Sunday 13 June 2010

தமிழ் இனி மெல்லச்சாகும்?


தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதி உரைத்தது உண்மைதானா? இப்படியொரு கேள்வியை முன்பு குமுதம் பத்திரிகையின் அரசு பதில்கள் பகுதிக்கு ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதற்கு குமுதத்தின் அன்றைய ஆசிரியர் அண்ணாமலை அளித்திருந்த பதில்: மென்மையாக அச்சிடும் ஆப்செட் போன்ற எந்திரங்களின் வருகையால் தமிழ் இனி மெல்ல அச்சாகும்.

சுவைக்கத்தக்கது இந்தச் சொல்நயம். கணினித் தட்டச்சு, ஒளிக்கதிர் அச்சு என்றெல்லாம் வந்துள்ள இன்றைய சூழலில் இந்தச் சொல்நயம் பொருத்தமாகவும் இருக்கிறது.

அண்மையில் வெளியான ஒரு செய்தி: ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) உலகில் வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தற்போதைய நிலைமை நீடிக்குமானால் அடுத்த ஐம்பதாண்டுகளில் தமிழும் இப்பட்டியலில் இடம்பெறும் என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
இந்தச் செய்தி ஏற்படுத்துகிற ஆழ்ந்த தாக்கத்தில் மேற்படி சொல்நயத்தைச் சுவைக்க முடியவில்லை. தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற ஓலம் உண்மைதானோ என்ற கவலை சூழ்கிறது.

தமிழ் மக்களின் ஆங்கில மோகம்; சந்துக்குச் சந்து ஆங்கிலப் பள்ளிகள் திறப்பு; ஊடகங்களின் அலட்சியம்; அரசாங்கத்தின் அக்கறையின்மை... என்றெல்லாம் காரணங்கள் கூறப்படுகின்றன. கவிதைக்கும் காதல் கற்பனைக்கும் ஏற்ற தமிழ் இன்றைய கணினிக்கும் நவீன தொழில் வளர்ச்சிக்கும் ஈடுகொடுப்பதாய் இல்லை என்று கூறுவாரும் உண்டு. மாறிய சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத எந்தவொரு மொழியும் அழிந்து வரும் அரிய மொழிகள் பட்டியலில் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது.

தமிழ் குறித்து உணர்ச்சிவசப்பட வைக்கும் எண்ணங்கள் ஊட்டப்பட்ட அளவுக்கு, அதன் வளர்ச்சிக்கான சிந்தனைகள் வளர்க்கப்படவில்லை, செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, என்பன போன்ற வீர முழக்கங்கள் எந்த அளவுக்கு மொழியின் மேம்பாட்டிற்கு வழி வகுத்தன என்ற கேள்வியை இப்போதாவது எழுப்ப வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் முழங்காமலே தமிழின் பாதையைச் செப்பனிட முன்வந்தவர்கள் மொழிப்பற்றில்லாதவர்கள் என்று முத்திரையிடப்பட்டார்கள். இன்று கணினி மெல்லியத்திலும் இணையத்தளத்திலும் தமிழை உலாவரச் செய்தவர்களில் பலர் இப்படியான முழக்கங்களை எழுப்பாதவர்கள்தான்.

மக்களிடையே ஆங்கில மோகம் வளர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். பல இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒரு இடத்தில் கூடியிருப்பார்களானால் எல்லோரும் இயல்பாக அவரவர் தாய்மொழியில்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கே ஆங்கிலம் தாய்மொழியல்லாத ஒரு இனத்தைச் சேர்ந்த இருவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருப்பார்களானால் அவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். மற்றவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியத்தை அவ்வாறு வேறு மொழியில் பேசிக்கொள்கிறார்கள் என்றாலாவது புரிந்துகொள்ளலாம். ஆனால் காலையில் என்ன சாப்பிட்டாய் என்பது போன்ற பேச்சுக்களைக் கூட ஆங்கிலத்தில் நிகழ்த்துகிறார்கள்!

இந்த மோகத்தை முதலீடாக்கித்தான் சிகரெட் கடைகள் போல் ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வீட்டிலும் வீதியிலும் பேசுகிற மொழி ஒன்றாக இருக்க இப்படி மூளையில் திணிக்கப்படுகிற இன்னொரு மொழியால் உண்மையான முன்னேற்றம் காண முடியுமா? தமிழர்கள் எத்தனை பேர் நவீன அடிமைகளாக எத்தனை வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் அலுவலர்களாகவும் வேலைசெய்கிறார்கள் என்பது தமிழ்ச்சமுதாயம் முன்னேறியதன் அடையாளமாகுமா?

அறிவியல் உண்மைகளைப் பயன்படுத்தி சாதனைகள் செய்கிற தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்கிற தமிழர்கள் இல்லை அல்லது மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் அறிவியலைத் தாய்மொழியில் கற்கவில்லை, மொழிபெயர்ப்பின் மூலமாகவே கற்றார்கள் என்பதுதான். ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்கிறபோது மூளை நேரடியாக அதை ஆங்கிலத்தில் யோசித்துச் சொல்வதில்லை, தமிழில் யோசித்துப் பிறகு மொழிபெயர்த்தே சொல்கிறோம். அதே போல் ஆங்கிலத்தில் ஒன்றைக் கேட்கிறபோது தமிழில் மொழிபெயர்த்தே புரிந்துகொள்கிறோம். எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக இந்த மொழிபெயர்ப்பை ஒருவரது மூளை செய்கிறது என்பது அவரவருக்குக் கிடைக்கிற பயிற்சியையும் வாய்ப்பையும் பொறுத்தது. இவ்வாறு மூளை இரட்டை வேலை செய்வது தேவையற்ற சுமை. அதனால்தான் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகமாக இல்லை. இத்தகைய நிலைமை உள்ள எல்லா இன மக்களுக்கும் இது பொருந்தும். இவ்வாறு மூளைக்கு இரட்டை வேலை கொடுப்பது தமிழ் மக்கள் தாங்களாகவே ஏற்றுக்கொண்டதா அல்லது ஏற்றப்பட்டதா?

ஆங்கிலத்தில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்றியதில் அரசாங்கத்திற்குப் பங்கில்லையா? வேலைவாய்ப்புகளை உருவாக்காத தொழிற்கொள்கைக்கும் இதற்கும் தொடர்பில்லையா?
தமிழக அரசின் சட்டங்களும் ஆணைகளும் இப்போதும் ஆங்கிலத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. பின்னர்தான் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்றெல்லாம் மைக் தெறிக்கப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இந்திய மொழிகளில் ஒன்றாகிய இந்தி திணிக்கப்படுவதைத் தடுத்தார்கள். ஆனால் அங்கே தமிழ் ஆள்வதற்கு வழிசெய்யவில்லையே! ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்குத்தானே ரத்தினக் கம்பளம் விரித்தார்கள்! இன்றோ எங்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடங்களும், இந்தி வகுப்புகளும் அமோகமாக நடக்கின்றன.

இதில் இந்தியாவின் மைய ஆட்சியாளர்களது பங்கு குறைந்ததல்ல. சொல்லப்போனால் அதுதான் மையமானது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிற சட்டங்கள், தீர்மானங்கள் யாவும் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன. பின்னர்தான் இந்தியில் - இந்தியில் மட்டும் - மொழிபெயர்க்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகிற மக்கள் பிரதிநிதிகள் ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க முடியும். இந்தி மாநிலங்கள் அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் பேச முன்னனுமதி பெற வேண்டும். அமைச்சர்களுக்கோ அந்த அனுமதியும் கிடையாது.
யாரும் அவரவர் மொழியில் பேசலாம், அதை மற்றவர்கள் அவரவர் மொழியில் கேட்கலாம் என்ற மொழிபெயர்ப்பு வசதியை நாடாளுமன்றத்தில் நிறுவுவது குறித்து மைய ஆட்சியாளர்களும் கவலைப்படவில்லை; மாநிலங்களில் மொழி உரிமை குறித்து நரம்பு தெரிக்கப் பேசி வந்தவர்களும் அலட்டிக்கொள்ளவில்லை. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், நாடாளுமன்றத்தில் இவ்வாறு நொடிப்பொழுதிலேயே மொழிபெயர்க்கும் ஏற்பாட்டைச் செய்வது கடினமல்ல. வேடிக்கை என்னவென்றால், இந்த அடிப்படை மாற்றத்திற்கான கோரிக்கையை வலியுறுத்துகிறவர்கள், மொழிப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட மார்க்கியவாதிகள்தான்!

மைய அரசு மாநிலங்களுக்கு அந்தந்த மொழியிலேயே அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும்; மாநில அரசுகள் தத்தம் மொழியிலேயே மையத்திற்கு அறிக்கைகளையும் கடிதங்களையும் அனுப்ப வேண்டும். அந்தந்த மட்டத்தில் இவற்றை உடனுக்குடன் மொழிபெயர்த்துக்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளை மைய அரசு சமமாக மதிக்கிறது என்பதற்கான உறுதிப்பாடாக இருக்க முடியும்.
இதையும் மார்க்சியவாதிகளன்றி வேறு யாரும் வலியுறுத்துவதில்லை. சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றின் உண்மைகள் மக்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் ஆள்வோரும், அதிகார வர்க்கமும், இவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளும் கவனமாக இருக்கிறார்கள் என்பதுதானே இதன் பொருள்?

நீதிமன்றத்தில் தமிழ், நிர்வாகத்தில் தமிழ், உயர் கல்வியில் தமிழ் என்ற கோரிக்கைகள் இதுவரை மைய அரசாலும் மாநில அரசாலும் குப்பைத் தொட்டிக்குத்தான் அனுப்பப்பட்டு வருகின்றன. மாநில அரசைப் பொறுத்தவரை வர்த்தக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டும், அலுவலர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பன போன்ற மேம்போக்கான ஆணைகளை அவ்வப்போது வெளியிடுவதோடு சரி. மேற்கூறிய அடிப்படை நடவடிக்கைகளுக்குத் தயாராக இல்லை.

இப்படியாகத்தான், தமிழிலேயே பயின்றால் உள்ளூரிலேயே முடங்கிவிடவேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்கள் மனங்களில் குடியேற்றப்பட்டது. அவையத்தில் தம் மக்கள் முந்தியிருக்கச் செய்ய வேண்டும் என்ற நியாயமான ஆசை உள்ள பெற்றோர், அவரவர் பொருளாதார வசதிக்குத் தக்கபடி ஆங்கில வழிப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆம், இந்த ஆங்கில மோகம் என்பதே கூட வலுக்கட்டாயமாக ரத்தக்குழாயில் ஏற்றப்பட்ட போதை மருந்து போன்றதுதான்.

தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற அச்சத்திற்கு இதையெல்லாம் தாண்டிய வேறொரு காரணம் இருக்கிறது. அதுதான் இன்றைய உலகமய சந்தைப் பொருளாதாரம். சமூக அக்கறையோ, உரிமைகள் குறித்த விழிப்போ இல்லாத நவீன அடிமைகள்தான் தேவை என்கிறது இந்தச் சந்தை. அதற்கேற்ப இந்திய அரசு மண்டியிட்டு, நாட்டின் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. நிதிச் சட்டங்களை வளைத்துக்கொடுக்கிறது. அணு மின்சார உற்பத்திக்கான உடன்பாடுகளில், விபத்து ஏற்படுமானால் அதற்கான இழப்பீடு பொறுப்புகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை விடுவிக்கும் விதிகளுக்கு உடன்படுகிறது. இதன் இன்னொரு பகுதியாகத்தான் ஆங்கில ஆதிக்கத்திற்குக் கோட்டைக் கதவுகள் திறந்துவிடப்படுகின்றன.

எனது அன்றாட ரயில் பயணத்தில் ஐ.டி. செக்டார் எனப்படும் தகவல்தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பலரையும் காண்கிறேன். மடிக்கணினிகளை விரித்து வைத்துக்கொண்டு அவர்கள் உரையாடுவதைக் கவனிக்கிறேன். அந்தப் பேச்சில் ஜி.பி., பைட், மெகாபைட், ரெசல்யூசன், டிஜிட்டல்... என்ற அவர்களது தொழில்சார்ந்த சொற்களைத் தவிர வேறு எதையும் கேட்க முடிவதில்லை. ஒப்பீட்டளவில் உயர்ந்த ஊதியம் பெறுகிற அவர்கள் நாட்டின் அரசியல், சமூக நிலைமைகள் குறித்தெல்லாம் விவாதிப்பதையோ விமர்சிப்பதையோ கேட்க முடியவில்லை. சமுதாயத்தை விடுங்கள், இளைஞர்களுக்கே உரிய பாலின ஈர்ப்பு (அதாவது அவர்கள் சைட் அடித்த விவகாரங்கள்) சார்ந்த தகவல்களைக் கூட பரிமாறிக்கொள்வதில்லை! இப்படி வாழ்வியல் இயல்புகளிலிருந்தே துண்டிக்கப்பட்டுள்ள இவர்கள் தங்களது நிறுவனத்தில் நடக்கிற உழைப்புச் சுரண்டல் பற்றியோ, தொழிற்சங்க உரிமைகள் பற்றியோ பேசுவார்கள் என்று கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு மெல்லிய வல்லுநர்களை வன்மையாய் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது உலகமயச் சுரண்டல்.

அரசியல் அதிகாரத்துடனோ, ராணுவ பலத்துடனோ அல்லாமல் இவ்வாறு அடிமைப்படுத்துவதற்கான நிதி முதலீடு, தொழில்நுட்பங்கள், எந்திரங்கள், வர்த்தக உடன்பாடுகள் போன்ற கருவிகளில் ஒன்றுதான் ஆங்கிலமும். அதுவும், முன்பு உலகத்தை அடக்கியாண்ட பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல; இன்று உலகத்தை ஆளாமலே அடக்க முயல்கிற அமெரிக்க ஆங்கிலம். இந்தியாவைப் பொறுத்தவரையில் இதன் தனித்தன்மையான சாதியப் படிநிலை ஏற்பாடு கூட நவீன உழைப்புச் சுரண்டலுக்கும், நவீன மூளைச்சலவைக்கும் உதவியாக இருக்கிறது. ஆகவேதான் சமூக நீதியை நோக்கிச் செல்வதற்கான இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை பிரம்மனின் தலையில் இருந்து பிறந்த வர்ணத்தவர் அல்லாத மற்ற மூன்று வர்ணத்தவர்களும் கூட எதிர்க்கிறார்கள். ஏன், வர்ண அடுக்கிற்குள்ளேயே சேர்க்கப்படாமல் வெளியே நிறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளின் படித்த இளைஞர்களிடையே கூட, பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பது போன்ற நுனிப்புல் சிந்தனைகள் பரவியுள்ளன. இப்படிப்பட்ட உலக - உள்நாட்டு நிலைமைகளிலிருந்து மொழி என்பதைப் பிரித்துக் கையாள முடியாது. யுனெஸ்கோ அமைப்பின் அறிக்கையில், தற்போதைய நிலைமைகள் நீடிக்குமானால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெற்றுவிடும் என்ற குறிப்பை, இந்த நிலைமைகளோடு இணைத்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ் இனி மெல்லச்சாகும் ஒரு பேதை உரைத்ததாக பாரதி பாடினான். உண்மையிலேயே அது பேதைமையான புலம்பலாகவே போய்விட வேண்டும், அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? உலக - உள்நாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு, சாதிய ஒழிப்பு போன்ற போராட்டங்களோடு இணைந்ததே மொழிப் பாதுகாப்புக்கான போராட்டமும். அடக்குமுறைகளுக்கும் துரோகங்களுக்கும் எதிராக ஆங்காங்கே ஒலிக்கும் குமுறல் ஒலிகள் இந்தப் போராட்டங்கள் பற்றிய நம்பிக்கையை விதைக்கின்றன. வர்க்கப் பிரச்சனை வேறு, வர்ணப் பிரச்சனை வேறு என்று பிரித்துவைத்து, ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தடம் மாற்ற முயல்வோர் குறித்த எச்சரிக்கையோடு மக்களை அணிதிரட்டினால் போராட்டம் வெற்றிபெறும். அந்த வெற்றியின் பலன்களில் ஒன்றாக தமிழ் இனி மெல்ல அச்சாகும் என்பது மட்டுமே நடப்பாகும்.

2 comments:

Ragztar said...

//தமிழ் குறித்து உணர்ச்சிவசப்பட வைக்கும் எண்ணங்கள் ஊட்டப்பட்ட அளவுக்கு, அதன் வளர்ச்சிக்கான சிந்தனைகள் வளர்க்கப்படவில்லை//

இன உணர்வுகொள்வதற்கு மட்டுமே தமிழன் கற்பிக்கப்பட்டு இருக்கிறான். இதே நிலை நீடிக்குமானால், தமிழ் இனி மெல்லச்சாகும். ஒரு மொழி வளர்வதற்கான சரியான வேர்கள் பிடிக்கப்பட்டு, தமிழ் வெறும் 'உணர்வாக' மட்டுமே இல்லாமல் அதையும் தாண்டுமானால், மெல்ல அச்சாகும்.

ஆங்கிலம் கலவாத தமிழ் பேசுவது குறித்து விஜய் டி.வீயில் கருத்துச் சொன்ன சு.ப.வீ. தான் சத்யராஜ் 'சாருக்காக' ஒரு பாடல் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். பழக்கம் என்றால் என்ன , மேடையில் பேசுவது என்றால் என்ன என்பதற்கு இது சிறந்த உதாரணம்

ச.தமிழ்ச்செல்வன் said...

தொடர்ந்து வாசித்து வருகிறேன் உங்கள் கட்டுரைகளை.இக்கட்டுரை மிகுந்த பொறுப்புணர்வோடு காலத்தின் தேவை அறிந்து எழுதப்பட்ட கட்டுரை.தொடர்க எழுத்துப் பயணத்தை.