Monday 2 September 2013

சோகம் கொள்வதற்கல்ல, கோபம் பூணுவதற்கு...



லகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான்! கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்! பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை இவர்கள் போய் காப்பாற்ற வேண்டியிருக்கிறதே... தான் அவமதிக்கப்படுவதற்கு எதிராகத் தானாக எதுவும் செய்ய முடியாதவர் என்று தங்களுடைய கடவுடை இவர்கள்தான் காட்டிக்கொடுக்கிறார்கள்...

நமது நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் அலங்காரமான ஆனால் அர்த்தமில்லாத சொற்கள் சில இருக்கின்றன... சோசலிசம், ஜனநாயகம், மதச்சார்பின்மை... இப்படியாக. அப்படியொரு அலங்காரமாகத்தான் இருக்கிறது “அறிவியல் கண்ணோட்டம்” என்ற சொல்லாடல். ”இந்தியச் சமுதாயத்தை அறிவியல் கண்ணோட்டம் உள்ளதாக உருவாக்குவது” என்பது ஒரு லட்சியமாக அரசமைப்பு சாசனத்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே அறிவியலும் தொழில்நுட்பமும் பயன்படுத்திக்கொள்வது வளர்ந்திருக்கிறதேயன்றி அறிவியல் கண்ணோட்டம் வளரவில்லை. அதனால்தான் நவீன லேப்டாப் வைத்திருக்கிறார்கள், அதைத் திறந்தவுடன் முகப்பில் திருப்பதி வெங்கடாஜலபதி படம் வருகிறது, அதைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு வேலையைத் தொடர்கிறார்கள். இதே போல் அவரவர் சாமியை வைத்துக்கொள்கிறார்கள்.

அறிவியல் கண்ணோட்டம் என்பது வேறு. வாழ்க்கையை, வரலாற்றை, சமுதாயத்தை, சிக்கல்களை, காரணங்களை, தீர்வுகளை, மாற்றங்களை சரியாகப் புரிந்துகொள்வதும் கையாள்வதுமே அறிவியல் கண்ணோட்டம். அப்படிப்பட்ட அறிவியல் கண்ணோட்டம் இருக்குமானால் கல்லூரிகளில் மாணவர்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடுவது நடக்காது. அறிவியல் கண்ணோட்டம் இருக்குமானால் மாணவர்களின் விசாலமான, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் விவாதங்களையும் ஈடுபாடுகளையும் வளர்க்கிற முயற்சிகள் நடக்கும்.

கடவுள் இல்லை என்ற செய்தியைக் கூட அறிவியல் கண்ணோட்டத்துடன்தான் சொல்ல வேண்டும். இல்லையேல், மற்றவர்களை விடவும் தன்னை மாறுபட்டவராகக் காட்டிக்கொள்கிற ஒரு கவர்ச்சியாக மட்டுமே கடவுள் மறுப்பு என்பது மாறிவிடும். அப்படியொரு ‘ஃபேன்சி’ ஏற்பாடாகக் கடவுள் மறுப்புச் சிந்தனை வருகிறபோது என்ன நடக்கும் என்றால், தனக்கு ஏதாவது தாங்க முடியாத துயரம் அல்லது ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுகிறபோது, கடவுளை நிந்தித்ததால்தான் இப்படியாகிவிட்டது என்று சொல்வதற்கு நான்கு பேர் வருவார்கள். அதை ஏற்றுக்கொண்டு, கடவுள் மறுப்பு பேசியதை விடவும் பல மடங்கு கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிடுவார்கள். தமிழகத்தில் அப்படித்தான் நடந்தது.

கடவுளை நம்புகிற மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடிக்கொண்டே, கடவுள் கதைகளின் உண்மைத் தன்மைகளைப் பக்குவமாக எடுத்துச்சொல்கிற முயற்சியில் முற்போக்கான அமைப்புகள் ஈடுபட்டாக வேண்டும். நாத்திகக் கருத்தைப் பேசினால் மக்கள் மனம் புண்படும், போராட்டங்களுக்கு அணி திரளமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டுவிடக்கூடாது. சொல்லப்போனால், எந்த அடையாளமுமின்றி மனிதக் குழந்தையாக மட்டுமே பிறக்கிற குழந்தையின் நெற்றியில் திருநீறு அல்லது நாமம் அல்லது சிலுவை அல்லது பிறை அல்லது இன்னபிற மதக்குறிகளையிட்டு ஆசிர்வதிக்கிறபோதே நம்பிக்கைச்சிமிழுக்குள் அடைத்துப் புண்படுத்துவது என்பது தொடங்கிவிடுகிறது.

மக்கள் மனம் புண்படாமல் நாத்திகக் கருத்துகளைக் கொண்டுபோக முடியும்.
சொல்லப்போனால் பொதுப் போராட்டங்களில் மக்களை அணிதிரள விடாமல் முட்டுக்கட்டை போடுவதில் கடவுள் நம்பிக்கை, மதவாதம், சாதியம் போலவே தலைவிதி, சோதிடம், சடங்குகள் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளுக்கும் பங்கிருக்கிறது. ஆகவே தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான போராட்டங்களை நடத்திக்கொண்டே கடவுள் நம்பிக்கை, மதவாதம், சாதியம், சோதிடம், சடங்கு போன்றவற்றை விமர்சிக்கிற துணிவு வர வேண்டும். அதைப் பக்குவமான முறையில் பொறுப்போடு செய்ய வேண்டும்.

இறை நம்பிக்கை, சாதிப்பிடிப்பு, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களை இறுக்கமாக்கிக்கொண்டிருக்கிற இன்றைய உலகமயமாக்கல் அரசியல்/பொருளாதாரச் சூழலில் இந்தப் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை நடத்தினால் போதும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் தேவையில்லை என்பதும், பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை நடத்தினால் போதும் மற்ற மாற்றங்கள் காலப்போக்கில் தானாக நிகழ்ந்துவிடும் என்று விட்டுவிடுவதும் இரண்டுமே நோக்கங்களை அடைய உதவாது. அப்படியெல்லாம் நிகழ்ச்சி நிரல் போட்டுக்கொண்டு வரலாற்றை நகர்த்த முடியாது.

பகுத்தறிவுச் சிந்தனைகளை அன்றாட வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் எடுத்துச் செல்ல முற்போக்காளர்கள் முனைய வேண்டும். முற்போக்காளர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுக் கருத்துகளைக் கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் வெளிப்படுத்த வேண்டும். வீட்டு விழாக்கள் முதல் வெளியே நடக்கிற நிகழ்வுகள் வரையில் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆன்மிகவாதிகள், மதவாதிகள், சடங்குச் சாமியார்கள் போன்றோர் பலமடங்கு ஒலியலை அளவில் பிற்போக்குக் கருத்துப் பிரச்சாரங்களைச் செய்வது எவ்வளவு ஆபத்தானதோ, அந்த அளவுக்கு முற்போக்காளர்களின் மௌனமும் ஆபத்தானதுதான்.

நரேந்திர தபோல்கர் படுகொலை இந்தச் சிந்தனைகளை எங்கும் கிளறிவிட வேண்டும். தபோல்கர் மரணம் சோகத்துடன் இருப்பதற்காக அல்ல, கோபத்துடன் எழுவதற்காக.

(பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலையைக் கண்டித்தும், மூட நம்பிக்கை தடை சட்டம் நாடுமுழுவதும் கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் 1/9‘2013 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியதும், பேச நினைத்ததுமாகச் சேர்த்து எழுதிய கட்டுரை.)

Tuesday 6 August 2013

மணமக்கள் தேவை... சாதிச் சுவருக்குள்!

ணமக்கள் தேவை’ விளம்பரங் களில் படிப்பு, வேலை, ஊதியம் போன்ற எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துவிட்டு “சாதி தடையல்ல” என்றும் சில நேரங்களில் அறி விக்கப்படுவதைக் கண்டு மனம் துள்ளும். சாதி அடையாளத்தைத் துறக்கிற திருமண உறவுகள் இயல்பானதாக சமுதாயத்தில் வளர்வதற்கு இவர்கள் துணை செய்கிறார்கள் என்ற எண்ணம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். சாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அந்தச் சாதிகளுக்குள்ளேயே பெண்ணோ பிள்ளையோ மு(பி)டித்துத்தரப்படுவார்கள் என்று விளம்பரம் செய்யும் சில பெரிய கல் யாணத்தரகு நிறுவனங்களும் சேர்ந்து வலுப்படுத்த முயலும் சாதியச் சுவரில் இவர்கள் விரிசல் ஏற்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கை கூட ஏற்படும்.

ஆனால், இப்படி விளம்பரம் செய்கிற அளவுக்குத் துணிகிற குடும்பங்கள் இறுதியாக அப்படி சாதி கடந்துதான் தங்கள் பிள்ளைகளுக்கான துணைகளை முடிவு செய்கின்றனவா? அப்படி விளம்பரம் செய்கிற தனிமனிதர்கள் சாதி வேலிகளை உடைத்துக் கொண்டுதான் தங்கள் இணைகளைத் தேர்வு செய்கிறார்களா? "இல்லை இல்லை" என்ற உண்மையை உரக்கச் சொல்வதாக வந்திருக்கிறது ஒரு ஆய்வு முடிவு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை ஆய்வாளர்கள் அமித் அஹூஜா, சான்டா பார்பரா, சூசன் ஓஸ்டர் மான் ஆகியோர் இந்தியாவில் இணையத் தளங்கள் மூலமாக ‘மணமக்கள் தேவை’ விளம்பரம் கொடுப்பவர்களிடையே அந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.

“சாதி தடையில்லை” என்று விளம்பரம் செய்கிறவர்கள், தங்களுக்கு வரக்கூடிய தகவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கிற இணை கள் ஆகப்பெரும்பாலும் தங்களது சாதி களைச் சேர்ந்தவர்களைத்தான். ஒரு சிலர் வேறு சாதிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தா லும், சமூகக் கட்டமைப்பில் சமமானவர் களாகவும் ஒரே மாதிரியான சடங்குகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் இருக்கிற சாதிகளைச் சேர்ந்தவர்களையே முடிவு செய்கிறார்கள்.ஒரே வகையான தொழில், பொருளாதார நிலை, பதவி உள்ள ஒரு “மேல்” சாதி, ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மூன்று ஆண்களின் சார்பில் கொடுக்கப் பட்ட மணமகள் தேவை விளம்பரங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப் பட்டன.
அந்த விளம்பரங்களுக்கு வந்த பதில்களில் “மேல்” சாதிகளைச் சேர்ந்த பெண்களில் 54 விழுக்காட்டினரும், தாழ்த் தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 72 விழுக் காடு பெண்களும் சாதி வரப்பைத் தாண்டி மணமகன்களைத் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஆனால், இறுதி முடிவு என்று வருகிறபோது அநேகமாக அவர்கள் எல்லோருமே தங்களது சாதிகளி லேயே தேர்வு செய்தார்கள்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங் களில் பலரும், தங்களது சமூக நிலையை யும் சமூகப் பொருளாதார மதிப்பையும் உயர்த்திக்கொள்ள உதவுமானால் சாதி விட்டு சாதி உறவு ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள். குறிப்பாக “மேல்” சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே பொருளாதாரத்தில் அடி நிலையில் இருப்பவர்களும், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே வசதியான நிலைக்கு வந்தவர்களும் இப்படி வேறு சாதி ஆண்களைத் தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்தார்கள்.ஒரு இணையவழி திருமண நிறுவனத் தின் “மணமக்கள் தேவை” விளம்பரப் படிவத்தில், தங்களது சொந்தச் சாதியைக் குறிப்பிட விரும்பாதவர்கள், அதைத் தெரிவிப்பதற்கென்றே, அதாவது சாதி குறிப்பிட விரும்பவில்லை என்று பதிவு செய்வதற்கென்றே ஒரு கட்டம் இருக்கிறது. ஆனால் அந்தக் கட்டத்தைப் பயன்படுத்துகிறவர்கள் சுமார் 10 விழுக்காட்டினர்தான்.

மற்றொரு ஆய்வு, பெண் எவ்வளவு படித் திருந்தாலும், அதே சாதியில் மணமகன் அமைவதற்காக, அவன் பட்டதாரியாக இருந்தாலும் சரி படிக்காதவனாகவே இருந்தாலும் சரி என்று பெண்ணின் குடும்பத்தார் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறது.

வாழ்க்கையை இலகுவாக்குகிற நவீன மான கருவிகளில் நாட்டம் இருந்தாலும், சமுதாய உறவுகளை இலகுவாக்குகிற சிந் தனைகளில் நவீனம் எட்டிப்பார்க்கவிடா மல் தடுக்கப்படுகிறது. அதற்குச் சான்றாக இதோ இன்னொரு ஆய்வு: புதுதில்லியில் இயங்கும் சமூக மேம்பாட்டு ஆய்வு மையம் சுமார் 30,000 பேரைச் சந்தித்து சாதி மறுப்புத் திருமணம் பற்றிய அவர்களது கருத்தைக் கேட்டது. அதை ஆதரித்தவர்களின் எண் ணிக்கையை, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியவர்களின் எண் ணிக்கை விஞ்சிவிட்டது!

இந்தியாவில் சாதிக் கலப்புத் திருமணங்கள்அதிகரிக்கவில்லை என்பதையே தங்களது ஆய்வு உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறார் பேராசிரியர் அஹூஜா. நாட்டில் தொடர்ந்து 10 விழுக்காடு அளவுக்கே சாதியக் கோடுகளை அழித்துக்கொண்டு திருமணங் கள் நடக்கின்றன என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையிலிருந்து தெரிய வருவதாக ‘தி ஹிண்டு’ நாளேட்டின் (ஆக.5) செய்தி கூறுகிறது.சாதிப் புனிதக் கோட்பாடு எந்த அளவுக்கு நம் மக்களின் மூளைகளில் அழுத்தமாகப் பதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான இந்த ஆய்வுப்பூர்வ சாட்சியம், “இப்போதெல்லாம் யாரும் சாதி பார்ப்பதில்லை, நிலைமை பெரிதும் மாறிவிட்டது,” என்று பேசுகிறவர்களுக்குத் திட்டவட்டமான பதிலாக வந்திருக்கிறது, வரப்புகளைத் தாண்ட விரும்பும் இளம் மனங்களை ஒடுக்கி, குறிப்பாகப் பெண்களின் சுயமான தேர்வு உரிமையைப் பொசுக்கித்தான் இந்தியத் தருமபுரிகளில் சாதிய யாகம் வளர்க்கப்படு கிறது.

சமத்துவத்துக்காக, ஜனநாயகத்திற்காக, உரிமைகளுக்காக, முற்போக்கான மாற்றங்
களுக்காக உறுதியெடுத்துப் போராடுகிற இயக்கங்களுக்கெல்லாம் இந்த சாதிய யாகம் ஒரு பெரும் தடை. காடுகளில் பெரும் நெருப்புப் பற்றுகிறபோது, அதை அணைப்பதற்கு எதிர் நெருப்புப் பற்றவைப்பது ஒரு நம்பகமான வழி. சாதிமறுப்புத் திருமணங்களை ஊக்குவித்து ஆதரிப்பது உள்ளிட்ட செயல்களின் மூலம் எதிர்நெருப்புப் பற்றவைத்து சாதிய நெருப்பை அணைக்கிற பொறுப்பும் அந்த இயக்கங்களின் தோள்களில்தான் விழுந்திருக்கிறது.

(‘தீக்கதிர்‘ 6-8-2013 இதழின் ‘தெருவிளக்கு’ பகுதியில் வந்துள்ள எனது கட்டுரை

Sunday 21 July 2013

சுவரை நாறடிக்கும் வி.வீ.பே. அணி

கரச் சுவர்களில் இனி பேரணிகள் போராட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் குறித்து விளம்பரம் செய்ய முடியாது. தலைநகர் சென்னையில் முந்தைய மாநகரத்தந்தையின் நிர்வாகத்தில், சுவர் விளம்பரங்களுக்குத் தடை விதித்தாலும்  பொதுச் சுவர்களை வண்ண ஓவியங்களாவது அலங்கரித்தன (அதனால் நகரம் அழகாக மாறியதா என்று கேட்காதீர்கள்). இப்போதோ விளம்பரம் செய்யத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது, மீறினால் தண்டனை என்று பயமுறுத்தும் விளம்பரம்தான் பத்தடிக்கு ஒன்றாக நகரத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது. எப்படியோ சுவர்களைக் கருத்துப் பரவலுக்குப் பயன்படுத்தியது பழங்காலமாகிவிட்டது.

சுவரெழுத்து உரிமை இப்படி உதிர்க்கப்பட்டுவிட்டது என்றாலும், இணைய உலகத்தில் எழுப்பப்பட்டுள்ள ஒரு சுவர் புதிய வாய்ப்பாக நிற்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் நமது கருத்துகளைப் பதிவு செய்கிற இடத்திற்கு சுவர் (ஆங்கில வால்) என்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள். கணினியை இயக்க முடிந்தவர்கள் மட்டுமல்லாமல், கைப்பேசியின் நவீன வசதிகளைக் கையாளத் தெரிந்தவர்களும் கூட இந்தச் சுவரில் தங்களது பல்வேறு சிந்தனைகளைப் பதிவு செய்ய முடிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்தச் சிந்தனைகளுக்கு வரவேற்புகளும் விமர்சனங்களும் பின்னூட்டமாகப் பதிவு செய்யப்படுகின்றன. அந்தக் கால பேனா நண்பர்களை விடப் பல மடங்கு விரிவாகவும் உடனடியாகவும் இந்தக் கால விசைப்பலகை நண்பர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள்.
பெரிய ஊடகங்களில் தங்களது படைப்புகள் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இந்தத் தொடர்புத் தளங்கள் மிகப்பெரும் துணையாக வந்துள்ளன. நண்பர்கள் மட்டுமல்லாமல் நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று பலரும் இவர்களது கவிதைகளையும் கதைகளையும் படித்துவிட்டு உடனடியாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறு கருத்துப் பதிவும் பகிர்வும் செய்வதற்கான சுதந்திரமும் உரிமையும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பண்பாட்டுத் தளங்களில் இயங்கிவரும் முற்போக்கு அமைப்புகளும் சிந்தனையாளர்களும் வலியுறுத்துவது. மும்பையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்தபோது வலுக்கட்டாயமாகக் கடைகளும் தொழிற்சாலைகளும் அடைக்கப்பட்டதைத் தனது ஃபேஸ்புக் சுவரில் விமர்சித்த ஒரு கல்லூரி மாணவியும், அதற்கு ஆதரவு தெரிவித்த அவரது தோழியும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் அதற்குக் கண்டனக் குரல்கள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் மாநில அரசை விமர்சிக்கும் ஒரு அரசியல் நையாண்டி ஓவியத்தை மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதற்காக ஒரு பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டபோதும் நாட்டின் நியாயக் குரல்கள் உயர்ந்தன. அண்மையில் ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பற்றியும், தமிழக ஆளுநர் பற்றியும் அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி ஒரு மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணின் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்ததையும் பலர் கண்டித்திருக்கிறார்கள். ஆனால், சமூக வலைத்தளக் கருத்து வெளிப்பாட்டு உரிமையை சிலர் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கிறபோது, அந்த உரிமைக்காக வாதாடுகிறவர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறார்கள். வலைத்தளச் சுவர்களில் எழுதப்படும் சொற்களும் கண்ணோட்டங்களும், பொதுக்கழிப்பறைகளின் சுவர்களில் காணக்கூடிய எழுத்துகளின், சித்தரிப்புப் படங்களின் வாரிசு வார்ப்பாக இருக்கின்றன. இது, அருவருப்பை ஏற்படுத்திவிட்டால், தாக்கப்படுகிறவர்களும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் நாகரிகம் கருதி எதிர்க்கருத்துச் சொல்லாமல் ஒதுங்கிவிடுவார்கள் என்ற இழிவான உத்தி.

கருத்துச் சுதந்திரம் போலவே எதிர்க்கருத்துச் சுதந்திரமும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுதான். எந்த ஒரு கருத்தையும் அதைப் படிக்கிறவர்கள் நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  எவ்விதமான கட்டளையும் இல்லை. ஆனால் கருத்தை எதிர்ப்பதென்றால் அது தவறான கருத்து என்று மறுக்க வேண்டும், அதை ஏன் ஏற்பதற்கில்லை என்று விளக்க வேண்டும்., அதற்கான மாற்றுக் கருத்து இதுவென்று முன்வைக்க வேண்டும், அதற்கும் எதிர்ப்பு வரலாம் என்பதை ஏற்கத்தயாராக இருக்க வேண்டும். ஆனால், இதெல்லாம் சகமனிதர்கள் மீதான மரியாதையோடு முறைப்படி விவாதிக்கிறவர்களுக்குத்தான் பொருந்தும், தங்களுக்கு அல்ல என்பது போல இந்த வீறாப்பாளர்கள் தட்டச்சுகிறார்கள்.

ஒரு கூட்டணி போல அமைத்துக்கொண்டு இவர்கள் குறிப்பிட்ட சிலர் மீது வசைச் சகதி வீசுகிறார்கள். குறிப்பாக, இவ்வாறு தாக்கப்படுகிறவர்கள் யாரென்று பார்த்தால் மனித மாண்புகளுக்காகவும், தலித் மக்களின் சமத்துவ உரிமைகளுக்காகவும், பெண் விடுதலைக்காகவும் செயல்படுவோர், எழுதிவருவோர், வாதிடுவோர் ஆகியோர்தான். இன்னும் குறிப்பாக தர்மபுரி வன்கொடுமைத் தாக்குதல்களுக்குப் பிறகு அந்த உண்மைகளை எழுதுகிறவர்கள், தலித் மக்களின் நியாயங்களை எடுத்துரைப்பவர்கள், சாதிய ஆதிக்கவாதிகளின் வெறித்தனங்களைச் சாடுகிறவர்களே இவர்களது தாக்குதல் இலக்கு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பத்திரிகையாளர்கள் மனுஷ்யபுத்திரன், கவின் மலர், கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோர் அண்மை நாட்களில் விசைப்பலகை வீறாப்புப் பேர்வழிகள் (வி.வீ.பே.) தங்களது துருப்பிடித்த வாள்களை வீசிவருகிறார்கள்.

திருமாவளவன் தலித் மக்களுக்காகத் தொடர்ந்து இயங்கிவருவதும், மனுஷ்யபுத்திரன் தனது கட்டுரைகளில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி விவாதங்களிலும் சாதிய ஆதிக்கவாதிகளைக் கடுமையாகச் சாடிவருவதும், கவின் மலர் தலித் மக்களை நேரில் சந்தித்து அவர்களது வலிகளைப் பதிவு செய்வதும், மீனா தனது காட்டமான கவிதை வரிகளில் தலித் விரோத அரசியல் மீது சாட்டையடி கொடுத்துவருவதுமே இவர்களது ஆத்திரத்துக்குக் காரணம் என்பது வெளிப்படை. இவர்களது கருத்துகளில் அரசியலாகவும் சமூகக் கண்ணோட்டத்துடனும் எவரும் முரண்படலாம். மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளவும் விவாதிக்கவும் அவர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்த வி.வீ.பே. குழுவினரது பதிவுகளில் ஆத்திரம் இருக்கிறது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு இருக்கிறது, நக்கல் இருக்கிறது, தரக்குறைவான சித்தரிப்பு இருக்கிறது, தனி மனித அவமதிப்பு இருக்கிறது... மறந்தும் கூட, இவர்களது மாற்றுக் கருத்து என்ன என்பது மருந்துக்கும் இல்லை. மாற்றுக் கருத்தை முன்வைத்தால் இவர்களது அப்பட்டமான சாதிய ஆதிக்கப்புத்தி வெளியே தெரிந்துவிடுமே!

மனுஷ்யபுத்திரன் அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதற்காகக் கூடுதல் வன்மத்துடன் இவர்கள் பதிவிடுகிறார்கள். அவரது உயிர்மை பத்திரிகை நடத்திய விருதுவழங்கு விழாவில் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுகிதா பற்றியும் கடுப்போடு எழுதினார்கள். இப்படியெல்லாம் எழுதுகிறபோது எதற்கும் இருக்கட்டும் என்று தங்களை ஆளுங்கட்சியின் ஆட்கள் என்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். பாலியல் வக்கிரச் சொற்களோடு தாக்குதல் தொடுப்பது பற்றி இணையக் குற்றங்கள்பிரிவில் புகார் செய்யப்பட்டாலும், தங்களை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது, காவல்துறை நடவடிக்கைக்குக் கேடயமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும் இந்த வி.வீ.பே. குழுவினர்.

சில மாதங்களுக்கு முன்பு, பாடகர் சின்மயி பற்றியும் அவரது தாயார் பற்றியும் இழிவாகப் பதிவு செய்த ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அந்த வேகத்திற்குக் காரணம், சின்மயியின் சமூகப் பின்னணியிம் மேலிடத் தொடர்பும்தான் என்று பின்னர் விமர்சிக்கப்பட்டது. தற்போதைய புகார்கள் தொடர்பாகக் காவல்துறை அசையாமல் இருப்பது அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறதே!

இதற்கு முன்பும் இதே போன்ற தாக்குதல்கள் வேறு விதமாகத் தொடுக்கப்பட்டதுண்டு. இதற்கென் ற ஒரு வலைத்தளம் தொடங்கப்பட்டு, அதில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர்களாகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகவும் இருக்கிற பெண்களின் படங்களை வெளியிட்டு, அவர்களது அங்க அவயங்களைச் சுதந்திரமாக வர்ணிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. வாசகர்களின் வர்ணனைகளில் ஆணாதிக்கத்தின் ஆபாச ஆழம் தெரிந்தது. மாற்றுக் கருத்து என்ன என்று கேட்டுவிட்டால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களம் காண்கிற மார்க்சிஸ்ட்  கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் மீது வசை மலம் வீசத் தயங்குவதில்லை இந்த வி.வீ.பே. அணியினர். யார் மீது வீசுகிறார்களோ அவர்கள் ஒரு துளியும் கலக்கமில்லாமல் தங்கள் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர்களது கைதான் நாற்றமெடுக்கிறது.  பொறுப்பற்ற சிலர் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு அவனுக்கும் இவளுக்கும் அப்படி இப்படியாம்ல  என்று கதைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்களே, அவர்களது வாய் நாற்றம் போன்றதே இதுவும்.

இப்படிப்பட்டவர்களெல்லாம் ஒருவகை சைக்கோ, என்கிறார் ஒரு நண்பர். இத்தகையவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதானால் அவர்கள் தங்களையறியாமல் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்றாகிவிடும். தங்களுடைய சுயவிளம்பரத்துக்காகத்தான் அப்படி எழுதுகிறார்கள், என்கிறார் அந்த நண்பர். அதை ஒப்புக்கொண்டு விமர்சிக்கலாம் என்றால்  அந்த விளம்பரப் பசிக்குச் சோறு போட்டதாகிவிடும்.
குறிப்பாக இன்றைய சமூகச் சூழலில் பெரும்போராட்டம் நடத்தியே முன்னிலைக்கு வரவேண்டியிருக்கிற பெண்களை, பின்னுக்கு இழுக்க முயலும் அடக்குமுறைப்போக்குகளின் அரசியல் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும். வீட்டுச் சண்டையில் அல்லது தெருச்சண்டையில் எதிராளியின் நியாயமான பேச்சுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அந்தத் தோல்வியை மறைக்க அவரது ஒழுக்கம், தொடர்புகள் என்று சம்பந்தமில்லாமல் எதையாவது கூறி வசவுகளில் இறங்குவார்கள். அதைப் போல இணைய உலகத்தை, வலைத்தள வசவுகளில் இறங்குகிறவர்களின் முகமூடிகள் கிழித்தெறியப்பட வேண்டும். இப்படியெல்லாம் தாக்குகிறபோது தாக்கப்படுகிறவர்கள் தங்களது செயல்முனைப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிவிடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். தாக்கப்படுகிறவர்களோ சமூக அக்கறை சார்ந்த ஈடுபாடுகளைத் தொடர்வதன் மூலம் இந்த வி.வீ.பேர்வழிகளைச் சுண்டுவிரலால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

இணைய ஏடுகளையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் வெளிப்பாட்டு உரிமைக்காகவும் முற்போக்கு சக்திகள் நிற்கின்றன. அந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும்  கொச்சைப்படுத்துகிறவர்கள், இவற்றை ஒடுக்க முயல்கிறவர்களுக்குத்தான் ஆயுதம் எடுத்துக்கொடுக்கிறார்கள். அரசியல் களத்தில், சமுதாயக் களத்தில் மாற்றுக் கருத்துகள் முன்வைப்போர் மீது அவதூறுச் சேறு வீசுகிறவர்களை மக்கள் மன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஒரு பகுதிதான்.

அப்படி மக்கள் மன்றத்தின் வெளிச்சம் பாய்கிறபோது இந்த வி.வீ.பேர்வழிகள், எல்லாரும் நல்லா தெரிஞ்சுக்குங்க நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான், என்று பரவசத்தோடு வலம் வரலாம்தான். அப்படியாவது  உண்மை வெளிவரட்டுமே...

(‘தீக்கதிர்’ 21-7-2013 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.)

Sunday 30 June 2013

தட்டிக்கேட்கும் உணர்வை என்கவுன்டர் செய்யும் சினிமாக்கள்


ள்கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் தப்பில்லை என்று நகைச்சுவையோடு சொல்லும்  சூது கவ்வும் திரைப்படத்தின் பிற்பகுதியில் ஒரு போலிஸ் அதிகாரி வருவார். அவர் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றும், சிக்குகிறவர்களைத் தாக்குவதில் ஈவிரக்கமற்றவர் என்றும் சித்தரிக்கப்படுவார். கடைசியில் அவருக்கு என்ன நிலைமை ஏற்படுகிறது என்பது அந்தப் படத்தின் உச்சகட்ட சிரிப்பாக இருக்கும். படத்தின் கதாநாயகர்கள் கொள்ளையர்கள் என்பதால் அவர்களைப் பிடிக்க முயலும் போலிஸ் அதிகாரி வில்லனாகிவிடுவார், அவருக்கு ஏற்படுகிற தோல்வி ரசனைக்குரியாதாகிவிடும். கதாநாயகனே போலிஸ் அதிகாரி என்றால் அவன் செய்கிற என்கவுன்டர் கொலைகளும் வன்முறைகளும் தைதட்டி விசிலடித்து வரவேற்கப்பட வேண்டிய சாகசங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். காக்க காக்க படத்தை மறந்துவிட முடியுமா?

தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட இதுதாண்டா போலிஸ் இப்படியாகப்பட்ட படங்கள் வேகம் பிடிக்கத் தூண்டுதலாக இருந்தது எனலாம். அநேகமாக எல்லா நட்சத்திர நடிகர்களும் என்கவுன்டர் நடத்துகிற போலிஸ் அதிகாரிகளாக நடித்துவிட்டார்கள். அவர்கள் கடைசியில் சுட்டுத்தள்ள வசதியாக வில்லன்களைப் படுமோசமான சட்டவிரோதிகளாகக் காட்டியிருப்பார்கள். பெரும்பாலான படங்களில் அந்த வில்லன்கள் கறுப்புத்தோல்காரர்களாக, சீவாத தலைமுடிக்காரர்களாக, எப்போதும் கொடூரமாகவே பார்த்துக்கொண்டிருக்கிற வியர்வை வழியும் முகத்துக்காரர்களாக ஒப்பனை செய்யப்பட்டிருப்பார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் வக்கிரம்பிடித்த இளம் வில்லன்கள் இருவருக்கும் இளமாறன், அமுதன் என்று இனிய தமிழ்ப்பெயர் சூட்டியிருப்பார் கமல்.

இடைவேளைக்குப் பிறகு வில்லன்களால் நிச்சயமாகக் கதாநாயகர்களின் காதலிகளோ மனைவியரோ தங்கையரோ பிள்ளைகளோ பெற்றோர்களோ கடத்தப்பட்டுவிடுவார்கள். சில படங்களில் அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கோரமான முறையில் கொல்லப்பட்டிருப்பார்கள். கண்கள் சிவக்க, பற்கள் நறநறக்க, தரையிலிருந்து முகத்தை வானம் நோக்கி உயர்த்தி, வெஞ்சினத்தோடு பழிவாங்கப் புறப்படுவான் போலிஸ் கதாநாயகன். ஆக, தமிழ் சினிமா போலிஸ் நாயகர்களுக்குப் பொதுமக்களைக் காப்பாற்றுகிற சட்டப்படியான கடமையைவிட, சொந்த இழப்புக்குக் கணக்குத் தீர்ப்பதுதான் முக்கியம்!

நாயக நடிகைகள் காவல்துறை அதிகாரியாக வந்து தாதாமார்களை வதம் செய்கிற படங்கள் மிகமிகக் குறைவு. முன்பு ஒரே ஒரு வைஜயந்தி ஐபிஎஸ் வந்தது. அதுவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட படம்தான்.

ரசிகர்களாகிய பொதுமக்கள் இதையெல்லாம் ஏனென்று கேட்பதில்லை. அதைப் போலவே உண்மை வாழ்க்கையில் கேள்விப்படுகிற காவல்துறையினரின் மோதல் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இடதுசாரி இயக்கங்களும், காவல்நிலைய சித்திரவதைகளில் யாரேனும் மரணமடைகிறார் என்றால் அவர் யார் என்பதைப் பொறுத்து வேறு சில அரசியல் கட்சிகளும், பொதுவாக சில மனித உரிமை அமைப்புகளும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன. உண்மையறியும் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை வெளிப்படுத்தும் தகவல்கள் பெரும்பாலும் காவல்துறை அறிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றன.

காவல்துறையின் இப்படிப்பட்ட திட்டமிட்ட மோதல் நடவடிக்கைகளாலும், அவற்றைப் புகழ்கிற திரைப்படங்களாலும் உண்மையாகவே பாதிக்கப்படுகிறவர்கள் யார்? மேலோட்டமாகப் பார்த்தால், ஊரறிந்த ரவுடிகளும், கொலையே தொழிலாகக் கொண்ட அடியாள் கும்பல்களும்தானே போட்டுத்தள்ளப்படுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மோதலின்போது இடையில் சிக்கிக்கொள்ளக்கூடிய ஓரிரு அப்பாவிகளைத் தவிர மற்றபடி குற்றவாளிகள் அல்லாத வேறு யாரும் கொல்லப்படுவதில்லையே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. உண்மையில் அந்த எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது.

சிலரது அரசியல் செல்வாக்கு, அதிகார மேலிடத் தொடர்பு, சரியான ஆதாரம் கிடைக்காத நிலைமை, சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தி அடக்கிவிடக்கூடிய வன்மம்... இப்படிப்பட்ட சூழல்களில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைத்து, சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத்தர முடிவதில்லை. அப்போது இப்படி சட்டத்திற்கும் ஊருக்கும் வெளியே அவர்களின் கதையை முடிப்பதில் தவறு என்ற கருத்தும் பல்வேறு வழிகளில் மக்கள் மனங்களில் ஏற்றப்படுகிறது. அவ்வாறு கருத்தேற்றம் செய்யும் கைங்கரியத்தைச் செய்வதில் போலிஸ் நாயகத் திரைப்படங்கள் பங்காற்றுகின்றன.

அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பதில் கறாராக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட என்கவுன்டர்களுக்கு அனுமதி தரப்படுவது உண்டு. அரசியல் மட்டத்திலோ, துறைசார்ந்த அதிகார மட்டத்திலோ சிலபல சமூகவிரோதிகள் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளப்படுவதும் நடக்கிறது. அவர்கள் எல்லை மீறிச் சென்று வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்க முயல்கிறபோது, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால் பல ரகசியங்கள் உடைபடக்கூடும் என்பதால் இப்படிப்பட்ட என்கவுன்டர்கள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் மனித உரிமை இயக்கத்தினர் சொல்கிறார்கள். ஒரு சில திரைப்படங்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

"அட, வெறும் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்களைப் பார்த்தோமா, பொழுதைப் போக்கிவிட்டு வந்தோமா என்றில்லாமல் இந்த அளவுக்கு ஆராய வேண்டுமா" என்று வழக்கம்போல் சிலர் கேட்கவே செய்கிறார்கள். எந்தத் திரைப்படம் பற்றி எப்படிப்பட்ட விமர்சனம் வைத்தாலும் இப்படிக் கேட்கிறவர்கள் அவர்கள். கலை-இலக்கியத்தின் சமூகத் தாக்கம் குறித்த புரிதல் இல்லாததால் இப்படிக் கேட்கிறார்களேயன்றி அவர்களை வன்முறை ஆதரவாளர்கள் என்று குறைசொல்வதற்கில்லை.

ஆனால், இப்படிப்பட்ட எண்ணங்கள் வளர்க்கப்படுவதன் விளைவை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது வேறொரு கவலை ஏற்படுகிறது.

காவல்துறை அத்துமீறல்கள் நியாயமானவைதான் என்ற கருத்து வலுவாக ஊன்றப்படுவதால், அவர்கள் செய்யக்கூடிய எந்தவொரு தவறான செயலையும் தட்டிக்கேட்க வேண்டும் என்ற மனநிலை மேலோங்குவதில்லை. மக்களுக்காகப் போராடுகிற கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மக்கள் போராளிகள் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுகிறபோது, போலிஸ் நடவடிக்கையில் நியாயமில்லாமல் இருக்காது, என்ற நினைப்பு வருகிறது.

தேர்தல் காலத்தில் வேட்புமனு தாக்கல்கள் முடிவடைந்த பிறகு சில தன்னார்வ அறிவாளி அமைப்புகள் வேட்பாளர்கள் இத்தனை சதவீதம் பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அறிக்கை வெளியிட்டு செய்திகளில் இடம்பெறுவார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் வேறு சில அரசியல் இயக்கத்தினரும், தொழிற்சங்கத் தலைவர்களும் பொதுக்கோரிக்கைகளுக்கான மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்தான் பதிவு செய்யப்படுகின்றன. அவர்கள் தேர்தலில் பங்கேற்க மனு தாக்கல் செய்கிறபோது, இந்தப் பதிவுகளின்படி கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களேயாவர். இதை மேற்படி அறிவாளி அமைப்புகள் ஆராய்வதேயில்லை. அப்படி ஆராயத் தேவையில்லை என்ற மனப்போக்கை வளர்ப்பதில் என்கவுன்டர் நடவடிக்கைகளும் திரைப்படங்களும் பங்காற்றுகின்றன.

இந்த மனப்போக்கு பரவலாவதால், மனித உரிமைகளுக்கான எந்தவொரு போராட்டம் என்றாலும் சில அரசியல் இயக்கங்களும் சில மனித உரிமை அமைப்புகளுமே அந்தப் போராட்டங்களுக்கென வாக்கப்பட்டவையாக எப்போதும் களம் காண்கின்றனவேயன்றி, அந்த இயக்கங்கள் சார்ந்தவர்கள் அவற்றில் பங்கேற்கிறார்களேயன்றி, வெகுமக்கள் கலந்துகொள்வதில்லை. இது ஜனநாயக வளர்ச்சிக்குப் பெரும் கேடல்லவா?

ஏதாவது ஒரு காவல்நிலைய சாவு பற்றிய செய்தி வருகிறபோது, இறந்தவரின் குடும்பத்தினர், இடதுசாரி - ஜனநாயக சக்திகள், சில அமைப்புகள் தவிர்த்துப் பெரும் மக்கள்திரள் அந்தச் சாவுச் செய்தியைக் கண்டுகொள்வதில்லை. அவன் ஏதாவது தப்பு செய்திருப்பான். அவமானம் தாங்காமல் கயிற்றில் தொங்கியிருப்பான்... என்று இலகுவாக ஒதுக்கிவிடுகிறார்கள்.

ஒரு காவல்துறையின் அத்துமீறல்கள் பற்றிக் கேள்வி கேட்கத் துணியாத இந்த ஒதுக்கல்போக்கு, வேறு எந்தத் துறையின் வரம்பு மீறல்களையும் தட்டிக்கேட்காத  சமூக மனநிலையாக மாறுகிறது. அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட முன்வராத செயலின்மையைகக் கெட்டிப்படுகிறது.

ஒருவேளை இதையெல்லாம் எதிர்த்துக்கிளம்ப மக்கள் தயாராவார்களானால் இருக்கவே இருக்கிறது சாதி! மதம்! எல்லாம் கடவுள் செயல் என்ற போதனை! சாதித்தூய்மையைக் காப்பதற்கு அவதாரம் எடுத்தவர்களாக சில அமைப்புகள் பேரவைக்கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்க, “ஆம்பளை கெட்டா வாழ்க்கை போச்சு, பொம்பளை கெட்டா வம்சமே போச்சு,” என்று பஞ்ச் டயலாக் பேசும் திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றனவே!

இப்படியெல்லாம் மக்கள் திசைதிருப்பப்பட வேண்டும், மக்களின் கேள்வி கேட்கும் திறன் மழுங்கடிக்கப்பட வேண்டும், மக்களின் தட்டிக்கேட்கும் வல்லமை பொசுக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய உள்நாட்டு - உலகமய சுரண்டல் தாதாக்களின் விருப்பம் அல்லது ஆக்ஞை. அந்த விருப்பம் அல்லது ஆக்ஞையை அரசு எந்திரங்களோடு சேர்ந்து நிறைவேற்றுகிற கரசேவையை போலிஸ் நாயகத் திரைப்படங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறபோது அதை வெறும் பொழுதுபோக்கென்று விட்டுவிடலாமா?

('தீக்கதிர்' 30-6-2013 இதழுடனான ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளிவந்துள்ள எனது கட்டுரை)

Monday 24 June 2013

சாதி - மதமாற்றம் - நீதிமன்றம்

“பிற்படுத்தப்பட்ட நிலையைத் தீர்மானிப்பது பிறப்புதான், மதமாற்றம் அல்ல. ஆகவே மதம் மாறுகிற ஒருவர் தன் சமூக நிலையை இழந்துவிடுகிறார். முந்தைய மதத்தில் தனக்குக் கிடைத்த சாதி சார்ந்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளைப் புதிய மதத்தில் அவர் கோர முடியாது...”

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. சுப்பிரமணியன் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். நீதிமன்றம் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கிற தீர்ப்பு இது.

பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பட்டியல் சாதிகளையும் சேர்ந்தவர்கள் பிற மதங்களுக்கு மாறுகிறபோது, கல்வியிலும் அரசுப் பணியிலும் தங்களுக்குரிய இட ஒதுக்கீடு உரிமையைக் கோர முடியாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

சாதி நிலை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது, மதமாற்றத்தால் அல்ல என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அப்படியானால் ஒருவர் எந்த மதத்திற்கு மாறினாலும், மதம் என்கிற இழவே வேண்டாம் என்று உதறினாலும், பிறப்பின் அடிப்படையிலான அவரது சாதி அடையாளம் மாறாது என்பதுதானே அர்த்தம்? அப்படியானால் அதற்குரிய சட்ட உரிமைகள் தொடரும் என்றுதானே அர்த்தம்?

“இந்து மதத்திலிருந்து, சாதியை அங்கீகரிக்காத கிறிஸ்துவத்திற்கோ வேறு மதத்திற்கோ ஒருவர் மாறுகிறபோது அவரது சாதி நிலை இழக்கப்படுவதாகவே பொருள்” என்று முன்பு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதாம். சென்னை உயர்நீதிமன்றமே கூட 1952ல் “மதம் மாறுகிறவர் எந்த சாதியையும் சேராதவராகிறார்” என்று தீர்ப்பளித்திருக்கிறதாம். நீதிபதி இந்த இரண்டு தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அப்படியானால் இந்து மதம்தான் கேவலமான முறையில் சாதிகளையும் சாதிப்பாகுபாடுகளையும் பராமரிக்கிறது என்று நீதிமன்றம் அறிவிக்குமா? அந்த மதத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கத் துணியுமா? சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் கூண்டோடு மதம் மாறிவிட வேண்டியதுதான் என்பதையும் நீதிமன்றம் அங்கீரிக்குமா?

இங்கே மதம் மாறுவது எளிது, ஆனால் சாதி மாறுவது இயலாது. அதாவது, கும்பிடுகிற கடவுளைக் கூட மாற்றிக்கொள்ளலாம், குறுகிய சாதி அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அதாவது, எந்தக் கடவுளாலும் சாதிச் சாக்கடையை சுத்தம் செய்ய இயலாது. காரணம், இந்திய சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படையே சாதிய வலையமைப்புதான்.

சாதியை ஒழிக்க மிக விரிவான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் தேவை. மிக மிக விரிவான சமூக சீர்திருத்தப் பிரச்சாரங்கள் தேவை. மிக மிக மிக அடிப்படையான வர்க்கப்போராட்டத்தோடு இணைந்த இயக்கங்கள் தேவை. ஆம், வர்க்க-வர்ண போராட்டங்கள் பிரித்துப் பார்க்க முடியாதவை. அந்தப் போராட்டங்கள் முழுமையாக வெற்றிபெறும் வரையில் இட ஒதுக்கீடு (தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் கூறுவது போல் உரிமைப் பங்கீடு) போன்ற பாதுகாப்புகள் தொடரவே வேண்டும்.

சாதியை ஒழிக்க இன்னொரு தேவை காதல் உறவுகள். வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்துவ நாடார் குடும்பத்தில் பிறந்த யாஸ்மின் முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்துகொண்டவர். சென்ற ஆண்டில் தமிழக அரசின் 4ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு எழுதிய அவர் தன் சாதி அடிப்படையிலான உரிமையைக் கோரியபோது, மதம் மாறிவிட்டதால் அந்தச் சலுகை இல்லை என்று கலந்தாய்வின்போது சொல்லப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில்தான் நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார்!

சாதி ஒழிப்பிற்கும் காதல் செழிப்பிற்கும் நீண்ட நெடிய போராட்டப் பயணம் தேவை என்பதே மறுபடியும் உறுதியாகிறது.



Friday 7 June 2013

‘பெத்தவன்’ - இது வெறும் சிறுகதையல்ல

புத்தக அறிமுகம்

உண்மையோடு கற்பனை கலந்துறவாடுகிற ஒரு இலக்கியப் படைப்பு நேரடி உண்மையை விடவும் பல மடங்கு வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்த வல்லதாக இருக்கும். எந்த இடம் வரையில் உண்மை, எங்கேயிருந்து கற்பனை என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இமையம் படைத்துள்ள பெத்தவன் சிறுகதை அப்படியொரு வாழ்க்கை உண்மையை அழுத்தமாக உணரவைக்கிறது. மிகையான பெருமிதங்களின் அடியில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை நிலைமைளை உணர்வது என்பது அந்த நிலைமைகளை மாற்றுவதற்கான முதற்படி. தமிழக கிராமங்களின் தெருக்களில் புரையோடிப்போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை உணரச் செய்து அந்த முதற்படியில் கைப்பிடித்து ஏற்றிவிடுகிற பணியைத் தமது அனைத்துப் படைப்புகளிலும் செய்து வந்திருப்பவர் இமையம்.

தமிழகத்தில் விடுதலைப்போராட்ட காலத்தில் பிராமணர் அல்லாத சமூகங்களை அரசியலாகத் திரட்டுகிற முயற்சிபில் திராவிட இயக்கம் உருவானது. தனி மனிதர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்டவைத்துக்கொள்வதை அருவருப்பானதாக உணரச்செய்து, பெண்ணுரிமைக் கருத்துகளுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுதது, பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு ஒரு சமூக மரியாதை கிடைக்கச்செய்ததோடு சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டியதிலும் திராவிட இயக்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்களிப்பு மறுக்கவியலாதது.

இன்றைக்குத் தமிழகத்தில் வேறு வகையான அணிதிரட்டல் வேலை நடந்துகொண்டிருக்கிறது. தலித் அல்லாத சமூகங்கள் அரசியலாகத் திரட்டப்படுவதன் அப்பட்டமான நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அலலது அதிகார பேரம் நடத்துவது. அனைத்து சமுதாய தலைவர்கள் பேரவை என்பது போன்ற பெயர்களில் கூட்டப்படுகிற கூட்டங்களில், அந்த மேட்டுத்தெரு சமூகங்களின் மக்கள் மனங்களில் ஏற்கெனவே குடியேற்றப்பட்டிருக்கிற தலித் விரோத மனநிலைகள் மேலும் மேலும் வளர்க்கப்படுகின்றன. நெடும் போராட்டங்களின் பலனாக சில தலித் குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டிருக்கிற சிறிதளவு முன்னேற்றங்களையும் சகித்துக்கொள்ள முடியாத வன்மங்கள் கூர்தீட்டப்படுகின்றன. இளம் தலித் ஆண்களுக்கும் பிற சாதிகளின் இளம் பெண்களுக்கும் ஏற்படுகிற இயற்கையான காதல் உணர்வுக்கு எதிரான ஆத்திரத் தீயில் எண்ணெய் வார்க்கப்படுகிறது. அதன் மூலம் அந்த சமூகங்களின் பெண்களுக்குத் தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்ட பரம்பரை என்பது போன்ற  பெருமைக்கட்டுமானங்களால் பகுத்தறிவு இழிவுசெய்யப்படுகிறது. அந்த போலியான கட்டுமானங்களைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அது தலித் குடியிருப்புகளின் மீதான வன்முறைத் தாக்குதல்களாக, காதலர்களைக் காவு கொடுக்கும் கவுரவக் கொலைகளாக வடிவெடுக்கிறது.

இடதுசாரிகள் வலுவான இயக்கமாக வேரூன்றியிருக்கிற இடங்கள் தவிர்த்து நாடு முழுவதுமே இந்த தலித் எதிர்ப்பு அரசியல் அணிதிரட்டல் நடக்கிறது. இந்திய சமுதாயத்தின் தனித்துவ அநாகரிகமான சாதியப் பாகுபாடுகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அப்படியே கட்டிக்காக்கிற இந்த அணிதிரட்டலின் பின்னால் திருட்டுச்சிரிப்பு சிரிக்கிறான் மனு. தன்னை மேலிருந்து ஒரு சாதி மிதிக்கிறது என்ற கோபத்தை விடவும், தனது காலுக்குக் கீழே மிதிபடுவதற்கு ஒரு சாதி இருக்கிறது என்பதில் ஒரு மனநிறைவை ஏற்படுத்திய சூட்சுமத்தின் சிரிப்பு அது. போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை என்ற வர்க்க உணர்வு முழக்கம் வெறும் முழக்கமாக மட்டுமே தொடர்ந்திருக்க, ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தொழிலாளிக்கு சாதி இருக்கிறது, மதம் இருக்கிறது என்ற பாறை போன்ற உண்மை இங்கு வர்க்கப்போராட்ட அணிதிரட்டலுக்கு இன்னும் எவ்வளவு தொலைவு சென்றாக வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அந்த நெடுந்தொலைவைக் கடப்பதில் சாதிப்பற்றிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும். அதில் ஒரு முக்கியமான கட்டம்தான் சுயசாதிப் பெருமையைக் கட்டுடைப்பது. சுயசாதிப் பெருமைக்குள் மறைந்திருக்கும் அழுகல்களைக் காட்சிப்படுத்துவது. சமூகத்தளத்தில் நடந்தாக வேண்டிய இந்தக் கட்டுடைத்தலுக்கும் காட்சிப்படுத்தலுக்கும் இலக்கியத்தளத்தில் அடிக்கல் நாட்டுகிற பணியைச் செய்கிறது பெத்தவன் சிறுகதை. எல்லோரும் படித்தாக வேண்டிய ஒரு கதைப்படைப்பு, எல்லோரும் பார்த்தாக வேண்டிய ஒரு திரைப்படம் என்று நான் கருதுவேனானால் அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்வதில்லை என்ற ஒரு வழிமுறையை இலக்கிய/திரைப்பட விமர்சனங்கள் எழுதத்தொடங்கிய நாளிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன். அந்த மரபுப்படி 'பெத்தவன்' கதை என்ன என்பதையும் இங்கு குறிப்பிடப் போவதில்லை.

ஒரு "கீழ்ச்சாதிப் பயல்|" பெரியசாமி மீது காதல் கொள்ளும் ஒரு ஆதிக்கசாதிப் பெண் பாக்கியம். அவளுடைய உயிரை அவளது பெற்றோரே அழித்துவிட வேண்டும் என்று ஊர்கூடி முடிவு செய்கிறது. ... "எங்களுக்காவா செய்யுறம்? ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டுப் போகணுமில்ல, அதுக்காகத்தான்,| என்ற அந்த முடிவுக்கான நியாயம் ஊட்டப்படுகிறது. ஆயிரம் தலக்கட்டுக்காரன், வேட்டி கட்டிக்கிட்டுப் போகணும்ல என்ற வார்த்தைகள் சாதிப்பெருமையின் உடன்பிறப்புதான் ஆணாதிக்கம் என்பதன் வெளிப்பாடுகளே.

சாதிய ஆணாதிக்கத்தின் வெற்றி, பெண்களின் மூலமாகவே இதையெல்லாம் நிறைவேற்ற வைத்ததில் இருக்கிறது. பூச்சி மருந்த வாயில் ஊத்தி ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக்கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக்கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும், என்று எப்படி பாக்கியத்தைக் கொல்வது என்பதற்கு வழிசொல்கிறவள், இடுப்பில் குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெண்!

பொதுவாகத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனையும் சேர்த்துக்கொல்லவே பல ஊர்ப்பஞ்சாயத்துகளில் முடிவு செய்யப்படும். இங்கே பெரியசாமியை ஏன் விட்டுவைக்கிறார்கள் என்றால் அவன் காவல்துறையைச் சேர்ந்தவன்! அதிகாரம் எவ்வளவு முக்கியமானது என்பது நுட்பமாகச் சொல்லப்படுகிறது.

இது என் குடிதெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும்... என்று இரவோடு இரவாக மகளைக் கொன்றுவிட ஊருக்கு சத்தியம் செய்துகொடுக்கிறான் பாக்கியத்தைப் பெற்றவனான வண்டிக்காரன்மூட்டு பயினி (பழனி). பெத்தவன், பெத்தவள், பெத்தவனைப் பெத்தவள், உடன்பிறந்தாள் என, ஊராரின் முடிவை நிறைவேற்றியாக வேண்டிய குடும்பத்திற்குள் பாசத்திற்கும் சாதிக்கட்டுப்பாட்டிற்கும் இடையே அந்த இரவில் நடக்கும் மனப்போராட்டத்தை இவ்வளவு உயிரோட்டமாகக் கதையாக்க முடியுமா என்ற வியப்பு ஏற்படுகிறது.    குடும்பத்தில் ஆண் எடுக்கும் முடிவே இறுதியானது என்ற நியதி இவர்களது குடும்பத்தில் வேறு வகையில் செயல்படுகிறது...

காதலை சில தலைவர்கள் நாடகம் என்று கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதன் தாக்கத்தில் சாதியமைப்பாகவும் அரசியல் கட்சியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிற உள்ளூர்க்கும்பல், காதலை வெறும் ஆணுறுப்பைத் தேடும் பெண்ணுறுப்பின் தினவாக மட்டுமே பார்க்கிறது. பிடிபட்ட பாக்கியத்தின் முன் இருபது முப்பது பையன்கள் வேட்டியை அவிழ்த்துக் காட்டி, இதுக்குத்தான அலையுற? எத்தன வேணும் எடுத்துக்க, என்று கூறுவதில் எவ்வளவு வக்கிரம் தோய்ந்த வன்முறை!

நிகழ்வுகளில் நேரடியாகத் தொடர்பு கொள்ளாத, ஆனால் சமூகத்தைப் படம்பிடித்துக்காட்டுகிற ஒரு ஜோசியக்காரன் வந்துபோகிறான். பாக்கியம் விவகாரம் சிக்கலானதைத் தொடர்ந்து அவளது ஜாதகத்தை பெண்ணாடம் பொன்னேரி ஜோசியக்காரனிடம் கொண்டுசெல்கிறார்கள். அதைப் பார்த்ததுமே அவன் யாரோ சொல்லிக்கொடுத்த மாதிரி இப்படிச் சொல்கிறான்: "ஜாதகப்படி புள்ளெ சோரம்போவும். இந்த ஜாதகத்தால பெரிய கலகம் மூளும்...." பின்னர் அதே ஜோசியக்காரன், பாக்கியத்தின் அம்மா கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, "எனக்கு ஆறு புள்ளிவோ. இந்த வாய வித்துத்தான் அதுவுளுக்குச் சோறு போடுறன். புள்ள எங்கிருந்தாலும் உசுரோட இருந்தா போதும்னு வுட்டுட்டுப் போ. கச்சிகட்டாத. மகராசியா இருப்ப போ,|" என்கிறான். ஜோசியம் சொல்வது என்பது உண்மையில் நட்சத்திரங்களின் நடமாட்டத்தைப் பொறுத்ததல்ல, வாழ்க்கை நடப்பைப் பொறுத்ததுதான் என எடுத்துக்காட்டுகிற உரையாடல் அது. அப்படி வாயை விற்றுப் பிழைக்கிறவர்களிலும் சிலர் மாறுபட்டவர்களாக இருக்கக்கூடும்!

கதை முடிவில் ..... உசுரு போறாப்ல கத்திக்கிட்டு... காடு பூரா அது சத்தம்தான் என்று குரைத்துக்கொண்டிருக்கிறது பழனியின் நாய். மனித முயற்சிகள் தோற்றுவிடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், அந்த நாயின் பெருஞ்சத்தமாவது சாதியூர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும்.

இந்த ஒற்றைச் சிறுகதைப் புத்தகத்தை வெளியிட்டிருப்பதன் மூலம் பாரதி புத்தகாலயம் செய்திருப்பது ஒரு சமுதாயத் தொண்டு. முன்னுரை அளித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், "ஒரு கலைஞன் தான் வாழும் சமூகத்துக்கும் காலத்துக்கும் ஆற்றவேண்டிய கடமை குறித்து நாளெல்லாம் நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். இமையம் பிரச்சனைக்குரிய அதே நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டு, துணிச்சலாகவும் துல்லியமாகவும் தன் காலத்தின் வாழ்க்கையை, அதன் குரூரத்தை நம் மனமெல்லாம் கரையும் விதத்தில் இப்படைப்பை வெளியிட்டுள்ளார். கண்களில் நீர் திரையிடாமல் இக்கதையை வாசித்து முடிக்க முடியாது," என்று கூறுகிறார். கண்களில் திரையிடும் அந்த நீர், சமூகத்தின் சாதித்திரை கிழிக்கும் ஆவேச வெள்ளத்தின் துளி.

பெத்தவன்
இமையம்

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600 018
தொலைபேசி: 044 24332424,   24332924
மின்னஞ்சல்: வாயஅணைடிடிமளபஅயடை.உடிஅ
பக்கங்கள் 40
விலை ரூ.20

(தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிற 'வெண்மணி' பத்திரிகையின் இம்மாத இதழுக்காக நான் எழுதிய புத்தக அறிமுகக் கட்டுரை இது)

Sunday 2 June 2013

தமிழர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?

புத்தக அறிமுகம்

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி,” என்று மிகைப்பெருமை உணர்வோடு சொல்லப்படுவதுண்டு. அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால் கல்லும் மண்ணும் தோன்றாமல் தமிழர் குடி எங்கே தோன்றியிருக்க முடியும், எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும். தமிழர் இனம் தமிழகத்திலேயே தோன்றிய தொல்குடிதான் என்று சொல்வதற்காக இவ்வாறு மிகைபடக் குறிப்பிடுவதில் குறைகாணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். இன்று நாம் தமிழ் மண் என்று அடையாளப்படுத்துகிற இடங்களில் வாழ்கிற மக்களின் தொன்மைக்கால மூதாதையர்கள் முன்பு வேறு எங்கிருந்தோ வந்தவர்கள்தான் என்ற புரிதல் அறிவியல்பூர்வமானது. இதை ஒப்புக்கொள்கிறவர்களிடையே அந்தப் பூர்வீக இடம் எது என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஒரு பகுதியினர் தற்போதைய குமரிமுனைக்குத் தெற்கில் நீண்டதொரு நிலப்பகுதி இருந்ததாகக்கூறி அதற்கு லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்றெல்லாம் பெயர் சூட்டினர். அந்த நிலப்பரப்புகளைக் கடல்கொண்டுவிட்டதாகவும் கூறினர். ஆயினும் அந்தக் கருத்துகளில் இனப்பெருமை உணர்வுகள் இருந்த அளவுக்கு அறிவியல் அணுகுமுறைகள் இருந்ததில்லை.

அதே போல் சிந்துசமவெளி நாகரிகம் பற்றிய பேச்சுகளிலும் அங்கே திராவிடர்களின் தொன்மை அடையாளங்கள் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதை வைத்து அக்காலத்திய தமிழ் மக்கள்தான் இங்கிருந்து அங்கே சென்று அந்த நாகரிகத்தைக் கட்டினார்கள், பின்னர் எதிரிகளின் தாக்குதலால் அழிந்தார்கள் என்று சொல்வோரும் உண்டு. அந்த முயற்சிகளும் ஊகங்களாக இருந்ததேயன்றி அறிவியல் கண்ணோட்டமாக வெளிப்பட்டதில்லை. பொதுவாகவே தமிழர் கதைகளைப் பதிவு செய்வதில் வரலாற்றுப் பார்வையும் அறிவியல் கண்ணோட்டமும் தவறவிடப்படுகின்றன என்ற விமர்சனங்கள் உண்டு. அந்தக் குறையை நீக்கும் வகையில் பொறியியலாளர் பா. பிரபாகரன் எழுதியுள்ள புத்தகம்தான் ‘குமரிக்காண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்.’

லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய கருத்தாக்கங்கள் பழங்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களைச் சார்ந்தே வலியுறுத்தப்படுகின்றன. வரலாற்று ஆதாரங்களோ அறிவியல் தடயங்களோ இல்லாத அந்தக் கருத்தாக்கங்கள் வெறும் கற்பனையே என்பதை அதே இலக்கியங்களின் துணையோடும், பகுத்தறிவு வாதத்தின் வலுவோடும் நிலைநாட்டுகிறார் பிரபாகரன்.
“... தமிழர்கள் தோன்றிய இடம் எது? இந்தக் காலகட்டம் வரையில் நம்மால் விடை சொல்ல முடியவில்லை. மீண்டும் முன்னேறிச்செல்ல முடியாத ஒருவழிப் பாதையில் வந்ததைப் போல் உணர்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இதுவரை நிகழ்ந்த அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம் தமிழர்களின் தாய்நாடு கடலில் மூழ்கியதாக நாம் நம்பியதுதான். கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ஒரு பேரழிவை நமது இலக்கியங்கள் கடல்கொண்டதாக உயர்வு நவிற்சியாகக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு அல்லாமல் தமிழர்களின் தாய்நாடு என்பது கடலுக்குள் மூழ்கவில்லை, மாறாக ஏதோ ஒரு காரணத்துக்காக மக்களால் கைவிடப்பட்ட இடம் என்று வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் ஒரு ஒளிக்கீற்று தென்படுகிறது,” என்கிறார்.

ஏற்கெனவே புத்தியில் அடைத்துவைத்திருக்கிற நம்பிக்கைகளை அகற்றினால் அந்த ஒளிக்கீற்று பெரும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
அந்த வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிகிறது சுமேரியம். தற்போது இராக், ஈரான் என்று அழைக்கப்படுகிற, பைபிள் காலத்தில் பாபிலோனியா என்றும் அதற்கு முன்பு மெசபடோமியா என்றும் அழைக்கப்பட்ட பகுதிக்கு அதற்கும் முன்பாக இருந்த பெயர் சுமேரியம். உலகில் மனித உழைப்பு சார்ந்த இயக்கத்தில் நடைபெற்ற முதல் புரட்சி விவசாயப் புரட்சி. ஒரு கைப்பிடி விதை நெல்லைத் தூவினால் அது பெருங்குவியலாய் நெல்மணிகளைத் தரும் என்ற இயற்கை உண்மையைக் கண்டுபிடித்ததுதான் விவசாயப் புரட்சி. இனி உணவைத் தேடி காடுகாடாகச் செல்ல வேண்டியதில்லை, இருந்த இடத்திலேயே உணவை விளைவிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், அவ்வாறு இருந்துகொண்ட இடங்கள் ஊர்களாகவும் நகரங்களாகவும் வளர்ச்சியடைந்தன.

புவியில் விவசாயப் புரட்சி முதலில் நடந்த இடம் சுமேரியம். அதற்குக் காரணம் அங்கு பாயும் இரண்டு நதிகள். குறிப்பாகக் குறைவான வேகத்தில் பாயும்  யூபிரிடிஸ் நதி (தமிழ் இலக்கியத்தில் பஃறுளி ஆறு) கொண்டுவந்து கரையில் சேர்ந்த வளமான வண்டல் மண். இந்தப் பின்னணியில் அங்கு விவசாயப் புரட்சி நடந்தது பொ.யு.மு. 8000 ஆண்டு... (வரலாற்றுக்காலத்தை கி.மு., கி.பி. என்று குறிப்பதற்கு பதிலாக இன்று பொது யுகத்துக்கு முன், (பிஃபோர் காமன் எரா) பொது யுகம் (காமன் எரா) என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதையொட்டி பிரபாகரனும் பொ.யு.மு, என்று குறிப்பிடுகிறார்.)

விவசாயப் புரட்சியின் இன்னொரு விளைவு, மனிதர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிந்தது, கிளைத்தொழில்கள் வளர்ந்தன. கலைகள் பிறந்தன. எழுத்து உருவானது. இலக்கியம் உருவெடுத்தது. தங்கள் எண்ணங்களையும் எண்ணற்ற தகவல்களையும் அவர்கள் களிமண் ஓடுகளில் எழுத்தாகப் பெருமிதத்துடன் பதித்து வைத்தார்கள். அன்றைய சுமேரிய மக்கள் உருவாக்கிய நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மன்னர்களின் தனித்தனி நாடுகளாக இருந்தன. அந்த நாடுகளுக்குள் போர்களும் நிகழ்ந்தன!

சிறப்பான நாகரிகத்தை அங்கே கட்டியவர்கள் பிறகு எதற்காக அந்த இடத்தைக் கைவிட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிக்கு வந்தார்கள்? அங்கே ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பு போன்ற ஒரு இயற்கைச் சீற்றம்தான் காரணம். அவர்கள் எதற்காக இங்கே வர வேண்டும்? நீண்டகாலமாவே சுமேரிய மக்களின் கனவுத் தலமாக இருந்து வந்த இடம் தில்முன். இயற்கை வளங்கள் கொழித்த, யானைத்தந்தங்கள் செழிப்பாகக் கிடைத்த, கதகதப்பும் குளுமையும் எழிலும் மிகுந்த இடம் அது. அங்கே சென்று வருவது என்பது சுமேரிய இலக்கியங்களில் பதிவாகியிருக்கிற சாதனைப் பயணம். அந்த தில்முன்தான் இன்றைய கேரளம் உள்ளிட்ட அன்றைய தமிழகம்!

தங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வளத்தையும் வழங்கக்கூடிய தமிழகத்தில் குடியேறக் கப்பல்களில் புறப்பட்டார்கள். கடல் வழி கப்பலில் வந்ததால் குறைவான பொருட்களையே கொண்டுவர முடிந்தது - இலக்கியச் சான்றுகளான ஓடுகள் உட்பட. இந்தத் தகவல்களுக்கு முன்பாக சுமேரியத்தில் எப்படி படகு செய்தலும் கப்பல் கட்டுதலும் வளர்ந்தன என்பதற்கான இயற்கை வளம் சார்ந்த செய்திகளை நூலாசிரியர் கொடுத்துவிடுவதால் தில்முன் பயணம் கற்பனையானது அல்ல என்ற உறுதி நமக்கு ஏற்படுகிறது.

ஒரு பகுதி மக்கள் தரைவழியாகவும் புறப்பட்டார்கள். அவர்கள் சென்றடைந்த இடம்தான் சிந்துசமவெளி. அங்கே குடியேறிய மக்களின் பண்பாட்டு அடையாளங்களுக்கும் தமிழகத்தில் குடியேறியவர்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பினும் அதைவிட மிகுதியான வேறுபாடுகள் இருப்பது ஏன்? கடல் வழி புறப்பட்டவர்கள் நேரடியாக இலக்கை வந்தடைந்தார்கள். தரைவழி புறப்பட்டவர்கள் இயல்பாகவே ஆங்காங்கே தங்கினார்கள். அப்படித் தங்கியது என்பது ஆண்டுக்கணக்கில், தலைமுறைக் கணக்கில் கூட நடந்திருக்கிறது. எனவே அந்தந்தப் பகுதிகளின் பண்பாட்டுத் தாக்கங்களோடு இறுதியில் இலக்கைச் சென்றடைந்தார்கள். சொல்லப்போனால் ஆரியர்கள் என்பவர்கள் கூட சுமேரியத்திலிருந்து வந்தவர்களே! திராவிடர், ஆரியர் இரு இனத்தாருக்கும் தாய்மடி ஒன்றேதான் என்பது ஒரு துணிச்சலான வாதம்.

இதையெல்லாம் உடலமைப்பு சார்ந்த மானுடவியல், புவியியல், மொழியியல், இலக்கியம், புராணக் கதைகள், வழிபாட்டு முறை ஒற்றுமைகள், கல்வெட்டுகள், கட்டடக் கலை, நடைமுறை எடுத்துக்காட்டுகள் என பல கோணங்களில் முன்வைத்து நிறுவியிருப்பது இந்நூலின் சிறப்பு. எளிய நடையில், ஒரு வரலாற்று நாவலுக்கான விறுவிறுப்போடு சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு.

சுமேரியாவில் இருந்த ‘எரிது’ நகரம்தான் மூல ‘மதுரை!’ தனித்து இயங்க வல்லது என்ற பொருள்தரும் ‘தமி’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது தமிழ் என்ற சொல்! இத்தகைய வாதங்கள் சுவையும் கனமும் சேர்க்கின்றன.

சில வாதங்களோடு சிலர் முரண்படலாம். ஆனால், அறிவியல்பூர்வமான தர்க்கவியல் பார்வையை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப்பட்ட உழைப்பின் பலனாய் இந்தப் புத்தகம் பூத்திருப்பதை மறுக்க மாட்டார்கள். துறைமுக அதிகாரியாய்ப் பணியாற்றிய அனுபவம் இந்த எந்திரவியல் பொறியியலாளரின் முயற்சிக்குத் துணைசெய்திருக்கிறது.

இனம் தொடர்பான மிகைப்பெருமை, தாழ்வு மனப்பான்மை இரண்டுமே முன்னேறும் கால்களுக்குத் தளை போடுகிறவைதான். அந்தத் தளைகளில் சிக்காமல் இருக்க இனத்தின் தொன்மை குறித்த உண்மை வரலாறு ஒவ்வொருவருக்கும் தெரிந்தாக வேண்டும். அதை நோக்கி நடைபோடத் துணை செய்யும் சிறிய ஒளிக்கீற்றுதான் இந்தப் புத்தகம்.

‘குமரிக்கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்’
-பா. பிரபாகரன்
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம்,
அம்பாள் கட்டடம்,
லாயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600 014
பக்கங்கள்: 176
விலை: ரூ.125

(‘தீக்கதிர்’ ஜூன் 2, 2013 இதழின் ‘புத்தக மேசை’ பகுதியில் வெளிவந்துள்ள, பா. பிரபாகரன் புத்தகத்திற்கு நான் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரை.)

Wednesday 29 May 2013

மாவோயிஸ்ட் சிக்கல் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையா?

மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகள் சத்திஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் உரியதல்ல. பல மாநிலங்களிலும் பரவியிருக்கிற தேசியப் பிரச்சனை அது. மே 25 அன்று சத்திஸ்கரின் பஸ்தார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கடுமையான கண்டனத்திற்கு உரிய வெறித்தனமான செயல். கோபத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன, கோபத்தை வெளிப்பத்தியிருக்கும் கொலைவழி ஒரு சதவீதம் கூட ஏற்க இயலாதது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் ஊர்வலத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத்தவறியிருக்கிறது மாநில பாரதிய ஜனதா கட்சி அரசு. பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததை மாநில முதலமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த அளவில் இதில் மாநில பாஜக அரசுக்குப் பொறுப்பிருக்கிறது.

ஆனால், மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை இந்த அளவுக்கு வளர்ந்ததில் மத்திய அரசுக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது. இன்றைய மன்மோகன் சிங் அரசை மட்டும் சொல்லவில்லை, முந்தைய வாஜ்பாய் அரசு, அதற்கும் முந்தைய அரசுகள் என எல்லா மத்திய ஆட்சியாளர்களுக்கும் ஒட்டுமொத்த மத்திய அரசுக் கட்டமைப்புக்கும் இதில் பொறுப்பிருக்கிறது.

மத்திய அரசு மக்கள் மீது திணித்த பொருளாதாரக் கொள்கைகள் பழங்குடி மக்களையும் தலித் மக்களையும் அந்நியப்படுத்துவதாக இருந்தன. கனிம வளம் மிக்க அவர்களது நிலங்களைக் கைப்பற்றி டாட்டாக்களுக்கும் பிர்லாக்களுக்கும் அம்பானிகளுக்கும் தாரை வார்த்தது மத்திய அரசு. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இந்த மக்களின் வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்டன, அவர்களது பரம்பறை வன உரிமைகள் நசுக்கப்பட்டன. அந்த மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலைவசதி போன்ற தேவைகள் புறக்கணிக்கப்பட்டன. இப்படிப்பட்ட துரோகங்களால் ஏற்பட்ட ஏமாற்றமும் ஏக்கமும் ஆத்திரமும் அதிதீவிரவாதம் பேசும் மாவோயிஸ்ட்டுகளுக்கு விளைநிலமாகியது.

இடதுசாரி அதிதீவிரவாதம் ஒரு இளம்பருவக் கோளாறு என்றார் லெனின். தவறான தத்துவத்தைக் கைக்கொண்டவர்கள் இந்த அதிதீவிரவாதிகள். இந்தியா விடுதலை பெற்ற நாடு என்பதையே ஏற்காதவர்கள். இந்தியாவில் முதலாளித்துவம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது, நாட்டின் அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறது என்ற உண்மை நிலைமைகளை மதிப்பிடத் தவறியவர்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் கமிஷன் ஏஜென்டுகளான தரகு முதலாளிகள்தான் இந்திய மக்களின் வர்க்க எதிரிகள் என்று கணித்தவர்கள். அந்த எதிரியை ஒழிக்கவென சாகசவாதப் பாதையாக ஆயுதங்களைத் தூக்கியவர்கள். போராளிகள், தியாகிகள் என்றாலும் அந்தப் போராட்டத்தையும் தியாகத்தையும் சரியான இலக்கின்றி வீணாக்குகிறவர்கள்.

இல்லாத அந்த எதிரியை எதிர்த்துப் போராடக்கிளம்பினார்கள். இல்லாத எதிரியோடு எப்படி மோதுவது? ஆகவே உள்ளூரில் ஒரு போஸ்ட்மேன், ஊராட்சிமன்ற உறுப்பினர், சாதாரண போலிஸ் கான்ஸ்டபிள்... என இவர்களைத்தான் அந்த வர்க்க எதிரியின் ஆட்கள் என கொலை செய்யத் தொடங்கினார்கள். அரசால் கைவிடப்பட்டிருந்த கிராமங்களைத் தங்களது ஆதிக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். அந்த மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக ஒரு ஆம்புலன்ஸ் வந்தால் கூட அதை அரசின் ஆயுத வண்டியாக சித்தரித்து வெடிவைத்துத் தகர்தார்கள். பள்ளிக்கூடங்களை முடக்கினார்கள்...

மாவோயிஸ்ட்டுகளை எதிர்கொள்வதற்காக அரசு உதவியுடன் அமைக்கப்பட்ட சல்வா ஜூடூம் அமைப்போ, காவல்துறையை விடவும் மோசமாக கிராம மக்களின் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தது. பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற எல்லாவகையான அத்துமீறல்களையும் சல்வா ஜூடூம் ஆட்கள் செயல்படுத்தினார்கள். இது கிராம மகக்ளை மேலும் தனிமைப்படுத்தியது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஆயுதப் படை போன்ற சல்வா ஜூடூம் சட்டவிரோதமான அமைப்பு என்று தீர்ப்பளித்த பின்னர்தான் அது கலைக்கப்பட்டது.

இப்போதும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல் சட்ட முன்வரைவு ஒன்றை மன்மோகன் சிங் அரசு தயாரித்திருக்கிறது. பாஜக-வின் அமளி ஒத்துழைப்புடன் முடக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த சட்ட முன்வரைவு மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. ஏற்கெனவே சட்டத்திற்குப் புறம்பாகக் கைப்பற்றப்பட்ட வன மக்கள் நிலங்களை, இனி சட்டப்படி சில பணக்கட்டுகளை வீசிக் கையகப்படுத்தவும், பின்னர் அவற்றை உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலுக்கு ஒப்படைப்பதுமே இந்தச் சட்ட முன்வரைவின் நோக்கம். இது சட்டமாகுமானால், பழங்குடி மக்களும் தலித் மக்களும் மேலும் மேலும் அந்நியப்படுததப்படுவதற்கும், அதைப் பயன்படுத்திக்கொண்டு மாவோயிஸட்டுகள் தங்களது வன்முறை ஆதிக்க அரசியலைத் தொடர்வதற்குமே
ஏதுவாகும்.

மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் இறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்றாலும், தேர்தல் ஆதாயக் கண்ணோட்டத்துடன் இதை வைத்து பிணவாத அரசியல் செய்கிற முயற்சிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடக்கூடாது.

வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாவோயிஸ்ட் பிரச்சனையைப் பார்ப்பது தவறு. மத்திய திட்டக்குழுவே கூட இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது என்று கூறியிருக்கிறது. அப்படிப் பார்ப்பதால்தான் ராணுவத்தை அனுப்புவது, பாதுகாப்புப் படையை அனுப்புவது என்ற நடவடிக்கைகளில் அரசு இறங்குகிறது. நேருக்கு நேராக சீருடையோடு மோதுகிற எதிரிப்படையோடு சண்டைபோடுவதற்குப் பயிற்சி பெற்ற ராணுவத்தால் கிராம சமூகங்களோடு கலந்து செயல்படுகிற மாவோயிஸ்ட்டுகளைக் கையாள முடியாது. மக்கள் துன்புறுத்தப்படுவதற்குத்தான் ராணுவக் கெடுபிடிகள் இட்டுச் செல்லும். இதை ஒரு அடிப்படையான சமூகப் பொருளாதாரப் பிரச்சனையாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வழிமுறைகளை வகுக்க வேண்டும். சும்மா சில நூறு கோடி ரூபாய்களை அந்த வட்டாரங்களில் வீசினால் போதும் என்று அரசு கருதுவதும் தவறு. தற்போதைய ஊழல் கட்டமைப்பில் அந்தப் பணத்தில் கடைசித் துளிகள் மட்டுமே மக்களைச் சென்றடையும்.


வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, கிராம மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிற, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிற நடவடிக்கைகள், ஜனநாயக அரசியல் செயல்பாடுகள் என மிகப்பெரிய, மிக நீண்டகாலம் ஆகக்கூடிய பன்முக அணுகுமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டும். இனியும் காலம் தாழ்ததாமல் தொடங்கியாக வேண்டிய இந்த அணுகுமுறைகளை, இதில் அக்கறையுள்ள அனைத்து சக்கிகளோடும் கூடி விவாதித்து வகுக்கிற அரசியல் உறுதிப்பாடு ஆட்சியாளர்களுக்குத் தேவை.

(சத்திஸ்கர் தாக்குதலைத் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில், கிடைத்த நேரத்திற்குள், நான் முன்வைத்த கருத்துகளின் சாறு)

Sunday 17 February 2013

அதுதான் டிவி-யில காட்டுறாங்களே... பேப்பர்ல போடுறாங்களே!




வீட்டிற்கும் பணித்தலத்திற்கும் இடையேயான ரயில் பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் இது. பேச்சு ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பற்றியதாகத் தாவியது. படத்திற்குத் தடைவிதித்த அரசின் செயலை ஒரு பயணி விமர்சித்தார். படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகளை இன்னொருவர் குறைகூறினார்.

“எங்களையெல்லாம் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களைப் போலக் காட்டுறது சரியில்லைன்னு முஸ்லிம்ஸ் சொல்றாங்க... ஆனா அவங்க அப்படித்தானே இருக்காங்க,” என்றார் அந்த இன்னொருவர்.
“எப்படிச் சொல்றீங்க,” என்று கேட்டேன் நான்.

“அதான் எல்லா டிவியிலயும் காட்டுறாங்களே சார், எல்லாப் பேப்பர்லயும் போடுறாங்களே...” என்றார் அவர். அவர் கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையில் ஏதோ ஒரு நாட்டின் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பின் சார்பில் யாரோ ஒரு நபருக்குக் கொடுமையன தண்டனை தரப்பட்ட செய்தி படத்தோடு இடம் பெற்றிருந்தது.

அரசுப் பணிகளில், கல்வி வாய்ப்புகளில், தொழில் துறையில் முஸ்லிம் மக்களின் அடையாளம் சுருங்கிப் போயிருப்பது பற்றி சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் இந்த மக்களுக்கு தாராளமான அடையாளம் தரப்பட்டிருக்கிறது - பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற அடையாளம்! பயங்கரவாதி என்ற சொல்லைச் சொன்னால் உடனே, மீசையில்லாத, தாடி வைத்த, நீண்ட அங்கி அணிந்த, கையில் ஏ.கே.-47 துப்பாக்கியோடு இருக்கிற உருவம் பலருக்கும் நினைவு வருகிறது என்றால், அப்படியொரு உருவத்தை மனங்களில் உருவேற்றியதில் நிச்சயமாக ஊடகங்களுக்குப் பங்கிருக்கிறது. அதிலும் வர்த்தக அடிப்படையிலான பெரு நிறுவன ஊடகங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

அதே போல் முஸ்லிம்கள் எல்லோருமே கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள், நவீனமாகாதவர்கள், மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாதவர்கள், கலை-இலக்கிய வெளிப்பாடுகளை ஏற்காதவர்கள் என்பன போன்ற மதிப்பீடுகள் பொதுவெளியில் உருவாகியிருக்கியிருப்பதிலும் இந்தப் பெரு ஊடகங்களின் பங்கு பெரியதுதான்.

ஆகவேதான், விஸ்வரூபம் விவகாரத்தில் கூட நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் கமல்ஹாசனின் இழப்பு, உணர்ச்சிகரமான பேட்டி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், முஸ்லிம் அமைப்புகளுடைய விசனத்துக்கு அளிக்கப்படவில்லை. படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை ஏற்காத, ஆனால் அந்தப் படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதைச் சொல்லத் தயாராக இருந்த முஸ்லிம் சிந்தனையாளர்களது கருத்துகளை வாங்கி வெளியிடவும் ஊடகங்கள் முன்வரவில்லை.

இதற்கு நீண்டதொரு பின்னணி இருக்கிறது என்றாலும் உடனடியாக நினைவுக்கு வருவது 1992 டிசம்பர் 6 அன்று அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு அக்கிரமம். அதை ஒரு பிரபல தமிழ் ‘நடுநிலை’ நாளேடு “பாபர் மசூதி தகர்ப்பு - ராம பக்தர்கள் ஆவேசம்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது. நியாயக் கோபத்திற்கான “ஆவேசம்” என்ற சொல்லாடலை பெரிய பத்திரிகைகள் அவ்வளவு எளிதாகப் பயன்படுத்துவதில்லை. இந்தச் செய்தியில் அந்தச் சொல்லைப் புகுத்தியதன் மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நியாயம்தான் என்ற கருத்தை மட்டுமல்ல, இத்தனை காலமாக முஸ்லிம்கள் அந்த இடத்தை அநியாயமாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள் என்ற எண்ணத்தையும் அந்த ஏடு நுட்பமாக ஊன்றியது.

கோவையில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனைகள் பற்றிய செய்தியை வெளியிட்ட ஒரு பிரபல புலனாய்வு வார ஏடு, “கோட்டைமேடு பகுதி முழுக்க சோதனைகள் நடத்தப்பட்டுவிட்டதாக போலிஸ் சொல்கிறது. ஆனால் ..... .... ..... ..... ..... ஆகிய வட்டங்களிலும் .... ..... ..... ..... .... ஆகிய தெருக்களிலும் போலீ;!காரர்கள் நுழையவே இல்லை,” என்று விவரித்து எழுதியது. அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாகக் காவல்துறையினால் தூக்கிச் செல்லப்பட்ட நடவடிக்கை அது. ஒரு ஊடகமாக அந்த நடவடிக்கையை விமர்சிக்காமல், எந்தெந்தத் தெருக்களுக்குள் காவலர்கள் நுழைய வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொடுத்தது அந்த புலனாய்வு இதழ்.

பொதுவாகவே மதவெறி மோதல்களில் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் முஸ்லிம் மக்கள்தான். மிகப்பரபரப்பு கிளப்பக்கூடிய சில நிகழ்வுகளை மட்டும் அந்த நேரத்து முக்கியச் செய்தியாக்கிவிட்டு, பின்னர் அந்தப் பரபரப்பு வடிய வடிய அதை அப்படியே விட்டுவிடுவார்கள். எங்கிருந்தோ வருகிற பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் பலியாவது, சிதறிக்கிடக்கும் உடல்கள். நொறுங்கிப்போன வாகனங்கள், உற்றவரை இழந்து தவிக்கும் முகங்கள் என்ற உண்மைகளையெல்லாம் பரவலாக வெளியிடுகிறவர்கள், இன்னொரு உண்மையாகிய, எளிய முஸ்லிம் மக்களின் பரிதவிப்பு பற்றி எதுவும் பதிவு செய்வதில்லை. பயங்கரவாதிகளுக்கு மதமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைத்துத் தாக்குவதில்லை. அதனால்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பல இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த உண்மையை மட்டுமல்ல, முஸ்லிம் மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் பற்றிய உண்மைகளையும் ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதிய ‘குற்றமும் தண்டனையும்’ குறுநாவல் நினைவுக்கு வருகிறது. அதில் காவல்துறையினரால், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்காகக் கைதுசெய்யப்படும் ஒரு முஸ்லிம் இளைஞன் பற்றிய சித்தரிப்பு மறக்க முடியாதது. சிவந்த உடல், நல்ல உயரம், நீண்ட ஜிப்பா. இளம் தாடி என பார்ப்பதற்கு நல்ல வசதிக்காரன் போன்ற தோற்றத்துடன் இருக்கிற அந்த இளைஞன் உண்மையில் கடைத்தெரு நடைமேடையில் ஜட்டி, பனியன் விற்கிற சாலையோர வியாபாரி. “இந்தப் பணக்காரத் தோற்றம்தான் இவர்களுடைய பலவீனமே” என்று கூறுவார் எழுத்தாளர்.

இந்தியா முழுவதுமே முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் வசதிகள் இல்லாதவர்களாக, சலுகைகளும் கிடைக்காதவர்களாக, ஒதுக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பல ஆய்வுகள் இதை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஊடகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பல ஊடகங்கள் ஏன் இதை வெளியிடவில்லை என்பதன் பின்னணியில், அதைச் செய்தியாக்குவதில் சுவாரசியமிருக்காது என்ற தொழில் சார்ந்த ஒதுக்கல் மட்டுமல்ல, பல ஊடக நிறுவனங்களின் தலைமைப் பீடங்களில் இருப்பவர்களது இந்துத்துவப் பார்வையும்தான். ஊடக நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்ட இந்துத்துவ ஆட்கள் புகுந்திருப்பது பற்றி முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இன்றைய ‘தி ஹிண்டு’ நாளேட்டின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

அந்தப் பார்வையுடன்தான் செய்திகள் தரப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு:  மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவுன் நகரில், சில முஸ்லிம் இளைஞர்கள் பின் லேடனை ஆதரித்து பேரணி நடத்தியதாகவும், அது வன்முறையாக மாறியதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பல பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்தது. உண்மையில் என்ன நடந்தது என்றால், அந்த இளைஞர்கள் பின் லேடனுக்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாகக் கூறிய,  காவல்துறையினர் அதை விநியோகிக்கத் தடை விதித்தனர்.  உருது மொழியில் இருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில், “இந்தியராக இருப்போம், இந்தியப் பொருள்களையே வாங்குவோம்; ஆப்கன் மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவின் பொருள்களைப் புறக்கணிப்போம்” என்றுதான் இருந்தது. மஹாராஷ்டிரா மாநில காவல்துறையில் உருது தெரிந்தவர்கள் இல்லையா அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைத்துச் செய்தி தரப்பட்டதா? இதை விசாரிக்காமல் காவல்துறையின் செய்தியை அப்படியே வெளியிட்ட ஊடகங்களின் தொழில்நெறியை என்னவென்று சொல்வது?

ஊடகங்களின் இந்த நிலைமைக்கான காரணங்கள் இரண்டு: ஒன்று, அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில், தனது ஊடக வல்லரசுகளின் துணையோடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிற முஸ்லிம்கள் பற்றிய கருத்தாக்கம்; அதையொட்டி உள்நாட்டில் ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் ஏற்படுத்த விரும்புகிற முஸ்லிம் எதிர்ப்பு வன்மம். இந்த வன்மத்தின் பிடியில் ஊடகங்களும் சிக்கியுள்ளன. இரண்டு, பெரு நிறுவனங்களாக உள்ள ஊடகங்களின் செய்திகளை இறுதிப்படுத்தும் மையமான இடங்களில் முஸ்லிம்கள் இல்லை, அல்லது மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். எம்.ஜே. அக்பர் போன்ற சிலர்தான் விதிவிலக்கு.

சிறப்பாக எழுதக்கூடிய முஸ்லிம்கள், தாங்கள் பணபுரியும் நிறுவனத்தின் நிலைபாட்டிற்கு ஏற்பவே செய்திகளையும் கட்டுரைகளையும் வடிவமைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தார்த் வரதராஜன் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒரு கட்டுரையில், “நான் பணியாற்றிய பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த முஸ்லிம் நண்பர்கள் என்னை ஏதோ சிறப்புரிமை பெற்ற குடிமக்களில் ஒருவனாகப் பார்த்தார்கள்,” என்கிறார். அவர் குறிப்பிடுவது முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்பட்ட ‘அஞ்ஜாம்’ என்ற  பத்திரிகை!

“1947 நாட்டுப்பிரிவினையின்போது இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்த முஸ்லிம்கள், பின்னர் இங்கே இந்து மதவாதிகளால் சிறுமைப்படுத்தப்படுவதாக உணர்ந்தார்கள். அப்போது, பிரச்சனையை எபபடி அணுகுவது என்று வழிகாட்டக் கூடியவர்களாக முஸ்லிம் பத்திரிகையாளர்கள் இல்லை,” என்றும் நய்யார் குறிப்பிடுகிறார்.

யோசித்துப் பார்த்தால், முஸ்லிம் மக்கள் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம் பரவலாக இருப்பதில் முஸ்லிம்களால் நடத்தப்படுகிற ஊடகங்களுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது எனலாம். அந்தப் பத்திரிகைகளிலும், முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் குறித்த முழுமையான விவரங்கள் கண்ணில் படுவதில்லை. மாறாக எங்காவது நடந்திருக்கக்கூடிய சில பழமைவாதச் செயல்களை நியாயப்படுத்துகிற வாதங்களைத்தான் அவை முன்வைக்கின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா மதவாத நீதிமன்றத் தீர்ப்பின்படி பொது இடத்தில் கொல்லப்பட்டதை தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விமர்சித்தார். உடனே அவர் மீது ஒரு அமைப்பு பாய்ந்தது, மிரட்டல் விடுத்தது. இதை எந்த முஸ்லிம் ஊடகமும் கண்டிக்க முன்வரவில்லையே?

காஷ்மீரில் முதல் முறையாகப் பெண்களே கொண்ட ஒரு இசைக்குழு அமைக்கப்பட்டது. உடனே, அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி,அந்த மூன்று இளம் பெண்களுக்கும் ‘ஃபட்வா’ அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான இஸ்லாமிய அமைப்பு ஒன்று அந்த மூன்று பெண்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவார்கள் என்று அச்சுறுத்தி அறிக்கை விடுத்தது. மாநில முதலமைச்சரே இசைக்குழுவை ஆதரித்து, முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தபோதிலும் கூட, அந்தப் பெண்கள் குழுவைக் கலைத்துவிட்டார்கள். அந்தப் பெண் குழந்தைகளின் பக்கம் எத்தனை முஸ்லிம் பத்திரிகைகள் நின்றன?

இது பற்றி பிப்ரவரி 8 அன்று சென்னையில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் ஏற்படு செய்திருந்த ‘விஸ்வரூபம் திரைப்படத்தை முன்வைத்து, ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்தரிப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற நான் கேள்வி எழுப்பினேன். அதில் உரையாற்றிய கவிக்கோ அப்துல் ரகுமான், “இஸ்லாத்தில் அப்படிப்பட்ட தடை எதுவும் கிடையாது, யாரோ சிலர் தவறான புரிதல்களுடன் செய்கிற செயலுக்கு இஸ்லாம் சமயம் பொறுப்பேற்ற இயலாது,” என்றார். இது நல்ல விளக்கம்தான் என்றாலும், ஜனநாய உரிமைகளுக்காக வாதாடும் முஸ்லிம் பத்திரிகைகள் அந்தப் பெண்களுக்காக வெளிப்படையாக உரத்த குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இப்படிப்பட்ட மவுனங்கள் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்படுவதும் மனதில் கொள்ளப்பட வேண்டும். இன்றைய பொருளாதார உலகமய - தனியார்மயஆதிக்கச் சூழலில் கேள்வி கேட்காத, தட்டிக்கேட்காத தலைமுறைகள் தேவை. அப்படிப்பட்ட தலைமுறைகளை வார்க்கும் பணியை இன்றைய சுரண்டல் அமைப்பின் அங்கங்களாகிய பெரு ஊடகங்களும் செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், சுரண்டல் உலகத்தின் தலைமைத் தலமாகிய ஏகாதிபத்தியம் உருவாக்க முயல்கிற பயங்கரவாதம் என்றால் மீசையற்ற தாடி முகங்கள் என்ற தோற்றத்திற்கு உள்ளூர் வண்ணப்பூச்சு செய்யும் கைங்கர்யத்தை  உள்நாட்டுப் பெரு ஊடகங்கள் பத்திசிரத்தையோடு நிறைவேற்றுகின்றன.

இதை மாற்ற முடியுமா? முடியும். உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, உள் நாட்டு ஏகபோக எதிர்ப்பு, ஒற்றை மதவெறி எதிர்ப்பு, ஆதிக்க சாதிய அரசியல் எதிர்ப்பு, ஆணாதிக்க அகம்பாவ எதிர்ப்பு போன்ற பொதுப் போராட்டங்களில் சிறுபான்மை மக்களையும் அணிதிரட்டிப் பங்கேற்கச் செய்கிற பொறுப்பை இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து நிறைவேற்றினால் முடியும். பெரு ஊடகங்களின் பாகுபாட்டுப் போக்குகளை பொதுவெளியில் விவாதிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கிவிட்டோம் என்ற செய்தி அநத நிறுவனங்களின் செவிகளைச் சென்றடையச் செய்தால் முடியும்.

('தீக்கதிர்’ 17-2-2013 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)

Wednesday 13 February 2013

காதலுக்குச் சொந்தமானது இந்த உலகம்


அந்நாள் வாலன்டைன்களும்
இந்நாள் கிளாடியஸ்களும்

காதலுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அறிவியல் ஆராய்ச்சிகள் இரண்டு உண்மைகளை ஐயத்திற்கிடமின்றி நிலைநாட்டுகின்றன.

ஒன்று: நாம் வாழும் இந்த உலகம் உள்ளிட்ட நம் பேரண்டம் முழுக்க முழுக்கப் பொருளால் ஆனது என்ற உண்மை. பருப்பொருள் அல்லாத ஒளி உள்பட மாபெரும் மலைகள் வரையில், ஒரு செல் உயிரினம் தொடங்கி மனிதர்கள் வரையில் எல்லாம் அணு எனும் பொருளால் ஆனவையே. அந்த அணுக்கள் இன்னும் நுட்பமான அணுத்துகள் எனும் பொருளால் ஆனவை. ஹிக்ஸ் போஸாம் அணுத்துகள் ஆராய்ச்சியின் வெற்றி இந்த உண்மையை மேலும் வலுவாக எடுத்துரைக்கிறது.

இரண்டு: எந்த ஒரு பொருளின் வடிவமும் தன்மையும் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்றால் அதன் அணுக்களின் சேர்க்கையால். அணுக்களின் சேர்க்கை எப்படி வரையறுக்கப்படுகிறது என்றால் அணுத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதால். அவற்றின் அடர்த்தி, சேர்மானம் இவற்றின் அடிப்படையிலேயே உயிருடன் இயங்கும் பொருள், இயங்காப் பொருள் அனைத்தும் கட்டப்படுகின்றன...

அணுத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்து இணைகின்றன, அதனால் உருவாகும் அணுக்கள் ஒன்றையொன்று ஈர்த்துச் சேர்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அவை காதலிக்கின்றன! ஆம் - மண், அந்த மண் சார்ந்து நீர், மண்ணும் நீரும் சார்ந்து தாவரங்கள்,  அந்தத் தாவரங்கள் சார்ந்து விலங்குகள், மண்ணும் நீரும் தாவரமும் விலங்கும் சார்ந்து நாம்! இப்படி இந்த பூமியும், இந்த பூமி சுற்றி வருகிற சூரியனும், பல ஆயிரம் கோடி சூரியன்கள் வலம் வருகிற பால் வெளி மண்டலங்களும், எத்தனையோ பால் வெளி மண்டலங்கள் சூழ்ந்த பேரண்டமும் எப்படி உருவாக முடிந்தது? எதனால் இயங்க முடிகிறது? காதலால்!

எந்த ஒரு உண்மையும் வெளியே தெரிய வராத வரையில் ரகசியமாகவே இருக்கிறது. அணு ரகசியங்களைக் கண்டறிந்ததன் மூலம் காதலையும் காதலுக்காகவும் உரத்து முழங்குகிறது அறிவியல். இந்தக் காதல் உறவை சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் அடிப்படையில் அறிவியலுக்கு எதிரிகள், இயற்கைக்கு எதிரிகள், நாகரிக சமுதாயத்திற்கு எதிரிகள், நாட்டின் அரசமைப்பு சாசனத்திற்கே எதிரிகள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வரப்பும் வேலியும்
இந்தியாவின் பெருமைகள் என்று எதைஎதையோ முன்னிறுத்துகிறார்கள். ஆனால், இரண்டு அடிப்படையான சிறுமைகளின் மீது கட்டப்பட்டவையே அந்தப் பெருமைகள். சாதியமும் பெண்ணடிமையும்தான் அந்த இரு சிறுமைகள். சொல்லப்போனால் உழைப்புச் சுரண்டலோடு இணைந்த இந்த இரண்டையும் கெட்டிப்படுத்திப் பாதுகாப்பதுதான் மதத்தின் வேலை.
அவரவர் சாதி வேலிகளைத் தாண்டிவிடக்கூடாது,  பெண்கள் அவர்களுக்கான கூண்டுகளை விட்டு வெளியேறிவிடக்கூடாது என்று எத்தனையோ விதிகளும் சம்பிரதாயங்களும் கட்டுப்பாடுகளும் காலங்காலமாகத் தொடர்கின்றன. குறிப்பாக, மேல் சாதிகள் என்று சொல்லப்படுவோர், அவர்களைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களைக் காதலித்தால் அது சொந்த சாதிக்குச் செய்கிற துரோகம் என்று கரித்துக்கொட்டப்படுகிறது. இன்னும் குறிப்பாக, மேல் சாதிகள் என்று சொல்லிக்கொள்வோரைச் சேர்ந்த பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களைக் காதலித்தால், அது சாதித் தூய்மையைக் கெடுக்கிற குற்றமாக வரிக்கப்படுகிறது.

இக்குற்றத்தை விசாரிக்க சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகள், காதல் இணைகளைப் பிரிக்கிற கொடூரத் தீர்ப்புகள், ஏற்க மறுத்தால் பழிவாங்கும் வன்முறைகள், அந்த வன்முறைகளை நியாயப்படுத்த அற்பத்தனமான குற்றச்சாட்டுகள்... இருபத்தோராம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயப்பாட்டை எழுப்புகிற வன்மங்கள் தொடர்கதையாகின்றன.

எல்லா ஆதிக்க சாதிகளும் இந்த ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றன என்றாலும், இன்று சில குறிப்பிட்ட சாதிகளைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் மூலமாக இந்த வன்மங்கள் வெளிப்படுகின்றன. அதிலும், தவறான அணுகுமுறைகளால் சொந்த அரசியல் செல்வாக்கு அரித்துப்போய்விட்டது என்று கண்கூடாகத் தெரிந்துவிட்ட நிலையில், மறுபடி அந்தச் செல்வாக்கைக் கட்டுவதற்கு அடிப்படைப் பிரச்சனைகளுக்காக மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதற்கு மாறாக, மக்கள் ஒன்றுபடுவதையே அடிப்படைப் பிரச்சனையாக்கி, அதை வளரவிடாமல் வேரில் வெந்நீர் ஊற்றுகிற நவீன மனு பக்தர்கள் வலம் வருகிறார்கள். அவர்களோடு, அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற பெயரில் மேலும் சில நவீன மனு பக்தர்கள் உலா வருகிறார்கள்.

மாற்றப்படும் அணித்திரட்சி
ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு அணித்திரட்சி திராவிட இயக்கத்தாலும் பெரியார் போராட்டங்களாலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு வரலாற்றுத் தேவையாக உருவானது. முற்போக்கான பார்வை கொண்ட பிராமணர்களும் கூட அந்த இயக்கத்திற்கு ஆதரவாக நின்றார்கள். இன்று அரசியல் களம், அதிகாரத் தளம், கல்விக் கூடம், வழிபாட்டு ஆலயம் என எங்கும் அனைத்துச் சாதியினரும் தங்களுக்கான இடத்தை ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது என்றால் இது அந்த வரலாற்றுப் போராட்டத்தின் பங்களிப்புதான்.

ஆனால் இன்று, தலித் மக்களுக்கு எதிரான அணித்திரட்சிக்கான முயற்சி திட்டமிட்டு நடைபெறுகிறது. இது வரலாற்றுத் தேவை அல்ல, வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுகிற அப்பட்டமான ‘அடையாள அரசியல்.’ சிலரது குறுகிய ஆதாய நோக்கத்திற்காக, காதலிக்கிறவனின் கையை வெட்டு, காலை வெட்டு என்று காதலெனும் ‘காட்டை வெட்டி’ அழிக்கச் சொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜீன்ஸ், டி சர்ட், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு பிற சாதிப் பெண்களை மயக்குகிறார்கள் என்று கூறி பகை வளர்க்கிறார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் வெறும் ஜீன்ஸ்சுக்கும் டி சர்ட்டுக்கும், கூலிங் கிளாஸ்சுக்கும் மயங்கிப்போகிறவர்கள் என தங்களது சொந்தச் சாதிப் பெண்களையே இழிவு படுத்துகிறார்கள். சாதியமும் பெண்ணிழிவும் பிரிக்க முடியாதவை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

மாவட்டம் மாவட்டமாய் நடத்தப்படுகிற “அனைத்து சமுதாய” ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்கிற பல்வேறு சாதிகளின் தலைவர்கள், கூடவே அமர்ந்திருக்கிற மற்ற தலைவர்களது சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஜீன்ஸ் - டீ சர்ட் - கூலிங்கிளாஸ் அணிவதை ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை! இவர்களால் கிளப்பிவிடப்படும் காதல் விரோதச் சிந்தனைகளின் பிரதிபலிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் காதலர்கள் கொடூரமான முறையில் பிரிக்கப்படுவதும், பிரிக்க முடியாவிட்டால் கொல்லப்படுவதும் நிகழ்கின்றன.

இவர்கள் காதல் எதிர்ப்பின் உள்ளூர் வகையறா என்றால், நாடு முழுவதுமே இவர்களது குளோனிங் பதிப்புகள் காதலுக்கும் கலப்புத் திருமணத்திற்கும் எதிரான கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்புகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் புரிகிறது - காதல் மட்டுமே சாதி வரப்புகளை உடைக்கும், மத வேலிகளை தகர்க்கும் என்ற உண்மை.

அந்நாள் வாலன்டைன்
இந்தக் காதல் எதிர்ப்புச் சூழலில்தான் ‘வாலன்டைன் டே’ என கொண்டாடப்படுகிற பிப்ரவரி 14 முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் இந்த நாளுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. புனித வாலன்டைன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அன்றைய ரோம் நாட்டில் இயங்கிய ஒரு கிறிஸ்துவ தலைமைக் குரு (பிஷப்). அப்போது ரோமானியப் பேரரசின் கீழ் கிறிஸ்துவ சமயம் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியிருந்தது. பேரரசர்களுக்கே உரிய லட்சணப்படி நாடுபிடிக்கும் பேராசையோடு இருந்த பேரரசன் இரண்டாம் கிளாடியஸ், தனது படை வீரர்கள் யாரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்திருந்தான். திருமணம் செய்துகொண்டால் அவர்கள் குடும்பத்தின் நினைவாக இருப்பார்கள், போர்க்களத்தில் முனைப்புடன் செயல்பட மாட்டார்கள் என்று அவன் நம்பியதால் இந்தத் தடை. அப்போது வாலன்டைன், அந்த வீரர்களுக்கு ரகசியமாகத் திருமணம் செய்துவைத்தார். இதைக் கண்டுபிடித்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தான்.

சிறையில் அடைபட்டிருந்த நாட்களில், சிறை அதிகாரியின் மகளுக்கு ஒரு நோயின் தாக்கத்தில் பார்வை மங்கிப்போக, வாலன்டைன் தனக்குத் தெரிந்த மருத்துவ முறைகளில் சிகிச்சையளித்து மீண்டும் பார்வை கிடைக்கச் செய்தார் (அவர் இறையருளால் அந்த அதிசயத்தை நிகழ்த்தியதாகப் பின்னர் வந்த மதப்பிரச்சாரகர்கள் எழுதினார்கள் என்பது வேறு கதை). அரண்மனை ஆணைப்படி வாலன்டைன் கொலை மேடைக்கு இட்டுச்செல்லப்பட வேண்டிய நாள் வந்தது. அதற்கு முதல் நாள் அவர், அந்த சிறையதிகாரியின் மகளுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி, அதன் முடிவில் “உன் அன்பான வாலன்டைன்” என்று குறிப்பிட்டிருந்தாராம். அவரைப் பற்றிய ஆவணங்கள் பலவும் அதிகாரிகளால் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பிப்ரவரி 14 என்பது அவரை நினைவுகூர்ந்திடும் நாளாக அடையாளம் பெற்றது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அது காதல் ஆதரவுக்கான அடையாள தினமாக உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

ரகசியத் திருமணம் செய்துவைத்த வாலன்டைன், ஏசுவின் அன்பைக் குறிப்பிடும் வகையில், ஆட்டுத் தோலில் சிறிய இதயம் போல வெட்டி, அதையும், மலர்க்கொத்தையும் மணமக்களுக்குப் பரிசளித்தாராம். அதுவே பின்னர் காதல் சின்னமாக இதய வடிவமும், காதலர் தினப் பரிசாக ரோஜா மலரும் வழங்குவது என்ற நடைமுறையாகப் பரிணமித்தது.

இந்நாள் கிளாடியஸ்கள்
இன்று வாலன்டைன் தினம் என்பது கிறி°துவர்களுக்கான தினம் அல்ல. சாதி மதம் கடந்த காதலர்களுக்கான தினம். தினம் தினம் அழகான, ஆரோக்கியமான காதல் பயிர் செழித்தோங்கிய காலம் வரவேண்டும் என்பதே ஆண்டில் ஒரு நாளை காதலர் தினமாகக் கொண்டாடுவதன் அடிப்படை. ஆனால், சாதி வரப்புகள் உடைபடக்கூடாது, மத வேலிகள் தகர்க்கப்படக் கூடாது என்று தடையாணை போடுகிற இன்றைய இரண்டாம் கிளாடியஸ்களாக சாதிய ஆதிக்கவாதிகளும் மதவெறியர்களும் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள். இது அந்நிய விழா, மதம் மாற்றுவதற்கான வலைவிரிப்பு, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப்பொருள் வியாபாரத்திற்கான தந்திர ஏற்பாடு என்றெல்லாம், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

அவர்கள் கொச்சைப்படுத்துவது உண்மையில் இயற்கைக் காதலைத்தான். ஆகவேதான், “வாலன்டைன் தினத்தன்று காதலர்கள் பொது இடத்தில் நடமாடினால் தாக்குவோம்” என்று ஒரு கும்பல் அறிவிக்கிறது. இன்னொரு கும்பல், ஒரு கையில் தாலிக்கயிறு, இன்னொரு கையில் ராக்கிக்கயிறு தூக்கிக்கொண்டு அலைகிறது. பொது இடத்திற்கு சேர்ந்து வருகிறவர்கள் ஒன்று கணவன்-மனைவியாக இருக்க வேண்டும் அல்லது அண்ணன்-தங்கையாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஆக இந்தக் கலாச்சார தாதாக்கள் காதலுக்கு மட்டுமல்ல, பாலின வேறுபாடற்ற நட்புக்கும் தோழமைக்கும் கூட எதிரிகள்தான்.

சாதி-மத அடையாள அரசியலின் நோக்கம் சமுதாய மாற்றமே கூடாது என்பதுதான். சாதி வரப்புகளைக் கெட்டிப்படுத்துவது, மத வேலிகளை வலுப்படுத்துவது இரண்டுமே உலகமய வேட்டைகளுக்கும் உள்நாட்டுத் தாராளமய சுரண்டல்களுக்கும் செய்கிற தொண்டூழியம்தான். ஆம் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கியமான கூறுதான் சாதி வெறி ஒழிப்பு - மத வெறி எதிர்ப்பு - காதல் ஆதரவு முழக்கங்களும்.

தில்லியில் பாலியல் வன்முறைக்கு பலியான அந்த மாணவி, பெண்ணின் சுய தேர்வு உரிமையை மறுத்துக் கட்டாயப்படுத்தும் ஆணாதிக்க அமில வீச்சுக்கு பலியான காரைக்கால் விநோதினி, தருமபுரியில் வன்கொடுமைக்குக் காரணமாகக் கூறப்பட்ட திவ்யா - இளவரசன், நாடு முழுவதும் ஊடக வெளிச்சம் பெறாமலே பலியாகிக்கொண்டிருக்கிற காதலர்கள்... இவர்கள் அனைவரின் கதைகளும் உரக்கச் சொல்வது: காதல் வாழ வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற செய்தியைத்தான்.

இதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு என்ன அக்கறை என்று கேட்கிறார்கள் சிலர். கம்யூனிஸ்ட்டுகள் காதலிக்கிறார்களே - இயற்கையை, உலகத்தை, மக்களை!

Thursday 7 February 2013

பொழுதுபோக்கின் விஸ்வரூபம்?


டம் திரையரங்கிற்கு வருகிற முதல்நாளே பார்த்துவிடுகிற பழக்கம் விட்டுப்போய் வெகுநாளாகிவிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏற்பட்ட கட்டாயம் போலத்தான் எனக்கும்.

ஒரு கலைப்படைப்பு வெளிவந்து அதை மக்கள் துய்க்கிற உரிமையை எந்த ஒரு அமைப்பும் செய்யக்கூடாது, எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடாது என்பதே என் கருத்து. அந்த வகையில் கமல்ஹாசனின் படம் நேரடியாக வர முடியாமல் தடுக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. ‘ஃபயர்’ படத்தை யாரும் பார்க்கவிடாமல் தடுத்த. ‘வாட்டர்’ கதைக்குப் படப்பிடிப்பே நடத்தவிடாமல் விரட்டியடித்த சங் பரிவாரக் கும்பல்களைக் கண்டித்த அதே தொனியில்தான் இதையும் ஏற்க மறுத்தேன்.

உயர்நீதிமன்றம் அரசின் தடையை விலக்கி ஆணையிட படம் முதலில் திரையிடப்பட்டபோது பார்க்க முடியாமல் போனது. அந்த முதல் காட்சியோடு உயர்நீதிமன்றத்தின் மறுதடை வந்துவிட்டது. ஒரு மதவாத மோதல் அளவுக்கு விவாதங்கள் போய்க்கொண்டிருந்ததால் வெறொரு ஏற்பாட்டில் படம் பார்த்துவிட்டேன். ஆயினும், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்த நிலையில், சில காட்சிகளைத் திருத்த கமல் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துகொண்டிருந்த நிலையில், அந்த இறுதிப்படுத்தப்பட்ட படத்தைப் பார்க்காமல் விமர்சனம் எழுதுவது முறையல்ல என்று காத்திருந்தேன். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி ஒரு உடன்பாட்டிற்கு வந்து, இணக்கமான பேச்சுக்கு வழிசெய்ததற்காகத் தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி கூறி, கோடிக்கணக்கில் செலவிட்டிருந்தாலும் கிடைத்திருகக முடியாத பரபரப்பு விளம்பரத்தோடு இரண்டாம் முறையாகப் படம் திரையரங்குகளுக்கு வந்த இன்றைய (பிப்,7) நாளிலேயே முக்கியத்துவம் கருதி இரண்டாவது தடவையாகப் படத்தைப் பார்த்தேன்.

கதை என்ன என்பதெல்லாம் பத்திரிகைகளின் விமர்சனங்கள், முகநூல் பதிவுகள் மூலம் பலருக்கும் தெரிந்துவிட்டது. அதை இங்கேயும் சொல்ல வேண்டியதில்லை. படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதே நேரத்தில் படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தேன். எப்போதுமே வர்த்தக சினிமா வட்டத்திற்குள் நின்றுகொண்டே கொஞ்சம் மாறுபட்ட அனுபவங்களையும் தர முயன்று வந்திருக்கிற கமல் மீது உள்ள ரசனை கலந்த மரியாதையோடு அந்த சமூகப் பொறுப்பு அவருடைய இந்தப் படைப்பில் வெளிப்பட்டிருக்கிறதா என்று கவனமுடன் பார்த்தேன்.

ஒரு சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து ரசிப்பதற்கும் வியப்பதற்கும் படத்தில் நிறையவே தூவல் வேலைகள் இருக்கின்றன. காட்சிகளுக்கிடையான தர்க்கப்பூர்வமான இணைப்பு, எதுவும் தொங்கலாகிவிடாத கச்சிதமான கோர்ப்பு, அரங்க வேலைப்பாடுகள், பொருத்தமான முகங்கள், ஒப்பனை தெரியாத ஒப்பனை, நேர்த்தியான ஒளிப்பதிவு, மிரள வைக்கும் அந்த முதல் சண்டைக் காட்சி, மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவை என்று சொல்வதற்கு நிறையவே இருக்கின்றன.
நடன ஆசிரியராக, ஜிஹாதி குழுவில் ஒருவனாக, இந்திய உளவுத்துறை அதிகாரியாக கமலின் மாறுபட்ட நடிப்பும் விருந்துதான்.

இவை மட்டும்தான் இந்தப் படமா? பரபரப்புகள் எழுந்திராவிட்டால் இது ஒரு சாதாரணமான பொழுதுபோக்கு மசாலாப்படம், அவ்வளவுதான், அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை என்று முகநூல் நண்பர்கள் பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். அவ்வளவுதானா? உலகம் முழுவதும் இன்று பயங்கரவாதம் என்றால் மீசையில்லாத தாடி முகங்களும், அவர்களது கைகளில் உள்ள துப்பாக்கிகளும், அவர்களது இடுப்பில் கட்டிய வெடிகுண்டுகளும் மட்டுமே என்ற எண்ணம் பளிச்சென ஏற்படுகிறதே - அந்த எண்ணத்தை இறுக்கமாகவும் பரவலாகவும் ஏற்படுத்தியதில் ஹாலிவுட் தயாரிப்புகளாக வந்த ஏராளமான, சாதாரணமான, பொழுதுபோக்கு மசாலாப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசியல், ஊடகம் என பல வகைகளிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிற இஸ்லாமிய மக்கள் பற்றிய சித்தரிப்பை அந்த ஹாலிவுட் மசாலாப் படங்கள் கெட்டிப்படுத்தியிருக்கின்றன.

அதே கைங்கர்யத்தைத்தான் ‘விஸ்வரூபம்’ செய்கிறது. கமல் திட்டமிட்டு இதைச் செய்தாரா? இந்தக் கைங்கர்யத்தை அவர் திட்டமிட்டுத் தவிர்க்கத் தவறிவிட்டார். இவ்வளவு நுணுக்கமாகத் திரைக்கதை அமைத்தவர், திட்டமிட்டிருந்தாரானால் படம் வேறு வகையில் அமைந்திருக்கும். ஜிஹாதிகளின் மனிதத்தன்மையற்ற தண்டனைகளையும், சித்திரவதைகளையும் அவ்வளவு விளக்கமாகக் காட்டியவர், ஏற்கெனவே மொபைல் போன் வழியாகவும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டிருக்கிற காணொளிப்படங்களை நடிகர்கள் மூலம் பார்ப்பவர் நெஞ்சங்களில் “எவ்வளவு ஈவிரக்கமில்லாமல் நடந்துகொள்கிறார்கள்” என்ற பதைப்பை ஏற்படுத்தியவர் ஜிஹாதிகளின் அந்த அமெரிக்க எதிர்ப்புக்குப் பின்னால் உள்ள நியாயங்களையும் அழுத்தமாகக் காட்டியிருப்பார்.

மனிதநேயத்தை நேசிப்பவர்கள் ஜிஹாதிகளின் வழிமுறைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அரசாங்கம், அதன் அமைப்புகள் ஆகியவற்றோடு நேரடியாக மோதுவதற்கில்லாமல் அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் வெறித்தனம், அதன் மூலம் அரசாங்கங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதாக எண்ணிக்கொள்ளும் முதிர்ச்சியற்ற அரசியல் கணக்கு இரண்டுமே வன்மையான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உரியவை. அதனால்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மனித நேய சக்திகள் இந்த பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறார்கள்.  அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டாத போராட்ட வழிமுறை உண்மையில் எதிரிக்குத்தான் சாதகம்.

ஆனால் அந்த அமெரிக்க எதிர்ப்புணர்வின் ஆழமான அரசியல், பொருளாதார அடக்குமுறைப் பின்னணிகள் உரக்கச் சொல்லப்பட வேண்டியவை. இந்தப் படத்தில் ஆப்கானிஸ்தான் குடியிருப்புகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசுகிற காட்சி வருகிறது, ஆனால், அது அங்கே சிறைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை மீட்பதற்காகத்தான். புஷ் படத்தின் மீது துப்பாக்கித் தோட்டாக்களை ஜிஹாதிகள் பாய்ச்சுகிறார்கள். அவ்வளவு கோபம் ஏன் என்பது தொட்டுக்காட்டப்படவில்லை. “நாம அல்லாவுக்காகப் போர் செய்யுறோம், அவங்க ஆயிலுக்காகப் போர் செய்றாங்க” என்ற வசனம் போகிற போக்கில் உதிர்க்கப்படுவது, இப்படி விமர்சிப்பவர்களுக்காக “இல்லையே, அதையும் நாங்கள் தொட்டுக்காட்டியிருக்கோமே” என்று சொல்லிக்கொள்ள இணைக்கப்பட்ட வசனமாகவே இருக்கிறது.

போதாக்குறைக்கு அமெரிக்க ராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள் என்று ஜிஹாதி ஒருவரே சொல்கிற வசனம் வேறு வருகிறது. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையான குழந்தைகள் பற்றிய செய்திகளை கமல் சார் படிக்கவே இல்லையோ?

உலகளாவிய பயங்கரவாத மூலஸ்தானமே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் சிஐஏ தலைமையகமும் பென்டகன் வளாகமும்தான் என்ற உண்மையை ஹாலிவுட் மசாலாப் படங்கள் மறைக்கலாம். ஒரு கோலிவுட் படம் ஏன் மறைக்க வேண்டும்? அமெரிக்க லாபப் பசி வேந்தர்களின் உலக ஆக்கிரமிப்பு நோக்கத்திற்குத் தோதாக, சோவியத் யூனியன் வீழ்த்தப்பட்ட பிறகு, பயங்கரவாதம் என்ற பொது எதிரி கற்பிக்கப்பட்டதை ஹாலிவுட் பொழுதுபோக்குப் படங்கள் சொல்லத் தயங்கலாம். கோலிவுட் படம் அதை ஏன் சொல்லத் தயங்க வேண்டும்? ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானில் இன்னபிற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து ஒடுக்கப்படுகிற மனித நேய முஸ்லிம்கள்தான் மிகுதி. அவர்களை அடையாளப்படுத்த ஹாலிவுட் படங்கள் முன்வராமல் போகலாம். கோலிவுட் படம் ஏன் முன்வராமல் போக வேண்டும்?

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் வெளிநாட்டுப் படங்களின் பட்டியலிலாவது விஸ்வரூபத்தைச் சேர்த்துவிடும் முயற்சியா?

நாயகனை தொழுகை நடத்துகிறவனாகக் காட்டுவதும் ஒரு சமாதானம்தான். உள்ளூர் ஆதிக்க மதவாதிகள், முஸ்லிம்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் “இந்தியாவில் இருப்பதானால் இந்துவாக இரு, இல்லாவிட்டால் இந்துவுக்குக் கட்டுப்பட்டு இரு” என்றுதான் சொல்கிறார்கள். நாயகன் விசுவாசமான இந்திய சிப்பாய் என்பது அந்த ஆதிக்க மதவாதிகளை திருப்திப்படுத்தக்கூடும். காயம்பட்டிருக்கிற சிறுபான்மையினருக்கு மனநிறைவளிக்காது.

கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம், கலை வெளிப்பாட்டின் சமூகப் பொறுப்பு இரண்டுமே பிரித்துப் பார்க்க இயலாத சம முக்கியத்துவம் வாய்ந்தவை. “வெளிநாட்டுக்குப் போயிடுவேன்” என்பது போன்ற உணர்ச்சிவசப் பேட்டிகளாலும், சமரசப் பேச்சுகளாலும் முன்னதைத் தக்கவைத்துக்கொண்ட உலகநாயகன் பின்னதை ரொம்ப ரொம்ப பின்னுக்குத் தள்ளிவிட்டாரே...

மூல முதல்வன்


பெண்ணும் வேதநூல்களைப்
படிக்கக்கூடாது என்றானாம்
தலைமுதல் கால்வரை
வர்ணம் பிரித்த பகவன்.

பெண்ணோ பொதுவில்
கருவிகள் இசைத்துப்
பாடக்கூடாது என்றானாம்
மார்க்கம் சொன்ன இறைவன்.

பெண்ணின் ஆசைப்பேச்சு
கேட்கக்கூடாது என்றானாம்
விலா எலும்பில்
அவளைச் செதுக்கிய கர்த்தன்.

போதனைகள் படித்ததில்
விளக்கங்கள் கேட்டதில்
புத்திக்குப் புரிந்தது-
கடவுளைப் படைத்தவன் ஆண்.

Tuesday 5 February 2013

பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்ட பாட்டுக் குரல்


அந்தப் பதின்பருவப் பெண் குழந்தைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்ட, முழுக்க முழுக்கப் பெண்களே கொண்ட, இசைக்குழுவில் இணைந்து பாடத் தொடங்கினார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கின் எழிலோடும் குளுமையோடும் இவர்களது குரலினிமையும் கலந்தது. ஆனால், பாடத்தொடங்கிய சில நாட்களிலேயே அவர்களது குரல் ஒடுங்கிவிட்டது. பாடிப் பாடி தொண்டை கட்டிப்போனதால் அல்ல, பாடவே கூடாது என்று மிரட்டப்பட்டதால்.

முதலில் சமூகவலைத்தளங்களில் சிலர் இப்படியெல்லாம் இளம் பெண்கள் வெளியே வந்து பாடலாமா என்று பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். மறைமுகமான தாக்குதல் மிரட்டலும் அந்தப் பதிவுகளில் இருந்தன.

மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, ‘ட்வீட்டர்’ தளத்தில் அந்தச் சிறுமிகள் அஞ்ச வேண்டியதில்லை, அவர்கள் இசைக்குழுவில் இணைந்து பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை, அவர்களுக்கு அரசு வேண்டிய பாதுகாப்பை அளிக்கும் என்று உறுதியளித்தார்.

ஆனால், துகாதார்ன்-இ-மில்லத் என்ற ஒரு இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு, இப்படிப் பெண்கள் வெளியே வந்து பாடுவது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்தச் சிறுமிகள் தொடர்ந்து பாடினால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது. ஏற்கெனவே மாநிலத்தின் தலைமை முஃப்தி தடையாணை (ஃபட்வா) பிறப்பித்திருக்கிறார்.

சிறுமிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தலைமறைவாக வைத்துள்ளனர். யாரும், குறிப்பாக ஊடகங்கள் சிறுமிகளோடு தொடர்புகொள்ள முடியாத வகையில் அவர்களது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். முதலமைச்சரின் ட்வீட் உறுதிமொழியோ, காவல்துறையோ தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்தப் பெற்றோர் கூறுகின்றனர்.

பள்ளத்தாக்கு தனக்குக் கிடைத்த கூடுதல் இசைக்குரல் இனிமையை இழந்திருக்கிறது.

கலை இலக்கியவாதிகள், ஜனநாயக - மனித உரிமை இயக்கங்கள் இதைக் கண்டிக்கின்றன.

கமல்ஹாசனின் கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக நியாயக் குரல் எழுப்பிய நண்பர்களே இந்தச் சிறுமிகளுக்காகவும் குரல் எழுப்புவீர்களா?

‘விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்தில் நியாயமான கோபத்தை வெளிப்படுத்திய இஸ்லாமிய அமைப்புகளே, முஸ்லிம் நண்பர்களே - உங்களது அந்த ஆவேசத்தின் நியாயத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன் - அந்தச் சிறுமிகளுக்கு எதிரான இந்த மதவாத ஒடுக்குமுறையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே இளம் பெண்களின் கலைத்திறமை வெளிப்பாடுகள் கூடாது என்று சொல்கிறதா? உண்மைதான் என்றால் அது நியாயம்தானா? இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த 21ம் நூற்றாண்டில் தொடர்வது பொருத்தம்தானா? பொருத்தமில்லை என்றால் இதற்கும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா?