Thursday 30 August 2007

விவாதம்

எந்த ஓட்டத்திற்கு இந்த ஒன் டூ த்ரீ?
ரயில் பயணத்தில் ஒரு விவாதம்
ன்னப்பா, எல்லாம் நம்ம பேர்லதான் நடக்குது. ஆனா என்ன நடக்குதுன்னு மட்டும் நமக்குத் தெரிய மாட்டேங்குது!” -படித்துக் கொண்டிருந்த நாளேட்டை மடித்து வைத்தபடி கேட்டார் நண்பரும் சக ரயில் பயணியுமான சதாசிவம்.
“இப்படி சும்மா பொழுது போறதுக்காக பேப்பர் படிச்சுக்கிட்டு, நேரத்தை ஓட்டுறதுக்காக மட்டும் பேசிக்கிட்டிருக்கிற வரைக்கும் இதெல்லாம் தெரிஞ்சுக்க முடியாதுதான்,” என்று கூறினார் கலையரசி.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது, ஆட்சி கவிழ்கிறது என்ற தலைப்பில் தரப்பட்டிருந்த செய்தியைப் பற்றித்தான். ”மன்மோகன் சிங்குக்கு கம்யூனிஸ்ட்டுகள் கெடு,” “ஆதரவை விலக்கிக் கொள்வதானால் அப்படியே செய்யட்டும் - பிரதமர் அதிரடி,” ...என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாளேடுகளிலும் வாரப்பத்திரிகைகளிலும் இடம்பெற்றிருந்தன. “இவ்வளவு செய்தி போட்டிருக்காங்களே, யாராவது பிரச்சனை என்னன்னு தெளிவா போட்டிருக்காங்களா,“ என்று அடுத்த அம்பை எய்தார் கலை.
அமெரிக்காவுடன் இந்தியாவின் அணுசக்தி உடன்பாடு, அதற்கு இடது சாரிக் கட்சிகளின் எதிர்ப்பு, ஆட்சியாளர்களின் விளக்கங்கள், ஆட்சி கவிழுமா என்று நாவில் எச்சிலூறக் காத்திருக்கும் பாஜக கூடாரம்... இந்தச் செய்திகளைத்தான் அன்றைய அந்தப் பயண நேரக் கலந்துரையாடலில் அலசத் தொடங்கியிருந்தனர்.
பணிச்சூழல் காரணமாக அன்றாடம் ரயில் பயணம் வாய்க்கப் பெற்றவர்கள் பல விதங்களில் தொலைவையும் நேரத்தையும் கடப்பார்கள். அவரவர் ஊரின் ரயில் நிலையம் தாண்டியதுமே (உட்கார இடம் கிடைத்தால்) தலைசாய்ந்து உறங்கிவிடுவது, பக்திப் புத்தகங்கள் அல்லது துப்பறியும் நாவல்களில் மூழ்குவது, சும்மா வெளியே பார்த்துக் கொண்டே வருவது, யாரோடும் பேசாமல் பத்திரிகைகளில் மொபைல் போன் விளையாட்டில் முகம் புதைப்பது, சூடான செய்திகள் குறித்து அரட்டைகளில் இறங்குவது... இப்படிப் பலவகையான நேரக்கடத்தல்கள்.
“சிபிஎம்-காரங்களும் மத்த இடதுசாரிக்கட்சிகளும் இந்த அணுசக்தி உடன்பாட்டை எதுக்கு இவ்வளவு தீவிரமா எதிர்க்கிறாங்க?...,” எனக்கேட்டார் பிலிப்ஸ்.
“அமெரிக்கான்னாலே இவங்களுக்கு அலர்ஜிப்பா. உலகமே அமெரிக்காகூட ஒத்துப்போகுது, இவங்கமட்டும் முறிச்சிக்கிட்டு நிப்பாங்க,” இது நான்காமவர்.
“கொலை, கொள்ளை, அடிதடி, ஆள்கடத்தல்னு அழிச்சாட்டியம் பண்ணுன ஒரு பெரிய கிரிமினல் குற்றவாளி ஜெயில்லயிருந்து ரிலீசாகி வந்துட்டாலும், அதுக்குப் பிறகு எந்தவொரு கிரிமினல் சம்பவம் நடந்தாலும் போலீஸ் அவனையும் சம்பந்தப்படுத்தித்தான் பார்க்கும். பல நேரங்கள்ல அது சரியாகவும் இருக்கும். அது மாதிரிதான் அமெரிக்கா. உலகத்திலேயே முதல் முறையா அணுகுண்டு போட்டு ஹிரோஷிமா, நாகசாகி மக்களைக் கொன்னது அமெரிக்காதான். தன்னோட சுரண்டல்களுக்காக மத்த நாடுகளோட உடன்பாடு செய்துக்கிறதும், அப்புறம் அந்த நாடுகளைக் கபளீகரம் செய்றதும் அமெரிக்க அரசாங்கத்தோட பாரம்பர்யம். நம்ம நாட்டு அரசாங்கம் யார் பேச்சையும் கேட்காமல் அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்துக்குதுன்னா அதைத் தட்டிக் கேட்க மாட்டாங்களா என்ன,” என்றார் கலையரசி.
“அமெரிக்காவிலேயிருந்து மொபைல் போன் கம்பெனிகள் வந்திருக்கு. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. வர்த்தக உறவு, சுற்றுலா, கல்வி, அது இதுன்னு நிறைய உடன்பாடுகள் இருக்கு. அதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கலையே...,” என்றார் அதுவரை மௌனம் காத்த சன்னலோரப் பயணி மாறன்.
“சரி சார், அப்படியென்ன இந்த உடன்பாட்டுல நமக்கு பாதகமா இருக்கு? பிரதமர் கூட நமக்கு அணுமின்சாரம் அவசியம்னு பேசியிருக்காரே?” -இப்படிக் கேட்டவர் மைதீன்.
“அணு சக்தி வேணாம்னு சொல்லலை. அதுக்கு அமெரிக்காவோடதான் ஒப்பந்தம் செய்துக்கணுமா? வேற சில நாடுகளோட ஒப்பந்தம் செய்துக்க முடியும். அமெரிக்காவோட செய்துக்கிட்ட இந்த 123 உடன்பாடு பல வகைகள்ல நம்மைக் கட்டுப்படுத்துது.... நம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய லகான், நாம என்ன செய்றோம்னு கண்காணிக்கிற அதிகாரம் மறைமுகமா அமெரிக்கா கையிலதான் இருக்கும். நாம அணுகுண்டு செய்றதா சொல்லிக்கிட்டு திடுதிப்புனு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய முடியும்.” -கலை.
“அந்த மாதிரியெல்லாம் இல்லைன்னு சொல்றாங்களே. பிரதமர் நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறாரே...?”
“அது நாடாளுமன்றத்திலே பொய் சொல்ற மாதிரிதான்.”
“மாறன் சரியா சொன்னார். அமெரிக்காவுல ரெண்டு வருசத்துக்கு முன்னால ஹைடு சட்டம்னு ஒண்ணைக் கொண்டுவந்தாங்க. இந்தியாவோடு அணுசக்தி உடன்பாடு வரப்போகுதுன்னதும் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்தாங்க.”
“அக்கா, முதல்ல ஹைடு சட்டம்னா என்னான்னு விளக்குங்க. ஹைடு-ன்னா இங்கிலீஷ்ல மறைவுன்னுதானே அர்த்தம்....? ”
“ஹென்றி ஹைடு-ன்னு ஒருத்தர் அமெரிக்க நாடாளுமன்றத்திலே தாக்கல் செஞ்ச மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாயிடுச்சி. அதுக்கு அந்தாளு பெயரையே வெச்சிருக்காங்க. நேரடியா ஒப்பந்தத்துல இல்லன்னாலும் மறைமுகமா, ஆனா கறாரா, அந்தச் சட்டம் ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்துது. மறைமுகமா கட்டுப்படுத்தறதால ஹைடு-ங்கிற பெயர் தற்செயலா பொருத்தமாவும் ஆயிடுச்சு!”
“கலை சொன்னமாதிரி, அந்த ஹைடு சட்டம் என்ன சொல்லுதுன்னா, இந்தியா அமைதி நோக்கத்துக்காகத்தான் அணு சக்தியைப் பயன்படுத்துதான்னு தொடர்ந்து கண்காணிக்கணும், மறுபடியும் அணுகுண்டு சோதனை கீதனை நடத்தினா ஆட்டமேட்டிக்கா ஒப்பந்தம் ரத்தாகும்னு சொல்லுது.”
“அடப்பாவிங்களா! நம்ம நாடு அணுகுண்டு செய்யலாமா கூடாதாங்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனா மத்த நாடுக அணுகுண்டு செய்றப்ப, ஒரு பாதுகாப்புக்காக நாமளும் அதை டெஸ்ட் பண்ணிப்பார்த்தாக்கூட ஒப்பந்தத்தை ரத்துச் செய்வாங்கலாமா! வீட்டுக்கு ஃபிரிட்ஜ் வாங்குறப்ப, அதுல கறிக்குழம்பு வெச்சா ஃபிரிட்ஜையே தூக்கிட்டுப் போயிடுவோம்னு கடைக்காரரு சொல்ற மாதிரில்ல இருக்கு!...,” என்று சதாசிவம் சொல்ல ரயில் பெட்டியின் அந்த இருக்கைப் பகுதி முழுக்க சிரிப்பலை பரவியது. இதற்கிடையே இவர்களோடு பழக்கமில்லாத இதர பயணிகளும் உரையாடலைக் கவனிக்கவும் பங்கேற்கவும் தொடங்கினர்.
“பாருங்க, நம்ம நாட்டுல என்னடான்னா அரசாங்கம் பார்லிமென்டுக்கே கூட தெரியாம ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டுட்டு வரமுடியுது. அதுக்கப்புறமும் பார்லிமென்ட்டோட ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. அதுக்கான சட்டமே இங்கே இல்லை. ஆனா அமெரிக்காவுல இப்படி இன்னொரு நாட்டோட செய்துக் கிட்ட ஒப்பந்தத்தையே நடுரோட்டுல விடுறதுக்குன்னு சட்டம் இருக்கு,” என்று கூடுதலாகச் சேர்ந்துகொண்ட ஒரு பயணி கூறினார்.
“ஆனா, திடுதிப்புன்னு ரத்தாகாது, மத்த நாடுகள்லயிருந்து இந்தியா அணு மின்சாரம் தயாரிக்கிறதுக்கான யுரேனியம் எரிபொருள் வாங்குறதுக்கு அமெரிக்கா உதவி செய்யும்னு ஒப்பந்தத்துல இருக்காமே?”
“அதாவது, அப்படியொரு நிலைமை ஏற்பட்டா, யுரேனியம் சப்ளை செய்யக்கூடிய மத்த நாடுகளோட இந்தியா பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா உதவி செய்யுமாம்!...,” என்றார் மாறன்.
“அதாவது அந்த நாடுகளோட ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு மந்திரி இவங்களோட பேரு, ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்து உதவி செய்வாங்க போல,” என்று சதாசிவம் சொல்ல மறுபடி சிரிப்பு பிய்த்துக் கொண்டு போனது.
“அப்புறம் பார்த்திங்கன்னா, ஏதோ நம்ம நாடு தங்கு தடையில்லாம மின்சார வசதி பெறணுமேங்கிற அக்கறையில ஒண்ணும் ஜார்ஜ் புஷ் இந்த ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட வைக்கலை. பெரிய தாதாக்கள்லாம் யாரையாவது அடிச்சிட்டு வர்றதுக்கோ, ஆளை அள்ளிக்கிட்டு வர்றதுக்கோ அடியாள் வைச்சிருப்பாங்கள்ல? அது போல அமெரிக்காவோட அடியாள் மாதிரி இந்தியா செயல்படணும்னு புஷ் எதிர்பார்க்கிறார். அப்படியெல்லாம் ஈனப் பிழைப்பு பிழைக்க மாட்டோம்னு சுயமரியாதையோடு சொல்றதுக்கு பதிலா நம்மாளுக தலையாட்டிட்டாங்க,” என்றார் மாறன்.
“என்னண்ணே பெரிய குண்டா போடுறீங்க?”
“அவரு சொல்றது நிஜம்தான். ஏற்கெனவே ...... வருசம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒண்ணு கையெழுத்தாயிடுச்சு. அந்த ஒப்பந்தத்தில மட்டும் இந்தியா கையெழுத்துப் போடாம இருந்திருக்கும்னு வைங்க, அமெரிக்கா இந்த 123 அணுசக்தி ஒப்பந்தம் பத்திப் பேசுறதுக்காகக் கூட வந்திருக்காது,” என்றார் கலை.
“இப்ப நம்ம நாட்டுக் கடலுக்கு அமெரிக்க ராணுவக்கப்பல் வரமுடியுது, கொஞ்சநாள் முந்தி பயங்கர அணு ஆயுதங்கள் இருக்கிற நிமிட்ஸ் கப்பலை நம்ம சென்னைத் துறைமுகத்திலே நிறுத்தி ‘ரெஸ்ட்’ எடுக்கிறதுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி கொடுத்துச்சு. ஈராக் நாட்டுல ஏராளமான குழந்தைக உட்பட லட்சம் பேருக்கு மேல குண்டு போட்டுக் கொன்ன கொலைகாரக் கப்பல் அது. இப்ப அமெரிக்காவோட பொருளாதார நாட்டாமைக்கு சவால் விடுற தேசமா வளர்ந்துட்டு வர்ற சீனா, அமெரிக்காவைச் சார்ந்திருக்காம அணுமின்சாரம் உற்பத்தி செய்ய முயல்கிற ஈரான்... அப்புறம் கியூபா, வெனிசுலா... பாலஸ்தீனம்... இப்படிப் பல நாடுகளுக்கு ‘செக்’ வைக்கணும்னு அமெரிக்கா நினைக்குது. அதுக்கு உடன்பட்டு ஒத்துழைக்கிறோம்கிறதுதான் அந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுல இந்தியா கையெழுத்துப் போட்டதோட உள்ளர்த்தம்,” என்று ஒரு சிறிய உரையாற்றுவது போல் சொல்லி முடித்த மாறன் முகத்தில் ஒரு உண்மையான ஆவேசம் வியர்வை முத்துக்களாய் ஒளிர்ந்தது. வழக்கமாக ஏதாவது நையாண்டியாய்ப் பேசும் சதாசிவம் கூட மாறனின் உணர்வைப் புரிந்துகொண்டவராய் அமைதி காத்தார்.
“அந்த ஒப்பந்த அடிப்படையிலேதான் பலவிதமான ஆயுதங்களை இந்தியாவுக்கு சப்ளை செய்ய அமெரிக்காவோட பல ஆயுதக் கம்பெனிகள் காண்ட்ராக்ட் போடுறாங்க. அணு மின்சாரத்துக்கான யுரேனியம், உலைகள், ஜெனரேட்டர்கள், கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்கள் சப்ளை மூலமா அமெரிக்க கம்பெனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் கோடி கோடியாய் வருமானம்,” என்று அந்த அமைதியைக் கலைத்தார் கலை.
“ஓ... அப்படியொரு ஒப்பந்தம் இருக்கிறதாலதான் நம்ம வங்காள விரிகுடாக் கடல்ல அமெரிக்கா, ஆ°திரேலியா, ஜப்பானோட இந்தியாவும் சேர்ந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சியில ஈடுபடப் போறாங்களோ? அதனாலதான் கம்யூனிஸ்ட்காரங்க அந்த ஜாயின்ட் எக்சர்சைஸ் வேணாம்னு எதுக்குறாங்களோ?” -என்றார் பிலிப்ஸ்.
“இப்படி சுத்தியிருக்கிற நாடுகளுக்கு சந்தேகம் வர்ற மாதிரி அமெரிக்கா சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டிருந்தா நம்ம நாட்டை யார் நம்புவாங்க? நண்பர்களே இல்லாம தனியா நிக்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும்,” எனக் கூறிய மைதீனின் குரலில் சினிமா ஹீரோத்தனம் இல்லாத தேசப்பற்று ஒலித்தது.
“ஈராக் மாதிரி இன்னொரு நாட்டை - அது நமக்கு குழாய் வழியா பெட்ரோலியம் காஸ் சப்ளை செய்யப் போற ஈரானாகக்கூட இருக்கலாம் - அடுத்தபடியா நிர்மூலமாக்குறதுக்கு யுஎஸ் திட்டம் போடும். அதுக்கு நாம ஒத்துழைக்க மறுத்தா, ஏதாச்சும் ஒரு ஓட்டைச்சாக்கு சொல்லிக்கிட்டு இந்த 123 ஒப்பந்தத்தை யுஎஸ் ரத்துச்செய்யும். அவங்களை நம்பி ஆரம்பிக்கிற அணுமின்சாரத் திட்டங்கள் என்ன ஆகும்? அதுக்காக நம்ம அரசாங்கம் செலவு செய்யப்போற கோடிக்கணக்கான ரூபாய் பணம் என்ன ஆகும்? 123 ஒப்பந்தத்துல யுரேனியம் எரிபொருள் ‘ரீ-பிராசஸ்’ உரிமை பத்தி எதுவும் இல்லை. அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எப்ப வேணும்னாலும் டெர்மினேட் செய்யும், கதிர்வீச்சோட இருக்கிற பயன்படுத்தப்பட்ட ஃபியூயல் மெட்டீரியல்ஸை நம்மாலேயும் மறுசுழற்சி பண்ண முடியாதுன்னா அது நம்ம மண்ணோட சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்புக்கும் பெரிய டேஞ்சராச்சே!” -இவர்களோடு தானாக வந்து சேர்ந்து கொண்ட பயணி இப்படிக் கேட்க உரையாடல் குழுவினர் மீண்டும் மௌனமானார்கள்.
“ஜெயலலிதா, மன்மோகன் சிங்கைத் தனிப்பட்ட முறையில் தாக்கி அறிக்கை விட்டிருக்காங்களே?”
“அது பிரச்சனையைத் திசைதிருப்பி அமெரிக்காவுக்கு செய்ற தொண்டு.”
“பிஜேபி-க்காரங்க எதிர்க்கிறாங்களே அது?”
“ஒப்பந்த முயற்சியை ஆரிம்பிச்சவங்களே அவங்கதான். இப்ப எதிர்க்கிறது நாற்காலிக்காக.”
“ஆக, நமக்குப் பொருளாதாரமாப் பார்த்தாலும் லாபமில்லை, சொல்லப் போனா ஒப்பந்தம் ரத்தாயிட்டா பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்தான். நம்ம பாதுகாப்புக்கும் பெரிய ஆபத்து. ஒப்பந்தம் ரத்தாகாம இருக்கணும்னா உலகத்துல அமெரிக்க அரசாங்கம் என்ன செஞ்சாலும் மனசாட்சியை அடகுவைச்சிட்டு, மானத்தை விட்டுட்டு வாயைப் பொத்திக்கிட்டிருக்கணும். ரொம்பக் கேவலமால்ல இருக்கு,” என்று சதாசிவம் சொன்னபோது எல்லோரும் இறங்க வேண்டிய நிலையம் வந்து சேர்ந்தது. இதைப் பற்றியெல்லாம் ஆழமாகப் பேசியிராதவர்களைப் பேசவைத்துவிட்ட சிறு மனநிறைவோடு கலையும் மாறனும் தங்களது பைகளை எடுத்துக் கொண்டு தங்கள் பாதையில் புறப்பட்டனர். அவர்களைப் புதிய மரியாதையோடு பார்த்தபடி எழுந்தார் “அமெரிக்கான்னாலே இவங்களுக்கு அலர்ஜி” என்று தொடக்கத்தில் கூறிய நான்காமவர்.
“ஒன்...டூ...த்ரீ-ன்னு ஓட்டப்பந்தயத் துவக்கத்தில சொல்வாங்க. இந்தியாவை, அமெரிக்கா போடுற கோடு மேல ஓட வைக்கிறதுக்கு இந்த ஒன் டூ த்ரீ ஒப்பந்தம் போட்டிருக்காங்க போலயிருக்கு,” என்று அவர் சொன்னதுதான் அன்றைய அந்தப் பயணத்தின் இலக்கு.

Sunday 12 August 2007


பெண்களுக்கு தனியிட ஒதுக்கீடு


-எத்தனை நாள் இந்த ஏற்பாடு?


அ. குமரேசன்



நகரப் பேருந்தில் வழக்கமாகக் கேட்கிற முணகல்தான். "ஜென்ட்ஸ் சீட்ல லேடீஸ் உட்கார்ந்துட்டுப் போறாங்க, அதைக் கேட்க மாட்டேங்கிறாங்க, ஆனா லேடீஸ் சீட்ல நாம உட்கார்ந்தா எழுந்திரிக்கச் சொல்றாங்க - என்ன நியாயம்பா இது?" இப்படிப் புலம்புகிறவர் என்னைப் பார்த்துப் புலம்பியிருந் தால், "அய்யா, இதெல்லாம் ஆம்பளைங்க சீட்டுன்னு யார் சொன்னது? இதெல்லாம் பொதுவான சீட்டுகள்தான். அந்த வரிசையில இருக்கிற தெல்லாம் பெண்களுக்குன்னு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு. இந்தப் பக்கம் யார் வேணும்னாலும் உட்காரலாம். அந்தப் பக்கம் பெண்கள் மட்டும்தான் உட்காரணும்," என்று விளக்கம் அளிப்பேன்.


வேடிக்கை என்னவென்றால் ஆகப் பெரும்பாலான ஆண் பயணிகளுக்கு மட்டுமல்ல, பேருந்தின் நடத்து நருக்கு மட்டுமல்ல, இப்படிப்பட்ட முணகலுக்குக் காரணமான பெண்களுக் கும் கூட இந்த விதி தெரியாது. அரசாங்கமோ போக்குவரத்துத்துறையோ அவர்களுக்கு இந்த உண்மையைத் தெரிய வைப்பது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.


இவ்வளவு ஏன்? உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நிகழ்ச்சியின் போது, ஒரு நிருபரே, ஆண்களுக்கான தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவது எப்படி எனக் கேட்க, அசந்துபோன தேர்தல் ஆணையர், "அன்பரே, ஆண் களுக்கு என்று தனியாக தொகுதிகள் கிடையாது, அவையெல்லாம் யாரும் போட்டியிடக் கூடிய பொதுத் தொகுதிகள், தெரிந்து கொள்ளுங்கள்," என்று விளக்கம் அளித்தார். நிருபர் முதல் முறையாக அந்த விளக்கத்தைக் கேட்டவராக வியப்படைந்தார்.


ஜனநாயகத் தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை உறுதிப் படுத்துவதோடு சம்பந்தப்ப்ட்டது.


பேருந்துகளிலும் இதர பல பொது இடங்களிலும் இட ஒதுக்கீடு இடி மன்மதர்களிடமிருந்து பெண்ணையும் பெண்ளின் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கானது.உலகம் முழுவதுமே பெண்களுக்குத் தனி ஏற் பாடுகள் என்பது அதிகரித்து வருகிறது. அமெரிக் காவில், பிரிட்டனில், இத்தாலியில், ஜப்பானில் என எங்கும் தனி ஏற்பாடுகள் தவிர்க்கவியலாததாகி வருவதாக அண்மையில் படித்த ஒரு கட்டுரை யிலிருந்து தெரிய வருகிறது. 'கார்டியன்' என்ற அமெரிக்க ஏட்டிற்காக எழுத்தாளர் ஜெஸிகா வேலண்ட்டி எழுதிய அந்தக் கட்டுரை 'தி ஹிண்டு' ஆக. 6 இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.


"நான் 13 வயது சிறுமியாக இருந்த போது நியூயார்க் நகரின் சாலைகளைக் கடப்பதற்கு சுரங்கப்பாதை களின் வழியாகச் சென்ற நேரங்களில் என் அப்பா வின் வயதையொத்த ஆண்கள் ஏன் என்னை வெறித்துப் பார்த்தார்கள், எதற்காக வேண்டு மென்றே என்மீது இடித்துவிட்டுப் போனார்கள் என்ப தெல்லாம் அப்போது புரியவில்லை. இன்று 20ம் வயது களின் பிற்பகுதியில் இருக்கும் நான், ரயிலில் உரசல் களுக்கும் இடிகளுக்கும் ஆளாகாத ஒரு பெண் ணைக்கூட நான் இன்னும் சந்திக்கவில்லை," என் கிறார் ஜெஸிகா. உலகத்துக்கே நாகரிகம், பண்பாட்டை ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவில் இந்த நிலைமை!


இடிக் கலாச்சாரம் பற்றியே ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட் டுள்ளது. அதன்படி, நியூயார்க் நகரின் சுரங்கப் பாதைகளில் ஒவ்வொரு 3 பெண்களுக்கும் இரண்டு பேராவது ஆண்களின் இடி தர்மத்துக்கு உள்ளாகி றார்கள். ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட கணக் கெடுப்பின்படி, 20 முதல் 40 வயது வரையுள்ள பெண் களில் 64 சதவீதம் பேர் ரயில் பயணங்களிலோ அல்லது போக்குவரத்தைக் கடப்பதற்கான பாதை களிலோ பாலியல் வக்கிர உரசல்களுக்கு உள்ளாவ தாகத் தெரிவித்திருக்கிறார்கள். சுரங்கப் பாதைகளில் இடிப்பதைக் குறிப்பிட ஜப்பானிய மொழியில் "சிக்கான்" என்ற புதிய சொல்லே புழக்கத்துக்கு வந்துவிட்ட தாம்! வக்கிரம் பழையது, சொல் புதிது!


இதற்கு ஜப்பான் அரசு கண்டுபிடித்த தீர்வு, பெண்கள் மட்டுமே பயணம் செய்ய என தனி ரயில்! ஜப்பானில் மட்டுமல்லாமல், மாஸ்கோ, கெய்ரோ, ரியோ டி ஜெனைரோ போன்ற பல இடங்களிலும் இப்படி பெண்களுக்கென சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில் பெட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறார் ஜெஸிகா. இத்தாலி நாட்டில் பெண்களுக்கென்று ஒரு கடற்கரைப்பகுதியே ஒதுக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் ஒரு நட்சத்திர ஓட்டல் பெண்களுக்கென ஒரு தனித் தளம் கட்டப்போவதாக அறிவித் துள்ளது.நம் ஊரில்தான் மகளிர் மட்டும் பேருந்து, பெண்களுக்குத் தனி வரிசை, மகளிர் கல்லூரி, பெண்கள் பள்ளி என்று பிரிக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்திருந்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஏற்பாடு இருப்பது தெரியவருகிறது. அப்பாடா லோகத்தில் நாம் தனியாக இல்லை என்று மகிழ்ச்சியடைகிற தகவலாக இதை எடுத்துக் கொள்ள இயலவில்லை. மாறாக, பெண்களுக்கு எதிரான பாலியல் இம்சைகள் உலகம் பூராவும் பரவியிருக்கிறது என்ற உண்மை மனதில் வலியைத்தான் ஏற்படுத்துகிறது.


ஒரு பக்கம் இழிவான அந்த இம்சை களிலிருந்து பெண்களுக்கு இந்த ஏற்பாடு கள் ஒரு சிறு விடுதலையைப் பெற்றுத்தரு கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில் இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்க முடியுமா? இது பெண்ணின் சுயமரி யாதையை உண்மையாகவே பாதுகாக் கிறதா? அல்லது பாலியல் வக்கிரத்தாக்கு தல்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு முறியடிப்பதற்கு மாறாகப் பதுங்க வைக் கிறதா? பொதுக் களத்திலிருந்து பெண் களைப் பிரித்துத் தனிமைப்படுத்துகிறதா?விரிவாக விவாதிக்க வேண்டிய பொருள் இது.


இன்றைய சூழலில், பெண் களை உரசுவதும் ஒடுக்குவதும் ஆண்மை யின் லட்சணமாக வக்கரித்துப் போயிருக் கும் சமுதாய நிலையில் இந்தத் தனி ஏற் பாடுகள் தவிர்க்க இயலாததாகத் தொடர வேண்டியிருக்கிறது. அதிலும் பெண் ணிழிவு என்பது அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பண்பாடாகவே உள்ள இந்தியாவில், சமத்துவ உணர்வுகள் மேலோங்கிய பண் பாடாக நிலை பெறும் நாள் வரும் வரையில் இந்த ஒதுக்கீடுகள் ஒரு உரிமைத் தேவை யாகவும் இருக்கின்றன. உண்மையான பாதுகாப்பு, உடைகளை மீறி உடலை ஊடுறுவிப் பார்க்க முயலும் விழிகள் பற்றிய உறுத்தலின்றி பெண் வெகு இயல்பாகப் பொது வெளியில் நட மாட முடியும் என்ற சமுதாய மாற்றம்தான். அந்த மாற்றத்தைத்தான், மத ரீதியான கட்டுப்பாடுகளை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் உட்பட, எல்லாப் பெண் களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். உழைக் கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) போன்ற அமைப்புகள் தங்களது கோரிக்கைகளில் ஒன்றாக "பணியிடங்களில் நட்புச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்" என்று முன்வைத்திருப்பது முதன்மையான அம்சம்.


அந்த முழுச் சுதந்திரச் சூழலை உருவாக்குவதற்கான முனைப்புகளும் ஆங்காங்கே நடக்கின்றன. நண் பனின் திருமணத்திற்குக் கணவனோடு வந்து வாழ்த்துகிற பெண், தெருவோர டீக்கடை முன் நின்று கொண்டு "டேய், உன் கணக்கில் எனக்கொரு காபி சொல்லேண்டா," என்று கட்டளையிடுகிற பெண், "பேசாம பின் சீட்ல உட்கார்ந்துட்டு வா மவனே, வண்டியை நான் டிரைவ் பண்றேன்," என்று கூறி டூ-வீலர் ஓட்டும் பெண், ரயிலில் ஒரு ஆணின் அருகாமை இருக்கை காலியாகு மானால் கூச்சமின்றி உட்காரும் பெண்... இவர்களெல்லாம் அந்த முனைப்பாளிகளாகவே என் கண்ணுக்குத் தெரிகிறார்கள். உலகம் முச்சூடும் அப்படித் தெரிகிற நாள் பற்றிய நம்பிக்கையை விதைக்கிறார்கள்.

குறும்படக் களம்


ஏழுமலை ஜமா


பன்முகப் படைப்பாளிகளை ஒரே இடத்திற்கு வரவழைத்து விவா திக்கவிடுவது, உரையரங்க நிகழ்ச்சிகளைக் கூட கலை எழிலுடன் நடத்துவது, தமிழகத்துக்கே ஒரு கலைக்கொடையாக கலை-இலக் கிய இரவு எனும் நிகழ்வடிவத்தை அறிமுகப் படுத்தியது... இப்படியாகப் பல முதல் பெருமைகள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளைக்கு உண்டு. அந்தச் சலங்கையின் மற்று மொரு மணியாக இப்போது இந்தக் குறும்படத்தைப் படைத்தளித் திருக்கிறார்கள்.


தமுஎச முகாமிலிருந்து வந்த முதல் குறும்படம் அல்ல என்றாலும், கதை சார்ந்த ஒரு படத்தை அதிக பட்ச கலை நேர்த்தி யோடு உருவாக்கியிருப்பதில் முதன்மையான படைப்பாக வந்திருக் கிறது `ஏழுமலை ஜமா'.


திருவண்ணாமலை மாவட்டத்தின் கோணலூர் கிராமத்தில் "வேஷங்கட்டிக் கொண்டு," தெருக்கூத்து நடத்துவதே தனது வாழ் வாக ஏற்றுக் கொண்டவர் வாத்தியார் ஏழுமலை. கிராமக் கோவில் களின் திருவிழாக்களில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க, அவரது குழு சுறுசுறுப்பாக ஒவ்வொரு ஊராய்ச் செல்கிறது. அவரது மகிழ்ச்சி கரமான அன்றைய வாழ்வுக்கு சாட்சியமாக, ஒரு ஊரில் கூத்து முடிந்து திரும்பி வரும்போது தனது ஆசை நாயகி வீட்டிற்குச் சென்று வருவ தாகவும், ஊர் திரும்பிய பின்னர் தன் மனைவியிடம் அதே பிரியத் தோடு நெருங்குவதாகவும் காட்டியிருப்பதில் ஒரு நடப்பியல் சித்தரிப் புடன் கூடிய விமர்சனம் இருக்கிறது.


மண்ணின் கலைஞர்களது கூத்தில் மண்ணள்ளிப் போட வரு கிறது திரைப்படம். கிராமக் கோவில் விழாக்களில் கூத்தின் இடத்தை வீடியோ படங்களும் திரையிசை நடனங்களும் பிடித்துக்கொள்ள இவர்கள் இடமற்றுப் போகிறார்கள். "மரியாதை தெரியாத பசங்க" என்பதைத்தவிர வேறெதுவும் சொல்லத் தெரியாதவராகப் புலம்புகிற ஏழுமலை, வேறு வழியின்றி பிழைப்புக்காக பெங்களூர் சென்று அங்கே காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக மூட்டை தூக்குகிறார். கிரீடம் அணிந்த துரியோதனனின் தலை தக்காளி மூட்டை சுமக் கிறது. சலங்கையணிந்து கூத்துக் களத்தில் சுழன்றாடிய கால்கள் சந்தைக்குள் கடைகடையாகச் சுற்றி வருகின்றன. மகாராஜாவாக ஏவலர்களுக்கும் வாத்தியாராக சக கலைஞர்களுக்கும் ஆணையிட்ட வாய் இப்போது, கடை முதலாளி "டேய் அந்த மூட்டையைத் தூக் கிட்டுப் போடா" என்று என்று ஆணையிட "சரிங்க அண்ணே" என்று பணிந்து அடங்குகிறது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை நாடு எப்படி வீசியெறிந்துவிட்டிருக்கிறது என்பதை இதை விட அழுத்தமாகச் சொல்ல வேறொரு படைப்புதான் வர வேண்டும்.


கூத்தின் அருமையை உணரமுடியாதவர்களாக பெங்களூர் சந்தையில் தொழிலாளிகளே அவமதிக் கிறார்கள். அதனால் ஊர்திரும்பும் ஏழு மலையை உண்மை நிலைமைகளின் கடும் வெப்பம் தான் வரவேற்கிறது. குடும்பத்தைக் காக்க ஏதாவது செய்யக்கூடாதா என மனைவி வள்ளி ஏக்கமாகப் பார்க்கிறாள். கூத்து கூத்துன்னு அலையாம ஏதாவது வேலை வெட்டியைப் பார் என்று ஊரார் கூறுகிறார்கள். கரும்பு வெட்டப் போக லாமா அல்லது கல்லுடைக்கப் போகலாமா என்று குழுவின் மற்ற கலைஞர்கள் கேட்கிறார்கள். "மறுபடியும் கூத்து நடத்துவோமான்னு யாராச்சும் கேட் டீங்களாடா," என்று உடைந்து போய்க் கேட்கிற ஏழுமலையின் குரலில் எதிரொலிப்பது கலை வாழ்வு பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலைஞர்களின் ஆதங்கமும் ஆத்திரமும்.


இத்தகையவர்களுக்கு வலி மறக்க உதவும் மருந்தாக எப்போதும் வருவது சாராயம்தான். அதில் மூழ்கிப் போய் போதையோடு வரும் ஏழுமலை, ஊர்க்கோடியில் ஒரு மரத்தடியில் கூடியிருக்கும் சில இளை ஞர்கள் தாளம் தட்டி தப்பாக அடவு வைத்து ஆடுவதைப் பார்த்து வாத்தி யாராக மாறி அவர்கள் முன்பாகக் குதித்து சரியாக ஆடிக்காட்டி விழு கிற காட்சி, இத்தகைய முடிவுகளுக்கு முடிவு கட்ட என்ன செய்யப் போகி றீர்கள் என்று பார்வையாளர்களின் மனசாட்சியைத் தட்டிக் கேட்டு எழு கிறது. ஒரு வாழ்க்கையை எப்படிக் கதையாக வடிப்பது எனக் காட்டி யிருக்கிறார் பவா செல்லதுரை.


ஒரு மணி நேரத்தில் முடிந்து விடுவதால் இது குறும்படம் - மற்றபடி சுரே ஒளிப்பதிவு, பீ. லெனின் படத்தொகுப்பு, புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினரின் பின்னணி இசை, குமார் அம்பாயிரம் கலை நுட்பங்கள் என எல்லாவற்றிலும் பெரிய திரைப் படங்களுக்கு சவால் விடுகிறது. மாற்று சினிமா என்பதற்கு ஒரு முன்னு தாரணமாகிறது.


பாஞ்சாலி சபதம் தெருக்கூத்து அக்கலைஞர்கள் அப்படியே நடித்துக் காட்ட அருமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துரியோதனன் தன்னைப் பற்றியும் தனது நூறு சகோதரர்கள் பற்றியும் பார்வையாளர் களுக்கு அறிமுகப் படுத்திக்கொள்கிறான். கூத்துக்கேயுரிய தனிச்சிறப் புப் பாத்திரமாகிய பபூன், "ஆமா மகாராஜா, நீங்க நூத்தியோரு அண்ணன் தம்பிங்களும் ஒரே ஆத்தாளுக்கா பொறந்தீங்க," என்று கேட்டு, துரியோதனன் துரத்த ஓடுவதும், பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதும் எவ்வளவு எளிமையான, இயல்பான கலைஞர்கள் இவர்கள் என்பதை உணர்த்துகிறது.


துச்சாதனன் துகிலுரிக்க திரௌ பதிக்கு கண்ணன் கரத்திலிருந்து சேலை வருவதை இவர்கள் நடத்திக் காட்டுகிற உத்தியும் அப்படித்தான். இன்று இந்தக் கலையே துகிலுரியப் படுகிறதே, காப்பதற்கு எந்தக் கண்ணன் வருவான்?கதையின் கருத்து மட்டுமல்ல - கலை வெளிப்பாட்டிலும், படம் மேலும் அழகு பெறுகிறது. மாட்டு வண்டியில் கட்டித் தொங்கவிடப்பட்ட மிருதங்கம், எல்லாக் கலைஞர்களுமாக சுற்றியமர்ந்து எதிர்காலம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வாத்தியாரின் கையில் சுழலும் காய்ந்த இலை, கல் உடைக்கும் - கைவண்டி இழுக்கும் மகாராஜா, வயல் வரப்பில் ராஜ ஒப்பனையோடு நடந்து செல்லும் நடிகர்கள், காடெங்கும் எதிரொலிக்கும் ஓலச்சிரிப்பு, பார்த்துக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்கள்... அப்பப்பா எத்தனை படிமங்கள்!


மண்ணின் கலைஞர்களது புழுதி படிந்த கால்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ள இப்படத்தின் அறிமுகத்தில் வேஷங்கட்டிய வர்கள், வாத்ய கோஷ்டி என அவர்களது சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பது இன்னும் நெருக்கமாக்குகிறது. வாத்தியார் ஏழுமலையாக வாத்தியார் புரிசை சம்பந்தன் உள்ளிட்ட கூத்துக் கலைஞர்களோடு தமுஎச கலைஞர் கள் வ. ராமு, கி. அன்பரசன், உமா மற்றும் சந்திரா போன் றோரும் நடித்துள்ளனர். உண்மையைச் சொல்வதானால் அவர்கள் நடிக்கவில்லை, குறும்படத்திரையில் ஒரு வாழ்க்கையை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.


கூத்துக் கலையின் நசிவைக் கூறும் படத்தில் கூத்துக் கலைஞர்களே நடித்திருப்பதைப் பாராட்டுவதா? அல்லது, தங்களது அவலம் குறித்து தாங்களே நடித்துக் காட்டும் நிலை இக்கலைஞர்களுக்கு வந்திருப்பதை எண்ணி விசனப்படுவதா? மண்ணின் மக்களுக்குப் புதி தாக எந்த நன்மையையும் வழங்காமல், ஏற்கெனவே இருந்து வந்ததையும் பறித்துக் கொண்ட சுரண்டல் அமைப்பின் மீதான சினம் கொள்ள வைக்கும் பெரிய காரியத்தைச் செய்கிறது இக்குறும்படம். அதே நேரத்தில் மாற்றமின்றி ஒரே மாதிரியாகத் தொடர்கிற கதை, கருத்து, நடிப்பு போன்றவற்றில் இக்கலைஞர்களும் புதுமைகளைக் கைவசப்படுத்த வேண்டாமா? இப்படி யொரு விவாதத்தையும் துவக்கி வைக்கிற இந்தப் படைப்புக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி, இயக்கி ஒவ்வொரு சட்டத்திலும் தன் உழைப்பைப் பதித்திருப் பவர் எஸ். கருணா.


குறும்படக் களத்தில் பல பரிசுகளை வெல்லப் போகிற இப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. மண்ணின் கலைகள் மீதும் கலைஞர் கள் மீதும் மக்கள் திரைப்பட இயக்கத்திற்கு உள்ள உண்மையான அக்கறைதான் அது.


-அசாக்