Sunday 23 October 2011

நரகாசுரன் கதை - அன்றும் இன்றும்


‘‘நீ காட்டுக்கு உள்ளேயே இருப்பவன். நாங்கள் நாடு பல கண்டவர்கள். உனக்கு உலகத் தைப் பற்றி ஒன்றும் தெரியாது. நாங்களோ உலக அறிவையெல்லாம் திரட்டி வைத்திருப்ப வர்கள். திரட்டிய அறிவுக்கேற்ப நாடு விரிவாக்க இந்தக் காடு வேண்டும். உன் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க நீ உதவினால் எம் பேரர சில் உனக்கும் ஒரு இடம் தருவோம். உதவ மறுத்தால் உன்னோடு போரிட்டு காட்டைக் கைப்பற்றுவோம்.”

“உங்களுக்கு உலக அறிவு இருக்கலாம். எனக்கு இந்தக் காடு பற்றியும், இதில் வாழும் என் மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் பற்றியும் நன்றாகத் தெரியும். உலக அறிவை நாங்களும் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த வர்களே நீங்கள்தானே... நாங்கள் அதையெல் லாம் பயில்வது பாவம் என்றீர். மீறிப் பயின் றால் எம் நாவை அறுக்கச் சொன்னீர். உங்கள் பாடத்தை நாங்கள் கேட்டுவிட்டாலோ செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னீர்...”

“அதை விடு. இப்போது காட்டை எம் மிடம் ஒப்படைப்பது பற்றி என்ன சொல் கிறாய்?”

“அது நடக்காது. எம் மக்கள் காடன்றி வேறெதையும் அறியமாட்டார். அவர்களைக் காடற்றவர்களாக விரட்டுவதற்கு ஒருபோதும் நான் உதவ மாட்டேன். உதவ மாட்டேன் என்பது மட்டுமல்ல, எதிர்த்துப் போராடவும் செய்வேன்...”

“நீ ஒரு அரக்கன்...”

“என் போன்றோரை அழிப்பதற்கு முன் நீங்கள் இந்தப் பெயரைத்தான் சூட்டுவீர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

மூண்டது போர். காடு பிடிக்க வந்தவர்களின் சார்பாக வந்தவன் தன்னுடைய ஆளுமை எக்காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடாது என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு உதவியவன். போரின் இறுதிக்கட்டத்தில்...

“உன் போன்ற வீரர்கள் எம்மோடு இருப் பதே பொருத்தம். இப்போதும் கூட நீ விட்டுக் கொடுத்தால் என் சக்ராயுதம் உன் மேல் பாயாது.”

“எம் மக்களைக் காட்டிக்கொடுத்து உயிர்ப் பிச்சையும் உயர் பதவியும் தேவையில்லை...”

“நீ அழியப்போவது நிச்சயம்...”

“ஹஹ்ஹஹ்ஹா!”

“ஏன் சிரிக்கிறாய்?”

“ஒரு காடு வாழ் மனிதனாக என்னிடம் இருப்பதெல்லாம் எளிய ஆயுதங்கள். நாடு நாடாய்ச் சுற்றி வந்த நீர் சக்ராயுதம் போன்ற நவீன ஆயுதங்களால் எம்மை எளிதில் வீழ்த்தி விடுவீர் என்பது எனக்குத் தெரியும். அதிலே நீங்கள் பெருமைப்பட ஏதுமில்லை. ஆனால் ஒன்று, உங்களால் என்னை அழித்துவிட முடியாது...”

“என்ன சொல்கிறாய்?”

“என்னைக் கொன்று காட்டைக் கைப்பற்றி யதை உங்கள் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், என் மக்களும் நான் அவர்களுக்காகப் போராடி வீழ்ந்ததைக் கொண்டாடுவார்கள். அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்... என் சாவில் யாரும் துயரம் கொள்ளக்கூடாது என்று. எதற்காக நான் சாவைத் தழுவினேன் என்பதை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக் கிறேன். என்றாவது ஒரு நாள் எம் மக்கள் வெல் வார்கள். உங்களிடமிருந்து கானகத்தை மீட் பார்கள்.”

ஈவிரக்கமற்ற கொடூரமான அசுரன் என்று புராணத்தில் சித்தரிக்கப்பட்ட நரகன் சக்ரா யுதத்தால் கழுத்தறுபட்டு மாண்டான்.

அரண்மனையில் ஆக்கிரமிக்க வந்தவர் களின் அரசன், சக்ராயுதம் சுழற்றி உதவியவன், வழிகாட்டும் குருமார்கள், அமைச்சர்கள் எல் லோருமாய்க் கூடியிருக்கிறார்கள். “நரகாசுரன் சொன்னது போலவே அவனுடைய மக்கள் அவனுடைய சாவைக் கொண்டாடுகிறார்கள், அவன் மாண்டது ஏன் என்று சொல்லிச் சொல் லிக் கொண்டாடுகிறார்கள். என்ன செய்வது?”

“அவன் கொல்லப்பட வேண்டிய பாவி, தேவர்களை வதைத்த கருணையற்ற அரக்கன் என்பதாகப் பரப்புங்கள். சாபத்தால் அரக்க னாய்ப் பிறந்தான் என்று கதை கூறுங்கள். சாப விமோசனம் கண்ணனின் சக்ராயுதத்தால் கிடைத்தது என்று முடியுங்கள். மரணத் தறு வாயில் அவன் வைத்த கோரிக்கையை இறை வன் ஏற்றுக்கொண்டதால், அதன்படி மக்கள் நரகாசுரனின் இறப்பை, தீப ஒளி நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்று புதிய புராணம் எழுதுங்கள். நெருப்பின் பயனை மனிதர்கள் கண்டுபிடித்ததன் நினைவாகத் தொடர்கிற தீப விழாவையும் நரகன் கொலையையும் இணை யுங்கள்...”

“மக்கள் அதை நம்ப வேண்டுமே?”

“ஏன் நம்ப மாட்டார்கள்? புராணக் கதை யாக மாற்றி நம் ஊடகங்கள் வாயிலாக திரும் பத் திரும்பச் சொல்லுங்கள். ”

“ஊடகங்களா...?”

“கதாகாலட்சேபங்கள், நாடகங்கள், நாட் டியங்கள், ஆலயச் சுவர் ஓவியங்கள், சிற்பங் கள்... இவற்றின் மூலமாகப் பரப்புங்கள். நடந் ததை நேரில் பார்க்காத சனங்கள் நாம் சொல் வதை விரைவிலேயே நம்பிவிடுவார்கள். நவீன ஊடக வசதி எதுவும் இல்லாத வீழ்த்தப்பட்ட வர்கள் இப்படியெல்லாம் பரப்ப முடியாது. அப்படியே அவர்கள் நடந்தது என்னவெனக் கூறினாலும், அது தோற்றவர்களின் புலம்ப லாகவும், வரலாறு தெரியாதவர்களின் பிதற்ற லாகவுவும் நம் வாரிசுகளால் திரிக்கப்பட்டு விடும்... வீழ்ந்தவர்களின் வாரிசுகளும் உண்மை தெரியாமலே நம் விழாவைக் கொண்டாடு வார்கள்...”

........

ண்டிகை, கலாச்சார விழா என்று என்ன பெயரிட்டாலும் இப்படிப்பட்ட பின்னணி களும் இருக்கின்றன. எனினும், மனிதர்கள் கூறு போடப்பட்டதைக் கொண்டாடுகிற இதே விழாக்கள் இன்று மனிதர்களை இணைக்கிற வேலையையும் செய்கின்றன. கூறப்படும் கதைகளில் நம்பிக்கை உள்ளவர் கள் கொண்டாடுகிறார்கள். நம்பிக்கை இல் லாதவர்கள் பண்பாடு கருதி இந்தக் கொண் டாட்டங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார் கள். தீபாவளி பிடிக்காவிட்டாலும் தீபாவளி இனிப்புகளையும் பலகாரங்களையும் ஏன் மறுக்க வேண்டும்?

விழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப்பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவுகின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தக சுழற் சிக்கு வழி வகுத்து, பொருளாதாரத் தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன.

பகுத்தறிவாளர்கள் என்றால் இதிலேயெல் லாம் பட்டுக்கொள்ளாமல் பரிசுத்தம் பேணு கிறவர்கள் அல்ல. மக்களோடு சேர்ந்து நின்று, சக மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களாகி, உண்மை வரலாற்றையும் அழுத்தமாகக் கூறுகிற நுட்பம் கைவரப் பெற்றவர்களே முற்போக்காளர்கள்.

நண்பர் ஒருவர் விமர்சித்தார்: “இந்து மதத்தின் கதைகளைத்தான் உங்களைப் போன்ற வர்கள் தாக்குகிறீர்கள். மற்ற மதங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை... அச்சமும் அவர்களது வாக்கு வங்கியும்தானே காரணம்?”

வாக்கு வங்கிதான் நோக்கம் என்றால் பெரும் பான்மை மதத்தினரோடு சமரசம் செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனமான உத்தி யாக இருக்கும்? அதற்கு இடதுசாரிகளும் இதர முற்போக்காளர்களும் தயாராக இல்லை என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்வ தில்லை.
பிறந்து வளர்ந்த குடும்பச் சூழல் காரண மாக எந்த நம்பிக்கைகள் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்ததோ அந்த நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள் முற் போக்காளர்கள். இஸ்லாமிய மதமும், கிறிஸ்துவமும் பெரும்பான்மை மதங்களாக உள்ள நாடுகளின் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள பிற்போக்குத் தனங்களை எதிர்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் “நீங்கள் ஏன் இந்து மத நம்பிக்கைகளைச் சாடுவதில்லை,” என்று கேட்பதில் பொருளில்லை. அப்படித்தான் இங்கேயும்.

அதே வேளையில், சிறுபான்மை மத அமைப்புகளில் நடக்கிற மனித உரிமை மீறல் கள், சாதியப் பாகுபாடுகள், பெண்ணடி மைத்தனங்கள் போன்றவற்றை எதிர்த்து இங்குள்ள முற்போக்குச் சிந்தனையாளர்கள் குரல்கொடுக்கவே செய்கிறார்கள். அதற்காக அந்த சிறுபான்மை மதவாதிகளின் தாக்குதல் களுக்கும் உள்ளாகிறார்கள்.

............

காடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங் களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படு கிறது. தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களின் கனிம வளங்களைச் சூறையாடுவ தற்கும், நிலங்களை வளைப்பதற்கும் உள் நாட்டு - பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனமன்றி மண்ணில் வேறெதுவும் அறியாமல் வளர்ந்துவிட்ட, வனங்களின் பிள்ளைகளான பழங்குடியினருக்கு ஆசை காட்டப்படுகிறது. அதில் ஏமாறாதவர்களுக்கு அச்சம் ஊட்டப்படுகிறது. அதற்கும் பணியாவிட்டால் அடக்குமுறை ஏவப்படுகிறது. வன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவர் களது நிலங்களைச் சிக்கலில்லாமல் கார்ப் பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வ தற்கான சட்டத் திருத்தங்கள் மனசாட்சியின்றி நிறைவேற்றப்படுகின்றன. தேவைப்பட்டால் வனங்களுக்குள் காவல்படைகள் குண்டாந் தடிகளோடும் துப்பாக்கிகளோடும் அனுப்பப் படுகின்றன. அந்த மக்களுக்காக வாதாடுவோர் மீது தீவிரவாதி, பயங்கரவாதி என்றெல்லாம் அசுர முத்திரை குத்தப்படுகிறது. நவீன சக்ராயுதங்களால் “என்கவுன்டர்” நடத்தப்படுகிறது.

செய்தியோடு செய்தி என்று விட்டுவிட் டால் இந்த ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் இன் றைய கார்ப்பரேட் ஊடகங்களால் புதிய புரா ணங்களாக்கப்பட்டுவிடும். ஆயினும், அன் றைய நரகனுக்கு இல்லாமல் போன சில வாய்ப்பு கள் இன்றைய நரகன்களுங்ககு இருக்கின்றன: மக்களின் விழிப்புணர்வு, இடதுசாரி-முற் போக்கு இயக்கங்கள், அக்கறையுள்ள மக்கள் ஊடகங்கள்... ஆகியவையே அந்த வாய்ப்புகள்.

Friday 21 October 2011

ஒரு மோதல் பின்னணியில் உலகமய வேட்டை


ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டம் கோபால்கார் நகரில் சென்ற மாதம் 14ம் தேதி இரு பிரிவு மக்களிடையே மதக்கலவரம் மூண்டதாகவும், காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. தொடச்சியான பல நிகழ்வுகளில் அந்தச் செய்தி பலருக்கு மறந்திருக்கக்கூடும். அல்லது அந்த வட்டாரங்களில் வழக்கமாக நடைபெறுகிற மதக்கலவரங்களில் ஒன்று என்பதாக அது ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும்.

சிலர் அதனை, நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்த்திருக்கக்கூடிய நிகழ்வு என்பதாக மட்டும் சித்தரிக்க முயல்கிறார்கள். நிர்வாகக் கோளாறு இருந்ததென்னவோ உண்மை. ஆனால் அது பிரச்சனையைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட கோளாறு மட்டுமல்ல. பிரச்சனைக்கே அடிப்படையாக, மத்திய மாநில அரசுகளின் கொள்கை இதன் பின்னணியில் இருக்கிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் கவனித்தாக வேண்டிய பிரச்சனைகள் இவை.

மேலோட்டமாக வந்த செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றன: கோபால்கார் பகுதியில் உள்ள ஒரு சிறிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் குஜ்ஜார் மக்களுக்கும் மியோ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக மாறியது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மியோ சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
சுமார் 18 ஏக்கர் வரை இருக்கக்கூடிய குறிப்பிட்ட நிலப்பகுதியை இரு தரப்பு மக்களுமே தங்களது பொது இடமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆயினும் அண்மையில் நகர நிர்வாகம் அந்த இடத்தை மியோ சமூகத்தினருக்கே சொந்தமானது என்று அறிவித்தது. கல்லறைத் தோட்டமாக அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பொதுவாக இரு தரப்பு மக்களிடையே மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லி அழைக்கக்கூடிய அளவுக்கு சுமூகமான உறவு நிலவி வந்திருக்கிறது. ஆனால், இந்த இடம் மியோ மக்களுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, குறுகிய மதவாதக் கண்ணோட்டத்துடன் சிலர் குஜ்ஜார் மக்களிடையேயும் ஜாட் மக்களிடையேயும் மியோ மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கினர்.

ஊரில் ஒரு பதட்டநிலை உருவாவதை நகர நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவில்லை, மாநில அரசும் பொறுப்புடன் இப்பிரச்சனையைக் கையாளவில்லை. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது என்பதால், இப்படிப்பட்ட விவகாரங்களில் வழக்கம்போல் அரசியல் ஆதாய நோக்கத்துடன் அந்தக் கட்சியின் அரசு பிரச்சனையில் தலையிடத் தவறியதில் வியப்புமில்லை.

குறிப்பிட்ட நாளில் கோபால்கார் மசூதியில் மியோ மக்கள் குழுமியிருந்திருக்கிறார்கள். ஒரு பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்தான் அவர்கள் அங்கே கூடியிருப்பதாக ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டது. அதை நம்பி மசூதியைச் சுற்றி உள்ளூரையும் பக்கத்து கிராமங்களையும் சேர்ந்த குஜ்ஜார் மக்கள் வந்து குவிந்தார்கள். ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே பதட்ட நிலை இருந்து வரும் நிலையில், இப்படியொரு வதந்தி பரவியபோது நகர நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய கவனத்துடன் செயல்படவில்லை. திடீரென்று கல்வீச்சு, கைகலப்பு, காவல்துறை துப்பாக்கிச் சூடு... என அடுத்தடுத்த நிகழ்வுகள் செய்தியாகியுள்ளன.

செய்தியாகாத சில தகவல்களும் உண்டு. பியுசிஎல் அமைப்பு அனுப்பிய உண்மையறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்கள் அவை. குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஷாய்ல் மாயாராம் தி ஹிண்டு நாளேட்டின் அக்.20 இதழில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார். இறந்த 9 பேரும் மியோ மக்கள். அவர்களில் 3 பேர் உடலில் மட்டுமே தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. இதர 6 பேர் உடல்களிலும், காயமடைந்தோர் உடல்களிலும் கத்திக்குத்துக் காயங்களே இருந்தன. எனவே தாக்குதலுக்கான திட்டமிட்ட ஏற்பாடு எந்தப்பக்கத்தில் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

மேலும், காவல்துறையினர் முறைப்படி கண்ணீர்ப்புகை, தடியடி என்றெல்லாம் கையாண்டுவிட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கவில்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடுதான். காவல்துறையில் எந்த அளவுக்கு மதவாதம் ஊருவியிருக்கிறது என்பதையும், மாநில காங்கிரஸ் அரசால் திருத்த முடியவில்லை என்பதையுமே இது காட்டுகிறது.

செய்தியாக வராத, இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் ஒருபோதும் செய்தியாக்கத் துணியாத மற்றொரு பின்னணியும் இருக்கிறது. கோபால்கார் நகரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் குஜ்ஜார், ஜாட், அஹிர் என்ற இந்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் மியோ எனப்படும் இஸ்லாமிய மக்களும் நெடுங்காலமாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். மாமன் மச்சான் என்று அழைக்கிற அளவுக்கு நல்லுறவு உண்டு. அப்படி இருந்த இரு சமூகங்களிடையே இப்போது கடுமையான கசப்பும், சந்தேகமும் வளர்ந்திருப்பதற்கு அடிப்படையான ஒரு பின்னணி அது.

நிலம்! மனை! பட்டா உரிமை! - இந்த மூன்றோடும் தொடர்புள்ள பிரச்சனை அது. இன்று அனைத்து மாநிலங்களிலும் நிலத்திற்கான தேவை, அதை வளைப்பதற்கான வெறித்தனமான முயற்சிகள், அதற்காக மீறப்படும் சட்டங்கள், அதிலே புகுந்துவிளையாடும் லஞ்ச லாவண்யங்கள், அதற்கு அசராதவர்கள் மீது ஏவப்படும் மிரட்டல்கள், அதற்கும் பின்வாங்காதவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொலைவெறித் தாக்குதல்கள்...

இத்தனையும் எதற்காக என்றால், நிலங்களை வளைத்துப்போட அலையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக! அவர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக! உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகளின் நவீன வர்த்தக வளாகங்களுக்காக!

இதற்காக விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும், குடியிருப்பு நிலங்களும் வளைக்கப்படுகின்றன. இது மனை வர்த்தகத்தைப் கோடிக்கணக்கில் பெரும் பணம் புழங்குகிற, ஈவிரக்கமற்ற முறையில் மனித உரிமைகள் மீறப்படுகிற தொழிலாக்கியுள்ளது. மெகாசிட்டி, குளோபல் சிட்டி என்ற பெயர்களில் உருவாகிற புதிய நகர்ப்பகுதிகளின் அடிவாரமாக உள்ளூர் மக்களின் தேவைகளைக் காலில் போட்டு நசுக்குகிற உலகமய - தாராளமய வேட்டைகள் இருக்கின்றன. கத்தியின்றி ரத்தமின்றி நடக்கிற நவீன காலனியாதிக்கம் இருக்கிறது. தமிழகத்தில் எந்த அளவுக்கு மனை விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் பின்னணியில் எப்பேற்பட்ட அதிகார சக்திகள் இருந்தன - இருக்கின்றன, இதற்காக எப்படி எளிய மக்களின் கனவுகள் புதைகுழிக்கு அனுப்பப்படுகின்றன, சில நேரங்களில் இதற்கு உடன்படாதவர்களே புதைகுழிக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதெல்லாம் அண்மைக்கால அனுபவங்கள் அல்லவா...

இதே போன்ற சூழலில்தான் கோபால்கார் பகுதியிலும் நில ஆக்கிரமிப்புகள் அரங்கேறி வருகின்றன. துண்டு துக்காணி நிலங்களுக்கும் கோடிக்கணக்கில் விலை பேசப்படுகிறது. இருக்கிற நிலத்தையாவது பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு எளிய மக்கள் தள்ளப்படுகிறார்கள். உருவாகும் எந்தவொரு பதட்ட நிலையையும் தங்களுடைய பகைமை நோக்கங்களுக்காகத் தடம் மாற்றிவிடும் மதவெறிக்கும்பல்கள் உற்சாகமடைகின்றன. உலகமயம் என்ற சொல் நாகரிகமானதாகத் தெரிகிறது. அது எவ்வளவு அநாகரிகமாக மக்கள் உயிரோடு விளையாடுகிறது...

  • (தீக்கதிர் நாளேடு 2110.2011 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

Sunday 2 October 2011

காந்தியின் கைத்தடியும் உள்ளாட்சி அரசாங்கமும்



காந்தியால் மட்டும் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை; ஆனால் காந்தி இல்லாமல் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் நாட்டின் நாட்குறிப்பேட்டைத் திரும்பவும் படித்துப் பார்த்தால் இது புரியும்,

விடுதலைப் போராட்டத்தின்போது தலையெடுத்திருந்த இந்திய முதலாளி வர்க்கம், அதன் ரத்த உறவாக நீடித்த நிலப்பிரபுத்துவம் இரண்டின் அரசியல் அடையாள முகமாகத் திகழ்ந்தார் என்றாலும், காந்தியால் பல்வேறு வேலிகள் தாண்டி இந்திய மக்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வலிமை வாய்ந்த சக்தியாகத் திரட்ட முடிந்தது. ஆகவேதான் வர்க்கப்போராட்டம், சமுதாய சமத்துவம் என்ற இலக்குகளோடு புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளும் காந்தியை மதித்தார்கள். இந்தியாவின் தனி இழிவாகிய சாதியக் கட்டமைப்பை உடைக்கப் போராடியவர்களும், வர்ணாஸ்ரமம் நல்ல வேலைப்பிரிவினை என்பதாக ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்த காந்தியோடு கடுமையாக முரண்பட்டாலும் அவரை மதித்தார்கள்.

சாதியக் கட்டமைப்பு பற்றிப் பேசுகிறபோது இயல்பாகவே நாட்டின் கிராமங்கள் பற்றிய எண்ணம் வருகிறது. நமது நகரங்களும் சாதிய நரகத்திலிருந்து விடுபடாமலே இருக்கின்றன என்ற போதிலும் நுட்பமான முறையில் சாதியப் பாகுபாடுகளைப் பேணி வளர்க்கிற நேரடியான சாதிய ஆதிக்கம், வெறி, பாகுபாடு, வன்மம், தீண்டாமை... இவற்றின் கொட்டம் மிகப் பெரும் அளவுக்கு அடங்காமல் இருப்பது கிராமங்களில்தான். கீழவெண்மணித் தீ நாக்குகள் பசியோடு நீண்டு பரவித் தீண்டிக்கொண்டிருப்பதை இப்போதுதான் பரமக்குடியில் பார்த்தோம்.
இப்பகுதிகளில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்வது பற்றிக் கருத்துக்கூறிய மார்க்சிஸ்ட் கட்சி, இங்கெல்லாம் தொழில்வளர்ச்சியும் பொருளாதார வாழ்க்கை மேம்பாடும் மேற்கொள்ளப்படாமல் போனதுதான் தொடரும் சாதிய வன்முறைகளுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமைத் தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் அளித்த அறிக்கைகளிலும் இந்த உண்மை எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா தனது கிராமங்களில் வாழ்கிறது, என்றார் காந்தி. அதை அவர் வெறும் மேற்கோளாகச் சொல்லவில்லை. கிராம மக்களுக்கு ஒரு சுயமான பொருளாதார பலம், ஆளுமை இருக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அவருடைய கிராமராஜ்யம் என்ற கனவாக விரிந்தது. அந்தக் கனவை நிறைவேற்றுகிற எண்ணத்தோடுதான் அவர் கதர்த்துணி உள்ளிட்ட கிராமத் தொழில்கள் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இயக்கமாகவே மேற்கொண்டார்.

ஒருவகையில் அவரது இந்த கிராமத் தொழில் சார்ந்த ஈடுபாடு என்பது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்ட இயக்கத்தின் ஒரு அடையாளமாகவும் ஒரு வெளிப்பாடாகவும் இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனியின் வருகையில் தொடங்கி பின்னர், அதிகார பலத்தோடு வந்து ஆக்கிரமித்துக்கொண்ட பிரிட்டிஷ் நிறுவனங்களால் இந்தியாவின் பாரம்பரியக் கைத்தொழில்கள் விழுங்கப்பட்டிருந்தன. அவற்றை ஒரு இயக்கமாகவே மீட்பது என்பது அந்நிய ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் அமைந்தது. ஆகவேதான் அன்று விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களுக்கு கதராடை ஒரு தேசிய அடையாளமானது. பின்னர், அது காங்கிரஸ்காரர்களின் உட்பூசல் சண்டைகளின் கிழிபடுகிற, விலையுயர்ந்த துணியாக மாறிப்போனது வேறு சோகம்.

இப்போதும் இந்திய மக்களில் 65 விழுக்காட்டினர் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள் (வாழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லைதான்). பொதுவாக கிராம மக்களின் எளிமை, வெகுளித்தனம் போன்றவை ரசணைக்குரியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கிராமம் என்றால் அழகான வயல்கள், நீரோடும் கால்வாய்கள், அதில் விளையாடும் இளசுகள் என்றுதான் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அந்த அழகிய கிராமங்களுக்கு வெளியே வயல்களின் வரப்புகள் இருப்பது போல, உள்ளே சாதி வரப்புகள் இருக்கின்றன. வயல்வரப்புகளையாவது தாண்டிக் கடக்க முடியும். சாதி வரப்புகளையோ தாண்டவும் முடியவில்லை, உடைக்கவும் முடியவில்லை.

இந்த நிலையை மாற்றுவதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது கிராம மக்களின் சுய பொருளாதார பலம், அரசியல் பலம் இரண்டும்தான். பொருளாதார பலத்தைப் பொருத்தவரையில் இந்திய சுதந்திரத்தின் 64 ஆண்டுகால - குறிப்பாக கடந்த 20 ஆண்டுகால - சாதனை என்ன என்பதை, அண்மை ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தி உரக்கச் சொல்லுகிறது. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் என்ற பெயருடன் மகாத்மா காந்தி என்ற சொற்களைச் சேர்த்ததுடன் கிராமங்களின் முகம் மலர்ந்துவிட்டதாய் கணக்கை முடிக்கப்பார்க்கிறது அரசு.

கிராமமக்களின் அரசியல் உறுதியை வளர்ப்பதற்கான ஒரு அடிப்படையான ஜனநாயக ஏற்பாடுதான் உள்ளாட்சி அமைப்புகள். கிராமப் பஞ்சாயத்துகளின் சொந்த வலிமையை காந்தி மிகவும் வலியுறுத்தினார்.

பஞ்சம் என்றால் ஐந்து; ஆயத்து என்றால் சபை. ஊரில் மரியாதைக்குரிய ஐந்து பேர் பொறுப்பேற்கிற, கிராம நிர்வாக சபை என்பதுதான் பஞ்சாயத்து என்ற சொல்லின் பொருளாம்.

ஒருகாலத்தில், மரியாதைக்குரிய அந்த ஐந்து பேர் என்பவர்கள் கிராமத்தில் பெரிய மனிதர்களாக - அதாவது பெரும் பண்ணையார்களாக இருந்திருப்பார்கள். குடவோலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த ஜனநாயகம் நம் கிராமங்களில் இருந்ததாகப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளப்படுவது உண்டு. ஆனால், மன்னர்களால் விரல்காட்டப்படுகிற இரண்டு மூன்று பெரிய மனிதர்களில் ஒருவரைத்தான் இம்முறையில் தேர்ந்தெடுக்க முடியும். அதுவும் கிராம மக்கள் எல்லோரும் குடத்திற்குள் தங்களது ஆதரவு யாருக்கு என்று தெரிவிக்கும் ஓலைகளைப் போட்டுவிட முடியாது. மேட்டுக்குடி சாதிகளைச் சேர்ந்தவர்கள், சொந்தமாக நிலபுலம் வைத்திருந்தவர்கள் மட்டுமே அந்த வாக்குப் பதிவில் பங்கேற்க முடியும். அவர்களிலும் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

நெடும் போராட்டத்தின் பலனாக சுதந்திர இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களும் விதிகளும் அரசமைப்பு சாசனத்திலேயே இடம்பெற்றன. தற்போது சில குறைபாடுகள் இருக்கின்றன என்ற போதிலும் தற்போதுள்ள சட்டங்களைப் பாதுகாத்துக்கொண்டே, குறைபாடுகளை நீக்க வேண்டியிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம், செயல் அதிகாரம் உள்ளிட்டவற்றை கம்யூனிஸ்ட்டுகளும் சில பொது அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. உள்ளாட்சிகள் மாவட்ட நிர்வாகங்களைச் சார்ந்திருக்கிற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும். ஒரு உள்ளாட்சி அமைப்பு கிராம அரசாங்கம் என்பதாக மதிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக பெண்களின் குரல் இந்த உள்ளாட்சிகளில் ஓங்கி ஒலிப்பது அவசியம். நடைமுறையில் பெண்கள் தங்களுடைய கணவன்மார்கள் உள்ளிட்ட ஆண்களின் கைப்பாவைகளாகவே செயல்படுவார்கள் என்று பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் சொன்னதுண்டு. தொடக்கத்தின் அத்தகைய நிலை இருந்தது என்றாலும், கடந்த ஆண்டுகளில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, பெண்கள் கூட்டாகச் செயல்படுவதும் சுயபலத்தோடு தீர்மானங்களை மேற்கொள்வதும் பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று ஊரக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வரவேற்கத்தக்க வளர்ச்சி.
இன்னொரு பக்கத்தில், இடஒதுக்கீடு அடிப்படையி தேர்ந்தெடுக்கப்படுகிற தலித் தலைவர்களை, கூடியவரையில் ஒதுக்கி வைக்கிற ஆதிக்கப் போக்கு பெருமளவிற்கு மாறவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உள்ளாட்சிகளை முழு ஜனநாயக உரிமைகளோடு பாதுகாத்துக்கொண்டே, வேறு பல தளங்களிலும் தொடர்ச்சியான, போராட்ட இயக்கங்களை மேற்கொள்வதுதான் இத்தகைய பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும்.

உறுப்பினர் முதல் தலைவர் பொறுப்பு வரையில் ஏலம் விடப்படுகிற, ஊராட்சி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. தமிழக மக்கள் தற்போது சந்திக்கிற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்தச் செய்திகள் அடிபட்டன, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்ட செய்திகளும் வந்துள்ளன. அரசியல் இயக்கங்களும் மக்களும் விழிப்புடன் இருந்து முறியடித்தாக வேண்டிய போக்கு இது.

காந்தி சிலைகளின் ஆடையில்லா மேனியை பூ மாலைகளால் மூடுவது, ராட்டை சுற்றுவது, ரகுபதி ராகவ ராஜாராம் பாடுவது... இவை மட்டுமே அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகிவிடாது. மக்களுக்காக உண்மையாகப் போராடுகிறவர்களை, மக்கள் சேவையே தங்களது பொது வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்களை உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அதன் மூலம் உள்ளாட்சிகள் ஊழலற்ற, முடக்கமற்ற முழு முழுமையான கிராம அரசாங்கங்களாகத் திகழ முடியும். அவ்வாறு திகழச் செய்வதுதான் காந்தியின் கைத்தடியை சரியாகப் பற்றிக்கொண்டதற்கு அடையாளமாகும்.