Sunday 20 September 2009

நாடக விமர்சனம்


ஐபிஎல் குடும்பம்
புராண தெய்வங்கள் நடப்புக்கால பூலோகத்துக்கு வந்து சிக்கல்களில் மாட்டுகிற கற் பனைகள் அவ்வப்போது மேடையேறி யிருக்கின்றன. மனிதர்கள் மேலோகம் சென்று அங்கே சிக்கல்களை உண்டுபண்ணுகிற கதை களும் புதிதல்ல. யுனைட்டட் விசுவல்° குழுவினரின் இந்த நாடகத்தில் ஒரு மானுடன் தவறாக எமனின் தர்பாருக்குக் கொண்டு வரப்படுவது பழசு; அவன் தனது மனிதநேயக் கேள்வி களால் தெய்வத்தையே திணறவைப்பது புதுசு.

ரயில் பயணத்தில் சுந்தரமூர்த்தி என்ற ஒரு ஊனமுற்ற பயணிக்காக தனது கீழ்ப்படுக்கையை விட்டுக்கொடுத்து மேல்படுக்கைக்கு மாறுகிறான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுந்தர மூர்த்தி. “விதிப்படி” நடக்கும் விபத்தில் அந்த ஊனமுற்றவர் “மேலே” வர வேண்டும். பெயர்க் குழப்பத்தில் இவனைக் கொண்டுவந்துவிடுகிறான் சித்ரகுப்தன். பூமியில் இருக்கிற ஒவ்வொருவரின் விதியும் எப்படி நடக்க வேண்டும், எப்போது முடியவேண்டும் என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போதே பகவான் தீர்மானித்து அழுத்தமாக எழுதி விடுகிறான் என்ற போதனையையே இந்தக் கற்பனை விசாரணைக்கு உட்படுத்துகிறது.

தவறுக்கு வருந்தும் கடவுள்களோடு பேசி, இனி தவறில்லாமல் நடக்க தேவலோகத்தையே கணினிமயமாக்குகிறான் சுந்தரமூர்த்தி. ‘காலன் சென்டர்’ என்று பெயரையே மாற்றி விட்டு, எமனை அதற்கு டம்மி தலைவராக்கு கிறான். தானே தலைமைச் செயல் அலுவலராகிறான். பதவிப் பங்கீடு வருகிறபோது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியப் பொறுப்புகளை வழங்குகிறான். இது அளவுக்கு மேல் போக பிரச்சனை நீதிமன்றம் செல்கிறது, தர்மன் நீதிபதியாக அமர்கிறான். தர்மனின் முன்னிலையில் மானுடப் பிரதிநிதி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தெய்வம் வாயடைத்துப் போவது உச்சம்.

“எல்லோரையும் ஒரே மாதிரியாகப் படைக்க வேண்டிய நீங்கள் ஏன் சிலரை ஊனமுற்றவர்களாகப் படைக்கிறீர்கள்?”
“பெற்றோர் செய்த பாவத்திற்கு பிள்ளை கள் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.”
“மனிதர்கள் எல்லோருமே தெய்வத்தின் பிள்ளைகள்தானே? அப்படியானால் உங்கள் பாவத்திற்காகத்தான் எங்களுக்குத் தண்ட னையா?”
இப்படியாகப்பட்ட கேள்விகளுக்கு இறு தியாக தெய்வம் சொல்லும் நழுவல் பதில்: “இதெல்லாம் மனிதர்கள் நீங்களாக உருவாக்கிக்கொண்டதுதான்.” அப்படியானால் தெய்வத்திற்கு என்ன வேலை என்ற கேள்வியை சுந்தரமூர்த்தி எழுப்பவில்லை!

“கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, நாத்திகம் பேசவில்லை,” என்று சமரசம் செய்து கொள்வதால் மேம்போக்கான நேயம் என்பதைத் தாண்டி ஆழ்ந்த பகுத்தறிவு வெளிப்படாமல் போகிறது. தெய்வக் கற்பனைகளே கூட மனிதர்கள் உருவாக்கியதுதான் என்பதைப் புரிந்துகொண்டால் பல குழப்பங் களுக்கு முடிவு கிடைத்துவிடும்.

எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்காதது ஏன்? கல்வி உட்பட எதையும் விலைக்கு வாங்கக்கூடியவர்களாகவும், உணவு உட்பட எதையுமே வாங்க முடியாதவர்களுமாய் சமுதாயம் பிளவுபட்டிருப்பது ஏன்? ஆலயத்தில் ஆண்டவன் சிலையை நெருங்கக்கூடியவர்களாகவும், ஆலய வாயிலுக்குள் கூட நுழைய முடியாத வர்களாகவும் மக்கள் பாகுபடுத்தப்பட்டிருப்பது ஏன்? வாழ்க்கை எவ்வளவு நவீனமானாலும் பெண்ணடிமைத்தனங்கள் தொடர்வது ஏன்? கடவுளின் பெயரால் கலவரங்கள் ஏன்?... இப்படியாகப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்தப் புரிதலிலிருந்து பதில் சொல்லமுடியும்; மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியும்.

அந்தத் தெளிவு இல்லாததால் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர்களையும் அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களையும் சொர்க்கத்தில் வாழ்கிற நல்லவர்களாக ஒரே தட்டில் வைக்கிறது நாடகம். ஆனாலும், எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்தும் மதவாதத்திலிருந்து சற்றே விலகிக் கேள்விகள் கேட்பது பாராட்ட வேண்டியதே.

குடும்ப அரசியல் தொடர்பான நையாண்டிகள் சிரிப்பூட்டுகின்றன. “கலர் டிவி இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால் இயற்கையே இலவசமாக வழங்குகிற குடிநீர் விலைக்கு விற்கப்படுகிறது,” என்ற கிண்டல் கூர்மையான விமர்சனம்தான். ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்கள் தமிழக எல்லையைத் தாண்டாமல் நின்றுவிடுகின்றன! தில்லி வரை சென்று இன்றைய-முந்தைய ஆட்சியாளர்களின் துரோகங்களைச் சொல்லத்துணியவில்லை. கதை, உரையாடல் எழுதிய சி.வி. சந்திரமோகன் இதற்கும் முயன்றிருந்தால் அரசியல் விமர்சனம் ஓரளவுக்கு முழுமையாகியிருக்கும்.

இக்குழுவினரின் முந்தைய நாடகங்களில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் இதிலே இல்லை. ஆயினும் மனிதர்கள் சார்பாக இறைவனைக் கேள்விகளால் துளைக்கிறபோது ஈடுகட்டுகிறார், நாடகத்தை இயக்கி நடித்துள்ள ‘டி.வி.’ வரதராஜன்.

கடவுள்களாக வரும் கேட்டவரம் சீனு, எமன் சுயம்பிரகாஷ், சித்ரகுப்தன் ராஜேந்திரன், சீரியல் நடிகை சீலிமாவாகத் தன் பங்கிற்கும் கடவுளைக் கேள்விகேட்கும் உஷா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

‘யுனைட்டட் விசுவல்°’ என்ற பெயருக்கேற்ப, நேரில் வரும் எம்ஜிஆர், கட்டளையிட்டதும் முன்னால் வரும் சிம்மாசனம் என்று சேர்க்கப்பட்டுள்ள உத்திகளும் விண்ணுலகப் பயணத்தைக் காட்டும் ‘வீடியோ கிராபிக்°’ நுட்பங்களும் ரசிக்கத்தக்கவை.

Sunday 7 June 2009

தேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்



தேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்

உலகம் உற்றுக் கவனிக்க இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, யாருக்கு எந்த இடம் என்பதில் சில இழுபறிப் பேரங்களுக்குப் பிறகு, மன்மோகன் சிங் தலைமையில் ஐமுகூ அரசு மீண்டும் பதவியேற்றுவிட்டது. 1991க்குப் பிறகு மீண்டும் 200க்கு மேற்பட்ட இடங்கள் கிடைத்ததில், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பி சண்டப்பிரசண்டனாக காங்கிரஸ் மக்களின் தீர்ப்பு தனது பொருளாதாரக் கொள்கைகளின் மீதான மதிப்பு என்ற மிதப்பில் பொதுத்துறை நிறுவனங்களைக் காவு கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம். கீழே விழுந்தால் என்ன, மீசையில் மண் ஒட்டவில்லையே என்று பாஜக அடுத்த தேர்தலுக்கு ராமனுக்குத் துணையாக வேறு சாமி யாரையாவது இழுத்துக்கொள்ளலாமா என்று திட்டமிடக்கூடும். தங்களுக்குக் கிடைத்த பின்னடைவு மக்கள் மீதான தாக்குதல்களாக மாறுமே என்ற கவலையுடன், மக்களிடையே உண்மைகளை இன்னும் வலுவாகக் கொண்டுசெல்வது எப்படி என்ற ஆய்வில் இடதுசாரி கட்சிகள் ஈடுபடும்.

கட்சிகளின் மதிப்பீடுகளைத் தாண்டி மக்களவைத் தேர்தல் முடிவுகள் சில முக்கியமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. வாக்காளர்களின் தேர்வைப் பெருமளவுக்கு சரியாகக் காட்டக்கூடிய தேர்தல் முறை இங்கே இல்லை; பதிவான வாக்குகளில் அதிக எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கு எத்தனை தடவைகள் பொத்தான்கள் அழுத்தப்படுகின்ற என்பதை வைத்தே இங்கே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. 100 வாக்காளர்களில் 70 பேர்தான் தங்களது கைவிரலில் மைவைத்துக்கொள்ள முன்வருகிறார்கள் என்றால், அந்த எழுபதில் 20, 15, 10 என மற்றவர்களுக்குப் பிரிகிறபோது, மீதியுள்ள 25 வாக்குகளைப் பெறுகிறவர் வெற்றிபெற்றுவிட முடிகிறது. இது முழுமையான ஜனநாயகப் பிரதிபலிப்பாக இல்லை என்பதால்தான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் சீர்திருத்தம் பற்றி, ஜனநாயகத்தில் உண்மையான அக்கறை உள்ள சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தத் தேர்தல் முறையிலேயே பெரும்பாலான மக்கள் தங்களது அரசியல் பங்கேற்பைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களின் அரசியல் பங்கேற்பு முக்கியமானது என்ற கோணத்தில் முதலில் இது ஒரு ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு. இந்தப் பங்கேற்பு உணர்வு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது வேறு விவகாரம், வேறு விவாதம்.

சுமார் 41கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் (58.4 சதவீதம்) வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அளவேயாகும். மாநில வாரியாகப் பார்த்தால் மேற்கு வங்கம் (81.3) முதலிடத்திலும் கேரளம் (73.3) இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு (73) மூன்றாவது இடத்திலும், ஆந்திரா (72.6) நான்காவது இடத்திலும் உள்ளன. குறைவாகப் பதிவாகியிருப்பது ஜம்மு-காஷ்மீர் (39.7) - அங்கேயும் சென்ற தேர்தலைவிட 4.5 சதவீதம் அதிக வாக்குப் பதிவு நடந்துள்ளது. சென்ற தேர்தலைவிட 0.4 சதவீதம் முதல் (உ.பி.), 13.4 சதவீதம் வரை (பீகார்) வாக்குப் பதிவு குறைந்துவிட்ட மாநிலங்களும் உண்டு.

2009 மக்களவைத் தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்தது என்பதை ஆய்வு செய்த ‘லோக்நிதி’ என்ற குழு வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. வளரும் சமூகங்கள் ஆய்வு மையம் (சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்) இந்த ஆய்வை மேற்கொண்டது. பல்கலைக் கழக நிதிமான்யக் குழு (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆய்வு மன்றம் (ஐசிஎஸ்எஸ்ஆர்) ஆகிய இரண்டு உயர்கல்வி அமைப்புகளும் நாடு தழுவிய இந்த ஆய்வுக்கு நிதி அளித்துள்ளன. ‘தி ஹிண்டு’ நாளிதழ் (மே 26) இந்த ஆய்வினை ஒரு சிறப்பிதழாகவே வெளியிட்டுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் மாநிலக் கட்சிகளுக்கு மாறாக தேசியக் கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இனி இந்தியாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சி முறைதான் என்கிற அளவுக்கு சிலர் பேசுகிறார்கள். ஆனால் 2004ம் ஆண்டுத் தேர்தல் காங்கிரஸ், பாஜக இரண்டு தேசிய கட்சிகளுக்கும் சேர்த்து 283 இடங்களை அளித்தது. இந்த ஆண்டுத் தேர்தல் 322 இடங்களைத் தந்திருக்கிறது. இப்படி 39 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தாலும் இவ்விரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகள் 1.3 சதவீதம் குறைந்திருக்கிறது. இடதுசாரி கட்சிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் தேசிய கட்சிகளுக்கு மொத்தம் 2 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தாலும் வாக்குகளில் 2 சதவீதம் குறைந்திருக்கிறது.

அதே நேரத்தில் மாநிலக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரம் நிலையாக இருந்துவந்துள்ளது. முந்தைய மூன்று மக்களவைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் முறையே 29.3, 29.3, 29.2 சதவீத வாக்குகளைப் பெற்றன. இந்த முறை மீண்டும் 29.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆகவே, மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு முடிந்துவிட்டதாகக் கணிப்பது அவசரக்குடுக்கைத்தனமேயாகும். லோக்நிதி குழுவினர் சந்தித்த மக்களில் 70 சதவீதம் பேர், தங்களது முன்னுரிமை மாநில நலன்கள்தான் என்று கூறியுள்ளனர். மாநில உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியாது, அதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே இதன் பொருள். இதை தேசியக் கட்சியான காங்கிரஸ் புரிந்துகொண்டு ஆட்சியை நடத்துமா?

பிரச்சாரங்கள் தொடங்கிய சில வாரங்களில் மக்கள் மேற்கொண்ட முடிவுதான் தேர்தல் முடிவாக வெளிப்பட்டதாகவும் சொல்வதற்கில்லை. தொடர்ச்சியான ஒரு அரசியல் ஆய்வு மக்களிடையே அவர்களுடைய சிந்தனைக்கேற்ப இருந்துவந்திருக்கிறது, அதையே வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதே உண்மை.

ஐமுகூ அரசின் செயல்பாட்டைக் கவனித்து வந்த மக்கள், முந்தைய பாஜக ஆட்சியைவிட இது மேல் என்ற எண்ணத்திலேயே வாக்களித்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு, அத்துமீற விடாமல் இடதுசாரிகள் அணை போட முடிந்ததால்தான் என்பது வாக்களித்தவர்களுக்கு வேண்டுமானால் முழுமையாகப் போய்ச் சேராமல் இருக்கலாம், ஆனால் அதற்கான அறுவடையைப் பெற்றுள்ள காங்கிரஸ் தலைமை உணர்ந்து செயல்படவேண்டும். மன்மோகன் சிங் மறுபடி ஆட்சி அமைத்த உடனேயே வால்மார்ட் வந்து புகுகிறதே! பெட்ரோல் விலைக்கட்டுப்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்கிறார்களே!

குறிப்பிடவேண்டிய அம்சம், கடந்த காலங்களைப் போலல்லாமல் இந்த முறை, சாதியக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது. இதன் பொருள் அரசியலில் களத்தில் இனிமேல் சாதி என்பதற்கு இடமில்லை என்பதல்ல. மாறாக, சாதி நலன்களோடு மக்கள் பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதே.

பாஜக-வைப் பொறுத்தவரையில் ரத்தத்தை மசகு எண்ணெயாக்கி ஓட்டப்பட்ட ரதயாத்திரைப் புகழ் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்தது பெரும்பகுதி மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைவிட, பாதிப் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிதான் பிரதமர் என்று அவிழ்த்துவிட்டார்கள். மக்கள் நடுநடுங்கிவிட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரச் சறுக்கல்கள் மட்டுமே பாஜக நிராகரிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அல்ல.

“காங்கிரசுக்கு நாடு முழுவதும் சாதக அலை வீசிவிடவில்லை; அதே நேரத்தில் பாஜக-வுக்கு நாடு முழுவதும் எதிர்மறை அலை வீசியிருக்கிறது,” என்று லோக்நிதி குழு கூறுகிறது. 1989ல் தேசிய அரசியல் களத்தில் இறங்கியபின் முதல் முறையாக மிகக்குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இக்கட்சிக்குக் கிடைத்துள்ள 18.8 சதவீத வாக்குகள் கடந்த தேர்தலில் கிடைத்ததை விட 3.4 சதவீதம் குறைவாகும். 1998க்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பாஜக வாக்கு வங்கி சுருங்கியுள்ளது,” என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டுகிறது. பாஜக-வுக்கு மையமான ஆதரவு சக்தியாக இருப்பது உயர்சாதி இந்துக்கள்தான். அவர்களது முன்னுரிமைத் தேர்வாக தொடர்ந்து பாஜகதான் இருக்கிறது என்றாலும், இந்த முறை அந்த ஆதரவுத் தளமும் சுருங்கியிருக்கிறது. முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரிடையே இக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவந்தது நின்றுவிட்டது. நகர்ப்புற நடுத்தர மக்கள் வாக்குகளும் பாஜகவுக்கு கணிசமாகக் குறைந்துவிட்டது.

“பிரச்சார உத்தியை மாற்றுவதில் அதிகம் கவனம் செலுத்தாமல், தனது ஒட்டுமொத்த அரசியல் திசைவழி பற்றியே பாஜக மிகுதியாக ஆராய வேண்டும்,” என்று ஆய்வுக் குழு கூறுகிறது. ஆர்எஸ்எஸ் இந்துத்துவா ஆதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் அவதாரமாகிய பாஜக அப்படியெல்லாம் தனது திசைவழியை ஆராயத் துணியுமா என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு, 1999ல் கிடைத்த வாக்குகளுக்கு சமமாக மொத்தம் 28.6 சதவீதம் வாக்குகள் இம்முறை கிடைத்துள்ளன (அப்போது ஆட்சியமைத்தது என்னவோ பாஜக கூட்டணிதான்). 1999ல் அக்கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு சதவீத வாக்கும் 4 இடங்களைக் கொடுத்தது; 2004ல் 5.5 இடங்களைக் கொடுத்தது. இந்தத் தேர்தலில் 7.2 இடங்களைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மாநில வாரியாக காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் ஒரே சீராக இல்லை என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஒரு ‘மறுஉயிர்ப்பு’ நிகழ்ந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்பின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே அக்கட்சி ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை. சில மாநிலங்களில் பாஜக-வை காங்கிரசால் பின்னுக்குத் தள்ளமுடியவில்லை. மேலும் சில மாநிலங்களில் கூட்டாளிக் கட்சிகளை விஞ்ச முடியவில்லை. எனவே அக்கட்சி இன்னும் உச்சத்துக்குப் போய்விடவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

முந்தைய மக்களவையில் 61 உறுப்பினர்களைப் பெற்றிருந்த இடதுசாரிகள் இம்முறை 24 உறுப்பினர்களையே அனுப்ப முடிந்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளம் இரு மாநிலங்களிலும் அரசியல் உள்ளடக்கம், கட்சி அமைப்பு, பிரச்சனைகளின் தன்மை ஆகியவை மாறுபட்டவை. ஆயினும் இரு மாநிலங்களிலும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கடுமையானதாகவே இருக்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டாளிக் கட்சிகளும் சிறப்பாக செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆய்வு, “சராசரி விதி அடுத்த தேர்தலில் இந்த பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்,” என்று கணிக்கிறது.

“இடதுசாரிகளுக்கு வாக்களித்தவர்கள், இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நம் நாட்டை அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்டதாக்கிவிடும் என்று நம்புகிறார்கள்” என்றும் லோக் நிதி குழுவினர் கூறியுள்ளனர். பெரும்பகுதி மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் முயற்சி தேவை என்பதையே இது காட்டுகிறது. இக்கருத்தை வலுப்படுத்துவது போல், “இடதுசாரிகள் முன்னுள்ள சவால் என்னவெனில், தாங்கள் வலுவாக உள்ள பகுதிகளைத் தாண்டி தங்களது இருப்பை விரிவு படுத்துவதுதான்,” என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது.

இந்த மதிப்பீடுகள் மத்திய ஆளும் கூட்டணிக்கான அரசியல் பொறுப்பை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பொறுப்பையும் வலியுறுத்துகின்றன. அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து வருங்கால அரசியல் நிகழ்வுப் போக்குகள் தீர்மானிக்கப்படும்.

Monday 18 May 2009

குழந்தைகளுக்கு எழுத



குழந்தைகளுக்கு எழுத குழந்தை மனம் வேண்டும்
“குழந்தைகளுக்காக என்று வரும் புத்தகங்களில் வரலாறு, அறிவியல், கதை, அறிவுரை என்று எல்லாம் இருக்கிறது. குழந்தையின் வியப்பு மட்டும் இல்லை... மன்னர்களின் சாகசங்களைச் சொல்லும் புத்தகங்களில் அவர்கள் மக்களின் உழைப்பை உறிஞ்சியவர்கள்தான் என்ற உண்மையையும் சொல்ல வேண்டாமா? ஆகப்பெரும்பாலான புத்தகங்கள் மிடில் கிளாஸ் குழந்தைகளைத்தான் மனதில்கொண்டதாக எழுதப்படுகின்றன... புத்தகம் யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களைச் சென்றடையும் வரையில் ஓய முடியாது. குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கிடைக்கும் வாய்ப்பு என்பது ஒரு முக்கியமான பிரச்சனை. நான் பார்த்த அளவில் மிகக் குறைவாகப் புத்தகம் வாங்குகிறவர்கள் ஆசிரியர்கள்தான்...
எதை எழுதுவது என்பதில் அவரவர் சார்பு வெளிப்படத்தான் செய்யும். நான் ஒருபோதும் ஆன்மிகப் புத்தகம் போட மாட்டேன். அதற்கு வெளியே ஆயிரம் இருக்கிறது. அதையெல்லாம் எப்படிச் சொல்வது என்பதுதான் என் கவலை. நீதிக்கதை எழுதக்கூடாது. கடந்த கால நீதிக்கதைகள் குழந்தைகளை ஷேப் பண்ணவில்லை. குழந்தைகள் பார்க்கும் டிவி வேகமாகவும், புத்தகம் மிக மெதுவாகவும் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். குழந்தை மொழி என்றால் என்னவென்று என்சைக்ளோபீடியாவில் இல்லை. ஆனால் குழந்தைகளிடம் இருக்கிறது. எழுதிவிட்டு அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் அதை உருமாற்றம் செய்வார்கள், சரியான குழந்தை மொழி நடை கிடைக்கும்.”
-இவை தமுஎகச பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியவை. சென்ற மாதம் சென்னையில் கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் புத்தகங்களுக்கான பட்டறை ஒன்றை நடத்தியது. அதைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறினார். குழந்தைகளுக்குக் கதைசொல்வதில் பிரியம் உள்ள எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றார்கள். சம்பிரதாய நடைமுறைகள் இல்லாமல், ஒரு சிறப்பு அழைப்பாளரின் அறிமுகம், அதன் மீது பங்கேற்பாளர்களின் வெளிப்படையான விவாதம் என்ற வடிவில் ஆரோக்கியமான ஒரு முகாமாகவே அது நடந்தது.
தொடக்க உரையின் மீது ஒரு கேள்வி எழ அதற்கு தமிழ் அளித்த பதில்: “பெரியவங்க செருப்பை போட்டுக்கிட்டு நடக்க குழந்தைகள் விரும்புவது போல பெரியவங்க புத்தகத்தையும் குழந்தைகள் படிப்பார்கள்.”
எழுத்தாளர் இரா. நடராசன், “மனப்பாட மெஷின்களாக்கப்பட்டிருக்கிற நம் குழந்தைகளைப் பாடப்புத்தகங்களிலிருந்து மீட்கிற, உலகத்தை கதையை நேரடியாகக் காட்டுகிற புத்தகங்கள் குழந்தைகளுக்குத் தேவை. ஆங்கிலப் புத்தகங்களில் குழந்தைகள் நாவல், பெரியோர் நாவல் என்றெல்லாம் கிடையாது. குழந்தைகள் எதை அதிகமாக வாங்குகிறார்களோ அதை வகைப்படுத்திக் கொள்கிறார்கள். ஹாரி பாட்டரின் வெற்றி அதன் பள்ளிக்கூட எதிர் நிலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்,” என்றார்.
சிறுவர் மொழி என்பது பற்றிப் பேசிய பா. ராகவன், “உலகிலேயே மிகச் சிரமமான செயல் சிறுவர்களுக்கு எழுதுவது. அதைவிடச் சிரமம் அவர்களை ரசிக்க வைப்பது. ஏதோ சொல்லவந்ததை கதை வடிவில் சொல்கிற முயற்சிதான் நடக்கிறது. கதையை கதையாகச் சொல்கிற முயற்சி இல்லை,” என்று சரியாகவே தொடங்கினார். ஆனால் அப்புறம், “எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம், குழந்தைகள் அதை ரசிப்பது போல் எழுதவேண்டும் அவ்வளவுதான்,” என்று தாராளமயமாக்கினார். பின்னர் அவரே “இதில் பொது விதி என்று எதுவும் கிடையாது. விதிகளை மீறலாம் - இலக்கணத்தை அறிந்து மீறுவது போல்,” என்றும் கூறினார்.
எளிமையான, குறைவான சொற்களில் இருக்க வேண்டும், சுவாரசியமாக இருக்க வேண்டும், தகவல்களில் பிழைகள் கூடாது, போதனை செய்யும் தொனி கூடவே கூடாது, நிறைய படங்கள் சேர்க்கலாம், ஒரு வாக்கியம் நான்கைந்து சொற்களுக்கு மேல் போகாமல் இருக்க வேணடும், ஒரு பத்தி மூன்று வாக்கியங்களுக்கு மேல் போகக்கூடாது, குழந்தைகளின் தோளில் கைபோட்டுக்கொள்வது போல் நேரடியாகப் பேசும் தொனியில் எழுதவேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினார் ராகவன்.
“புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் என்ன தொடர்பு? அதைப் போலத்தான் குழந்தை இலக்கியத்துக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் நிலைதான் இருக்கிறது,” என்றார் வெண்ணிலா.

“குழந்தைகளின் மன உலகம் முக்கியமானது. அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறோமா. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எல்லாமே புதுசு. அந்த வயதில் உருவாகும் கற்பனாவுலகத்தை எழுத்தாக்க முடிந்திருக்கிறதா? இந்தியச் சூழலில் குழந்தையைப் புரிதல் என்பதே பிரச்சனைதான். குழந்தை மனம்போல் இலக்கற்ற பயணம் உள்ள படைப்பு தேவை. டிவி சீரியல் பார்க்கிற குழந்தையும் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தால் அதைத் திரும்பிப் பார்ப்பது குழந்தைத்தனமாகவே இருக்கும்,” என்றார் கவிஞர்.
புதுவை அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஹேமாவதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுகு அறிவியல் கல்வியே பகுத்தறிவுக் கல்வியாகவும் அமையும் என்றார். “இக்குழந்தைகளுக்கு புதிர் விடுவிப்புச் செயல்பாடுகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் அறிந்த செய்திகளிலிருந்தே தொடங்குவது பலனளிக்கும்,” என்றார் அவர். அறிவியல் செய்திகளுக்கான உரையாக இருந்தாலும் குழந்தைகளுக்கான இலக்கிய அணுகுமுறைக்கான அடிப்படைகளும் அந்த உரையில் இருந்தன.
“அப்புறம் என்னாச்சு,” என்று குழந்தை கேட்டால் அது வெற்றிகரமான கதை என்று அடையாளம் காட்டினார் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் எழுதியவரான ரேவதி (என்ற ஹரிஹரன்). “குழந்தைகளிடம் பேச ஆரம்பித்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களே உங்களை மேலே கொண்டுபோய்விடுவார்கள்,” என்றும் குறிப்பிட்டார் ‘கோகுலம்’ ஏட்டின் முன்னாள் ஆசிரியரான ரேவதி.
அறிவியலையும் கணிதத்தையும் இனிப்பாகச் சொல்லித்தர முடியும் என்றார் பத்ரி சேஷாத்திரி. அவர் சொன்னதில் முக்கியமானது, “கேள்வி கேட்கும் மன நிலையை - அறிவியல் மனப்பான்மையை - கொண்டுவர வேண்டும். பாடப்புத்தகங்களால் அறிவியலின் சுகத்தை 90சதவீத மாணவர்கள் பெறுவதே இல்லை... அறிவியல் அறிஞர்களின் கதைகளை சுவையாகச் சொல்வதன் மூலம் அவர்களது கண்டுபிடிப்புகள் பற்றியும் சொல்லமுடியும்,” என்றார் அவர்.
நல்ல தமிழ்ச்சொற்கள் பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன என்பதையும் சொல்லத் தவறவில்லை கிழக்கு நிறுவனத்தின் தலைமை இயக்குநர். அறிவு சார்ந்த விஷயங்களை சொல்லும்போதும் அதில் ஒரு திரில் இருக்க வேண்டும் என்றார் அ. வள்ளிநாயகம்.
குழந்தைகளுக்கான எழுத்துக்களில் பாலின பாகுபாட்டுக்கு எதிரான சிந்தனைகள், சாதி வேற்றுமைக்கு எதிர்ப்புக் கருத்துக்கள் இடம்பெற வேண்டுமா என்று பேச வந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த அ. மாதவன், “சமுதாய மாற்றத்தை விரும்புவோர் எவரும் இது வேண்டும் என்றே சொல்வார்கள்,” என்றார். பல பள்ளிகளில் இன்றைக்கும் கடினமான பணிகளை ஆண் மாணவர்களிடமும், துப்புரவுப் பணிகளை பெண் மாணவர்களிடமும் ஒப்படைப்பது நடககிறது,” என்ற ஒரு படப்பிடிப்பையும் அவர் முன்வைத்தார்.
கணித அறிவியலாளர் பேராசிரியர் ராமானுஜம், “குழந்தைகளின் மனநிலை பற்றிய ரசனைவயப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேசுவதால் பயனில்லை,” என்றார். “அறிவியல் கதைகளையும் அவர்களது உண்மை வாழ்க்கையிலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். பத்துவயது வரையில் குழந்தைக்கு ஒருவிதமான பாதுகாப்பு இருக்கிறது. அதன்பிறகு, ஒரு முதிர்ச்சி வர வர, மென்மைத்தனத்தின் மீது விழுகிற அடி குழந்தைகளை அழவைக்கவும் செய்யலாம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதலையின் பிடியிலிருந்து யானை கஜேந்திரனை ஆதிநாராயணன் தனது சக்கராயுதத்தை ஏவி காப்பாற்றிய கதையைக் கேட்ட எங்கள் வீட்டுக் குழந்தை, “அந்த முதலையோட சாப்பாட்டை கடவுள் பறிச்சுக்கிட்டாரே,” என்று கேட்ட நிஜ அனுபவத்தை கதையாக மாற்றியது உள்ளிட்ட சில அனுபவங்களை நான் பகிர்ந்துகொண்டேன்.
அதிகம் பேசப்படுகிற, குறைவாகவே முயற்சிகள் நடக்கிற ஒரு முக்கியப் பொருள் குறித்த இந்தப் பட்டறை பொதுவாக பயனுள்ளதாகவே இருந்தது. அதே நேரத்தில், உள்ளடக்கப் பிரச்சனைகளில் கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, எப்படி எழுதுவது என்பதில் எழுத்தாளர்களை ஒரு வார்ப்புக்குள் கொண்டுவருகிற எத்தனிப்பும் வெளிப்பட்டது. குழந்தைகளை அப்படி ஒரே மாதிரியாக வார்ப்பது எப்படி தவறோ அப்படி குழந்தைகளுக்காக எழுதுவோரை வார்ப்பதும் தவறுதான். வர்த்தக நிறுவனத்தின் தேவைக்கு அத்தகைய வார்ப்புகள் உதவுமோ என்னவோ. ஆனால், வெற்றிகரமான புத்தகம் இயல்பாக நிற்கும். உள்ளடக்கமும் ஏற்புடையதாக இருக்கும்போது அதை மக்களுக்கான இலக்கிய இயக்கங்கள் பரவலாகக் கொண்டுசெல்லலாம்.
புத்தகங்களை “மார்க்கெட்டிங்” செய்வது குறித்த எதிர்ப்புக் கருத்தும் வெளிப்பட்டது. பரவலான குழந்தைகளைப் புத்தகம் சென்றடைவது என்ற அர்த்தத்தில் அதைப் பற்றிய அசூயை தேவையில்லை என்றே படுகிறது.
ஆயினும், தமுஎகச இதை மாநில அளவிலான முகாமாக நடத்தத்திட்டமிட்டுள்ளது. அதற்குள் ஒரு பதிப்பகம் முந்திக்கொண்டுவிட்டது! இந்தப் பட்டறை அனுபவங்கள் அந்த முகாமை செம்மையாய் நடத்த உதவும். எப்படியோ, குழந்தைகளை யோசிக்கவிடாத இறையருள் கதைகளே அவர்களை ஆக்கிரமித்துள்ள மரபிலிருந்து விலகி, அவர்களைக் கேள்வி கேட்க வைக்கிற புத்தகங்கள் பூத்துவருமானால் குழந்தை இலக்கியக் களம் பெரும் வனமாக வளம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Saturday 9 May 2009

எதிரெதிர் வினை

சிபிஎம் எதிர்ப்பு அரசியலும்
சில விமர்சனங்களும்
(‘சிபிஎம்’ புத்தகத்தின் மீதான எதிர்வினைக்கு எதிரெதிர் வினை)

மருதன் அவர்களுக்கு நன்றி. என்னையும் வலைத்தள வாசகர்கள் கவனிக்க வைத்திருக்கிறாரே. ஓ - இது என்னைக் கவனிக்க வைப்பதல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பற்றி நான் எழுதி, ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வந்துள்ள ‘சிபிஎம்’ குறும்புத்தகத்தைக் கவனிக்கவைப்பது. அதற்காக மேலும் நன்றி.
அப்புறம், ரொம்ப நாளாக விரிக்காமல் வைத்திருந்த எனது வலைப்பதிவு ஏட்டை மறுபடி திறந்து இதை எழுதவைத்திருக்கிறார். அதற்காக உளமார்ந்த நன்றி.

ஒரு 78 பக்க புத்தகத்தில், ஒரு சுருக்கமான அறிமுகமாக அமையட்டும் என்கிற அளவிலேயே அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அது சிபிஎம் சார்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ புத்தகம் அல்ல. சிபிஎம் உறுப்பினராக இருக்கிற ஒருவனால், வெளியே பரந்துபட்ட அளவில் இருக்கிற, புத்தக வாசிப்பில் ஆர்வம் முளைவிட்டிருக்கிறவர்களுக்காக எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி வளர்ந்த பின்னணி, அது செயல்படும் விதம், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் - இவற்றைத் தொட்டுக்காட்டுவதே புத்தகத்தின் நோக்கம். இதிலே கட்சியின் மாநாட்டு ஆவணம் போலவோ, நிறைய பக்கங்களில் ஆழமான ஆய்வுடன் எழுதப்படுகிற புத்தகம் போலவோ விமர்சனம் - சுயவிமர்சனம் என்று அதிகமாக எழுத முடியவில்லை.

அடுத்து இவரது அகராதிப்படி, சுயவிமர்சனம் என்றால் கிழிகிழியென்று கிழித்துப்போடுவதாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கச் செயல்பாட்டில் நேரடியாக தன்னை ஒப்படைத்துக்கொளளாமல், வசதியாக எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து, அது நொட்டை இது நொள்ளை என்று துப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியம்தான். அதிலே ஒரு அரசியல் உண்டு. இவரது அரசியல் நோக்கத்திற்கு இப்படி சிபிஎம் கிழிபடவேண்டும் என்பது தேவையாக இருக்கலாம். எனக்கு அது வராது.

என் இயக்கத்திற்கு உண்மையானவனாகவே இருப்பேன். மினிமேக்ஸ் மூலமாகக் கிடைத்த வாய்ப்பையும் அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். இவரைப் போன்றவர்களையும் தாண்டி புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எம் கட்சியைப் பற்றி ஒரு தொடக்கப் புரிதலையும், மரியாதையையும் ஏற்படுத்துவது மட்டுமே என் நோக்கம். நடுநிலை ஒப்பனை எல்லாம் போட்டுக்கொண்டு நான் எழுதுவதில்லை.

நந்திகிராமம் பிரச்சனை நிச்சயமாக கட்சியின் பயணத்தில் பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல் வந்ததுதான். “... காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது” என்று பதிவு செய்திருக்கிறேன். இதுவும் ஒரு சுயவிமர்சனம்தான். நந்திகிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அல்ல இது. கட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் முயற்சியில் அதுவும் ஒரு கட்டம் அவ்வளவுதான். நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு அந்த வட்டாரத்தை சுற்றி வளைத்துக்கொண்டது பற்றியும், சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்தது பற்றியும் அதே பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். மருதனின் கோபம் அதனால்தானோ?

“ஆய்வின் முடிவில் அவர்கள் (சிபிஎம்) என்ன கண்டுபிடித்தார்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவு வந்தபின் கட்சி முழுமையாக விவாதிக்கும், அதை வெளிப்படுத்தவும் செய்யும். பொறுத்திருங்கள் நண்பரே.

“டாட்டாவின் காசோலையை திருப்பி அனுப்ப முடிந்த கட்சியால் டாட்டா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை” என்று எழுதியிருக்கிறார். புத்தகப் பக்கங்களைத் தாண்டிய விமர்சனம் இது. தவறில்லை. ஆனால், எதற்காகத் திருப்பி அனுப்ப வேண்டும்? சொல்லப்போனால் அந்த நிறுவனத்தை அழைத்ததே இடது முன்னணி அரசுதான். இதிலே ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. கட்சியின் தலைமையிலான கூட்டணியின் அரசுக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாதவராக மருதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கு இப்படிப்பட்ட நிறுவனங்கள் தேவை. மேற்கு வங்கத்தில் இருப்பது ஒன்றும் சோசலிச அரசோ கம்யூனிச அரசோ அல்ல. இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு மாநில அரசுதான். இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டுதான் அது செயல்பட முடியும். சிபிஎம் சொல்கிற மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிச் செல்வதில் இவ்வாறு அரசு எந்திரம், நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது ஒரு கட்டம், ஒரு வழிமுறை. இதுவே முழுப்புரட்சி அல்ல. இதைப் பற்றியும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சுத்த சுயம்பிரகாச புரட்சிக்காரர்களைப் பார்த்து நீங்கள் ஏன் முதலாளித்துவ அரசின் ரயிலில் பயணம் செய்கிறீர்கள், ஏன் முதலாளித்துவ ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், அப்படிக் கேட்பவர்களை மருதன் எப்படிப் பார்ப்பார்?

“மக்கள் எதிர்ப்பை மீறி” டாட்டா கார் நிறுவனத்தை நிறுவ சிபிஎம் முயன்றதாக எழுதியிருக்கிறார். எந்த மக்கள்? மம்தா பானர்ஜியும், பாஜக ஆட்களும் திரட்டியவர்கள் மட்டுமா? சிங்கூர் வட்டாரத்துக்கு வர இருந்த ஒரு பெரிய தொழிற்சாலையை மம்தா வகையறாக்கள் தடுத்துவிட்டார்கள் என்றுதான் அந்தப் பகுதி மக்கள் இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்று சிபிஎம் நம்புகிறதா என்று கேட்டிருக்கிறார். அரசு எந்திரம் பற்றிய சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் என்னுடைய பதில்: புத்தகத்தை மறுபடியும் படியுங்கள். இப்போது நடக்கிற தேர்தலை மக்கள் ஜனநாயக அரசுக்கான தேர்தல் என்று யாராவது எங்கேயாவது சொன்னார்களா என்ன? ஒன்றை மட்டும் சொல்லாம்: கட்சிகள் என்றால் தலைவர்கள் மட்டுமல்ல, அவற்றின் தளமாக உள்ள மக்களும்தான். கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு என்பது மக்களோடு கொள்ளும் உறவுதான். அதிலே அசூயைப் பட என்ன இருக்கிறது?

நேபாளத்தை சுட்டிக்காட்டி பிரசாந்தா பதவி விலகியதை சிலாகித்திருக்கிறார். அதே பிரசாந்தா, அமைதியான முறையில் அரசு அமைப்பதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார். அவருடைய கட்சி தனது ஆயுதப்பாதையைக் கைவிட்டு அரசியலுக்கு வந்ததால்தான் அரசு அமைக்கிற அளவுக்கு வந்தது.

அப்புறம் வெறும் ஊகக் கேள்விகளாக கடைசியில் அடுக்கியிருக்கிறார். இது என்ன குருப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமா என்ன? எல்லா கிரக நிலைமைகளுக்கும் விளைவுகள் என்ன என்று கணித்துக்கொண்டிருப்பதற்கு? திட்டவட்டமான நிலைமைகள் உருவாகிற போதுதான் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். இதைத்தான் இவர் “வளைந்து நெளிந்து” என்று வர்ணிக்கிறார். ஒன்று செய்யலாம் - எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டேன், தூசு படியாமல் படுசுத்தமாக இருப்பேன், யாரோடும் ஒட்ட மாட்டேன் என்று கோவணத்தையும் உருவிப்போட்டுவிட்டு நடுக்காட்டில் போய் தவம் இருக்கலாம்.

“... பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள்,” என்று முடித்திருக்கிறார் மருதன். சலித்து சலித்து மக்கள் சரியானதைத் தேர்வு செய்வார்கள். அப்போது, எதுவும் சரியில்லை என்று பினாத்திக்கொண்டே இருப்பவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள் - இப்போதிருப்பதை விடவும்.