Wednesday 4 June 2014

கம்யூனிஸ்ட்டுகளின் உயிர்த்துடிப்பு

(‘அந்திமழை’ கட்டுரை)
வரலாற்றில் தேர்தல் ஒரு முக்கிய அத்தியாயம்தான் என்றாலும் தேர்தல் மட்டுமே வரலாறாகிவிடாது. கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்கான புரட்சிப் பயணத்தில் தேர்தல்கள் ஒரு இடைக்கட்டப் பாதை மட்டுமே. அந்தப் புரிதல் இருப்பதால்தான் இந்தியாவின் 16வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், ஏற்பதற்குக் கடினமான பல முடிவுகள் வந்துள்ள போதிலும், மற்ற கட்சிகளில் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகல் கடிதங்கள் கொடுக்கப்படுவது, அக்கடிதங்கள் நிராகரிக்கப்படுவது போன்ற காட்சிகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறபோது, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே நிகழ்ச்சி நிரலில் இருந்த அடுத்தடுத்த மாநாடுகள், பரப்புரை இயக்கங்கள், போராட்டங்கள் குறித்து இயல்பாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதன் பொருள் தேர்தல் முடிவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதல்ல. மக்களவைத் தேர்தலில் அவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை மக்களின் முன்வைத்தார்கள். ஒன்று - காங்கிரஸ் அரசை அகற்றுவது, இரண்டு - பாஜக ஆட்சிக்கு வராமல் தடுப்பது, மூன்று - இரண்டும் அல்லாத ஒரு மாற்று அரசை ஏற்படுத்துவது.
வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் முதல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட நாடு முழுதும் ஒரே மாதிரியாக காங்கிரசை நிராகரித்துள்ளனர். ஆனால், பாஜக-வைத் தடுப்பதற்கு மாறாக, தனிப்பெரும்பான்மையோடு அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பளித்துள்ளனர்.
மூன்றாவது கோரிக்கையைப் பொறுத்தவரையில் நம்பகமான ஒரு மாற்று சக்தி பற்றிய நம்பிக்கை மக்களுக்குக் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. இதை, அப்படியொரு மாற்று அணி உருவாக வேண்டும் என முயற்சி செய்த இடதுசாரிகளின் தோல்வியாக மட்டும் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. அந்த மாற்று பற்றிய நம்பிக்கை மலரவிடாமல் தடுத்த, கொள்கைத் தெளிவற்ற சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், உள்நோக்கத்துடன் இடதுசாரிகளுடனான உறவை முறித்துக்கொண்ட அஇஅதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் அல்லவா விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்?
குளத்தில் கல்லைப்போட்டது போல் செயற்கையாகக் கிளப்பிவிடப்பட்ட அலையில் இடதுசாரி கட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை இரு சாரார் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற “கார்ப்பரேட்” சக்திகள். பங்குச் சந்தை சூதாட்டப்புள்ளிகள் உச்சத்திற்கு ஏறியது என்பது அந்தக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடுதான். மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரங்களிலும் கார்ப்பரேட் உலகத்தினர் இப்படி பங்குச் சந்தை வாண வேடிக்கைகள் மூலமாகத்தான் வரவேற்றார்கள். அவர்கள் புகுந்து விளையாடுவதற்கான களத்தை உருவாக்கித் தருவது என்ற தனது அவதார நோக்கத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிவிட்டது.
இனி, அதே பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே நகலெடுத்துத் தொடரப்போகிற, கூட்டணி நிர்ப்பந்தங்கள் இல்லாமல் கறாராகச் செயல்டுவார் என்ற வாய்ப்புள்ள நரேந்திர மோடி அரசு தனக்கான அவதார நோக்கத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அதாவது, கார்ப்பரேட் கொள்ளைகளுக்கான அதே பொருளாதாரக் கொள்கைகள் தொடர்கிறபோது அதே விலைவாசி, வேலையின்மை, வாழ்க்கை நெருக்கடி உள்ளிட்ட சுமைகளும் மக்கள் மீது தொடர்ந்து ஏற்றப்படும். அப்போது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்தையும் ஆவேசத்தையும் திசைதிருப்புவதே மோடிக்கான அவதார நோக்கம். குஜராத்தை அதற்கான உரைகல்லாக்கிக் காட்டியதால் ஆர்எஸ்எஸ் ஆசிர்வாதம் பெற்றவர் அவர்.
முன்னெப்போதையும் விட இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பும் தேவையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு பக்கம் அரசாங்க ஆதரவோடு இறுகும் நவீன சுரண்டல்களுக்கு எதிரான போராட்டம். இன்னொரு பக்கம் மதவாதம் உசுப்பிவிடப்பட்டு மக்கள் கூறுபடக்கூடும், அப்பட்டமான ஒரு வலதுசாரி ஆட்சியின் பிடியில் மதச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்ட மாண்புகளும் நியாயங்களும் நொறுக்கப்படக்கூடும் என்ற நிலைமைக்கு எதிரான போராட்டம். இந்த முழக்கங்களை முன்வைத்த பல கட்சிகள் இன்று தனிமனித ஆராதனை, தனிக்குடும்ப ஆளுமை, ஊறித்திளைத்த ஊழல் என்றெல்லாம் தடம் மாறிவிட்டன. ஆகவே, வரலாறு கம்யூனிஸ்ட்டுகளைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறது.
கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தத் தேர்தலில் 12 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன என்பது கவலைக்குரியதுதான் என்றாலும் முடங்கிப்போவதற்கானதல்ல - அது தற்போதைய தனிப் பெரும்பான்மை சார்ந்த தேர்தல் முறையின் குறைபாட்டோடு தொடர்புடையது. கம்யூனிஸ்ட்டுகள் முடங்கிப்போக மறுக்கிறவர்கள். இன்று தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுபவிக்கிற பல உரிமைகளை கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் கற்பனை செய்துபார்க்க முடியாது. பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, தகவல் உரிமை, கல்வி உரிமை, குடும்ப வன்முறை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஓரளவுக்கேனும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு இல்லாமல் வந்துவிடவில்லை.
அத்தகைய முன்னேற்றங்கள் முடங்கிவிடாமல் பாதுகாக்கிற, மேலும் மேலும் அவற்றை முழுமைப்படுத்துகிற அடுத்தகட்ட போராட்டங்கள் காத்திருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளின் உயிர்த்துடிப்பே போராட்டங்கள்தானே!
(‘அந்திமழை’ ஜூன் 2014 இதழில் வந்துள்ள எனது கட்டுரை.)

Monday 24 March 2014

முழு விடுதலைக்கான முதற்பெரும் சுதந்திரம்

னியொரு பிறவியே இல்லாமல் பரம்பொருளோடு ஐக்கியமாவதுதான் முழு விடுதலை என்று ஆன்மிகத் தத்துவங்கள் கற்பிக்கின்றன. இருப்பது ஒரு பிறவிதான் என்பதே உண்மை. அந்த ஒரு பிறவியில் சந்திக்கும் சவால்களும் சோதனைகளும் ஏற்ற இறக்கங்களும்தான் இயற்கைக்கு அப்பாற்பட்டதொரு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியோடு ஐக்கியமாகிவிட்டால் பிறவிப் பெருங்கடல் என்ற துயரத்திலிருந்து விடுபட்டிருக்கலாம் என்ற புலம்ப வைக்கின்றன. சுதந்திரமான வாழ்க்கைக்கான வேட்கையை வற்றிப்போக வைக்கிற, சுயநலமிக்க, ஈவிரக்கமற்ற சுரண்டல் சமுதாய அமைப்புதான் இத்தகைய புலம்பல் தத்துவத்தைப் பரப்பச் செய்கிறது. கண்முன் இருக்கிற இந்த உலகில், சமத்துவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் நடக்கிற போராட்டங்களில் ஐக்கியமாவதே உண்மையான விடுதலையை நோக்கிய பயணம். ஆம், சமத்துவமும் சுதந்திரமும் பிரித்துப் பார்க்க முடியாதவை. சமத்துவம் இல்லாத சுதந்திரம் போலித்தனமானது, சுதந்திரம் இல்லாத சமத்துவம் காலித்தனமானது.

மானுட விடுதலையில் அடிப்படையானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்தான். உலகச் சமுதாயத்தில் இன்று நாம் காண்கிற அத்தனை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளும், பூமியில் மனிதர்கள் பரிணமித்த ஆதி நாளிலிருந்து நேற்று வரையில் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்கிற கருத்துவெளிப்பாட்டிலிருந்தே நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. மானுடம் கனவு காண்கிற காதலும் கலையுமே ஆளுமை செலுத்துகிற முழுமையான ஜனநாயகமும் சமத்துவமும் நிலைநாட்டப்படுவதற்கு ஒரு அடிப்படைத் தேவையாக இருப்பதும் அதே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்தான். சுதந்திரத்திற்குப் பகையான எல்லா வகை ஒடுக்குமுறைகளிலும் மிகக் கொடூரமானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறைதான். ஒருவர் தன் மனதில் நினைப்பதை, கற்பனை செய்வதை, உண்மையெனக் கருதுவதை சக மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள முடியாது என்பதை விடவும் மூர்க்கத்தனமான வேறொரு ஒடுக்குமுறை இருந்துவிட முடியாது.

சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சகட்ட நாகரிகம் என்று சொல்லப்படுகிற முதலாளித்துவம் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் முதலாளித்துவம் நிலைப்படுத்துவது கட்டற்ற வர்த்தகச் சுதந்திரத்தையும், வரம்பற்ற சந்தைச் சுதந்திரத்தையும்தானேயன்றி உண்மையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையல்ல. அந்த வர்த்தக - சந்தைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தேவையான அளவுக்கு மற்ற சுதந்திரங்களும் (பண்பாட்டுச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், தேர்வுச் சுதந்திரம், கலை - இலக்கியச் சுதந்திரம் இன்ன பிற) அனுமதிக்கப்படும். மேற்படி சுதந்திரத்திற்குச் சிக்கல் வருகிறதென்றால் மற்ற மற்ற சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்படும், தேவைப்பட்டால் ஒடுக்கப்படும்.

வர்த்தகச் சுதந்திரமும், சந்தைச் சுதந்திரமும் கூட மேற்பூச்சுதான். அடியில் இருப்பது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்கிற, சந்தையுலக ஆதிக்கக் கும்பல்களின் சுதந்திரம்தான். இன்றைய சொற்களில் சொல்வதென்றால், உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் தாதாக்களின் சுதந்திரம்தான். சின்ன மீனைப் பார்த்து பெரிய மீன், “நாம் இரண்டு பேரும் ஒருவரையொருவர் விழுங்குவதற்குச் சுதந்திரம் இருக்கிறது, நீ சுதந்திரமாக என்னை விழுங்கலாம், முடிந்தால் நானும் உன்னை விழுங்கலாம்...” என்று செய்துகொள்கிற ஏற்பாடுதான் சந்தைச் சுதந்திரம்.

உலகளாவிய சுரண்டல் ஆதிக்கத்திற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளில் ஒன்றுதான் கட்டுப்பாடு, ஒழுங்கு, பொது அமைதி என்பதான பல காரணங்களைக் கூறி விதிக்கப்படுகிற தணிக்கை. பத்திரிகைகள், நாடகங்கள், கவிதைகள், கதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், இணையப் பதிவுகள் என என்னென்ன கருத்து வெளிப்பாட்டு வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் தண்டல் சாவடி (டோல் கேட்) போல தணிக்கை விதிகள் திணிக்கப்படுகின்றன.

“(தணிக்கை) குடிமக்களின் மிக உயர்ந்த நலன் மீது, அவர்களது மனங்களின் மீது சட்டாம்பிள்ளைத்தனம் செலுத்துகிறது. இயற்கையின் அழகான பன்முகத்தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே...” என்று எழுதினார் கார்ல் மார்க்ஸ். பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து மார்க்ஸ் எழுதிய இந்த வரிகள், அனைத்து வகையான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரங்களுக்கும் பொருந்தும்.

நாடுகளின் அரசுகள், நாடுகளுக்குள் இருக்கக்கூடிய மாநிலங்களின் அரசாங்கங்கள் மட்டுமல்ல, மத பீடங்கள், சாதிக் கூடங்கள், கருத்துச் சுதந்திரத்தைக் கற்பிக்க வேண்டிய கல்விச் சாலைகளின் நிர்வாகங்கள்... என எல்லா அதிகார அமைப்புகளும் இந்தக் கங்காணி வேலையைச் செய்கின்றன. சில நேரங்களில் அரசாங்கம் தானாகவே தனது பிரம்பைச் சுழற்றுகிறது; சில நேரங்களில் மேற்படி இதர அமைப்புகள் நேரடியாகக் கெடுபிடி செய்கின்றன; சில நேரங்களில் அந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் அந்த அமைப்புகளுக்குக் கட்டுப்பட்டு தடையாணைகளோடு தாண்டவமாடுகிறது. இதில், ஒரு முறை ஒரு அமைப்பின் கெடுபிடிக்குப் பணிந்து ஒரு நடவடிக்கை எடுத்துவிட்டால், அடுத்த முறை இன்னொரு அமைப்பின் கெடுபிடிக்குப் பணிந்து இன்னொரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறாக “ஜனநாயகம்” பாதுகாக்கப்படுகிறதாம்!

சென்னையைச் சேர்ந்த எவாம் என்ற கலைக்குழுவினர் தயாரித்த ‘அலி ஜே’ என்ற நாடகத்தை சென்னையில் மேடையேற்றத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வலிகளையும், 2002ல் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தின்போது அனைத்து சமூக மக்களும் ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்த குஜராத்தில் சில மாதங்களிலேயே மத வன்முறை கிளப்பிவிடப்பட்டதால் விளைந்த வேதனைகளையும் சொல்வதன் மூலம், மத வேலிகளைத் தாண்டிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது என்று கூறப்படுகிற, ஒரு மர்மக்கதை வடிவ நாடகம் அது. குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே வரக்கூடிய அலையன்ஸ் பிரான்ஸ் (பிரான்ஸ் நட்புறவு மன்றம்) அரங்கில் மார்ச் 9 அன்று நடைபெற இருந்த அந்த சிறு நாடகத்தில், “தேச விரோதக் கருத்துகள்” சொல்லப்படுவதாக ஹிந்து ஜனஜாகிருதி சமிதி, இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக” எனக்கூறி அந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என சென்னை காவல்துறை ஆணையிட்டிருக்கிறது. “தேச பக்தியில் நாங்கள் யாரையும் விட குறைந்தவர்கள் அல்ல, யாரோ எழுதியதை வைத்து நாடகம் பற்றி முடிவு செய்யாதீர்கள், நீங்களே வந்து நாடகத்தைப் பார்த்து உண்மையிலேயே இது யாரையாவது புண்படுத்துகிறதா என்று முடிவு செய்யுங்கள்,” என்று நாடகத்தின் இயக்குநர் கார்த்திக் குமார் கேட்டுக்கொண்டது யார் காதிலும் விழவில்லை. எடின்பர்க் நாடக விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஏற்கெனவே மும்பையில் தடைசெய்யப்பட்ட அந்த நாடகம் உண்மையிலேயே எப்படிப்பட்டது என்று யாருமே நேரில் முடிவுக்கு வர இயலாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தத்துவ ஆராய்ச்சியாளர் வெண்டி டோனிகர் எழுதிய “தி ஹிண்டுஸ் - அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ (இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு) என்ற, வரலாற்றில் இந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்கிற புத்தகத்தை எதிர்த்து, ஷிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற இந்து மதவாத அமைப்பு நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் தனது தீர்ப்பைச் சொல்வதற்கு முன்பே, உலகின் புத்தகச் சந்தையில் பெரியதொரு நிறுவனமான பெங்குயின், நீதிமன்றத்திற்கு வெளியே மேற்படி அமைப்போடு உடன்பாடு செய்துகொண்டது. புத்தகத்தை விலக்கிக்கொள்வதாகவும், அதை அரைத்துக் காகிதக் கூழாக்கிவிடுவதாகவும் அறிவித்தது. அந்தப் புத்தகம் எப்படிப்பட்டது, டோனிகர் என்ன சொல்கிறார் என்று யாரும் தெரிந்துகொள்ள முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட மதம் குறித்த விமரிசனங்கள் தேச விரோதமானவை என்றால், அந்த மதம் சார்ந்த கருத்துகள் மட்டுமே தேசிய உணர்வு என்ற கருத்தாக்கம் புகுத்தப்படுவதும் நுட்பமாக நிகழ்கிறது.

இப்படிப்பட்ட தடைகளின் மூலம் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மட்டுமல்லாமல், மற்றவர்கள் அந்தக் கருத்தை அறிந்துகொள்ளும் சுதந்திரத்தையும் பறிக்கிற வேலையை குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த அமைப்புகள் மட்டும்தான் செய்கின்றன என்று சொல்வதற்கில்லை. அறிவார்ந்த விவாதங்களின் ஆரோக்கியமான களமாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில், சென்ற ஆண்டு, அமினா வாதூத் என்ற அமெரிக்க கறுப்பினத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் பேராசிரியர், உரையாற்றுவதாக இருந்தது. பெண்களுக்காகத் தனி தொழுகைக் கூட்டங்களை நடத்துகிற, மத நம்பிக்கை உள்ளவர்தான் அவர். சென்னையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு அவரது உரையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்தது. “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக” காவல்துறை தலையிட, பல்கலைக்கழக நிர்வாகம், அந்த உரையரங்க நிகழ்ச்சியை விலக்கிக்கொண்டது.

அவர்களுக்கு மட்டும் சலுகையா என்று கேட்டுவிடுவார்களே என்று எண்ணியோ என்னவோ, அண்மையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை பாடத்திட்டத்திலிருந்து, தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனின் இரண்டு சிறுகதைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பின்னணியில்,. அது தலித் மக்களைத் தாழ்வு படுத்துகிறது என்று, சிலர் தெரிவித்த  எதிர்ப்பு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் சாதிய எதிர்ப்புணர்வையும், கதை எழுதப்பட்ட காலத்தின் சூழலையும் வரலாற்றுப் பூர்வமாகவோ, இலக்கிய அடிப்படையிலோ புரிந்துகொள்ளாத, மக்கள் போராட்டங்களை குறுகிய அடையாள அரசியல் மூலம் திசை திருப்ப முயல்கிற அந்தச் சிலரது நிர்ப்பந்தத்திற்கு, பாரம்பரியமுள்ள ஒரு பல்கலைக்கழகம் பணிந்தது எவ்வளவு சோகம்!

‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு பகுதியினர் வலியுறுத்தியது (அந்தத் திரைப்படம் எப்படி  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கத்திற்கும் உள்நாட்டு இந்துத்துவவாதிகளின் நோக்கத்திற்கும் சேவைசெய்வதாக அமைந்தது என்பதை கடுமையாக விமரிசித்திருக்கிறோம் என்பது வேறு விசயம்), ‘மதுரை வீரன்’ புத்தக வெளியீடு - மாநாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை, ‘மள்ளர் வரலாறு’ புத்தகம் வெளிவர இயலாமல் தடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தமிழகத்திலேயே அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாடு முழுவதும், உலக அளவிலும் கணக்கெடுத்தால், எப்படியெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான வன்மத் தாக்குதல்கள் கோர நடனமாடிக்கொண்டிருக்கின்றன என்பது நவீன காலத்தில்தான் நாம் வாழ்கிறோமா என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது. ஒரு கலையாக்கம் அல்லது புத்தகம் தங்களைத் தாக்குவதாக இருக்கிறது என்று சிலர் கருதுவார்களானால், அதை வெளிப்படையாக விமரிசிப்பதும், மற்றவர்கள் ஒப்பிட்டுப் பார்த்து நியாயத்தை ஏற்கச் செய்வதும்தான் வழி. அந்தப் படைப்பு மக்களைச் சென்றடையவிடாமல் தடுப்பதல்ல. இவ்வாறு தடுப்பது இறுதியில் தங்களுக்கே எதிரானதாக மாறிப்போகும் என்பதைத் தடுக்கிறவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

இந்தியச் சூழலில், இப்படிப்பட்ட ‘தடை’ கோரும் சக்திகளுக்குக் கோட்பாட்டு அடிப்படையிலேயே சாதகமான மதவெறி அரசியல் கும்பல்கள் மறுபடி தேசிய ஆட்சியதிகாரத்துக்கு வந்தால் என்ன ஆகும்? மானுட விடுதலையின் முழு அர்த்தமாகிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் நிலைபெற வேண்டுமானால், அந்தக் கும்பல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும் - மக்களின் அரசியல் தெளிவால்.

(‘தீக்கதிர்’ 23-4-2014 ஞாயிறு ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)

Tuesday 14 January 2014

இயற்கையோடு இணையும் வாழ்க்கையும் செயற்கையாய் சுரண்டும் வேட்கையும்

(பொங்கல் கொண்டாட்ட சிந்தனைகள்)

கூடி உழைத்து நாடி வாழும் சமுதாயத்தின் முக்கியமான அடையாளம் கொண்டாட்டம். தாயும் தந்தையும் தம் குழந்தையுடன் விளையாகிறபோது வேண்டுமென்றே தோற்றுப்போவார்கள். குழந்தையின் வெற்றிக் களிப்பைக் கண்டு மகிழ்வார்கள். இருள், வெயில், மழை, வறட்சி, தனிமை என வாழ்க்கைப் போராட்டத்தின் ஒவ்வொரு சவாலையும் மனிதர்கள் வெற்றிகொள்கிறபோது இயற்கை அப்படித்தான் மகிழ்கிறது. மனிதர்கள் களிப்போடு கொண்டாடுகிறார்கள். இப்படியாகத் தொடங்கிய கொண்டாட்டங்கள், பின்னர் மனிதரை மனிதர் வீழ்த்தியதையும் ஒடுக்கியதையும் அடிமைப்படுத்தியதையும் ஆதிக்க வெறியோடு கொண்டாடுவதாகவும் மாறின. முன்னதில் இருப்பது இயற்கையோடு இணைந்து நடைபோடுகிற வாழ்க்கை. பின்னதில் இருப்பது இயற்கையைச் சுரண்டுகிற வேட்கை.

இயற்கையோடு இணக்கமாக வாழ்வதன் கொண்டாட்ட வடிவமே பொங்கல். யோசித்துப் பார்த்தால், பல்வேறு கோணங்களிலும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக் கொண்டாட்டம் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முதல் நாள் போகி. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற இயற்கையின் சட்டத்திற்குக் கொண்டாட்ட வடிவம் கொடுத்திருக்கிற நாள் இது. சருகுகள் உதிர்வதும், துளிர்கள் உதிப்பதும் இயற்கையின் முக்கியமான செயல்பாடு. பழையன கழியாமலே இருந்திருக்குமானால் புதிய மாற்றங்கள் எதுவுமே நிகழாமல் போயிருக்கும். பழையவை நகராமல் நின்றிருக்குமானால் புதியவை நுழையவே இடம் கிடைத்திருக்காது. முதிர்ந்தவர்கள் இறப்பதையும் குழந்தைகள் பிறப்பதையும் கூட அப்படிச் சொல்லலாம். ஒரு வேளை பூமியிலிருந்து வேறு எந்த ஒரு கோளுக்கும் சென்று வருவது (இன்றைய வெளிநாட்டுப் பயணங்கள் போல்) வெகு இயல்பான ஒன்றாகிவிட்ட காலம் வருமானால், அப்போது பழையவர்களும் பன்னெடுங்காலம் வாழ்கிற நிலைமை உருவாகலாம்!

அதே நேரத்தில், பழையன கழிவதும் கழிக்கப்படுவதும் இயல்பாக நடைபெற வேண்டுமேயன்றி, புகை போட்டுக் காய்களைக் கனிய வைக்கிற ஏற்பாடாகிவிடக்கூடாது. விபத்துகளும், ஆதாயக் கொலைகளும், மத - சாதிய - ஆணாதிக்க வன்முறைகளும், சுரண்டல் யுத்தங்களும் எவரையும் முனகூட்டியே அழித்து விழுங்குவதற்கு வாய்பிளந்து அலைகின்றன. அந்தப் பழையனவும் கழிந்து, விபத்துகளும் கொலைகளும் யுத்தங்களும் வன்முறைகளும் இல்லாத புத்துலகம் மலர வேண்டும். டயர், பிளாஸ்டிக் போன்றவற்றைப் போட்டு எரிக்காமல், விறகும் வறட்டியும் பழைய துணிகளும் போட்டு எரிக்கிற போகி நெருப்பு குளிரையும் விரட்டட்டும். குளிர் காய்ந்துகொண்டிருக்கும் உழைப்புச் சுரண்டல் கோட்பாடுகளையும், வெறும் மதச் சடங்காக மாற்றிவிட்ட ஆதிக்கப் புத்திகளையும் விரட்டட்டும்.

புயலும் மழையும் குளிருமாய் வாட்டிய காலம் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் கோடை வெயிலுக்குத் தயாராவதற்காக முன்பனி, பின்பனி சுகத்தை அனுபவிக்கத் தொடங்குவதன் அடையாளமாய் போகிக்குப் பிறகு பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் அரிசி, வெல்லம், ஏலம், முந்திரி அனைத்தும் உழைப்பின் விருதுகள். அந்த உழைப்பின் அறுவடைப் பலனை கொண்டாடுவதற்கு ஊர் மக்கள் ஒன்றாய்க் கூடுகிற விழா. உழவர்கள் சேற்றில் கால் வைத்ததற்காக, மற்றவர்கள் தாங்கள் சோற்றில் கை வைக்குமுன் நன்றி தெரிவிக்கும் விழா. அன்றாட வாழ்விலும் இயற்கை வளத்திலும் சூரியனின் தேவையை முன்னோர்கள் புரிந்துகொண்டதன் வெளிப்பாடு, சூரிய வழிபாட்டுச் சம்பிரதாயமாக மாற்றப்பட்டது பற்றிய சிந்தனைகள் பொங்க வேண்டும்.

உழுதுண்டு, உலகத்திற்கும் அளித்துண்டு வாழ்வோரைத் தொழுதுண்டு பின் செல்ல வேண்டிய மற்றவர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து, அவர்களைத் தொழுதுநிற்க வேண்டியவர்களாக மாற்றிய கொடுமையை இனியேனும் கேள்விக்கு உட்படுத்தியாக வேண்டும். நிலத்தில் இறங்கி உழைப்போரிலும், நிலத்தை உடைமையாக்கிக் கொண்டோரிலும் சாதி - சமய பாகுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அந்த உழைப்பின் பயனைப் பங்கிட்டுக்கொள்வதில் அந்தப் பாகுபாடுகள் இல்லை. ஆகவே, உழைப்பை உதாசீனப்படுத்தும் தீண்டாமை உள்ளிட்ட வன்மங்களை அடுப்பிலிட்டு, சமத்துவ உணர்வுகளையும் சகோதரத்துவச் சிந்தனைகளையும் பொங்க வைத்துப் பரிமாற எல்லோருமாய்த் திரள வேண்டும். அந்த மகத்தான நாளில் கிடைக்கிற பொங்கலின் இனிப்புக்கு ஈடு இணை ஏது? இன்று கையில் எடுக்கிற ஒவ்வொரு கவளம் பொங்கலும், ஒவ்வொரு துண்டுக் கரும்பும் அந்த இனிப்புக்காக ஏங்க வைக்கட்டும், களம் இறங்கச் செய்யட்டும்.

நிலத்தைப் பண்படுத்தப் பழகிய மனிதர்கள், அதற்காக மாடுகளையும் பழக்கினார்கள். காட்டு விலங்காகச் சுற்றிய மாடு அப்போதிருந்து வீட்டு விலங்காக மனிதரோடு இணைந்து வாழத் தொடங்கியது. உழுவதற்கு மட்டுமல்லாமல், உழுது விளைவித்ததைப் போரடிப்பதற்கு, ஊருக்குள் கொண்டு செல்வதற்கு, எண்ணெய் பிழிவதற்காகச் செக்கு இழுப்பதற்கு என்று பல வகைகளிலும் மாடுகள் மனிதரின் நண்பர்களாகிவிட்டன. அந்த நட்பைக் கொண்டாடுவதே மாட்டுப்பொங்கல்.
கிராமங்களில் காளையை அடக்குகிற காளைகளுக்கே பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற நடைமுறை முன்பு இருந்தது. அதற்கென்றே உருவான மஞ்சுவிரட்டு இன்று வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கிற ஒரு முக்கியமான சுற்றுலா விழாவாகப் பரிணமித்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் அண்மைக்காலம் வரையில் நடைமுறையில் இருந்த, ஒரு காளையைக் கூரிய ஈட்டிகளால் குத்திக் கொல்கிற பொழுதுபோக்காக இல்லாமல், உயிரைப் பணயம் வைத்து முரட்டுக் காளைகளை அடக்குகிற வீரம் இங்கே கம்பீரம் கொள்கிறது.

காளையை அடக்குகிற இளைஞர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகக் கூட இல்லை, தன் சாதி அல்லாத வேறு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவருக்குப் பெண்ணை மணமுடித்துத் தருகிற உவப்பான சூழல் நிலவியதில்லையே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. விலங்குளைத் துன்புறுத்தகலாகாது என்ற மனிதநேயக் கண்ணோட்டத்துடன் இன்று இது நீதிமன்றத்தின் தலையீட்டிற்கும் உள்ளாகியிருப்பதும் கவனத்தைப் பெறுகிறது. ஆயினும், புனிதம் என்ற பெயரில் மனிதர்களைப் பாகுபடுத்துகிற செயற்கையான கோமாதா அரசியலை விடவும், மாடுகள் மனிதர்களோடு நடைபோடத் தொடங்கியதைக் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் இயற்கையோடு இணைந்ததுதான்.

வீட்டுக்குள் முடங்கியிராமல் நாம் ஊரைக் காணவும், ஊர் நம்மைக் காணவும் ஒரு கொண்டாட்டம் - காணும் பொங்கல்! தனித்து ஒதுங்கியிருப்பதல்ல, மற்றவர்களோடு கூடிப் பழகி மகிழ்ந்திருப்பதே மானுட இயற்கை. அப்படிக் கூடி வாழ்ந்ததால்தான் ஊர் என்பதே உருவானது. உழைப்பால் ஊர் செழிக்கக் காரணமானவர்களை ஊருக்குள் பொதுத் தெருவுக்கு, பொதுக் குளத்திற்கு, பொதுக் கோவிலுக்கு வரக்கூடாது என்று ஒதுக்கியதே கொடுமையான செயற்கை. சாதிப்பாகுபாட்டால் மட்டுமல்ல, பணப்பாகுபாட்டாலும் பெரும்பகுதி மக்கள் தங்கள் பகுதியைத் தாண்டி வரமுடியாதவர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் வர்த்தக வளாகங்களுக்குள் நுழைந்தாலே காசு கேட்பார்களோவென்ற தயக்கத்துடன் அந்தக் கட்டடங்களை வேகமாகக் கடக்கிறவர்கள் நிறையப்பேர்.

காணும் பொங்கலன்று குடும்பத்தோடு வெளியே கிளம்புகிறவர்கள் ஊர் கூடிக் கொண்டாடுகிற இயற்கையை மீட்க முயல்கிறவர்களாகவே தெரிகிறார்கள். சிலர் இது பெண்களை ஆண்களும் ஆண்களைப் பெண்களும் கண்டு ரசிப்பதற்கான ஏற்பாடேயன்றி வேறொன்றுமில்லை என்று சொல்வதுண்டு. வேற்று ஆண்கள் முன் பெண்கள் தலைகாட்டக்கூடாது என்ற திரை இதனால் விலக்கப்படுகிறது என்றால் அது வரவேற்கத்தக்கதே அல்லவா! இயற்கையான ஈர்ப்புடன் கண்கள் மோதிக்கொள்ளும்போது குறுக்கே எழுப்பட்டுள்ள செயற்கையான வேற்றுமைச் சுவர்கள் தகரட்டுமே!

இப்படி இயற்கையோடு இணைந்த கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் எல்லோருக்குமானது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும் அவரவர் கடவுள்களை வணங்கிக்கொண்டே கொண்டாடப்பட வேண்டியது. எந்த மதத்தையுமே சாராதவர்களால் இயல்பாகவே கொண்டாடப்படுவது. உழைப்பாளர் தினம் உள்ளிட்ட அனைவருக்குமான முற்போக்குச் சிந்தனை சார்ந்த நிகழ்வுகளும் மக்களால் தன்னுணர்வோடு எடுத்துக்கொள்ளப்படுவதாகப் பண்பாட்டு அடையாளம் கொள்ளச் செய்கிற முயற்சிகள் தேவைப்படுகின்றன. அதை எப்படிச் செய்வது என்ற வினாவுக்கான விடை பொங்கல் விழாவில் இருக்கிறது.

('தீக்கதிர்' சென்னைப் பதிப்பின் 14-1-2014 இதழ் பொங்கல் விழா சிறப்புப் பக்கத்தில் எனது கட்டுரை)