Friday 29 June 2007

கவிதை

மறுபடி வந்தார்
நாதர் ஏசு.
கை நீட்டினார்
ஒரு கை ரேகை
ஜோசிய மாமணியிடம்.
‘‘சுகபோக வாழ்க்கை
ஐயா உமக்கு!
உம்மை யாரும்
இதுவரை அடித்ததில்லை
இனி அடிக்கப்போவதுமில்லை
-உமது உள்ளங்கை ரேகை
மிக அழுத்தமாய்
காட்டுது ஜோராய்!’’
-என்று சொன்னஜோசியன்
காட்டியஉள்ளங்கை இடத்தில்
ஆழமாய் இருந்தது
ஆணி அடித்த வடு.

-அ.குமரேசன்

Thursday 28 June 2007

film review

திரைப்பட விமர்சனம்

சிவாஜி

அ.குமரேசன்

ம்பது ரூபாய் டிக்கெட் ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்பட்டு, உண்மையிலேயே தயாரிப்புக்கு எத்தனை கோடி, விற்பனை எத்தனை கோடி, யார் யாருக்கு சம்பளம் எத்தனை கோடி என்பதெல்லாம் ஒரு போதும் வெளியே தெரியவராத புதிர்கள் ஆக்கப்பட்டு... இப்படியாக வந்துள்ள இந்தப் படம் சொல்கிற சேதி என்ன தெரியுமா? கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான்!

படம் பார்த்து முடித்ததும் நண்பர் கேட்டார்: "ரஜினி வெள்ளையில் வாங்கியது எவ்வளவு, கறுப்பில் வாங்கியது எவ்வளவு என்று சொல்வாரா? அவர் இப்படி கறுப்புப் பணத்தை ஒழிக்கப் புறப்படுகிறவராக நடிக்கலாமா?"

அந்த நொடியில் எனக்குத் தோன்றிய பதிலைச் சொன்னேன்: " நடிப்பு என்பதே உண்மையாக இல்லாததை உண்மை போலக் காட்டுவதுதானே? வயதானவர் இளைஞராக, இளைஞர் குடுகுடு கிழவராக, எட்டாம் வகுப்பு தாண்டாதவர் ஆராய்ச்சிப் பட்டதாரியாக, பலபடிப்புப் படித்துப் பட்டம் பெற்றவர் எழுத்தறிவில்லாத தற்குறியாக... இப்படியெல்லாம் நடிப்பதில்லையா? உயிரோடிருப்பவர் செத்துப் போனவராக நடிப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்."

எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் நான் படத்தைப் பாராட்டுவதாக எண்ணிக்கொண்டு, "சரியாச் சொன்னீங்க," என்றார். படத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் நின்றது, தானும் கடைசியில் பிளாக்கில்தான் டிக்கட் வாங்க வேண்டியிருந்தது... எதுவும் அவருக்கு உறுத்தவில்லை. யாருக்கு உறுத்தல் ஏற்பட வேண்டுமோ - அந்த சாமான்ய மக்களுக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாமல் மரத்துப் போகச் செய்வதில் `சிவாஜி' படத்திற்குப் பெரிய வெற்றிதான். இந்த ஒரு குறிப்பிட்ட படம் பற்றிய உறுத்தல் மட்டுமா? சமூக - அரசியல் நிகழ்வுப் போக்குகள் எது குறித்த உறுத்தலும் ஏற்படாமல் வெற்றுப் பொழுது போக்குத் திருப்தியிலும் பிரம்மாண்டங்களின் பிரமிப்பிலுமாக மூழ்கடித்து மரத்துப் போக வைக்கிற கைங்கர்யம். அதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடிப்படை நோய்களாகிய சுரண்டல், சாதியப் பாகுபாடு, மதவெறி, ஆணாதிக்கம், நவீன காலனியாதிக்கம், மூட நம்பிக்கைகள்... இன்ன பிறவற்றிக்கு எதிரான உணர்வையும் கோபத்தையும் காயடிக்கிற கர சேவை.


தமிழ்ச் சமுதாயம் போலவே தமிழ்ச்சினிமாவும் எப்படியாவது முன்னேற்றத்தடத்தில் செல்லத் துடிக்கிறது. சினிமா பார்க்க வருகிறவர்களின் பொழுதுபோக்குத் தேவையையும் நிறைவு செய்து, சமூக நிலைமைகள் பற்றிய ஓரளவு அக்கறையையாவது ஏற்படுத்தக் கூடிய படங்கள் வரத் துவங்கியுள்ளன. "அய்யய்யோ இது ஆபத்தாச்சே" என்ற பதைப்போடு தமிழ்ச் சினிமாவின் தடத்தைப் பின்னுக்கு இழுப்பதற்கு சிவாஜிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. திரையரங்குகளை முடக்கி, சந்தையை ஆக்கிரமித்து, மாற்று சினிமா முயற்சிகளை முடக்குகிற இப்படியாகப்பட்ட சகலகலா வல்லவ வேலையை எப்போதுமே செய்து வந்திருக்கிற தமிழ்த் திரையுலக ஏகபோகியாகிய ஏவிஎம் நிறுவனம் இப்போதும் அதைச் செய்திருக்கிறது. சமூகப் பண்பாட்டுத்தளம், வர்த்தகம் இரண்டிலும் ஒரு வன்முறைத் தாக்குதல் இது!

கதையாக்கம், கற்பனை ஆகிய படைப்புத் தளத்திலும் கூட, " இந்த ஊர் ரசிகனுக்கு இது போதும்," என்பதான ஒரு வன்முறை இருக்கிறது. ஏதோ பெரிதாக இருக்கிறது என்பதாக நம்ப வைத்து, பலகோடிப் பகட்டுகளிலும், தொழில்நுட்ப சாகசங்களிலும் மிரள வைக்கிற உத்தியை கைவசப்படுத்தி வைத்திருப்பவர் இயக்குநர் ஷங்கர்.

உள் நாட்டில் உள்ளோரெல்லாம் உளுத்துப் போனவர்களாக இருக்க, அமெரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான பணத்தோடு திரும்பி வருகிற சிவாஜி இங்கு ஏழைகளுக்காக இலவசப் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் ஏற்படுத்துவதற்கென அந்தப் பணத்தைச் செலவிட முயல்கிறான். (இலவசக் கல்வி நிறுவனம்தான் நடத்த வேண்டும் என்று ரஜினியின் மனைவிக்கும் மைத்துனர் குடும்பத்துக்கும் வற்புறுத்துகிறானா சிவாஜி?)

கல்வி வியாபாரத் தொழில் ஈடுபட்டுள்ள வில்லன், தனது வருமானம் வற்றிப்போகுமே என்று கருதி, செல்வாக்கையெல்லாம் பயன்படுத்திக் கதாநாயகனின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறான். சிவாஜியின் பணம், சொத்து, கைக் கடிகாரம் உட்பட `ஜப்தி' செய்ய வைக்கிறான். இதற்காக அவன் மேலிருந்து கீழ் வரை தன்னிடமுள்ள கறுப்புப் பணத்தை லஞ்சமாகக் கொடுக்கிறான். அவனைப் போன்றவர்களிடமும், அவர்களிடமிருந்து பெட்டி வாங்குகிறவர்களிடமும் இருக்கும் கணக்கில் வராத கறுப்புப் பணம்தான் நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என இப்போதுதான் உணர்கிறான் அமெரிக்கா ரிட்டர்ன்டு சிவாஜி. நாடு பூராவும் இருக்கிற கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களை உய்விக்க முடிவு செய்யும் சிவாஜி சகல சாணக்கியங்களையும் சண்டைகளையும் கையாண்டு படம் முடிவதற்குள் அதைச் சாதித்து முடிக்கிறான். இலவசக் கல்லூரி திறக்கப்பட கட்டணக் கல்லூரி மாணவர்கள் அங்கே திபுதிபுவென்று ஓடுகிறார்கள். கதாநாயகனுடன் கடைசியாக மோதும் வில்லன், கீழே விழுந்து மாணவர்களின் கால்களில் மிதிபட்டுச் சாகிறான்...

இதற்கிடையே, அமெரிக்கா வாழ் இந்திய இளைஞர்கள் விரும்புவது போலவே சிவாஜியும் ஒரு அழகான, அடக்க ஒடுக்கமான, பக்திமயமான தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவளைக் கோவிலில் கண்டுபிடித்து, வீட்டுக்குப் போய்க் கலாய்த்துக் கல்யாணம் செய்து கொள்கிறான். ஆரம்பத்தில் அவனுடைய கறுத்த கையையும் தன்னுடைய சிவந்த கையையும் ஒப்பிட்டுக் காட்டி "எப்படி நாம சேர முடியும்," என்று கதாநாயகி கேட்கிறாள். உடனே வீட்டில் ஒரு பியூட்டி பார்லர் அமைத்து, உடம்பெல்லாம் ஃபேர் அன் லவ்லி கிரீம் பூசி செவ்வண்ண மேனியாய் நடந்து வந்து அவளை அசத்துகிறான்! கிராபிக்ஸ் உபயத்தில் ரஜினி நிஜமாகவே சிவப்பாக வர ரசிகர்கள் விசிலடித்து ஓய்ந்து போகிறார்கள். முன்பு வெளியாகிப் புகழடைந்த "கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு" பாட்டில் "சூப்பர் ஸ்டாரும் கறுப்புத்தான்," என்ற ஒரு வரி வரும். அந்தப் பெருமை வேண்டாமென முடிவு செய்தார்களோ? சமூக நடப்பில் ஆண்தான் "சிவப்புத் தோல் பெண் வேணும்" என்று கேட்டு இல்லாத பட்சத்தில் வரதட்சணை பேரத்தை உயர்த்திக் கொள்கிறான்.
இந்தக் காட்சியில் மட்டுமல்ல, நாயகியை நாயகன் விரட்டிக் கொண்டிருக்கிறபோது பக்கத்து வீட்டு சாலமன் பாப்பையா தனது இரண்டு பெண்களைக் கூட்டி வந்து, " இந்த ரெண்டுல எதை வேணா நீங்க கட்டிக்கோங்க," என்று ஆஃபர் பண்ணுகிறார். அந்த இரண்டு பெண்களையும் அமாவாசைக் கறுப்பில் காட்டுகிறார்கள். கறுப்பை இப்படி கேலிக் குரியதாக்குவது காமெடியாம். தனக்கு வருபவள் பண்பாட்டுச் சிகரமாக இருக்க வேண்டும் என்று நாயகன் எதிர்பார்த்து, அவனுக்கு அப்படியே ஒரு ஆள் கிடைக்கிறது என்றாலும் ரசிகர்களுக்கு ஸ்ரேயாவை அப்படியே காட்டிவிடக் கூடாது என்ற அக்கறையோடு பாடல் காட்சிகளில் அதிகபட்சமாக அவருக்கு ஆடையுரிப்பு நடத்தி ஆடவிட்டிருக்கிறார்கள். பண்பாட்டுக்கு பண்பாடும் ஆச்சு, வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு.

கறுப்புப் பணத்தை சிவாஜி எப்படி வெளிக்கொண்டுவருகிறான் என்பது முக்கியமானது. மந்திரிமார்கள், அதிகாரிகள், முதலாளிகள் போன்ற கறுப்புப் பணக்காரர்களால் வேலையை விட்டு நீக்கப்பட்ட கார் டிரைவர்கள், பணியாட்கள் போன்றவர்களைத் திரட்டி, கல்யாண மண்டபத்தில் கூட்டம் நடத்தி, அவர்களிடம் கறுப்புப் பணத்தின் தீமையை விளக்குகிறான். அவர்களது முன்னாள் எஜமானர்கள் எங்கெங்கே கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் நன்றாக தெரியும் என்பதால், மக்களின் வறுமையை ஒழிக்க அந்த ரகசிய இடங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறான். அவர்களும் தேசப்பற்றோடு அந்த இடங்களைக் காட்டிக்கொடுக்க அந்தத் தகவல்களை அவன் வருமான வரித் துறைக்கு அனுப்ப - அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து அத்தனையையும் கைப்பற்றுகிறார்கள். வருமான வரித்துறை, புலனாய்வுத் துறை ஆகியவற்றிற்கு பயனுள்ள வழிகாட்டல்! எதற்கும் ஏவிஎம் நிறுவனத்தினர், ரஜினி, ஷங்கர் உள்ளிட்டோர் தங்களது பணியாளர்களை மாற்றாமல் இருப்பது நல்லது. கதாநாயகன் சொல்லித்தான் இந்த ரகசியங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தெரியுமா என்ன? அப்புறம் கறுப்புப் பணக் கில்லாடிகள் இந்தத் துறைகளுக்குள் மட்டும் புகுந்து விளையாடாமல் விட்டுவைப்பார்களா என்ன? ஆனால் சூப்பர் ஸ்டார் படத்தில் இப்படியெல்லாம் `லாஜிக்' தேடுவது தேசத் துரோகம்.

வில்லனின் சதியால் சிவாஜி செத்துப்போகிறான். இவ்வளவு கோடி செலவழித்து எடுக்கிற படத்திலாவது, ஹீரோவாவது, அதுவும் சூப்பர் ஸ்டாராவது முக்கால் வாசியில் செத்துப்போவதாவது! ரசிகர்கள் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் " வித்தியாசமான கெட்டப்பில்" (அதாவது டோபா வைக்காத தலையுடன்) திரும்பி வருகிறார் ரஜினி. `காமிக்ஸ்' புத்தகத்திற்குக்கூட லாயக்கில்லாத இந்தக் கதையைத்தான் இவ்வளவு மர்மமாக வைத்திருந்து, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை செயற்கையாக ஏற்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு மாதிரியாக்கினார்களா!

திரையுலகில் ரொம்ப காஸ்ட்லியான ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தொகுப்பாளர், சண்டைப் பயிற்சியாளர், நடன இயக்குநர் இன்ன பிற வல்லுநர்கள் என்றெல்லாம் துணை சேர்த்துக் கொண்டு, கூடவே கிராபிக்ஸ் நுட்பங்களையும் பயன்படுத்திப் படமாக்கித் தருவதில் என்ன சிறப்பு இருக்கிறது? இளைய இயக்குநர்கள் இன்று எளிய கலைஞர்களைக் கொண்டே வலிய படங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தன்னம்பிக்கை இல்லை என்பது மட்டுமே இவர்களது இந்த பிரம்மாண்ட சார்புக்குக் காரணமல்ல. படம் வெளியாகி முதல் சுற்றிலேயே போட்ட பணத்தைவிடப் பலமடங்காக அள்ளிவிட வேண்டும் என்கிற வேட்கைதான் காரணம்.

கிராபிக்ஸ் நுட்பம் கன்னாபின்னாவென்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜினி 1 ரூபாய் நாணயத்தைக் காற்றில் சுண்டிப்போட்டு தனது சட்டைப் பாக்கெட்டில் விழவைக்கிற "ஸ்டைல்" கூட கிராபிக்ஸ்!

ஆறுதலுக்கு ஒரு நல்ல அம்சம்கூடவா இல்லை என்று கேட்பவர்களுக்காக: இருக்கிறது. கதாநாயகி தனது ஜாதக தோஷப்படி தன்னைத் திருமணம் செய்து கொள்பவன் செத்துப்போவான் என்று பயப்படுகிறாள். நிஜமாகவே சிவாஜி செத்ததாக தகவல் வர அழுது கதறுகிறாள். அப்புறம் அய்யா வந்துவிடுகிறார் ஆகவே ஜாதகம், கீதகம், தோஷம், கீஷம் சங்கதியெல்லாம் கிடையாது என்றாகிறது. ஆனால் இது படத்தின் மையப்பிரச்சனை அல்ல என்பதால் எவ்வித அழுத்தமும் பெறவில்லை.

விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன் போன்ற திறமையாளர்கள் எல்லாம் பிரம்மாண்டத்தில் காணாமல் போய் விட்டார்கள். ஸ்ரேயா மட்டும் என்ன செய்துவிட முடியும் பாவம்.

பொழுதுபோக்கு நோக்கத்தற்காக தயாரிக்கப்படுகிற படத்தில் இப்படியெல்லாம் நொட்டை, நொள்ளை பார்ப்பது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். பொழுது போக்கு என்பது வாழ்க்கையின் ஒரு தேவைதான். ஆனால் அது பொழுது பறிப்பாக இருக்குமானால் விமர்சிக்காமல் இருக்க முடியாது. அதுவும் பொழுது போக்கின் பெயரால், வெறும் நாயக வழிபாடு வளர்க்கப்பட்டு, அநீதிகளுக்கு எதிரான ஆவேச உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு, பணம் பிடுங்குவதற்கான நெட்டை மரங்களாக மக்கள் மாற்றப்படுவது ஒரு பண்பாட்டு மோசடி. அதைத்தான் ஆரவாரங்களோடு செய்கிறது `சிவாஜி'.

Wednesday 27 June 2007

ஒரு நிறுவனம்
இரண்டு குடும்பங்கள்
மூன்று உயிர்கள்

அ. குமரேசன்

கடவுளை யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் கடவுளை வர்ணிக்கும் வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. இல்லாத ஒன்றைப் பற்றி என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை, அதனால் கடவுளைப் பற்றி என்னென்னவோ கதைகள் உலகம் முழுவதும் சுற்றி வருகின்றன. இந்த பத்திரிகை தர்மம், பத்திரிகைச் சுதந்திரம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதெல்லாம் கூட கடவுள் போன்றதுதான். இவற்றைப் பற்றியும் புனிதமயப்படுத்தப்பட்ட, உணர்ச்சிகரமான கருத்துக்களும் நம்பிக்கைகளும் நிறைய உள்ளன. ஆனால் அவையெல்லாம் கற்பிதங்கள்தானேயன்றி திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டவை அல்ல. அவரவர் வசதிக்கேற்ப செய்துகொள்ளப்பட்ட பலவகைக் கற்பிதங்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

இந்த மே மாதம் 9ம் தேதி மதுரையில் ‘தினகரன்’ நாளேட்டின் அலுவலகம் மு.க. அழகிரி ஆதரவு திமுக-வினரால் தாக்கப்பட்டு, கட்டிடத்தின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டு... உச்சமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்ட கொடுமைக்கும் இங்கு விவாதிக்க எடுத்துக் கொள்ளப்படும் ‘ஊடகச் சுதந்திரம்-ஊடக தர்மம்’ விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டு பேர் நெருப்பிலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு கண்ணாடி அறைக்குள் புகுந்து பதுங்கியதே அவர்கள் புகை மண்டலத்தில் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. எப்படியானாலும் அது கொலைதான். என்ன ஒரு காரணத்தைச் சொல்லியும் அந்தக் கொலையையும் தாக்குதலையும் நியாயப்படுத்திவிட முடியாது. முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதும், மதுரை மேயர் உள்ளிட்ட சிலர் சரணடைந்திருப்பதும், சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் இதே வேகத்தில் நியாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில், எமே 12 அன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் நோக்கி நடத்த முயன்ற ஊர்வலத்துக்கு அரசும் காவல்துறையும் தடை விதித்திருக்கத் தேவையில்லையே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஊர்வலத்தை அனுமதித்திருந்தால் பல்வேறு ஊடகங்களிலிருந்து வந்திருந்த செய்தியாளர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொண்டுள்ளது என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கும்.

இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடந்ததா, ஒருவரது ஆணைப்படி நடந்ததா, அவரிடம் நல்ல பெயர் வாங்க அவரது விசுவாசிகள் தாங்களாக வன்முறையில் ஈடுபட்டார்களா, சிலர் சித்தரிப்பது போல் இது ஒரு குடும்பச் சண்டை விவகாரமா, இரண்டு குடும்பங்களின் சண்டையா, அரியாசனத்துக்கான வாரிசு மோதலில் அந்த மூன்று அப்பாவிகள் பலியானார்களா... இதைப்பற்றி அலசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அது இனி சிபிஐ வேலை.இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் எழுந்துள்ள, ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டில் ஊடகங்களின் பொறுப்பு ஆகிய சிந்தனைகள் குறித்தே இங்கு விவாதிக்கப்படுகிறது.

உணர்ச்சிவசப்பட்டுள்ள நேரத்தில் இதையெல்லாம் விவாதிக்கத்தான் வேண்டுமா என்றால் விவாதிக்கத்தான் வேண்டும். ஒரு உடனடிப் பிரச்சனையிலிருந்து ஒரு பொதுப்பிரச்சனை தொடர்பான விவாதமாகக் கொண்டு செல்வது தேவையானது.‘தினகரன்’ ஏடு நாளொரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது. ‘நீல்சன்’ என்ற நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்பதாகக் கூறிக் கொண்டு அந்தக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழக மக்கள், தமிழகத்துக்குள்ளேயே அந்தந்த மாவட்ட மக்கள் என்பதாகப் பிரித்துக் கொண்டு அந்த ‘ஆய்வு’ முடிவுகள் வெளியிடப் படுகின்றன.

மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் ஆழமானவை! சமுதாய முன்னேற்றத்துக்கு உதவக் கூடியவை!ஆமாம், பொது இடத்தில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிக்கலாமா, சிறந்த கருத்தடை சாதனம் எது, பெண்ணுக்கு ஏற்ற உடை எது, அதிகமானவர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் யார், வாழ்க்கைத் துணையிடம் பொய் சொன்னதுண்டா... இப்படியாகப்பட்ட கேள்விகள்.

எந்த ஒரு பிரச்சனையிலும் கருத்தை உருவாக்காமல், மக்களிடையே ஏற்கெனவே ஊறிப்போயிருக்கிற கருத்துக்களை மேலும் வலுப்படுத்துவதன்றி இக்கேள்விகளால் என்ன பயன்? லயோலா கல்லூரியின் பண்பாடு மக்கள் தொடர்புத் துறையினரும் காட்சித் தொடர்பியல் துறையினரும் ஆண்டுதோறும் நடத்துகிற ஆய்வுகளில், மக்களிடையே எந்த அளவுக்கு மூடநம்பிக்கைகள் பரவியுள்ளன, சாதிமதப் பிடிப்பு எவ்வாறு உள்ளது, சமூக நீதி பற்றிய உணர்வுகள் எப்படி உள்ளன, திரைப்படங்கள் மற்றும் நடிகர்களின் தாக்கம், அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு, அரசுக் கொள்கைகள் பற்றி மக்களின் எண்ணம்... என்ற கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துக்கள் தொகுக்கப்படுகின்றன. இதே போல் வேறு பல அமைப்புகளும் கருத்துக் கணிப்பு நடத்தி புதிய அணுகுமுறைகளை வகுக்க உதவுகின்றன. தினகரனில் வந்து கொண்டிருக்கிற ‘ஆய்வுகள்’ அப்படிப்பட்டவைதான் என சொல்ல முடியுமா?

சுற்றிவளைத்து ஒரு வாதத்துக்காக சில கேள்விகள் சமூக ஆய்வாளர்களுக்கும் இயக்கங்களுக்கும் பயன்படக்கூடியவை என்று சொல்லிக் கொள்ளலாம். உதாரணமாக, பள்ளிப் படிப்புக்குப் பிறகு தமது பிள்ளைகள் என்னவாவதற்குப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்பது போன்ற கேள்விகள் மக்களின் மனநிலையை மதிப்பிட உதவும் எனலாம். ஆனால், சும்மா பயண நேரத்தில் வறுத்த வேர்க்கடலையைக் கொறித்துக் கொண்டே பொழுது போவதற்காக சுவாரசியமாகப் பேசியபடி மறந்து போவதற்கு உதவுவதாகத்தான் தினகரன்-நீல்சன் கேள்விகள் உள்ளன.

படிக்கவும் வேலைக்கும் என வீட்டிலிருந்து வெளியே வருகிற பெண்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், பெரும்பான்மை ஆதரவு சுடிதார் உடைக்கே கிடைக்கும். ஆனால் வெளிப்படையாகக் கேட்டால் புடவைதான் தங்களது தேர்வு என்பார்கள். இது போன்ற விசயங்களில் கூட பெண் தனது கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்திவிட முடியாத நிலைமை அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. இந்நிலையில் பெண்ணின் எளிதான பயன்பாட்டிற்கும், பொது இடக் கண்ணியத்திற்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற உடை எது என்று கேட்டிருந்தால் இக்காலத்துப் பெண்கள் சுடிதார் அல்லது பேண்ட்-சட்டையைத்தான் குறிப்பிட்டிருப்பார்கள். பண்பாட்டுக் காவலர்கள் பற்றிய அச்சம்தான் அவர்களது வாயை அடைக்கிறது.

ஆக இத்தகைய கேள்விகளின் நோக்கம் பயன் விளைவிக்காத, வெறும் பரபரப்பு மதிப்பீடும், வியாபாரமும்தான் என்பது தெளிவாகிறது. தமிழகத்தின் - ஏன் - இந்தியாவின் ராபர்ட் முர்டோச் போல ‘சன்’ நிறுவனம் ஊடக ஏகபோகமாக உருவாக முயல்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, பண்பலை வானொலி... என்று அதன் ஆக்டோபஸ் கரங்கள் துழாவுகின்றன. (இப்போது திரைப்படத்துறையிலும் கரத்தை நீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மீட்டர் வட்டிக்காரர்களின் பிடியிலும் பெரிய நிறுவனங்களின் பையிலும் சிக்கிக்கொண்டிருக்கிற தமிழ் சினிமா முற்போக்கான உள்ளடக்கங்களோடு வருவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் சன் குழுமம் போன்ற ஒரு ஏகபோக நிறுவனம் ஆதிக்கம் செலுத்தத் துவங்குமானால் நம் திரைப்படங்களின் உள்ளடக்கம் எப்படியெல்லாம் சிதைக்கப்படுமோ என்ற கவலை ஏற்படத்தான் செய்கிறது. தொலைக்காட்சி மெகாசீரியல்களின் கதி தெரியும் என்பதால் அந்தக் கவலை அச்சமாகவும் அவதாரம் கொள்கிறது. )

இந்தப் பரபரப்பு வணிக தர்மம்தான், ‘மக்கள் மனசு’ என்ற பெயரில் மலிவான ஒரு உத்தியாக இப்படியொரு ‘மெகா சர்வே’ நடத்த வைத்திருக்கிறது. அத்தோடு அரசியல் உள்நோக்கமும், அரசியலைப் பயன்படுத்திக் கொள்கிற வெளிநோக்கமும் சேர்ந்துகொண்டுவிட்டன. இந்த ஏகபோக வணிகம் மற்றும் அரசியல் நோக்கக் கூட்டுதான் மத்திய அரசில் உள்ள தமிழக அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார் என்றொரு கேள்விக்கான ‘மக்கள் கருத்தை’ வெளியிடச் செய்தது. கூட்டணி உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் ஒரு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டதைத் தாம் ஏற்கவில்லை என்று முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்தார். அதன் பின்னரும், கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்று ஒரு ‘ஆய்வு’ முடிவை தினகரன் மே 9 அன்று வெளியிட்டது. அன்றைக்கும் அதைத் தொடர்ந்தும் நடந்த நிகழ்ச்சிகள் பரவலாகத் தெரிந்ததுதான்.மீண்டும் இங்கே வலியுறுத்த வேண்டிய கருத்து - நிச்சயமாக யாரும் மதுரை வன்முறையை நியாயப்படுத்துவதற்கில்லை. என்ன செய்தாலும் மீட்கவே முடியாது அந்த மூன்று தொழிலாளர்களின் உயிர்களை. அரசியலுக்காகவோ, சொந்த செல்வாக்குக்காகவோ வன்முறையைக் கையாள்வதையும், கொலை செய்வதையும் நாகரிக சமுதாயம் அங்கீகரிக்காது. அபத்தமான கருத்து, உள்நோக்கமுள்ள கணிப்பு என்றாலும் தண்டனை தருகிற அதிகாரம் நிச்சயம் அடியாட்களின் கும்பலுக்கு இல்லை. கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை அனுமதிப்பதற்கில்லை.

ஆயினும் சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன: ஒரு கார்ப்பரேட் லாப தாகத்துக்கு இதில் சம்பந்தமே இல்லையா? அந்த தாகத்தைத் தணித்துக் கொள்ள என்ன செய்தாலும் அது வியாபார தர்மமே என்ற ஏகபோக நியதிக்கு இதில் பொறுப்பே இல்லையா? முதலாளித்துவ லாப வேட்டை யாகத்துக்கு தொழிலாளியின் வியர்வை மட்டுமல்ல, தேவைப்பட்டால் ரத்தமும் வார்க்கப்படும் என்பது உண்மையா இல்லையா? விளம்பரங்களை வாரித்தரும் வள்ளல்களாகிய கொக்கோ கோலா, பெப்சி முதல் சிவப்பழகு கிரீம் நிறுவனங்கள் வரை இந்த நாட்டுக்குத் தேவையா என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் ஒரு போதும் கேட்கப்பட மாட்டா என்பதும் சரியா இல்லையா?

விவாதிக்கப்பட வேண்டியது ஒரு தினகரன் அத்தியாயம் மட்டுமல்ல. மறுபடியும் கட்டுரையின் துவக்கப் பகுதிக்குச் செல்லலாம். பத்திரிகைச் சுதந்திரம்-பத்திரிகை தர்மம் என்பவை வரையறுக்கப்படவில்லை என்று பார்த்தோமல்லவா? அதற்கான சில முயற்சிகளை ஐ.நா. சபை செய்து பார்த்தது. பல சர்வதேச மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆயினும் அந்த வரையறுப்பு நடக்கவில்லை. ஏன் தெரியுமா? அன்றைய சோவியத் யூனியன் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் பத்திரிகையாளர்கள் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி மட்டும் பேசினால் போதாது, ஊடகங்களின் சமுதாயப் பொறுப்பு குறித்தும் வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு ஏகபோக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளோ அதை ஏற்கவில்லை. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம், பொறுப்பு பற்றி வரையறுக்கத் தேவையில்லை என்று அவர்கள் முட்டுக்கட்டை போட்டனர். லாப வெறியில் ஊறிக் கெட்டிப்பட்டுள்ள அந்தக் கட்டைதான் இன்றளவும் உண்மையான சமூக அக்கறையோடு பேனா பிடிப்பவர்களின் தலைகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது.
நாடகக் களம்

நிஜம் ஒன்று நிழல் ரெண்டு

மர்மம், குற்றச் செயல், விசாரணை, இறுதியில் புதிரவிழ்ப்பு ஆகியவை நாடக மேடைக்குப் புதிதல்ல. நாடக இயக்குநர் அகஸ்டோவுக்கும் புதிதல்ல. அகஸ்டோ ஒவ்வொரு புதிய நாடகத்திலும் இவற்றைக் கையாளுகையில் அதிலிருந்து கிடைக்கும் புதிர்ச்சுவையும் தொழில்நுட்பச் சுவையும் எப்போதும் குறைவதில்லை. கீதாஞ்சலி ராஜா தயாரிப்பில் அகஸ்டோ கிரியேஷன்ஸ் கலைஞர்கள் வழங்குகிற இந்த நாடகமும் அப்படித்தான்.கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவளாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவள் சங்கீதா. தனது உயிர்த்தம்பியைக் காதலித்து ஏமாற்றி அவனது தற்கொலைக்குக் காரணமான ஒரு பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்தாள் என்பது அவள் மீதான வழக்கு. குற்றத்தை அவளும் ஒப்புக்கொள்கிறாள். ஆயினும் விரைவில் பணிஓய்வு பெறடவுள்ள சிறைக் கண்காணிப்பாளருக்கு அவளை எப்படியாவது மேல் முறையீடு செய்ய வைத்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவாவது குறைக்கச் செய்ய முடியுமா என்று முயல்கிறார். அதற்கும் மறுத்துவிடுகிறாள் அவள்.
சிறுவயதிலிருந்தே படிப்பு, பல்வேறு திறமைகள், தொழில் என எல்லாவற்றிலும் அசாதாரணமான வேகத்துடன் வளர்ந்த இளம் தொழிலதிபர் ஆனந்த்.அதே வேகம் மரணத்தை நோக்கியும் ஏற்படுகிறது - ஒரு உயிர்க் கொல்லி நோய் வடிவில். மருத்துவரின் தகவல் தரும் அதிர்ச்சியிலிருந்து மீளும் அவன் எஞ்சியுள்ள நாட்களை ஒரு பெரும் சவால் மிக்க சாதனையைச் செய்வதன் மூலம் கழிக்க முடிவு செய்கிறான். அப்படியொரு சவாலாக அவன் சங்கீதாவின் வழக்கை எடுத்துக் கொள்கிறான்.
இந்த இருவரது சந்திப்பைத் தொடர்ந்து, எப்படி முடியும் என்பதை ஊகிக்க முடிந்தாலும் அதை நோக்கி எப்படிச் செல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பைக் கடைசிவரையில் காப்பாற்றியிருக்கிறார்கள்.
மரணத்தைக் கண்டு அறிவாளியான ஆனந்த், அன்பு மயமான சங்கீதா இருவருமே அஞ்சவில்லை. ஆனால் இரண்டுக்கும் இடையே எத்தனை வேறுபாடு!
கைதேர்ந்த உளவுத்துறை வல்லுநருக்கு இணையாகச் சிந்தித்து உண்மைகளைக் கண்டுபிடிக்கும் மூளைத்திறனுள்ள ஆனந்துக்கு மூளைப் புற்று என்பது ஒரு சோகம். அதே போல், சங்கீதா ஒரு தாயைப் போல் பாசத்தைப் பொழிந்த தம்பிக்கு ஏற்படும் முடிவு மற்றொரு சோகம். அவனது காதலி மீது அவளுக்கு ஏற்படும் ஆத்திரம் இயற்கையானது. அந்தக் காதலி ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதும், அதன் பின்னணியில் எப்பேற்பட்ட சுயநல சக்திகள் வேலை செய்தன என்பதும் ஒரு துப்பறியும் நாவலின் நேர்த்தியுடன் சொல்லப்படுகின்றன.
கதையில் அந்தக் காதலியும், அவளைக் கடத்திச் செல்லும் எதிரியும் முக்கியமான பாத்திரங்கள். மேடைக்கு அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டுவராமலே காதலியின் மென்மையையும், வில்லனின் வன்மையையும் பார்வையாளர்களுக்கு உணர்த்த முடியுமா? முடியுமெனக் காட்டியுள்ளார் இயக்குநர். நாடக மேடையின் வரம்புணர்ந்த நுட்பமான உத்திகள் அவை.
ஆழ்ந்த சமூகப் பிரச்சனைகளுக்குள் கதை நுழையவில்லை. முக்கிய எதிரி யார், அவனது கொலை வெறியின் நோக்கம் என்ன என்பது பல கதைகளில் சொல்லப்பட்டதே. நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு கடைசியில் விடுதலையாகி வரும் சங்கீதா என்ன நடந்தது என்ன என்று ஆனந்திடம் வினவுகிறாள். நீதிமன்ற விசாரணையிலேயே அந்த உண்மைகள் வெளிப்பட்டிருக்குமே! அவளுக்கு மட்டும் அதெல்லாம் தெரியாமல் போயிருக்குமா? பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட அக்காட்சியில் அந்த உண்மைகளை வேறுவகையில் வெளிப்படுத்தியிருக்கலாம்.அகஸ்டோவின் முந்தைய ஒரு நாடகத்தில் இதே போன்ற ஒரு சிறைக் கைதி, அவன் மீதும் ஒரு கொலைப் பழி, அவனை மீட்க முயலும் ஒரு பெண், அவன் மீது கொலைக்குற்றம் சாட்டப்படக் காரணமாக ஒரு காதலி...எனப் பார்த்ததாக நினைவு. கதைக்கரு ஒன்று, நாடகம் ரெண்டு!(?)
ஆனந்தாக கே. ராஜா, சங்கீதாவாக சௌந்தர்யா, தம்பியாக ஆதித்யா போட்டிபோட்டு நடிக்கிறார்கள். சிறையதிகாரியாக எஸ். கே. ஜெய்குமார், ஆனந்தின் நண்பனாக விஜய்சந்த், தந்தையாக ஆர்.கே.கோகுல்ராஜ், அவரது அரட்டை நண்பராக கே.எஸ். பழனி, மருத்துவராக போத்திலிங்கம் ஆகியோரது ஈடுபாட்டு நடிப்பும் ரசித்துக் காணத்தக்கது.பின்னணி இசை சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. ஒளி-நிழல் வேலைப்பாடுகள் காட்சிகளுக்கும் அவற்றின் உணர்வுகளுக்கும் ஒத்துழைக்கின்றன.இப்படிப்பட்ட உத்திகளால் நாடகம் துடிப்போடு அமைகிறது. இப்படிப்பட்ட வரவுகளால் நாடக உலகம் துடிப்போடு வாழ்கிறது.
-அ.குமரேசன்

Monday 25 June 2007

real

விண்ணில் வீசிய வெறி
**************************
அந்த பிரிட்டிஷ் ஏர் வே விமானம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படத் தயாராக இருக்கிறது. அதன் சாதாரண வகுப்புக்கு வருகிற ஒரு வெள்ளைக்காப் பெண் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு வந்ததும் கடுப்பாகிறார். விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.
*எஸ் மேடம். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? ஏதாவது பிரச்சனையா?* என்று கேட்டபடி அருகில் வருகிறார் பணிப்பெண்.
*பார்த்தலே பிரச்சனை தெரியலையா? என் சீட்டுக்கு பக்கத்தில் இந்த கறுப்பரை உட்கார வைத்திருக்கிறீர்கள். பொருத்தமில்லாத மனிதருடன் எப்படி சேர்ந்து உட்கார்ந்து பயணம் செய்ய முடியும்? உடனடியா எனக்கு வேற சீட் ஏற்பாடு பண்ணுங்க. * -வெள்ளைக்காரப் பெண் ஆத்திரத்தோடு இரைந்து சொல்கிறார்.
*ஓகே மேடம். கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இந்த வகுப்பு நிரம்பிடிச்சின்னு நினைக்கிறேன். ஆனாலும் உங்களுக்கு வேறு மாற்று சீட் ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்* என்று கூறும் பணிப்பெண் உடனடியாக அந்த இடத்தைவிட்டு நகர்கிறார். சிறிது நேரத்தில் திரும்பி வருகிறார்.
*மேடம் நான் சொன்னது போலவே இன்த வகுப்பில் ஒரு சீட் கூட காலியாக இல்லை. முதல் வகுப்பில் தான் ஒரு சீட்டு இருக்கிறது. உங்கள் பிரச்சனை குறித்து விமானத்தின் கேப்டனுடன் பேசினேன். அவரும் உங்கள் கருத்தை ஒப்புக்கொண்டார்.* என்கிறார் பணிப்பெண்.
அந்த வெள்ளைக்காரப் பெண் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் பணிப்பெண்*பொதுவாக நாங்கள் சாதாரண வகுப்புப் பயணிகளுக்கு முதல்வகுப்பில் இடம் தருவதில்லை. இருத்தாலும் இந்தப் பிரச்சனையின் தனித்துவம் கருதி ஒரு சிறப்புச்சலுகையாக மாற்று இடம் வழங்க எங்கள் கேப்டன் பணித்திருக்கிறார்* எனக் கூறுகிறார்.
அந்த கறுப்பினத்தவரிடம் திரும்புகிற பணிப்பெண்* சார் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் பெட்டியை எடுத்துக் கொண்டு என்னோடு வாருங்கள். முதல் வகுப்பில் உங்களுக்காக ஒரு சீட் காலியாக இருக்கிறது* என்று அழைக்கிறார். வெள்ளைக்காரப் பெண்ணின் முகம் மேலும் வெளுக்கிறது. முதலில் அதிர்ச்சியடைந்திருந்த சாதாரண வகுப்பின் மற்ற பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அந்தக் கறுப்பு மனிதரை முதல் வகுப்புக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
-உண்மையில் நடந்த நிகழ்வு இது
_ஆதாரம்: உலக தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியீடு
தமிழில்: அ.கு.

kanippu thinippu

மறுபடியும் கருத்துத் திணிப்பு
*********************************
மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள்- கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு வேலையை. உலக நிதிமூலதனக் காத்துக் கறுப்பு இவர்களை விடாமல் பிடித்து ஆட்டுகிறது. அதன் தலைவிரியாட்டத்தை நிறுத்த வேண்டுமானால் இடது சாரிகளுக்கு இங்கே கிடைத்திருக்கிற - அரசியல் முடிவுகளில் ஓரளவுக்கேனும் தலையிடக் கூடிய - செல்வாக்கை எப்படியாவதுப் பறித்துப் படையலாக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என சற்றுத் தாமதமாகவாவது சரியான முடிவெடுத்தார் அப்துல் கலாம். அதற்குப் பிறகும் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு என்பதாக ஒன்றை நடத்தி அப்துல் கலாம்தான் அடுத்த குடியரசுத் தலைவராகவும் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக செய்தி ஒளிபரப்புகிறது. ஒரு 39000 பேரிடம் *ஆன் லைன்* மூலம் கருத்துப் பதிவு நடத்தப்பட்டதாம். ஆன் லைன் பயன்படுத்தி கருத்துப் பதிவு செய்யக் கூடியவர்கள் யாராக இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. நடுத்தர வர்க்க புத்திக் குழப்பம் நிறைந்தவர்களாக அவர்கள் தங்களது கணினிகள் வாயிலாகக் கருத்துக்களை அனுப்ப அதன் முடிவாகப் பின்வரும் செய்தியை அந்த நிறுவனம் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
அணுகுண்டு புகழ் அப்துல் கலாம்தான் மறுபடியும் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று 69 சதவீதத்தினர் கூறியுள்ளனராம். அடுத்து ஆர்எஸ்எஸ் ஆளான பைரோன் சிங் செகாவத்துக்கு 17 சதவீதத்தினர் ஆதரவாம். ஐமுகூட்டணி மற்றும் இடதுசாரிகளின் வேட்பாளரான பிரதிபா பாட்டீலுக்கு ஆதரவு 14 சதவீதம்தானாம்.
வேறுபல ஏடுகளும் இதே போல் *மக்கள் கருத்து* வெளியிட்டு வருகின்றன. இந்த மூளைச் சலவை வேலையில் இரண்டு மூன்று அம்சங்கள் இருக்கின்றன.
ஒன்று - இடது சாரிகளின் செல்வாக்கை சகித்துக் கொள்ள முடியாத மூச்சுத்திணரல். ஒரு வேளை காங்கிரஸ் தலைமை முதலிலேயே பிரதிபா பெயரை முன்மொழிந்து அதை இடதுசாரிகள் ஏற்றிருந்தால் இவ்வளவு அலட்டியிருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் சில பெயர்களை காங்கிரஸ் கூற- அவற்றை இடதுசாரிகள் ஏற்க மறுக்க- அப்புறம் பிரதிபா பெயர் முன்மொழியப்பட- அதை இடதுசாரிகள் முழுமனதோடு வரவேற்க- அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. அதுதான் இவர்களை இடிக்கிறது. இடதுசாரிகளின் சம்மதம் ஒரு முக்கியத் தேவையாகியிருப்பது பளிச்செனத் தெரிகிறது. இதை கார்ப்பரேட் மோகிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அடுத்து - கலாம் பெயரைத் திரும்பத் திரும்ப இழுப்பதன் மூலம் உணர்ச்சியைக் கிளறிவிட்டு ஒரு வெறுப்புணர்வை வளர்க்கிற பாசிசத் தந்திரம். போலியான தேசியவாத அரசியல் நடத்துவோரின் மலிவான உத்தி இது. சிந்திக்க விடாமல் மூளையை ஆக்கிரமிக்கிற அராஜகம். கலாம் மீது ஏற்கெனவே கட்டடமைக்கப்பட்டுள்ள தோற்றத்தை அரசியலாக்குகிற சாணக்கியம்.
ஒரு வேளை மேற்படி கருத்துக் கணிப்புகள் உண்மையானவை என்றே வைத்துக் கொள்வோம் - அதிலிருந்து நாம் வரக்கூடிய முடிவு என்ன? ரொம்ப அடிப்படையான கேள்வி இது. ஒரு பெண்ணின் தலைமையை ஏற்க மறுக்கும் ஆணாதிக்க மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடுதான் இக் கருத்துக் கணிப்புகளில் பதிவாகியுள்ள சிந்தனை. விவாதம் அதை நோக்கிச் சென்றாக வேண்டும். அப்படிச் செல்லவிடாமல் திசைதிருப்புகிற சாமர்த்தியமும் இத்தகைய கருத்துக் கணிப்புகளில் பொதிந்திருக்கிறது.
ஒரு மாற்றத்திற்கான முதல் அடியை வெட்ட முயல்கிறவர்களின் உள்நோக்கங்கள் வெளியுலகத்திற்கு அம்பலமாக வேண்டும். முற்தேபாக்கு சிந்தனையாளர்கள் இதை ஒரு கடமையாகச் செய்தாக வேண்டும்.
-அ.குமரேசன்

Saturday 23 June 2007

aangilathaiyum viduvadhillai!

If I kiss you
I get the
Germs in you.
If I miss you
I feel the
Gems in you.
We shall
Miss each other.
Gems will
Kiss us together.

-A. Kumaresan

adhe kavithai thirundhiya vadivil

மார்பில் மூடிய
முந்தானை அல்ல
விண்ணில் வீசிய
துப்பட்டா
எனவே
அழகாய் இருக்கிறது
வானவில்.
-அ.குமரேசன்

vivaadham

நடுநிலை மோசடி
சிலருக்குத் தங்களது சாதியின் பெயரைத் தங்களது பெயரின் பின்னால் ஒட்டவைத்துக் கொள்வதில் மோகம் (சாதிய எதிர்ப்பின் அடையாளமாக பறையன் பறையனார் பள்ளர் என்றெல்லாம் பெயருக்குப் பின் இணைத்துக் கொள்வதை இங்கு நான் குறிப்பிடவில்லை). சிலருக்கு தங்களது பெயருடன் யாரோ ஒரு சினிமா நடிகரின் பெயரை ஒட்டவைத்துக் கொள்வதில் மோகம். இப்படியாக பலப்பல மோகங்கள்.
நம்மூர் ஊடகங்களுக்கு தங்களை *நடுநிலை* என்று சொல்லிக் கொள்வதில் மோகம். அதை மோகம் என்று சொல்லலாமா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. வட்டார நடுநிலை ஏடுகள் முதல் தேசிய நடுநிலை ஏடுகள் வரை இருக்கின்றன.
உண்மை என்னவென்றால் எந்த ஒரு ஊடகமும் நடுநிலையாக இல்லை. எந்த ஒரு ஊடகமும் நடுநிலையாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை- வேறு சில கட்சிகளின் பத்திரிகைகள்- சில இயக்கங்களின் பத்திரிகைகள் தங்களை அவ்வாறு கூறிக்கொள்வதில்லை. நாங்கள் தொழிலாளி வர்க்கப் பத்திரிகை- வர்க்கச் சார்புள்ள பத்திரிகை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டே செயல்படுகின்றன.
மற்ற ஊடகங்கள் நடுநிலை எனக் கூறிக் கொண்டு அததற்கென ஒரு அரசியலைக் கடைப்பிடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வர்க்க அரசியலில் - ஆளும் வர்க்க நலன் சார்ந்தே செயல்படுகின்றன.
இது பற்றி இனி தொடர்ந்து பேசுவோம். நிறையப் பேச வேண்டியிருக்கிறது. -அ.குமரேசன்

oru kavithai

மார்பை மூடியமுந்தானை அல்லவிண்ணில் வீசியதுப்பட்டா - எனவேஅழகாய் இருக்கிறதுவானவில். -அ. குமரேசன்

kalam kaalam

கலாம் மறுப்பு - அவரும் நாட்டுக்குப் பயன்படும் வகையில் முடிவெடுப்பார் என்பதைக் காட்டுகிறது. இப்போதும் பிரச்சனையில்லை - இனிமேலும் அவர் ஜனாதிபதியாக இருக்கலாம் - முன்னாள் ஜனாதிபதியாக!
பாஜக மறைமுக ஆதிக்க முயற்சி எடுபடாதது மகிழ்ச்சி.

innondru

pazahiyadhu thavarudhalaai delete aanadhu. eninum adhe peyaril puthiya blog kidaithadhu. erkanave pottirundha padaipugal gaali. ini puthidhai.

marupadi

மறுபடி வந்தேன்