Tuesday 14 February 2012

முண்ணூறு ராமாயணங்களும் மூர்க்கத் தாக்குதல்களும்














தை சொல்வது என்பதைப் பலரும் ஒரு பொழுதுபோக்குக் கலையாக மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மானுட வளர்ச்சியோடு இரண்டறக் கலந்தது கதை. ஆதித்தாத்திகள் தாத்தன்கள் காலத்திலிருந்து, நடந்ததையும் நடக்க வேண்டும் என விரும்பியதையும் கதையாகச் சொல்லிச் சொல்லி வந்ததால்தான் மனித இனம் பரிணாம மரத்தில் ஒரு கிளையாக நின்று விடாமல், வரலாறைப் படைக்கிற சமுதாய வளர்ச்சியை நிலைநாட்டியது. அப்படிக் கதை சொல்லி வந்ததில் ஒரு தலையாய கூறு, சொன்னதையே சொல்லிக்கொண்டிராமல், புதிது புதிதாய் சேர்த்துச் சொல்வதுதான். வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அன்றைய அரசியல், வாழ்க்கை நிலை, பொது லட்சியம் ஆகியவற்றுக்கு ஏற்ப கதையும் பரிணாம வளர்ச்சியை அடைந்து வந்திருக்கிறது. எனக்கு, பழைய கதையைச் சொல்கிறவர்களைப் பிடிக்கும்; அதிலே புதுசு புதுசாகச் சேர்த்துச் சொல்கிறவர்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

கதை சொல்லி முன்னேறிப் பாய்ந்த சமுதாயங்கள் வேகம் எப்போது தேக்கடையைத் தொடங்கின என்றால், பழைய கதைகளை மாற்றக் கூடாது, புதிதாக எதையும் சேர்க்கக்கூடாது என்று விதிக்கப்பட்டபோதுதான். அவ்வாறு விதிக்கப்பட்டதன் பின்னணியில், சமூக நிலைகளில் இனி எந்த மாற்றமும் நிகழக்கூடாது, எல்லாம் அப்படியப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் நோக்கங்களும், மதவாதக் கட்டளைகளும் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. இந்தியச் சூழலில் இதைப் பார்ப்பதென்றால், சாதிய வேறுபாடு சார்ந்த வர்ணக் கட்டமைப்பையும், பாலினப் பாகுபாடு சார்ந்த அடிமைத்தனத்தையும், இவற்றின் அடித்தளமான பொருளாதாரச் சுரண்டலையும் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசியல் இருந்தது, இருக்கிறது.

இன்று தில்லி பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை இளங்கலை மாணவர்களுக்கான ஒரு பாட நூலிலிருந்து ஏ.கே. ராமானுஜம் எழுதிய ‘முண்ணூறு ராமாயணங்களும் ஐந்து எடுத்துக்காட்டுகளும் மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகளும்‘ என்ற கட்டுரையின் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பல்கலைக் கழகப் பாடமுறை மன்றம் (அகடமிக் கவுன்சில்) வாக்கெடுப்பு நடத்தி அந்தக் கட்டுரையை நீக்கியதன் மூலம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் கட்டுரையாளரும் மொழியியல் வல்லுநரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான அத்திப்பட்டு கிருஷ்ணசாமி ராமானுஜத்தின் உழைப்புக்கும் வரலாற்றுப் பங்களிப்புக்கும் நினைவாஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது - இழிவான முறையில்.

2006ம் ஆண்டில் அந்தக் கட்டுரை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து இந்துத்துவக் கூடாரத்தைச் சேர்ந்த ஒரு கும்பலும், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவுமான அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபீவிபி) பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்குள் புகுந்து வன்முறைகளை அரங்கேற்றியது. அந்தக் கட்டுரை “இந்துக்களின்” மனதைப் “புண்படுத்துகிறது” எனக் கூறி அதை நீக்குவதற்கு வற்புறுத்தியது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றத்தில் அதை நீக்க ஆணையிடக் கோரி வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல, அதன் ஆணைப்படி நான்கு பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு தனது அறிக்கையை அளித்தபோது, மூன்று பேர் அந்தக் கட்டுரை பாடத்திட்டத்தில் தொடரலாம் என்று கருத்துத் தெரிவித்தனர். ஒருவர் அக்கட்டுரை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்றும், எனவே அது இளங்கலை மாணவர்களுக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார். குழுவின் பெரும்பான்மை முடிவுப்படி கட்டுரை தொடர்ந்து இடம்பெறும் சூழல் அமைந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் திடீரென பல்கலைக்கழக பாடமுறை மன்றம் கூட்டப்பட்டது. வரலாறு, இலக்கியம், கணிதம், வேதியல், இயற்பியல், மானுடவியல், அரசியல் அறிவியல் என சகல துறைகளையும் சேர்ந்தவர்கள் கொண்ட மன்றம் அது. மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களில் ஆகப் பெரும்பாலோர் அந்தக் கட்டுரையைப் படித்திராதவர்கள். எதற்காகக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் வந்தவர்களிடம் கட்டுரை விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்ததைத் தெரிவித்து, அது தொடரலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒருவர் எழுந்து அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று கூற, அப்படியானால் சிக்கல் வேண்டாம், அதை நீக்கிவிட வேண்டியதுதான் என்று எவ்வித ஆய்வுப்பாங்கும் விவாத மனமும் இல்லாமல் எந்திர கதியாக பெரும்பாலானர்வர்கள் வாக்குப்பதிவு செய்தனர். கட்டுரையைப் படித்து அது தொடர்வதில் தவறில்லை என்று கருதிய, மன்றத்தில் சிறு எண்ணிக்கையில் இருந்தவர்கள் முறைப்படி முழுமையான விவாதம் இல்லாமல் ஓரிரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பல்கலைக் கழகத்திற்கு உள்ளே ஏற்பட்ட ஒரு பிரச்சனை இந்த முடிவினால் வெளியே வந்திருக்கிறது. கல்வியாளர்களும் ஜனநாயகப் பண்பாட்டிற்காக வாதிடுவோரும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் பல்கலைக்கழகப் பாட மன்றத்தின் இந்த முடிவினால் இந்தியாவின் மிக அடிப்படையான தன்மையின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று தங்களது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பன்முகப் பண்பாட்டுத் தளம் என்பதே அந்த அழகிய அடிப்படைத் தன்மை.

ராமானுஜம் கட்டுரையே அந்தப் பன்முகத் தளத்திலிருந்துதான் தொடங்குகிறது. அதையும் அவர் ஒரு ராமாயணக் கதையிலிருந்தே எடுத்துக் கொடுத்திருக்கிறார்:

வனவாசம், ராவண வதம், சீதையைக் காட்டுக்கு அனுப்பிய வதம் எல்லாம் முடிந்தபின் ஒருநாள் ராமனின் கைவிரல் மோதிரம் தரையில் விழுந்து பூமிக்குள் போய்விடுகிறது. அதை மீட்டு வருவதற்காக, எவ்வளவு சிறிய உருவமும் எடுக்கக்கூடிய அனுமன் மோதிரம் விழுந்த இடத்தில் ஏற்பட்டிருந்த சிறு துளை வழியாக உள்ளே போகிறான். அந்தத் துளை அவனை பாதாள உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. பாதாள உலகத்தினர் அந்தக் குரங்கைப் பிடித்து, விலங்குக் கறிப் பிரியனான தங்களது மன்னனிடம் ஒப்படைக்கின்றனர். இதனிடையே மேலே ராமனைப் பார்க்க வருகிறார் ராஜரிஷி வசிஷ்டர். ஒரு முக்கியப் பிரச்சனை குறித்துத் தனியாகப் பேச விரும்புவதாகவும், யாரும் குறுக்கே வரக்கூடாது என்றும், அப்படி யார் வந்தாலும் அவரது தலையை வெட்டிவிட வேண்டும் என்றும் வசிஷ்டர் கூறுகிறார். அதை ஏற்று ராமன், தன் தம்பி லட்சுமணனிடம் வாசலில் காவல் இருக்கச் சொல்கிறான். அப்போது அங்கே வரும் விசுவாமித்திரர், தன்னை உள்ளே அனுமதிக்காவிட்டால் நாடே அழிந்துபோகச் சபித்துவிடுவதாக மிரட்டுகிறார். நாட்டிற்காகத் தனது தலை போகட்டும் என்று கருதி அனுமதி பெற உள்ளே செல்கிறான் லட்சுமணன். விசுவாமித்திரர் வந்திருப்பதைக் கூறுகிறான். வசிஷ்டர் தான் சொல்லவந்ததைச் சொல்லி முடித்துவிட்டிருந்ததால், விசுவாமித்திரரை உள்ளே அனுமதிக்கச் சொல்கிறான் ராமன். அவனிடம் லட்சுமணன், “அண்ணா, ஊர்மக்களிடம் உங்கள் நேர்மையை நிரூபிக்க அண்ணியையே தீக்குளிக்க வைத்தவர் நீங்கள். உங்கள் பெருமைக்குக் களங்கம் ஏற்படக் கூடாது. என் தலையை வெட்டுங்கள்,” என்கிறான். “ரகசியப் பேச்சு முடிந்துவிட்டதால் அது தேவையில்லை” என்கிறான் அண்ணன். மனம் பொறுக்காத தம்பி சரயு நதிக்குச் சென்று, வெள்ளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறான்.
வசிஷ்டரோடு ராமனைச் சந்திக்கும் பிரம்மன், “நீ பூமியில் மனிதனாக அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி நீ தேவருலகம் வந்துவிட வேண்டும்,” என்று கூறுகிறான். ராமனும் சரயு நதிக்குச் சென்று, லட்சுமணன் குதித்த இடத்திலேயே தானும் குதித்து மேலுலகம் செல்கிறான்.

அங்கே பாதாள உலகத்து மன்னன், அனுமனிடம் அவன் வந்த காரணத்தைக் கேட்க, அவன் ராமனின் மோதிரத்தைத் தேடி வந்ததைத் தெரிவிக்கிறான். மன்னன் சிரித்துக்கொண்டே ஒரு பெரிய தாம்பாளத்தைக் காட்டுகிறான். அதில் ஏராளமான மோதிரங்கள், அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. திகைக்கும் அனுமனிடம் மன்னன், “இதுவரை எத்தனை ராமன்கள் இருந்தார்களோ அத்தனை மோதிரங்கள் இதிலே இருக்கின்றன. ஒவ்வொரு ராமனும் மரணத்தைத் தழுவுவதற்கு முன்பாகத் தனது மோதிரத்தைக் கழற்றிப் போட்டுவிடுகிறான். அவற்றை எல்லாம் நான் சேகரித்து வைத்திருக்கிறேன்,” என்று கூறுகிறான். அனுமன் தனது ராமனின் கதையும் முடிந்துவிட்டதை உணர்ந்தவனாகத் திரும்புகிறான்...

தென்னிந்திய மொழிகளில் புழங்கும் ராமாயணங்கள் ஒன்றிலிருந்து ராமானுஜம் மேற்கோள் காட்டுகிற இந்தக் கதை எவ்வளவு அழகாக, இன்று பெரிதும் பேசப்படும் ‘மேஜிக்கல் ரியலிசம்’ வடிவத்தில், ஏகப்பட்ட ராமன் கதைகள் இருக்கின்றன என்பதைக் கூறுகிறது! வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதியது மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலுமே ராமாயணம் என்றும் ராம கதை என்றும் ராமன் - ராவணன் - சீதை - லட்சுமணன் - பரதன் - லவன் - குசன் கதைகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனம், கம்போடியம், ஜாவானீ, லாவோஸீ, சிங்களம், தாய், மலாய், திபெத் என வேறு பல நாடுகளின் மொழிகளிலும் இக்கதைகள் புழங்குகின்றன. ஏடுகளில் எழுதப்பட்டவை மட்டுமல்லாமல் வாய்மொழிக் கதைகளாகவும், நாடகங்களாகவும், சுவரோவியங்களாகவும், பாறைச் சிற்பங்களாகவும் இக்கதைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. பக்தி வளர்க்கும் புராணங்களாக மட்டுமல்லாமல், ரசனை வளர்க்கும் இலக்கியப் படைப்புகளாகவும் அவை தழைத்திருக்கின்றன. இந்து மதத்தோடு நிற்காமல் சமணம், புத்தம் ஆகிய மதங்களிலும் ராம கதை சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த உண்மையைத்தான் ராமானுஜம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கல்விச் சாலையின் வரலாற்று மாணவர்கள் இத்தனை வகைப்பாடுகள் இருப்பதைத் தெரிந்துகொள்வது எவ்வகையில் குறிப்பிட்ட மதத்தினரின் மனதைப் புண்படுத்திவிடும்? ஒரே வகையான ராமாயணத்தை மட்டுமே எல்லோரும் படிக்க வேண்டுமா?

ஏபீவிபி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளே கூட நிறைய ராமாயணங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதில்லை. ஆனாலும் அவர்கள் ராமானுஜத்தின் கட்டுரை கண்டு முகம் இறுகியது ஏன்?

“இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது,” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.என். பணிக்கர். என்ன அரசியல்? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் அல்ல. அதற்கெல்லாம் அடிப்படையான ஆழமான, அரசு என்பதே அடக்குமுறைக் கருவிதான் என்பதான அரசியல் அது. நாட்டை ஆளுகிற கோட்பாடாக இந்துத்துவம் இருக்க வேண்டும், அதிகார மதமாக இந்து மதம் இருக்க வேண்டும் என்ற அரசியல். இந்து மதம் என்றால், அதன் அடிக்கட்டுமானமான சாதியப் பாகுபாட்டைக் கட்டிக்காக்கிற அரசியல். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை நிராகரிக்கிற அரசியல்.

ராமானுஜம் எடுத்துக்காட்டியிருப்பது போல், முண்ணூறுக்கு மேற்பட்ட ராமாயணங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருப்பது மட்டுமல்ல, அவற்றின் உள்ளடக்கங்களும் மாறுபட்டிருக்கின்றன. ராமன் தெய்வப்பிறவியல்ல, நற்குணங்களும் தீய சிந்தனைகளும் கொண்டிருந்த சராசரி மனிதப் பிறவிதான் என்று பல கதைகள் காட்டுகின்றன. ராமனுக்குக் கீழ்ப்படிந்தவளாக மட்டுமல்லாமல், அவனோடு வாதிடுகிற சீதையைக் காட்டுகின்றன. அப்படியொரு கதையில், காட்டுக்கு அழைத்துச் செல்ல மறுக்கும் ராமனிடம் சீதை முதலில் கெஞ்சுகிறாள். பின்னர், “நீ கேட்ட ராமாயணங்கள் எதிலாவது ராமன் சீதையை விட்டுவிட்டுச் செல்கிறானா,” என்று மடக்குகிறாள்!

சில கதைகள் ராவணனைக் கதாநாயகனாக்கியுள்ளன. மக்களின் மதிப்பைப் பெற்ற அரசனான அவன், கட்டுப்பாடு இழந்து தனக்குச் சொந்தமல்லாத ஒரு பெண் மீது மோகம் கொண்டதால் அழிந்தான் என்று தாய்லாந்துக் கதைகள் சித்தரிக்கின்றன. அந்தக் கதைகளில் ராமன் பாதிக்கட்டத்தில்தான் வருவான்!

மாறுபடுகிற கதைகளில் உறவுகளும் கூட மாறுகின்றன. சில வட்டாரங்களின் கதைகளில் ராவணனின் மகளாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். ஒரு நாட்டுப்புறக் கதையில், பிள்ளைச் செல்வம் இல்லாத ராவணன், தவமிருந்து சிவபெருமானிடம் இருந்து பெறுகிற மாங்கனியின் சதைப் பகுதியை மனைவி மண்டோதரியிடம் தராமல், நாவடக்க முடியாதவனாகத் தானே விழுங்குகிறான். அவனுக்குக் கரு உண்டாகி, அவனது மூக்கின் வழியாக சீதை பிறக்கிறாள். அவளைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டுவிட, அங்கே வேட்டைக்கு வரும் ஜனகன் குழந்தையை வளர்க்கிறான். தன் மகள்தான் என்பது தெரியாமலே அவளை ராமனிடமிருந்து கடத்துகிறான் ராவணன்.
வேறு சில கதைகளில் ராமனும் சீதையும் அண்ணன், தங்கையாக வருகிறார்கள். ஒரு கதையில் அண்ணனும் தங்கையும் அரசாட்சியை சமமாகப் பகிர்ந்து மேற்கொண்டதாகக்கூட சொல்லப்படுகிறது.

சமணத்தில் இக்கதைகளைச் சொன்னபோது, “எதற்காக ராவணனைக் கெட்டவனாகவும் கொடிய அரக்கனாகவும் இந்த பிராமணர்கள் சித்தரிக்கிறார்கள்,” என்ற கேள்வியோடுதான் தொடங்கினார்கள். சமணப் புலவர் விமலாசுரி தனது காப்பியத்தை ‘பிரதிபுராணா’ என்றே குறிப்பிட்டார். பிரதி என்றால் எதிர் என்று பொருள். அன்றைய பிராமணியவாதிகள் சொன்ன புராணத்துக்கு மாறாக அவர் தன்னுடைய படைப்பை “எதிர்ப்புராணம்” என்று பதிவு செய்தார்.

ஆக, இன்றைய மறுவாசிப்பு முயற்சிகளுக்கு அன்றே தொடக்கப்புள்ளி வைக்கப்ட்டது என்பதை அறிய முடிகிறது. இவையெல்லாம் ராமனை நிறை குறையுள்ள மனிதர்களில் ஒருவனாக அடையாளப்படுத்துகின்றன.
வால்மீகியும் கூட தனது படைப்பை அப்படியொரு மனிதப் பிறவியாகவே சித்தரிக்க, அந்தக் கதையை தமிழுக்குக் கொண்டுவந்த கம்பன், முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற பிறவியாக, தெய்வத்தின் அவதாரமாக ராமனை உருவகப்படுத்தினார் என்பதையும் ராமானுஜம் பதிவு செய்திருக்கிறார். மாற்றுச் சமய இயக்கங்களுக்கு எதிரான பக்தி இயக்க இலக்கியங்களுள் ஒன்றாக கம்ப ராமாயணம் உருவானதில், அன்றைய சோழ ஆட்சி அரசியல் இருந்தது அல்லவா? சூத்திரச் சம்புகன் வேதம் படிக்க முயன்ற போது பிராமண வசிஷ்டரின் ஆணைப்படி அவனுடைய தலையை வெட்டியெறிந்த சத்திரிய ராமனைத் தமிழில் கொண்டுவராமல், ராமன் முடிசூடிக்கொண்டதோடு தன் காவியத்தை முடித்ததுக்கொண்டாரல்லவா கம்பன்?

ராமன் பெயரால் நிறுவுவதற்கு இந்துத்துவ சக்திகள் முயல்கிற இந்த நுட்பமான அரசியலைப் புரிந்துகொள்ள ராமானுஜம் கட்டுரை உதவுகிறது. அவர் நேரடியாகத் தனது கட்டுரையில் எங்கேயும் இந்த அரசியல் விவாதத்தை முன்வைக்கவில்லை. ஆனால் உள்ளது உள்ளபடி அவர் எடுத்துரைக்கிறபோது, அது உண்மைகளை மறைத்தாக வேண்டிய ஆதிக்க அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஆகவேதான் பல்கலைக்கழகத்திற்குள் இந்த பாசிசம். எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்று வேலி போடுகிற பார்ப்பணியம். சமுதாயத்தைச் சிந்திக்க விடாமல், அடுத்த கட்ட மாற்றத்திற்குச் செல்லவிடாமல் தடுக்கிற பழமைவாதம்.

இந்து மதக் கட்டமைப்புக்குள் ராமனை ஒரு முழு தெய்வமாகச் சித்தரிப்பதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. மத நம்பிக்கையாளர்கள் அதைத் தங்களது ஆலயங்களில், கதாகாலட்சேபங்களில், திருவிழாக்களில் திரும்பத்திரும்பச் சொல்வதற்கும் தடையில்லை. ஆனால், பல்வேறு ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பல்வேறு கோணங்களையும் கற்றறிய வேண்டியவர்களை உருவாக்குகிற ஒரு கல்விச் சாலையில் அதற்கான ஒரு கட்டுரையைத் தடுப்பது, மதவெறியர்கள் செய்திடும் மனிதப் படுகொலைகளுக்குச் சமமான தாக்குதல்தான்.

“அறிவு என்பதே அடுத்தடுத்து கேள்விகளுக்கு உட்பட்டதுதான். அதுதான் அறிவின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்,” என்று வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறுவது எவ்வளவு உண்மை. அந்த உண்மையைத்தான் மதவெறி தலைக்கேறியவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் - அறிவு வளர்ச்சியை ஏற்க மறுப்பதால்.

வரலாறு நெடுக அடக்குமுறையாளர்களும் ஆதிக்கவாதிகளும் இப்படிப்பட்ட தடைக்கற்களைப் போட்டு வந்திருக்கின்றனர். அந்தக் கற்களின் இடுக்குகள் வழியாகவும், உடைத்துக்கொண்டும் புதிய கதைகள் நேற்று வரையில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் சொல்லப்படுகிறது. நாளையும் சொல்லப்படும். மானுடம் வாழும்... வளரும், எவன் தடுப்பது?

(‘கிழக்கு பதிப்பகம்’ தொடங்கியுள்ள ‘ஆழம்’ என்ற புதிய பத்திரிகையின் மாதிரி இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை இது.)

3 comments:

ப.ரஃமான் said...

நிறைவான, நிறைய தகவல்கள் அடங்கிய பயனுள்ள கட்டுரை. இந்துத்வ அரசியலை எளிமையாகத் தோலுரிக்கிறது.

ப.ரஃமான் said...

நிறைவான, நிறைய தகவல்கள் அடங்கிய பயனுள்ள கட்டுரை. இந்துத்வ அரசியலை அழகாக தோலுரித்துக் காட்டுகிறது.

sponsor said...

very deep, thought provoking post
thank you very much