Sunday 15 July 2007


நிச்சயமா
உனக்கொரு குடிசை

நான்
கட்டுவேன் அம்மா

ஜி. மம்தா



ம்மா, வாழ்க்கையில நீ எவ்வளவு பாடுபட்டிருக்கேன்னு எனக்குத் தெரி யுமம்மா. நீ உன் தலையில நிறைய செங்கல் சுமந்துட்டுப் போறதையும், அப்பா அதை யெல்லாம் எடுத்து ஒண்ணொண்ணா அடுக்கி வைச்சு இடையிலே சிமெண்டு வைச்சுப் பூசுறதப் பார்த்திருக்கேன்.
நம்ம கிராமத்தில சாப்பாடு இல்லாம பட்டினியாவே இருப்போமே, அதுவும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குதும்மா. அப்பெல்லாம் நீயும் அப்பாவும் என்னைத் தூக்கிக்கிட்டு ஊருக்கு நடுவில இருந்த இடத்துக்குப் போவீங்க. யாராவது அங்க வந்து அவங்க ளோட வயல்ல வேலை பார்க்கிறதுக்குக் கூப்பிடுறாங்களான்னு காத்துக்கிட்டு இருப் பீங்க. யாரும் வரலைன்னதும் ஏமாத்தத்தோட திரும்புவீங்க. அதெல்லாம் உனக்கு ஞாப கம் இருக்குதாம்மா?
பசிக்குதுன்னு நான் ரொம்ப அழுவேன். ஆனா, என்னோட பசியை அடக்க உன் கிட்ட கூட எதுவும் இருந்ததில்லை. அது இப்பதான் எனக்குப் புரியுது. அப்பா ஒருநாள் நாம வெளியூர் போகுறதுன்னு முடிவு செஞ்சு அதைச் சொன்னப்ப, உன் முகத்துல ஒரு நம்பிக்கை ஒளியும் அதோட ஒரு பெரிய கேள்விக் குறியும் தெரிஞ்சதை நான் கவனிச் சேன்.
இங்க வந்தப்புறம், நெறையா புதுசு புதுசா இருந்துச்சு. பெரிய பெரிய வீடு, பூங்கா... சின்னப் பசங்க நல்லா ஜாலியா விளையாடிக்கிட்டு இருக்கிறது ... இதெல்லாம் பார்க்கிற துக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இனிமே நீ எப்பவும் கண்ணீர் விட மாட் டேன்னு நினைச்சேன்.ஒரு பெரிய விசாலமான இடத்துக்கு நாம போனோம். நல்லா விளையாட முடியும்கிறது எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
கொஞ்சம் கொஞ்சமா அந்த இடத்தில நிறைய குழி வெட்டுனாங்க. அதுக்குள்ள மணல் போட்டு நிரப்பி னாங்க. அப்புறம் அங்க ஒரு வீடு மாதிரி கட்டடம் எழும்புச்சு. அந்த வீடு நமக்குத் தான்னு நான் நினைச்சேன். ஏன் தெரி யுமா, அந்த வீட்டக் கட்டுறதுக்கு நீயும் அப்பாவும் மத்தவங்களோட சேர்ந்துக் கிட்டு அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செஞ்சீங்க.
எல்லா வேலையும் முடிஞ்சப் புறம் பார்த்தா நாம திடீர்னு இடத்தைக் காலிசெஞ்சிட்டுப் போக வேண்டியதாயி டுச்சு. அவ்வளவு கஷ்டப்பட்டு அப்பாவும் நீயும் கட்டுன வீட்டை விட்டுட்டு ஏன் நாம வெளியேறணும்னு எனக்குப் புரியல. அப்புறம் வேற காலியிடத்துக்குப் போனோம். அதுக்கப்புறம் வேற இடத்துக் குப் போனோம். கொஞ்சம் கொஞ்சமா எனக்கு அந்த வீடுக நமக்குச் சொந்த மில்லேங்கிறது புரிய ஆரம்பிச்சுச்சு.ஏம்மா, அந்த வீடுக நமக்குச் சொந்த மில்லேங்கிறப்ப எதுக்காகம்மா நீயும் அப்பாவும் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செஞ்சீங்க?
இன்னும் கொஞ்சம் சோறு வேணும்னு நான் முட்டாத்தனமா கேட் டப்ப எல்லாம் நீ மூலையில உட்கார்ந்து அழுவுறதப் பார்த்திருக்கேன் அம்மா. எனக்கு என் மேலயே கோபம் கோபமா வந்துச்சு தெரியுமா? நீ அழுவுறத என் னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. அதனால, இனிமே இன்னும் கொஞ்சம் சோறு வேணும்னு கேட்கிறதில்லைன்னு முடிவு செஞ்சேன்.அந்த கஷ்டமான வேலை முடிஞ்சப் புறம், நீதான் எங்களுக்கு சாப்பாடு சமைக்கணும்; பாத்திரம், தட்டு எல்லாம் கழுவி வைக்கணும். எங்க துணியை அலசிப் போடணும்.
இவ்வளவுக்கப்புறமும் என்னைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப ணும்னு நினைச்சியேம்மா!அம்மா, எனக்கும் படிக்கணும்னு ஆசைதான். ஆனா பள்ளிக்கூடத்துக்குப் போகுறதுக்கு பயமா இருக்கும்மா. கூடப்படிக்கிற பசங்க என்னென்னமோ கேக்குறாங்கம்மா. ‘உன் வீடு எங்க இருக்கு’-ன்னு கேக்குறாங்க. வீடு இல்லைன்னு சொன்னா சிரிக்கிறாங்க.
எங்க சார் கூட ஒரு நாள் பாடம் நடத்துறப்ப, `காட்டு விலங்குகள் குகையில் வாழும், வீட்டு விலங்குகள் பட்டி போன்ற இடங்களில் வாழும், மனிதர்கள் வீடுகளில் வசிக்கிறார்கள்’னு சொன்னாரம்மா. நமக்குத்தான் வீடு இல்லியே, அப்படின்னா நாம மனுசங்க இல்லியாம்மா? அப்ப நாம யாரும்மா?`மிருகங்கள்தான் திறந்த வெளியில் சிறுநீர் போகும், மலம் கழிக்கும்; மனிதர்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள்’னும் எங்க சார் சொன்னாரும்மா. ஆனா நாம எப்பவும் இந்த ரெண்டு காரியத்தையுமே பொட்ட வெளியிலதான் செய்யுறோம்? நான் கொஞ்சம் பெரிய பொண்ணா வளந்ததுக்கப்புறம்தான் நீ ஏன் எப்பவும் அவசர அவசரமா குளிக்கிற, அதுவும் ஏன் இருட்டினதுக்கப்புறம் குளிக்கிறங்கிறது புரிஞ்சிச்சு. ஒசரமான கட்டிடங்கள்லயிருந்து எட்டிப்பார்க்குற பொறுக்கிக் கண்ணுககிட்டயிருந்து அப்பதான தப்பிக்க முடியும்!
அப்பா ஒரு நாளு அவரு வேல செஞ்சிக்கிட்டிருந்த இடத்திலேயிருந்து கீழே விழுந்துட்டாரு, அதுல அவரோட காலு ஒடஞ்சிபோச்சு. அப்ப நீ அழுத அழுக இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. அப்பாவுக்கு வேல போனது மட்டுமில்லாம, நாம தங்கி யிருந்த இடத்திலேயிருந்தும் நாம வெளியேற வேண்டியதாப் போயிடுச்சு.
அப்ப கொஞ்ச நாளு நாம ஒரு பாலத்துக்குக் கீழ குடியிருந்தோம். ஒரே நாத்தம் கொடலப் புடுங்கும். சுத்தியும் ஒரே நாயும் பன்னியுமா கிடக்கும். சனங்க அவங்க குப்பையை யெல்லாம் நம்ம மேலதான் போடுவாங்க. நாமளும் இருக்கோங்கிறத நெனைச்சுக்கூடப் பார்க்க மாட்டாங்க போல.
இதுக்கப்புறம்தான் ஒரு நாளு ராத்திரி சிலபேர் நாம இருந்த இடத்துக்கு வந்து உங்கிட்டயும் அப்பாக்கிட்டயும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்கெல்லாம் தோழர்கள்னு சொன்னாங்க. எனக்கு தூக்கம் தூக்கமா வந்துச்சு. ஆனா அவங்க பேசப்பேச நீ அவங்க சொல்றது சரிதான்னு தலையை ஆட்டுறதையும் உன்னோட கண்ணும் அப்பாவோட கண்ணும் பளபளன்னு மின்னுறதையும் பார்த்தேன். எனக்கு சந்தோசமா இருந்துச்சு. நாம ஒரு புது வீட்டுக்குப் போற மாதிரி கனா வந்துச்சு.
அடுத்த நாளு நான் வெளையாடிக்கிட்டிருந்தப்ப, அதே ஆளுங்க ஏதோ சொல்லிக் கிட்டிருந்ததைக் கேட்டேன். அரசாங்க இடம் ஒண்ணு காலியா இருக்கிறதாகவும், அதை நம்மளப் போலவுங்களுக்கு வீடு குடுக்குறதுக்கு நியாயமா பயன்படுத்தலாம்னும் அவங்க சொன்னாங்க. நம்ம கனா பலிக்கப் போவுதுன்னு நினைச்சேன்.
அப்பாவோட சினேகிதங்க, இதுக்கு முந்தியும் எப்படி அரசாங்க அதிகாரிங்க வந்து அவங்களுக்கு அந்த நெலத்திலேயே வீடு கட்டித்தரப் போறதா இப்படி சத்தியம் பண்ணினாங்கன்னு சொன்னாங்க.
தோழருங்க அப்ப ‘அரசாங்கம் பெரிய ஆளுகளுக்கு இலவசமாவே ஆயிரக்கணக்கா நெலம் குடுக்குது, ன்னு சொன்னாங்களாம். அந்தப் பெரிய பெரிய ஆளுக தாழ்த்தப்பட்டவங்க, பழங்குடிக இவங்களுக்குன்னு ஒதுக்குன நெலத்துல நெறையா வீடுகளக் கட்டிட்டதாவும் தோழருங்க சொன்னாங்களாம்.அரசாங்கத்துக்கிட்ட காலி நெலம் இருக்குதுன்னா அதை ஏம்மா நமக்குத் தரக்கூடாது? நாமளும் ஒரு வீடு கட்டிக்கிட்டு அதுல போய் குடியிருக்கலாம்ல?
நாம இருந்த எடத்துக்கு தோழருங்க அடிக்கடி வர ஆரம்பிச்சாங்க. நல்ல பாட்டெல் லாம் பாடுனாங்க. நெறையா பேசுனாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. ஆனா உன்னோட ரெண்டு கண்ணும் ஜொலிச்சத நான் பார்த்தேன். எனக்கு சந்தோசமாவும் இருந்துச்சு, கண்டிப்பா ஏதோ நல்லது நடக்கப் போகுதுன்னு நம்பிக்கையாவும் இருந்துச்சு.
நீங்க எல்லாருமா சேர்ந்துக்கிட்டு, கையில செவப்புக் கொடிங்கள எடுத்துக்கிட்டு போனீங்க. உங்க முகமெல்லாம் பிரகாசமா இருந்துச்சு. நானும் உங்க கூடவே வந்தேன். அந்த எடத்துல நெறையா போலீஸ் அங்கிள்க இருந்தாங்க. அவ்வளவு போலீஸ்காரங்கள அதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்ல. திடீர்னு ஒரு தோழரு, இதெல்லாம் நம்ம நெலந்தான்னும், நீங்க எல்லாரும் இந்த எடத்துல வீடு கட்டிக்குங்கன்னும் சத்தமா சொன்னாரு. அப்ப நமக்கு எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு! ஒரு வழியா நம்ம எல்லாத் துக்கும் வீடு!
நீயும், மத்த அத்தைமார்களும் மாமாமார்களும் அந்த நெலத்துல செவப்புக் கொடி கள நட்டு, குடிசைபோட ஆரம்பிச்சதும், போலீஸ் அங்கிள்க எல்லாரும் வேகமா நம்ம பக்கத்துல வந்தாங்க. எனக்கு பயமா போயிடுச்சு. ஒரு பாறைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டேன்.
தீடீர்னு போலீஸ்காரங்க உன்னையும் உங்கூட வந்திருந்தவங்களயும் அடிக்க ஆரம்பிச்சாங்க. சில போலீஸ்காரங்க சட்டையப் பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சாங்க. சில பேரு லத்திக்கம்பால குத்த ஆரம்பிச் சாங்க. போலீஸ்காரங்க இப்படி அடிச்சிக் கிட்டே இருந்தப்ப, நீங்க எல்லாரும் சத்தம் போட்டீங்க. போலீஸ்காரங்க திடீர்னு உன்னோட சேலைய இழுத்துக் கிழிச்சாங்க. ஏம்மா, அவங்க எதுக்கும்மா உன்னை அப்படி அடிச்சி, சேலையக் கிழிச்சி, பூட்ஸ் காலால உன் வயித்துல மிதிச்சாங்க? அவங்களுக்கெல்லாம் பெத்த தாய், கூடப் பொறந்த அக்கா தங்கச்சி இருக்க மாட்டாங்க?
அம்மா, நீ விடாம சத்தம் போட்டுக் கிட்டிருந்த. நான் அழ ஆரம்பிச்சிட்டேன், என்னா செய்றதுன்னே தெரியல. முந்தி நீ எனக்குச் சொன்ன கதையெல்லாம் ஞாபகம் வந்துச்சு. அந்தக் கதைகள்ல, சாமிக வந்து காப்பாத்துவாங்களே, அதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.அம்மா, நாம ஒண்ணும் கெட்டவங்க இல்லியே? பெறகு ஏம்மா அவங்க நம்மள அடிச்சாங்க? ஒரு வீட்டுல குடியிருக் கிறது தப்பாம்மா? போலீஸ்காரங்க ஏம்மா கெட்டவங்கள அடிக்க மாட்டேங்கிறாங்க?
ங்கம்மா வலியில துடிச்சாங்க. ஆனா அழவே இல்ல. அவங்களோட கிழிஞ்ச சேலையிலேயிருந்து ஒரு துண்டை எடுத்து கையில வச்சிக்கிட்டு சொன்னேன்: ‘‘அம்மா, என்னோட எல்லா ஃபிரண்டுகளயும் ஒண்ணா சேர்த்துக் கிட்டு, அடக்குமுறை பண்றவங்கள எதுத்துப் போராடுவேன். நிச்சயமா உனக்காக ஒரு குடிசை நான் கட்டு வேன்.’’

நன்றி: ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (ஜூலை 8, 2007)

தமிழில்: அ.கு.

Tuesday 10 July 2007

அன்பிற்குரிய ஜீவாவோடு ஒரு பயணம்

இயக்கத்தில் இணைந்து, மதுரையில் ‘செம்மலர் கலைக்குழு’ உறுப்பினராக நானும் காலில் சலங்கை கட்டி வீதி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாட்கள்। அப்போது குழுவின் தலைவர் தோழர் எம்।பி। ராமச்சந்திரன் நாடகம் துவங்குவதற்கு முன்பாக சில பாடல்களைப் பாடுவார்। ‘‘காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே, பசையற்றுப் போனோமடா...’’ என்ற பாடலை அவர் பாட நாங்கள் உருகிப் போவோம். அந்தப் பாடலை எழுதியவர் ஜீவா என்ற தகவல்தான் எனக்கு அவரைப் பற்றிய முதல் அறிமுகம்.அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அவரோடு முரண்பட்டிருக்க வேண்டியிருந்த சூழல்கள் பற்றித் தலைவர்கள் என்னோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஜீவாவின் அர்ப்பணிப்பு, எளிமை, முழுமையான ஈடுபாடு, உறுதி, நெஞ்சுரம், தியாகம் ஆகியவை குறித்து எல்லோரும் வியந்து போற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவரது தமிழ்த் திறன், இலக்கிய ஆர்வம், பெரும் கூட்டத்தையும் கட்டிப்போடும் பேச்சாற்றல், அதற்குத் துணையாகக் கவிதைகளையும் காப்பியங்களையும் கையாண்ட வல்லமை ஆகியவை குறித்து இன்னும் லயிப்போடு சொல்வார்கள். மகா மனிதராய்த் திகழ்ந்த அந்த எளிய தோழரின் நூற்றாண்டில், அவரைப் பற்றிய ஒரு அறிமுகமாக இந்தப் புத்தகத்தைத் தந்திருக்கிறார் ஆர். முத்துக்குமார்.பக்திமயமான பட்டன் பிள்ளை-உமையம்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையாக மரணத்தைத் தழுவ நான்காவதாகப் பிறந்த குழந்தையாவது நிலைக்க வேண்டுமேயென்று சுற்றத்தார் ஆலோசனைப்படி கிராமத்துக் காவல் தெய்வம், குலதெய்வம் இரண்டையும் சேர்த்து மூக்காண்டி சொரிமுத்து என்று பெயர் சூட்டப்படுகிறது. சிறுவர்களுக்கே உரிய விளையாட்டுத்தனத்தோடும், துறுதுறுப்போடும் வளர்ந்த மூக்காண்டி படிப்படியாக ஜீவானந்தமாகப் பரிணமித்த கதை சுவையானது. சேரன்மாதேவி ஆசிரமத்தில் சாதிப்பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டது குறித்து பெரியாரோடு சேர்ந்து காந்தியிடம் எடுத்துச் சென்றபோது அவர் அந்தப் பிரச்சனையைக் கையாண்ட முறை பெரியாரோடு சேர்ந்து ஜீவாவுக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவுகள் ஒரு வருங்கால சமூகப் போராளியின் தொடக்கத்தை அடையாளப்படுத்துகின்றன. விடுதலைப் போராட்டத்தின் ஒரு கட்டமாக கதர் இயக்கம் நடைபெறுகிறது. அதில் பெண்களையும் ஈடுபடுத்தி அவர்களையும் நூல் நூற்கச் சொல்கிறார் ஜீவா. அது ஆண்களின் வேலை என்றும், அதில் பெண்களை ஈடுபடுத்தியது தவறு என்றும் கூறுகிறார் வ.உ.சி. அவரோடு கருத்துப் போர் நடத்த முடிவு செய்யும் ஜீவா ஒரு பொதுக்கூட்டத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். இத்தகைய விவரங்கள் படிப்பதற்குச் சுவையாக இருப்பது மட்டுமல்ல, வரலாறு எப்படியெல்லாம் வளைந்து நெளிந்து வந்திருக்கிறது என்பதையும், விடுதலை நோக்கில் உறுதியோடு இருந்த தலைவர்களுக்குப் பெண்ணுரிமை போன்ற சிந்தனைகளில் இருந்த குழப்பங்களையும் தெரிந்துகொள்ளச் செய்கிறது.ஜீவா ஒரு போட்டி ஆசிரமம் துவங்குகிறார். ‘‘வறுமை, பிணி, அறியாமை, அடிமைத்தனம் ஆகியவற்றை ஒழித்தல், சாதி சமய வேறுபாட்டைக் களைதல், பிறப்பு வேற்றுமையை அழித்தல், பார்ப்பனீயத்தை ஒழித்தல், தீண்டாமையை அழித்தல், மூடப்பழக்கங்களை ஒழித்தல், மது ஒழிப்பைக் கொண்டு வருதல், தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்ககாகப் பாடு படுதல் மற்றும் பெண்ணுரிமையைப் பேணுதல்’’ ஆகிய ஒன்பது முழக்கங்களை அந்த ஆசிரமத்தின் லட்சியங்களாக அறிவிக்கிறார். அவரது வாழ்க்கையின் இந்தப் பகுதியும் அவர் எத்தகைய பயிராகப் விளையப் போகிறார் என்பதற்கான முளைப்பயிர்தான்.சிறைச்சாலை ஜீவாவுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்திய கல்விச்சாலையாக இருந்திருக்கிறது. அவ்வகையில் தமிழகத்திற்கு ஒரு கம்யூனிஸ்ட் தலைவரை உருவாக்கிக் கொடுத்த அந்தச் சிறைவாழ்க்கை நம் நன்றிக்கு உரியதாகிறது. ஒரு ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகத் தமிழகத்தில் சிறை சென்ற முதல் நபர் ஜீவாதான்! அந்தப் புத்தகத்தைப் பதிப்பித்ததற்காக ஈ.வெ.ரா.(பெரியார்), அவரது சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அந்தப் புத்தகம் எது தெரியுமா? பகத் சிங் எழுதிய ‘‘நான் ஏன் நாத்திகனானேன்?’’!பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நிர்வாகங்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்காகப் போராடும் தொழிற்சங்கத் தலைவராகிறார் ஜீவா. அவரது பேச்சுக்கள் தொழிலாளர்களுக்கு ஒன்றுபட்ட போராட்ட நம்பிக்கையையும் முதலாளிகளுக்கு பீதியையும் ஏற்படுத்துகின்றன. இன்று தொழிற்சங்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோருக்கு வழிகாட்டும் அத்தியாயம் இது.மக்களை வசீகரித்த அந்தப் பேச்சாற்றலுக்கு ஆதாரமாய் அமைந்தது அவரது தமிழார்வமும் இலக்கிய நுகர்வும். மறைமலையடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவராக தூய தமிழில்தான் உரையாடுவது என்ற கவர்ச்சிகரமான ஆனால் நடைமுறைக்குக் கடினமான முடிவுக்கு வருகிறார். பின்னர் அந்த முடிவைக் கைவிட்டு இயல்பாகப் பேசுவது என்ற முடிவுக்கு அவர் வருவதற்கும் மறைமலையடிகளே காரணமாகிறார்! 1952ம் ஆண்டுத் தேர்தல், அதில் தோழர் பி. ராமமூர்த்திக்கு ஆதரவு திரட்ட பொதுக்கூட்ட மேடையில் ஜீவா கையாண்ட உத்தி போன்ற தகவல்களும் அன்றைய அரசியல் சூழலை உணர்த்துகின்றன. வசதி வாய்ப்புகள் தேடிவந்தபோது அவற்றைப் புறந்தள்ளி எளிய வாழ்க்கையை ஏற்ற உயர்ந்த பக்குவம் ஒரு பொதுவுடைமைவாதியின் இயல்பான தன்மை.நூலாசிரியர் முத்துக்குமார் ஜீவாவின் பேச்சாற்றல், வாதத்திறமை, இலக்கியச்சான்றுகளைப் பயன்படுத்திய லாகவம் ஆகியவைபற்றி புத்தகம் நெடுக்கக் கூறியுள்ளார். எந்தச் சூழலில் எத்தகைய வாதத்தை ஜீவா முன்வைத்தார் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக் காட்டுகளைக் கொடுத்திருக்கலாம். அதே போல் ‘‘அட்வைசரி ஆட்சி’’ என ஓரிடத்தில் வருகிறது. அது என்ன என்பதே பலருக்குத் தெரியாது. எனவே அது போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துகையில் அது என்ன என்பதை வாசகர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் சுருக்கமாக விளக்குவது அவசியம். நாடு விடுதலையடைந்த போது ஜீவாவும் மற்ற கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களும் அதனை எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைத் திரட்டிக் கொடுத்திருக்க வேண்டும். தேவிகுளம், பீர்மேடு எந்த மாநிலத்துக்குச் சொந்தம் என்பதில் தோழர் ஏ.கே.ஜி.-யுடன் ஜீவாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். அது தொடர்பாக கொல்கத்தாவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று தோழர்கள் உற்சாகத்துடன் பணியாற்றியதாகக் கூறுகிறார். அது என்ன முடிவு என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? ஜீவா மறைந்த ஆண்டு, மாதம், நாள் பற்றிய குறிப்பும் விடுபட்டுள்ளது. வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் இத்தகைய குறிப்புகளும் முக்கியமானவை. அடுத்தடுத்த பதிப்புகளில் இது போன்ற குறைகளைக் களைய ஆசிரியரும் பதிப்பகத்தாரும் முன்வர வேண்டும்.‘‘பிரமிப்பூட்டும் ஜீவாவின் வாழ்க்கையை எளிமையான நடையில் விறுவிறுப்பாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆர். முத்துக்குமார்’’ என பதிப்பாளர்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. -அ.குமரேசன்





அன்புள்ள ஜீவா ஆர். முத்துக்குமார்வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்பேட்டை,சென்னை - 600 018பக்கங்கள்:144 விலை ரூ.60

Sunday 8 July 2007

சந்தர்ப்பவாதமும் வளைந்து கொடுப்பதும்

குடியரசுத்தலைவராக வருபவர் ‘‘வளைந்து கொடுப்பவராக இருக்க வேண்டும்’’ என அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் கூறியதை எனது ‘‘கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா - ஆமா! ஆமா!,’’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கலாமே என்று வலைப்பதிவு நண்பர் ஜீவா ஒரு நையாண்டிச் சுவையோடு விமர்சனம் அனுப்பியிருக்கிறார்।கண்டுக்கிடாமல் இருப்பதை விட இப்படி எதிர்வினையாற்றுவது எவ்வளவோ நல்லது।ஆங்கிலத்தில் ‘‘ஃபிளெக்ஸிபிள்’’ என்ற வார்த்தைக்கு, நேர்மையான பொருள், ‘‘நிலைமைகளுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது,’’ ‘‘வறட்டுப் பிடிவாதமின்றி சகல பகுதியினரின் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்பது’’ என்றே நான் புரிந்து கொள்கிறேன்। ‘‘வளைந்து கொடுப்பது’’ என்பது, இடம் நோக்கிப் பார்க்கையில் கச்சிதமான மொழிபெயர்ப்பாகத் தெரியவில்லை।புதிய, புதிய நிலைமைகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிற போது, அதற்கேற்ற அணுகுமுறையில்லாமல் வறட்டுப் பிடிவாதக்காரராக இருப்பது வெறும் கற்பனைக்கு சுகமானதாக, செயற்கையான தமிழ்சினிமா கதாநாயகன் போன்றதாக, வாழ்க்கைக்கு உதவாததாகவே முடியும்। இதன் அர்த்தம் சமரசம் செய்து கொள்வதல்ல। மாறாக வள்ளுவன் சொன்னது போல ஒரு செயலின் நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து, அவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ அதற்குத் தக, மிகை நாடி மிக்க கொள்பவராக இருப்பதே ‘‘ஃபிளெக்ஸிபிள்।’’நாட்டின் குடியரசுத்தலைவர் இப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில், தேர்தல் நடக்க விருக்கிற இந்த ‘‘சந்தர்ப்பத்தில்’’ கருத்துத் தெரிவித்திருக்கிறார் அந்தத் தலைவர். அது அவரது சொந்தக் கருத்து மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துமாகும்.இப்படிப் பட்ட சுயநலம் சாராத ‘‘சந்தர்ப்பவாதங்கள்’’ பெருமைக்குரியதே. எந்த வார்த்தையை எந்தத் தொனியில் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.தொடரலாம் விவாதத்தை.

Saturday 7 July 2007

கவிதை

அட்சய திருதயைதினத்தில்

எது வாங்கினாலும்

அது ஆண்டு முழுக்க

பல மடங்காய் கிடைக்கும்

என்று கூறியஜோதிட மாமணி

அன்று வாங்கினான்

கன்னத்தில் ஒரு அறை।

Friday 6 July 2007

கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா? ஆமா! ஆமா!

சொல்லப்போனால் கம்யூனிஸ்ட்டுகளை விடப் பெரிய சந்கர்ப்பவாதிகள் யாரும் இருக்க முடியாது. இல்லையா பின்னே?

மார்க்சிய தத்துவத்தைப் படிப்பதால் மட்டும் மார்க்சியவாதியாகிவிட முடியாது. அந்தந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற வகையில் அதனைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். புரட்சியை எந்த ஒரு நாட்டிலிருந்தும் எந்த ஒரு நாட்டிற்கும் இறக்குமதி செய்ய முடியாது. ஒவ்வொரு நாட்டின் சமுதாயச் சூழல், எதிரி வர்க்கத்தின் பலம் - பலவீனம், பாட்டாளி வர்க்கத்தின் தயார் நிலை... ஆகியவற்றைப் பொறுத்து அந்தந்த நாட்டில் புரட்சிகர இயக்கம் வடிவம் கொள்ளும், வளரும்.

இப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பம், சூழ்நிலை, யதார்த்தம் முதலானவற்றின் அடிப்படையிலேயே செயல்படுவார்கள் என்றால், அது சந்தர்ப்பவாதமின்றி வேறென்ன?சும்மா வறட்டுத்தனமாக புரட்சி பேசிக் கொண்டு, மார்க்ஸ் - லெனின் - மாவோ மேற்கோள்களைக் கூறிக் கொண்டு தனிப்புலம்பல்கள் நடத்திக் கொண்டிருக்காமல், இன்றைய நிலைமைகள் என்னவோ அதற்குத் தகுந்தாற்போல் அணுகுமுறைகளை வகுக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

உதாரணமாக, மற்ற அரசியல் கட்சிகள் முதலாளித்துவக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவையே என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் மக்களிடையே ஒரு முற்போக்கான தோற்றத்தைக் காட்டிக் கொள்வக்ற்காகவாவது, அந்த முதலாளித்துவக் கட்சிகளுக்குக் கம்யூனிஸ்ட்டுகளுடன் உறவு கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரத்தில், அக்கட்சிகளுக்குப் பல்வேறு காரணங்களால் மக்களிடையே ஒரு செல்வாக்கு இருக்கிறது. அதைப்பயன்படுத்திக் கொண்டு, அதாவது அக்கட்சிகளுடன் தேர்தல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு இன்றைய நாடாளுமன்ற - மாநில சட்டமன்ற கட்டமைப்புகளுக்குள் கம்யூனிஸ்ட்டுகளால் நுழைய முடிகிறது. அப்படி நுழைவது சும்மா எம்பி, எம்எல்ஏ பதவிகளுக்காக அல்ல. அந்தப் பொறுப்புளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்குள் என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

இதையெல்லாம் சந்தர்ப்பவாதம் எனக் கூறாமல் வேறென்னவென்று கூறுவது? இன்றைய அரசியல் களத்தின் இந்த நிலைமைகள் பற்றிய புரிதல்களோடு, கம்யூனிஸ்ட்டுகள் தங்களது பங்கேற்பைத் தவிர்த்து, சுத்தப் புரட்சி பேசிக் கொண்டு ஒதுங்கிப் போயிருந்தால், இன்று மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பல ஜனநாயக உரிமைகள் காணாமல் போயிருக்கும்.

தற்போதைய நாடாளுமன்ற முறை முழுமையானது, அப்பழுக்கற்றது என்ற மயக்கங்கள் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கிடையாது. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தாமல் கற்பனைப் புரட்சிக்குத் தாவுகிற இளம்பருவக் கோளாறும் கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கிடையாது.

நாட்டின் அரசு அதிகாரத்தில் மதவெறியர்கள் -நவீன மனுதர்மவாதிகள்-கோலோச்ச முடியாமல் தடுத்தது கம்யூனிஸ்ட்டுகளின் சந்தர்ப்பவாதம்தான். காங்கிரஸ் கட்சித்தலைமை ஒரேயடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் சரணாகதி அடையாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதும் இதே சந்தர்ப்பவாதம்தான். பொதுத்துறைத் தொழில்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படாமல் காப்பாற்றிவைத்திருப்பதும் அதே சந்தர்ப்பவாதம்தான். தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் மக்கள், பிற்படுத்தப் பட்ட மக்கள், எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்.... இப்படி எல்லாத் தரப்பினரும் இன்று குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடிகிறது என்றால், கம்யூனிஸ்ட்டுகளின் சந்தர்ப்பவாதம் இல்லாமல் இவை வந்துவிட முடியாது.

வெட்கமே இல்லாமல் சொல்கிறேன் - கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகள் தான்। இந்த சந்தர்ப்பவாதத்தைக் கம்யூனிஸ்ட்டுகள் மேலும் மேலும் கடைப்பிடிப்பார்கள் - தங்களுக்கான முழுச் சந்தர்ப்பம் வரும் வரை।

அ.குமரேசன்

கவிதை



அம்மை அப்பனைசுற்றினால்

ஞானப் பழம்

உண்மையாய் உலகைசுற்றிவந்தால்

வெறும் கோவணம்.

தெய்வ லட்சணம்மனிதர்க்குப் புரியுது

நாரத கலகம் நன்மையில் முடியுது!

-அ.கு.

கவிதை

அட்சய திருதயைதினத்தில்

எது வாங்கினாலும்

அது ஆண்டு முழுக்க

பல மடங்காய் கிடைக்கும்

என்று கூறிய

ஜோதிட மாமணி

அன்று வாங்கினான்

கன்னத்தில் ஒரு அறை.

-அ.கு.

Wednesday 4 July 2007

ஊடகமுகம்

ஊடகங்களின் அரசியல்

அ.குமரேசன்

‘‘அரசியலுக்கு அப்பாற்பட்ட நடுநிலை’’ என்பதைத் தங்களது கொள்கையாகச் சொல்லிக் கொள்வதில் ஆகப் பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு ஒரு மோகம். அரசியல் கட்சிகள் வெளியிடும் ஏடுகள் அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. வர்த்தகக் களத்தில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிற மற்ற ஏடுகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், மின்னணுத் தட ஏடுகள்... எல்லாமே ‘நடுநிலை’ என்றுதான் அறிவித்துக் கொள்கின்றன. ஊடக மொழியில் இந்த ‘நடுநிலை’ என்பதைவிடவும் மோசடியான சொல் வேறொன்றும் கிடையாது. எந்த ஊடகமும் நடுநிலையாக இல்லை; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீதிமன்றத்தில் நீதிபதி விசாரணை முடிகிற வரையில்தான் நடுநிலை நிற்க வேண்டும். தீர்ப்புச் சொல்கிறபோது ஏதேனும் ஒரு தரப்புக்கு சாதகமாகவே சொல்லியாக வேண்டும். அப்போதும் நடுநிலை என்பதாகச் சொல்லிக் கொண்டு பிக்பாக்கெட் பேர்வழிக்கும் ஐந்து மாதம் சிறை, பணத்தைப் பறிகொடுத்தவருக்கும் ஐந்து மாதம் சிறை என்று தீர்ப்பளித்தால் அவருக்கு எத்தனை மாதம் என்று தீர்மானிக்க வேண்டியிருக்கும்தானே!

ஊடக வல்லாளர்கள் பலரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு கட்சியின் கருத்தை அல்லது ஒரு தரப்பின் வாதத்தை வெளியிட்டு, அத்தோடு இன்னொரு கட்சியின் கருத்தை அல்லது இன்னொரு தரப்பின் வாதத்தையும் கொடுத்து விட்டால் அதுதான் நடுநிலை என காட்டிக் கொள்கிறார்கள். சில ஏடுகள் தலையங்கம் மூலமாகத் தங்களது நிலைபாடு என்னவென்று சொல்வதுண்டு. மற்றவர்கள் அதைக்கூடச் செய்வதில்லை. எடுத்துக்காட்டாக, ‘‘அழகிப்போட்டி தேவையா’’ என்று ஒரு விவாதத்தை எடுத்துக் கொள்வார்கள். தேவையில்லை என்று மாதர் இயக்கத் தலைவர் ஒருவர் சொல்வதையும், தேவைதான் என்று போட்டி அமைப்பாளர் ஒருவர் சொல்வதையும் எதிரும் புதிரும் என வெளியிடுவார்கள். இரு தரப்பினரும் விவாதிக்கிற நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அந்த விவாதத்தில் அந்த ஏட்டின் அல்லது தொலைக்காட்சி நிறுவனத்தின் கருத்து என்ன என்று நேரடியாகக் கூற மாட்டார்கள். அனால் அழகிப் போட்டி தொடர்பான ‘‘கிளுகிளு’’ செய்திகள், பரபரப்புத் தகவல்கள், அட்டகாசமான படங்கள் என வெளியிடுவதில் அந்த நிறுவனங்களின் ஆதரவு எதற்கெனத் தெரிந்துவிடும்.

‘நடுநிலை’ என்று எதுவும் இல்லை; ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் என்றால் அந்தக் கட்சி அரசியல், இந்தக் கட்சி அரசியல் அல்ல. அதிலேயாவது அனைத்துத் தரப்புச் செய்திகளையும் ஒரளவுக்காவது போட்டாக வேண்டிய கட்டாயம் - வணிக நோக்கத்திற்காகவாவது இருக்கிறது. அப்போதும் கூட செய்திகளைச் சுருக்கியோ முக்கியத்துவமின்றியோ வெளியிடுவதில் இவர்களது நடுநிலை எந்தப் பக்கம் சாய்ந்திருக்கிறது என்பது என்பதை அறிய முடியும். இங்கே ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கிறது என்று குறிப்பிடுவது வர்க்க அரசியல். நமது நாட்டில் வர்க்க அரசியல் என்பது வர்ண அரசியலோடும் சம்பந்தப்பட்டிருடிருக்கிறது.

இவர்களது வர்ண அரசியலுக்கு இட ஒதுக்கீடு பிரச்சனை நல்ல எடுத்துக்காட்டு. பொதுவாகவே இந்த நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது எதுவெனக் கேட்டுப் பாருங்கள்- தகுதிக்கு இடமளிக்காத இட ஒதுக்கீடு கொள்கைதான் என்பார்கள். ‘‘சாதி ஒழிய வேண்டும் என்கிறது அரசு. ஆனால் சாதிய உணர்வுகளை அரும்பிலேயே கிள்ளி எறியவேண்டிய பள்ளிக் கூடத்தில் குழந்தைகளைச் சேர்க்கும் போதே சாதி என்ன என்று கேட்கப்படுகிறது,’’ என இட ஒதுக்கீடு கொள்கை கொண்டு வரப்பட்டதன் வரலாற்றுத் தேவை என்ன என்பது குறித்த எந்தப் புரிதலுமின்றி மேலோட்டமாக எழுதுவார்கள். அப்படிப்பட்ட வாதங்களை உற்சாகமாக ஒளிபரப்புவார்கள்.

இதன் ஒரு முற்றிய வெளிப்பாடுதான், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து ‘‘உயர்’’ சாதி இளைஞர்கள் தெருவில் இறக்கிவிடப்பட்டபோது, அதற்கு இந்த ஊடகங்கள் அளிக்க முக்கியத்துவம். மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் ‘‘இனிமேல் நீ ஐஐஎம், ஐஐடி படிக்கலாம்’’ என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் சொல்வது போல் கார்ட்டூன் வெளியிட்டுத் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஏடு. இதற்குக் கண்டனங்கள் எழுந்த போது ‘‘அது கார்ட்டூனிஸ்ட்டின் சொந்கக் கருத்து’’ என்றெல்லாம் (பொதுவாகச் சொல்லப்படுவது போல்) அந்த ஏடு சொல்லிக் கொள்ளவில்லை. ஆகவே அந்த ஏட்டின் கருத்தும் அதுதான் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதையொட்டி தலைநகர் தில்லியின் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனை விவகாரம் வந்தது. அதன் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் இட ஒதுக்கீட்டை எதிர்த்ததோடு, கல்லூரி வளாகத்துக்குள் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளுக்கு இடம் ஒதுக்கினார்! ஆனால் நடுநிலை ஊடகங்கள் அதை மறைத்து, சுகாதார அமைச்சர் அன்புமணிக்கும் வேணுகோபாலுக்குமான தகராறாக ஊதிவிட்டன.

வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதான் அரசுத்துறை வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் சட்டத்தை, மண்டல் குழு அறிக்கை அடிப்படையில் கொண்டு வந்தார்.அப்போதும் இதே போல் கலவரத் தீ மூட்டப்பட்டது. அதனை அன்றும் இந்த ஊடகங்கள் பரபரப்புடன் வெளியிட்டன. வி.பி.சிங்கின் முடிவு சாதிய வாக்கு வங்கி அரசியல் என்று திட்டித் தீர்த்தன. ‘‘உயர்’’ சாதியினரின் ஆதிக்க அரசியலை மூடி மறைத்தன. ‘‘இந்தக் கிளர்ச்சி பரவட்டும்’’ என்று தலையங்கமே எழுதிய அன்றைய ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் அருண் ஷோரிக்கு பின்னாளில் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒரு நாற்காலி பரிசளிக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இச்செயல்களை ‘‘போராட்டம்'' என்று ஊடகங்கள் குறிப்பிடுதிலேயே கூட ஒரு அரசியல் இருக்கிறது. போராட்டம் என்பது நியாயமான சீற்றத்திலிருந்து வெடித்துக் கிளம்புவதைக் குறிப்பிடுவதற்கான சொல். ஒரு நியாயத்தை எதிர்த்து இவர்கள் நடத்துவதைப் போராட்டம் எனக் கூறுவது போராட்டம் என்ற சொல்லைக் கொச்சைப் படுத்துகிற செயல். அதனை வன்முறை, கலவரம் என்றே குறிப்பிட வேண்டும்.

மண்டல் எதிர்ப்புக் கலவரங்களின் ஒரு உச்சமாகத்தான் 1992ஆம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப் பட்டது. மசூதியைத் தகர்த்த மதவெறியின் அடியாழத்தில் சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்கவிடக் கூடாதென்ற இந்துத்வா அரசியல் ஊறிக் கிடந்தது. அதைப்பற்றிய செய்தி வெளியீட்டிலும் ஊடக வசிஷ்டர்களின் நடுநிலை நர்த்தனமாடியது. பல ஏடுகள் அதை ஒரு பரபரப்புச் சம்பவமாக மட்டுமே மட்டுமே சித்தரித்தன. கட்டுக்கடங்காத கூட்டத்தின் மட்டு மீறிய செயலாகவே வர்ணித்தன. ‘‘தேசிய நடுநிலை நாளேடு’’ என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ளும் ‘தினமலர்’ அந்தச் செய்திக்கு ‘‘பாபர் மசூதி தகர்ப்பு - ராம பக்தர்கள் ஆவேசம்’’ என்று தலைப்பிட்டிருந்தது. ‘‘ஆவேசம்’’ என்ற சொல் நீதிக்கான போராட்ட உணர்வைக் குறிப்பிடுவதற்கான சொல். ஏடுகளில் அரிதாகவே கையாளப்படுகிற சொல். அதனை அந்த ஏடு அன்றைக்கு ஒரு அநீதியைக் குறிப்பிடப் பயன்படுத்தியது என்றால் அதில் அரசியல் இல்லையா? சொல்லப் போனால் அந்த ஏட்டின் அவதாரமே மதவாதம்தான். மண்டைக்காடு பகுதியில் இந்து-கிறிஸ்துவ மக்களிடையே மோதல் வெடித்தபோது, இந்துக்களிடையேயான பத்திரிகைச் சந்தையைப் பிடித்துக் கொள்ளும் முனைப்புடன்தான் அப்போது புறப்பட்டிருந்த அந்த ஏட்டின் செய்திகள் தயாரிக்கப்பட்டன.

இப்போது எழுப்பப் படுகிற ராமர் பால கூச்சலை எடுத்துக் கொள்வோம். ஒரு பகுதி மக்களின் இறை நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு பாஜக, விஎச்பி, இந்து முன்னணி போன்ற சங் பரிவாரங்களும், அதிலே தனக்கும் ஆதாயம் இருக்கிறதென்ற கணக்கில் அதிமுகவும் செய்துகொண்டிருக்கிற அரசியலை எத்தனை ஊடகங்கள் அம்பலப்படுத்தின? அறிவியல் கண்ணோட்டம் வளர்வதைத் தடுப்பது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது என்ற நோக்கங்களைத் துருவியெடுத்து வெளியிட பெரிய நிறுவனங்கள் நடத்துகிற புலனாய்வு ஏடுகள் ஏன் முன்வரவில்லை?

அறிவியல் கண்ணோட்டத்திற்கு நேர்மாறாக மூட நம்பிக்கைகளை வளர்ப்பது, ஏற்கெனவே பரவியுள்ள மூடநம்பிக்கைகளை வியாபாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றில் மட்டும் ஒரு போட்டியே நடை பெறுகிறது!ஒவ்வொரு நாளும் தனியார் தொலைக் காட்சிகளின் காலை வணக்க நிகழ்ச்சிகளில் அன்றைய தினத்திற்கான ‘‘ராசி பலன்’’ சொல்ல மறப்பதில்லை. காலையில் பண்பலை வானொலியைத் திருப்பினால், ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஒவ்வொரு வகையில் அன்றைய கிரக பலன்களைக் கூறுகின்றன. வாராந்திர ராசி பலன் வெளியிடாத நாளேடுகள், வார ஏடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவ்வாறு வார பலன், தினப் பலன் வெளியிடுவது தொடர்பாக இரண்டு சுவையான நிகழ்ச்சிகள் உண்டு (இரண்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் மூலம் தெரிய வந்த தகவல்கள் என்பதால், அந்த நிறுவனங்களின் பெயர்களை இங்கே கூறப் போவதில்லை). ஒரு பண்பலை வானொலியின் காலை ஒலிபரப்பின்போது, அன்று அறிவிப்பதற்கென தயாரித்து வைக்கப் பட்டிருந்த சோதிடக் குறிப்பு எப்படியோ தொலைந்துவிட்டது. பதறிப்போன அறிவிப்புப் பெண்ணிடம் ‘‘பதட்டப் படாதே’’ எனக் கூறிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முந்தைய ஒரு மாதத்துக் கோப்பிலிருந்து ஒரு தாளை உருவியெடுத்து, ‘‘இதை அப்படியே வாசி,’’ என்றாராம். திகைப்புடன் பார்த்த அறிவிப்பாளரிடம், ‘‘எவனுக்குத் தெரியப் போகுது,’’ என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கூறினாராம்!

ஒரு வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கணினி தட்டசுக்குப் போவதற்கான நேரத்திற்குள் வார ராசிபலன் குறிப்புகள் தயாராகவில்லை. இது தெரிய வந்த போது அதன் ஆசிரியர் அலட்டிக் கொள்ளாமல், ‘‘கவலையே வேண்டாம். போன வாரம் போட்டதை எடுத்து வைத்துக் கொள். அதில் மேஷ ராசியில் இருப்பதை இந்த வார ரிஷப ராசிக்குப் போடு. கன்னியில் இருப்பதை கடகத்தில் போடு. விருச்சிகத்தில் இருப்பதை மிதுனத்துக்கு மாற்று. இப்படியே எல்லா ராசிக்கும் மாற்றி மாற்றிப் போடு,’’ என்று ஆலோசனை கூற அந்த வாரம் அதைத்தான் படித்தார்கள் ராசிபலன் நம்பிக்கையாளர்கள்! சோதிடமே ஒரு மோசடி, அதில் இப்படியாக ஒரு உள் மோசடி!

இப்படியாக மூடநம்பிக்கை சங்கதிகளைத் தருவதில் ஊடகங்களுக்கிடையே நடக்கிற போட்டியின் நோக்கம், மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்திக் காசாக்குகிற வியாபார தந்திரம் மட்டுமல்ல. போராட்ட உணர்வுகள் தலை தூக்காதவர்களாக மக்களை இப்படியே வைத்திருக்க வேண்டுமென்ற ஆளும் வர்க்க அரசியல் விருப்பமும் இருக்கிறது.கண்ணுக்குப் புலப்படாதது, ஆனால் கல்லைப் போல் வலிமையாக இருப்பது ஊடகங்களின் இந்த வர்க்க அரசியல். முதலாளி வர்க்கக் கோட்பாடுகளை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டு சந்தைப் பொருளாதார நலன்களுக்கு வக்காலத்து வாங்குகிற நிறுவனங்கள் மட்டுமல்ல இவை; அடிப்படையில் பெரிய முதலாளிகளால் நடத்தப்படுகிற நிறுவனங்களுமாகும். ‘கார்ப்பரேட்’ உலகில் நடக்கிற சூதுகள், அதிரடிகள், குழிபறிப்புகள், லாப வேட்கைக்கான வேட்டைகள்... ஆகிய அனைத்தும் ஊடக வட்டங்களுக்கு உள்ளேயும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான், வணிக விரிவாக்க நோக்கத்திற்காகத் தொழிலாளர் வர்க்கச் செய்திகளை அவ்வப்போது வெளியிட்டாலும், சுரண்டல் வர்க்க நலன்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வதாக அந்தச் செய்திகள் அமைந்துவிடக் கூடாது என்பதில் ஊடக சாணக்கியர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் பல ஊடகங்கள் எப்படியெல்லாம் சித்தரித்தன! குறிப்பாக முதலில் பார்த்த ‘தேசிய நடுநிலை நாளேடு’ அந்தப் போராட்டத்தை எப்படியெல்லாம் கேலியாக எழுதியது!

மதுரையில் ‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்டது பற்றியே அதிகம் பேசப்பட்டது. உண்மையிலேயே மக்களிடம் திரப்பட்ட கருத்தோ, அல்லது ராசிபலன் பாணியில் உருவாக்கப்பட்ட கருத்தோ - அதை வெளியிடுவதற்கு அந்த ஏட்டிற்கு உள்ள உரிமையை யாரும் பறிப்பதற்கில்லை. அதே சமயத்தில், ஊடகச் சந்தையில் ஏகபோகமாய்க் கோலோச்சுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கார்ப்பரேட் தர்மம் மூன்று ஊழியர்களது உயிர் பறிக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது என்பதைக் காணத்தவறக் கூடாது.

அதே கார்ப்பரேட் தர்மம்தான் இந்தியாவில் மதவெறி ஆதிக்கவாதிகளின் ஆட்சி ஏற்படுவதற்குக் காரணமானது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கையை ஒரு திரிக்கப்பட்ட வடிவில் ‘இந்தியா டுடே’ வெளியிட்டது. திமுக மீது கமிஷன் குற்றம் சாட்டியிருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சி அப்போது ஐ.கே. குஜ்ரால் அரசுக்கு (அதில் அப்போது திமுக அங்கம் வகித்தது) வெளியிருந்து அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்தே மத்திய ஆட்சி பீடத்தில் பாஜக ஏறியமர்ந்தது. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றை விசுவாசத்தோடு செயல்படுத்த, அதற்கு எதிராக எழுகிற மக்களின் உணர்வுகளை மதவாதத்தின் மூலம் திசை திருப்பக் கூடிய ஒரு அப்பட்டமான வலதுசாரிக் கட்சி இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பதே தோதானது. ஏகாதிபத்தியவாதிகள், உள்நாட்டு ஏகபோகவாதிகள் போன்றோரது இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுத்ததில் ‘இந்தியா டுடே’ நிர்வாகத்தின் வர்க்கப் பாசம் தெளிவாக வெளிப்பட்டது.

பாஜக-வை அதே ‘இந்தியா டுடே’, ‘துக்ளக்’ போன்ற ஏடுகள் அவ்வப்போது விமர்சிக்கவும் செய்கின்றன - அது நடுநிலைதானே என்று கேட்கலாம். அது, செய்வதைத் திருந்தச் செய்யாமல் இலக்கு நோக்கிச் செல்வதில் சொதப்பிவிட்டீர்களே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதானேயன்றி வேறொன்றுமில்லை.

இத்தகைய ஊடகங்களின் வர்க்க அரசியல், 2004ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிhன ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிக் கட்சிகளின் ஆதர வோடுதான் ஆட்சியமைக்கப் போகிறது என்பது உறுதியானபோது, ஒரு பதற்றமாகவே வெளிப்பட்டது. அடேயப்பா, எத்தனை வித மான கேலிகள் , ஊக ங்கள், அச்சுறுத்தல்கள்! காங்கிரஸ் கூட்டணி அரசால் நாட்டின் “முன்னேற்றத்துக்கான” தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கைகளைத் தாராளமாகச் செயல்படுத்த முடியாது, கம்யூனிஸ்ட்டுகள் கட்டையைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதே அந்தப் பதற்றத்தின் அடியிழை.

‘சன் நியூஸ்’ பேட்டி ஒன்றில், ஒரு பத்திரிக்கையாளரிடம் “இந்த அரசாங்கத்தை கம்யூனிஸ்ட்டுகள் ‘பிளாக்மெயில்’ செய்வார்களா,” என்று செய்தியாளர் கேட்க, அவர் மழுப்பலாக பதிலளித்தது திரும்பத் திரும்ப ஒளிப்பரப்பட்டது. ‘பிளாக்மெயில்’ என்பது மிகக் கடுமையான, இடதுசாரிகள் மீது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிற சொல். திமுக ஆதரவுத் தொலைக்காட்சியாக செயல்பட்ட அந்த நேரத்திலேயே, அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐமுகூ அரசுக்கு இடது சாரிகளின் ஆதரவை ‘சன் நியூஸ்’ இப்படிக் கொச்சைப் படுத்தைத் தயங்கவில்லை. அதன் வர்க்க அரசியல்தான் இதற்குக் காரணம் என விளக்க வேண்டியதில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலை பாட்டை அறிவித்த போது அதே பதற்றத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தின. முன்பும், பாஜக ஆட்சியில் இருந்த நேரத்தில் அதன் வேட்பாளராக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டார். ஆழ்ந்த அரசியல் ஞானமும் அனுபவமும் உடையவராக, மதச்சார் பின்மையில் உறுதியானவராக உள்ளவரே அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும் என அன்றைக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. உடனே “ குடியரசுத் தலைவர் பதவி அரசியல்வாதிகளுக்கு மட்டும் குத்தகையா” என்று கோபத்தோடு தலையங்கமே தீட்டியது `தினமணி.' அப்துலகலாம் ஒரு திறமை மிக்க அறிவியலாளர்தான். ஆனால், கடந்த ஆண்டுகளில் குழந்தைகளோடு ‘குவிஸ்’ விளையா ட்டுகள் நடத்திய அக்கறையில் கொஞ்சமேனும் அறிவியலுக்கே விரோதமான மதவெறியர் செயல்களைக் கண்டிப்பதில் காட்டியதுண்டா? ‘நாசா’ செயற்கைக் கோள் எடுத்தனுப்பிய புகைப்படத்தைப் பயன்படுத்தி கடலுக்கடியில் ‘ராமர் பாலம்’ இருப்பதாகக் கிளப்பும் சங்பரி வாரங்கள், தொழில் நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்த சேதுக்கால்வாய் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன. அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அதுபற்றி வாய் திறக்க வில்லை யே! பாஜக வுக்கு அதன் மதவாத அரசியலில் ஒரு தந்திரமாக ‘அப்துல் கலாம்’ என்ற இஸ்லாமியப் பெயரும், அவரைச் சுற்றிக் கட்டப்பட்ட படிமங்களும் பயன்பட்டன. அந்தப் படிமங்களை உருவாக்கியதே -ரஜினி காந்த் சினிமா வரும் போதெல்லாம் செய்வது போல்- ஊடகங் கள்தான்.

இவர்களது இடதுசாரி விரோத, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி விரோத அரசியலுக்கு, மேற்கு வங்க த்தின் சிங்கூர், நந்தி கிராமம் விவகாரங்கள் தொடர்பாக இவர்கள் இன்றுவரையில் எப்படியெல்லாம் செய்தி தருகிறார்கள் என்பதே சாட்சி. மார்க்சிஸ்ட் கட்சி தனது தொழில் கொள்கை என்ன என்பதைத் தனது திட்டத்திலும், அகில இந்திய மாநாட்டுத் தீர்மானத்திலும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அதன் தலைப்பைக் கூட படித்துப் பார்க்காதவர்களாக இவர்கள். சிங்கூர் கார் தொழிற்சாலை பிரச்சனையில் சிபிஎம் இரட்டை நிலை என்று கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே அவருக்கும் கட்சித் தலைமை க்கும் இடையே தொழில் கொள்கையில் கருத்து வேறு பாடு என்பதாக சித்தரித்து வருபவர்கள் இவர்கள். அண்மையில் ஒரு ஊடக நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என்ன, உங்கள் பிரகாஷ் காரத் சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரே,” என்றார். “ஆம், அதுதான் கட்சியின் நிலைபாடு. இதில் வியப்படைய என்ன இருக்கிறது,” என்று நான் சொன்னேன். உடனே அவர், “அதென்ன சிங்கூர் டாடா தொழிற்சாலைக்கு ஒரு நிலைபாடு, ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஒரு நிலைபாடா? முரணாக இருக்கிறதே, ” என்று கேலியில் ஊறவைத்து எடுத்த ஒரு தொணியோடும் சிரிப்போடும் கேட்டார். கட்சியின் தொழில் கொள்கை, எப்படிப்பட்ட தொழில்களில் பெரிய முதலீடு கள் தேவை, எவற்றில் தேவை யில்லை என கட்சி கூறுகிறது என்று சுருக்கமாகக் கூறினேன். அதற்கு அவர், “இதையெல்லாம் எந்தப் பத்திரிகையும் சொன்னதில்லையே,” என்றார். “தீக்கதிரையும் படியுங்கள்,” என்றேன் நான்.

சிங்கூர் விவகாரம் வந்த பிறகும் கூட, கட்சியின் தொழில் அணுகுமுறை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் தேவையற்ற செய்திகளாக சுருட்டி வைத்து விடுவதில் மறைந்திருப்பது இந்த ஊடக மிராசுகளின் அரசியல். நந்திகிராமத்தற்கு காவல் துறையினர் அனுப்பப்பட்டது நிலத்தைக் கையகப் படுத்துவதற்காக அல்ல. அந்த மக்களிடையே அப்படியொரு புரளியைக் கிளப்பிவிட்டு, “நிலப்பாதுகாப்பு இயக்கம்” என்பதன் பெயரால் ஆயுதங்கள் குவிக்கப்பட்டன. பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்பு இணைப்புகள் வெட்டப்பட்டன. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட உள்ளாட் சிப் பிரதிநிதிகளும் அரசுப் பணியாளர்களும் விரப்பட்டனடர். ஒரு தீவு போல் அந்த வட்டாரம் தனிமைப்படுத்தப்பட்டதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக வலது கோடி பாஜக, இடது கோடி நக்லைட்டுகள் என்று சேர்ந்து கொண்டனர். இதையெல்லாம் கொஞ்சம் கூட தெரியப்படுத்தாத ஊடகங்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சோகத்தை மட்டும் இன்றளவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இடதுசாரிகளை - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை - மக்களிடமிருந்து துண்டிப்பதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என இந்த ஊடகங்கள் நாக்கைச் சுழற்றிக் கொண்டு இறங்கியுள்ளன. இவற்றின் பின்னணியில் சிரிப்பது... உலகமய தாதாக்கள் முதல் உள்நாட்டுத் தனியார்மய போதகர்கள் வரை.

ஆக, ஊடகங்கள் அரசியல் செய்திகளை வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்வதில்லை, அரசியல் நடத்தவும் செய்கின்றன. தீக்கதிர், செம்மலர் போன்ற ஏடுகள் “நாங்கள் உழைக்கும் வர்க்கக் குரலை ஒலிப்பவர்கள்தான்” என்று வெளிப்படையாக, “நடுநிலை” ஒப்பனை போட்டுக் கொள்ளாமல் தலைநிமிர்ந்து கூறுகின்றன. வேறு பல அரசியல் கட்சிகள் நடத்தும் ஏடுகளும் ``எமது கட்சி அரசியலைக் கொண்டு செல்வதே எமது நோக்கம்'' என்று அறிவிக்கின்றன. இந்துத்வா கூடாரத்திலிருந்து அனுப்பப்படும் ஊடகங்களும் தமது முகத்தை மறைப்பதில்லை. இதர மத நிறுவனங்கள் நடத்துகிற ஊடகங்களையும் இந்த வரிசையில் சேர்க்கலாம். ஆனால் “நாங்கள் எந்தப் பக்கமும் சாராதவர்கள்” “எந்தச் சாயமும் பூசிக் கொள்ளாதவர்கள்” என்ற வனப்பு வார்த்தைகளைப் பகர்ந்தபடி வருகிற ஊடகங்கள் பூ நாகம் போன்றவை. எச்சரிக்கையோடு கையாளப்பட வேண்டியவை. குறிப்பிட்ட பிரச்சனையில் தனது கருத்து என்ன என்று சொல்லாமலிருப்பதே கூட ஒரு அரசியல்தான். வர்த்தகப் போட்டியின் காரணமாக பல தரப்புத் தகவல்களையும் வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் அவைகளுக்கு இருக்கிறது- நடுநிலை வேடம் கலையாமல் இருப்பதற் காகவாவது! அவ்வாறு இவர் கள் வெளியிடுகிற தகவல் களைத் தெரிந்து கொள்ளவும் வேண் டும், அவற்றின் அரசியலைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

Tuesday 3 July 2007

‘நிதானமிகு’ நடுநிலையாளரின் நிஜமான சொரூபங்கள்

அ.குமரேசன்

‘‘ராஜஸ்தான் ஒரு குஜராத்தாக மாறும்.’’-இப்படிச் சொன்னவர் யார்? குடியரசுத்தலைவர் தேர்தலில் ‘‘சுயேச்சை’’ வேட்பாளராகப் போட்டியிடுகிறவரும் தற்போதைய துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத்! குஜராத் போல ராஜஸ்தானிலும் பால் உற்பத்தி பெருகும் என்ற அர்த்தத்தில் அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. 2002ம் ஆண்டில் ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சராக சுற்றிக்கொண்டிருந்தபோது, மறுபடியும் பாஜக ஆட்சியை எப்படியாவது அங்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது ஷெகாவத் சொன்ன வார்த்தைகள் இவை.அவரது முழு வாக்கியத்தையும் தெரிந்துகொண்டால் இன்னும் தெளிவாகும்:‘‘முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துகிற வேலையையும், இந்துக்களுக்கு விரோதமான கொள்கைகளையும் மாநில (காங்கிரஸ்) அரசு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ராஜஸ் தானில் குஜராத் போன்ற நிலைமை ஏற்படும்.’’ (ஏப்ரல் 23 அன்று கங்காபூர் நகரில் நடந்த பாஜக கூட்டத்தில் பைரோன் சிங் ஷெகாவத் பேசியது . ஆதாரம் ‘தி ஹிண்டு’, ஏப்ரல் 30, 2002)

கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டி திடீரென நெருப்புக்கு இரையாக அதில் இருந்த கோயில் சுற்றுலாப் பயணிகள் அதில 58 பேர் உயிரிழந்தார்கள். அதைச் செய்தது முஸ்லிம்கள்தான் எனக் கிளப்பிவிட்டு குஜராத் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சங் பரிவாரம். ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் - குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட - கொன்று குவிக்கப்பட்டனர். நாடு முழுவதும் ஒற்றை மதவெறி ஆட்சியை நிறுவுவதற்கான சோதனைத் தளமாக குஜராத் மாற்றப்பட்ட அந்தப்படுகொலைகளும் உடைமை அழிப்புகளும் ராஜஸ்தானுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அப்பட்டமாக மிரட்டினார் ஷெகாவத். இவரைத்தான் ஒரு ‘‘நிதானமான’’ இந்துத்வா ஆள் என்றும், நடுநிலையாளர் என்றும் பாஜக தலைவர்களும் அதன் கூட்டணியில் உள்ளவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனம் முழுக்க சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துத்வா வெறுப்பும் பகைமையும் ஊறிப்போனவர் இவர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராகக் களம் காண்கிற பிரதிபா பாட்டீல் பற்றி சில ஊழல் புகார்களை எடுத்துவிட்டுப் பார்த்தது பாஜக. செய்திகளாகக் கூட வராத அந்தப் புகார்கள் மக்களிடம் எடுபடவில்லை. கண்ணாடி வீட்டிற்குள் அம்மணமாக நின்றுகொண்டு வெளியே உள்ளவர்களைப் பார்த்து ‘‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’’ என்று கிண்டல் செய்வது போன்றதுதான் பாஜக இப்படி பிரதிபா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீசுகிற செயல். ஏனென்றால் இவர்களது ‘‘நிதானமிகு’’ சுயேச்சை வேட்பாளர் அரசியலுக்குள் நுழைந்ததே ஒரு ஊழலின் பின்னணியில்தான்!

60 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் காவல் துறையில் ஒரு காவலராக (கான்ஸ்டபிள்) இருந்தவர் ஷெகாவத். நாடு விடுதலையடைந்த எட்டாவது நாளில் 1947 ஆகஸ்ட் 23 அன்று) அந்த வேலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கைக்கான காரணம் - லஞ்சம் வாங்கினார் அல்லது முறைகேடாக நடந்துகொண்டார் என்பதுதான்! இடை நீக்கக் காலம் முடிந்து மறுபடி வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றாலும் சில நாட்களில் வேலையை விட்டு விலகி முழு நேர அரசியலில் குதித்தார்.

ராஜஸ்தானின் முதலமைச்சராக 1977-80, 1990-92, 19993-98 ஆகிய காலகட்டங்களில் மூன்று முறை பதவியில் இருந்தவர் ஷெகாவத். ஒரு பக்கம் அரசு எந்திரத்தை மதவெறிமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை இக்கால கட்டங்களில் எடுத்து இந்துத்வா கூடாரத்தை வளர்த்தார். இன்னொரு பக்கம் ஊழல்களை வளர்த்தார்.

உதாரணத்திற்கு இவர் நெருக்கமாக சம்பந்தப்பட்ட ஒரு ஊழல் விவகாரம்: இவர் முதலமைச்சராக இருந்த போது, 1994ம் ஆண்டில் இவரது மருமகன் நர்பத் சிங் ராஜ்வி, நில ஆவணங்களில் மோசடி செய்து, சுமார் 560 ஏக்கர் நிலம் தனக்குச் சொந்தமானதுதான் என்று கணக்குக் காட்டினார். பிகானூர் பகுதியில் விவசாயத்துக்காகவும் குடிநீருக்காகவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. இந்திரா காந்தி கால்வாய் என்ற அந்தத்திட்டத்திற்காக அரசு கையகப் படுத்திய நிலத்தில் குறிப்பிட்ட பகுதி தனக்குச் சொந்தமானது எனக் கூறி அதற்கான இழப்பீட்டுத் தொகையாக கோடிக்கணக்கில் கோரினார். அப்புறம் அந்த நிலம் அவருக்குச் சொந்தமானது அல்ல என்பதும், இழப்பீட்டுத் தொகையை ஆட்டை போடுவதற்காக, அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் தன்னுடையது என அரசாங்க ஆவணங்களில் மோசடியாகப் பதிவு செய்தார் என்பதும் அம்பலமானது. ராஜ்வியின் தந்தை ஒரு வட்டாட்சியராக இருந்தவர். அவர்தான் ஆவணங்களில் தகிடுதத்தம் செய்து, பிகானூர் மாவட்டத்தின் மோம்வாலா என்ற கிராமத்தில் அந்த 560 ஏக்கர் நிலம் தனது மகனின் சொத்து என பதிவு செய்தார். திருடர்கள் ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொள்வது போல, அந்த ஆவணத் தேதிகள், ராஜ்வி பிறப்பதற்கும் முந்தைய தேதிகளாக திருத்தப்பட்டிருந்ததால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது!அந்த விவகாரத்தில், தனது ஒரே மகளின் கணவரைக் காப்பாற்றவே அன்றைய முதல்வரான ஷெகாவத் முயன்றார். அது மட்டுமல்ல மேற்படி நில ஆவண மோசடிப் பேர்வழி இப்போது ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே அரசில் ஒரு அமைச்சராக இருக்கிறார்!

ஷெகாவத்தின் மற்றொரு நெருங்கிய உறவினர், முதலமைச்சர் குடும்பம் என்பதைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் ஏகப்பட்ட நிலத்தைச் சுருட்டுவதற்கு ஆவணங்களில் திருகுதாளம் செய்தார். அதற்குத் தோதாக நிலக்குத்தகை தொடர்பான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்று சில ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஷெகாவத். 1992ல் இந்த விவகாரம் அக்கறையுள்ள சில ஊடகங்களால் வெளியே வந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுரேந்திர வியாஸ் என்பவர் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாணுக்குக் கடிதம் எழுதி, மேற்படி சட்ட மசோதாவை நிறுத்திவைக்கக் கோரினார்.

இந்த மாதிரியான ஊழல் மட்டுமல்ல, வேறு ‘‘ஒரு மாதிரியான’’ நடவடிக்கைகளும் ஷெகாவத் ஆட்சியில் அரங்கேறின. அப்போது அவருக்கு நெருக்கமானவராக இருந்தவர் ஷாலினி சர்மா என்பவர். அல்வார் பகுதியில் பாஜக வட்டாரத் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்டு மேலிடத்துக்குச் சென்ற பெண் அவர். சமூக நலத் துறையின் துணைத் தலைவராக ஷெகாவத்தால் நியமிக்கப்பட்டவர். ஆனால் சில நாட்களில் அவரும் அவரது கணவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு - ஒரு பள்ளி ஆசிரியையை சில மேல்மட்டத் தலைவர்கள், மந்திரிகள், எம்எல்ஏ-க்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் காமப் பசிக்கு இரையாக்கினார்கள் என்பது! விவகாரம் அம்பலமானதால் வேறு வழியின்றிப்போக அந்த லட்சியத் தம்பதியைக் கைது செய்ய வேண்டியதாயிற்று. அப்புறம் பார்த்தால், அவர்கள் இதே தொழிலாக இருந்து, பல மேலிடத்தவர்களுக்குப் பல பெண்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது. ஆனாலும் ஷாலினியும் அவரது கணவரும் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஷாலினியைப் பெரிய ஆளாக வளர்த்துவிட்டது ஷெகாவத்தும் ராஜ்வியும்தான் என்று எழுந்த குற்றச்சாட்டு அத்தோடு அமுக்கப் பட்டது.

குடியரசுத்துணைத்தலைவராக ஷெகாவத் மிக ‘‘நடுநிலையாக ’’ நடந்துகொண்டார் என்றும் அதற்காக அவரை இப்போது ஆதரிக்க வேண்டும் என்றும் சிலர் கூசாமல் கூறுகிறார்கள். 2002-2003ம் ஆண்டுகளில் அவர் டில்லியிலிருந்து அடிக்கடி ராஜஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது குறைந்தது 16 முறை அவர் ஜோத்பூர், கோட்டா, உதய்ப்பூர், ஜெய்ப்பூர், துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ‘டிரிப்’ அடித்தார். குடியரசுத் துணைத்தலைவர் என்ற முறையில் தாம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராகச் செயல்பட வேண்டும் என்ற குறைந்தபட்ச நெறிமுறையை அப்பட்டமாக மீறி பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளர் போல, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டார்.

இவ்வளவு ஏன்? ஆர்எஸ்எஸ் நடத்தும் ‘ஆர்கனைசர்’ ஏட்டின் 2006, மார்ச் 26 இதழ் கோல்வாக்கர் சிறப்பிதழாக வெளியானபோது, அவரைப் புகழ்ந்து அதில் கட்டுரை எழுதினார் ஷெகாவத். மக்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் எனப் பாகுபடுத்தி, சூத்திரர்களையும், தலித்துகளையும், எந்த வர்ணமானாலும் அனைத்துப் பெண்களையும் இழிவுபடுத்தும் மனுதர்மம்தான் நாட்டின் அரசமைப்புச் சட்டமாக ஏற்கப்பட வேண்டும் எனக் கூறியவர் கோல்வாக்கர். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப் பட்ட அரசமைப்புச் சட்ட நிர்ணயக் குழுவை ஏற்க முடியாது என்றவர். அந்த கோல்வாக்கரைத்தான், மிகச் சிறந்த தேசியவாதி என்றும், நாட்டுப்பற்றாளர் என்றும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றும் எழுதினார் - மக்கள் அனைவரும் சமம் எனக் கூறும் அரசமைப்பு சாசனத்தைப் பாதுகாக்கிற பொறுப்பில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத். இவர் இப்போது குடியரசுத் தலைவராகவே வரத் துடிப்பது ஏனென்று விளக்க வேண்டியதில்லை.

நாட்டின் வரலாற்றில் ஒரு பெண் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ள சூழலில், இந்த ஷெகாவத், பிரதிபா பாட்டீலை எதிர்த்துப் போட்டியிடுவதில், இந்துத்வாவின் அடிப்படையான பெண்ணடிமைச் சிந்தனையும் இருக்கிறது. இவர் முதலமைச்சராகக் கோலோச்சிய 1993-98 காலகட்டம்தான், ராஜஸ்தானில் வன்புணர்ச்சி உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மிக அதிகமாக நடந்த காலகட்டம். பாலியல் கொடுமைகள் எட்டு மடங்காக அதிகரித்த காலகட்டம். மாதர் அமைப்புகளைச் சேர்ந்தோர் இதை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அப்போது ஷெகாவத் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘அங்கும் இங்குமாக நடக்கிற ஒன்றிரண்டு கற்பழிப்புச் சம்பவங்கள் குறித்து ஏன் இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்?...’’ என்று கேட்டார்! ஷாலினி சர்மா போன்றவர்களை வளர்த்துவிட்டவருக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியாததில் என்ன வியப்பு இருக்க முடியும்?

நடுநிலையாளர், மிதவாதி, நிதானமானவர், மென்மையாகப் பேசுகிறவர், ஊழல் கரை படியாதவர் என்பதாகவெல்லாம் கட்டிவிட்டு பைரோன் சிங் ஷெகாவத்தை நிறுத்தித் தனது காய்களை நகர்த்துகிறது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல். அவரது உண்மையான லட்சணம் என்ன என்பதற்கு சில சோற்றுப் பதம்தான் மேற்கண்ட விவரங்கள். நம் கிராமங்களில் புழங்கும் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது: ‘‘யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை.’’

Sunday 1 July 2007

குடியரசுத் தலைவர் தேர்தல் / விவாதம்

முந்தியே வருவாய்

முதல் குடிமகளாய்

அ.குமரேசன்

நாட்டின் முதல் குடிமகன் என்றுதான் இது வரையில் இருந்து வந்திருக்கிறார்கள். முதல் குடிமகள் என இருந்ததில்லை. முதல் குடிமகனின் மனைவி என்ற முறையில் குடியரசுத் தலைவருடைய மனைவியை அவ்வாறு குறிப்பிடுகிற பழக்கம் இருந்து வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அதிகாரப்பூர்வமாகவே முதல் குடிமகள் பொறுப்பேற்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிக் கட்சிகள் தமது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை அறிவித்ததன் மூலம், ஒரு பெண் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு விரியத் திறக்கப் பட்டிருக்கிறது கதவு.
வேட்பாளரைத் தேர்வு செய்வதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு என்றும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரை வற்புறுத்தியதாகவும் ஊடக மகா மணிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி உ.பி. தேர்தலில் மாயாவதிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி தனது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கூசாமல் சொன்னது. செய்தியாளர்களிடம் திரும்பத் திரும்ப அத்தகைய விருப்பம் எதுவும் மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடையாது என்று விளக்கிய பிறகும் அதையே சொல்லிக் கொண்டிருந்ததில் இந்த ஊடக மகா மணிகளுக்கு உள்நோக்கம் ஏதும் கிடையாதென சொல்லிவிட முடியாது. மார்க்சிஸ்ட் கட்சியினரைப் பதவியாசை உடையவர்களாக மக்கள் முன் சித்தரித்துக் காட்டுகிற நோக்கம்தான் அது.
ஜூன் 14 அன்று மாலை தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருப்பதையும் அதில் யார் யாருடைய பெயர்கள் அடிபடுகின்றன என்பதையும் சில தொலைக்காட்சிகள் பரபரப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் பிரதிபா பெயர் முன்னுக்கு வந்துகொண்டிருப்பதாக ‘‘ஃபிளாஷ்’’ குறிப்புகள் வரத் தொடங்கின. அன்று மாலை அவரையே வேட்பாளராக அறிவிக்க அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக சோனியா காந்தி அறிவித்தார். எல்லோரும் பிரதிபா ஷெகாவத் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். பரபரப்பு அரசியலில் அடிபடாத பெயர் என்பதால் யோசித்தவர்கள் கூட, ஒரு பெண் வேட்பாளர் என்ற புதுமையில் பூரிப்படைந்தனர்.
நாடாளுமன்றத்திற்குள்ளேயே 33 சதவீத பெண்கள் நுழைய விட மாட்டோம் என பலப்பல வழிகளில் தடுத்துக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, நாட்டின் மிக உயர்ந்த பதவிக்குப் பெண் வருவதை சகித்துக் கொள்ள முடியுமா? இதற்கும் பலப்பல வழிகளில் தடை தேடினர். பாஜக தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரான பைரோன் சிங் ஷெகாவத்தை ‘‘சுயேச்சை’’ வேட்பாளராக நிறுத்தினர். அவரும் தன்னை அவ்வாறே அறிவித்துக் கொண்டார். சொந்த மன அரிப்பு அடிப்படையில் அரசியல் நடத்துகிறவர்கள் காங்கிரஸ் - இடதுசாரி வேட்பாளராக யார் முன் மொழியப்பட்டாலும் அவரை எதிர்ப்பது என முடிவு செய்தனர். கௌரவமாக விடைபெறவேண்டிய அப்துல் கலாம் பெயரையும், அந்தப் பெயருக்கு நம் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள மதிப்பையும் தங்களது அரசியல் விளையாட்டுக்குப் பயன் படுத்த முயன்றனர். தொடக்கத்தில் ‘‘எல்லாரும் ஏற்றுக் கொண்டால்...’’ ‘‘நிச்சயமான நிலை ஏற்பட்டால்’’ என்றெல்லாம் ஒரு மாதிரியாக இழுத்து மனிதருக்கு கொஞ்சம் நப்பாசை இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்திய கலாம் பின்னர் நிலைமைகளைப் புரிந்துகொண்டவராக அரசியல் ஆட்டத்தில் பகடைக்காயாக விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.
இப்போது பிரதிபா ஷெகாவத்துக்கு எதுவும் தெரியாது என்பது போல் சித்தரிக்க முயல்கிறார்கள். அவர் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக ஆதாரமற்ற செய்தி வெளியிடுகிறார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பிரதிபாவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதாக இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார்கள்.
அரசமைப்பு சாசனத்தின் பாதுகாவலராகச் செயல்பட வேண்டிய பதவி என்பதை மறந்து, நாட்டின் பலகட்சி முறை அரசியல் கட்டமைப்புக்கு எதிராக, இரண்டு கட்சி முறை வேண்டும் என்று பேசிய அப்துல் கலாமுக்கு மக்களின் பேராதரவு இருப்பதாகவும், ஆர்எஸ்எஸ் ஆளாகிய பைரோன் சிங் ஷெகாவத்துக்கு கருத்துக் கணிப்பில் இரண்டாவது இடம் என்றும் கூறி ஒரு வித மூளைச்சலவைக் கைங்கர்யத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு கருத்துக் கணிப்பு உண்மையாகவே நடத்தப் பட்டதாக வைத்துக் கொண்டாலும், சமுதாயத்தின் ஊறிப்போன ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு அது என்பதைச் சொல்ல மறுக்கிறார்கள்.
குடியரசுத்தலைவர் பதவி என்பது எம்எல்ஏ, எம்பி போல மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதல்ல. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற பதவி அது. அவர்கள் தத்தம் கட்சிகளின் கொள்கைகள், முடிவுகள் அடிப்படையிலேயே வாக்களித்து வாக்களிப்பார்கள்.
மாறுபட்ட சாதிகள், மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள் என உண்மையாகவே பன்முகத்தன்மை கொண்டது இந்தியா. இங்கு பல கட்சி ஆட்சி முறையும், தற்போதுள்ள குடியரசுத்தலைவர் தேர்தல் முறையும்தான் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உகந்தவை. இது பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி இன்றைய குடியரசுத்தலைவர் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய பிரச்சனைகளைக் கிளறுவது ஆபத்தானது.
ஒரு பெண் முதல் குடிமகளாக அமர்வது என்பதில், ஒரு பெண் முதல் முறையாக அந்தப் பொறுப்புக்கு வருகிறார் என்ற சிறப்பு மட்டுமே இல்லை. அதற்கும் மேலாகப்பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் மிகச்சிறந்த தலைமை வழங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் கலாச்சாரம் மற்றும் கல்வி நிதி அமைப்பு (யுனிசெப்) கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் சந்திரா.
"சென்ற ஆண்டு உலக அளவிலேயே பெண்கள் பல மட்டங்களில் தலைமைப் பொறுப்பிற்கு வந்தள்ளனர். சிலி நாட்டின் ஜனாதிபதியாக முதல் முறையாக ஒரு பெண் மிகேல் பார்ஸ்லெட் - தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரேசில் நாட்டில் லாரா என்ற பெண் முதல் முறையாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் ஆட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சகோலின் ராயல் தோல்வியடைந்தார் என்றாலும் உலகம் முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடிந்தது. அமெரிக்காவில் அடுத்த அதிபராக ஹிலாரி கிளின்டன் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது," என்கிறார் சந்திரா.
குவைத் நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருந்தது. வாக்குரிமை அளிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு மஹ்ஜூமா - அல் - முபாரக் என்ற பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு அமைச்சகப் பொறுப்பு தரப்படும். இவரிடம் அரசு நிர்வாகம் மற்றும் திட்டமிடுதல் என்ற முக்கியமான துறை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட யுனிசெப் அறிக்கை பல நாடுகளில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இதில் முதல் இடம் வகிப்பது ருவாண்டா நாடுதான். அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 48.8 சதவீதம் பேர் - கிட்டதட்ட 50 சதவீதத்தினர் - பெண்கள். இந்தியாவின் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை அந்த அறிக்கை வரவேற்கிறது. மேற்கு வங்கத்தில் பெண்கள் தலைவர்களாக உள்ள உள்ளாட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் செல்படுத்தப்படுவது ஆண் தவைர்கள் உள்ள உள்ளாட்சிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் சந்திரா அந்த அறிக்கையை மேற்கொள் காட்டுகிறார். பெண்களின் தலைமையில் உள்ள உள்ளாட்சிகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது அதிகரித்திருக்கிறது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவது என்பது குறைந்திருக்கிறது என்றும் பெருமிதத்தோடு கூறுகிறார் சந்திரா.
"இதுவரையில் பெண் குடியரசுத் தலைவர் ஆகவில்லை. சென்ற முறை கேப்டன் லட்சுமி செகால் போட்டியிட்ட போது இந்த பெரிய கட்சிகள் அதை கண்டுக்கொள்ளவில்லை. இப்போது ஓராளவு தலையிடக்கூடிய அளவுக்கு இடதுசாரி கட்சிகளுக்கு பலம் கிடைத்திருக்கிறது. இடதுசாரி கட்சிகள், முற்போக்கு கட்சிகள் ஆகியோரது உறுதியான நிலைப்பாட்டால் பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அருமையாக உருவாகி உள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் ஆதரிப்பது நாட்டிற்கு செய்கிற ஒரு கடமை," என்கிறார் முனைவர் பத்மாவதி விவேகானந்தன்.
"நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை இன்னும் அறிமுகப்படுத்தகூட முடியாமல் இருக்கிறது. ஒவ்வொருவிதமான காரணம் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் பெண்ணுக்கு அதிகாரம் என்பதை ஏற்கிற மனநிலை என்பதைதான் அது காட்டுகிறது.பெண்களை அதிகார மற்றவர்களாக வைத்திருப்பதே ஆண்களுக்கு சாதகமானது என்ற ஆணாதிக்க எண்ணம் வலுவாக இருக்கிறது. இந்த நிலையில்தான் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு என்பது முக்கியத்துவம் பெருகிறது. பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் அவரே கையெழுத்திடுகிற சூழல் உருவாகும் என்று நம்புகிறேன்," என்கிறார் பத்மாவதி.
மூத்தவர்கள் இப்படிச் சொல்வது இருக்கட்டும். இளைய தலைமுறை என்ன சொல்கிறது? ‘‘பிரதிபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப் படுவது இந்தியாவின் சமூகப் பண்பாடு வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என நினைக்கிறேன்,’’ என்று முதிர்ச்சியான ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார் இதழியல் துறை மாணவி எம். கே. பிரமிளா.
"உலக அரங்கில், அரசியல் கலத்தில் வளரும் நாடுகள் சார்பில் விடுக்கப்படும் பெண் விடுதலைக்கான அறைகூவல் இது," எனக் கூறும் பிரமிளா, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கும் சூழலில் குடியiசுத் தலைவராக ஒரு பெண் பொறுப்பேர்ப்பதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. பாரத மாதா என வர்ணிக்கப்படும் இந்தியத் தாய்நாட்டில் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்பதால் அந்தப் பதவி மட்டுமல்ல பெண்மையும் அர்த்தப்படும். பெண் விடுதலையை விரும்புகிற எவரும் கட்சிப்பாகுபாடு இல்லாமல் பிரதிபாவை ஆதரிக்க வேண்டும்," என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஆய்வாளரோ ஊடகத்துறை மாணவராகவோ அல்லாமல் பத்திரிகைகளில் வரும் கதைகளை படிக்கிற ஒரு சராசரிப் பெண் கங்கா தேவி. தொழிலாளர் நல வாரிய ஊழியருமான அவர், " எனக்கு கோர்வையாக சொல்லத் தெரியவில்லை. ஆனால் இது வரை இல்லாத ஒன்று இந்தியாவில் இப்போது நடக்கப்போகிறது அதை நினைக்கும்போது ரொம்ப பெருமையாகவும் பரவசமாகவும் இருக்கிறது," என்கிறார்.
பிரதிபாவுக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறார்களே என்று கேட்டபோது, "அது எப்படி சொல்ல முடியும்? அரசியலில் இத்தனை வருடமாக ஈடுபட்டு வந்திருப்பவர். ஒரு வேளை வேறு சிலரை போல பரபரப்பாக ஏதாவது செய்கிற அரசியல்வாதியாக அவர் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக மக்களின் வாழ்க்கை நிலையை புரிந்தவராகத்தான் இருப்பார். அப்படி இல்லாமல் இத்தனை பொறுப்புகளை அவரால் நிறைவேற்றி வந்திருக்க முடியாது," என்று கோர்வையாகவே பதில் அளிக்கிறார் கங்கா.
"தங்களுக்கு ஒத்துவராதவர்கள் பற்றி ஊடகங்கள் மூலம் இப்படியெல்லாம் தவறான பிரச்சாரம் செய்வது பாஜக வகையறாக்களுக்கு கைவந்த கலை," என்கிறார் சந்திரா.
"பிரதிபா சட்டம் படித்தவர். வெற்றிகரமான வழக்கறிஞராக செயல்பட்டவர். வீட்டு வேலை செய்யும் பெண்களைத் திரட்டி அவர்களுக்கான சட்டச்சலுகைகள் கிடைக்க போராடியவர். அமைச்சராக பல துறைகளில் செயல்பட்டு விரிவான அனுபவம், அரசாங்க செயல்பாடுகள் குறித்த ஞானமும் உள்ளவர். மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றி அரசியல் கட்சிகளை எவ்வாறு நடத்துவது என்பதை அறிந்தவர். அவரது ஒரே குறைபாடு பரபரப்பு அரசியல் நடத்த தெரியாதவர், எளிமையாக இருப்பவர் என்பது மட்டும்தான்.
ராஜஸ்தான் மாநில ஆளுனராக , மக்கள் நலனில் அக்கறையோடு திறம்பட செயல்பட்டதற்கு ஒரே சான்று, அந்த மாநிலத்தின் பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச்சட்டத்தில் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பினார் என்ற தகவலையும் சந்திரா தெரிவிக்கிறார். சங் பரிவாரத்திற்கும், அவர்களுக்கு இணையாக தமிழகத்தில் மத மாற்றம் தடைச்சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதாவிற்கும் பிரதிபா பாட்டீலை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான பதிலும் இதில் இருக்கக்கூடும்!
நாட்டு விடுதலையின் வைர விழா தொங்கும் போது கோட்டையில் கொடி ஏற்றி வைத்து வாழ்த்துச் சொல்கிறவர்களாக பெண் நடைபோட்டு வரட்டும். இந்நாட்டு குறுகிய மனங்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே ஒரு உரத்த செய்தியைச் சொல்லட்டும். " நாங்கள் வருகிறோம்," என்ற, சமுத்துவ உரிமைகளை சமர்புரியும் பெண்கள், அதற்கு உணர்வ பூர்வமாக துணை நிற்கும் ஆண்களின் குரல்தான் அந்தச் செய்தி.

இடம்

கடவுள் காலடி
தலைவர் கழுத்து
பெண்ணின் கூந்தல் -
எதுவும் அல்ல.
பூவுக்கு அழகாய்
பொருந்தும் இடம்
செடி மட்டும்தான்.
மனிதரில் யாருக்கு
சலுகை எனில்
மழலைத் தளிருக்குத்தான்.

-அ.குமரேசன்