Monday 30 April 2012

திருநங்கையர் மனக்குமுறலை ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’


நாடகக்களம்


டுக்கப்பட்ட மக்கள் தங்களது விடுதலைக் குரலைக் கலையாக வெளிப்படுத்தும்போது அது ரசனைக்குரியதாக மட்டும் இருப்பதில்லை, போராட்ட உணர்வைத் தூண்டுகிற படைப்பாக்கமாகவும் அமைகிறது. திருநங்கை நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து மேடையேற்றியுள்ள ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’ என்ற நாடகம் இதற்கு சாட்சியம் கூறுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் திருநங்கையர் பிரச்சனைகள் பல வடிவங்களில் முன்னுக்கு வந்துள்ளன. பொது இடங்களில் கைகளைத் தட்டிக்கொண்டு, ‘ஒரு மாதிரியாக’ நடந்து கொண்டு பிச்சை கேட்கிறவர்கள், உழைப்ப தற்கு மனமில்லாமல் உடலை விற்கிறவர்கள், சமூக ஒழுங்கிற்குக் கட்டுப்படாதவர்கள் என் றெல்லாம் அதுவரையில் திருநங்கையர்கள் பற்றி பேசப்பட்டு வந்தது. திரைப்படங்களிலும், தெருக்களிலும் ‘ஒன்பது’ என்ற எண் இவர் களைப்பற்றிய இளக்காரமான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. “நாங்களும் மனிதர் கள்தான்... எங்களுக்கும் உங்களைப்போல உணர்வுகள் உண்டு, சுயமரியாதை உண்டு,” என்ற குரல் அவர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கி இந்த 20 ஆண்டு காலத்தில் படிப்படி யாக உரத்து முழங்கி வருகிறது.

அரசு இவர்களுக் கான நலவாரியம் அமைத்திருப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவர்கள் தங்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான உரிமை, கல்விக் கூடங்களிலும்- பணித்தலங் களிலும் இவர்களுக்கு இடம் அளித்தாக வேண் டும் என்ற வலியுறுத்தல்... என்ற காட்சி மாற்றங் கள் எளிதில் நிகழ்ந்து விடவில்லை. திருநங் கையர் அமைப்புகளின் இடையறாத முயற்சி கள், இவர்களைப் புரிந்து கொண்டவர்களின் தோழமைக் கரங்கள், போராட்டக் களங்கள், அதில் ஏற்பட்ட காயங்கள் என ஆழமான பின்னணிகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் திருநங்கையர் சமமாக மதிக்கப்படுவதற்கான இன்றைய ஒரு போராட்டப் படைப்பாக வந்திருப்பதுதான் வானவில் கலைக்குழு வழங்கியுள்ள இந்த நாடகம்.

உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே பார் வையாளர்கள் மனம் நிறையும் வண்ணம் இந்த நாடகம் உருவாகியிருக்கிறது. நாடகம் தொடங்கு வதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தோல் கருவியின் தாளம் ஒவ்வொரு அடியாக ஒலிக் கத் தொடங்கி வேகம் பிடிக்கிறது. அப்போது பார்வையாளர்களிடையே இருந்து கலைஞர் கள் - அனைவரும் திருநங்கையர் - வரிசையாக மேடையில் ஏறி இரண்டு நீள கயிறுகளைக் கட்டுகிறார்கள். அந்தக் கயிறுகளில் துணிகளைத் தொங்கவிடுகிறார்கள், மேடை யைக் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி வந்து பின்புலத் திரையை நோக்கி அமர்கிறார்கள். இப்படி மேடை ஏற்பாட்டை நாடகத்தின் தொடக்க அங்கமாகவே ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேடைத் திரையில் ஓசை எதுவுமின்றி சில திரைப்படக் காட்சிகள் ஓடுகின்றன. பாடல் காட்சிகளில் திருநங்கையர்கள் எப்படியெல்லாம் கேலிப் பொரு ளாகக் காட்டப்பட்டார்கள் என்ப தைக் காட்டுகிற காட்சிகள் அவை. ஒருவர் எழுந்து “இதே காட்சிகளை இன்னும் எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்,” என்று கேட்கிறார். “ஏன் பார்த்தால் என்ன,” என்ற பதில் கேள்வி எழுகிறது... அப் படியே நாடகம் வாழ்க்கையின் உண்மை நிலைகள் பற்றிய விமர்சனமாக விரிகிறது.

“அரவாணிகள் கைது,” “ஆண் விபச்சாரிகள்,” “சிறுவனைக் கடத்திய அலிகள்...” இப்படியெல் லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் நீண்டதொரு துணியில் எழுத்துகளாக எழுதப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளின் பின்னால் மறைக் கப்படும் திருநங்கையரின் உண்மை வாழ்க்கை நிலைமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதே துணி கலைஞர்களைச் சுற்றி ஒரு விலங்குபோல பிணைத்துக் கொள்கிறது. திருநங்கையர்களைக் கிண்டல் செய்த பிரபலமான திரைப்படப் பாடல் கள் ஒலிக்க சில கலைஞர்கள் ஆடுகிறார்கள். ஊடகங்களின் திரிக்கப்பட்ட செய்திகள் இவர் களை முன்னேற விடாமல் கட்டிப்போடுவதை உணர்த்துவதாக இந்தக் காட்சி அமைகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி இவர்களிடம் வருகிறார். பெயர்களைக் கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட பெண் பெயர்களைச் சொல்ல அவரோ இவர்களை ஆண்களின் வரிசையில் பதிவு செய்கிறார். சட்டத்தில் இவர்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டதோ, இவர்கள் விரும்பினால் பெண் வரிசையில் பதிவு செய்யலாம் என இருப்பதோ அந்த அலுவலருக்குத் தெரியவில்லை. “நீங்களெல்லாம் இந்தியர்கள்... இந்தியக் குடிமக்கள்” என்று அவர் சொல்ல திருநங்கையர்கள் வெடித்துச் சிரிக் கிறார்கள். “நாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பது இப்போது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா,” என்று அவர்கள் கேட்கிறார்கள். வீட்டில் துவங்கி பொதுவெளி வரையில் தங்களைச் சிறுமைப்படுத் தும் சமுதாயத்தைப் பார்த்து  “நாங்கள் உங்களோடு தான் இருக்க விரும்புகிறோம்... ஆனால் நீங்கள்தானே எங்களை ஒதுக்குகிறீர்கள்,” என்று கேட்காமல் கேட்பதாக அந்தச் சிரிப்பொலி எழுகிறது. மக்களின் மனசாட்சியை அந்தச் சிரிப்பொலி தொட்டுவிட்டது என்பது பார்வையாளர்களிட மிருந்து எழுகிற பலத்த கரவொலியில் எதிரொலிக்கிறது.

ஏப்ரல் 15 திருநங்கையர் தினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடந்த விழாவில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே திருநங்கை வாழ்க்கை நிலைமையின் பல்வேறு படிகளில் நிற்பவர்கள். ஒரு வார கால ஒத்திகையில் பிசிறின்றி இந்த நாடகத்தை நடத்தியது அவர்களது ஈடுபாட்டை உணர்த்தியது. விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பாகக்கூட இவர்களில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலியாக திருட்டுப்பழி சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள், தமுஎகச முயற்சியால் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து நாடகத்தில் பங்கேற்றார்கள். உரிமைச் செய்திகளை வெளிப்படுத்துவதற்கு இப்படி எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

அப்படித் தாண்டுவதற்கான மன உறுதியை ஏற்படுத்தி, கலைக்குழுவாக செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை ஏற்றவர் நாடகத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துவரும் இளம் கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா. நாட கத்தை நெறியாள்கை செய்தவர் மொளகாப் பொடி புகழ் ஸ்ரீஜித் சுந்தரம். சித்திரசேனன் தாள இசை நாடகம் முழுவதும் வந்து பேசுகிறது. வின்சென்ட் பால் ஒளியமைப்பும், தமிழரசன் காட்சியமைப்பும் நாடகத்திற்கு எழில் சேர்க்கின்றன.

கோமதி, மானு, தேன்மொழி, திவ்யா, விபாசா, பிரபா, குஷ்பூ, சிந்து, ரசிகா, தேவி ஆகியோரின் ஈடுபாடு மிக்க நடிப்பு மாற்றத்திற்கான நியாய ஆதங்கத்தைப் பிரதிபலித்தது.

மாநிலம் முழுவதும் இந்த நாடகம் கொண்டு செல்லப்பட வேண்டும். அது இந்தக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, “எங்களுக்கு உங்கள் தோள் வேண்டும், தோழமை வேண்டும்” (விழாவின் எழுத்தாளர் பிரியா பாபு சொன்ன சொற்கள்) என்ற திருநங்கையரின் வேண்டு கோளை தமிழ்ச் சமுதாயம் செவிமடுக்கச் செய்வதற்கான முனைப்பாகவும் அமையும்.

(‘தீக்கதிர்’ 29.4.2012 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது நாடக அறிமுகக் கட்டுரை)

Friday 27 April 2012

“சதம்” அடித்ததற்காக பதவியா?


ச்சின் டெண்டுல்கர் நாட்டின் பெருமைக்குரிய ஒரு விளையாட்டு வீரர்தான். உலக அளவிலான போட்டிகளில் இந்திய அணி திணறிடும்போது சச்சினின் மட்டை கைகொடுக்காதா என்று எதிர்பார்த்து, அது நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்தான் நான். பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நூறாவது நூறு அடித்த அசாதாரண சாதனையை எண்ணி, ஏதோ நானே அதைச் செய்தது போலத் தலையை உயர்த்திக்கொள்கிறவன்தான் நான். 

உலகச் சாதனை செய்த கிரிக்கெட் நட்சத்திரம் என்ற ஒரு பெருமைக்காக அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி... அதை என்னால் ஏற்க முடியவில்லை. நாடாளுமன்றம் மக்களின் பிரச்சனைகளுக்காக, மக்களோடு கலந்து இயங்குகிற, மக்கள் தொண்டர்களும் தலைவர்களும் பங்கேற்க வேண்டிய இடம். மக்களவை உறுப்பினர்களை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து சச்சின் எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்ததில்லை, களம் இறங்கியதில்லை. ஒரு முறை சிவசேனை கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். மும்பை நகரிலிருந்து பிற மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என்று சிவ சேனா கூச்சலிட்டுக்கொண்டிருந்தபோது “மும்பை இந்தியர்கள் எல்லோருக்குமே சொந்தம்தான்” என்று கருத்துக் கூறினார் சச்சின். அப்போது சிவ சேனா தலைவர் பால் தாக்கரே தனது பத்திரிகையில் சச்சினைத் தாக்கி எழுதினார். நாடு முழுவதும் சச்சினுக்கு ஆதரவாகக் கைகள் உயர்ந்தன.

அதன் பின், இப்படிப்பட்ட “சர்ச்சைகளில்” இறங்காமல் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துவதில் கவனமாக இருந்தார் சச்சின். அரசியல், சமுதாயம் சார்ந்த கூர்மையான பிரச்சனைகளில் இளைய தலைமுறையினர் பலர் ஆழ்ந்த அக்கறை கொள்ளாமல், அவர்களது சிந்தனைகள் கிரிக்கெட் ஸ்கோர் போர்டுகளோடு சுருக்கப்பட்டதில் அவருக்கும் பங்கு உண்டு.

ஒரு வேளை அவர் ஏதேனும் சமுதாயப் பணிகளையும் செய்து வந்திருக்கிறார் என்றால் சொல்லுங்கள், நான் திருத்திக்கொள்கிறேன். ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை கொடுத்தார், அன்னதானம் செய்தார், மருத்துவ உதவி செய்தார், குடிசைப்பகுதி குழந்தைகளோடு கிரிக்கெட் விளையாடினார் என்பது போன்ற சேவைகளைச் சொல்லாதீர்கள்...

உலக விளையாட்டரங்கில் இந்தியாவின் பெருமிதம் சச்சின் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அதற்காக மக்கள் பிரதிநிதிகள் சபையில் இடம் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர். கோடிக்கணக்கில் அவருக்கு இந்திய அரசு பணம் பரிசளித்திருக்கிறது. இப்போதும் ‘பாரத ரத்னா’ போன்ற நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவிக்கட்டும். குடியரசுத்தலைவர், பிரதமர், எதிர்க்கட்சிகள் என அனைவரும் அவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்துப் பாராட்டிப் பெருமைப்படுத்தட்டும்.

விளையாட்டை விட்டுவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின் அவர் மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசலாம் அலலவா, விளையாட்டுத் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தலாம் அல்லவா... என்று சிலர் கேட்கலாம். அப்படியெல்லாம் ‘விளையாட’ முடியாது. விளையாட்டை விட்டுவிட்டு, அல்லது விளையாடிக்கொண்டே அப்படிப்பட்ட சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவர் வெளிப்படுத்தட்டும். மக்களின் பிரதிநிதியாகவே நாடாளுமன்றத்திற்கு வரட்டும். யார் வேண்டாம் என்கிறது?

சச்சின் மட்டுமல்லாமல் மூத்த திரைப்படக் கலைஞர் ரேகா, தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என்று செய்திகள கூறுகின்றன. இப்படிப்பட்ட கவுரவ நியமனங்களால் நாடாளுமன்றத்தின் கவுரவம் உயர்வதில்லை, மாறாக மக்களுக்காகப் போராடுகிறவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதே என் கருத்து. என் சொந்தக் கருத்து.

Monday 23 April 2012

புத்தகக் கொடி பிடிப்பது..



.
உன்னைச் சுற்றி
வாழ்க்கைப் பக்கங்களை
விரித்து வைத்திருக்கிறது
உலகப் புத்தகம்

எந்தப் புத்தகத்தையும்
பார்க்கவே நேரமில்லை
படிக்க மட்டும்
முடியவா போகிறது?

புத்தகச் சாலையில்
ஒவ்வொரு பயணத்திலும்
எல்லை நீள்கிறது
எனது சாலைக்கு.

நாங்கள் மட்டும்தான்
படிக்கப் படைக்கப்பட்டோம்
நீங்களோ விளக்கு
பிடிக்க வார்க்கப்பட்டீர், என

வாசிப்பு வயலிலும்
வரப்பாய்ச் சுற்றி
மூச்சை நெரித்தது
வர்ண நூல்.

பணத்துக்கு ஏற்ற
படிப்பை எடுத்துக்கொள்ள
கடையில் தொங்கவிட்டது
வர்க்க நூல்.

பிரித்த நூல்களை
அறுத்து மனங்களை
இணைத்து வைக்கிறது
புத்தக நூல்.

இந்த நூலை நாமும்
கையிலெடுக்காமல் இருக்கும் வரை
திரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்
அந்த இரு நூல்களும்.

பழசோ புதுசோ
புத்தகம் ஒன்றை
படித்துக்கொண்டே இரு
அதற்கொரு ஈடுதான் ஏது?

மேசைக் கணினி முதல்
கையில் அடக்கமாய்
பேசும் கணினி வரையில்
புதுசு புதுசாய் வரும் போகும்.

புத்தம் புதிதாய்
அகத்தை ஆக்குவதில்
புத்தகம்  என்றும்
நிலைத்து நிற்கும்.

எவ்வளவு தொலைவில்
எழுதியவர் இருப்பினும்
அவரின் அருகில் என்னை
அமர வைக்கிறது புத்தகம்.

அடுத்த அறையில்
இருப்பவரைக் கூட
அயல் தேசத்தவராய்
தள்ளி வைக்கிறது இணையம்.

எழுதும் கைகளுக்கு இணையம்
ஆதாரமாய்க் கை கொடுக்கும்
வாசிக்கும் கண்களுக்கு இணையம்
கண்ணாடியாய்த்  தெளிய வைக்கும்.

இணையத்தின் சேவைகளை
மறுப்பவர் இங்கே எவரேதான்?
இருப்பினும்  வீட்டில்
செல்வமாய்ச் சேர்வது புத்தகம்தான்.

இறுதியாய் ஒன்று...
புத்தகக் கொடி பிடிப்பது
என் புத்தகத்தை நீ படிக்க அல்ல
உன் புத்தகத்தை நான் படிக்க...

(உலக புத்தக தினத்தை வரவேற்று ஏப்ரல் 23 சனிக்கிழமையன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ‘கவிதை அலைகள்’ நிகழ்வில் வாசித்தளித்த எனது படைப்பு. பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க்ம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின,)

Sunday 22 April 2012

நல்லா கௌப்புறாங்கப்பா... பீதிய...


பொதுவாகவே பீதி ஒரு நல்ல வியாபாரப் பொருள். சமூகத்தில் ஏதாவது ஒரு பீதி கிளம்பிடும்போதெல்லாம் பல தரப்பினரும் பலனடைகிறார்கள்... பீதி வசப் பட்டவர்களைத் தவிர்த்து.

எல்லாக் காலத்திலுமே எங்கிருந்தாவது யாராலாவது ஏதாவது ஒரு பீதி கிளப்பி விடப் பட்டுதான் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அப்படிப் பரவிய பீதிகளில் ஒன்று கூட உண்மை நடப்பாக மாறியதில்லை. ஒரு பீதியால் ஏற்பட்ட பரபரப்பும் மனக் கலவரமும் அரவமிழந்து அடங்கி சில காலம் ஆன பிறகு இன்னொரு பீதி வீதிக்கு வந்துவிடும். ரூம் போட்டு யோசித்துக் கிளப்புவார்கள் போலும்.

மதுரை அருகில் திருமங்கலம் நகரில் குடியிருந்து பள்ளிக்கூடம் சென்றுவந்த நாட்களில் திடீரென எல்லா வீடுகளிலும் வாயிற் கூரைகளில் தும்பைப்பூ செடிகளைக் கொத்தாக, பூச்செண்டு போலச் செருகி, அதற்கடியில் கொஞ்சம் குங்குமம் வைத்தார்கள். ஊருக்குள் ‘‘ராக்காச்சி’’ வரப்போவதாகவும், காப்புச் செய்துகொள்ளாத வீடுக ளுக்குள் அவள் புகுந்து அங்கே இருக்கிறவர்களை அறைந்து விடு வாள் என்றும், அறை வாங்கியவர்கள் ரத்தம் கக்கிச் செத்துவிடுவார் கள் என்றும் யாரைக் கேட்டாலும் சொன்னார்கள்.

எங்கள் வீட்டுக்கூரையிலும் தும்பைக் கொத்து செருகப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த ரம்ஜான் கொண்டாடுகிற வீட்டிலோ, எதிர் வரிசையில் இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற வீட்டிலோ எதற்காகத் தும்பைக்கொத்து தேவைப்படவில்லை என்று கேட்கிற புத்தி அப்போது எனக்கு வரவில்லை.

பள்ளியில் கோடை விடுமுறை விட்டதும் நெல்லை மாவட்டத்தில் எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கேயும் பல வீடுகளின் கூரைகளில் தும்பைக் கொத்துகள் காய்ந்துபோய்க் காட்சிய ளித்தன. பல ஊர்களிலும் ராக்காச்சி வலம் வந்திருக்கிறாள் என்பதும், தும்பைக்கொத்துகளால் அவள் துரத்தப்பட்டிருக்கிறாள் என்பதும் தெரியவந்தது. தும்பைக் கொத்து வைக்காத வீடுகளில் ஏதாவது வில்லங்கம் நடந்ததா என்பது மட்டும் யாருக்குமே தெரியவரவில்லை.

ராக்காச்சி போன்ற கதைகள் பழைய நம்பிக்கைகள் சார்ந்த “ஓல்டு ஃபேஷன்” பீதிகள். நவீன தொழில்நுட்பம் சார்ந்த “லேட்டஸ்ட் ஃபேஷன்” பீதிகள் அவ்வப்போது இன்பச்சுற்றுலா வருவதுண்டு. விண்வெளியில் சுற்றிவந்த ஒரு செயற்கைக்கோள் தனது சுற்றுப் பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது, அது குறிப்பிட்ட நாளில் பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் விழும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று வரைபடத்தோடு செய்திகள் வந்தன. அவ்வளவுதான் குறிப் பிட்ட நாளில் காலையிலிருந்தே பலரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்துகொண்டார்கள். வீட்டு மேலேயே விழுந்தால் என்ன ஆகும் என்று அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா தெரியவில்லை.

ராக்காச்சி போல இந்த சேட்டலைட் மதச்சார்புள்ளது அல்ல என்பதால், தங்கள் ஊரை மட்டும் அதன் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு அவரவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். அது பூமியின் காற்று மண்டலத்தில் நுழைகிறபோது எரிந்துவிடும், எஞ்சிய பகுதி கடலில் விழும், அப்படியே தரையில் விழுந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று அறிவியல் இயக்கங் கள் சொன்னது, ஊடகங்கள் மற்றும் பூசை நடத்துவோரின் பரபரப்பு இரைச்சல்களைக் கடந்து மக்கள் காதுகளில் சன்னாகவே ஒலித்தது.

இந்த 2012ம் ஆண்டு தொடங்கியதே உலகளாவிய பீதி வியாபாரத்தோடுதான். மயன் காலண்டர் கணிப்புப் படி இந்த ஆண்டுடன் உலகத்தின் கதை முடியப்போகிறது என்றார்கள். இந்தியக் காலக்கணிப்பின்படி கலியுகம் தொடங்குவதாகவும், தற்போதைய உலகத்தின் அழிவுடன்தான் அது தொடங்கும் என கூறப்பட்டிருப்பதாகவும் காலத்திற்கே ஜாதகம் கணித்தார்கள்.

கலியுகத்தில் மக்கள் அவரவர் கடமையை மறந்து செயல்படுவார்கள், அத்து மீறிச் செயல்படுவார் கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதாவது, மேல் வர்ணத்தவர்க்குத் தொண்டாற்றுகிற நான்காம் வர்ணத்தில் தள்ளப்பட்டவர்களும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டவர்களும் தங்களுக் கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைகளோடு நிற்க மாட்டார்கள், பெண்கள் குடும்ப விளக்குகளாக மட்டும் பணிவிடை செய்துகொண்டிருக்க மாட்டார்கள் என்று பொருள். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயல்வது, இறைவன் வகுத்த இனிய காலகட்டத்தின் அழிவாம்! இன்று தலித் அமைப்புகள், மாதர் இயக்கங்கள் ஆகியவற்றின் உரிமைக்குரல் உரத்து ஒலிக்கிறது. கலிகாலம் தொடங்கிவிட்டது போலும்! இது ஆதிக்கக் கூட்டங்களுக்கு பீதியைத் தருவதில் வியப்பில்லைதான்.

இன்றைய வலைத்தள யுகத்தில் பீதி உற்பத்தி அமோகமாக நடக்கிறது. நியாயமான அச்ச உணர் வுக்கும், உள்நோக்கமுள்ள பிரச்சாரத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டாக வேண்டியி ருக்கிறது. எங்கேயாவது கடலோரத்தில் ஒரு பூகம்பம் என்று செய்தி வந்தால் போதும், சமூக வலைத் தளங்களில் மின்னல் வேகத்தில் அந்தத் தகவல் பரவுகிறது. கூடவே, அந்த பூகம்பத்தால் சுனாமி வரக்கூடும், சுனாமியால் ஊரே அழியலாம், அணு உலைகள் வெடிக்கும் அபாயம் என்றெல்லாம் பதற்றம்

பற்றவைக்கப்படுகிறது. அண்மையில் இந்தோனேசியா பூகம்பத்தையொட்டி வலைத் தளங்களில் கூடங்குளம் தொடர்பாக அப்படியொரு சுனாமி அலை கிளப்பிவிடப்பட்டது. அறிவிய லாளர்கள் வசைபாடலுக்கு உள்ளானார்கள். பயன்படுத்தப்பட்ட சொற்களில் எதிரொலித்தது சுனாமியால் அணு உலைக்கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையா, அப்படி ஏதாவது ஏற்பட் டால் நல்லது - கூடங்குளம் திட்ட ஆதரவாளர்களை வாயை அடக்கலாமே என்ற எதிர்பார்ப்பா என்ற பீதிதான் எனக்கு ஏற்பட்டது.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது கூட, “சென்னையில் ரத்தக்காட்டேறியா” என்ற தலைப்புடன் ஒரு மாலைப் பத்திரிகையின் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்தேன். என்கவுன்டர் சாகசங்களைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ என்ற எண்ணம் எழுந்ததில் பீதி ஏற்பட்டு, எதற்கடா வம்பு என்று அந்த எண்ணத்தை அழித்தேன்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் வள்ளுவர். நியாயமான பீதிகளும் உண்டு. எங்கே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சொதப்பல்களால் பலம்பெற்று மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமோ, அத்வானியோ மோடியோ பிரதமராகிவிடுவார்களோ  என்ற பீதி இரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது. இது போன்ற பீதிகள், அப்படிப்பட்ட துயரநிலை வந்துவிடாமல் தடுக்க மக்களிடையே இறங்கி அரசியல் பணியாற்றத் தூண்டுகிறது.

இயற்கைப் பேரிடர்களும் அதைச் சார்ந்த பாதிப்புகளும் எதிர்பாராத தருணத்தில் கொஞ்சமும் ஊகிக்க முடியாத சூழலில்தான் நிகழ்கின்றன. ஆயினும் எந்த ஒரு திடீர் நிலைமையையும் எதிர் கொள்ளும் மனத்திண்மை தேவைதான். அந்த மனத்திண்மை இப்படிப்பட்ட பீதிச் சேவைகளால் வளராது. வெறும் பதற்றம் அறிவியல் கண்ணோட்டத்துடன் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவாது.

காலங்காலமாகக் கிளப்பிவிடப்பட்டு வந்துள்ள பீதிகள் சுவையான கதைகளாகவே முடிந்திருக்கின்றன. இனி வரும் காலத்திலேனும் பழைய - புதிய ராக்காச்சிகளால் எவரையும் அச்சுறுத்த இயலாது என்ற அறிவுலகம் கட்டப்பட வேண்டும். அந்த உலகத்தில் பீதிகள் பீதி கொண்டு ஓட்டமெடுக்க வேண்டும்.