Sunday 30 June 2013

தட்டிக்கேட்கும் உணர்வை என்கவுன்டர் செய்யும் சினிமாக்கள்


ள்கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதில் தப்பில்லை என்று நகைச்சுவையோடு சொல்லும்  சூது கவ்வும் திரைப்படத்தின் பிற்பகுதியில் ஒரு போலிஸ் அதிகாரி வருவார். அவர் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றும், சிக்குகிறவர்களைத் தாக்குவதில் ஈவிரக்கமற்றவர் என்றும் சித்தரிக்கப்படுவார். கடைசியில் அவருக்கு என்ன நிலைமை ஏற்படுகிறது என்பது அந்தப் படத்தின் உச்சகட்ட சிரிப்பாக இருக்கும். படத்தின் கதாநாயகர்கள் கொள்ளையர்கள் என்பதால் அவர்களைப் பிடிக்க முயலும் போலிஸ் அதிகாரி வில்லனாகிவிடுவார், அவருக்கு ஏற்படுகிற தோல்வி ரசனைக்குரியாதாகிவிடும். கதாநாயகனே போலிஸ் அதிகாரி என்றால் அவன் செய்கிற என்கவுன்டர் கொலைகளும் வன்முறைகளும் தைதட்டி விசிலடித்து வரவேற்கப்பட வேண்டிய சாகசங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கும். காக்க காக்க படத்தை மறந்துவிட முடியுமா?

தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட இதுதாண்டா போலிஸ் இப்படியாகப்பட்ட படங்கள் வேகம் பிடிக்கத் தூண்டுதலாக இருந்தது எனலாம். அநேகமாக எல்லா நட்சத்திர நடிகர்களும் என்கவுன்டர் நடத்துகிற போலிஸ் அதிகாரிகளாக நடித்துவிட்டார்கள். அவர்கள் கடைசியில் சுட்டுத்தள்ள வசதியாக வில்லன்களைப் படுமோசமான சட்டவிரோதிகளாகக் காட்டியிருப்பார்கள். பெரும்பாலான படங்களில் அந்த வில்லன்கள் கறுப்புத்தோல்காரர்களாக, சீவாத தலைமுடிக்காரர்களாக, எப்போதும் கொடூரமாகவே பார்த்துக்கொண்டிருக்கிற வியர்வை வழியும் முகத்துக்காரர்களாக ஒப்பனை செய்யப்பட்டிருப்பார்கள். வேட்டையாடு விளையாடு படத்தில் வக்கிரம்பிடித்த இளம் வில்லன்கள் இருவருக்கும் இளமாறன், அமுதன் என்று இனிய தமிழ்ப்பெயர் சூட்டியிருப்பார் கமல்.

இடைவேளைக்குப் பிறகு வில்லன்களால் நிச்சயமாகக் கதாநாயகர்களின் காதலிகளோ மனைவியரோ தங்கையரோ பிள்ளைகளோ பெற்றோர்களோ கடத்தப்பட்டுவிடுவார்கள். சில படங்களில் அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கோரமான முறையில் கொல்லப்பட்டிருப்பார்கள். கண்கள் சிவக்க, பற்கள் நறநறக்க, தரையிலிருந்து முகத்தை வானம் நோக்கி உயர்த்தி, வெஞ்சினத்தோடு பழிவாங்கப் புறப்படுவான் போலிஸ் கதாநாயகன். ஆக, தமிழ் சினிமா போலிஸ் நாயகர்களுக்குப் பொதுமக்களைக் காப்பாற்றுகிற சட்டப்படியான கடமையைவிட, சொந்த இழப்புக்குக் கணக்குத் தீர்ப்பதுதான் முக்கியம்!

நாயக நடிகைகள் காவல்துறை அதிகாரியாக வந்து தாதாமார்களை வதம் செய்கிற படங்கள் மிகமிகக் குறைவு. முன்பு ஒரே ஒரு வைஜயந்தி ஐபிஎஸ் வந்தது. அதுவும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட படம்தான்.

ரசிகர்களாகிய பொதுமக்கள் இதையெல்லாம் ஏனென்று கேட்பதில்லை. அதைப் போலவே உண்மை வாழ்க்கையில் கேள்விப்படுகிற காவல்துறையினரின் மோதல் துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இடதுசாரி இயக்கங்களும், காவல்நிலைய சித்திரவதைகளில் யாரேனும் மரணமடைகிறார் என்றால் அவர் யார் என்பதைப் பொறுத்து வேறு சில அரசியல் கட்சிகளும், பொதுவாக சில மனித உரிமை அமைப்புகளும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன. உண்மையறியும் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை வெளிப்படுத்தும் தகவல்கள் பெரும்பாலும் காவல்துறை அறிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றன.

காவல்துறையின் இப்படிப்பட்ட திட்டமிட்ட மோதல் நடவடிக்கைகளாலும், அவற்றைப் புகழ்கிற திரைப்படங்களாலும் உண்மையாகவே பாதிக்கப்படுகிறவர்கள் யார்? மேலோட்டமாகப் பார்த்தால், ஊரறிந்த ரவுடிகளும், கொலையே தொழிலாகக் கொண்ட அடியாள் கும்பல்களும்தானே போட்டுத்தள்ளப்படுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. மோதலின்போது இடையில் சிக்கிக்கொள்ளக்கூடிய ஓரிரு அப்பாவிகளைத் தவிர மற்றபடி குற்றவாளிகள் அல்லாத வேறு யாரும் கொல்லப்படுவதில்லையே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. உண்மையில் அந்த எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது.

சிலரது அரசியல் செல்வாக்கு, அதிகார மேலிடத் தொடர்பு, சரியான ஆதாரம் கிடைக்காத நிலைமை, சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தி அடக்கிவிடக்கூடிய வன்மம்... இப்படிப்பட்ட சூழல்களில் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைத்து, சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத்தர முடிவதில்லை. அப்போது இப்படி சட்டத்திற்கும் ஊருக்கும் வெளியே அவர்களின் கதையை முடிப்பதில் தவறு என்ற கருத்தும் பல்வேறு வழிகளில் மக்கள் மனங்களில் ஏற்றப்படுகிறது. அவ்வாறு கருத்தேற்றம் செய்யும் கைங்கரியத்தைச் செய்வதில் போலிஸ் நாயகத் திரைப்படங்கள் பங்காற்றுகின்றன.

அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பதில் கறாராக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட என்கவுன்டர்களுக்கு அனுமதி தரப்படுவது உண்டு. அரசியல் மட்டத்திலோ, துறைசார்ந்த அதிகார மட்டத்திலோ சிலபல சமூகவிரோதிகள் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளப்படுவதும் நடக்கிறது. அவர்கள் எல்லை மீறிச் சென்று வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்க முயல்கிறபோது, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால் பல ரகசியங்கள் உடைபடக்கூடும் என்பதால் இப்படிப்பட்ட என்கவுன்டர்கள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் மனித உரிமை இயக்கத்தினர் சொல்கிறார்கள். ஒரு சில திரைப்படங்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

"அட, வெறும் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்களைப் பார்த்தோமா, பொழுதைப் போக்கிவிட்டு வந்தோமா என்றில்லாமல் இந்த அளவுக்கு ஆராய வேண்டுமா" என்று வழக்கம்போல் சிலர் கேட்கவே செய்கிறார்கள். எந்தத் திரைப்படம் பற்றி எப்படிப்பட்ட விமர்சனம் வைத்தாலும் இப்படிக் கேட்கிறவர்கள் அவர்கள். கலை-இலக்கியத்தின் சமூகத் தாக்கம் குறித்த புரிதல் இல்லாததால் இப்படிக் கேட்கிறார்களேயன்றி அவர்களை வன்முறை ஆதரவாளர்கள் என்று குறைசொல்வதற்கில்லை.

ஆனால், இப்படிப்பட்ட எண்ணங்கள் வளர்க்கப்படுவதன் விளைவை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது வேறொரு கவலை ஏற்படுகிறது.

காவல்துறை அத்துமீறல்கள் நியாயமானவைதான் என்ற கருத்து வலுவாக ஊன்றப்படுவதால், அவர்கள் செய்யக்கூடிய எந்தவொரு தவறான செயலையும் தட்டிக்கேட்க வேண்டும் என்ற மனநிலை மேலோங்குவதில்லை. மக்களுக்காகப் போராடுகிற கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மக்கள் போராளிகள் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுகிறபோது, போலிஸ் நடவடிக்கையில் நியாயமில்லாமல் இருக்காது, என்ற நினைப்பு வருகிறது.

தேர்தல் காலத்தில் வேட்புமனு தாக்கல்கள் முடிவடைந்த பிறகு சில தன்னார்வ அறிவாளி அமைப்புகள் வேட்பாளர்கள் இத்தனை சதவீதம் பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அறிக்கை வெளியிட்டு செய்திகளில் இடம்பெறுவார்கள். கம்யூனிஸ்ட்டுகளும் வேறு சில அரசியல் இயக்கத்தினரும், தொழிற்சங்கத் தலைவர்களும் பொதுக்கோரிக்கைகளுக்கான மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்தான் பதிவு செய்யப்படுகின்றன. அவர்கள் தேர்தலில் பங்கேற்க மனு தாக்கல் செய்கிறபோது, இந்தப் பதிவுகளின்படி கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களேயாவர். இதை மேற்படி அறிவாளி அமைப்புகள் ஆராய்வதேயில்லை. அப்படி ஆராயத் தேவையில்லை என்ற மனப்போக்கை வளர்ப்பதில் என்கவுன்டர் நடவடிக்கைகளும் திரைப்படங்களும் பங்காற்றுகின்றன.

இந்த மனப்போக்கு பரவலாவதால், மனித உரிமைகளுக்கான எந்தவொரு போராட்டம் என்றாலும் சில அரசியல் இயக்கங்களும் சில மனித உரிமை அமைப்புகளுமே அந்தப் போராட்டங்களுக்கென வாக்கப்பட்டவையாக எப்போதும் களம் காண்கின்றனவேயன்றி, அந்த இயக்கங்கள் சார்ந்தவர்கள் அவற்றில் பங்கேற்கிறார்களேயன்றி, வெகுமக்கள் கலந்துகொள்வதில்லை. இது ஜனநாயக வளர்ச்சிக்குப் பெரும் கேடல்லவா?

ஏதாவது ஒரு காவல்நிலைய சாவு பற்றிய செய்தி வருகிறபோது, இறந்தவரின் குடும்பத்தினர், இடதுசாரி - ஜனநாயக சக்திகள், சில அமைப்புகள் தவிர்த்துப் பெரும் மக்கள்திரள் அந்தச் சாவுச் செய்தியைக் கண்டுகொள்வதில்லை. அவன் ஏதாவது தப்பு செய்திருப்பான். அவமானம் தாங்காமல் கயிற்றில் தொங்கியிருப்பான்... என்று இலகுவாக ஒதுக்கிவிடுகிறார்கள்.

ஒரு காவல்துறையின் அத்துமீறல்கள் பற்றிக் கேள்வி கேட்கத் துணியாத இந்த ஒதுக்கல்போக்கு, வேறு எந்தத் துறையின் வரம்பு மீறல்களையும் தட்டிக்கேட்காத  சமூக மனநிலையாக மாறுகிறது. அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட முன்வராத செயலின்மையைகக் கெட்டிப்படுகிறது.

ஒருவேளை இதையெல்லாம் எதிர்த்துக்கிளம்ப மக்கள் தயாராவார்களானால் இருக்கவே இருக்கிறது சாதி! மதம்! எல்லாம் கடவுள் செயல் என்ற போதனை! சாதித்தூய்மையைக் காப்பதற்கு அவதாரம் எடுத்தவர்களாக சில அமைப்புகள் பேரவைக்கூட்டங்கள் நடத்திக்கொண்டிருக்க, “ஆம்பளை கெட்டா வாழ்க்கை போச்சு, பொம்பளை கெட்டா வம்சமே போச்சு,” என்று பஞ்ச் டயலாக் பேசும் திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றனவே!

இப்படியெல்லாம் மக்கள் திசைதிருப்பப்பட வேண்டும், மக்களின் கேள்வி கேட்கும் திறன் மழுங்கடிக்கப்பட வேண்டும், மக்களின் தட்டிக்கேட்கும் வல்லமை பொசுக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய உள்நாட்டு - உலகமய சுரண்டல் தாதாக்களின் விருப்பம் அல்லது ஆக்ஞை. அந்த விருப்பம் அல்லது ஆக்ஞையை அரசு எந்திரங்களோடு சேர்ந்து நிறைவேற்றுகிற கரசேவையை போலிஸ் நாயகத் திரைப்படங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறபோது அதை வெறும் பொழுதுபோக்கென்று விட்டுவிடலாமா?

('தீக்கதிர்' 30-6-2013 இதழுடனான ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளிவந்துள்ள எனது கட்டுரை)

No comments: