Sunday 28 November 2010

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

திரைப்படம் அல்ல... வரலாற்றுப் பாடம்


இந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு. வேலைப்பிரிவினை அடிப்படையில் கட்டப்பட்ட இந்திய சமுதாய அமைப்பு போல் உலகில் வேறெங்கும் காண இயலாது எனப் புளகாங்கிதம் அடைவோர் உண்டு. ஆனால், சிந்திக்க விடாமல் தடுக்கிற இப்படிப்பட்ட பெருமைத் திரைகளின் பின்னால் இருப்பது, பிறப்பால் மனிதர்களுக்குத் தாழ்ச்சியும் உயர்ச்சியும் கற்பித்த சாதிப் பாகுபாடுதான்.

அறிவு சார்ந்த வன்முறை, உடல் சார்ந்த வன்முறை இரண்டு வகையாலும் சாதி அடுக்கின் மேல் தட்டுகளில் அமர்ந்துகொண்டவர்கள், அவர்களுக்குக் கீழேதான் மிதிபட வேண்டும் என்றாலும் தங்களிடமும் மிதிபடுவதற்கு என சில பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவர்கள், இந்த மேல்தட்டினர் அனைவரிடமும் மிதிபடுவதற்கென்றே அடித்தட்டிற்குத் தள்ளப்பட்டவர்கள்... இதையெல்லாம் தத்துவமாக்கியதே வர்ணாசிரம (அ)தர்மம். இது இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானமேயன்றி, பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலகமறிய இந்த உண்மையை உரக்கக்கூறியவர், சாதி-வர்க்க பேதம் ஒழிப்பதற்கான அரசியல் இயக்கத்தை வழிநடத்தி அதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவரைப் பற்றிய ஒரு திரைப்படம் ஆங்கிலத்தில் 2000வது வெளியானது. சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்ற இந்தப் படம் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற பல இந்திய மொழிகளில் மறுபதிப்புச் செய்யப்பட்டு அந்த மாநிலங்களின் மக்களையும் சென்றடைந்தது. தமிழிலும் வருகிறது என்ற தகவல் வந்தது, ஆனால் படம் திரையரங்கிற்கு வராமலே இருந்தது. இப்போது அதிலிருந்த சட்டச் சிக்கல்கள் களையப்பட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நேரடி விநியோகத்தில் தமிழக மக்களிடமும் வருகிறது.

மழைக்காகக் கோவில் மண்டபத்தில் ஒதுங்குகிற தலித் இளைஞனை அடித்து நொறுக்குகிற ஒரு ஆதிக்க சாதிக்கூட்டம், உன் மனசில் என்ன அம்பேத்கர்னு நினைப்பா என்று கேட்பதுடன் படம் தொடங்குகிறது. ரத்தச்சேற்றில் அந்த இளைஞனின் உடல் கோயில் வாசலில் நந்தி சிலையருகே கிடப்பதாகக் காட்டப்படுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள காட்சி.

மன்னரின் நிதியுதவியோடு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்கிறார் அம்பேத்கர். படிப்பு முடிந்து வந்தபின் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம். தந்தையின் எதிர்ப்பை மீறி வெளிநாடு புறப்படுகிற அம்பேத்கரின் நோக்கம் அரண்மனை வேலைக்காகப் பட்டம் பெறுவதல்ல. சிறு வயது முதல் அவர் அனுபவித்த சாதிப் பாகுபாட்டு இழிவுகளுக்கான வரலாற்று மூலங்களைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியே நோக்கம். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மைகள்தான், சமுதாய விடுதலையை இணைக்காமல் இந்தியாவின் அரசியல் விடுதலை என்பதில் அர்த்தமில்லை என்ற உறுதியான எண்ணத்தை அவருக்குள் விதைக்கிறது. அந்த எண்ணத்தின் தாக்கத்தில், தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைகளுக்கும் எதிரான போராளியாக அவர் பரிணாம வளர்ச்சி கொள்ளகிறார்.

இதே அடிப்படையில்தான் அவர் காந்தியிடம் மோதுகிறார். பிரிட்டிஷ் அரசுடனான பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கு என தேர்தல்களில் தனித்தொகுதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் பிளவு ஏற்படுத்திவிடும் என்று கூறுகிற காந்தியுடன் வாதாடுகிறார். அம்பேத்கரின் இக்கோரிக்கையை எதிர்த்து ஆதிக்கசாதியினர் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி தனது உண்ணாவிரதப் போராட்ட ஆயுதத்தை கையில் எடுக்கிறார் காந்தி. அவரது நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என மருத்துவர்கள் எச்சரிக்க காந்தியின் மகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். "என்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வற்புறுத்துகிறவர்கள் காந்தியைப் பார்த்து அவருடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்," என்று அம்பேத்கர் கேட்பதில் எத்தனை நியாயம்! எனினும் காந்தியை சந்திக்கிறார், ஒரு உடன்பாடு ஏற்படுகிறது. அப்போது உண்ணாவிரத ஆயுதத்தை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள் காந்திஜி, என்று அம்பேத்கர் கூறுகிறபோது திரையரங்கில் எழுகிற கைதட்டல் ஒளி, ஒரு நுட்பமான அரசியல் புரிதலை வெளிப்படுத்துகிறது.

அம்பேத்கர் ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிராமணர் என்று நினைத்த காந்தி அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருக்கத் தகுதி வாய்ந்தவர் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பெயரை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் காந்தி பரிந்துரைக்கிறார். அன்றைய அரசியலின் உயர்ந்த தரத்தை இப்பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம், பொதுக் குளத்தில் நீர் பருகும் போராட்டம் என அடுத்துதடுத்த ஓட்டம் அன்றைய உண்மைச் சூழலை உணர்த்துகிறது. இந்தப் போராட்டங்களுக்கான தேவைகள் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்ற இன்றைய உண்மைச் சூழலோ உறுத்துகிறது.சட்ட வல்லுநராக மட்டுமல்ல, குடியரசாக ஆகிவிட்ட இந்தியாவின் சட்டங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்த அரசமைப்பு சாசன நிர்ணயக் குழுவின் தலைவராகவும் வரலாற்றுப் பங்களித்தவர் அம்பேத்கர். குழுவின் மற்ற உறுப்பினர்களில் பலர் ஒத்துழைக்காத பின்னணியில் மற்ற பல நாடுகளில் இருந்து மாறுபட்ட, பெருமைக்குரிய ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த தலைமகனாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர்தான் என்ற உண்மையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிற இடம், படத்தைப் பார்ப்பவர்களுக்கும் அதனைத் தெளிவு படுத்துகிறது.

சட்ட அமைச்சராக, ஒரு முக்கியமான சட்டத்தைக் கொண்டுவர முனைகிறார் அம்பேத்கர். இந்து திருமணச் சட்டம், விதவைச் சட்டம் ஆகியவற்றில் முற்போக்கான மாற்றங்களைச் செய்கிற இந்தியப் பெண்ணுக்கு புதிய உரிமையை வழங்குகிற அந்தத் திருத்தத்தை ஆணாதிக்க இந்துக்கள் எதிர்க்கிறார்கள். பெண் அடங்கியிருப்பதே தர்மம் என்ற போதிக்கப்பட்ட ஆயிரமாண்டுகால போதனையில் மயங்கிய இந்துப் பெண்களும் கூட எதிர்க்கிறார்கள். முற்போக்காளரான நேரு இந்த எதிர்ப்பைக் கண்டு பணிகிறபோது, அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்...

சாதி, பாலின பாகுபாட்டு இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை இந்து மதக் கோட்பாடுதான் என்ற முடிவுக்கு வருகிற அம்பேத்கர், இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன், என்று அறிவிக்கிறார். மற்ற மதங்களிலும் இந்துத்துவ சாதிய அழுக்கு ஒட்டியிருப்பதைக் கண்டு இறுதியில், அதற்கு இடமில்லாத புத்த மதத்தைத் தேர்வு செய்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவுகிறார். இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லாதவர்களும், அம்பேத்கரின் இந்த முடிவில் இருந்த அறச்சீற்றத்தை அங்கீகரிப்பார்கள்.

தன் மக்களின் காயங்களையும் வலிகளையும் துடைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரது உடலில் நோய்களும் வலிகளும் குடியேறுகின்றன. தன் உடலை மட்டுமல்ல குடும்பத்தையும் கூட கவனிக்க இயலாதவராகவே அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. ஆயினும், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் அன்பு மனைவி ரமாபாய். அவரது மரணப்படுக்கையில் அம்பேத்கரின் துயரம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. மனதை உறைய வைக்கிற இப்படிப்பட்ட காட்சிகள் பல இடங்களில் அமைந்திருக்கின்றன.

அம்பேத்கரின் சமுதாயத் தொண்டு தொடர வேண்டும் என்பதற்காகவே அவரது வாழ்க்கைத் துணையாகிறார் டாக்டர் சவிதா இதனையும் இப்படம் பண்பு நேர்த்தியுடன் சொல்கிறது.

மூன்று மணிநேரப் படத்தில் ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் நடந்து வந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் ஜப்பார் பட்டேல். நேருக்கு நேர் அந்த நிகழ்வுகளோடு கலந்து நிற்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா. உரையாடல் இல்லாத தருணங்களில் உணர்வுகளைத் தக்க வைக்கிறது ஆனந்த் மோடக் இசை.

பட்டப்படிப்புக்காக செல்கிறவர், தங்குவதற்கு இடம் மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறவர், அதிகாரியாக இருந்தாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கீழ்நிலை ஊழியரால் அவமதிக்கப்படுகிறவர், துன்பம் நேர்கையில் வயலினெடுத்து மீட்டுகிறவர், குடும்பத்தின் மீது பாசம் மிக்கவர், லட்சியத்தில் உறுதிமிக்கவர் என ஒவ்வொரு கட்டமும், அம்பேத்கராய் நடிப்பதற்கு இவரைவிட்டால் வேறு யாரும் பொருத்தமல்ல என்று மெய்ப்பித்திருக்கிறார் மம்முட்டி. மோகன் கோகலே, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோரும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஆம், இந்தப் படம் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை; அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது - வலுவாக.

ஒரு திரைப்படத்தின் விடுதலைக்கே இப்படிக் காத்துக்கிடக்க வேண்டியிருந்திருக்கிறது என்றால், இந்தப் படத்தின் செய்தியாகிய சாதி-வர்க்க பேதம் ஒழிப்பு என்ற லட்சியம் நிறைவேற இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருக்கும்? இனியும் காத்திருப்பதற்கில்லை என்ற உள்வேகத்தை ஒவ்வொருவர் மனதிலும் விளைவிக்கிற வரலாற்று வித்துதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.

டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அதையொட்டி டிசம்பர் 3 அன்று வெளியாகிற இந்தப் படத்திற்கு தமிழக மக்களும் முற்போக்கு இயக்கங்களும் பேராதரவு அளித்து அந்த வரலாற்று வித்து பெரும் காடாக வளர வழிவகுத்திட வேண்டும்.

(தீக்கதிர் 29.11.2010 இதழில் எனது கட்டுரை)

Tuesday 23 November 2010

ஒரு உள் குத்தாட்டம்!


ரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்நாட்டு ஆட்சியாளர்களைப் பூதம் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது (ஸ்பெக்டர் என்றால் ஆங்கிலத்தில் பூதம் என்று பொருள்). அப்புறம் காமன் வெல்த் விளையாட்டுத் திடலில் விளையாடிய ஊழல் ஆட்டங்கள் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கின்றன. இப்படியாக தேசிய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் வெளிவந்துகொண்டிருக்கிற தில்லுமுல்லுத் திருவிளையாடல்களின் தட புடலில் சில உலகளாவிய கைவரிசைகள் கவனத்திற்கு வராமல் நழுவிடக்கூடும்.

நம் ஊடகங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாத அபபடிப்பட்ட ஒரு கைவரிசை, அமெரிக்காவின் வால் தெரு வட்டாரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. உலகளாவிய பங்குச் சூதாட்டத்தின் தலைமை தாதாக்கள் கோலோச்சுகிற இடம்தான் வாஷிங்டன் நகரின் பொருளாதார மையமான வால் தெரு. அங்கே நடந்திருக்கிற ஒரு பெரிய மோசடி பற்றி, அந்நாட்டுப் புலனாய்வு நிறுவனமான எப்ஃ.பி.ஐ விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது (அமெரிக்காவின் உள்நாட்டுக் குற்றச்செயல்களை விசாரிக்கிற அமைப்பு எஃ.பி.ஐ.; மற்ற நாடுகளின் அரசியல் முதல் வாழ்க்கை வரையில் மூக்கை நீட்டுவது சிஐஏ எனப்படும் மைய உளவு நிறுவனம்).

பங்குச் சந்தையின் அடிப்படையே பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆதாயங்களைக் குவிப்பதுதான். குறிப்பிட்ட நிறுவனப் பங்குகளால் அதிக ஆதாயம் கிடைக்கப்பபோவதை ஊகிக்கிறவர்கள், மற்றவர்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாகத் தாங்களே அந்த நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலையில் அல்லது அப்போதைய சந்தை நிலவர விலையில் வாங்கிக்கொள்வார்கள். பின்னர், அந்தப் பங்குகள் பல மடங்கு அதிக விலைக்குப் போகிறபோது தங்கள் கையில் உள்ளதை புதிய விலைக்குத் தள்ளிவிட்டு பெருத்த லாபம் ஈட்டுவார்கள். அதே போல் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குவிற்பனையில் சரிவு ஏற்படலாம் என்கிறபோது அந்த உண்மையை மறைத்து, பங்குகளை மற்றவர்கள் தலைகளில் கட்டுவார்கள். அவற்றை வாங்கியவர்கள், உண்மை நிலையை அறியவருகிற போது கையில் இருப்பதை விற்க முடியாமல் பெருத்த இழப்புக்கு உள்ளாவார்கள்.

இப்படியான ஒரு மோசடி ஏற்பாடு பங்கு வியாபாரத்திலேயே இருக்கிறது. தொழில்களுக்குத் தேவையான முதலீடாக மாறாமல் வை ராஜா வை என்று பன்னாட்டு கார்ப்பரேட் மட்டத்தில் நடப்பது இது. பொருளாதாரச் சுழற்சி என்பது போன்ற முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கே உரிய கவர்ச்சிகரமான பெயர்களில் இந்த உள்ளே வெளியே ஆட்டங்கள் கவுரவப்படுத்தப்படுகின்றன.
இப்போது வால் தெருவில் நடந்திருப்பது அந்த மோசடிக்குள்ளேயே ஒரு உள் குத்து!

பங்குச் சந்தையில் பெரிய பெயர்களாக உள்ள சில நிறுவனங்களுக்கிடையே உள் வர்த்தகம் நடந்திருக்கிறது என்பதுதான் அந்த உள் குத்து. தினமும் பங்கு விலை நிலவரங்களைப் பார்த்து இரத்த ஓட்ட அலை எகிறி இறங்குகிற சாதாரண முதலீட்டாளர்களுக்குத் தெரியமாமல், வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் செய்யமாமல் அந்த நிறுவனங்களுக்கிடையே ரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கின்றன. இதனால், பங்கு விலைகள் இயல்பானதாக, உலகச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஏறி இறங்குகின்றன என்பதாக நம்பியிருக்கக்கூடிய அப்பாவி முதலீட்டாளர்கள் அப்பட்டமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கோல்ட்மேன் சாஷ், பிரைமரி குளோபல் ரிசர்ச் எல்எல்சி போன்ற 14 நிறுவனங்கள் பங்குச் சந்தை உலகில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிற நிதி நிறுவனங்களாகும். செயற்கையான பங்குவிலைப் பதற்றங்களை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனங்கள், சூதாட்ட விதிகளை மீறி தங்களுக்குள்ளேயே உள் விற்பனை நடத்தியிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை எப்.பி.ஐ. தன் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறதாம்

இந்த உலகளாவிய அழுகுணியாட்டத்தில் இந்திய வல்லுநர்களும் இருக்கிறார்கள்! இது இந்தியாவுக்குப் பெருமையா என்பதை, சந்தைப் பொருளாதாரத்திற்கு சகல சுதந்திரங்களையும் வழங்கியாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குகிற இந்திய பொருளாதார வல்லுநர்கள்தான் சொல்ல வேண்டும். இன்டெல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் ராஜீவ் கோயல், கேலியன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ராஜ் ராஜரத்தினம், மெக் கின்சே அன் கம்பெனி நிறுவனத்தின் அனில் குமார் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. ஐபிஎம் நிறுவனத்தின் ராபர்ட் மொஃபாட் என்பவர் உள்ளிட்ட பலரும் இதிலே தங்களுடைய திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.

அந்த 14 நிறுவனங்களுக்கிடையேயான உள் வர்த்தகத்தில் சுமார் 200 லட்சம் டாலர் லாபம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டிருக்கிறதாம்.
திருடர்களானாலும் அவர்களுக்குள் சில குறைந்தபட்ச நேர்மை கடைப்பிடிக்கப்ட வேண்டும் என்ற நடைமுறை விதிகள் உண்டு. அப்படி மீறுகிறபோது மோதல், கடத்தல், கொலை என்று பரபரப்புச் செய்திகளுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. இந்த உள் குத்தாட்கள் அந்த விதிகளை மீறியிருக்கிறார்கள்.

இதனால் ஒட்டுமொத்த நிதிச் சுரண்டல் அமைப்பே ஆட்டம் கண்டுவிடும்! மக்கள் முதலாளித்துவப் பாதையின் அபாயங்களைப் புரிந்துகொண்டு அதை மூடுவதற்குத் தயாராகிவிடுவார்கள். அப்படி மூடு விழா நடத்துகிற மூடு மக்களுக்கு வந்துவிடக்கூடாது! எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற மயக்கத்திலேயே மக்களை ஆழ்த்திவைத்தாக வேண்டும்! அதற்காகவே இப்படியொரு விசாரணைக்கு எஃபிஐ ஏவிவிடப்பட்டிருக்கிறது.

இதனை ஏதோ சிறிய முதலீட்டாளர்களும், பைத்தியக்காரத்தனமாக நேர்மையான வழிமுறையில் மட்டும் தொழில் செய்கிற நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்படுகிற பிரச்சனையாகப் பார்ப்பதற்கில்லை. இந்த மோசடியால் ஏற்படும் செயற்கையான பணவீக்க விளைவுகள் இறுதியில் நுகர்பொருள்களின் விலை உயர்வில் கொண்டுபோய் விட்டுவிடும். சொற்ப வருமானத்தில் அப்படியும் இப்படியுமாக மிச்சப்படுத்திப் பொருள்களை வாங்குகிற நீங்களும் நானும்தான் இந்தக் குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

ஏதோவொரு சினிமாவில், எங்க பார்த்தாலும் அநியாயம் மட்டுமே ஜெயிக்குதே என்பது போல் ஒரு வசனம் வரும். நமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல் ஒதுங்கியிருக்கிற வரையில் அநியாயம் ஜெயிப்பதைத் தடுக்க முடியாதுதான்.

Saturday 20 November 2010

நாளும் கடத்தலாகும் 240 கோடி!

ஏழைகளின் நிலைமைகள் குறித்துப் பேசச் சொன்னால் மனமுருகப் பேசுவார்கள். இவர்களுக்காக எதுவும் செய்யக்கூடாதா என்று கேட்டால், கருவூலத்தில் நிதி இல்லையே என்பார்கள். பெட்ரோல் விலையை ஏற்றி ஏழைகள் மீது மேலும் சுமைகளை ஏற்றுகிறீர்களே என்று கேட்டால் அரசு திட்டங்களுக்கான நிதிக்கு எங்கே போவது என்று திருப்பிக் கேட்பார்கள். மத்திய ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் இப்படிப்பட்ட சொல்வித்தைகளை நிறையவே பார்த்திருக்கிறோம். "நிதி இல்லை என்கிறபோது அரசாங்கத்தால்தான் என்ன செய்துவிட முடியும்," என்று நினைக்கிற அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

"பணம் இல்லை என்ற பிரச்சனையே இல்லை. பணம் வேறு வேறு பைகளுக்கு இடம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் பிரச்சனை." - இது ஒரு ஆங்கில நகைச்சுவைத் துணுக்கு. நமது நாட்டிலும் நிதி இல்லை என்கிற பிரச்சனையே இல்லை. அது யாரிடம் இருக்கிறது, எங்கே போகிறது என்பதுதான் பிரச்சனை.

ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சுமார் 240 கோடி ரூபாய் நாட்டைவிட்டு சட்ட விரோதமாக வெளியேறுகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. 1948 முதல் 2008 வரையிலான 60 ஆண்டு காலத்தில் இப்படி நாட்டைவிட்டு சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சட்டத்தின் கண்களில் படாமல் கடத்தப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவுதான் என்று நினைத்துவிடாதீர்கள், 2000 முதல் 2008 வரையிலான எட்டே ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தொகை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்!

உலக நிதி ஒழுங்குநிலை (ஜிஎப்ஐ) என்ற ஆய்வமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மருட்சியை ஏற்படுத்தும் இந்தப் புள்ளி விபரம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பன்னாட்டு கொள்கை மையம் என்ற நிறுவனத்தின் நிதி ஆராய்ச்சிப் பிரிவுதான் இந்த ஜிஎப்ஐ.

சட்டவிரோதமாகப் பணம் கடத்தப்படுகிறது என்றால் அது ஏதோ கள்ளக் கடத்தலில் கொண்டுபோகப்படுவதல்ல; சுவி வங்கிகளில் போடப்படும் கணக்கில் வராத பணமும் அல்ல. "ஊழல், லஞ்சம், கமிஷன், குற்ற நடவடிக்கைகள், வரி ஏய்ப்பு போன்ற முறைகளில் பணம் வெளியேறுகிறது" என்று ஜிஎப்ஐ அறிக்கை கூறுகிறது.

இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத வாய்க்கால்கள் மூலம் 2004 - 08 ஆகிய நான்காண்டு காலத்தில் இங்கேயிருந்து கண்ணுக்குத் தெரியாமலே மறைந்த பணம் நான்கு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்! இன்றைக்கு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிற, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடிபடும் தொகையை விட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என்று, இந்த ஆய்வறிக்கை விவரங்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார் பத்திரிகையாளர் பி. சாய்நாத். (தி ஹிண்டு 18-11-2010)

இந்த ஆய்வில் ஈடுபட்டவரான தேவ் கார்,"ஆண்டுக்கு சுமார் 19.3 பில்லியன் டாலர் வேகத்தில் நிதி இழப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு பெரிய இழப்பை இந்தியா நிச்சயமாகத் தாங்கிக்கொள்ள முடியாது," என்று கூறுகிறார்.

"இந்த அளவிற்கு பணம் சட்டவிரோதமாக வெளியேறுவதை தடுத்திருந்தால், 2008ம் ஆண்டு நிலவரப்படி நாட்டிற்கு உள்ள 230.6 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை அடைத்திருக்க முடியும். எஞ்சுகிற தொகையில் பாதியை வறுமை ஒழிப்புக்குப் பயன்படுத்த முடியும்",என்று அதே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

"இந்த ஆய்வில் கள்ளக்கடத்தல், சில வகை வர்த்தக மோசடிகள், சில புள்ளி விவரங்களின் பற்றக்குறை ஆகிய விவரங்கள் சேர்க்கப்படவில்லை. விடுதலைக்கு பிறகு இந்தியா சுமார் அரை டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) டாலர் தொகையை பறிகொடுத்து வந்திருக்கிறது என தோராயமாக மதிப்பிடலாம்", என்று ஜிஎப்ஐ இயக்குநர் டபிள்யு. பேக்கர் கூறுகிறார். இந்த விவரங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் கிடைக்கிற தொகை மாரடைப்பையே ஏற்படுத்தக்கூடும்.

"இந்தியாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் சுமார் 16.6 விழுக்காடு அளவிற்கு, 2008ம் ஆண்டு இறுதியில் நிதி வெளியேறியிருக்கிறது. ஏற்கெனவே 2009ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஊடங்களில் 1.4 டிரில்லியன் டாலர் கடத்தப்படுவதாக செய்திகள் வந்தன. இந்த அறிக்கை அந்த அளவிற்கு சுட்டிக்காட்டவில்லை என்றாலும் கடத்தப்படும் தொகையின்அளவு நிச்சயமாக மிரட்டலானதுதான்," என்கிறார் பேக்கர்.

இதனால் என்ன கெட்டுவிட்டது? “நாட்டின் வளம் விநியோகிக்கப்படுவது மோசமாகிறது. வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய நிதி உதவிகளின் பலன்கள் நீர்த்துப்போகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி முடங்குகிறது.”

இந்தியாவில் சுமார் 83 கோடியே 60 லட்சம் பேர் ஒரு நாளில் 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு செய்யக் கூடியவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று முறைசாரா துறைகளுக்கான தேசிய தொழில் ஆணையம் (என்சிஇயுஎஸ்) கூறியுள்ள பின்னணியோடு, நாள்தோறும் கடத்தப்படுகிற 240 கோடி ரூபாயை ஒப்பிட்டுக் காட்டுகிறார் சாய்நாத்.

நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்குகிற போட்டிப் பொருளாதாரத்தில் இந்த வெளியேற்ற நிதிதான் பெரும்பான்மை. இந்த வழிகளில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ள இந்திய சொத்துகளின் மதிப்பு, ஒட்டுமொத்த கருப்புச் சந்தையில் 72 விழுக்காடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 விழுக்காடாகும். நாட்டின் கருப்புச் சந்தை பணத்தில் 28 விழுக்காடு மட்டுமே நாட்டிற்குள்ளேயே சுற்றிவருகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிற தகவல் உண்மையிலேயே மலைப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம் என்ன? சிலரது பேராசை, சட்டத்திற்குக் கட்டுப்படாத போக்கிரித்தனம் என்றெல்லாம் எளிதான பதில்களைச் சொல்லிவிடலாம். என்ன வேண்டுமானாலும் செய், லாபம் குவிப்பது மட்டுமே உன்னத லட்சியம் என்ற முதலாளித்துவக் கோட்பாடு கோலோச்சுகிற வரையில் இப்படிப்பட்ட கடத்தல்கள் தொடரவே செய்யும். அண்மைக் காலத்தில் கடத்தப்படும் தொகை இவ்வளவு பெரிய அளவிற்கு அதிகரித்திருப்பதை இன்றைய உலகமய, தாராளமய, தனியார்மய மூர்க்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என்று என்னென்னவோ நோய்கள் வந்து தாக்கினாலும் உலகமய மோகத்திலிருந்து விடுபட மாட்டேன் என்று பிடிவாதமாகத் தவமிருக்கிற மன்மோகன் சிங்குகள் இதை உணர்வார்களா? மாட்டார்கள், உண்மையை மக்களிடம் கொண்டுசெல்வதே மாற்றுவழி.

(‘தீக்கதிர்’ 19.11.2010 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

Tuesday 9 November 2010

ஏன்? ஏன்? ஏன்? ................................... சங்கிலியாய்த் தொடரும் கேள்விகள்


ந்தியாவில் கம்யூனிச இயக்கம் ஏன் பெரியதொரு சக்தியாக வளரவில்லை என்ற ஒரு நண்பரின் கேள்வியிலிருந்தே இந்தத் தேடலைத் தொடங்கினோம். அந்தத் தேடலில், இந்தியச் சமுதாயம் எப்படி சாதிப் பாகுபாடுகள் என்ற வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்ற ஒரு முக்கியமான விடை கிடைத்தது.

அந்தச் சாதி என்ற கட்டுமானத்தின் அடிவாரமாக பொருளாதாரச் சுரண்டலும் சமூக ஒடுக்குமுறையும் சம அளவில் கலந்து குழைத்துக் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுள், கடவுளின் பெயரால் நிறுவப்பட்டுள்ள மதம், அந்த மதத்தின் உள்ளமைப்பாக சாதி என்று கட்டமைக்கப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும், உண்மையில் இங்குள்ள சமூகக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது சாதிதான். ஆகவேதான் இங்கே யார் வேண்டுமானாலும் மதம் மாற முடியும்; அதாவது தன்னைப் படைத்துக் காப்பவன் என்று இதுவரை நம்பிக்கொண்டிருக்கிற ஒரு கடவுளை அம்போ என்று விட்டுவிட்டு வேறொரு கடவுளை வணங்க முடியும். ஆனால் தன் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் எந்த மதத்திற்குப் போனாலும் அவர் அவரது சாதிதான்.

இதற்கும் கம்யூனிச இயக்கத்தின் நிலைக்கும் என்ன தொடர்பு? கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மையை, துணிவை, தியாகத்தை மதிக்கிறவர்கள் இவ்வளவு நல்லவர்கள் அரசியலில் ஒரு பெரும் வல்லமை பெறவில்லையே என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் சில நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களுக்காக முதலாளித்துவக் கட்சிகளோடு மாறி மாறிக் கூட்டு வைப்பதால்தான் அவர்கள் வளர்ச்சியடையவில்லை சிலர் கூறுகிறார்கள். நாடாளுமன்றம், தேர்தல் ஆகிய இந்திய அரசமைப்பு முறைகளை நிராகரிக்கிற ஒரு பிரிவினர், தேர்தலில் பங்கேற்கிறவர்களை போலி கம்யூனிஸ்ட்டுகள் என்று திட்டுவதுண்டு.

எந்த நாடானாலும் அதன் சமுதாய அமைப்பு, மக்களின் தயார் நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எந்வொரு புரட்சியையும் நடத்திவிடமுடியாது. பெரும்பகுதி மக்களைத் திரட்டாமல், மக்கள் பங்கேற்பில்லாமல் நடக்கிற ஒரு புரட்சிகரமான மாற்றம் விரைவில் உலர்ந்து உதிர்ந்துவிடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததற்கு, அங்கெல்லாம் படைபலத்தை மட்டுமே முக்கியமாக நம்பி ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு முக்கியமான காரணம்.

இந்தியாவில் புரட்சிக்காக மக்களைத் திரட்டத் தடையாக இருப்பது எது?

அநியாயங்களைக் கண்டு கொந்தளிக்கிற மக்கள், அக்கிரமக்காரர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும் என்று ஆத்திரத்தோடு நண்பர்களிடம் பேசுகிறார்கள்; ஆனால், ஒரு சிறு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குக் கூட வர மாட்டேனென்கிறார்களே - ஏன்?

இன்றைய சுரண்டல்கள் பற்றி எடுத்துச்சொல்லி, இதற்கொரு மாற்றம் வேண்டாமா என்று கேட்டால் “இவர்களுக்கு வேற வேலையில்லை” என்பது போலப் பார்த்துவிட்டு ஒதுங்குகிறார்களே - ஏன்?

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கோரி ஒரு ஊர்வலம் நடக்கிறபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து ஏற்கெனவே ஏதோவொரு வேலையில் இருக்கிற தொழிலாளிகளும் கலந்துகொள்கிறார்கள்; ஆனால் வேலையின்றி வீட்டில் அவமானப்படுகிற இளைஞர்கள் அந்த ஊர்வலத்தைக் கண்டு “வெட்டிப்பசங்க, இவங்க கோஷம் போட்டு ஊர்வலம் போனால் வேலை கிடைச்சுடுமாக்கும்” என்று இளக்காரமாகப் பேசுகிறார்களே - ஏன்?

நாட்டின் நிலைமைகள், அவலங்கள் பற்றியெல்லாம் சொல்கிறபோது ஒப்புக்கொள்கிறவர்கள், “இதையெல்லாம் மாத்த முடியாதுங்க” என்று ஒதுங்கிவிடுகிறார்களே - ஏன்?

நம் மக்களின் இந்த பொதுவான மனநிலைக்கான காரணங்களை ஆராயாமல், தீடீர்ப்புரட்சியை நடத்திவிட முடியாது.

காரணங்கள் என்று எதையெல்லாம் கருதுகிறீர்கள்?

நண்பர்களே, உங்கள் எண்ணங்களை சுருக்கமாக இங்கே பின்னூட்டமிடுங்கள். நம் உரையாடலைத் தொடர்வோம்.


Monday 1 November 2010

ஜனநாயகத்துக்கு சவால்விடும் கட்டணமல்லா கட்டணங்கள்!



"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ் செய்துங்கக் கரிமுகத் தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா."

-கடவுள் தன் படைப்பாகிய மனிதர்களுக்கு உடலையும் உயிரையும் வாழ்க்கை வசதிகளையும் போல் மொழியறிவையும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் கதை என்னவென்றால் கடவுளை நம்புகிறவர்கள் அவரை இப்படி நான்கு சங்கதிகளைக் கலந்துகொடுத்து கவனித்துக்கொண்டால்தான், அவர்களுக்குக் கடவுள் தான் செய்ய வேண்டியதைச் செய்வாராம்!

இப்படி இறைவனுடனேயே ஊழல் பேரம் நடத்துகிற சமுதாயமாக இருப்பதால்தான் இன்று நாட்டின் சகல மட்டங்களிலும் ஊழல் ஒரு பெரும் சக்தியாக ஆக்கிரமித்திருக்கிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கதைப் புத்தகங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், மேடைப்பேச்சுகள், பயண நேரக் கலந்துரையாடல்கள், நியாய விலைக்கடைக் காத்திருப்புகள் என எங்கும் ஊழல் பற்றிய கோபதாபங்கள் வெளிப்படவே செய்கின்றன. ஆனால், நடைமுறை வாழ்க்கையில், லஞ்சம் வாங்குகிறவர்கள் எந்த உறுத்தலுமின்றி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்துத் தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள ஆகப்பெரும்பாலோர் தயாராகவே இருக்கிறார்கள்.

மாப்பிள்ளை என்ன பண்ணுகிறார்? அரசாங்க அதிகாரியா இருக்கிறார். ஓ, அப்படின்னா வரும்படிக்குக் குறைவிருக்காது. - இப்படியாக ஊழலை வெகு இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை வலுவாக ஊன்றியிருக்கிறது. "தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் விடுவானா" என்ற பழமொழி ஊழலை ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்து பரவலாக இருப்பதைக் காட்டுகிறது. முதலாளித்துவம் பெற்றெடுத்த ஒரு கிரிமினல் குழந்தைதான் ஊழல்.

பொருளாதாரத்தில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளிலும் ஊழல் இருக்கவே செய்கிறது. அந்த நாடுகளோடு ஒப்பிடுகிறவர்கள் ஒன்றைச் சொல்வார்கள். அதாவது அந்த நாடுகளில், சட்டத்துக்குப் புறம்பாக ஒரு வேலை நடந்தாக வேண்டும் என்றால் - எடுத்துக்காட்டாக மின்சாரத் திருட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமானால் - லஞ்சம் தரவேண்டியிருக்கும்; இங்கேயோ, சட்டப்படி செய்ய வேண்டியதற்கே - எடுத்துக்காட்டாக முறைப்படி மனுச் செய்து கட்டணம் செலுத்தி மின்சார இணைப்பு பெறுவதற்கே லஞ்சம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. ஒரு வீடு வாங்கி பதிவு செய்யப் போகிறவர் அனைத்து ஆவணங்களையும் நூற்றுக்கு நூறு சரியாக ஒப்படைத்தாலும், அலுவலகத் தரகரிடம் உரிய தொகையைத் தள்ளிவிடாமல் அதிகாரியின் மேசையிலிருந்து ஆவணம் நகரவே நகராது. புரட்சிகரமாக சாதிவிட்டு சாதி கலப்புத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிற இளம் இணைகள் கூட அதைப் பதிவு செய்துகொள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டணமல்லாக் கட்டணங்களைக் கட்டியாக வேண்டும்.

2007ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களுக்கு சட்டப்படி கிடைத்தாக வேண்டிய பல்வேறு அரசாங்க சேவைகளுக்கு (காவல்துறை உதவி முதல், பொதுவிநியோகத்திற்கான குடும்ப அட்டை பெறுவது வரையில்) லஞ்சம் கொடுத்தாக வேண்டியுள்ளது என தெரிவிக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் முதலாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இப்போது அந்த சட்டத்தின் கீழ் வேலை பெறுவதற்கு குடும்ப அட்டை இருந்தாக வேண்டும் என்பதால் கிராமப்புற ஏழை மக்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அன்றாட வாழ்வில் இப்படி நேருக்கு நேர் எதிர்கொள்கிற சில்லறை லஞ்சக்கெடுபிடிகள்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. மக்களின் கோபத்திற்கும் இலக்காகின்றன. ஆனால், அரசாங்கத்தின் மேல்மட்டங்களில், அரசு அதிகாரத்தின் உயர் பீடங்களில் நடக்கிற ஊழல்கள்தான் இந்த கீழ்மட்ட ஊழல்களுக்குக் காரணமாக இருக்கின்றன. சிரசு சரியில்லை என்றால் தேகத்தின் மற்ற அங்கங்களும் கெட்டுப்போகும். அரசு சரியில்லை என்றால் தேசத்தின் மற்ற கட்டமைப்புகளும் கெட்டுப்போகும்.

அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான அரங்க வசதிகளை ஏற்படுத்தியதில் மிகப்பெரும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பது உலக அரங்கத்தில் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது. ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்: விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான கருவிகள் வாங்கப்பட்டன. அவற்றில் ஒன்றாகிய ஓட்டப்பயிற்சிக்கான டிரெட்மில் எந்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ.9,75,000 கொடுத்து ஒரு லண்டன் நிறுவனத்திடமிருந்து வாடகைக்குக் கொண்டுவரப்பட்டது. அதே எந்திரத்தை விலைக்கு வாங்கியிருந்தால் சுமார் 7 லட்சம் ரூபாய்தான் ஆகியிருக்கும். இப்படியாக ஒவ்வொன்றிலும் எந்த அளவிற்கு முறைகேடுகள் நடந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
இப்போது அதுகுறித்த விசாரணைகள் தொடங்கியுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்டோர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைச் சண்டைகள் நடத்தியது, உள்ளரங்கில் நடைபெற்ற குத்துச்சட்டைப் போட்டிகளைவிட சுவையாக இருந்தது.

இத்தனை அவலங்களையும் தாண்டி இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக தங்கள் கடமைகளை நிறைவேற்றி இரண்டாம் இடம் என்ற பெருமிதத்தை நாட்டிற்குப் பெற்றுக் கொடுத்தார்கள். ஊழலில் காணாமல் போன பணம் இந்த வீரர்களின் பயிற்சிகளுக்கும் வசதிகளுக்கும் திருப்பிவிடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பான சாதனைகளைச் செய்திருப்பார்களே!

உயர்மட்ட பேரங்கள் மக்கள் கவனத்திற்கு வருவதில்லை. ஆகவேதான் தொலைத் தொடர்புத் துறையில் நிகழ்ந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் புதிராகவே இருக்கிறது. இரண்டாம் தலைமுறை அலைவரிசைகள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிகக் குறைவான விலைகளுக்கு ஏலம் விடப்பட்டதில் ரூ.60,000 கோடி நிதிமுறைகேடு நடந்திருக்கிறது என இடதுசாரி இயக்கங்கள்தான் மக்கள் கவனத்திற்கு கொண்டுவந்தன. தலைமைத் தணிக்கையாளரே கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விமர்சித்துள்ள போதிலும் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்கவோ விசாரணைக்கு ஆணையிடவோ தயாராக இல்லை.

காங்கிரஸ் அரசின் ஊழல், நாட்டின் விடுதலைக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1937ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்தியது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெரிய கட்சி என்ற முறையில் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 6 மாநிலங்களில் அக்கட்சி அரசு அமைத்தது. காங்கிரஸ் அமைச்சர்களும் வட்டாரத் தலைவர்களும் ஊழல் ருசி பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதைக் கண்டு மனம் குமுறிய காந்தி, ஊழல் மலிந்துபோன கட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதைவிட காங்கிரஸ் மொத்தத்தையும் கவுரவமாகப் புதைத்து அடக்கம் செய்துவிடவும் நான் தயாராக இருக்கிறேன், என்று வேதனையோடு கூறினார்.

அரசுப்பணிகளில் நடைபெறுகிற ஊழல்கள் மட்டுமல்ல, அரசியல் பணிகளிலும் ஊழல் நாற்றக்கறை அழுத்தமாகப் படிந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களை தனது வேலிக்குள் வைத்துக்கொண்டது. கனிமச் சுரங்கங்களை எடுத்து தனி ஆட்சி போல் இயற்கைச் சமநிலைக்கு குந்தகம் செய்து கொண்டிருக்கிற ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையிலிருந்து தள்ளி வைக்கும் துணிவு எடியூரப்பா அரசுக்கு கொஞ்சமும் கிடையாது. காரணம் பணத்தின் பலம்!

இந்தியாவின் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணுமின் உடன்பாடு செய்து கொண்ட மன்மோகன் சிங் அரசுக்கு சென்ற அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டன. அதன் பின் நாடாளுமன்ற மாநிலங்களவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, கோடிக் கணக்கில் பணம் கொடுத்து ஆதரவைத் திரட்ட காங்கிரசால் செய்த முயற்சி அம்பலத்துக்கு வந்தது. அப்பழுக்கற்ற பொருளாதார மேதை என்று போற்றப்படுகிற மன்மோகன் சிங், அந்த இழிவான பேரத்தை கண்டுகொள்ளவில்லை. அவரால் எப்படி அ. ராசாக்களைக் கட்டுப்படுத்த முடியும்?

நாட்டின் பாதுகாப்புத் துறை மிகவும் பரிசுத்தமாக இயங்குகிறது என்று அப்பாவி மக்கள் கருதுகிறார்கள். கார்கில் போன்ற களங்களில் ராணுவ வீரர்களின் சேவையையும், தியாகத்தையும் செய்திகளாக அறிந்து அவர்களுக்கு சல்யூட் வைப்பதில் நம் மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், அங்கு உயிரிழந்த வீரர்களுக்கு சவப்பெட்டிகள் வாங்கியது முதல், பாதுகாப்புப் படையினருக்கான போர்வைகள், சீருடைகள் வாங்குவது வரையில் தரகர்களும், லஞ்சப் பேர்வழிகளும் புகுந்து விளையாடுகிறார்கள் என்ற தகவல் ஒரு பக்கம் மக்களின் மனங்களைக் குலுக்கியது; இன்னொரு பக்கம் தன்னை வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்கொண்ட பாஜக தலைமையிலான ஆட்சி ஊழல் ருசியில் எவ்வகையிலும் மாறுபட்டுவிடவில்லை என்பதும் தெரியவந்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்வதிலும் மேல்மட்ட ஊழல் உண்டு என்பதை, டெஹல்கா இணையத்தள ஏடு, தனது ஒரு புலனாய்வு இதழியல் நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இப்படிப்பட்டவர்களின் கையில் நாடு பாதுகாப்பாக இருக்குமா என்ற நியாயமான அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் தொடங்கப்பட்டாலும் அதிலே எக்கச்சக்கமான பணம் கைமாறுவது பற்றி புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்படி 100 கோடி, 1000 கோடி பல்லாயிரம் கோடி என்று பணம் கையாடல் செய்வது எதற்காக? ஊழல் பேர்வழிகளில் சொந்த சொத்துக் குவிப்போடு மட்டும் இது சுருங்கிவிடவில்லை. நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கே உலை வைப்பதாக ஊழல் உருக்கொள்கிறது என்பதுதான் மிகவும் கவலைக்குரியது.

அண்மையில் தமிழகத்தில் சில சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தபோது ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கொடுத்த விவகாரம் பெரிதாய்க் கிளம்பியது. அந்த அளவுக்குப் பணம் எங்கேயிருந்து வந்து கொட்டியிருக்கும்? ஊழல் கால்வாய்கள் அதற்காகத்தானே வெட்டப்படுகின்றன!

வறுமையிலும், வாழ்க்கைப் போராட்டத் தேவைகளிலும் நெறிபட்டுக்கொண்டிருக்கிற ஏழை எளிய மக்கள் தங்களை இப்படிப்பட்ட நிலைமைகளுக்குத் தள்ளிவிட்ட சமுக-அரசியல் அமைப்புகளுக்கு எதிராக வெஞ்சினம் கொண்டால் அது ஜனநாயகம் புத்தெழுச்சியோடு வளர்வதற்கு வழிவகுக்கும். ஆனால், அவர்களை அந்தத் திசையில் செல்லவிடாமல் இப்படி பணத்தால் அடித்து அவர்களது வாக்குரிமையைக் கடத்துவது என்பது ஜனநாயகம் முடக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும். அது ஒட்டுமொத்தத்தில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் தடையாகிவிடும். சாதி, மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதற்குத் தோதாகிவிடும்.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால் இன்றைய உலகமய, தனியார் மய, தாராள மய தாதாக்களின் வரிசையில் அணி சேர்ந்துள்ள பல ஊடகங்கள், ஊடக நெறியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆளுங்கட்சிகளுக்கு சாதகமாக அரசியல் செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுகின்றன. இவர்களால் எப்படி உறுத்தலின்றி ஊழலை விமர்சிக்க முடியும்?

எனினும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. சிறு அக்கினிக் குஞ்சுதான் பெரு நெருப்பாக மாறும். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்கள் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற உணர்வோடு இடதுசாரிகளும், வாலிபர் - மாணவர் - மாதர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும், விவசாயி - விவசாய தொழிலாளர் சங்கங்களும், பண்பாட்டு அமைப்புகளும் மக்களின் நியாயமான ஆவேசம் என்ற சிறு பொறியை பெருந்தீயாகக் கனல் வளர்க்கிற கடமையை நம்பிக்கையோடு நிறைவேற்றிட வேண்டும். அப்போது புதிய வரலாறு எழுதப்படும்.