Tuesday 5 February 2013

பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்ட பாட்டுக் குரல்


அந்தப் பதின்பருவப் பெண் குழந்தைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்ட, முழுக்க முழுக்கப் பெண்களே கொண்ட, இசைக்குழுவில் இணைந்து பாடத் தொடங்கினார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கின் எழிலோடும் குளுமையோடும் இவர்களது குரலினிமையும் கலந்தது. ஆனால், பாடத்தொடங்கிய சில நாட்களிலேயே அவர்களது குரல் ஒடுங்கிவிட்டது. பாடிப் பாடி தொண்டை கட்டிப்போனதால் அல்ல, பாடவே கூடாது என்று மிரட்டப்பட்டதால்.

முதலில் சமூகவலைத்தளங்களில் சிலர் இப்படியெல்லாம் இளம் பெண்கள் வெளியே வந்து பாடலாமா என்று பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். மறைமுகமான தாக்குதல் மிரட்டலும் அந்தப் பதிவுகளில் இருந்தன.

மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, ‘ட்வீட்டர்’ தளத்தில் அந்தச் சிறுமிகள் அஞ்ச வேண்டியதில்லை, அவர்கள் இசைக்குழுவில் இணைந்து பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை, அவர்களுக்கு அரசு வேண்டிய பாதுகாப்பை அளிக்கும் என்று உறுதியளித்தார்.

ஆனால், துகாதார்ன்-இ-மில்லத் என்ற ஒரு இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு, இப்படிப் பெண்கள் வெளியே வந்து பாடுவது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்தச் சிறுமிகள் தொடர்ந்து பாடினால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது. ஏற்கெனவே மாநிலத்தின் தலைமை முஃப்தி தடையாணை (ஃபட்வா) பிறப்பித்திருக்கிறார்.

சிறுமிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தலைமறைவாக வைத்துள்ளனர். யாரும், குறிப்பாக ஊடகங்கள் சிறுமிகளோடு தொடர்புகொள்ள முடியாத வகையில் அவர்களது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். முதலமைச்சரின் ட்வீட் உறுதிமொழியோ, காவல்துறையோ தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்தப் பெற்றோர் கூறுகின்றனர்.

பள்ளத்தாக்கு தனக்குக் கிடைத்த கூடுதல் இசைக்குரல் இனிமையை இழந்திருக்கிறது.

கலை இலக்கியவாதிகள், ஜனநாயக - மனித உரிமை இயக்கங்கள் இதைக் கண்டிக்கின்றன.

கமல்ஹாசனின் கலை வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக நியாயக் குரல் எழுப்பிய நண்பர்களே இந்தச் சிறுமிகளுக்காகவும் குரல் எழுப்புவீர்களா?

‘விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்தில் நியாயமான கோபத்தை வெளிப்படுத்திய இஸ்லாமிய அமைப்புகளே, முஸ்லிம் நண்பர்களே - உங்களது அந்த ஆவேசத்தின் நியாயத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் கேட்கிறேன் - அந்தச் சிறுமிகளுக்கு எதிரான இந்த மதவாத ஒடுக்குமுறையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே இளம் பெண்களின் கலைத்திறமை வெளிப்பாடுகள் கூடாது என்று சொல்கிறதா? உண்மைதான் என்றால் அது நியாயம்தானா? இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த 21ம் நூற்றாண்டில் தொடர்வது பொருத்தம்தானா? பொருத்தமில்லை என்றால் இதற்கும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா?

3 comments:

ராஜா ஜி said...

இஸ்லாமிய அமைப்புகள் இது போன்ற விஷயங்களீளும் கவனம் செலுத்தவேன்டும், உங்கள் சமூகத்துப் பென்கள் நிலை என்ன என்பது உங்களுக்குத்தெரிந்தால் சரி

ராஜா ஜி said...

இஸ்லாமிய அமைப்புகள் இது போன்ற விஷயங்களீளும் கவனம் செலுத்தவேன்டும், உங்கள் சமூகத்துப் பென்கள் நிலை என்ன என்பது உங்களுக்குத்தெரிந்தால் சரி

ராஜா ஜி said...

இஸ்லாமிய அமைப்புகள் இது போன்ற விஷயங்களீளும் கவனம் செலுத்தவேன்டும், உங்கள் சமூகத்துப் பென்கள் நிலை என்ன என்பது உங்களுக்குத்தெரிந்தால் சரி