட்டோம். தம்பியும் தங்ககையரும் என்னைக் கலாய்க்கத் தொடங்கினார்கள். “நிஜமாவே உன் கை நடுங்கிச்சாக்கும்?”

Monday 7 February 2011

பள்ளிக் கட்டணம், சமச்சீர் கல்வி: அரசு பெருமைப்படலாமா?


திமுக அரசு தனது சாதனை என விளம்பரப்படுத்தத் தக்க, ஆனால் அவ்வாறு பெருமைப் பட்டுக்கொள்ளும் தகுதி அரசுக்கு இல்லை என்று சொல்லத்தக்க இரண்டு சட்டங்கள் உள்ளன. ஒன்று: தனியார் பள்ளிகளின் தாறுமாறான கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் முறைப்படுத்துதல்) சட்டம் - 2009; இரண்டு: தமிழ்நாடு சமச்சீர் கல்விச் சட்டம். நல்ல முன்னுதாரணங்களாக அமைய வேண்டிய இந்த இரண்டு சட்டங்களிலும் உள்ள ஓட்டைகளும், நடைமுறைப்படுத்தப்படுகிற முறைகளும் அரசின் நோக்கத்தில் ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றன. அரசுக்கு எளிய, நடுத்தரக்குடும்பங்களின் குழந்தைகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் பள்ளிக் கல்வி கிடைக்கச் செய்வதிலும், ஏற்றத்தாழ்வற்ற கல்வி வழங்குவதிலும் உண்மையான அக்கறை இருக்கிறதா?

நீண்ட நெடும் போராட்டதிற்கும், நீதிமன்ற ஆணைக்கும் பிறகே கட்டணம் முறைப்படுத்துதல் சட்டத்தை இந்த அரசு கொண்டுவந்தது. தங்களது சொற்ப வருமானத்தில் கணிசமான பங்கினைத் தனியார் பள்ளி நிர்வாகங்களின் கட்டணக் கொள்ளைக்கு இரையாக்கிவிட்டு, கடன் சுமையோடு வாழ்க்கையைத் தள்ளுகிற நிலைக்குத் தள்ளப்பட்ட எண்ணற்ற குடும்பங்கள், இந்தச் சட்டத்தால் தங்களுடைய அவலம் மாறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பல நிர்வாகங்கள் சட்டத்தை மீறுகிற நிலையில், நடப்பு கல்வியாண்டு முழுக்க தமிழக பள்ளிகளின் முன்பாகப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதைத்தான் காண முடிந்தது. சட்டம் மீறப்படுவதைத் தடுக்கவேண்டிய அரசோ, மக்களை ஒரு புறம் கொந்தளிக்கவிட்டுவிட்டு, இன்னொரு பக்கம் அந்தத் தனியார் நிர்வாகங்களுக்கு வலித்துவிடக்கூடாதே என்ற கரிசனத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நடைமுறையில் சட்டம் பலனளிக்கவில்லை என்பதற்கான அடிப்படைகளாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு இரண்டையும் சேர்ந்தவர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்கள்:

நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழுவில் முழுக்க முழுக்க பள்ளிக்கல்வி இயக்குனர்களும் உயரலுவலர்களும் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எளிய பெற்றோரின் உண்மை வலி அறியாத இவர்களோடு கல்வியாளர்களும், பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்திருந்தால் சட்டத்தில் உள்ள, நிர்வாகங்கள் நழுவுவதற்கான ஓட்டைகளை அடைத்திருகக முடியும். ஆனால், அந்த ஓட்டைகள் அடைபட்டுவிடக்கூடாதேயென்று விழிப்புடன் இந்தப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

அடுத்து, குறிப்பிட்ட ஒரு நிர்வாகம் சட்டத்தை மீறிவிட்டது, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறது என்று பெற்றோர் எவரேனும் எழுத்துப்பூர்வமாகப் புகார் செய்தால் மட்டுமே காவல்துறை அதைப் பதிவு செய்யும் என்று சட்டம் கூறுகிறது. பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற அச்சத்தின் காரணமாக அவ்வாறு காவல்நிலையம் சென்று புகார் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது வெளிப்படை. சட்டம் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கண்காணிப்பதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை.

சென்னையில் கடந்த நவம்பரில் ஒரு பொதுவிசாரணையை நடத்திய தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா, சட்டத்தின் செயலாக்கத்தைக் கண்காணித்து, மீறல் குறித்து காவல்நிலையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே புகார் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதை அரசின் ஆணையாக்கவோ, சட்டத்தில் இணைக்கவோ அரசு தயாராக இல்லை. உண்மையில், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க சட்டத்தில் ஒரு பிரிவு (11) ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில், அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆவணங்களைக் கைப்பற்றலாம் என்கிற அளவுக்கு இருந்தது. ஆனால், தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற எண்ணத்துடன், அந்தப் பிரிவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. எனினும், மாவட்டக்குழுக்கள் அறிவிப்புக் கடிதம் அனுப்பி ஆவணங்களைக் கேட்டுப்பெறலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மாவட்டக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்பதற்கு இதுவே சான்று. ஆனாலும், அக்குழுக்களை அமைக்க அரசு ஏனோ தயங்குகிறது.

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு, அந்த மையங்களில் புகார் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு, புகார்கள் வரிசை எண்ணிட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த மையங்கள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களது நடவடிக்கை குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசு அந்த வலியுறுத்தலைக் கண்டுகொள்ள மறுக்கிறது.

மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று கூறுகின்றன. ஆனால், சட்டத்தின் 7 வது பிரிவும் அதன் (3-1,2,3) உட்பிரிவுகளும், இந்தச் சட்டத்தை மீறுகிற சிபிஎஸ்இ பள்ளிகளின் அங்கீகாரத்தையும் மாநில அரசு ரத்துச் செய்யலாம் என்று தெளிவாகக் கூறுகிறது. மாநில அரசுகள் இப்பள்ளிகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்தலாம் என்று அந்த மத்திய வாரியமே கூட கூறியுள்ளது. இப்படி தெளிவாக இருந்தாலும், தமிழக அரசு தனது ஆணையை சென்னையில் உள்ள மத்தியப் பள்ளி வாரிய இயக்குநர் மூலமாக அந்தப் பள்ளிகளின் முதல்வர்களுக்கு அனுப்ப முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

சட்டத்தை மீறுகிற தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு சிறைத்தண்டனை, அங்கீகார ரத்து என்றெல்லாம் சட்டத்தில் பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது. நிர்வாகிகள், தங்களது கல்வி நிலையம் கல்லூரியாக மாறிவிட்டது என்று அறிவித்து எளிதில் தப்பித்துவிடுவார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடியது, சட்டத்தை மீறினால் அரசாங்கமே அந்தப் பள்ளிகளை ஏற்று நடத்தும் என்று சட்டத்தில் சேர்க்கப்படுவதுதான். அதற்கு ஏனோ அரசு மனமில்லை.

மிக முக்கியமாக, இந்த ஆண்டு முழுக்க கொந்தளிப்புகளாகவே கடந்ததற்குக் காரணம், வெளிப்படைத்தன்மை இல்லாததுதான். ரகசியமாக பள்ளி நிர்வாகிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை அளித்த பள்ளிக்கல்வி இயக்ககம், அவற்றை பகிரங்கமாக அறிவிக்கவில்லை, மக்களுக்கு எந்தப் பள்ளிக்கு என்ன கட்டணம் என்பதே தெரியவில்லை.

கட்டண நிர்ணயச் சட்டத்தின் கதை இதுவென்றால், சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறவில்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான, சீரான கல்வி என்ற நோக்கம் கொச்சைப்படுத்தப்பட்டதாக, இந்தியாவில் வேறு எங்குமே இல்லாததாக தமிழகத்தில் மட்டும் இருக்கிற நான்குவிதமான பள்ளிக் கல்வி இயக்ககங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் மாற்றப்படவில்லை. பொது இயக்ககம் என்று அறிவிக்கப்பட்ட பின் மெட்ரிக் பள்ளி இயக்ககம் என இனியும் தொடரவேண்டிய அவசியம் என்ன? அனைத்துப் பள்ளிகளுக்குமான பொதுப் பாடத்திட்டம் வந்தபின் மெட்ரிக் பள்ளி என்றே செயல்பட அனுமதிக்கப்படுவது எப்படி? இதற்கெல்லாம் அரசுத்தரப்பிலிருந்து வருகிற பதில்: மவுனம்.

பாட நூல்களை தனியார் பதிப்பகங்கள் வெளியிடலாம் என அனுமதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து வலுவாக வாதாட அரசு தயாராக இல்லை.

இப்படி அடுக்கடுக்கான அரசுத்தரப்பு அலட்சியங்கள் இவ்விரு சட்டங்களின் அடிப்படை நோக்கங்களையே அடிபடச் செய்துகொண்டிருக்கின்றன என்று கல்வியாளர்களும், சமச்சீர் கல்விக்காகப் போராடுகிறவர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறும் விமர்சனத்தோடு அவர்கள் நின்றுவிடவில்லை. சட்டங்கள் உயிர்ப்புடன் இயங்க வேண்டுமானால் அதற்குச் செய்ய வேண்டியது என்ன என்ற சரியான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்கள்:

1) கட்டண நிர்ணயக் குழுவில் கல்வியாளர்கள், பெற்றோர் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்;

2) விதிகளை மீறும் நிர்வாகங்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்;

3) மாவட்டக் குழுக்கள் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்;

4) மாநில புகார் மையமும், மாவட்ட புகார் மையங்களும் அமைக்கப்பட வேண்டும்;

5) மத்தியப் பள்ளிகள் சட்டப்பூர்வ கட்டணங்களை செயல்படுத்துவதற்கான ஆணையை மத்தியப் பள்ளி இயக்குநர் மூலம் அனுப்பச் செய்ய வேண்டும்:

6) சட்டத்தை மதிக்காத பள்ளிகளை அரசாங்கமே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பு சட்டத்தில் இடம்பெற வேண்டும்;

7) நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் என்ன என்பது இனியேனும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, பெற்றோர் சங்கங்களின் மூலம் பெற்றோருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்;

8) நிர்வாகம் கட்டாயப்படுத்துகிற கட்டணங்களைச் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றோ, தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாகள் என்றோ மிரட்ட முடியாது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இத்தனை வேண்டும்கள் தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அமைப்புகளாலும், ஆர்வலர்களாலும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். அப்போதுதான், அரசின் அக்கறை யாருடைய முன்னேற்றத்தில் என்பது தெளிவாகும்.

  • (‘தீக்கதிர்’ 7.2.2011 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)