Sunday 16 December 2012

தருமபுரி சாம்பல்களும் தருமமிகு ஊடகங்களும்

தருமபுரியில் என்ன நடந்தது என்பதை விடவும் அதற்கு முன்பும் பின்பும் இந்த தர்மமிகு நாட்டில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது முக்கியம்.

ஒரு காலகட்டத்தில் இங்கே பிராமணிய எதிர்ப்பை மையமாக

வைத்து திராவிட இயக்கமாக ஒரு அரசியல் அணித் திரட்சி வேலை நடந்தது. பிற்காலத்தில் அதன் வெளிச்சத்தில் ஆட்சியதிகாரத்திற்கே வந்த வர்களது கூச்சமற்ற சமரசங்களில் விமர் சனங்கள் இருக்கலாம் - ஆனால், அப்படி யொரு இயக்கத்திற்கான தேவை இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. சமூக நீதிக் கான இட ஒதுக்கீடு, அனைத்து சாதியின ரும் அர்ச்சகராவதற்கான சட்டம், ஆலயங் களில் தமிழ் அர்ச்சனை, தேவதாசி முறை ஒழிப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பெண் களுக்கான சில பாதுகாப்புச் சட்டங்கள் இவையெல்லாம் நடைமுறையாகியிருப்ப தில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இன்று, தலித் மக்களுக்கு எதிராகப் பிற் படுத்தப்பட்டோரையும் மிகவும் பிற்படுத் தப்பட்டோரையும் - சுருக்கமாகச் சொல்வ தானால் பிராமணர் அல்லாதோரை - அரசியலாகத் திரட்டுகிற வேலை நடக் கிறது. தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிந்து பிறசாதிப் பெண் களை மயக்குகிறார்கள் என்று சொல்லி பெண்களை அவமானப்படுத்துகிற கூச்ச மற்ற வெறியூட்டல்கள் நடக்கின்றன. முந் தைய இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவை என் றால், இன்று நடப்பது வரலாற்றுச் சக்கரத் தைக் கடந்த காலத்திற்குத் திருப்புகிற ஆதிக்க சாதிய அயோக்கியத்தனம்.

முற்போக்காளர்களும் ஜனநாயகவாதி களும் கவலைப்பட வேண்டிய விசயம் - பொது எதிரிகளான ஆளும் வர்க்கத்தின ரையும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவ தற்காக ஒன்றுபட வேண்டிய உழைப்பாளி மக்களை இது கூறுபோடுகிறது. ஒரு பகுதி பாட்டாளி தனது சமூகம் யாரோலோ மிதி படுவதை விடவும், தன் காலில் மிதிபடு வதற்கு இன்னொரு சமூகம் இருப்பதில் மனநிறைவு கொள்கிற, பாட்டாளிவர்க்கக் குணத்திற்கே நேர் மாறான சிறுமைத்தனத் தைக் கெட்டிப்படுத்தும் கைங்கர்யம் இது.
கள்ளச் சிரிப்பு சிரிக்கிறான் மனு.

அந்தச் சிரிப்பு இந்தியாவின் ஊடகக் களத்திலும் ஊடுறுவி ஒலிக்கிறது, தலித் மக்கள் மீது தாக்குதல் நடக்கிற போது, ஒன்று காவல்துறையோ மற்ற அரசு எந்திரங்களோ அசைவதில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்ப தில்லை. கல்வி உள்ளிட்ட அரசுத்துறை களில் தலித்துகளுக்கான இடங்கள் நிரப்பப் படுவதில்லை. இதற்கெல்லாம் காரணம், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங் களின் உயர் அதிகார நாற்காலிகளில் தலித்து கள் கிட்டத்தட்ட அறவே இல்லை என்கிற அளவுக்கு மிகக்குறைவானவர்களே இருப் பதுதான்.

அதே நிலைமைதான் ஊடகங்களிலும். இந்தியாவின் பெரும் வர்த்தக ஊடகங் களின் செய்தித் தயாரிப்பு அறைகளில் - 1992ல் ஒரு தலித் கூட இருக்கவில்லை. இன்று 2012ல் அதே நிலை - கிட்டத்தட்ட ஒரு தலித் கூட இல்லை என்ற நிலைமை தான். இந்த ஆய்வை நடத்தியவர் - கென்னத் ஜே. கூப்பர் என்ற ஒரு அமெரிக்க-ஆப்பிரிக் கர். 2006ல் நடத்தப்பட்ட அவரது ஆய்வின் படி, இந்திய ஊடகங்களில் முடிவெடுக்கும் இடங்களில் - குறிப்பாகப் பெரும் தனியார் ஊடகங்களில். இருக்கும் 300 முக்கிய ஊடக வியலாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. பழங்குடியினரும் இல்லை. தொலைக் காட்சிகளின் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்போரில் ஒருவர் கூட தலித், பழங் குடியினர் இல்லை. இன்றைய நிலைமையில் எங்காவது ஓரிருவர் இருக்கக்கூடும்.

பிறகு எப்படி இந்த பெரிய ஊடகங் களில் தலித் மக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும்? தமிழ் சினிமாவிலும் இதே நிலை தான். எனக்குத் தெரிந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு கதாநாயக நடிகர் விக்ரம். அது பொதுவாக யாருக்கும் தெரியாது - ராமநாத புரம் மாவட்ட ஆதிக்கசாதியினரைத் தவிர. அவரது தெய்வத்திருமகன் படத்தின் பெயரை அவர்கள் எதிர்த்ததற்கு முக்கியக் காரணம் அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதே.

ஏன் - இசைஞானி இளையராஜாவை இங் குள்ள சில பெரிய பத்திரிகை நிறுவனங்கள் எப்போது அங்கீகரித்து அட்டைப்படம் போட்டார்கள் என்றால், அவர் மேல்தட்டினரின் ரசனைக்கேற்ற ஜனனீ ஜனனீ என்ற பாட்டுக்கு இசையமைத்த பிறகுதான்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஸ்பானியர்கள், அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் அந் நாட்டு ஊடகங்களில் இல்லாத நிலை உள்ளது. அதன் விளைவு, இந்த மக்கள் பற்றி இதர மக் களிடையே பரவியிருக்கும் கருத்து: இவர்கள் வெளியே பயணிப்பதே இல்லை. முறையாகச் சாப்பிடுவதில்லை. முறையான திருமண உறவு கிடையாது...

இதே போன்ற மனநிலை இங்கேயும். தங் களது பெண்ணுக்கு வேறு சாதிகளில் கூட மாப்பிள்ளை பார்க்க முன்வந்த பெற்றோர், “அந்த சாதி” மட்டும் வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். ஏன் வேண்டாம் என்று கேட்டபோது, “அவங்க திருந்தவே மாட்டாங்க,” என்றனர். எந்தவகையில அவர்கள் கெட்டுப்போயிருக்கிறார்கள், திருந்துவதற்கு, என்று நான் விடாமல் கேட்டபோது, மாப்பிள்ளை தேடும் விசயத்தை என்னோடு பேசுவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.

இந்த மனநிலையை இறுகிப்போக வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு அல்லது பங்களிப்பின்மை முக்கியப் பங்காற்றுகிறது. தலித் இயக்கங்கள் நடத்தும் ஏடுகள், தலித் பிரச் சனைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயக்க ஏடு கள் தவிர்த்து, பெரும் வர்த்தக (கார்ப்பரேட்) ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் தலித் எழுத்தாளர்கள் கிடையாது.

தில்லியின் மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகக் கல்லூரியின் (யுசிஎம்எஸ்) தலித் மாண வர்கள் 1995ல் ஒரு தொடர் போராட்டம் நடத் தினர். கல்லூரியில் பயிலும் பிற சாதி மாணவர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள், உணவகத்தில் அவர்கள் வரும் நேரத்தில் இவர்கள் சாப்பிட அனுமதிப்பதில்லை, சாதிப்பெயர் சொல்லித் திட்டுகிறார்கள் என்பது அவர்களது புகார்கள். அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோர் கலவரத்தில் இறங்கியபோது, அதை ஏதோ சத்திய ஆவேசப் போராட்டம் போல தினமும் செய்தி வெளி யிட்ட ஏடுகள், தலித் மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் பரவட்டும் என இந்த நெருப்பைப் பரப்புக என்ற தலைப்பில் தலையங்கம் எழுதிய பத் திரிகையாளர் உண்டு. அவருக்கு வாஜ்பாய் அர சில் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இட ஒதுக் கீட்டையே குழிதோண்டிப் புதைப்பதற்கான பொதுத்துறை கைகழுவல் துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது அவரிடம் ஒப்படைக் கப்பட்டது!

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முடிவு அறிவிக்கப்பட்டபோது, எருமை மாட்டின் மீது செல்கிற சிறுவனுக்கு அமைச்சர் டாக்டர் பட் டம் தருவது போன்ற கார்ட்டூன் வெளியிட் டது ஒரு பெரிய ஆங்கில நாளேடு.
தமிழகத்திலேயே கூட, சென்னையில் சட்டக்கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை தலித் மாணவர்கள் தாக்கிய நிகழ்வை (அந்த வன்முறையை நியாயப்படுத்துவதற்கில்லை என்பது வேறு விவகாரம்) நேரடி ஒளிபரப்பாகவும், மறு மறு மறு ஒளிபரப்பாகவும் பரப்பிய தமிழகப் பெருந் தொலைக்காட்சி நிறுவனங்கள், பரமக்குடி, தருமபுரி, கடலூர் உள்பட தலித் மக்கள் தாக்கப்பட்ட கொடுமை குறித்து அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லையே?

தருமபுரியில் நடந்தது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதற்கு சுயசாட்கியமாக சில தலைவர்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். பொருள் கள்தானே அழிக்கப்பட்டன, யாருடைய உட லுக்கோ உயிருக்கோ இன்னல் ஏற்படுத்த வில்லையே என்கிறார் இன்னொருவர். மேல் சாதிக்கு சமமான நிலை வர வேண்டுமானால், தங்களின் விந்து மேல் சாதிப் பெண்களின் உடலுக்குள் சென்றாக வேண்டும் என்று தலித் இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்று காதல் உறவுகளைக் கொச்சைப்படுத்தி தனது சமூகத் தினருக்கான தலைமைப்பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறார் மற்றொருவர்.

இப்படிப்பட்டவர்களை அழுத்தமாகக் கண்டிக்க எந்தப் பெரிய ஊடகம் முன்வந்தது? தீக்கதிர் எழுதியது.

உத்தப்புரம் பிரச்சனையில், சுவரை எழுப் பியவர்களின் துயரத்தைத்தான் நம் ஊடகங் கள் பெரிதுபடுத்தின என்பதை மறக்க முடி யுமா? இன்று அங்கே இரு தரப்பு மக்களும் இயல்பாக இணைந்து வாழ்கிறார்கள். இந்த இணக்கத்தை ஏற்படுத்தியது மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி யும்தான் என்று பாராட்டுகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு. ஏன் பெரிய ஊடகங்கள் ஒரு வரிச்செய்தியாகவாவது வெளியிடவில்லை?

ஊடகங்களின் இந்தத் தொடர்ச்சியான அணுகுமுறைக்குக் காரணம், அவர்களுக் குள்ளேயும் மனுவாதம் ஊறிப்போயிருக்கிறது. வர்க்க அரசியல் போலவே ஆழமான வர்ண அரசியல் என்பதை மறுக்க முடியுமா? நடுநிலை என்பது அவர்கள் போட்டுக்கொண்டிருக்கிற ஒப்பனை என்பதை மறக்க வேண்டுமா?

இதன் விளைவு என்ன?

தலித் மக்களின் அவலங்கள் வெளியே தெரியாது. அதை தீவிரவாத சக்திகள், குறுங் குழுவாத கும்பல்கள் பயன்படுத்திக் கொள் கின்றன. தலித் மக்களுக்கு எதிரான சிந்தனை கள் தொடர்கின்றன. இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கொந்தளிப்புகள் அவ்வப்போது கிளப்பிவிடப் படுகின்றன. அரசமைப்பு சாசனத்தின் சமத்து வம், சகோரத்துவம் என்ற லட்சியங்கள் எள்ள லுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமூகப் பன் முகத்தன்மை மறுக்கப்படுவதால் மேலோங்கு கிறது ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கம்.

உலக அரங்கில் குனிந்த இந்தியாவின் தலை நிமிரவே முடியாமல் போகிறது.

(‘தீக்கதிர்’ நாளேட்டின் 2012 டிசம்பர் 16 இதழுடனான ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)