Thursday 14 April 2011

அன்னா ஹசாரேக்களின் வெற்றியும் தோல்வியும்


ழல் - இது தனி மனிதரின் நேர்மை, பொதுவாழ்வின் தூய்மை ஆகியவை தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. நாட்டின் கருவூலத்தைச் சூறையாடுகிற, மக்களின் உழைப்பை உறிஞ்சுகிற, அவர்களது நம்பிக்கைகளைக் கல்லறைக்கு அனுப்புகிற கொலைபாதகக் குற்றமுமாகும். மக்களை நேரடியாகத் தாக்குகிற கீழ்மட்ட ஊழல்களில் ஈடுபடுவோரிடம் கேட்டால், மேல்மட்டத்தில் லட்சம்... கோடி... லட்சம் கோடி என்பதாக, எளிய மக்களால் புரிந்துகொள்ளவே முடியாததாக நடக்கிற மாபெரும் ஊழல்களைக் கைகாட்டுகிறார்கள்.

இது ஒரு நச்சுச் சுழல். இந்தச் சுழல் பற்றிய ஆத்திரம் பொதுவாக மக்களுக்கு இருக்கிறது. அரசு மட்டத்தில் ஊழல்களைத் தடுப்பதற்கான லோக் பால் என்ற, சட்டப்பூர்வ மக்கள் மன்றம் அமைக்கப்பட வேண்டும், அதற்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நெடுங்காலமாகக் கோரப்பட்டு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதனை மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரிக் கட்சிகளும் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்திருக்கின்றன. இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசும் சரி, முந்தைய பாஜக கூட்டணி அரசும் சரி இக்கோரிக்கை எழுந்தபோதெல்லாம் ஆமாம் ஆமாம் அப்படியொரு சட்டம் தேவைதான் என்று வாய்ச்சேவை செய்துகொண்டிருந்தார்களே தவிர, உண்மையாகவே அப்படியொரு சட்டத்திற்கான முன்வரைவைக் கொண்டுவர எந்த முன்முயற்சியும் எடுத்ததில்லை. இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்து தங்கள் தலையில் தாங்களே மண்ணைப் போட்டுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதானே இதன் அர்த்தம்?

இந்தப் பின்னணியில்தான், இந்திய ராணுவத்தில் முன்பு பணியாற்றியவரும், ஓய்வுக்குப் பின் சமூகப் பணிகளில் ஈடுபட்டவருமான அன்னா ஹசாரே, லோக் பால் சட்ட முன்வரைவை உடனடியாகக் கொண்டுவருகிறீர்களா இல்லையா என்று கேட்டு காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை இம்மாதம் 5 அன்று தொடங்கினார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவரும், தமது கிராமத்தில் விவசாய நிலங்களுக்கான தடையற்ற நீர்ப்பாசனத்திற்கு வழிவகுக்கும் ஒரு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, அதற்காக மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றவருமான அன்னா ஹசாரே இதற்கு முன்பும் இதே கோரிக்கைக்காக பட்டினிப் போராட்டம் நடத்தியிருக்கிறார். தகவல் உரிமைச் சட்டம் உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளுக்கான போராட்டங்களையும் நடத்தியவர் அவர். இம்முறை அவர் மேற்கொண்ட போராட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊடக வெளிச்சம் கிடைத்தது. ஏராளமான தொண்டு நிறுவனங்களும் இணைந்துகொண்டன.

மன்மோகன் சிங் அரசு தயாரித்து வைத்திருந்த லோக்பால் சட்ட முன்வரைவு “எங்கள் நாட்டிலும் ஊழலைத் தடுப்பதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது” என்று வெளிநாட்டவர்களிடம் சொல்லிக்கொள்வதற்குப் பயன்படுவதாக இருந்ததேயன்றி குற்றவாளிகள் நேரடியாக விசாரிக்கவோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அளிக்கவோ அந்த அமைப்பிற்கு அதிகாரம் வழங்கக்கூடியதாக இல்லை.

அன்னா ஹசாரே முன்வைத்த லோக்பால் ஆலோசனைகள் ஒரு போட்டி அரசாங்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன என்று தொடக்கத்தில் கபில் சிபில் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேலி செய்தார்கள். “உரிய முறையில் சட்டம் கொண்டு வருகிறோம், இப்போது நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள்” என்று, ஊழல் பேர்வழிகளை முடிந்த வரையில் காப்பாற்ற முயல்வதில் கை தேர்ந்தவரான பிரதமர் மன்மோகன் சிங் சொல்லிப் பார்த்தார். அசரவில்லை ஹசாரே. இறுதியில் சட்ட முன்வரைவில் என்னென்ன வழிகாட்டல்கள், விதிகள், ஆணைகள் இருக்க வேண்டும் என்பதை விவாதிக்க ஒரு குழு அமைக்கவும், அதில் ஹசாரே உள்ளிட்ட பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசு முன்வந்தது. ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரின் உற்சாகப் பாராட்டுகள் வந்து குவிய, வெற்றி வீரராகப் போராட்டத்தை 9ம் தேதி நிறுத்திக்கொண்டார் ஹசாரே.

இந்தியா போன்றதொரு நாட்டில் மக்கள் பணம் விழுங்கப்படுவதை ஓரளவுக்காவது தடுத்து நிறுத்த லோக்பால் போன்ற சட்ட அதிகாரம் கொண்ட அமைப்புகள் உதவ முடியும். ஊழல் வழக்குகள் ஆண்டுக்கணக்காக இழுத்தடிக்கப்பட்டு மக்கள் நினைவிலிருந்தே அழிக்கப்பட்டுவிடுகிற சூழலில், அரசாங்கத்தை ஹசாரேயின் போராட்டம் இறங்கிவர வைத்தது என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் ஹசாரேயின் போராட்டம் வரவேற்கத்தக்கதொரு வெற்றிதான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தில், ஹசாரே இயக்கத்தோடு இணைந்து வருகிற சில கேள்விகள் சிந்தனையைக் குடைகின்றன.

ஒன்று - அரசு அமைத்திருக்கிற குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக, ஊழல் கறை படிந்த பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டாரே, அதற்கு நிர்ப்பந்தித்தவர் இவர்தான் என்று கூறப்படுகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திய ஹசன் அலி மீது முறையான வழக்குத் தொடராமல் இழுத்தடிக்கப்பட்டதற்கும் இவர்தான் பொறுப்பு. இரண்டு விவகாரங்களிலுமே உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியதாயிற்று. மற்றொரு உறுப்பினர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. தொழிலாளர் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப்பணமாக மாற்றும் சட்டத்தைத் தயாரித்தவர் இவர். இன்னொரு உறுப்பினரான உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், முன்பு நிதியமைச்சராக இருந்தபோதுதான் இவ்வளவு பெரும் ஊழல்களுக்கான ஊற்றுக் கண்கள் திறக்கப்பட்டன. கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று இவரது புதல்வர் கார்த்திக் சிதம்பரம் வாக்குமூலம் அளித்தது விக்கி லீக்ஸ் அளவுக்குப் புகழ்பெற்றுவிட்டது. இவர்களெல்லாம் சேர்ந்து எப்படிப்பட்ட சட்ட முன்வரைவைக் கொண்டுவரப்போகிறார்கள்?

இரண்டாவது - நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடதுசாரி கட்சிகள் இதே கோரிக்கைக்காகப் போராடியபோதெல்லாம் கண்டுகொள்ளாத பிரதமர் மன்மோகன் சிங், இப்போது ஹசாரே குரலுக்கு மட்டும் இறங்கிவந்தது ஏன்? முன்பு தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளை மன்மோகன் சிங் அரசு சார்ந்திருக்க வேண்டிய நிலையில், அவர்களது செயல்முனைப்புதானே காரணமாக அமைந்தது?

ஹசாரே போராட்டம் நடந்த இடத்தில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த சில அரசியல் தலைவர்களை நெருங்க விடாமல் தடுத்தனர் தொண்டுநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். முதலாளித்துவ அரசியல் அமைப்புகளையும் இடதுசாரிகளையும் ஒரே மாதிரியாகச் சித்தரித்து, மக்களுக்கு அரசியல் பங்கேற்பு உணர்வு வரவிடாமல் தடுக்கிற ஏற்பாடு இதற்குள் இல்லையா? மக்களின் போராட்டங்களே திட்டவட்டமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதே மார்க்சியக் கோட்பாடு. மக்களுக்கு எதையும் கேள்வி கேட்கிற மனப்போக்கு வளர்ந்துவிடக்கூடாது என்பது இன்றைய உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் தாதாக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் அரசியல் விழிப்புணர்வு கொள்வது இவர்களது கூட்டுக்கொள்ளைகளுக்கு இடைஞ்சல் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. மக்களின் அரசியல் உணர்வை அழித்தாக வேண்டும் என்ற உலகமயவாதிகளின் லட்சியத்தை நிறைவேற்றுவதாகத்தானே ஹசாரே போராட்டமும், மன்மோகன் பெருந்தன்மையும் இருக்கின்றன?

மூன்றாவதாக - இப்படிப்பட்ட ஊழல்களைப் பெற்றுத்தள்ளுவது தாராளமய, தனியார்மய, உலகமய பொருளாதாரக்கொள்கைகள்தான். இதை ஹசாரேக்களும், அரசியல் தலைவர்களைத் தடுத்த தொண்டு நிறுவனங்களும் ஓங்கி எதிர்ப்பதில்லையே ஏன்?

நான்காவதாக - ஹசாரேயின் பின்னணியில் இப்படிப்பட்ட அரசியல் அசூயைப் பேர்வழிகள் மட்டுமல்லாமல், ராம்தேவ் போன்ற ஆர்எஸ்எஸ் படையினரும் இருந்தது எப்படி? ஹசாரேயே கூட, தனது பட்டினிப்போராட்டம் முடிந்த மறுநாளே குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நற்சான்று அளித்துப் பேசியது எதற்கு? அவருக்கு ஆதரவாக வந்த ஒரு தொண்டு நிறுவனம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும், “வகுப்புவாதத்தை நான் எந்த வடிவிலும் எதிர்க்கிறேன்... மோடியின் வளர்ச்சித்திட்டத்தை மட்டுமே ஆதரிக்கிறேன்,” என்று பூசி மெழுக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா? இதற்கு முன் இவர், சிவசேனா வகையறாக்களின் மராத்திய மண் மராத்தியருக்கே என்ற இனப்பகை முழக்கத்தை ஆதரித்தவர் என்பதை மறந்துவிட முடியுமா?

இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் கார்ப்பரேட் ஊடகங்கள் திட்டமிட்டே மறைக்கின்றன. ஊழல் சுனாமிகளை உண்மையிலேயே தடுக்க வேண்டும் என்றால், அது மக்களின் முழுமையான அரசியல் எழுச்சிப் பேரலையாலேயே சாத்தியம். அதற்கு விதையூன்றி, உரமிட்டு, வளர்த்தாக வேண்டிய வரலாற்றுக் கடமையை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் - இந்த சக்திகள் மட்டுமே - நிறைவேற்றுவார்கள்.

(‘தீக்கதிர்’ 15.4.2001 இதழில் எனது கட்டுரை)