Tuesday 28 September 2010

அரியப்படுகிறதா அறியும் உரிமை?


(செப்டம்பர் 28: அறிந்துகொள்வதற்கான உரிமை நாள்)


"ஒன்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை; தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது." -இது ஒரு ரஷ்யப் பழமொழி. எதையும் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்புதான் மனித சமுதாய வளர்ச்சிக்கே அடிப்படை. நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் ஏன் விடிகிறது, ஏன் இருட்டுகிறது, ஏன் மழை பொழிகிறது, ஏன் வெயில் கொளுத்துகிறது என்றெல்லாம் துருவி துருவி, தெரிந்துகொள்ள முயலாமல் இருந்திருப்பார்களானால் மானுடப் பரிணாமத்தின் வளர்ச்சி இன்றும் கூட இயற்கை நிகழ்வுகளுக்கு அஞ்சியஞ்சிக் காடுகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவே தேங்கிப்போயிருக்கும்.

ஆகவேதான் அறிந்துகொள்வது என்பது மனித நாகரீகக்கூறாக மட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமையாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நெடும் போராட்டங்களின் வெற்றியாகவே இந்த அங்கீகாரம் கிடைத்தது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான சவால்கள் மேலோங்குகிறபோதெல்லாம், தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்ட ஒடுக்குமுறையில் இறங்குகையில் முதலில் கைவைப்பது குடிமக்களின் இந்த உரிமையில்தான். இந்தியாவில் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிக்காலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி நினைத்தால் கூட பத்திரிகைகளில் குறிப்பிட்ட செய்திகள் வெளிவராமல் தடுக்க முடிந்தது என்பதை மறக்க முடியுமா என்ன?

அப்படி அவசரநிலை ஆட்சி என ஒன்று இல்லாத காலத்திலும் கூட, அரசாங்க ரகசியக் காப்புச் சட்டம் என்பது போன்ற பல பெயர்களில் பல தகவல்கள் மறைக்கப்படுவதுண்டு. ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள் என்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்கள் இருந்தாலும், நடைமுறையில் அந்த எசமானர்களுக்குத் தெரியாமலேதான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உலகம் முழுவதுமே இப்படியாக இருந்த நிலையில்தான் தகவல்களை அறிவது ஒரு உரிமை என்ற முழக்கத்தோடு போராட்ட இயக்கங்கள் வெடித்தன. அந்த வெடிப்பு, அந்த உரிமையை ஐ.நா. சபை அங்கீகரிக்கவும், அதன் உறுப்பு நாடுகள் இதற்கான சட்டம் கொண்டு வருமாறு தீர்மானம் நிறைவேற்றவும் வழிவகுத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 அன்று அறிந்துகொள்வதற்கான உரிமை நாள் என்று அனுசரிக்கப்படுகிறது. பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரில் 2002 ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டத்தில், உலகந்தழுவிய அளவில் தகவல் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளாகக் கடைப்பிடிக்க முடிவுசெய்யப்பட்டது.தகவல் பெறுவதற்கான வாய்ப்பு ஒவ்வொருவரின் உரிமை; தகவல் அளிப்பதே அடிப்படை விதியாக இருக்க வேண்டும், ரகசியம் என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும்; பொதுமக்கள் சார்ந்த அனைத்து அரசு அமைப்புகளுக்கும் இது பொருந்தும்; தகவல் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாகவும், விரைவாகவும், இலவசமாகவும் இருக்க வேண்டும்; வேண்டுகோள் விடுப்போருக்கு உதவுவது அதிகாரிகளின் கடமை; தகவல் மறுக்கப்படுமானால் நியாயமான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்; ரகசியம் காக்கப்படுவதில் பொதுநலனுக்கே முன்னுரிமை; ஒரு பாதகமான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; அரசு அமைப்புகள் மையமான தகவல்களை முனைப்புடன் வெளியிட வேண்டும்; ஒரு சுதந்திரமான அமைப்பினால் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்... ஆகிய இந்த அடிப்படைக் கொள்கைகளை இந்த நாளில் மக்களிடையே எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் நடந்த போராட்ட இயக்கத்தின் வெற்றியாக 2005ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. சட்டப்பூர்வ அதிகாரம் ஏதுமற்ற ஏற்பாடாக மாற்றுவதற்கெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் முயன்றார்கள். பல துறைகளை இந்தச் சட்டத்திற்கு உட்படாததாக அறிவிக்கவும், ஒரு நீர்த்துப்போன சட்டமாக மாற்றவும் அதிகார வர்க்கமும் பல வழிகளைக் கையாண்டது. ஆயினும், இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஆட்சி நடந்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்த முதலாம் ஐமுகூ அரசு, ஒரேயடியாக நீர்த்துப்போகச் செய்ய முடியாமல் தற்போதுள்ள சட்டத்தைக் கொண்டுவந்தது.அப்படியும் - பாதுகாப்புத்துறை, உளவுத்துறை போன்றவை இந்தச் சட்டத்தின் கையில் அகப்படாமல் விலக்கிவைக்கப்பட்டுள்ளன. அண்மையில் உச்சநீதிமன்றம் தனக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்ல, அதெல்லாம் பொருந்தும் என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்த சுவையான நிகழ்ச்சியும் நடந்தது.

சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தேசிய தகவல் உரிமை ஆணையம், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குப் போதுமான ஊழியர்கள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் இந்த ஆணையங்கள் முறையாகவும், வீரியமாகவும் செயல்படுவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. இதனை மனித உரிமை இயக்கங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை

சட்டப்படி அரசு அலுவலகங்களில் தகவல் அலுவலர்கள் என நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சட்டம் பற்றிய போதிய பயிற்சி இல்லை. ஆகவே, பொதுமக்களிடமிருந்தோ, அமைப்புகளிடமிருந்தோ தகவல்கள் கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு பதிலளிக்காமலே விடுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. எப்படிப்பட்ட தகவல்களை தெரிவிக்கலாம், அல்லது தெரிவிக்கக்கூடாது என்பதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப முடிவு செய்கிறார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட தகவல்கள் சட்டப்படி தெரிவிக்க வேண்டியவையாக இருந்தாலும் கூட, உயரதிகாரிகள் அல்லது அந்த உண்மைகள் தெரியக்கூடாது என்று விரும்புகிற சில சக்திகளின் நிர்ப்பந்தங்களால் அந்தத் தகவல்களை மறைப்பது, இழுத்தடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடக்கின்றன. தனிப்பட்ட ஆர்வத்துடன் இந்தச் சட்டத்தின் நோக்கங்களைப் படித்துப் புரிந்துகொண்டு ஈடுபாட்டுடன் அந்த மேசைகளில் அமர்ந்திருப்போர் மட்டுமே ஒரு கடமை உணர்வுடன் தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். வழக்கம்போல் அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு.

பல இடங்களில், வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கே, தகவல் அலுவலர்களாகவும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக, பெரிதும் அடிபடுவது தகவல் தெரிவிக்கும் அலுவல்தான் என்று இதற்காக அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தகவல் ஆணையத்தின் ஆணைகளை, பல்வேறு அலுவலகங்களின் தகவல் அலுவலர்கள் மதிப்பதில்லை; அந்த ஆணைகளை எதிர்த்து வழக்குப் போடுவதும் நடக்கிறது. தகவல் தர மறுத்த ஒரு அலுவலரை ஆணையம் கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு அபராதம் விதித்து ஆணை வந்தபோது அவர் குறிப்பிட்ட தகவலைத் தர முன்வந்தார்! தன்னைப் பற்றிய விமர்சனத்திற்குக் கவலைப்படாமல், பணம் போய்விடுமே என்ற கவலையுடன் அவர் நடந்துகொண்டது எந்த அளவுக்கு இப்படிப்பட்ட அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்தியது, என்றார் அப்படிப் படியேறி இறங்கச் சளைக்காத ஒரு செய்தியாளர்.

இப்படிப்பட்ட நிலையில் மாநிலத் தகவல் ஆணையத்தில் நான்கைந்து முறை மேல்முறையீடு செய்தாக வேண்டிய நிலை உள்ளது என்று தமிழ்நாடு தகவல் உரிமைக்கான பிரச்சார அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர். தகவல் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் ஆணைய அலுவலகத்தில் வைக்ப்படாதது, அவ்வப்போது ஆணையமே மக்களுக்காக சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கையேடுகளை வெளியிட வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரிய நகரங்களிலாவது ஊடக வெளிச்சம் உடனடியாகப் பாய்வதால் இந்தச் சட்டத்தின் பலன் மக்களுக்கு ஓரளவுக்காவது கிடைக்கிறது. சிறிய ஊர்களிலும், கிராமங்களிலும் சட்டத்தின் துணையை நாடுவோர் மதிக்கப்படுவதே இல்லை. அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம ஊராட்சிக்கு, ஊரில் தொடங்கப்பட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களின் கதி என்ன என்று கேட்டு கடிதம் அனுப்பிய ஒரு இளைஞர், அந்த ஊராட்சித் தலைவரின் ஆட்களால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானது. இப்படித் தாக்குவதும், மிரட்டுவதும் பல இடங்களில் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சட்டம் குறித்து இன்னும் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதே நல்லது என்று ஆட்சி பீடத்தில் இருப்போரும், அதிகார வர்க்கத்தினரும் நினைக்கிறார்களோ? நாடு முழுவதும் இவர்களைப் பயன்படுத்தி ஆதாயம் அடைகிற பெரியதொரு சுயநலக் கூட்டம் அதைத்தான் விரும்புகிறதோ?அப்படியானால், மக்களின் அடிப்படையான அறியும் உரிமை அரிக்கப்படுகிறது என்றே அர்த்தம்.

அந்த அரிமானத்தைத் தடுக்கும் ஆற்றல் மக்கள் சக்திக்குத்தான் இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டியெழுப்பிட, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை எளிய மக்களிடம் வலிமையாக எடுத்துச் சென்றாக வேண்டும்.

('தீக்கதிர்' 28-9-2010 இதழில் வந்துள்ள எனது கட்டுரை)

Thursday 16 September 2010

சாதி எனும் சதி (கம்யூனிசம் என்றால் - 9)


உலகத்திலேயே பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மனிதர்களைப் பாகுபடுத்துகிற சாதி என்ற சமூக அமைப்பு இருப்பது இந்தியாவில்தான். வரலாற்றில் இந்தியாவோடு இணைந்து நடைபோட்டு வந்திருக்கிற இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளிலும் சாதிப் பிரிவினைகள் உள்ளன. இந்தியாவிலிருந்து சென்றவர்கள் குடியேறி வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் சாதி இருக்கிறது.

எல்லா நாடுகளிலேயுமே ஏதோவொரு வடிவத்தில் இனப் பாகுபாடுகள் இருக்கின்றன. உலகத்தையே திருத்துவதற்கு அவதாரம் எடுத்திருப்பதாகக்கூறும் அமெரிக்காவில் கூட வெள்ளையின மக்களால் கறுப்பின மக்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் எந்த நாட்டிலும் இந்தப் பாகுபாடுகள் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்று சொல்லப்படுவதில்லை. தங்களது மதங்களின் வேதங்கள் சொல்கிறபடி ஒரு பிரிவினர் உயர்ந்தவர்கள் என்றும் இன்னொரு பிரிவினர் தாழ்ந்தவர்கள் என்றும் கற்பிக்கப்படுவதில்லை.
ஆனால் இந்தியாவில்தான், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிலேயே, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களிலேயே - அதாவது ஒரே கடவுளைக் கும்பிடுகிறவர்களிடையே கூட - இவர்கள் மேலானவர்கள், இவர்கள் நடுத்தரமானவர்கள், இவர்கள் கீழானவர்கள் என்று கூறுகிற மறைநூல் இருக்கிறது. அதற்கு மனு தர்மம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மற்ற பிரிவினர்களெல்லாம் ஏதோவொரு வகையில் மதிப்பான தொழில்களைச் செய்துகொண்டிருக்க, சாதி அடுக்கில் அடியில் இருக்கிற பிரிவினர் ஊரையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்வது, நிலத்தில் இறங்கி விதைப்பது, அறுவடை செய்வது, செருப்புத் தைப்பது போன்ற வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்று இந்தப் பெருமைமிகு பாரதத்தில்தான் விதி செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உன்னதமான தொழில்களைச் செய்தாலும் அவர்கள் இழிந்த பிறவிகள், தீண்டப்படாதவர்கள், அவர்களைத் தொட்டால் அல்லது அவர்கள் மற்றவர்களைத் தொட்டால் தீட்டாகிவிடும் (சுத்தம் கெட்டுவிடும்) என்று இங்கேதான் நெறிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீண்டத்தகாத மக்களை விடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களையும் கடினமான உடல் உழைப்புக்காகப் பிறந்தவர்கள்தான் என்று அவர்களுக்கும் மேற்பட்டவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

இப்படி ஏற்றத்தாழ்வுகளோடு, ஒரு பிரிவினர் வசதிகளை அனுபவிக்க, இன்னொரு பிரிவினர் அதிகாரம் செலுத்த, மற்றொரு பிரிவினர் இந்த இரு பிரிவினருக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று எழுதியதே இறைவன்தான் என்று அந்த மறைநூல் கூறுகிறது. ஒருவர் உயர் சாதியில் பிறப்பது, இன்னொருவர் தாழ்ந்த சாதியில் பிறப்பது என்பதெல்லாம் அவரவர் முற்பிறவியில் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் பொறுத்து பகவானால் தீர்மானிக்கப்பட்டது என்றும் போதிக்கிறது.

சாதி என்பது யார் யார் எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேலைப்பிரிவினை ஏற்பாடுதான் என்றும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். சாதி வேறுபாடு இருக்க வேண்டும், ஆனால் சாதிகளுக்கிடையே பாகுபாடு இருக்கக்கூடாது, அது உயர்ந்த சாதி இது தாழ்ந்த சாதி என்ற ஏற்றத்தாழ்வுதான் இருக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சாதியையே ஒழித்துக்கட்டியாக வேண்டும், அப்போதுதான் பாகுபாட்டையும் ஒழிக்க முடியும் என்று இன்னொரு பிரிவினர் வாதாடுகிறார்கள். போராடுகிறார்கள்.

இந்த சாதி என்ற இழுக்கு எப்படி உருவானது?
யாரால் உருவாக்கப்பட்டது?
தொடர்ந்து பேசுவோம்.

Monday 6 September 2010

கடவுள் அவதரித்தது எப்படி?

கம்யூனிசம் என்றால் - 8

பயிர்கள் உள்ளிட்ட உயிர்களின் தாயாகிய நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட நிலத்திற்கான உரிமை, அதில் வேலை செய்கிறவர்களின் கடமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகார அமைப்பாக அரசு என்பது உருவானதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். வெறும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட பலர் மறுப்பார்கள் அல்லவா? நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்று சிலர் எதிர்ப்பார்கள் அல்லவா?
அவர்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான், இதெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட சக்தியால் தீர்மானிக்கப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. ஒருவன் மிகப் பெரிய நிலத்துக்கும் சொத்துக்களுக்கும் உடைமையாளனாக இருப்பதும், இன்னொருவன் இத்தணூண்டு நிலம் மட்டுமே வைத்திருப்பதும், இன்னொருவன் அது கூட இல்லாதவனாக இவர்களை நம்பி வாழவேண்டியாக இருப்பதும், பெண்கள் இதற்குக் கட்டுப்பட்டு நிலம் உடைய அல்லது இல்லாத ஆணைச் சார்ந்திருப்பதும் அந்த மாபெரும் சக்தியால் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையே என்ற கருத்து புகுத்தப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் இது எப்படி நடந்தது என்றால், வனங்களில் இயற்கையாக வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடிமக்கள் அடித்துவிரட்டப்பட்டார்கள். அவர்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய வன மக்கள் அசுரர்கள் என்றும் அரக்கர்கள் என்றும் ஆக்கிரமிப்பாளர்களால் சித்தரிக்கப்பட்டார்கள். நிலத்தின் பயனைப் புரிந்துகொண்டு அந்தக் காலத்திய நவீன ஆயுதபலத்தாலும் வேறு வகையான தந்திரங்களாலும் வனமக்களை அடக்கி, வனநிலங்களைக் கைப்பற்றியவர்கள் தங்களைத் தேவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். புராணக்கதைகளில் அசுரர்களாகிய வனமக்களும் அவர்களுடைய தலைவர்களும் கெட்டவர்களாக இருப்பதும், தேவர்களாகிய ஆக்கிரமிப்பாளர்கள் நல்லவர்களாக இருப்பதும் இப்படித்தான். (இன்றும் கூட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வன நிலங்களை ஆக்கிரமிக்கின்றன; அதை எதிர்க்கிற பழங்குடி மக்கள் தொழில்வளர்ச்சியைத் தடுக்கிற நாகரிகமற்றவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசாங்கம் தனது காவல்படையை வனங்களுக்கு அனுப்பி பழங்குடி மக்களைத் தாக்கி வெளியேற்றுகிறது. ஜனநாயக உரிமைகள் உணரப்படுகிறது இந்தக் காலத்திலேயே இப்படி நடக்கிறது என்றால், அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று ஊகிப்பது கடினமல்ல).

மனிதர்கள் வனங்களில் திரியத்தொடங்கிய காலத்திலிருந்தே ஒரு குழப்பம் ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. முதுமையடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ, விலங்குகளால் தாக்கப்பட்டோ, சக மனிதர்களால் தாக்கப்பட்டோ மரணம் ஏற்படுகிறது. இறந்தபின் என்ன ஆகும்? ஒவ்வொரு உடலிலும் உயிர் என்ற ஒன்று தனியாக இருப்பதாகவும், உடலிலிருந்து அது பிரிவதுதான் மரணம் என்றும் நினைத்தார்கள். உடலிலிருந்து உயிர் வெளியேறிய பின் ஆவியாக சுற்றிவரும் என்றும், அது திரும்பிவரலாம் என்றும் நம்ப ஆரம்பித்தார்கள். அந்த ஆவி திரும்பிவந்தால் மறுபடியும் குடியேறுவதற்காக உடல்களை பத்திரமாக வைத்திருக்கத் தொடங்கினார்கள். ஆவிகள்தான் பேய்களாக மாறி மனிதர்களுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று கருதினார்கள். ஆவிகளின் கோபத்தைத் தணிப்பதற்காக, இறந்தவர்களின் சடலங்களுக்கு அருகில் அவர்கள் விரும்பிய பொருள்கள், உணவு போன்றவற்றை வைத்தார்கள். இப்படியாகத்தான் படையல் என்பது உருவானது.

இந்தப் பேய் நம்பிக்கை காலப்போக்கில் கடவுள் நம்பிக்கையாக மாற்றப்பட்டது. நல்ல ஆவிகள், கெட்ட ஆவிகள், அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க பரம்பொருள் என்ற அடிப்படையில் கடவுள் நம்பிக்கை என்பது மனித மனங்களில் கட்டப்பட்டது. தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டதால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆழமான நம்பிக்கை வளர்ந்தது. ஆம் பேய்தான் கடவுளாக அவதரித்தது!

கடவுளை நம்புவதும், கடவுளின் கட்டளைப்படியே எல்லாம் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்வதும், அவன் எழுதிவைத்தபடியே ஒருவர் வசதியாக வாழ இன்னொருவர் பிச்சைக்காரராக வாடுகிறார் எனப் புரிந்துகொள்வதும் நல்லொழுக்கம் என போதிக்கப்பட்டன. இதையெல்லாம் நம்பமுடியாமல் கேள்வி கேட்டால் அது ஒழுக்கக்கேடு என்று கற்பிக்கப்பட்டது. கற்பனையாக உருவாக்கப்பட்ட அந்த சக்திக்குக் கடவுள் என்று பெயர் சூட்டப்படுகிறது. அந்தக் கடவுள் என்ற கற்பனை மீது பயத்தை ஏற்படுத்தும் கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த பயம்தான் பக்தி. அந்தக் கதைகள்தான் புராணங்கள். யார் யார் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள்தான் வேதங்கள். அந்தப் புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்த வட்டாரத்து சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஏற்பாடுதான் மதம்.

இந்த ஏற்பாட்டில் எவ்வளவு நுட்பமாக உழைப்புச் சுரண்டல் மறைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இந்த உழைப்புச் சுரண்டலின் இன்னொரு அருவருப்பான, புராணங்களை விடவும் கறாரான, மதங்களை விடவும் இறுக்கமான சமூக ஏற்பாடுதான் சாதி. சாதி பற்றி அடுத்தடுத்துப் பார்ப்போம்.