Wednesday 28 July 2010

எந்தக் கொடுமை பற்றி யார் பேசுவது?

ன்ன கொடுமையடா இது,” என்று கேட்டு தினமணி ஜூலை 27 இதழில் ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார் பாஜக தலைவர் இல. கணேசன். ஆம், அரிவாள் தீட்டுவது போல் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். மக்கள் ஒற்றுமையை வெட்டுகிற அரிவாள்தான் அந்தக் கட்டுரை.

எதைக் கொடுமை என்று சொல்கிறார்? பாஜக-வை மதவாதக் கட்சி என்று காங் கிரஸ் தலைவர்கள் சொல்லிவிட்டார் களாம். உண்மையான மதச்சார்பற்ற தன்மையைப் போற்றுவது பாஜக-தானாம். இப்படி நகைச்சுவையாகத் தொடங்கி, பத்திக்கு பத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்துக்களின் கோபத் தைக் கிளரும் கரசேவையைச் செய்தி ருக்கிறார் கணேசன்.

நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத் தில், முஸ்லிம் மக்களை தாஜா செய்ய அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முயன்ற தால், இறுதியில் அது நாட்டை வெட்டியதில் போய் முடிந்தது என்று மிகச் சாதுரியமாக வெறுப்புத் தீயை மூட்டிவிடும் உத்தியைக் கையாண்டிருக்கிறார். இந்தியா முன்னொரு காலத்தில் ஒரே ஆட்சியின் கீழ் ஒரே நாடாக இருந்தது என்றும், பின்னர் முஸ்லிம் தலை வர்களின் பிடிவாதத்தால்தான் இந்தியா-பாகிஸ்தான் என பிரிந்தது என்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்து வாக் கூட்டம் மக்கள் மனங்களில் பதிய வைப் பதற்குத் திரும்ப திரும்ப முயல்கிறது. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு, முகலாயர் ஆட்சிக்கு முன்பு துண்டு துக்காணியான சின் னஞ்சிறு ராச்சியங்கள் இந்த மண்ணில் இருந்தன. வரலாற்றின் கடைசி சில நூற் றாண்டுகளில்தான் ஒவ்வொரு ராச்சியமாக இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதில் முகலாயர், ஆங்கிலேயர் இரு ஆட்சிகளுக்குமே பங்கு உண்டு.

இந்த உண்மையை மறைத்து ஒரே நாடாக இருந்தது போலவும் அதை இஸ் லாமியர் இயக்கம் துண்டாடியது போலவும் கீறல் விழுந்த பழைய கிராமபோன் ரிக்கார்டு போல சொல்லிக்கொண்டே இருப்பதில் ஒரு தீய உள்நோக்கம் இருக்கிறது. ஒரே நாடு என்ற உணர்ச்சிப்பூர்வமான எண்ணத்தைக் கிளறிவிட்டு, இன்று அப்படி இல்லாமல் போனதற்குக் காரணம் அன்றைய இஸ்லா மியர்கள்தான் என்ற சிந்தனையைப் பதிய வைத்து, இன்றைய முஸ்லிம் மக்கள் மீது பகையுணர்வை வளர்ப்பதே அந்தத் திட்ட மிட்ட உள்நோக்கம்.

அன்றைக்கு முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டும் ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந் தும்தான் மாறினார்கள் என்ற மோசடியான தகவலையும் இந்துத்துவாக் கூட்டம் பரப்பு கிறது. அதே நோக்கம்தான் அப்போது காங் கிரஸ் இயக்கத்தில் இருந்த சுவாமி சிரத் தானந்தா என்பவர், மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதம் திருப்பும் பணியை நடத்தியதாக ஒரு செய்தியைச் செருகி யிருக்கிறார் கணேசன்.

அன்று இந்துக்களில் பலர்-குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள்-மதம் மாறியதற்கு முக்கியமான காரணம் உயர் சாதி என தங்களை வரித்துக்கொண்ட ஆதிக்கக் கூட்டத்தினரின் வரம்பில்லாத தீண்டாமைக் கொடுமைகள்தான். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று போதித்த மதங் களுக்கு அவர்கள் மாறியது ஒரு இயல்பான முனைப்பு. தாங்கள் அதுவரை நம்பி வணங்கிய கடவுளையே மாற்றிக் கொள்ளத் துணிந்தார்கள் என்றால், எந்த அளவிற்கு மனு அதர்மம் ஆட்டம் போட்டிருக்கும்!

மதம் மாறியவர்களை ஏதோ பாவம் செய்து விட்டவர்கள் போல சித்தரித்து, மறுபடியும் இந்து மதத்திற்கு மாற்றும் ஆத்திரமூட்டும் கைங்கர்யத்தை, அன்றே இவர்களது முன் னோடிகள் தொடங்கிவிட்டார்கள் என்பதை கணேசன் கட்டுரை காட்டிக் கொடுக்கிறது. ஆனால், அதிலேயும் ஒரு வரலாற்றுத் திரிபு வேலையைச் செய்கிறார். தில்லி ஜூம்மா மசூதி முன்பாக நின்று நாட்டின் விடு தலைக் காக இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்க வேண் டும் என முழக்கமிட்ட சுவாமி சிரத்தானந்தா என்பவரை ஒரு மதவெறியன் சுட்டுக்கொன் றது உண்மை.

ஆனால், கணேசன் தனது நோக் கத்திற்காக அந்த நிகழ்ச்சியையே புரட்டிக் கூறியிருப்பதில் மதப் பகைமையைத் தூண்டு வது என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவு.

வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் முயற்சி யின் ஒரு சிறு பகுதியாக இன்று முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு சில சட்டப் பூர்வ சலுகைகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அரசமைப்பு சாசனப்படி அமைக் கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை நிலை மிக வும் பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கண் டறிந்து, அவர்களுக்கான ஒரு சமூகநீதி ஏற் பாடாக கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு, நிதி உதவிகள் உள்ளிட்ட நியா யமான பரிந்துரைகளை முன்வைத்தது. அதன் நியாயத்தை உணர்ந்தே மதச்சார்பற்ற சக்திகள் வரவேற்கின்றன. இப்படிப்பட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகளை முறையாகச் செயல் படுத்த வேண்டும் என்கிற போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.

இதைத்தான் பாஜக தலைவர்களும் அவர்களது குரு பீடமாகிய ஆர்எஸ்எஸ் தலைவர்களும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனால்தான் ஏட்டிக்குப் போட்டியாக ஆதிக்கசாதி இந்துக்களுக்கும் இட ஒதுக் கீடு என்ற மந்திரத்தை உச்சரித்தபடி ஆர்ப் பாட்டங்கள் செய்கிறார்கள். கொட்டிய பிறகும் தேள் என்று புரிந்துகொள்ளாதவர் களை என்ன வென்று சொல்வது? நாட்டை வெட்டிய பிறகும் புரிந்துகொள்ளாதவர்களை என்ன செய்வது... என்று கணேசன் எழுதியிருக் கும் வரிகளின் ஒவ்வொரு சொல்லிலும் அளவற்ற மதக் குரோதம்தான் ஊறிப்போயிருக்கிறது.

சிறுபான்மை மக்களின் மதத் தேர்வை அங்கீகரிக்க மறுக்கும் அகம்பாவத்தின் உச்ச மாகவே, இந்த நாட்டில் வாழும் முஸ் லிம்களும் கிறிஸ்தவர்களும் அந்நிய நாட்டி லிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம் மவர்கள். அவர்களது பாரம்பரியமும், பண் பாடும், உடலில் ஓடக்கூடிய ரத்தமும், இந்துக் களது பாரம்பரியமும் பண்பாடும் ரத்தமும் ஒன்று, என்ற வரிகளை எழுதியிருக்கிறார். ஒரே மக்கள் என்ற ஒற்றுமை உணர்வை வலி யுறுத்தும் வரிகள் போல தெரியும். இந்தக் கானல் நீர் வரிகள் உண்மையில் சிறு பான்மை மக்களின் சொந்த மத உணர்வு களை சிறுமைப்படுத்தும் நச்சு முட்களே.

காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பின்மை என்பது, வாக்கு வங்கி நோக்கத்திற்காக எல்லா மதவாதத்தோடும் சமரசம் செய்துகொள் வதுதான். இதை இடதுசாரி இயக்கங்கள் எப் போதுமே சுட்டிக்காட்டி விமர்சித்துவந் துள்ளன. ஆனால் அதற்காக பாஜக ஒரு மதச்சார்பற்ற இயக்கம் என்று இல.க. கூச்ச மில்லாமல் எழுதுவதைப் பார்க்கும்போதுதான் இப்படிக் கேட்கத் தோன்றுகிறது: என்ன கொடுமையடா இது?

Wednesday 7 July 2010

ராவணன் பார்த்துவிட்டேன்


இயலாமையால் சில நன்மைகளும் ஏற்படுவதுண்டு என்பதற்கு நான் சினிமா பார்க்க இயலாமல் போனதையே சான்றாக்கலாம். முன்பு நான் இப்படிச் சொல்வதுண்டு: சினிமா பார்ப்பது உங்களுக்கெல்லாம் பொழுதுபோக்கு. எனக்கோ அது தொழில். சினிமா பார்ப்பதையும், பார்த்த சினிமா பற்றி எழுதுவதையும் நான் ஒரு ஈர்ப்புடனேயே செய்துவந்திருக்கிறேன்.

அடுத்தடுத்து சில புத்தகங்கள் கொண்டுவர முடிந்திருக்கிறது என்றால் சினிமா பார்ப்பதை விட்டதற்கும் அதில் முக்கியப் பங்கிருக்கிறது. சினிமா பார்ப்பதை விட்டதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. மக்கள் ரசனையோடு இணைந்ததாகவும் மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதாகவும் படங்கள் அமைய வேண்டும், புதுப் புதுக் கதைகளைச் சொல்ல வேண்டும், புதுப்புது நுட்பங்களை வழங்கவேண்டும், அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசனை வட்டத்தோடு நின்றுவிடாமல் வெகுமக்கள் தளத்திலும் உலாவ வேண்டும் என்ற சிந்தனைகளோடுதான் சினிமா விமர்சனங்களை எழுதிவந்தேன். அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. புதியவர்களின் வருகையும், இனி இப்படிப்பட்ட கதைகளைச் சொன்னால்தான் மக்கள் வரவேற்பார்கள் என்ற நிலை உருவாகியிருப்பதும் அந்த மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. நான் எழுதியதையெல்லாம் படித்துத்தான் சினிமா உலகம் திருந்தியது என்றெல்லாம் சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். ஆனால் இந்த மாற்றத்தை விரும்பி நான் எழுதிவந்தேன் என்பதென்னவோ உண்மை. எனவே என் வேலை முடிந்தது போல் ஒரு மன மயக்கம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் பார்த்து எழுதிய படம் பூ. ஒரு நாள் புத்தக வேலையில் ஈடுபடவும் மனமில்லாமல் சோர்வாக இருந்தபோது கால்போன போக்கில் சென்று பார்த்த படம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். அதன் பிறகு இதே போன்ற சோர்வுடன் இருந்தபோது அப்படியே எழுந்துபோய் பார்த்துவிட்டு வந்த படம்தான் ராவணன். சிலர் அந்தப் படம் வெளியான சூட்டோடு பார்த்துத் தங்களது கருத்தைப் பதிவு செய்துவிட்டார்கள். வேலைகளின் நெருக்கடியில் நேரம் கிடைக்காமல், இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான், திருவள்ளூர் துளசி திரையரங்கில் அன்று வந்திருந்த 47 பேர்களுடன் படத்தைப் பார்த்தேன்.

கார்ப்பரேட் சமரசம், பார்ப்பணீய தாக்கம் போன்ற சில சாடல்களுக்கு உள்ளாகக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டே இதை எழுதியிருக்கிறேன். சாடலை நிறுத்தி விவாதங்களை நடத்தினால் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். சாடுவோரும் அதற்குத் தயாராக இருந்தால் சரி. ஒற்றை வரியில் ஒன்றைச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்: படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

ஊடகங்களிலும் வலைத்தளத் தொடர்புகளிலும் நிறையவே எழுதப்பட்டுவிட்டதால் படத்தின் கதையைச் சொல்லவேண்டியதில்லை. பொதுவாக ராமாயணம் பற்றியும் ராமன் பற்றியும் கட்டப்பட்டிருக்கிற புனிதப் படிமங்களை உடைப்பதில் ஒரு வர்த்தக சினிமா இந்த அளவுக்குச் செய்திருப்பது முக்கியமானது. அறிவுத்தளத்தில் மட்டும் இயங்குவோரிடையே இது அப்படியொன்றும் புதிய சங்கதியாக இல்லாமல் போகலாம். இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்கிற வாய்ப்பில்லாத பரந்த பகுதி மக்களிடையே, ராமன் ஒரு சூழ்ச்சிக்காரன், தன்னிடம் தூதாக வந்தவனையும் போட்டுத்தள்ளத் தயங்காதவன், தன் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த மனைவியின் மீது கூச்சமே இல்லாமல் சந்தேகப்பட்டவன் என்ற சிந்தனைகளை இந்தப் படம் கொண்டுசெல்கிறது. ராமாயணத்தோடு சம்பந்தப்பட்ட படம் என்ற செய்தி பரவியிருப்பதால் இந்த மறுவாசிப்பை (இதற்கு இலக்கியத்தில் மறுவாசிப்பு என்ற பெயர் இருப்பது தெரியாமலே) மக்கள் புரிந்துகொள்கிறார்கள். புனிதப் படிமம் உடைபடுவதில் அல்லது அதில் ஒரு சிறு கீறல் விழுவதில் இந்தப் படமும் உளியைத் தட்டியிருக்கிறது.

கொடூரன், அரக்கன் என்றெல்லாம் இதிகாசத்தால் நம் மண்டைகளில் ஏற்றப்பட்டுள்ள ராவணன் இதில் வீராவாக, ஏதோவொரு ஆதிக்கத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துக் கிளம்பிய போராளியாக அடையாளப்படுத்தப்படுவது எவ்வளவு முக்கியமானது! பத்துத் தலை ராவணன் என்ற கற்பனையை, திரும்பத் திரும்ப தாக்குதல்களிலிருந்து மீண்டு எழுந்து, தன் போராட்டத்தை மீண்டும் மீண்டும் மேற்கொள்கிறவன் என்பதாகச் சித்தரித்திருப்பதில் ஒரு பகுத்தறிவுக் கண்ணோட்டம் இருக்கிறது.

சினிமா ராமனாகிய அந்த காவல்துறை அதிகாரி தேவ் தன் மனைவியின் மீது சந்தேக வார்த்தைகளை வீசியது சந்தேகத்தால் மட்டுமல்ல, நிச்சயமாக அவள் கோபித்துக்கொண்டு தன்னிடம் திரும்பி வருவாள், அவளைப் பின்பற்றி வந்து என்கவுன்ட்டர் நடத்திவிடலாம் என்ற திட்டத்துடனும்தான் என்பதைப் புரிந்துகொள்கிற அறிவுக்கூர்மையாளனாக சினிமா ராவணன் செய்யப்பட்டிருப்பதும் அசாதாரணமானது. காக்க காக்க போன்ற படங்கள் போல் இது போலிஸ் என்கவுன்ட்டர்களை வீரசாகசமாக நியாயப்படுத்தவில்லை, உயர்த்திக்கூறவில்லை.

ராவணனின் தங்கை சூர்ப்பனகை காமமோகத்துடன் ராமனுடன் உறவுகொள்ள விரும்பினாள், அதனாலேயே அவளது மூக்கை லட்சுமணன் அறுத்து அனுப்பினான் என்பது ராமாயணம். இதில் வீரா சகோதரர்களின் தங்கை, காவல்துறையினரால் கடத்தப்படுகிறாள், வீரா எங்கே இருக்கிறான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறாள், அவள் மறுக்கிறபோது பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறாள். காவல்துறையினரை ஏம்பா இப்படி செஞ்சீங்க என்று கூட கேட்காத உத்தமன்தான் இப்படத்தின் ராமனாகிய தேவ். தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறையினரும் வனத்துறையினரும் பழங்குடி மக்கள் மீது எவ்வளவு வக்கிரமான தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற நுட்பமான வெளிப்பாடுதானே இது? வாச்சாத்தி நம் கண் முன் தெரிகிறதே!

அனுமனை இதில் வேடிக்கையான ஒரு வன உழியராகக் காட்டியிருப்பது போன்ற ரசிக்கத்தக்க சில அம்சங்களும் உள்ளன.

காவல்துறை அதிகாரியைப் பழிவாங்குவதற்காகக் கடத்திவந்த பெண்ணின் அழகில் வீராவுக்குக் கொஞ்சம் கொஞ்மாக ஏற்படுகிற ஈடுபாட்டில் பாலியல் ஈர்ப்பு தொடர்பான உளவியல் கூறு சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயுதந்தாங்கிய போராளிகளானாலும், மக்களைத் திரட்டும் இயக்கத்தில் ஈடுபடும் போராளிகளானாலும் தாண்டியாக வேண்டிய கூறாக பாலியல் இயற்கையுணர்வு இருப்பதை மறுக்க முடியுமா? அப்படித் தாண்ட முடியாமல் தவிக்கிறவனை சகாக்கள் விமர்சிப்பதும் சரியாகவே வந்திருக்கிறது.

படத்தில் முக்கியமான குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. அந்தப் பழங்குடி மக்களுக்கு எதிராகக் காவல்துறையினர் இப்படிக் கொலைவெறியோடு அலைவது ஏன்? காவல்துறையினர் மீது அந்த வனக் கிராமத்தினர் அவ்வளவு அவ்வளவு ஆத்திரம் கொண்டிருப்பது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் படத்தில் தெளிவான பதில்கள் இல்லை. இதனால், என்னதான் இருந்தாலும் இன்னொருத்தனின் மனைவியைக் கடத்தி வந்த அநியாயத்தைச் செய்தவனாகிறான் வீரா-ராவணன்.

வனப்பகுதிகளில் நாட்டின் ஆளும் வர்க்கங்களின் சுரண்டலுக்குத் தோதாக நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் அந்த மக்கள் போராடுகிறார்கள்; அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே ஆயுதப்படைகளை அரசாங்கம் வனங்களுக்குள் அனுப்புகிறது. வனங்கள் அந்த மக்களின் சொந்த இடங்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இருந்துவந்துள்ளன. அந்த உரிமையை மறுத்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டு உள்நாட்டு-அயல்நாட்டு முதலாளிகளிடம் வன நிலங்களைத் தாரைவார்க்க அரசு நிர்வாகம் கூச்சநாச்சமின்றி முயல்கிறது. பழங்குடி மக்களிடையேயிருந்து புறப்படும் படித்த இளைஞர்கள் இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகிறபோது, இடதுசாரி இயக்கங்களின் வழிகாட்டலின்றி இளம்பருவ சாகசமாக ஆயுதங்களை ஏந்துதல், ஆள் கடத்தல், குண்டு வைத்தல் போன்ற தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதையே சாக்கிட்டு காவல்துறையின் வன்முறைத் தலையீடு அதிகரிக்கப்படுகிறது. ஆரம்ப ஆக்கிரமிப்பு நோக்கம் இன்னும் வசதியான முறையில் நிறைவேற்றிக்கொள்ளப்படுகிறது.

இதையெல்லாம் படம் காட்சியாகவும் வெளிப்படுத்தவில்லை, ராவணன் வாய் மூலமாகவும் சொல்லவுமில்லை. பகல் நிலவு படத்தில் ஒரு கடத்தல் தாதா தன் சுயநலத்திற்காகப் பள்ளிக்கூடம் நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என்று சமூக சேவைகள் செய்கிற போலித்தனத்தை வெளிப்படுத்தினார் இயக்குநர் மணிரத்னம். அது அவருடைய முதல் படம். பின்னர் வந்த நாயகன், பாரதக் கதையிலிருந்து உருவிப்போட்ட தளபதி ஆகிய படங்களில் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காகவே தாதா வேலையில் ஈடுபடும் நாயகன்களை உலாவவிட்டார். குரு படம் சந்தை மோசடிகளை காந்தியின் போராட்டத்தோடு ஒப்பிட்டு அம்பானிகளுக்கு வக்காலத்து வாங்கியது. அந்த அளவுக்குப் போன இயக்குநர், இந்தப் படத்தின் கார்ப்பரேட் சுரண்டல் வேட்டைகளையும் அதற்குத் துணையாக அரசாங்கம் முடுக்கிவிடும் காவல் வேட்டைகளையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தத் துணியவில்லை என்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஏற்கெனவே செய்தி வெளிச்சம் பாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டவர்கள் வேண்டுமானால் அவரவர் கோணத்தில் மலைவாழ் மக்கள் - காவல்துறை மோதலைச் சித்தரித்துக்கொள்ளலாம்.

இந்த உண்மைகள் தொட்டுக்காட்டப்படாததால் வீரா சகோதரர்களின் கோபாவேசம், தங்களுடைய தங்கைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காகத் தனிப்பட்ட முறையிலு பழிவாங்குவதற்காகத்தான் என்பதாகவும் குறுகிவிடுகிறது.

சீதையாக, அதாவது தேவ் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் மார்புப் பிளவைக் காட்டும் வகையில் ஜாக்கெட்டைக் கீழிறக்கிக் காட்டும் காட்சிகள் மகாமட்டமான ரசனை. தமிழக/இந்திய திரைப்பட ரசிகர்களை மலிவுபடுத்தும் ரசனை. தமிழ் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து விலகிய ஒற்றைச் சொல் உரையாடல்கள், அதுவும் தெளிவற்ற ஒலிப்பதிவு, வீரா விக்ரம் சில நேரம் பிதாமகன் விக்ரம் போல் நடந்துகொள்வது, மலைவாழ் மக்கள் திருமண விழாவில் பட்டுப்புடவை - பட்டுவேட்டியோடு நடனம் (ஒருவேளை இது ஒரு பண்பாட்டு ஊடுறுவலின் சித்தரிப்போ?)... என்பன போன்ற சில ஒட்டாமைகள் படம் நெடுக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் மீறி - ராமப் பொய்மையை, ராவண நியாயத்தை இந்த அளவில் சொன்ன வகையில் - முதலில் சொன்னது போல் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. வர்த்தப சினிமாவின் வரப்புகளுக்கு உட்பட்டு, அதுவும் இது போன்ற மெகா தயாரிப்பு நிர்ப்பந்தங்களுக்குள், இதைச் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கதே. இது போன்ற முயற்சிகள் தொடருமானால், நாளைய இன்னொரு மறுவாசிப்பு முயற்சியில் சம்புகன் தலையை வெட்டியெறிந்த ராமனுடைய வாளின் ரத்ததாகம் இன்றும் இடஒதுக்கீடு எதிர்ப்பாகத் தொடர்வதைக் காட்டுகிற படைப்புகள் வரலாம். வரட்டும்.

Tuesday 6 July 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - வெற்றியா தோல்வியா?


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செய்தியாளராகவும் ஈடுபாட்டாளராகவும் பங்கேற்ற அனுபவங்களும் உணர்வுகளும் முக்கியமானவை. இந்த மாநாட்டை உலகத் தமிழ் மாநாட்டு நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்றாலும், இப்படியொரு மாநாடு தேவையா என்ற எதிர்ப்புகள் கிளம்பின என்றாலும் பெரும்பகுதி மக்கள் இந்த மாநாட்டை அங்கீகரித்தார்கள், இதன் தேவையை உணர்ந்து வரவேற்றார்கள் என்ற உண்மை ஓங்கி நிற்கிறது.

எங்கும் ஒரே உருவம்

இந்த மாநாடு ஆளுங்கட்சியினரின் கொண்டாட்டமாகவோ, தலைவர்களுக்குப் பட்டம் சூட்டுகிற விழாவாகவோ முடிந்துவிடக்கூடாது என்று தொடக்கத்திலிருந்தே, தமிழ்-தமிழர் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்கள் வலியுறுத்திவந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி போன்ற அரசியல் இயக்கங்களும், தமுஎகச போன்ற பண்பாட்டு அமைப்புகளும் தனிப்பட்ட ஆர்வலர்களும் இதை வலியுறுத்தினார்கள். மாநாடு நடைபெற்ற கோவை நகரைப் பொறுத்தவரையில் கட்சிக்கொடிகளோ கட்டவுட்டுகளோ கண்ணை உறுத்தவில்லை, எங்கும் திருவள்ளுவர் உருவமே உயர்ந்து நின்றது.

மாநாட்டு நிகழ்வுகளுக்கு நாள்தோறும் வந்து நீண்ட வரிசைகளில் பொறுமையாகக் காத்திருந்தவர்களில் 80 விழுக்காட்டினர் கட்சி சாராதவர்கள். அவர்களில் பலர் கணினி இயக்கம் தொடர்பான தமிழ்ச்சொற்கள் முதல், சிந்து வெளி நாகரிகம் வரை உள்ளிட்ட கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்த தகவல்களை மாணவர்களும் மற்றவர்களும் ஆர்வத்துடன் குறிப்பெடுத்தார்கள். அவர்களுடன் பேசியபோது, தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசியதிலிருந்து விலகி தமிழிலேயே உரையாடுவதை இதுவரை கேலியாக நினைத்தது குறித்த வெட்க உணர்வை வெளிப்படுத்தினார்கள். தமிழில் பேசுவதிலும் எழுதுவதிலும் உள்ள ஒரு இன்பத்தை உணர முடிவதாகவும் இனி இதையே தொடர விரும்புவதாகவும் கூறினார்கள். குறிப்பாகக் குழந்தைகள் அப்படிக் கூறியது மாநாட்டின் ஒரு முக்கியமான வெற்றி என்றுதான் கூறவேண்டும். இந்த உணர்வு வளருமானால் இன்னும் பலகோடி செலவிட்டாலும் தகும்.

மாநாடு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் என பொது அரங்குகளாக நடந்தது ஒரு பிரிவு. ஆய்வு அமர்வுகள், பொழிவரங்குகள் என ஆய்வாளர்களுக்காக நடைபெற்றது இன்னொரு பிரிவு. பொது நிகழ்வுக் கருத்தரங்குகளிலும் கவியரங்குகளிலும் பட்டிமன்றங்களிலும் குவிக்கப்பட்ட புகழ்ச்சி மாலைகள், வெளியே கட்சிக்கொடிகளும் கட்டவுட்டுகளும் இல்லாததை ஈடு செய்வதாக இருந்தன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கருத்தரங்கிலும் இது வெளிப்பட்டபோது அதற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் குறுக்கிட்டு "எனக்கான பாராட்டரங்கமாக இதை மாற்றிவிடவேண்டாம். தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உங்கள் மேலான ஆலோசனைகளைக் கூறுங்கள்," என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகும் பாராட்டுப் போட்டி தொடர்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து. ராஜா இருவரது உரைகள் மட்டுமே தனிமனித வழிபாட்டைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைச் சொல்வதாக இருந்தன.

அலசிய ஆய்வறிக்கைகள்

இதற்கு நேர்மாறாக ஆய்வரங்குகள் நடந்தன. கோவை சிறு தொழில்கள் மேம்பாட்டு சங்க (கொடீசியா) வளாகத்தில் குளிரூட்டப்பட்ட சிறு சிறு அரங்குகள் இதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தன. ஆய்வாளர்களின் உரைகளையும் நோக்கர்களின் வினாக்களையும் விளக்கங்களையும் ஒளி/ஒலிப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இந்த உரைகள் அப்படியே காணாமல் போய்விடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. இந்த அரங்குகளிலும் ஒரு சிலர் எதற்கும் இருக்கட்டும் என்று முதல்வருக்குப் பாராட்டு மாலை சூட்டினார்கள் என்றாலும் பொது அரங்குகளோடு ஒப்பிடுகையில் ஆய்வுப் பொருண்மைகளே மிகுதியாக படைத்தளிக்கப்பட்டன.

ஒரு அரங்கத்தில் நோக்கர்களில் ஒருவராகப் பங்கேற்ற ஒருவர், ஆய்வுரையின் மீது வினா எழுப்புகையில் தானும் முதலமைச்சரின் சாதியைச் சேர்ந்தவர்தான் என்று கூற முற்பட்டபோது அரங்கத் தலைவர் முதல் மற்ற நோக்கர்கள் வரையில் இப்படி சாதியால் அடையாளப்படுத்த முயல வேண்டாம் என்று அவரைத் தடுத்தனர்.

கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவரும் உண்மைகள், பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் வரலாறுகள், மற்ற மொழிகளோடு தமிழுக்கு உள்ள உறவுகள், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழாக்கம் செய்வதில் உள்ள மொழிக்கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள், சமயம் சார்ந்த படைப்புகளில் தமிழின் இடம், அறிவியல் துறையில் தொன்மைக்காலம் முதல் இன்று வரையில் தமிழின் பங்களிப்பு, பண்பாட்டுத் தளத்தில் தமிழர் வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊடகங்களின் பங்களிப்பு, நாடகம் திரைப்படம் உள்ளிட்ட கலைத்துறை நிகழ்வுகள் என பல்வேறு கோணங்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.

இன்றைய திரைப்படப் பாடல்களைப் பற்றிய கட்டுரையை முன்வைத்த ஒருவர், பெண்கள் கணவன்மார்களின் பெயர்களைச் சொல்லக்கூடாது என தொல்காப்பியம் இலக்கணம் வகுத்திருப்பதையும் இன்றைய பாடல்கள் காதலனை அல்லது கணவனைப் பெண்கள் நீ, வா, போ என்றும் வாடா, போடா என்றும் சொல்வதாக அமைகின்றனவே என்று கூறி அதை ஒரு பண்பாட்டுச் சிதைவாக சித்ததிரித்தார். பார்வையாளர்கள் தரப்பிலிருந்து பெண்கள் இன்று பொது இடங்களுக்கு வருவதும் கணவனுடன் இவ்வாறு இயல்பாகக் கலந்துரையாடுவதும் ஜனநாயக வளர்ச்சிதானே என்று ஒருவர் கேட்க அவையினர் கரவொலி எழுப்பி அதை அங்கீகரித்தனர்.

உலக மயமாக்கல் சூழலில் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த பொழிவரங்கம் புதிய சிந்தனைகளைக் கிளறக்கூடியதாக அமைந்தது. சமயத் தமிழ் குறித்த ஒரு அரங்கு ஆன்மீகப் பணியாற்றிக்கொண்டே சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியவர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தது. இன்னொரு அரங்கில், தமிழகத்தில் சாதிப் பிரிவுகள் உருவானதன் பின்னணியையும், ஆரிய வருகைக்கும் முன்பே வர்ணப்பிரிவுக்கான கூறுகள் இருந்ததையும் ஒரு ஆய்வுரை சுட்டிக்காட்டியது.

இணைந்துகொண்ட இணைய மாநாடு

இந்த மாநாட்டோடு உலகத் தமிழ் இணைய ஒன்பதாவது மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு அது வளாகத்தின் இன்னொரு அரங்கில் நடைபெற்றது. கணினித் தொழில்நுட்பத்தில் தமிழ் பயன்பாடு, தமிழுக்கேற்ப கணினிச் செயல்பாடு என பல்வேறு கோணங்களில் ஆய்வறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கணினி வழி மொழிபெயர்ப்பு எந்திரம், செல்பேசியில் தமிழ் எழுத்துரு இல்லாமலே திருக்குறளைத் தமிழில் அனுப்புதல், தற்போதுள்ள மாறுபட்ட எழுத்துருக் குறியீடுகளுக்கு மாறாக ஆங்கிலம் போல் எங்கும் எவரும் பயன்படுத்தத்தக்க ஒருகுறி (யூனிகோட்) முறை என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த இணைய மாநாட்டின் நிறைவுவிழா நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத் துறைச் செயலர் ஒரு தகவலைத் தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இனி ஒருகுறி எழுத்துருக் குறியீட்டை மட்டுமே பயன்படுத்துவதற்கான ஆணையில் முதலமைச்சர் கையெழுத்திட்டுவிட்டார் என்ற தகவல்தான் அது. மாறுபட்ட குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்ததால் ஒரு அலுவலகத்தின் ஆவணத்தை இன்னொரு அலுவலகத்தில் பெற முடியாத நிலை இருக்கிறது. பொதுமக்களும் அந்த ஆவணங்களைப் பயன்படுத்த இயலாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற இந்த வரவேற்கத்தக்க அறிவிப்பு பின்னர் முறைப்படி அரசாணையாகவே வெளியானது.

விருந்தோம்பல்

ஆய்வாளர்கள், நோக்கர்கள் முதலியோருக்கான தங்கும் வசதி, உணவு ஏற்பாடு உள்ளிட்ட ஏற்பாடுகள் தமிழர் விருந்தோம்பல் மரபை உயர்த்திப் பிடிப்பதாக இருந்தன. பொதுமக்களுக்கும் மானிய விலையில் தரமான உணவு பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களும் சங்க இலக்கிய நூல்களும் மலிவு விலையில் இந்த மாநாட்டையொட்டியேனும் மக்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கலாமே என்ற எண்ணமும் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வந்து சென்ற இடமானாலும் தூய்மையாகப் பராமரித்த துப்புரவுப் பணி, அவ்வளவு பெரிய கூட்டத்தில் போக்குவரத்து நெருக்கடியோ வேறு பிரச்சனைகளோ ஏற்படாமல் கவனித்துக்கொண்ட காவல்துறையின் பணி என ஒவ்வொன்றும் பாராட்டத்தக்கதாக இருந்தது. சரியான வழிகாட்டலுடன் அரசு எந்திரம் முடுக்கப்படுமானால் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியும் என்று எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

ஊடகங்களின் செய்தியாளர்களும் ஒளிப்பதிவுக் குழுவினரும் எந்த அரங்கிற்கும் சென்று வருவதற்கான அனுமதி அட்டைகள், உடனுக்குடன் செய்திகளை அனுப்புவதற்குத் தகுந்தாற்போல மாநாட்டு அரங்கிற்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த ஊடக மையம், அங்கே நிறுவப்பட்டிருந்த சுமார் 150 கணினிகள், அனைத்துக் கணினிகளுக்கும் இணையத் தொடர்பு, அந்தத் தொடர்புகளில் சிறு சிக்கலும் வராமலிருப்பதை உறுதிப்படுத்திய பிஎஸ்என்எல் ஊழியர் குழு, கணினிகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனுக்குடன் சீர்ப்படுத்திய பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர் குழு, செய்தியாளர்கள் தங்கியிருந்த பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி விடுதியிலும் கணினி ஏற்பாடுகள், உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண் கல்லூரியின் சமையல் கலைப் பயிற்சி மாணவர்கள் என முணுமுணுப்புக்கே இடமில்லாமல் ஆக்கியிருந்தார்கள். கருத்து சார்ந்த, அவரவர் கொள்கை நிலைபாடு சார்ந்த விமர்சனக் குரல்கள் அவ்வப்போது எழுந்தனவேயன்றி ஏற்பாடுகள் பற்றிய புகார்கள் ஊடகக்காரர்களிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை.

நிறைவாய் நடந்த விழா...

எதிர்பார்ப்புகளோடு ஜூன் 27 அன்று மாநாட்டு நிறைவுவிழா நடைபெற்றது. நிறைவுரையாற்றிய முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சில முக்கியத் தீர்மானங்களையும் முன்மொழிந்தார். இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென ஒரு தீர்மானம் கேட்டுக்கொண்டது. மைய ஆட்சியில் அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவதற்குத் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்டமாக செம்மொழியான தமிழை மைய ஆட்சிமொழியாக்க வேண்டுமென்பது மற்றொரு தீர்மானம். உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்க ஒரு தீர்மானம் கோருகிறது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக-நிர்வாக மொழியாகத் தமிழை ஆக்குவதற்கு அலுவலர்களும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்கக் கோரியது மாநாடு. தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க உரிய சட்டம் இயற்றப்படும் என்பது ஒரு முக்கியமான அறிவிப்பு. சிதறிக்கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைத்தல், திராவிடர் மொழி - பண்பாடு - வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைத்தல், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக்காப்பகம் ஏற்படுத்துதல் ஆகிய அறிவுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழின் சிறந்த படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கும், அறிவியல் திறனை வளர்க்கத் தேவையான புத்தகங்களைப் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டுவருவதற்கும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் சிறப்புக்குரியது. தமிழ் வளர்ச்சிக்கென 100 கோடி ரூபாயில் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும் என்பதும் தலையாயது.

மார்க்சிஸ்ட் கட்சியும், தமுஎகச போன்ற பண்பாட்டு அமைப்புகளும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கைகளில் சில இவ்வாறு அறிவிப்புகளாகியிருப்பது தொடர்ச்சியான போராட்ட இயக்கங்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்றே கூறலாம். மாநாட்டைப் புறக்கணிக்காமல் விமர்சனத்தோடும் மாற்று ஆலோசனைகளோடும் பங்கேற்பது என்ற அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறலாம்.

தொடரவேண்டிய போராட்டம்

நிறைவுவிழாவுக்கு மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மாநாட்டு வெற்றிக்கு உதவிய அமைச்சர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உயர்கல்வியில் தமிழ் வழிப் பயிற்சிகள் தொடங்கப்படுவது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லையே என்ற என் கேள்விக்கு அவர், நடப்பு ஆண்டில் பொறியியல் கல்லூரிகளிலும், எதிர்காலத்தில் மற்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார். தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு என்ற சட்டம் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படுமா என்று கேட்டபோது, அதற்கு வாய்ப்பு இருப்பதாகக்கூறினார். மைய ஆட்சியில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சிமொழியாக்க திமுக சார்பிலேயே நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் கருத்து ஏற்கப்படும், என்றார்.

நிறைவு விழாவில் பங்கேற்ற மைய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் இருவருமே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை மைய ஆட்சி மொழிகளாக அறிவிப்பது குறித்தோ, மைய நாடாளுமன்றத்தில் பேசப்படும் மொழிகளாக்குவது குறித்தோ, மைய நிதி ஒதுக்கீடுகள் குறித்தோ ஒப்புக்குக்கூட எதுவும் சொல்லவில்லை, அது பற்றிய அரசியல் கேள்வியை நான் எழுப்பினேன். அதற்கு முதலமைச்சர், "அவர்கள் சொல்லாததற்குக் காரணம் நான்தான் கடைசியாகப் பேசினேன் என்பதால் இருக்கலாம்," என்று சொல்லிச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் மைய அரசு இதில் வார்த்தையைக் கொடுக்கத் தயாராக இல்லை என்ற விமர்சனமும் இருந்தது, அதே நேரத்தில் திமுக-வும் அங்கம் வகிக்கிற மைய ஆட்சிக் கூட்டணியின் தலைமைக்கட்சி அமைச்சர்களை எப்படிக் குறைகூறுவது என்ற நழுவலும் வெளிப்பட்டது.

இருமொழித் திட்டம், அதை மக்கள் ஏற்கும் வரையில் மும்மொழித்திட்டம் என்பது போன்ற அந்நாளைய மயக்க நிலைபாடுகளிலிருந்து மைய அரசு அவ்வளவு சீக்கிரம் தெளிந்துவிடாது என்பது தெளிவு. தமிழகப் பள்ளிகளில் இந்தித் திணிப்பைத் தடுக்க முடிந்தாலும் அதன் இடத்தில் தமிழைப் பயிற்று மொழியாக நிலைநாட்டாமல் ஆங்கிலவழிப் பள்ளிகள் வதவதவென்று பரவியதில் திமுக ஆட்சிக்கும் பங்கிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வியே சரியானது என்ற கோட்பாட்டு மயக்கம் திராவிட இயக்கத்திற்கே இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆங்கிலவழி தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்குவதில் நல்ல வசூல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது என்கிற விவகாரமெல்லாம் கூட இருக்கின்றன. தமிழ் தொடர்பாக உணர்ச்சிகள் கிளப்பிவிடப்பட்டனவேயன்றி, அறிவியல்பூர்வ கண்ணோட்டங்கள் வளர்க்கப்படவில்லை என்ற உண்மை பெரும் பாறையாக முன்னால் நிற்கிறது. மைய ஆட்சியிலும் அமர்வதில் செய்துகொண்ட சமரசங்களுக்காக மைய ஆட்சியிலும் நாடாளுமன்றத்திலும், மத்திய-மாநில தொடர்புகளிலும், உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை வலியுறுத்தத் தவறிய பின்னணிகளும் உள்ளன. எல்லாவற்றையும் விட, உலகமயமாக்கல்/தனியார்மயமாக்கல்/தாராளமயமாக்கல் கொள்கைகளின் படுமோசமான விளைவாக எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தின் காரணமாக தமிழ்வழிக்கல்வி குறித்த அவநம்பிக்கை மக்களிடையே பரவியிருக்கிறது; இந்த வர்த்தக ஆக்கிரமிப்புகள் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்குமே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. இதற்கெல்லாம் உடன்பட்ட திமுக ஆட்சி இப்போது எந்த அளவுக்கு மாற்றுத் திசைக்கு மாறும் என்ற கேள்வி பெரிதாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் வாக்குவங்கி அரசியல் நோக்கம், நேரு மாடல் மொழிக்கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற மயக்கம், இந்தப் பொருளாதாரக் கொள்கைகளைடச் செயல்படுத்துவதில் ஒரு மூர்க்கம்... இவையெல்லாம் எப்படி மாறும் என்ற கேள்வியோடும் இதை இணைத்துக்கொள்ளலாம்.

நிறைவு விழா அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் அத்துடன் நிறைவடைந்து ஓய்வதற்கில்லை; அடிப்படையான மாற்றங்களுக்கான போராட்டங்கள் தொடரவேண்டியிருக்கிறது. மக்கள் அமைப்புகளுக்கு நிறையவே பணிகள் இருக்கின்றன.