Friday 24 February 2012

என்கவுன்டர் வரிசையில் தொடரும் கேள்விகள்


"இப்படி பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கிகளில் இருந்து கொள்ளையடிக்கிறவர்களை நிற்க வைத்தே சுட வேண்டும்."
"வங்கி ஊழியர்கள் எதிர்க்க முயன்றிருந்தால் அவர்களைக் கொள்ளையர்கள் போட்டுத் தள்ளியிருப்பார்கள். ஆகவே கொள்ளையர்களைப் போட்டுத் தள்ளுவதில் தவறில்லை."
"பீஹாரிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் நிறையப் பேர் வேலைக்காக என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்கள்தான் திருட்டுகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபடுகிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை இனிமேல் இங்கே வரவிடாமல் தடுத்தால் குற்றங்கள் குறைந்துவிடும்."

-இவையெல்லாம் அண்மையில் நடந்த வங்கிக் கொள்ளைகளையும், இன்னும் துப்புக் கிடைக்கவில்லை என்ற செய்திகளையும் தொடர்ந்து பொதுமக்களில் பலரும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டபோது வெளியிட்ட கருத்துகள். இப்படிப்பட்ட பேச்சுகளை, பிப்ரவரி 22-23 நள்ளிரவில் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த குடியிருப்பில் நடந்ததாகக் கூறப்படும் மோதல் நிகழ்வில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்ட நிகழ்வு நியாயப்படுத்துகிறதா?

அந்த வீட்டின் சுவர்களிலோ, வெளிப்புற கம்பிக்கதவுகளிலோ துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளமே இல்லையாமே? காவலர்கள் உடைத்ததாகக் கூறப்படும் சன்னல் கதவில் மட்டும் இரண்டே இரண்டு தோட்டா பாய்ந்த அடையாளங்கள், கச்சிதமாக ஒரே உயரத்தில் அமைந்திருக்கின்றனவாமே? காவலர்களை நோக்கிச் சுட்டவர்களும், திருப்பிச் சுட்ட காவலர்களும் அவ்வளவு நேர்த்தியாக, குறிவைத்த ஆட்கள் மீது மட்டுமே சுட முடிந்தது எப்படி?

ஒரே ஒருவரைக்கூட உயிரோடு பிடிக்க முடியவில்லையா? தகவலறிந்து செல்கிற காவலர்கள் ஒரே ஒரு சாட்சியைக் கூட வைத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது ஏன்? கொள்ளைகள் நடந்து இத்தனை நாட்களாகியும் துப்புத்துலக்குவதில் ஒரு முன்னேற்றமும் இல்லை என்ற விமர்சனங்களைத் துடைக்க நடத்தப்பட்ட தாக்குதலே இது என்று சிலர் சொல்வது ஏற்கத்தக்கதுதானா?

நள்ளிரவில்தான் தகவலே கிடைத்து அந்த வீட்டின் முன் காவலர்கள் போய் சூழ்ந்துகொண்டதாக ஆணையர் கூறுகிறார், ஆனால் இரவு 10.30 மணியளவிலேயே காவலர்கள் வந்து இறங்கிவிட்டார்கள், கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்குள் போக ஆணையிட்டார்கள் என்று அண்டை வீடுகளில் குடியிருப்போர் சொல்வது மறுக்கத்தக்கதுதானா?

இப்படியொரு பெரும்போடாகப் போட்டுவைத்தால்தான், கொள்ளையர்கள் மிரண்டுபோய் சும்மா இருப்பார்கள் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற நோக்கத்துடன் இது நடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறுவது வெறும் கற்பனைதானா?

யார் என்றே தெரியவராத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் நாள் ஊடகங்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் அளித்த பேட்டியில் கொள்ளையர்கள் இந்த இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடிந்தது எப்படி?

கொள்ளையர்களின் கதையை முடிக்க வேண்டும் என்ற, பொதுமக்களில் சிலரது சினிமாக் கதைத்தனமான எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் காவல்துறையின் வேலையா? நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று குற்றங்களை நிரூபித்துத் தண்டனை பெற்றுத்தருவதில் நம்பிக்கை இழக்கச் செய்கிற வேலையைக் காவல்துறையே செய்யலாமா?
ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்ற விமர்சனங்கள் இதனால் அடங்கிவிடுமா?
காவல்துறையின் செயலின்மை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எனில், இது காவல்துறையின் செயல்திறன் பற்றிய மரியாதையை ஏற்படுத்துமா?

மக்களின் பணத்தை (இப்படி நேரடியாகவும், அரசின் உரிமங்கள் - ஒப்பந்தங்கள் வழியில் மறைமுகமாகவும்) கொள்ளையடிக்கிற பேர்வழிகள் பரிவுக்கு உரியவர்கள் அல்ல. ஆனால், காவல்துறை என்ன சொல்கிறதோ அதை அப்படியே மக்கள் நம்பிவிட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவது சட்டத்தின் ஆட்சி எனப்படுவதற்கு உகந்ததுதானா?

தொடரும் என்கவுன்டர் கொலைகள் போலவே கேள்விகளும் தொடர்கின்றன...

Tuesday 14 February 2012

முண்ணூறு ராமாயணங்களும் மூர்க்கத் தாக்குதல்களும்














தை சொல்வது என்பதைப் பலரும் ஒரு பொழுதுபோக்குக் கலையாக மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மானுட வளர்ச்சியோடு இரண்டறக் கலந்தது கதை. ஆதித்தாத்திகள் தாத்தன்கள் காலத்திலிருந்து, நடந்ததையும் நடக்க வேண்டும் என விரும்பியதையும் கதையாகச் சொல்லிச் சொல்லி வந்ததால்தான் மனித இனம் பரிணாம மரத்தில் ஒரு கிளையாக நின்று விடாமல், வரலாறைப் படைக்கிற சமுதாய வளர்ச்சியை நிலைநாட்டியது. அப்படிக் கதை சொல்லி வந்ததில் ஒரு தலையாய கூறு, சொன்னதையே சொல்லிக்கொண்டிராமல், புதிது புதிதாய் சேர்த்துச் சொல்வதுதான். வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்றைய அரசியல், வாழ்க்கை நிலை, பொது லட்சியம் ஆகியவற்றுக்கு ஏற்ப கதையும் பரிணாம வளர்ச்சியை அடைந்து வந்திருக்கிறது. எனக்கு, பழைய கதையைச் சொல்கிறவர்களைப் பிடிக்கும்; அதிலே புதுசு புதுசாகச் சேர்த்துச் சொல்கிறவர்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

கதை சொல்லி முன்னேறிப் பாய்ந்த சமுதாயங்கள் வேகம் எப்போது தேக்கடையைத் தொடங்கின என்றால், பழைய கதைகளை மாற்றக் கூடாது, புதிதாக எதையும் சேர்க்கக்கூடாது என்று விதிக்கப்பட்டபோதுதான். அவ்வாறு விதிக்கப்பட்டதன் பின்னணியில், சமூக நிலைகளில் இனி எந்த மாற்றமும் நிகழக்கூடாது, எல்லாம் அப்படியப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் நோக்கங்களும், மதவாதக் கட்டளைகளும் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. இந்தியச் சூழலில் இதைப் பார்ப்பதென்றால், சாதிய வேறுபாடு சார்ந்த வர்ணக் கட்டமைப்பையும், பாலினப் பாகுபாடு சார்ந்த அடிமைத்தனத்தையும், இவற்றின் அடித்தளமான பொருளாதாரச் சுரண்டலையும் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசியல் இருந்தது, இருக்கிறது.

இன்று தில்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை இளங்கலை மாணவர்களுக்கான ஒரு பாட நூலிலிருந்து ஏ.கே. ராமானுஜம் எழுதிய ‘முண்ணூறு ராமாயணங்களும் ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகளும்‘ என்ற கட்டுரையின் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பல்கலைக் கழகப் பாடமுறை மன்றம் (அகடமிக் கவுன்சில்) வாக்கெடுப்பு நடத்தி அந்தக் கட்டுரையை நீக்கியதன் மூலம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் கட்டுரையாளரும் மொழியியல் வல்லுநரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான அத்திப்பட்டு கிருஷ்ணசாமி ராமானுஜத்தின் உழைப்புக்கும் வரலாற்றுப் பங்களிப்புக்கும் நினைவாஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது - இழிவான முறையில்.

2006ம் ஆண்டில் அந்தக் கட்டுரை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து இந்துத்துவக் கூடாரத்தைச் சேர்ந்த ஒரு கும்பலும், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவுமான அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபீவிபி) பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்குள் புகுந்து வன்முறைகளை அரங்கேற்றியது. அந்தக் கட்டுரை “இந்துக்களின்” மனதைப் “புண்படுத்துகிறது” எனக் கூறி அதை நீக்குவதற்கு வற்புறுத்தியது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் அதை நீக்க ஆணையிடக் கோரி வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல, அதன் ஆணைப்படி நான்கு பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு தனது அறிக்கையை அளித்தபோது, மூன்று பேர் அந்தக் கட்டுரை பாடத்திட்டத்தில் தொடரலாம் என்று கருத்துத் தெரிவித்தனர். ஒருவர் அக்கட்டுரை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்றும், எனவே அது இளங்கலை மாணவர்களுக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார். குழுவின் பெரும்பான்மை முடிவுப்படி கட்டுரை தொடர்ந்து இடம்பெறும் சூழல் அமைந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் திடீரென பல்கலைக்கழக பாடமுறை மன்றம் கூட்டப்பட்டது. வரலாறு, இலக்கியம், கணிதம், வேதியல், இயற்பியல், மானுடவியல், அரசியல் அறிவியல் என சகல துறைகளையும் சேர்ந்தவர்கள் கொண்ட மன்றம் அது. மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களில் ஆகப் பெரும்பாலோர் அந்தக் கட்டுரையைப் படித்திராதவர்கள். எதற்காகக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் வந்தவர்களிடம் கட்டுரை விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்ததைத் தெரிவித்து, அது தொடரலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒருவர் எழுந்து அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூற, அப்படியானால் சிக்கல் வேண்டாம், அதை நீக்கிவிட வேண்டியதுதான் என்று எவ்வித ஆய்வுப்பாங்கும் விவாத மனமும் இல்லாமல் எந்திர கதியாக பெரும்பாலானர்வர்கள் வாக்குப்பதிவு செய்தனர். கட்டுரையைப் படித்து அது தொடர்வதில் தவறில்லை என்று கருதிய, மன்றத்தில் சிறு எண்ணிக்கையில் இருந்தவர்கள் முறைப்படி முழுமையான விவாதம் இல்லாமல் ஓரிரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பல்கலைக் கழகத்திற்கு உள்ளே ஏற்பட்ட ஒரு பிரச்சனை இந்த முடிவினால் வெளியே வந்திருக்கிறது. கல்வியாளர்களும் ஜனநாயகப் பண்பாட்டிற்காக வாதிடுவோரும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் பல்கலைக்கழகப் பாட மன்றத்தின் இந்த முடிவினால் இந்தியாவின் மிக அடிப்படையான தன்மையின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று தங்களது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பன்முகப் பண்பாட்டுத் தளம் என்பதே அந்த அழகிய அடிப்படைத் தன்மை.

ராமானுஜம் கட்டுரையே அந்தப் பன்முகத் தளத்திலிருந்துதான் தொடங்குகிறது. அதையும் அவர் ஒரு ராமாயணக் கதையிலிருந்தே எடுத்துக் கொடுத்திருக்கிறார்:

வனவாசம், ராவண வதம், சீதையைக் காட்டுக்கு அனுப்பிய வதம் எல்லாம் முடிந்தபின் ஒருநாள் ராமனின் கைவிரல் மோதிரம் தரையில் விழுந்து பூமிக்குள் போய்விடுகிறது. அதை மீட்டு வருவதற்காக, எவ்வளவு சிறிய உருவமும் எடுக்கக்கூடிய அனுமன் மோதிரம் விழுந்த இடத்தில் ஏற்பட்டிருந்த சிறு துளை வழியாக உள்ளே போகிறான். அந்தத் துளை அவனை பாதாள உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. பாதாள உலகத்தினர் அந்தக் குரங்கைப் பிடித்து, விலங்குக் கறிப் பிரியனான தங்களது மன்னனிடம் ஒப்படைக்கின்றனர். இதனிடையே மேலே ராமனைப் பார்க்க வருகிறார் ராஜரிஷி வசிஷ்டர். ஒரு முக்கியப் பிரச்சனை குறித்துத் தனியாகப் பேச விரும்புவதாகவும், யாரும் குறுக்கே வரக்கூடாது என்றும், அப்படி யார் வந்தாலும் அவரது தலையை வெட்டிவிட வேண்டும் என்றும் வசிஷ்டர் கூறுகிறார். அதை ஏற்று ராமன், தன் தம்பி லட்சுமணனிடம் வாசலில் காவல் இருக்கச் சொல்கிறான். அப்போது அங்கே வரும் விசுவாமித்திரர், தன்னை உள்ளே அனுமதிக்காவிட்டால் நாடே அழிந்துபோகச் சபித்துவிடுவதாக மிரட்டுகிறார். நாட்டிற்காகத் தனது தலை போகட்டும் என்று கருதி அனுமதி பெற உள்ளே செல்கிறான் லட்சுமணன். விசுவாமித்திரர் வந்திருப்பதைக் கூறுகிறான். வசிஷ்டர் தான் சொல்லவந்ததைச் சொல்லி முடித்துவிட்டிருந்ததால், விசுவாமித்திரரை உள்ளே அனுமதிக்கச் சொல்கிறான் ராமன். அவனிடம் லட்சுமணன், “அண்ணா, ஊர்மக்களிடம் உங்கள் நேர்மையை நிரூபிக்க அண்ணியையே தீக்குளிக்க வைத்தவர் நீங்கள். உங்கள் பெருமைக்குக் களங்கம் ஏற்படக் கூடாது. என் தலையை வெட்டுங்கள்,” என்கிறான். “ரகசியப் பேச்சு முடிந்துவிட்டதால் அது தேவையில்லை” என்கிறான் அண்ணன். மனம் பொறுக்காத தம்பி சரயு நதிக்குச் சென்று, வெள்ளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான்.
வசிஷ்டரோடு ராமனைச் சந்திக்கும் பிரம்மன், “நீ பூமியில் மனிதனாக அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி நீ தேவருலகம் வந்துவிட வேண்டும்,” என்று கூறுகிறான். ராமனும் சரயு நதிக்குச் சென்று, லட்சுமணன் குதித்த இடத்திலேயே தானும் குதித்து மேலுலகம் செல்கிறான்.

அங்கே பாதாள உலகத்து மன்னன், அனுமனிடம் அவன் வந்த காரணத்தைக் கேட்க, அவன் ராமனின் மோதிரத்தைத் தேடி வந்ததைத் தெரிவிக்கிறான். மன்னன் சிரித்துக்கொண்டே ஒரு பெரிய தாம்பாளத்தைக் காட்டுகிறான். அதில் ஏராளமான மோதிரங்கள், அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. திகைக்கும் அனுமனிடம் மன்னன், “இதுவரை எத்தனை ராமன்கள் இருந்தார்களோ அத்தனை மோதிரங்கள் இதிலே இருக்கின்றன. ஒவ்வொரு ராமனும் மரணத்தைத் தழுவுவதற்கு முன்பாகத் தனது மோதிரத்தைக் கழற்றிப் போட்டுவிடுகிறான். அவற்றை எல்லாம் நான் சேகரித்து வைத்திருக்கிறேன்,” என்று கூறுகிறான். அனுமன் தனது ராமனின் கதையும் முடிந்துவிட்டதை உணர்ந்தவனாகத் திரும்புகிறான்...

தென்னிந்திய மொழிகளில் புழங்கும் ராமாயணங்கள் ஒன்றிலிருந்து ராமானுஜம் மேற்கோள் காட்டுகிற இந்தக் கதை எவ்வளவு அழகாக, இன்று பெரிதும் பேசப்படும் ‘மேஜிக்கல் ரியலிசம்’ வடிவத்தில், ஏகப்பட்ட ராமன் கதைகள் இருக்கின்றன என்பதைக் கூறுகிறது! வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதியது மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலுமே ராமாயணம் என்றும் ராம கதை என்றும் ராமன் - ராவணன் - சீதை - லட்சுமணன் - பரதன் - லவன் - குசன் கதைகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனம், கம்போடியம், ஜாவானீ, லாவோஸீ, சிங்களம், தாய், மலாய், திபெத் என வேறு பல நாடுகளின் மொழிகளிலும் இக்கதைகள் புழங்குகின்றன. ஏடுகளில் எழுதப்பட்டவை மட்டுமல்லாமல் வாய்மொழிக் கதைகளாகவும், நாடகங்களாகவும், சுவரோவியங்களாகவும், பாறைச் சிற்பங்களாகவும் இக்கதைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. பக்தி வளர்க்கும் புராணங்களாக மட்டுமல்லாமல், ரசனை வளர்க்கும் இலக்கியப் படைப்புகளாகவும் அவை தழைத்திருக்கின்றன. இந்து மதத்தோடு நிற்காமல் சமணம், புத்தம் ஆகிய மதங்களிலும் ராம கதை சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த உண்மையைத்தான் ராமானுஜம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கல்விச் சாலையின் வரலாற்று மாணவர்கள் இத்தனை வகைப்பாடுகள் இருப்பதைத் தெரிந்துகொள்வது எவ்வகையில் குறிப்பிட்ட மதத்தினரின் மனதைப் புண்படுத்திவிடும்? ஒரே வகையான ராமாயணத்தை மட்டுமே எல்லோரும் படிக்க வேண்டுமா?

ஏபீவிபி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளே கூட நிறைய ராமாயணங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதில்லை. ஆனாலும் அவர்கள் ராமானுஜத்தின் கட்டுரை கண்டு முகம் இறுகியது ஏன்?

“இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது,” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.என். பணிக்கர். என்ன அரசியல்? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் அல்ல. அதற்கெல்லாம் அடிப்படையான ஆழமான, அரசு என்பதே அடக்குமுறைக் கருவிதான் என்பதான அரசியல் அது. நாட்டை ஆளுகிற கோட்பாடாக இந்துத்துவம் இருக்க வேண்டும், அதிகார மதமாக இந்து மதம் இருக்க வேண்டும் என்ற அரசியல். இந்து மதம் என்றால், அதன் அடிக்கட்டுமானமான சாதியப் பாகுபாட்டைக் கட்டிக்காக்கிற அரசியல். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை நிராகரிக்கிற அரசியல்.

ராமானுஜம் எடுத்துக்காட்டியிருப்பது போல், முண்ணூறுக்கு மேற்பட்ட ராமாயணங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருப்பது மட்டுமல்ல, அவற்றின் உள்ளடக்கங்களும் மாறுபட்டிருக்கின்றன. ராமன் தெய்வப்பிறவியல்ல, நற்குணங்களும் தீய சிந்தனைகளும் கொண்டிருந்த சராசரி மனிதப் பிறவிதான் என்று பல கதைகள் காட்டுகின்றன. ராமனுக்குக் கீழ்ப்படிந்தவளாக மட்டுமல்லாமல், அவனோடு வாதிடுகிற சீதையைக் காட்டுகின்றன. அப்படியொரு கதையில், காட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கும் ராமனிடம் சீதை முதலில் கெஞ்சுகிறாள். பின்னர், “நீ கேட்ட ராமாயணங்கள் எதிலாவது ராமன் சீதையை விட்டுவிட்டுச் செல்கிறானா,” என்று மடக்குகிறாள்!

சில கதைகள் ராவணனைக் கதாநாயகனாக்கியுள்ளன. மக்களின் மதிப்பைப் பெற்ற அரசனான அவன், கட்டுப்பாடு இழந்து தனக்குச் சொந்தமல்லாத ஒரு பெண் மீது மோகம் கொண்டதால் அழிந்தான் என்று தாய்லாந்துக் கதைகள் சித்தரிக்கின்றன. அந்தக் கதைகளில் ராமன் பாதிக்கட்டத்தில்தான் வருவான்!

மாறுபடுகிற கதைகளில் உறவுகளும் கூட மாறுகின்றன. சில வட்டாரங்களின் கதைகளில் ராவணனின் மகளாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். ஒரு நாட்டுப்புறக் கதையில், பிள்ளைச் செல்வம் இல்லாத ராவணன், தவமிருந்து சிவபெருமானிடம் இருந்து பெறுகிற மாங்கனியின் சதைப் பகுதியை மனைவி மண்டோதரியிடம் தராமல், நாவடக்க முடியாதவனாகத் தானே விழுங்குகிறான். அவனுக்குக் கரு உண்டாகி, அவனது மூக்கின் வழியாக சீதை பிறக்கிறாள். அவளைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டுவிட, அங்கே வேட்டைக்கு வரும் ஜனகன் குழந்தையை வளர்க்கிறான். தன் மகள்தான் என்பது தெரியாமலே அவளை ராமனிடமிருந்து கடத்துகிறான் ராவணன்.
வேறு சில கதைகளில் ராமனும் சீதையும் அண்ணன், தங்கையாக வருகிறார்கள். ஒரு கதையில் அண்ணனும் தங்கையும் அரசாட்சியை சமமாகப் பகிர்ந்து மேற்கொண்டதாகக்கூட சொல்லப்படுகிறது.

சமணத்தில் இக்கதைகளைச் சொன்னபோது, “எதற்காக ராவணனைக் கெட்டவனாகவும் கொடிய அரக்கனாகவும் இந்த பிராமணர்கள் சித்தரிக்கிறார்கள்,” என்ற கேள்வியோடுதான் தொடங்கினார்கள். சமணப் புலவர் விமலாசுரி தனது காப்பியத்தை ‘பிரதிபுராணா’ என்றே குறிப்பிட்டார். பிரதி என்றால் எதிர் என்று பொருள். அன்றைய பிராமணியவாதிகள் சொன்ன புராணத்துக்கு மாறாக அவர் தன்னுடைய படைப்பை “எதிர்ப்புராணம்” என்று பதிவு செய்தார்.

ஆக, இன்றைய மறுவாசிப்பு முயற்சிகளுக்கு அன்றே தொடக்கப்புள்ளி வைக்கப்ட்டது என்பதை அறிய முடிகிறது. இவையெல்லாம் ராமனை நிறை குறையுள்ள மனிதர்களில் ஒருவனாக அடையாளப்படுத்துகின்றன.
வால்மீகியும் கூட தனது படைப்பை அப்படியொரு மனிதப் பிறவியாகவே சித்தரிக்க, அந்தக் கதையை தமிழுக்குக் கொண்டுவந்த கம்பன், முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற பிறவியாக, தெய்வத்தின் அவதாரமாக ராமனை உருவகப்படுத்தினார் என்பதையும் ராமானுஜம் பதிவு செய்திருக்கிறார். மாற்றுச் சமய இயக்கங்களுக்கு எதிரான பக்தி இயக்க இலக்கியங்களுள் ஒன்றாக கம்ப ராமாயணம் உருவானதில், அன்றைய சோழ ஆட்சி அரசியல் இருந்தது அல்லவா? சூத்திரச் சம்புகன் வேதம் படிக்க முயன்ற போது பிராமண வசிஷ்டரின் ஆணைப்படி அவனுடைய தலையை வெட்டியெறிந்த சத்திரிய ராமனைத் தமிழில் கொண்டுவராமல், ராமன் முடிசூடிக்கொண்டதோடு தன் காவியத்தை முடித்ததுக்கொண்டாரல்லவா கம்பன்?

ராமன் பெயரால் நிறுவுவதற்கு இந்துத்துவ சக்திகள் முயல்கிற இந்த நுட்பமான அரசியலைப் புரிந்துகொள்ள ராமானுஜம் கட்டுரை உதவுகிறது. அவர் நேரடியாகத் தனது கட்டுரையில் எங்கேயும் இந்த அரசியல் விவாதத்தை முன்வைக்கவில்லை. ஆனால் உள்ளது உள்ளபடி அவர் எடுத்துரைக்கிறபோது, அது உண்மைகளை மறைத்தாக வேண்டிய ஆதிக்க அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஆகவேதான் பல்கலைக்கழகத்திற்குள் இந்த பாசிசம். எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்று வேலி போடுகிற பார்ப்பணியம். சமுதாயத்தைச் சிந்திக்க விடாமல், அடுத்த கட்ட மாற்றத்திற்குச் செல்லவிடாமல் தடுக்கிற பழமைவாதம்.

இந்து மதக் கட்டமைப்புக்குள் ராமனை ஒரு முழு தெய்வமாகச் சித்தரிப்பதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. மத நம்பிக்கையாளர்கள் அதைத் தங்களது ஆலயங்களில், கதாகாலட்சேபங்களில், திருவிழாக்களில் திரும்பத்திரும்பச் சொல்வதற்கும் தடையில்லை. ஆனால், பல்வேறு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பல்வேறு கோணங்களையும் கற்றறிய வேண்டியவர்களை உருவாக்குகிற ஒரு கல்விச் சாலையில் அதற்கான ஒரு கட்டுரையைத் தடுப்பது, மதவெறியர்கள் செய்திடும் மனிதப் படுகொலைகளுக்குச் சமமான தாக்குதல்தான்.

“அறிவு என்பதே அடுத்தடுத்து கேள்விகளுக்கு உட்பட்டதுதான். அதுதான் அறிவின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்,” என்று வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறுவது எவ்வளவு உண்மை. அந்த உண்மையைத்தான் மதவெறி தலைக்கேறியவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் - அறிவு வளர்ச்சியை ஏற்க மறுப்பதால்.

வரலாறு நெடுக அடக்குமுறையாளர்களும் ஆதிக்கவாதிகளும் இப்படிப்பட்ட தடைக்கற்களைப் போட்டு வந்திருக்கின்றனர். அந்தக் கற்களின் இடுக்குகள் வழியாகவும், உடைத்துக்கொண்டும் புதிய கதைகள் நேற்று வரையில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் சொல்லப்படுகிறது. நாளையும் சொல்லப்படும். மானுடம் வாழும்... வளரும், எவன் தடுப்பது?

(‘கிழக்கு பதிப்பகம்’ தொடங்கியுள்ள ‘ஆழம்’ என்ற புதிய பத்திரிகையின் மாதிரி இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை இது.)

Monday 13 February 2012

காதலைக் காதலிப்போம்.............. காவல்காரர்களிடமிருந்து காப்போம்



ந்தப் பேரண்டத்தின் இயக்கம் காதலால்தான் நிர்வகிக்கப்படுகிறது. அணுத்துகள்களின் காதல்தான் அணுக்களைப் பிரசவித்தது, அணுக்களின் காதலில்தான் பொருட்கள் பிறந்தன, பொருள்களின் காதலில்தான் நட்சத்திரங்களும் கோள்களும் உருவெடுத்தன...

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் நெருங்க நெருங்க  இந்துத்துவா கூடாரம்  கூச்சல் எழுப்புவதும், அடாவடி நடவடிக்கைகளில் இறங்குவதும், வன்முறைத் தாக்குதல்கள் தொடுப்பதும் வழக்கம்தான். ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் அந்நியக் கலாச்சார ஊடுருவல் என்று கருத்துப் பிரச்சாரமாகச் செய்வார்கள். அவர்களது உதிரி அமைப்புகள் களக் கலவரங்களில் இறங்குவார்கள்.

காதலர் தினத்தன்று வரம்பு மீறினால் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று ம.பி. மாநில பஜ்ரங் தள் அறிவித்திருக்கிறது. யார் நிர்ணயித்த வரம்பு? எது வரையில் அந்த வரம்பு? ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ளலாம் என்பது வரையிலா அல்லது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளலாம் என்பது வரையிலா? கைகுலுக்கிக்கொள்ளலாம் என்பது வரையிலா அல்லது கண்ணடித்துக்கொள்ளலாம் என்பது வரையிலா? முத்தமிடுவது வரம்புக்குள் வருமா? பறக்கும் முத்தம் அனுப்பினால் கூட காற்று கறையாகிவிட்டது என்று பினாயில் தெளிப்பார்களோ?

கிட்டத்தட்ட இதே தொனியில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும் அறிவித்திருக்கிறார்கள். சிலர் சொல்லாமல் செய்வதே பெருமை என்ற நினைப்பில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடாமலே ஆயுதங்களைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். உருட்டுக்கட்டைகளும் ஈட்டிகளும் வாள்களும் மட்டுமல்ல இந்த சுயநியமின கலாச்சார காவல்காரர்களுடைய ஆயுதங்கள் - தாலி, ரட்சாபந்தன் போன்றவையும் ஆயுதங்கள்தான். காதலர் தினம் கொண்டாடப்படும் உணவகங்கள், வாழ்த்துப் பொருள் விற்கிற கடைகள் ஆகியவற்றின் மீது முதல் வகை ஆயுதங்களால் தாக்குதல் தொடுக்கப்படும். சாலையில், தெருவோரத்தில், பூங்காவில், கடற்கரையில் என எந்தப் பொது இடத்திலும் ஆணும் பெண்ணுமாய் இருவர் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தால் அங்கே இரண்டாவது வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்.

காதல் என்பது அந்நியக் கலாச்சாரமா? மனத்தளவில் ஈர்க்கப்பட்ட இருவர் காதல் வயப்படுவதும் ஒருவருக்காக இன்னொருவர் என கரம் கோர்ப்பதும் உலகில் எந்த ஒரு நாகரிகமும் தனது பண்பாடல்ல என்று கூற முடியாது. ஆனால் இவர்கள் எதற்காக இதை எதிர்க்க வேண்டும்? இயற்கையான காதல் உறவுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? ஒரே காரணம்தான்: இந்துத்துவம் என்பது எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது? சாதிப் பாகுபாட்டின் மீது. அதன் மீது தொடுக்கப்படுகிற தாக்குதலாகவே காதலைக் காண்கிறார்கள்.

இந்தியாவின் பல சமூகங்கள் நவீன வளர்ச்சிகளோடு சம்பந்தமில்லாதவர்களாகப் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் குடும்ப உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் என்ற சாதி வரப்புகள்தான் என்று சமூக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் மாற்றம் ஏற்படுவதை சூலாயுதங்களால் ஏற்கமுடியவில்லை என்பதுதான் பிரச்சனையே.

இந்துத்துவத்தின் இன்னொரு அடித்தளமாகிய பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாத்தல், சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்த மக்களோடு கலப்பு ஏற்படுவதைத் தடுத்தல் என்ற வக்கிரம் மிகுந்த நோக்கங்களும் இவர்களது மிரட்டலின் சாராம்சங்களாக இருக்கின்றன.

இதை எழுதிக்கொண்டிருக்கிறபோதே, முகநூலில் ஒரு இஸ்லாமிய நண்பர், திருச்சி நகரில் தமுமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு சுவரொட்டியை இணைத்திருக்கிறார். காதலர் தினத்தில் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது அந்தச் சுவரொட்டி. காதலர் தினக் கொண்டாட்டம் என்றாலே அதைப் படுக்கையறையோடு சம்பந்தப்படுத்துகிற வக்கிரம் எங்கிருந்து வந்தது? கற்பு என்றால் மனம் சம்பந்தப்பட்டது என்ற புதுயுகப் புரிதலும் இல்லாதவர்களாக, கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின் அதை இரு பாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற பாரதியின் பார்வையும் இல்லாதவர்களாக இவர்கள் இப்படி எச்சரித்திருப்பது ஒன்றைத்தான் உணர்த்துகிறது: காதலுக்கு எந்தவொரு மதவாதமும் எதிரிதான்.

இந்துத்துவவாதிகள் இஸ்லாமியவாதிகள் இருதரப்பாரும் காதலர் தினத்தை எதிர்ப்பதில் இன்னொரு அம்சமும் உண்டு. மதம் தொடர்பான அம்சம் அது. காதலர் தினம் யார் பெயரால் கொண்டாடப்படுகிறதோ அந்த வாலன்டைன் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் என்பது. கொடுமை என்னவென்றால், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் குடும்பத்துப் பிள்ளைகள் காதல் வயப்படுவதை வரவேற்பதில்லை என்பதுதான். மற்ற சமயங்களிலும் இதே நிலைதான்.

மதவாத அமைப்புகள் இப்படியெல்லாம் மிரட்டியிருப்பதன் பின்னணியில், யாரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க இயலாது என்று காவல்துறையினர் எச்சரித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட பொத்தாம் பொதுவாக எச்சரிக்கையைக் கண்டு,  இப்படிப்பட்டவர்கள் பின்வாங்கிவிட மாட்டார்கள். பல இடங்களில் காவல்துறையினரே கூட காதலர்களை அசிங்கப்படுத்துகிற வேலையைச் செய்ததுண்டு. பிரிக்க முயலும் பெற்றோரிடமிருந்து பாதுகாப்புக் கொடுங்கள் என்று கேட்டு வருகிற காதலர்களை, எந்தச் சாதிக்காரர்கள் என்று பார்த்து, பெற்றோருடன் பேரம் பேசி, பிரித்துவைக்கிற அக்கிரமங்களும் பல காவல்நிலையங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உண்மையிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கிற காவலர்கள் கொஞ்சம் பேர்தான்.

சமூக மாற்றத்திற்கு ஒரு வகையில் பங்களிக்கிற இளம் காதலர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்கிற கடமை, மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கிறது. முற்போக்கு சக்திகளிடமிருந்தும் ஜனநாயக இயக்கங்களிடமிருந்தும் காதலர்களுக்கு அந்த நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்திட வேண்டும்.

மனக் காதலும் இனக் கலப்பும் இயற்கையானவை என்பதை சமுதாயம் அங்கீகரிகிற நாள் வரும் வரையில் அதை உரக்கச் சொல்வதற்குக் காதலர் தினம் தேவை.