Thursday 27 January 2011

கோடாங்கிக் கோணார் கதை

கிராமத்தில் அவரை எல்லோரும் கோடாங்கிக் கோணார் என்றுதான் அழைப்பார்கள். அவருடைய அம்மா அப்பா வைத்த பெயர் அவருக்கே மறந்துபோயிருக்கும்.

வாய்க்கால் மேட்டில் ஒரு சிறிய காரைத் தூண். ஆண்டு முழுக்க அது வெயிலிலும் மழையிலும் தனியாக நின்றுகொண்டிருக்கும். தண்ணியடித்தவர் யாரேனும் அந்தப் பக்கமாய்ப் போனால் அந்தத் தூணில் முதுகைச் சாய்த்து கால்களை நீட்டி உட்கார்ந்துவிடுவார் (சுவத்துமுட்டி என்ற சரக்குக்கு நிறைய கிராக்கி. அதை உட்கொண்டவர் எதிரில் உள்ள சுவரில் தலையால் முட்டி நின்றுவிடுவார். “ழே... எவம்ல ரோட்டை இப்படி நிமுத்தி வெச்சவன்...”). யாராவது பார்த்தால், “எலேய் மூதி, நீ சாய்ஞ்சு கெடக்குறதுக்கு சுடலைமாட சாமிதான் கெடைச்சுதால,” என்று இழுத்துப்போட்டுவிட்டுப் போவார்.

சுடலைமாடனுக்கு கிராம மக்கள் கொடுத்திருந்த உருவம் அது. ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் அந்த சாமிக்கு கொடை கொண்டாடுவார்கள். தூணில் உதிர்ந்த இடங்களில் காரை வைத்து வெள்ளையடிக்கப்படும். சந்தனம், குங்குமம் பூசி மாலைகள் அணிவிக்கப்படும். பெரிய பந்தல், ஒலிபெருக்கி, கறியும் சோறுமாய்ப் பொதுச் சமையல், கரகாட்டம் என்று ஊரே உற்சாகப்படும். (பெருமாள் கோவில் தெருக்காரர்களும் சிவன்கோவில் தெருக்காரர்களும் இந்தக் கொடையில் கலந்துகொள்ள மாட்டார்கள்.)

சுடலை மாட சாமிக்குக் கொடை வரும்போதுதான் கோடாங்கிக் கோணாருக்கு மவுசு வரும். இத்தனூண்டு நிலம் வைத்திருந்த, மற்றவர்களின் வயல்களிலும் இறங்கி வேலை செய்த எளிய விவசாயி அவர். திருவிழா நடக்கிற மூன்று நாட்களில் அவர் ஊர் மதிக்கிற பூசாரியாகிவிடுவார்.

இரண்டாம் நாள் இரவு அவர் வடக்கில் திரும்பி, கைகளைப் பின்னால் கோர்த்து நிற்பார். கைகளில் முட்டை, தேங்காய், பழம் பூ என்று சில பொருள்கள் வைக்கப்படும். அந்தப் படையல் பொருள்களை அவர் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஊரின் சுடுகாடு நோக்கி ஓடுவார். அவரை யாரும் பின்தொடரக் கூடாது. மீறிப் போனால் சுடலைமாடனிடம் அடிவாங்கி ரத்தம் கக்கிச் சாக வேண்டியதுதான்.

ஊரின் எல்லையைத் தாண்டியதும் அவருக்கு நம்பமுடியாத வேகம் வந்துவிடுமாம். அந்த ஊர் சுடுகாடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட ஊர்களின் சுடுகாடுகள் வழியாக அவருடைய ஓட்டம் அமையுமாம்.

அதிகாலையில் அவர் திரும்பி வருவார் - புறப்படும்போது இருந்ததுபோல் கைகளைப் பின்னால் கோர்த்தபடி - இப்போது கைகளில் ஒரு மனித மண்டையோடு இருக்கும். அவருக்கே தெரியாமல், படையலை சுடலைமாடன் எடுத்துக்கொள்வானாம். அதற்கு நன்றியாக கையில் மண்டையோட்டை சுடலைமாடனே வைப்பானாம். அதை அவரே திரும்பிப் பார்த்தால் அவருக்கும் ரத்த வாந்திதானாம்.

அவரை மேளத்தோடு வரவேற்பார்கள். வரிசையாகக் கடா ஆடுகளின் கால்களைப் பிடித்து அவர் முன்னால் தலைகீழாகத் தொங்கவிடுவார்கள். அவர் ஒரு கூர்மையான கத்தியால் ஒரே இழுப்பில் கடாவின் வயிற்றைக் கிழிப்பார். வாழைப் பழங்களை கடா வயிற்றில் திணித்துப் பிசைவார்கள். சாதாரணமாக எவ்வளவு பெரிய வயிற்றுக்காரர்களும் சாப்பிட முடியாத அளவுக்கு அந்த ஆட்டு ரத்தம்-பழ மசியலை அவர் விழுங்குவார். மிஞ்சுவதெல்லாம் சுடலை மாடனின் அருளாசியாக மக்கள் வாங்கிக்கொள்வார்கள். கடாக்களின் உடல்கள் சமையல் பாத்திரங்களுக்குப் போகும்.

அருளுணவு முடிந்ததும் கோடாங்கி அடித்துக் கொண்டே ஆடத் தொடங்குவார் பூசாரிக் கோணார். கொண்டை அவிழ்ந்து, குதிபோட்டு ஆட ஆட அவர் மேல் சுடலை மாடன் முழுமையாக வந்து இறங்கிவிடுவான். மக்கள் வரிசையாக நிற்பார்கள். கோடாங்கித் தாளத்தோடு, கோணாரின் உருவத்தில் சுடலை மாடன் ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு சொல்வான். எல்லோரும் அவர் காலில் விழுந்து கும்பிட்டு, அவர் அள்ளித்தருகிற திருநீறைப் பெற்றுக்கொண்டு குடும்பச்சிக்கல் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையோடு கலைவார்கள். கோடாங்கிக் கோணார் ஓய்ந்து விழ, கொடை முடியும்.

மறுநாளே அவரை, நிலச் சொந்தக்காரர்கள் “வே கோடாங்கி, வேலையை ஒழுங்கா செய்யும்வே” என்று அதட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

இது போன்ற நிகழ்வுகளை ஆர்வத்துடன் விசாரிக்கிறவனாய் நகரிலிருந்து அந்த ஊருக்கு நான் போயிருந்த அந்த ஆண்டின் ஆடி மாதத்தில் ஒரு முக்கியத் திருப்பம் நடந்தது. மூன்று இளைஞர்கள் பகுத்தறிவு மன்றம் என ஏற்படுத்தியிருந்தார்கள். கொடையின் இரண்டாம் இரவு கோடாங்கிக் கோணாரின் பின்னால், அவருக்குத் தெரியாமல் அவர்கள் போனார்கள். காலையில் அவருடைய அருள்வாக்கு முடிந்ததும், நன்றாக விடிந்ததும், அந்த இளைஞர்கள் அதே வாய்க்கால் மேட்டில் மக்களைத் திரட்டினார்கள். “கோடாங்கிக் கோணாரு ஒண்ணும் யாராலயும் முடியாத வேகத்துல ஓடலை. பல ஊரு சுடுகாட்டுக்கும் போகலை. நம்ம ஊரு சுடுகாட்டுக்கே கூடப் போகலை. ஆத்தங்கரையிலதான் உட்கார்ந்து, முட்டையையும் தேங்காயையும் பழத்தையும் அவரேதான் தின்னாரு. முட்டை ஓட்டையும் தேங்காய் ஓட்டையும் பழத் தோலையும் ஒரு எடத்துல புதைச்சாரு. அங்கே நாங்க அடையாளம் வெச்சிட்டு வந்திருக்கோம். இன்னொரு எடத்திலே தோண்டி, அங்கே மொதல்லேயே பொதைச்சு வச்சிருந்த மண்டையோட்டைத்தான் எடுத்து வந்தாரு...”

சிலர் ஆற்றங்கரைக்குப் போய், இவர்கள் சொன்னது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள். ஊரில் பலரும் கோடாங்கிக் கோணாரைப் பரிகசித்தார்கள். அவர்களை விடவும் பலர் அந்த இளைஞர்களைத் திட்டினார்கள். கோடாங்கிக் கோணார் சாபம் கொடுத்தார்: “சுடலை மாடன் சும்மா விடமாட்டான். நாத்திகப் பயலுக நாசமாப் போவானுக.”

அடுத்தடுத்த ஆண்டுகளில் கோடாங்கிக் கோணாரின் பழைய செல்வாக்கு வெகுவாகச் சரிந்தது. அந்த மூன்று இளைஞர்கள் என்ன ஆனார்கள்? புரட்சிகரமான சிந்தனையோடு புறப்பட்ட அவர்களில் ஒருவர் தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகளால் நோயில் விழுந்தார். இன்னொருவர் குடும்ப மோதல் ஒன்றில் சிறைக்குச் சென்றார். இன்னொருவர் பொதுப்பணத்தில் கைவைத்ததற்காக ஓட ஓட விரட்டப்பட்டார்.

பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவது வெறும் கவர்ச்சிகரமான விளையாட்டாக இருக்கக்கூடாது, அறிவியல் கண்ணோட்டத்தோடு புரிந்துகொண்ட ஈடுபாடாக இருக்க வேண்டும். இல்லையேல், முன்பு பகுத்தறிவுவாதிகளாய் நெஞ்சு நிமிர்த்திய பலர், இப்போது அதிதீவிர ஆன்மீகவாதிகளாய்ப் பணிந்துவிட்டது போன்ற எதிர்மறை விளைவுதான் ஏற்படும்.

அந்த ஊரில் இப்போதும் சுடலை மாடன் கொடை நடக்கிறது. அந்த மூன்று இளைஞர்களில் இரண்டு பேர் கொடைக்காக வசூல் செய்கிற பெரிய மனிதர்களாகிவிட்டார்கள். ஒருவர் இறந்துவிட்டார். கோடாங்கிக் கோணாரும் இறந்துவிட்டார். அவரது மகன் சுடுகாட்டு ஓட்டம் நடத்தி, கோடாங்கி அடித்து குறி சொல்கிறார். மக்கள் அவர் காலில் விழுந்து அருள் வாக்கு கேட்கிறார்கள்.

கிராமத்தில் செல்போன் டவர் வந்துவிட்டது, கணினி வந்துவிட்டது, வலைத்தள இணைப்பு வந்துவிட்டது. ஆனால்...

Sunday 2 January 2011

ஒரு கவிதைப் புத்தகத்தை முன்வைத்து................. நுட்பமாக இறுகும் அடக்குமுறைக் கயிறு

தவெறி, சர்வாதிகாரம், படைப்புச் சுதந்திர அடக்குமுறை இவை மூன்றும் இணைபிரியா ஒட்டுப்பிறவிகள். இதற்கு, எடுத்துக்காட்டாக ஆர்எஸ்எஸ் வியூகத்தில் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ கூட்டங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. இதில் அண்மையில் சேர்ந்திருக்கிறது இன்னொரு எடுத்துக்காட்டு.

அகீல் ஷதீர் அன்சாரி ஒரு கவிஞர். வயது 49 குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் ஒரு சிறிய தொலைபேசி மையத்தை நடத்தி வருகிறார். அகீலுக்கு நீண்ட காலமாகவே எல்லாக் கவிஞர்களுக்கும் இயல்பான ஒரு கனவு இருந்துவந்தது. தனது கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு நனவாகிற வாய்ப்பு, குஜராத் உருது சாகித்திய அகடமி அமைப்பின் மூலமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. மாநில அரசின் நிதி உதவியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் உருது இலக்கிய அமைப்பு இது.

வளரும் எழுத்தாளர்களின் முதல் புத்தக முயற்சிக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தனது புத்தகத்திற்கும் நிதியுதவி கோரியிருந்தார் அகீல். கோரிக்கை ஏற்கப்பட்டு, புத்தகத் தயாரிப்புச் செலவாக ரூ.10,000 அவருக்கு வழங்கப்பட்டது. மகிழ்ச்சியோடு புத்தகத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டார் அவர். 'அபி ஜிந்தா ஹூன் மேய்ன்' (நான் உயிரோடு இருக்கிறேன்) என்ற கவித்துவமான, சிந்தனைகளை தூண்டக்கூடிய தலைப்புடன் அவருடைய புத்தகம் 2008ல் வெளியானது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2010 நவம்பர் 15ல் அவருக்கு அகடமியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அவருடைய புத்தகத்திற்கு வழங்கப்பட்ட ரூ.10,000 நிதி உதவியை ஏன் திரும்ப பெற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கம் அளித் திடுக, என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தக் கடிதத்தில், இவ்வாறு கேட்பதற்கான காரணமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புத் தகத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியை விமர் சிக்கும் வரிகள் இருப்பதாகவும், இது அவருடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதாகவும், இது நிதி வழங்குவதற்கான விதிகளை மீறிய செயல் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அகடமிக்கு அவர் அனுப்பிய கையெ ழுத்துப் படியில் அந்த விமர்சனக் குறிப்பு இல்லை என்றும், புத்தகத்தில் மட்டும் அது இடம் பெற்றது எப்படி என்றும் கேட்கப்பட்டிருந்தது.

கேள்விகளுக்கு விளக்கமளித்து பதில் அனுப் பினார் அகீல். டிசம்பர் 1 அன்று அனுப்பிய அந்த விளக்கத்தில் அவர், கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிற புத்தகங்களில் ஒரு படியில் கூட இந்த விமர்சனம் இல்லை என்பதை தெரிவித் திருந்தார். புத்தகம் வெளியாவதற்கு முன் சில நண்பர்களுக்கும் கவிஞர்களுக்கும் இலக்கிய ஆர்வ லர்களுக்கும் கொடுத்த குறைந்த எண்ணிக்கையிலான படிகளில் மட்டுமே அந்த வரிகள் இடம் பெற்றிருந்தன என்றும், அகடமி உறுப்பினரான எழுத்தாளர் மொஹியுதீன் பாம்பேவாலா அந்த வரிகள் தவறான முறையில் இடம்பெற்றிருப்பதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடைகளுக்கு அனுப்பிய படிகளில் அந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் தெளிவு படுத்தியிருந்தார்.

அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நிர்வாகம் டிசம்பர் 27 அன்று அவருக்கு அனுப்பிய கடிதத்தில், பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு ஆணையிட்டிருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன?

கவிஞரின் நண்பரும் இலக்கிய விமர்சகரு மான ராணா அஃப்ரோஸ் பிவாண்டி அந்தப் புத் தகத்திற்கு ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறார். அதில், 2002ம் ஆண்டில் இந்தியாவின் மன சாட்சியை உலுக்கிய குஜராத் மனிதப் படு கொலைகளை நினைவுகூர்ந்து, மோடி ஆட்சியை விமர்சிக்கும் ஒரு கருத்தை ஓரிரு வரிகளில் பதிவு செய்திருந்தார். இத்தனைக்கும் 'நான் உயிரோடு இருக்கிறேன்' புத்தகத்தில் கவிஞர் தொகுத்துள்ள எந்தக் கவிதையிலும் குஜராத் படுகொலை தொடர்பான சிந்தனை எதுவும் எதிரொலிக்க வில்லை. முற்றிலும் மானுட வாழ்க்கை தொடர்பான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் கவிதைகளே அவை.

இருந்தபோதிலும் "அகடமி உறுப்பினர் மொஹியுதீன் பாம்பேவாலா, அந்த வரிகள் தரமற்றதாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதும், அவற்றால் ஏற்படக் கூடிய விரும்பத்தகாத விளைவுகளை எண்ணிப்பார்த்து அவற்றை நீக்கிவிட்டுத்தான் புத்தகப் படிகளை விற்பனைக்கு அனுப்பினேன்," என்கிறார் அகீல்.

அகடமியின் இந்த நடவடிக்கைக்குப் பின் னால் இருப்பது மோடி பற்றிய விமர்சனம் அல்ல, வேறொரு காரணமும் இருக்கிறது என்கிறார் அவர். அக்பர் - இ - நாவ் என்ற உருது மொழிப் பத்திரிகையில் நிழற்ப்படச் செய்தியாளராகவும் பணிபுரி கிறவர் அகீல். ஒரு செய்தி தொடர்பாக அவர், அகடமியின் செயல்பாடுகள் தொடர்பான சில வினாக்களை எழுப்பி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பியிருந்தார். இத னால் ஏற்பட்ட ஆத்திரத்தால்தான், புத்தகம் வெளி யான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று வேறொரு பிரச்சனையையும் அகீல் வெளிப் படுத்துகிறார்.

முறைகேடான நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால் என்ன நடக்கும் என் பதற்கான சான்றாக இந்த நடவடிக்கை அமைந் திருக்கிறது. அதே நேரத்தில் அதைவிட ஆழமான பிரச்சனையாக, பாஜக அரசின் முதலமைச்சரை விமர்சித்தால் அதற்கு என்ன பரிசு கிடைக்கும் என்ற எச்சரிக்கையும் மற்ற படைப்பாளிகளுக்கு இதன் மூலம் விடுக்கப்படுகிறது.

அணிந்துரையில் விமர்சிக்கப்பட்டிருந்தாலும் சரி, கவிதைகளிலேயே வெளிப்படுத்தப்பட்டிருந் தாலும் சரி அதற்கான உரிமை ஒவ்வொரு படைப் பாளிக்கும் திறனாய்வாளருக்கும் உண்டு. அந்த ஜனநாய உரிமையை மதிக்கும் பாங்கு மத வெறியர் ஆட்சிக்கும் இருக்காது, அதன் கீழ் இயங்குகிற அமைப்புகளுக்கும் இருக்காது என்பதைதான் இது காட்டுகிறது. சிறுபான்மையினரின் இலக்கியப் பங்களிப்புகளை வளர்ப்பதற்காக என ஏற்படுத்தப் பட்ட நிறுவனத்திலேயே இவ்வாறு நடக்க முடியும் என்றால், குஜராத்தில் ஒட்டுமொத்தத்தில் எவ்வ ளவு நுட்பமான வழியில் அடக்குமுறை ஆட்சி தலைவிரித்து ஆடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மோடி அரசு சிறப்பாக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக ஒரு மாயத் தோற்றத்தைப் பரப்புகிறவர்களுக்கு ஒரு கேள்வி: பண்பாட்டுத் தள உரிமைகளைச் சிதைத்துவிட்டு எதை மேம்படுத்தப் போகிறது மோடி அரசு?

இங்கே முன்பு சோவியத் யூனியனில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தால் கருத்துச் சுகந்திரம் இருக்காது என்று பூச்சாண்டி காட்டு வோருக்கு இது சமர்ப்பணம்: சோவியத் யூனியனின் குடியரசுத் தலைவ ராகப் பொறுப்பேற்று சோசலிச நடவடிக்கை களைத் தொடங்கியிருந்தார் ஸ்டாலின். எழுத்தாளர் மாயகோவ்ஸ்கி, அரசின் நிதி உதவியோடு வெளி யிட்ட ஒரு புத்தகத்தில் ஸ்டாலின் நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். அதிகாரிகள் இதனை ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவந்த தோடு, அந்தப் புத்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர்.

"படைப்பாளியின் கருத்துச் சுகந்திரத்தை நான் மதிக்கிறேன், புத்தகம் மக்களுக்குக் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது. அவருடைய விமர்சனத்திற்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இருக்குமானால் அதை நான் முறைப் படி செய்வேன்," என்று கூறினார் ஸ்டாலின்.

ஓவியம், திரைப்படம் என எந்த ஒரு கலையாக்கமானாலும் அதிலே கட்டாரி வீச தயாங்காதவர்களின் ஆட்சியில் இந்த அரசியல் பண் பாட்டை எதிர்பார்க்க முடியுமா? ஆயினும் இந்த விவகாரத்தால் அந்தப் புத்தகம் பற்றிய ஒரு கவனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தோழமைக்கரங்கள் நீளும், நீக்கப்பட்ட வரிகளுடனேயே புத்தகம் மக்களுக்குக் கிடைக்கும், படைப்புச் சுதந்திரம் 'நான் உயிரோடு இருக்கிறேன்' என்று உற்சாகமாக முழங்கியபடி கம்பீரமாக நடைபோடும் என்று எதிர்பார்க்கலாம்.

(‘தீக்கதிர்’ 2.1.2011 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள கட்டுரை)