Monday 18 May 2009

குழந்தைகளுக்கு எழுத



குழந்தைகளுக்கு எழுத குழந்தை மனம் வேண்டும்
“குழந்தைகளுக்காக என்று வரும் புத்தகங்களில் வரலாறு, அறிவியல், கதை, அறிவுரை என்று எல்லாம் இருக்கிறது. குழந்தையின் வியப்பு மட்டும் இல்லை... மன்னர்களின் சாகசங்களைச் சொல்லும் புத்தகங்களில் அவர்கள் மக்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள்தான் என்ற உண்மையையும் சொல்ல வேண்டாமா? ஆகப்பெரும்பாலான புத்தகங்கள் மிடில் கிளாஸ் குழந்தைகளைத்தான் மனதில்கொண்டதாக எழுதப்படுகின்றன... புத்தகம் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களைச் சென்றடையும் வரையில் ஓய முடியாது. குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கிடைக்கும் வாய்ப்பு என்பது ஒரு முக்கியமான பிரச்சனை. நான் பார்த்த அளவில் மிகக் குறைவாகப் புத்தகம் வாங்குகிறவர்கள் ஆசிரியர்கள்தான்...
எதை எழுதுவது என்பதில் அவரவர் சார்பு வெளிப்படத்தான் செய்யும். நான் ஒருபோதும் ஆன்மிகப் புத்தகம் போட மாட்டேன். அதற்கு வெளியே ஆயிரம் இருக்கிறது. அதையெல்லாம் எப்படிச் சொல்வது என்பதுதான் என் கவலை. நீதிக்கதை எழுதக்கூடாது. கடந்த கால நீதிக்கதைகள் குழந்தைகளை ஷேப் பண்ணவில்லை. குழந்தைகள் பார்க்கும் டிவி வேகமாகவும், புத்தகம் மிக மெதுவாகவும் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். குழந்தை மொழி என்றால் என்னவென்று என்சைக்ளோபீடியாவில் இல்லை. ஆனால் குழந்தைகளிடம் இருக்கிறது. எழுதிவிட்டு அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் அதை உருமாற்றம் செய்வார்கள், சரியான குழந்தை மொழி நடை கிடைக்கும்.”
-இவை தமுஎகச பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியவை. சென்ற மாதம் சென்னையில் கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் புத்தகங்களுக்கான பட்டறை ஒன்றை நடத்தியது. அதைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறினார். குழந்தைகளுக்குக் கதைசொல்வதில் பிரியம் உள்ள எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றார்கள். சம்பிரதாய நடைமுறைகள் இல்லாமல், ஒரு சிறப்பு அழைப்பாளரின் அறிமுகம், அதன் மீது பங்கேற்பாளர்களின் வெளிப்படையான விவாதம் என்ற வடிவில் ஆரோக்கியமான ஒரு முகாமாகவே அது நடந்தது.
தொடக்க உரையின் மீது ஒரு கேள்வி எழ அதற்கு தமிழ் அளித்த பதில்: “பெரியவங்க செருப்பை போட்டுக்கிட்டு நடக்க குழந்தைகள் விரும்புவது போல பெரியவங்க புத்தகத்தையும் குழந்தைகள் படிப்பார்கள்.”
எழுத்தாளர் இரா. நடராசன், “மனப்பாட மெஷின்களாக்கப்பட்டிருக்கிற நம் குழந்தைகளைப் பாடப்புத்தகங்களிலிருந்து மீட்கிற, உலகத்தை கதையை நேரடியாகக் காட்டுகிற புத்தகங்கள் குழந்தைகளுக்குத் தேவை. ஆங்கிலப் புத்தகங்களில் குழந்தைகள் நாவல், பெரியோர் நாவல் என்றெல்லாம் கிடையாது. குழந்தைகள் எதை அதிகமாக வாங்குகிறார்களோ அதை வகைப்படுத்திக் கொள்கிறார்கள். ஹாரி பாட்டரின் வெற்றி அதன் பள்ளிக்கூட எதிர் நிலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்,” என்றார்.
சிறுவர் மொழி என்பது பற்றிப் பேசிய பா. ராகவன், “உலகிலேயே மிகச் சிரமமான செயல் சிறுவர்களுக்கு எழுதுவது. அதைவிடச் சிரமம் அவர்களை ரசிக்க வைப்பது. ஏதோ சொல்லவந்ததை கதை வடிவில் சொல்கிற முயற்சிதான் நடக்கிறது. கதையை கதையாகச் சொல்கிற முயற்சி இல்லை,” என்று சரியாகவே தொடங்கினார். ஆனால் அப்புறம், “எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், குழந்தைகள் அதை ரசிப்பது போல் எழுதவேண்டும் அவ்வளவுதான்,” என்று தாராளமயமாக்கினார். பின்னர் அவரே “இதில் பொது விதி என்று எதுவும் கிடையாது. விதிகளை மீறலாம் - இலக்கணத்தை அறிந்து மீறுவது போல்,” என்றும் கூறினார்.
எளிமையான, குறைவான சொற்களில் இருக்க வேண்டும், சுவாரசியமாக இருக்க வேண்டும், தகவல்களில் பிழைகள் கூடாது, போதனை செய்யும் தொனி கூடவே கூடாது, நிறைய படங்கள் சேர்க்கலாம், ஒரு வாக்கியம் நான்கைந்து சொற்களுக்கு மேல் போகாமல் இருக்க வேணடும், ஒரு பத்தி மூன்று வாக்கியங்களுக்கு மேல் போகக்கூடாது, குழந்தைகளின் தோளில் கைபோட்டுக்கொள்வது போல் நேரடியாகப் பேசும் தொனியில் எழுதவேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினார் ராகவன்.
“புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் என்ன தொடர்பு? அதைப் போலத்தான் குழந்தை இலக்கியத்துக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் நிலைதான் இருக்கிறது,” என்றார் வெண்ணிலா.

“குழந்தைகளின் மன உலகம் முக்கியமானது. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறோமா. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எல்லாமே புதுசு. அந்த வயதில் உருவாகும் கற்பனாவுலகத்தை எழுத்தாக்க முடிந்திருக்கிறதா? இந்தியச் சூழலில் குழந்தையைப் புரிதல் என்பதே பிரச்சனைதான். குழந்தை மனம்போல் இலக்கற்ற பயணம் உள்ள படைப்பு தேவை. டிவி சீரியல் பார்க்கிற குழந்தையும் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தால் அதைத் திரும்பிப் பார்ப்பது குழந்தைத்தனமாகவே இருக்கும்,” என்றார் கவிஞர்.
புதுவை அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஹேமாவதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுகு அறிவியல் கல்வியே பகுத்தறிவுக் கல்வியாகவும் அமையும் என்றார். “இக்குழந்தைகளுக்கு புதிர் விடுவிப்புச் செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் அறிந்த செய்திகளிலிருந்தே தொடங்குவது பலனளிக்கும்,” என்றார் அவர். அறிவியல் செய்திகளுக்கான உரையாக இருந்தாலும் குழந்தைகளுக்கான இலக்கிய அணுகுமுறைக்கான அடிப்படைகளும் அந்த உரையில் இருந்தன.
“அப்புறம் என்னாச்சு,” என்று குழந்தை கேட்டால் அது வெற்றிகரமான கதை என்று அடையாளம் காட்டினார் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் எழுதியவரான ரேவதி (என்ற ஹரிஹரன்). “குழந்தைகளிடம் பேச ஆரம்பித்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களே உங்களை மேலே கொண்டுபோய்விடுவார்கள்,” என்றும் குறிப்பிட்டார் ‘கோகுலம்’ ஏட்டின் முன்னாள் ஆசிரியரான ரேவதி.
அறிவியலையும் கணிதத்தையும் இனிப்பாகச் சொல்லித்தர முடியும் என்றார் பத்ரி சேஷாத்திரி. அவர் சொன்னதில் முக்கியமானது, “கேள்வி கேட்கும் மன நிலையை - அறிவியல் மனப்பான்மையை - கொண்டுவர வேண்டும். பாடப்புத்தகங்களால் அறிவியலின் சுகத்தை 90சதவீத மாணவர்கள் பெறுவதே இல்லை... அறிவியல் அறிஞர்களின் கதைகளை சுவையாகச் சொல்வதன் மூலம் அவர்களது கண்டுபிடிப்புகள் பற்றியும் சொல்லமுடியும்,” என்றார் அவர்.
நல்ல தமிழ்ச்சொற்கள் பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன என்பதையும் சொல்லத் தவறவில்லை கிழக்கு நிறுவனத்தின் தலைமை இயக்குநர். அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லும்போதும் அதில் ஒரு திரில் இருக்க வேண்டும் என்றார் அ. வள்ளிநாயகம்.
குழந்தைகளுக்கான எழுத்துக்களில் பாலின பாகுபாட்டுக்கு எதிரான சிந்தனைகள், சாதி வேற்றுமைக்கு எதிர்ப்புக் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமா என்று பேச வந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த அ. மாதவன், “சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எவரும் இது வேண்டும் என்றே சொல்வார்கள்,” என்றார். பல பள்ளிகளில் இன்றைக்கும் கடினமான பணிகளை ஆண் மாணவர்களிடமும், துப்புரவுப் பணிகளை பெண் மாணவர்களிடமும் ஒப்படைப்பது நடககிறது,” என்ற ஒரு படப்பிடிப்பையும் அவர் முன்வைத்தார்.
கணித அறிவியலாளர் பேராசிரியர் ராமானுஜம், “குழந்தைகளின் மனநிலை பற்றிய ரசனைவயப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேசுவதால் பயனில்லை,” என்றார். “அறிவியல் கதைகளையும் அவர்களது உண்மை வாழ்க்கையிலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். பத்துவயது வரையில் குழந்தைக்கு ஒருவிதமான பாதுகாப்பு இருக்கிறது. அதன்பிறகு, ஒரு முதிர்ச்சி வர வர, மென்மைத்தனத்தின் மீது விழுகிற அடி குழந்தைகளை அழவைக்கவும் செய்யலாம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலையின் பிடியிலிருந்து யானை கஜேந்திரனை ஆதிநாராயணன் தனது சக்கராயுதத்தை ஏவி காப்பாற்றிய கதையைக் கேட்ட எங்கள் வீட்டுக் குழந்தை, “அந்த முதலையோட சாப்பாட்டை கடவுள் பறிச்சுக்கிட்டாரே,” என்று கேட்ட நிஜ அனுபவத்தை கதையாக மாற்றியது உள்ளிட்ட சில அனுபவங்களை நான் பகிர்ந்துகொண்டேன்.
அதிகம் பேசப்படுகிற, குறைவாகவே முயற்சிகள் நடக்கிற ஒரு முக்கியப் பொருள் குறித்த இந்தப் பட்டறை பொதுவாக பயனுள்ளதாகவே இருந்தது. அதே நேரத்தில், உள்ளடக்கப் பிரச்சனைகளில் கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, எப்படி எழுதுவது என்பதில் எழுத்தாளர்களை ஒரு வார்ப்புக்குள் கொண்டுவருகிற எத்தனிப்பும் வெளிப்பட்டது. குழந்தைகளை அப்படி ஒரே மாதிரியாக வார்ப்பது எப்படி தவறோ அப்படி குழந்தைகளுக்காக எழுதுவோரை வார்ப்பதும் தவறுதான். வர்த்தக நிறுவனத்தின் தேவைக்கு அத்தகைய வார்ப்புகள் உதவுமோ என்னவோ. ஆனால், வெற்றிகரமான புத்தகம் இயல்பாக நிற்கும். உள்ளடக்கமும் ஏற்புடையதாக இருக்கும்போது அதை மக்களுக்கான இலக்கிய இயக்கங்கள் பரவலாகக் கொண்டுசெல்லலாம்.
புத்தகங்களை “மார்க்கெட்டிங்” செய்வது குறித்த எதிர்ப்புக் கருத்தும் வெளிப்பட்டது. பரவலான குழந்தைகளைப் புத்தகம் சென்றடைவது என்ற அர்த்தத்தில் அதைப் பற்றிய அசூயை தேவையில்லை என்றே படுகிறது.
ஆயினும், தமுஎகச இதை மாநில அளவிலான முகாமாக நடத்தத்திட்டமிட்டுள்ளது. அதற்குள் ஒரு பதிப்பகம் முந்திக்கொண்டுவிட்டது! இந்தப் பட்டறை அனுபவங்கள் அந்த முகாமை செம்மையாய் நடத்த உதவும். எப்படியோ, குழந்தைகளை யோசிக்கவிடாத இறையருள் கதைகளே அவர்களை ஆக்கிரமித்துள்ள மரபிலிருந்து விலகி, அவர்களைக் கேள்வி கேட்க வைக்கிற புத்தகங்கள் பூத்துவருமானால் குழந்தை இலக்கியக் களம் பெரும் வனமாக வளம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Saturday 9 May 2009

எதிரெதிர் வினை

சிபிஎம் எதிர்ப்பு அரசியலும்
சில விமர்சனங்களும்
(‘சிபிஎம்’ புத்தகத்தின் மீதான எதிர்வினைக்கு எதிரெதிர் வினை)

மருதன் அவர்களுக்கு நன்றி. என்னையும் வலைத்தள வாசகர்கள் கவனிக்க வைத்திருக்கிறாரே. ஓ - இது என்னைக் கவனிக்க வைப்பதல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பற்றி நான் எழுதி, ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வந்துள்ள ‘சிபிஎம்’ குறும்புத்தகத்தைக் கவனிக்கவைப்பது. அதற்காக மேலும் நன்றி.
அப்புறம், ரொம்ப நாளாக விரிக்காமல் வைத்திருந்த எனது வலைப்பதிவு ஏட்டை மறுபடி திறந்து இதை எழுதவைத்திருக்கிறார். அதற்காக உளமார்ந்த நன்றி.

ஒரு 78 பக்க புத்தகத்தில், ஒரு சுருக்கமான அறிமுகமாக அமையட்டும் என்கிற அளவிலேயே அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அது சிபிஎம் சார்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ புத்தகம் அல்ல. சிபிஎம் உறுப்பினராக இருக்கிற ஒருவனால், வெளியே பரந்துபட்ட அளவில் இருக்கிற, புத்தக வாசிப்பில் ஆர்வம் முளைவிட்டிருக்கிறவர்களுக்காக எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி வளர்ந்த பின்னணி, அது செயல்படும் விதம், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் - இவற்றைத் தொட்டுக்காட்டுவதே புத்தகத்தின் நோக்கம். இதிலே கட்சியின் மாநாட்டு ஆவணம் போலவோ, நிறைய பக்கங்களில் ஆழமான ஆய்வுடன் எழுதப்படுகிற புத்தகம் போலவோ விமர்சனம் - சுயவிமர்சனம் என்று அதிகமாக எழுத முடியவில்லை.

அடுத்து இவரது அகராதிப்படி, சுயவிமர்சனம் என்றால் கிழிகிழியென்று கிழித்துப்போடுவதாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கச் செயல்பாட்டில் நேரடியாக தன்னை ஒப்படைத்துக்கொளளாமல், வசதியாக எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து, அது நொட்டை இது நொள்ளை என்று துப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியம்தான். அதிலே ஒரு அரசியல் உண்டு. இவரது அரசியல் நோக்கத்திற்கு இப்படி சிபிஎம் கிழிபடவேண்டும் என்பது தேவையாக இருக்கலாம். எனக்கு அது வராது.

என் இயக்கத்திற்கு உண்மையானவனாகவே இருப்பேன். மினிமேக்ஸ் மூலமாகக் கிடைத்த வாய்ப்பையும் அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். இவரைப் போன்றவர்களையும் தாண்டி புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எம் கட்சியைப் பற்றி ஒரு தொடக்கப் புரிதலையும், மரியாதையையும் ஏற்படுத்துவது மட்டுமே என் நோக்கம். நடுநிலை ஒப்பனை எல்லாம் போட்டுக்கொண்டு நான் எழுதுவதில்லை.

நந்திகிராமம் பிரச்சனை நிச்சயமாக கட்சியின் பயணத்தில் பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல் வந்ததுதான். “... காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது” என்று பதிவு செய்திருக்கிறேன். இதுவும் ஒரு சுயவிமர்சனம்தான். நந்திகிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அல்ல இது. கட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் முயற்சியில் அதுவும் ஒரு கட்டம் அவ்வளவுதான். நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு அந்த வட்டாரத்தை சுற்றி வளைத்துக்கொண்டது பற்றியும், சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்தது பற்றியும் அதே பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். மருதனின் கோபம் அதனால்தானோ?

“ஆய்வின் முடிவில் அவர்கள் (சிபிஎம்) என்ன கண்டுபிடித்தார்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவு வந்தபின் கட்சி முழுமையாக விவாதிக்கும், அதை வெளிப்படுத்தவும் செய்யும். பொறுத்திருங்கள் நண்பரே.

“டாட்டாவின் காசோலையை திருப்பி அனுப்ப முடிந்த கட்சியால் டாட்டா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை” என்று எழுதியிருக்கிறார். புத்தகப் பக்கங்களைத் தாண்டிய விமர்சனம் இது. தவறில்லை. ஆனால், எதற்காகத் திருப்பி அனுப்ப வேண்டும்? சொல்லப்போனால் அந்த நிறுவனத்தை அழைத்ததே இடது முன்னணி அரசுதான். இதிலே ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. கட்சியின் தலைமையிலான கூட்டணியின் அரசுக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாதவராக மருதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கு இப்படிப்பட்ட நிறுவனங்கள் தேவை. மேற்கு வங்கத்தில் இருப்பது ஒன்றும் சோசலிச அரசோ கம்யூனிச அரசோ அல்ல. இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு மாநில அரசுதான். இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டுதான் அது செயல்பட முடியும். சிபிஎம் சொல்கிற மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிச் செல்வதில் இவ்வாறு அரசு எந்திரம், நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது ஒரு கட்டம், ஒரு வழிமுறை. இதுவே முழுப்புரட்சி அல்ல. இதைப் பற்றியும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சுத்த சுயம்பிரகாச புரட்சிக்காரர்களைப் பார்த்து நீங்கள் ஏன் முதலாளித்துவ அரசின் ரயிலில் பயணம் செய்கிறீர்கள், ஏன் முதலாளித்துவ ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், அப்படிக் கேட்பவர்களை மருதன் எப்படிப் பார்ப்பார்?

“மக்கள் எதிர்ப்பை மீறி” டாட்டா கார் நிறுவனத்தை நிறுவ சிபிஎம் முயன்றதாக எழுதியிருக்கிறார். எந்த மக்கள்? மம்தா பானர்ஜியும், பாஜக ஆட்களும் திரட்டியவர்கள் மட்டுமா? சிங்கூர் வட்டாரத்துக்கு வர இருந்த ஒரு பெரிய தொழிற்சாலையை மம்தா வகையறாக்கள் தடுத்துவிட்டார்கள் என்றுதான் அந்தப் பகுதி மக்கள் இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்று சிபிஎம் நம்புகிறதா என்று கேட்டிருக்கிறார். அரசு எந்திரம் பற்றிய சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் என்னுடைய பதில்: புத்தகத்தை மறுபடியும் படியுங்கள். இப்போது நடக்கிற தேர்தலை மக்கள் ஜனநாயக அரசுக்கான தேர்தல் என்று யாராவது எங்கேயாவது சொன்னார்களா என்ன? ஒன்றை மட்டும் சொல்லாம்: கட்சிகள் என்றால் தலைவர்கள் மட்டுமல்ல, அவற்றின் தளமாக உள்ள மக்களும்தான். கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு என்பது மக்களோடு கொள்ளும் உறவுதான். அதிலே அசூயைப் பட என்ன இருக்கிறது?

நேபாளத்தை சுட்டிக்காட்டி பிரசாந்தா பதவி விலகியதை சிலாகித்திருக்கிறார். அதே பிரசாந்தா, அமைதியான முறையில் அரசு அமைப்பதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார். அவருடைய கட்சி தனது ஆயுதப்பாதையைக் கைவிட்டு அரசியலுக்கு வந்ததால்தான் அரசு அமைக்கிற அளவுக்கு வந்தது.

அப்புறம் வெறும் ஊகக் கேள்விகளாக கடைசியில் அடுக்கியிருக்கிறார். இது என்ன குருப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமா என்ன? எல்லா கிரக நிலைமைகளுக்கும் விளைவுகள் என்ன என்று கணித்துக்கொண்டிருப்பதற்கு? திட்டவட்டமான நிலைமைகள் உருவாகிற போதுதான் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். இதைத்தான் இவர் “வளைந்து நெளிந்து” என்று வர்ணிக்கிறார். ஒன்று செய்யலாம் - எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டேன், தூசு படியாமல் படுசுத்தமாக இருப்பேன், யாரோடும் ஒட்ட மாட்டேன் என்று கோவணத்தையும் உருவிப்போட்டுவிட்டு நடுக்காட்டில் போய் தவம் இருக்கலாம்.

“... பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள்,” என்று முடித்திருக்கிறார் மருதன். சலித்து சலித்து மக்கள் சரியானதைத் தேர்வு செய்வார்கள். அப்போது, எதுவும் சரியில்லை என்று பினாத்திக்கொண்டே இருப்பவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள் - இப்போதிருப்பதை விடவும்.