Monday 14 October 2024

அசைவற்றதா எதார்த்த சினிமா?

 கூழாங்கல்லையும் கொட்டுக்காளியையும் முன்வைத்து…



இலக்கியத்தில் வெகுமக்கள் ரசனைக்கான (ஜனரஞ்சக) எழுத்து என்றும், தேர்ந்தெடுத்த வாசகர்களுக்கான (சீரியஸ்) எழுத்து என்றும் இரண்டு வகைப்பாடுகள் இருக்கின்றன. பரவலாகச் சென்றடையும் வகையில் எழுதினால் குப்பை இலக்கியம் என்றும், சிறு வட்டங்களுக்குள் எழுதினால் மக்களிடம் வர முடியாத மேட்டிலக்கியம் என்றும் சாடுவது இரு தரப்பிலும் இன்னமும் நடக்கிறது.


இதே சண்டை திரைப்படக் களத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. எழுத்தாக்கங்கள் வாசிக்கப்படுவதை விட திரைப்படங்களைப் பார்ப்பது பல மடங்கு அதிகம். ஆகவே இலக்கிய அரங்கத்தை விட இங்கே நடைபெறும் சண்டைகள் விரிவான கவனத்தைப் பெறுகின்றன. வணிக மசாலாக்கள் என்றும், கலைப் படைப்புகள் என்றும் அணி பிரிந்திருக்கின்றன. கலைப் படங்கள் பன்னாட்டு அளவிலும் உள்நாட்டிலும்  திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்றன. திரையரங்குகளுக்கும் வருகின்றன என்றாலும், அதிக நாட்கள் தாக்குப்பிடிப்பதில்லை.


நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றில் பெரிய நட்சத்திரங்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் இவ்வகைப் படங்களுக்கு நாடப்படுவதில்லை. ஆகவே முதலீட்டுச் செலவு பெரிதும் குறைந்துவிடுகிறது. விழாக்களில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இக்காரணங்களால் பெரும்பாலும் இவ்வகைப் படங்கள் போட்ட காசை எடுத்துவிடுகின்றன எனலாம். திரையரங்கில் கூட்டம் சேராவிட்டால் முதலுக்கே மோசம் என்று தலையில் போட்டுக்கொள்வதற்குத் துண்டைத் தயாராக வைத்துக்கொண்டு நிற்பவர்கள் வணிகப் படத் தயாரிப்பாளர்கள்தான்.


அப்படித் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டவர்கள், ஏன் படம் மக்களின் வரவேற்பைப் பெறவில்லை என்று ஆராய்ந்ததாகவோ, இலையில் சோறு எங்கே இருக்கிறது என்று தேடுமளவுக்கு வெறும் மசாலாக்களாகப் போட்டுக் கிளறியது தப்பு என்று பாடம் கற்றதாகவோ தெரியவரவில்லை. சரி, அவர்களுடைய துண்டு  வேறு பிரச்சினை, அதைப் பற்றித் தனியாகப் பேசுவோம்.


வணிக வெற்றி தவறா?


எதார்த்தப் படைப்புகள், கலைப் படங்கள் என்ற முத்திரைகளுடன் விழாக்களில் பங்கேற்கிற, சில நேரங்களில் விருதுகளையும் வெல்லுகிற பல தயாரிப்புகள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும், திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெறுகிற அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவதில்லை. திறனாய்வாளர்களில் இப்படிப்பட்ட படங்கள் மீதுள்ள உண்மையான ஈடுபாட்டுடன் பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்,  தங்களது திறனாய்வுத் திறனே திறனாய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்


வணிக வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே இவ்வகைப் படங்களின் தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ சந்தையில் வெற்றி கிடைக்காமல் போனால் கவலையில்லை, தங்களது படைப்பு பரவலான மக்களைச் சென்றடைய வேண்டியதில்லை என்று நினைப்பார்களா என்ன?  அப்படி நினைத்தால் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வார்களா என்ன? 


வணிக வெற்றியை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்? உண்மையில் ஒரு படம் வணிகமாகவும் வெற்றி பெறுகிறது என்றால், அது திரையரங்குகளில் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சென்றடைந்திருப்பதன் அடையாளமே. அப்படியானால் படத்தின் மையச் செய்தி அத்தனை ரசிகர்களின் சிந்தனைக்குப் போயிருக்கிறது என்றே பொருள். சமூக அக்கறை இல்லாத படங்கள் லட்சக்கணக்கானவர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறபோது, மாறுபட்ட படங்களில் உள்ள சமூகச் செய்தி, சமூகத்திற்கே வராமல் போவது சோகமானது.


சோகத்திற்குக் காரணம், இப்படிப்பட்ட படங்களில் மக்கள் ரசனை புறக்கணிக்கப்படுவதுதான். மக்கள் ரசனை என்றால் நாற்பது பேரை ஒற்றை நாயகன் பந்தாடுகிற சண்டை, உணர்ச்சிமயமான காட்சி முடிந்ததும் குத்தாட்டம், கதைக்குத் தொடர்பில்லாமல் ஒட்டப்படும் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை.. இதெல்லாம் இல்லாமலே சீரான கதையோட்டத்திலும் காட்சிகளிலும் மனசைத் தொடுகிற படங்கள் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன. பாரதிராஜா, சீனு ராமசாமி,  பா. ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ராம், சுதா கொங்கரா, நித்திலன் சுவாமிநாதன் என்று இதில் வெற்றி பெற்றவர்களைப் பட்டியலிட முயல்கிறபோது, நினைவாற்றல் பற்றாக்குறை காரணமாகப் பலரது பெயர்கள் விடுபட்டுவிடக்கூடும் என்ற சங்கடம் எழுகிறது. மாறுபட்ட கதையாக்கங்களை மக்கள் ரசனையோடு கொடுக்க முன்வருகிற புதியவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறவர்கள் இவர்கள்.


காவல்நிலையக் கொடூரத்தையும், சிறை வாசலிலேயே சாதி அடிப்படையில் கைதிகள் பிரிக்கப்படுவதையும் காட்டிய ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு, “இது திரைப்படம் அல்ல, இந்திய வரைபடம்,”  என்று எழுதினேன். அதன் இயக்குநர் ஞானவேல், இப்போது ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிற ‘வேட்டையன்’ படத்தின் டீசர் காவல் அதிகாரியின் என்கவுன்டர் கொலையைப் போற்றுவதாக இருக்கிறது என்று கூறி ஒருவர் வழக்குத் தொடுத்திருக்கிறார் (சுவையான கூடுதல் தகவல், அவரும் ஒரு முன்னாள் நடத்துனர்!). படம் வந்தபின் அதை ஆராயலாம்.


கூழாங்கல்லும் கொட்டுக்காளியும்


ஓடிடி மேடைக்கு வந்த ‘கூழாங்கல்’, கொட்டுக்காளி’ படங்களைப் பார்த்தபோது கலவையான உணர்வுகள் ஏற்பட்டன. இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் தேர்வு செய்த கதைக்கருக்கள் இதுவரை யாரும் சொல்லாதவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. காட்சிப்படுத்திய விதங்கள் புதிய ஆழமான ரசனையை வழங்கின. இரண்டு படங்களுமே தனிப்பட்ட கிராம வாழ்க்கையைக் காட்டி, பொதுப்பட்ட ஆணகங்காரத்தைச் சந்திக்குக் கொண்டு வருகின்றன. 


வேலைவாய்ப்புகள் வறண்டுபோன கிராமத்தில் ஆண்கள் குடியும் பகடையாட்டமுமாகப் பொழுதைக் கழிக்க, பெண்கள் வசவுகளையும் வெயிலையும் வாங்கிக்கொண்டு ஊருக்கு வெளியே குடிநீர் ஊற்றின் அருகில் காத்திருக்கிறார்கள். இவர்கள் இப்படியே உழன்றுகொண்டிருக்கச் செய்வதில் நமக்கு ஏதோவொரு பங்கு இருக்கிறது என்ற உறுத்தலை ஏற்படுத்துகிறது ‘கூழாங்கல்’. பெண் ஆணின் உடைமை என அங்கீரிக்கும் சமூகப் பேயை உடுக்கடித்து விரட்டுகிற பொறுப்பு இனி நம் கையில்தான் இருக்கிறது என்ற பொறுப்பை உணர்த்துகிறது ‘கொட்டுக்காளி’.


இந்தக் கட்டுரை இவ்விரு படங்களுக்கான திறனாய்வு அல்ல.  இப்படிப்பட்ட படங்களின் பொதுவான சில போதாமைகள் என நான் கருதுவது பற்றிப் பேசுவதே நோக்கம். ஆகவே இப்படங்களின் கதைகள், கலைஞர்களின் பங்களிப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களுக்குள் போகவில்லை.


இந்தப் படங்கள் இந்தச் செய்திகளைச் சொல்கின்றன என்று, என்னுடன் அமர்ந்து  பார்த்த குடும்ப நண்பருக்கு விளக்கம் தர வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, ‘கொட்டுககாளி’ படம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது, அவளுடைய மாமன் என்ன செய்தான் என்று குறியீடாகக் கூட முடிவைக் காட்டாமல் படீரென்று முடியும்.


நண்பர், “ஒன்று அந்தப் பெண்ணின் அவலம் தொடர்வதாக முடித்திருக்க வேண்டும். இல்லையேல் மாமன் திருந்துவதாக முடித்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் முடித்திருக்கிறார்கள். என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரிந்துகொள்ள  முடியவில்லையே,” என்றார்.


“பூசாரியிடம் மந்திரிப்பதற்கு முதலில் வந்திருந்த பெண்ணை அவன் எப்படிக் கையாள்கிறான் என்பதைப் பார்க்கிற மாமன் மனதுக்குள் புழுங்குகிறான். அதற்குப் பிறகு இந்தப் பெண்ணை மந்திரிப்பதற்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்புறம் அந்தச் சேவல் போல அவளுடைய சுதந்திரக் கழுத்து அறுபட வேண்டுமா, அல்லது பூசைச் சடங்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமா என்று நம்மை யோசிக்க வைக்கிறார்கள். படத்தின் முடிவை நம் கையில் விடுவதன் மூலம் சமூகப் பழக்கத்தை மாற்றுவதையும் நம் கையில் விடுகிறார்கள்,”     என்றேன். கதை சொல்வதில் இது ஒரு புதிய வடிவம் என்றும் கூறினேன். புரிந்து கொண்ட களிப்பு, இப்படி விளக்கம் அளித்தால்தானே புரிகிறது என்ற சலிப்பு இரண்டுமே அவர் முகத்தில் படரக் கண்டேன்.


இப்படி ஒவ்வொருவராகப் பார்த்து பதவுரை பொழிப்புரை சொல்ல வேண்டுமா? விளக்கமளித்தால்தான் புரியும் என்றால் அது படைப்பின் வெற்றியாகுமா? புரிகிறது, புரியவில்லை என்று பேசுவதே கூட ஒரு வெற்றிதான் என்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். திரைப்படத் திறனாய்வு முகாம்களில் இப்படிப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. விழாக்களில் திரையிடப்படுகிற, திறனாய்வு முகாம்களில் விவாதிக்கப்படுகிற படங்களைப் பார்க்கிறவர்கள் ஒரு புதிய ரசனைக்கும் புரிதலுக்கும் பழக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், ஒட்டுமொத்த திரைப்படப் பார்வையாளர் மக்கள் தொகையில் இவர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள்? விழாக்காரர்கள் ஏன் இப்படி விளக்கவுரை தேவைப்படும் தயாரிப்புகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் கேட்கத் தோன்றுகிறது.


நடக்க நடக்க


இவ்வாறு புதிர்த்தனமாக முடிப்பதால் மட்டுமே மக்களிடமிருந்து விலகியிருக்கவில்லை. காட்சிகளின் நிகழ்வுகள்  மெதுவாக, மிக மெதுவாக நகர்வதும் பெரும்பாலான பார்வையாளர்களைத் தள்ளி நிறுத்துகின்றன. ஒருவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, தெருக்களைத் தாண்டி, ஊர்முனையில் இருக்கிற கடைக்கு வருவதாக ஒரு காட்சி இருக்கிறது என்றால், வீட்டில் அவர் சுவரில் தொங்கும் சட்டையை எடுத்து மாட்டிக்கொள்வது, வாசலை நோக்கி நடப்பது, படியில் இறங்குவது, தெருவில் நடப்பது, அடுத்த தெருவுக்குத் திரும்பி நடப்பது, அதற்கடுத்த தெருவில் திரும்பி நடப்பது என அவர் பின்னாலேயே கேமரா நடக்கும். கடைசியில் கடையை அடைவார். ஏதோவொரு பொருளை  வாங்கிக்கொண்டு மறுபடி வந்த வழியே தெருவில் நடப்பது, அடுத்த தெருவில் திரும்பி நடப்பது, அதற்கடுத்த தெருவில் திரும்பி நடப்பது, படியில் ஏறுவது. வாசலைத் தாண்டி வீட்டுக்குள் நடப்பது, சட்டையைக் கழற்றிச் சுவரில் தொங்கவிடுவது என்று கேமரா பின்தொடரும்.


வீட்டிலிருந்து கிளம்புவது போல் ஒரு ஷாட் முடிந்ததும், அடுத்து கடையில் நிற்பது போல் ஒரு ஷாட்  வருமானால், அதற்குள்ளாக எப்படி கடைக்கு வந்தார்  என்று பார்வையாளர்கள் கேட்கப்போவதில்லை. இடையில் நீண்ட தொலைவு நடந்திருப்பார் என்று புரிந்துகொள்வார்கள். கட் ஷாட், குயிக் ஷாட் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தகைய வேகமான காட்சிப் பதிவுகளுக்குப் பார்வையாளர்கள் நன்றாகவே பழகியிருக்கிறார்கள். அல்லது, கலைப்பட வட்டாரத்தினர் சொல்ல விரும்புவது போல பார்வையாளர்கள் வேகக் காட்சிகளுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.


‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ இரண்டிலுமே சில நகர்வுக் காட்சிகள் தேவையின்றி மெதுவாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறேன். திறனாய்வு  முகாம்களில் திரையிடப்படும் பல நாடுகளைச் சேர்ந்த படங்களிலும் இதே போல் பார்த்திருக்கிறேன். கொட்டுக்காளிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலைமையை மாற்ற ஒரு சமூகமாக என்ன செய்ய வேண்டும்  என்று பார்வையாளர்களின் முடிவுக்கு விடுகிற முடிப்பு நயமானது, பொருளுள்ளது. அந்த நயமும் பொருளும் முந்தைய காட்சிகளின் பொருத்தமான வேகத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் இந்த நல்ல படைப்பு மகத்தான படைப்பாகியிருக்கும். 

 

எதார்த்தம், ரியலிசம்  எனப்படும் மெய்யியல் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்று கேட்க வேண்டியிருக்கிறது. மசாலா  என்று ஒதுக்கப்படும் வணிகப் படங்களில் கூட, சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் நகர்வு அப்படியப்படியே காட்டப்படுவதுண்டு. குறிப்பிட்ட சூழலை, கதாபாத்திரங்களின் மன அழுத்தத்தை அந்தக் காட்சிகள் உணர்த்திவிடும். அடுத்து, கலைப்படங்கள் எல்லாமே மெதுவான காட்சி நகர்வைக் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட முடியாது. எடுத்துக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் பிரச்சினை, ஒரு குடும்பத்தின் சிக்கல், ஒரு சமூகத்தின் நிலைமை ஆகியவை எதார்த்தமானவையாக இருக்கும். சித்தரிப்பு என்று வருகிறபோது வேகக்காட்சிகள் தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.


மூவகை நீளங்கள்


பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு வந்திருந்தார் நடிகர் ராஜேஷ். அவரைச் சந்தித்து உரையாடியபோது, படக் காட்சிகளின் வேகம், நீளம் பற்றிப் பேச்சு வந்தது. “கட் லென்த், லைவ் லென்த், டெத் லென்த் என்று மூன்று விதமான நீளக்காட்சிகள் இருக்கின்றன. ஒரு இடத்தையோ நடிகரையோ பொருளையோ காட்டிவிட்டு உடனே அடுத்த இடத்தைக் காட்டுவது கட் லென்த். நடந்து போவதை அப்படியே முழு நேரமும் காட்டுவது லைவ் லென்த். இதெல்லாம் தேவையைப் பொறுத்தது. தேவையே இல்லாமல் காட்சி இழுத்தடிக்கப்படுமானால் அதுதான் டெத் லென்த்,” என்றார் அவர்.


1963ல் ‘நானும் ஒரு பெண்’  என்ற படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒரு வங்காளப் படத்தின் மறு தயாரிப்பான அந்தப் படத்தில், ஒரு மேல் தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் (எஸ்.எஸ். ராஜேந்திரன்)  கல்வியறிவற்ற ஏழையான நாயகியும் (விஜயகுமாரி) காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள். கறுப்பாக இருக்கும் அவளை அந்தக் குடும்பத்தார் வெறுத்து ஒதுக்குவார்கள். அவர்களின் மனங்களை அவள் தனது செயல்களால் வென்றெடுப்பதே கதை. அதில் பாதிப்படம் கடந்த பின் ஒரு காட்சி - மாடியில் தனது அறை முகப்பில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருப்பார் மாமனார் (எஸ்.வி. ரங்காராவ்). அவ்வழியாகச் செல்லும் நாயகியிடம், “ஒரு காஃபி கொண்டு வாம்மா,” என்று கேட்பார். அந்த வீட்டில் முதல் அங்கீகாரம்! உடம்பெல்லாம் உற்சாகம் தொற்றிக்கொள்ள, விறுவிறுவென்று அந்த முதல் தள நடைமேடையைத் தாண்டி, படிகளில் இறங்கி, நடுக்கூடத்தை ஓட்டமும் நடையுமாகக் கடந்து, சமையலறைக்குள் நுழைந்து, காஃபி கலந்து, மறுபடி ஹால், படிகள், நடைமேடை, அறை முகப்பு என்று போய் மாமானாரிடம் கொடுப்பாள். அந்த லைவ் லென்த் காட்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் அவளுடைய உற்சாகம் தொற்றிக்கொள்ளச் செய்திருப்பார் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர் (வங்காளப் படத்திலும் அப்படி இருந்ததா என்று தெரியவில்லை.


இவ்வாறு கதையோட்டத்திற்குத் தேவையே இல்லாமல், குறியீடாகவும் பொருள் விளங்கச் செய்யாமல் ஒரு அசைவோ அல்லது அசைவற்ற நிலையான காட்சியோ நீண்ட நேரம் காட்டப்படுமானால் அது டெத் லென்த். நாயகன் நாயகியைப் பெயர் சொல்லி அழைக்கிறான். அவன் அழைத்து முடித்த பின் சில நொடிகள் அசைவற்ற அவனது முகத்தைக் காட்டும் கேமரா. அப்புறம் மெதுவாக நாயகியிடம் திரும்பும். அவள் அவனை ஏறிட்டுப் பார்ப்பாள். சில நொடிகள் கடந்த பின், “என்ன” என்று கேட்பாள். மறுபடி சில நொடிகள் அவள் முகத்திலேயே உறைந்து நிற்கும் கேமரா. இப்படியே அந்தக் காட்சி ஒரு பத்து நிமிட நேரத்திற்கு நீளும். இந்த மாதிரியான டெத் லென்த் காட்சிகள் பல கலைப்படங்களில் இடம் பெற்று “இதுதான் ரியலிசமா”  என்று கேட்க வைக்கின்றன. நமது நாட்டில், குறிப்பாக கிராமங்களில் கதாபாத்திரங்கள் இப்படி மெதுவாக எதிர்வினையாற்றுவதாகக் காட்டுவதில் எதார்த்தமே இல்லை. உடனுக்குடன் பதிலளிப்பதும் தொடர்ந்து பேசுவதும்தான் இந்த மண்ணின் மக்களுடைய பழக்கம்.


வணிக மசாலாப் படங்களில் கூட, கட் லென்த் ஒட்டுகள் நிறைய இருக்கிற வேகமான காட்சிகள் டெத் லென்த் விளைவை ஏற்படுத்திக்  கொட்டாவி விட வைப்பதுண்டு. ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘இந்தியன் 2’ இதற்கு சரியான எடுத்துக்காட்டு.  வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்திலும், அப்பனும் மகனும் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்க, “துப்பாக்கிதான் இருக்குதில்ல, சட்டுப் புட்டுனு சுட்டுட்டுப் போங்கப்பா” என்று அலுத்துக்கொள்ள வைத்திருப்பார்கள்.


சமூகத்தைச் சென்றடைய


மாற்று சினிமா காதலர்களின் இதயங்களில் குடியேறியவரான  சத்யஜித் ரே படங்களின் எதார்த்தக் காட்சிகள் அவரது கதைமாந்தர்களின் வாழ்வோடு நம்மை ஒன்றச் செய்வதாக இருக்கும். முகாம்களுக்கு வந்த பல மாற்று சினிமாக்களின் மக்களோடு இப்படி ஒன்ற முடிந்திருக்கிறது.


உலக அளவில் புதிய அலைப் படங்களின் முன்னோடி  ஜீன் லக் கொடார்ட். அவருடைய ‘டூ ஆர் த்ரீ திங்ஸ் ஐ நோ அபௌட் ஹெர்’ என்ற பட்ம் (1967), நகர்ப்புற வாழ்க்கையும், முதலாளித்துவத்தால் புகுத்தப்படும் நுகர்வுப் பொருள்களும், குண்டுகள் போடும் யுத்த அரசியலும் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிப் பேசும். அதன் கதைமாந்தர்கள் கதையோடு நடமாடிக்கொண்டே நம் பக்கம் திரும்பி நம்மோடு பேசுவார்கள். இத்தகைய மாற்றுப் படங்களைக் கொடுத்தவர் பிற்காலத்தில் வேகமான அசைவுகளுடன் வெகுமக்கள் ஏற்புக்கான படங்களைத் தயாரிப்பதற்குத் தயங்கவில்லை.


கருப்பொருள், கதையாக்கம், திரைக்கதை வடிவம், காட்சியமைப்புகள் இவையனைத்தும் படத்தை உருவாக்குகிறவர்களின் படைப்புரிமை. அவர்களது சுதந்திரத் தேர்வு. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த உரிமையும் சுதந்திரமும் போற்றத்தக்கவை. ஆனால், மெதுவாக அசைகிற அல்லது அசைவற்ற படிமங்கள் மட்டுமே கலை  என்று வாதிடுவதும், இப்படித்தான் எடுப்போம், அதைப் பார்க்கும் தகுதியைப் பார்வையாளர்கள் வளர்த்துக்கொள்ளட்டும் என்று தள்ளுவதும்தான் சிக்கல். இந்தக் கருத்து, இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற வேண்டும், இவற்றின் சமூகச் செய்திகள் உண்மையாகவே சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்ற ஆசையிடலிருந்தும் அக்கறையிலிருந்துமே முன்வைக்கப்படுகிறது. மக்களின் உண்மைப் பிரச்சினைகளைப் பார்க்க மறுக்கும் சந்தைப் படங்களுக்கும், மக்களின் ரசனை வளர்ச்சியை மதிக்க மறுக்கும் விழாப் படங்களுக்கும் என்ன வேறுபாடு? தேர்ந்தெடுத்த திறனாய்வாளர்களுக்கும் கருத்துடன்பாடு உள்ள பார்வையாளர்களுக்கும் மனநிறைவு தந்தால் போதுமா?


(‘மின்னம்பலம’ இணைய ஏட்டில் 12-10-2024ல் வெளியானது)


மொழிபெயர்ப்பு மேடையில் கவிதையும் கவித்துவமும்


 





சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறபோது, அவற்றில் மேற்கோள் காட்டப்படுகிற கவிதைகள் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. ஒரு முழுக்கட்டுரையைத் தமிழாக்குவதற்கு நிகரான, சில நேரங்களில் அதைவிடக் கூடுதலான நேரத்தை அதில் வரும் கவிதை எடுத்துக்கொள்ளும். ஒட்டுமொத்தக் கட்டுரையைப் பற்றி “நல்ல மொழிபெயர்ப்பு” என்று பாராட்டுகள் வந்தாலும்,கவிதையைப் பொறுத்த வரையில் முழு மனநிறைவு எனக்கு ஏற்பட்டதில்லை. அண்மையில் கூட, முயன்று பார்க்கலாமே என்று மாவோ கவிதையொன்றை மொழிபெயர்த்தேன். அது மாவோ சீன மொழியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை. பணியை முடித்த பிறகு எனக்குள் எழுந்த கேள்வி: “கவிதையை மொழிபெயர்த்துவிட்டோம், ஆனால் கவித்துவத்தை?”


பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளைப் படிக்கிறபோதெல்லாம் இதே சிந்தனை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்கள் அந்தக் கவிதைகளைச் சிறப்பாகவே மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள், ஆனால் கவித்துவத்தை முழுமையாகத் தொட்டுவிடவில்லை. ஒருவேளை மொழிபெயர்ப்பாளரே ஒரு கவிஞராகவும் இருப்பாரானால், கவித்துவத்தை ஓரளவுக்கு வேண்டுமானால் நெருங்கக்கூடும்.


இது மொழிபெயர்ப்பாளர்களின் இயலாமையல்ல, மாறாகக் கவிதையின் வல்லமை. கவிதையையும் கவித்துவத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஆயினும் இரண்டுக்குமிடையே தெளிவான வேறுபாடுகள் இருக்கின்றன.


கவிதையும் கவித்துவமும்

கவிதை  ஒரு கலை வடிவம். சொற்களைப் பயன்படுத்தி படைப்பாளியின் உணர்வுகளை, கருத்துக்களை ஒரு வகையான லயத்தோடு வெளிப்படுத்துகிறது கவிதை. வாசிப்பவரின் எண்ண மேடையில் காட்சிகளை உருவாக்கும் ஒரு வழிமுறையான. கவிதை  ஒரு தயாரிப்பு, ஒரு பொருள். இது படிக்கப்படலாம், கேட்கப்படலாம், ஆராயப்படலாம்.

கவித்துவம் என்பதோ ஒரு குணம், ஒரு தன்மை. ஒரு கருத்தை அழகாக, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் திறனோடு ஐக்கியமாகியிருப்பது கவித்துவம். சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பு,  காட்சியின் சித்தரிப்பு ஆகிய அனைத்திலும் கலந்து ஊடாடியிருக்கும், ஆனால் தனித்துத் தெரியாது. கவிதையை வாசிக்கலாம், கேட்கலாம், ஆராயலாம் - ஆனால் கவித்துவத்தை உள்ளார்ந்து அனுபவிக்கத்தான் முடியும். அப்படி உள்ளார்ந்து அனுபவிக்க வைத்தால்தான் கவித்துவம். காற்று நம் மேனியைத் தழுவுவதைத் தொடு உணர்வால் அறியலாம், ஆனால் காற்றின் உயிர்வளியை சுவாசித்து அனுபவிக்கவே முடியும் இல்லையா?

கவித்துவம் இல்லாமல் கவிதை இருக்க முடியாது. கவித்துவம் இல்லாதது கவிதையாகாது. கவிதை போல எழுதப்பட்ட சொல்லடுக்குகளாகத்தான் இருக்கும். இதில் விந்தை என்னவெனில், கவித்துவம் இருக்கும் இடமெல்லாம் கவிதை இருக்க வேண்டும் என்பதில்லை! அழகிய ஓவியத்தில், மயக்கும் சிற்பத்தில், கிறக்கும் இசையில், இனிக்கும் உறவில் கவித்துவம் பொதிந்திருக்கும்.

லட்சத்தில் ஒன்றா, லட்சத்து ஒன்றாவதா?

இலக்கிய முகாம்களின் ஓய்வுப் பொழுதுகளில், முகாமின் உரைகளை விடவும் சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும். அப்படியொரு பொழுதில், எது கவிதை என்றொரு கலந்துரையாடல் நடந்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவை பொதுவான விளக்கங்களாகவும், அவர்களுடைய சொந்த அனுபவப் பகிர்வுகளாகவும் இருந்தன. “தேர்ந்தெடுத்த சொற்களால் காட்சியையும் கருத்தையும் கடத்துவது கவிதை,” என்றார் ஒருவர். “அப்படிக் கடத்துகிறபோது அதில் ஒரு இசை இருக்குமானால் அது கவிதை,” என்றார் இன்னொருவர். “வழக்கத்தில் இருக்கிற சொற்களை வழக்கமில்லாத வகையில் பொருத்தினால் கவிதை,” என்றார் மற்றொருவர். “மொழியின் உருவக அழகியல் வெளிப்படுவது கவிதை,” என்றொரு கருத்து வந்தது.

கடைசியில் மூத்த கவிஞர் கந்தர்வன், “எது புதுசோ அது கவிதை. ஒரு காட்சியையோ கருத்தையோ உணர்வையோ இதுவரை மாறுபட்ட சொல்லாக்கத்தில், புது உருவகத்தில் சொல்கிறபோது அது கவிதையாகிறது. உதாரணமாக, ஏழ்மை பற்றி லட்சம் கவிதைகள் வந்திருக்கலாம். உன்னுடையது லட்சத்தில் ஒன்றைப் போல இல்லாமல், லட்சத்து ஒன்றாவதாக இருக்க வேண்டும்,” என்றார். எல்லோரும் மௌனமாக அதை உள்வாங்கிக்கொண்டிருந்தபோது அவர் இப்படி முடித்தார்: “ஆனால் நான் சொல்வது கவிதைக்கான இறுதிக் கோட்பாடு அல்ல. இன்னமும் சரியான விளக்கம் எதிர்காலத்தில் வரலாம்.”

கவித்துவம் பற்றியும் பல வகையான விளக்கங்களை அவரவர் கவிதை நுகர்வு சார்ந்து அளிக்கலாம். இன்னின்ன விதங்களில் கவித்துவம் வெளிப்படும் என்று எடுத்துக் காட்டலாம். ஆனால் இதுதான் கவித்துவம் என்று இறுதியாக வரையறுத்துவிட முடியாது.

ஆனால், ஒன்றைச் சொல்லலாம். கவித்துவத்தோடு இருந்தால்தான் அது கவிதை. எத்தனையோ நிகழ்வுகளை, பிரச்சினைகளை நான் கட்டுரையாக்கியிருக்கிறேன். முற்போக்கான கண்ணோட்டத்துடன் எழுதுகிறேன் என்ற இறுமாப்பு கூட இருந்ததுண்டு. ஆயினும், ஒரு கட்டுரைக்கு நான் எடுத்துக்கொண்ட கருப்பொருளை ஒரு கவிஞர் எடுத்துக்கொண்டு தனக்கேயுரிய கவித்துவத்துடன் கவிதையாகப் படைப்பாரானால், அதன்  தனித்துவத்தில் ஒரு மகத்துவம் அமர்ந்துகொள்ளும்.

வலியோடும் சுவையோடும்

ஒரு துன்பமான நிகழ்வு பற்றிய கவிதையை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். கவிதையில் உள்ள அந்தத் துன்பத்தைப் பற்றிய செய்தி வாசிப்பாளருக்கும் மனவலியைத் தரும். அத்தோடு நின்றுவிடாமல், கவிதையைப் படித்ததற்கான இலக்கியச் சுவையை அது தர வேண்டும். ஒரு கொடுமையான ஒடுக்குமுறை பற்றிய கவிதை, அதற்கெதிரான ஆவேசத்தைக் கிளர்த்துவதோடு, அதை வாசித்ததற்கான இலக்கியச் சுவையை அது தர வேண்டும். 

இப்போது கவிதை மொழிபெயர்ப்புக்கு வருவோம். கட்டுரைகளையும் கதைகளையும் போல அல்லாமல் கவிதைகளை மொழிபெயர்ப்பது பெரிய சவாலாக இருப்பது ஏன்?  இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஒரு மொழியின் கவிதைகள் அதன் ஒலி இயல்போடும் இணைந்தவையாக இருக்கின்றன. ஒலியின் இனிமை, வடிவமைப்பு ஆகியவை கவிதையில் முக்கியத்துவம் பெறுகின்றன. எழுத்து இல்லாமல் ஒரு மொழி இருந்துவிட முடியும். ஆனால் ஒலி இல்லாமல் மொழி இருக்க முடியாதல்லவா? ஒரு மொழியின் ஒலியில் உள்ள தனித்துவத்தை மற்றொரு மொழிக்குப் படியெடுப்பது கடினம்.

சவால் தொடங்குமிடம்

கவிதைகளை அந்தந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த தனித்துவமான இலக்கியச் சொல்லாடல்களும் உருவகங்களும் அணி செய்கின்றன. ஒரே மொழி, குறிப்பிட்ட வட்டார அடையாளங்களோடு பேசப்படுவது நமக்குத் தெரியும். தமிழிலேயே மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்று பிரித்துப் பார்க்க முடிகிறது. சொற்களில் மட்டுமல்லாமல், அந்தச் சொற்களை உச்சரிப்பதிலும் அந்தந்த வட்டாரத்திற்கே உரிய அழகும் இனிமையும் இருக்கின்றன. வட்டாரச் சொற்களின் அந்த அழகையும் உட்பொருளையும் மொழிபெயர்ப்பது எப்படி? சவால் அங்கேதான் தொடங்குகிறது

அதே போல், கவிதைகள் குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்களின் வாழ்க்கைச் சூழல், பண்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றைப் பொதிந்துகொண்டு வருகின்றன. அந்த நுணுக்கங்களை முழுமையாக வேறொரு மொழிக்கு மாற்றுவது மலையைப் பெயர்ப்பது போன்றதுதான்.

கவிதையில் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. சில கவிஞர்கள் தமது கவியாக்கங்களில் நேரடியாகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதுண்டு..அது அந்தக் கவிஞரின் அல்லது யாரோ ஒருவரின் தனிப்பட்ட உணர்வாகவும் இருக்கலாம், சமூக உணர்வாகவும் இருக்கலாம். குறிப்பாக, அரசியல் சார்ந்த படைப்புகளில் சமூக உணர்வு கடத்தப்பட்டிருக்கும். அத்தகைய  உணர்வுகளை மொழிபெயர்ப்பதும் சவால் மிக்க பணிதான்

ஒரு கனிந்த படைப்பாளிக்கென்று கண்ணோட்டம் இருக்கும். வாழ்க்கையையும், சமுதாயத்தையும், அரசியலையும் பற்றிய அவரது சித்தாந்தம் சார்ந்த கண்ணோட்டமாக அது இருக்கும். அவருக்கென்று தனித்துவமான வெளிப்பாட்டு நடையும். இவற்றை இன்னொரு மொழியில் பெருமளவுக்கு மூலப் படைப்புக்கு முரணில்லாமல் கொண்டு செல்லலாம். முழுமையாக அந்த வேறொரு மொழியிலேயே எழுதப்பட்ட கவிதையாக மாற்றுவது எளிதல்ல.

சவாலே ஒரு கடமை

இப்படியான சவால்கள் இருப்பினும், திக்கெட்டும் சென்றாக  வேண்டுமே. இலக்கியத் திரவியமெல்லாம் கொண்டுவந்து சேர்த்தாக வேண்டுமே. நம் படைப்பாக்கப் பெருமையை உலகறியச் செய்தாக வேண்டுமே. மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த மாபெரும் கடமை இருக்கிறதே.

ஒரு படைப்பின் மூல மொழி, மாற்றப்படும் மொழி இவை இரண்டிலுமே ஒரு மொழிபெயர்ப்பாளர் தேர்ச்சி கொண்டிருக்க வேண்டும். இது கட்டுரை, கதை, நாடகம், திரைவடிவம் என எல்லாவற்றிற்கும் பொருநதும். கவிதைக்கோ இது மிகமிகத் தேவையான தகுதி. சும்மா அகராதியைப் பார்த்து, அல்லது சொற்களுக்கான பொருள்களை கணினியிலோ கைப்பேசியிலோ இணையத்தளத்தில் தேடிப் பார்த்துக் கவிதை மொழியாக்கத்தை முடித்துவிடலாம் என்று நினைத்தால் வாரிவிட்டுவிடும். அவை உதவிகரமாக இருக்குமேயல்லாமல், மூலப் படைப்புக்கு நெருக்கமாக வருவது மொழிபெயர்ப்பாளரின் வாசிப்பு, உள்வாங்கல், தேடல் போன்ற திறன்களைப் பொறுத்தே வெற்றிகரமாக அமையும்.

பாடல், செய்யுள், மரபு வழி, புதுக்கவிதை, சிறுபாடல், ஹைக்கூ, குறட்பா என்று கவிதைத் தோப்பில் பலவகைத் தாவரங்கள் பரவியிருக்கின்றன. அவற்றை அறிந்திருப்பது, அவற்றின் நிழலில் ஒதுங்குவது போன்ற செயல்களும் மொழிபெயர்ப்புச் செடி வளர்ப்பில் பங்களிக்கும்.

இலக்கிய ஆர்வம், ஆழ்ந்த புரிதல், பரந்த அறிவு ஆகியவை அடிப்படைத் தேவைகளாகும். முன்னரே குறிப்பிட்டது போல, மொழிபெயர்ப்பாளரே படைப்பாளியாகவும் கற்பனைத் திறன் கொண்டவராகவும் இருப்பது கூடுதல் வலிமையாகச் சேரும். பண்பாட்டுச் சொத்துக்களான சொலவடைகள், பழமொழிகள், உருவகங்கள் ஆகியற்றை அறிந்து வைத்திருத்தல் மொழிபெயர்ப்பில் துணையாக வந்து அமரும். ஒலியை மொழிபெயர்த்துவிட முடியாது என்ற புரிதலுடன், கவிதையின் பிற தன்மைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இன்னொரு மொழியின் மேடையில் ஏற்றுவதற்கு உழைக்க வேண்டும். அந்த ஈடுபாடும் உழைப்பும் இருக்குமாயின், கவிதை மொழிபெயர்ப்பின் கடினமான சவால்களைத் தாண்டி மனநிறைவைத் தரும் - படைப்பாளிக்கும் வாசகருக்கும். 

(புக்டே தளத்தில் வெளியான எனது கட்டுரை)


Sunday 13 October 2024

அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?


காலங்காலமாக மனிதர்களைக் குடைந்து கொண்டிருக்கிற கேள்வி - “மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது?” தொன்மையான சித்தாந்தங்களிலிருந்து நவீன தத்துவங்கள் வரையில் இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடுவதில் தான் பிறந்தன எனலாம். அவற்றின் தொடர்ச்சியாக, எப்போதும் இருந்து வந்திருக்கிற “அனைத்தையும் படைத்தது யார்” என்ற விசாரணையோடு இணைத்து கடவுள் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. கடவுளைத் தொழுதால் மரணத்திற்குப் பின் மகிழ்ச்சிகரமான மறுவாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கைகள் ஊன்றப்பட்டன. தொழுவதற்கான வழிபாட்டுச்சடங்குகள் வகுக்கப்பட்டன. வாழ்க்கை நடைமுறைகளோடு இணைத்து, குழுக்களாக, கூட்டங்களாக, சமூகங்களாக, நிறுவனங்களாகக் கட்டமைக்கப்பட்டது. மதங்கள் பிறந்தன.

இறப்புக்குப் பிறகு மனிதர்கள் ஆவிகளாகச் சுற்று கிறார்கள், ஆசைகள் நிறைவேறாமல் அற்பாயுசில் இறக்கிறவர்கள் பேய்களாகிறார்கள். உடல் அழிந்தா லும் ஆன்மா அழியாமல் தன் நிறைவைத் தேடுகிறது, அந்தத் தேடலில் தன்னைப்படைத்துப்புவிக்கு அனுப்பி யபரம் பொருளைக் கண்டடைந்து சரணாகிறது…. என்று புகட்டப்பட்டது. சரணடைய முடியாத ஆன்மாக்கள் மறுபடி மறுபடி மனிதர்களாகப் பிறவியெடுக்கின்றன என்றும், ஐக்கிய மாகிற வரையில் பிறவிகள் தொடர்கின்றன என்றும் விளக்கமளிக்கப்பட்டது. மரணத்திற்குப்பிந்தைய நிலை பற்றிய பல்வேறு கோட்பாடுகள் இன்றளவும் சொல்லப்படுகின்றன. ‘ஸ்டார்ஸ் இன்சைடர்’ இணைய ஊடகமும், ‘விக்கிபீடியா’ போன்ற தரவுத்தளங்களும் தெரிவிக்கும் தகவல்கள் சுவையானவை.

கனவுக்கோட்பாடு

2400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன ஞானி ஜுவாங்ஸி என்ற ஜுவாங்ஜூ. அவர் ஒரு கனவு கண்டா ராம். அதில் ஒரு வண்ணத்துப்பூச்சி வந்ததாம். உறக்கம் கலைந்து எழுந்தவருக்கு ஒரு சந்தேகம் தொற்றிக் கொண்டது. “நமது கனவில் வண்ணத்துப்பூச்சி வந்ததா அல்லது வண்ணத்துப்பூச்சியின் கனவில் நாம் வந்தி ருக்கிறோமா” என்பதே அந்தச் சந்தேகம். அதை ஒரு தத்துவமாக வரித்துக்கொண்டு உருவாக்கப்பட்டது இந்தக்கோட்பாடு.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையே ஏன் ஒரு கனவாக இருக்கக்கூடாது என்ற கேள்வி இதில் முன் வைக்கப்படுகிறது. உங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டால் கனவா இல்லையா என்று தெரிந்து விடுமே என்று சொல்லப்பட்ட போது, அப்படிக் கிள்ளு வதும் வலிப்பதும் விழிப்பதுமே கூட கனவின் ஒரு பகுதி யாக ஏன் இருக்கக்கூடாது என்று இந்தக் கோட்பாட்டா ளர்கள் கேட்கிறார்கள். நாம் இறக்கிற போது ஒரு குழப்பமான, ஆழமான, நீண்ட கனவிலிருந்து நாம் விழித்தெழுகிறோம் – அவ்வளவு தான் என்கிறார்கள்.

ரஸ்டாபேரியர் கோட்பாடு

1930களில் வட அமெரிக்கக் கண்டத்தின் ஜமைக்கா தீவுநாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்டாபேரி என்ற புதிய மதத்தின் தத்துவம் இது. அங்கே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் கலாச்சாரத்திற்கு எதிராக இந்த மதத்தின் வழிகாட்டல்கள் போதிக்கப்பட்டன. எத்தி யோப்பியாவை ஆண்ட ஹெய்ல்செலஸ்சி என்ற மன்னனைக் கடவுளின் தூதராக ஏற்றுக் கொண்ட மதம் இது.

இவர்களது கோட்பாட்டின்படி, வாழ்க்கை நிலை யானது. கடவுள் (ஜா) வகுத்த நெறிகளை மீறுகிற வர்கள் தான் இறுதியான மரணத்தைச் சந்திக்கிறார்கள். கடவுள் காட்டிய வழியில் செல்கிறவர்கள் அருவ மான வடிவில் நிலைத்து வாழ்வார்கள். இந்தத் தத்து வத்தின் காரணமாக, இந்தச் சமூகத்தில் இறந்தவர் களுக்கான இறுதிச் சடங்குகளுக்கு மிகுந்த முக்கியத்து வம் அளிக்கப்படுவதில்லை. 

உருவகக் கோட்பாடு (சிமுலேசன்)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறை பேராசிரியர் நிக்போஸ்ட்ரோம் என்பவர் 2001 இல் முன் வைத்த கோட்பாடு இது. கணினியில் ஒரு செயல்பாடு எப்படி முன்னரே நிரல் வழிப்படுத்தப்பட்ட தாக இருக்கிறதோ, அதே போல் மனித வாழ்க்கையும் ஒரு உயர்சக்தியால் திட்டமிடப்பட்டிருக்கிறது. வாழ்க்கை யின் அனைத்து நிகழ்வுகளும் இப்படி முன்கூட்டியே வரையறுக்கப்பட்டவைதான். மரணமும் அப்படித்தான் என்கிறது இந்தக் கோட்பாடு.

நீயாருடன் பேசுகிறாய், உனக்கு என்ன நடக்கிறது, எல்லோருமாய் எங்கே போகிறீர்கள் என்பதெல்லாமே பெரிய நிகழ்ச்சி நிரலின் கூறுகள்தான். கைப்பேசி விளை யாட்டுகள் போன்றவைதான் வாழ்க்கை நிகழ்வுகள். அதில் ஒரு கதாபாத்திரத்துடன் போட்டியிட்டு நீ வெற்றி பெற்றால் மகிழ்கிறாய், தோல்வியடைந்தால் அலுத்துக் கொள்கிறாய். ஆனால் உண்மையில் நீயாக வெற்றியோ தோல்வியோ அடையவில்லை. ஏற்கெனவே நிரல் வழிப்படுத்தப்பட்டிருக்கிற முறைகளில் ஒன்றைச் செய்கிறபோது வெற்றி என்றும், வேறொன்றைச் செய் கிறபோது தோல்வி என்றும் முடிவு வருகிறது. அப்ப டித்தான் மனித வாழ்க்கையும் வடிவமைக்கப்பட்டி ருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் நீ என்கிறது இந்தக்கோட்பாடு. கணினி, விளையாட்டு, நிரல்வழி என்றெல்லாம் நவீனமாகக் கூறப்பட்டாலும் உண்மையில், மனித வாழ்க்கையின் தொடக்கமும் தொடர்ச்சியும் முடிவும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை தான் என்ற தலை யெழுத்துக் கோட்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமே இது என்று புரிந்து கொள்ளலாம்.

பரோவா கோட்பாடு

இன்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட துபரோவா மன்னர் பரம்பரை. அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கிறார்கள் என்றால் அது வாழ்க்கையின் முடிவல்ல, ஒரு புதிய வாழ்க்கைக்கான இடைக்கட்டம்தான் என்று அவர்கள் நம்பினார்கள். மரணமடைகிறவர்களின் “கா” (ஆன்மா) மறுபடியும் உடலைத் தேடிவரும் என்றும் நம்பினார்கள்.

அந்த நம்பிக்கையின் காரணமாக, மன்னர் குடும்பத்தினர் இறந்துவிட்டால், அவர்களது உடலைப் பதப்படுத்தி வைக்கத் தொடங்கினார்கள். “மம்மி” எனப்படும் அந்த உடல்களை பிரமிடுகளில் வைத்துப் பாது காத்தார்கள். இன்றைக்கு அந்த மம்மிகள் தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கும் திகிலூட்டும் சினிமாக் கதைகளுக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முடிவிலா வாழ்க்கை

வாழ்க்கை முடிவற்றது. ஒருவர் மரணிக்கிற போது, உடனே அவர் மறுபிறவி எடுக்கிறார் என்று போதிக்கிற கோட்பாடு இது. வேறு பல மதங்களில் உள்ள மறுபிறவிக் கோட்பாட்டிற்கும் இவர்களது நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இறக்கிறவர் வேறு புதிய மனிதராக மறுபிறவி எடுப்பதில்லை; மாறாக அதே மனிதராகப் புதுப்பிறவி எடுக்கி றார். ஆனால் முந்தைய பிறவியின் நினைவுகள் எது வுமே இல்லாமல் பிறக்கிறார்.

இதனால் குழந்தைப் பருவம் முதல் முதுமை வரையில் ஏற்கெனவே நடந்த அதேநிகழ்வுகளை அப்படியப்படியே மறுபடியும் அனு பவிக்கிறார். குறிப்பிட்ட ஒருமத அமைப்பாக இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் இதை நம்புகிறவர்கள் பல பகுதிகளில் பரவியிருக்கிறார்கள்

அண்டவெளி (காஸ்மிக்) உயிர்

நமது உணர்வுகள் உடலுக்குச் சொந்தமானவை அல்ல, மாறாக அவை இந்தப் பேரண்டத்திற்கு உரி யவை என்கிறது இந்தக்கோட்பாடு. அண்டத்திலிருந்து உடலுக்கு வந்தவை தான் உணர்வுகள், ஆகவே, இறப்புக்குப்பின் உடல் அழிந்தாலும் உணர்வுகள் அழியாமல் பேரண்டத்திற்குத் திரும்பி விடுகின்றன என்று இதில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

நமது பேரண்டம் பற்றிய அறிவியல் புரிதலுக்கும் இந்தக்கோட்பாட்டிற்கும் தொடர்பு இல்லை. பல்வேறு மதங்களில் இதைப் போன்ற நம்பிக்கைகள் இருந்தா லும், இந்தக் கோட்பாடு தனி மதமாகப் பின் பற்றப்படவில்லை.

புலனுக்கெட்டாத வாழ்க்கை

பல நாடுகளிலும் இருக்கிற நம்பிக்கை இது. அதாவது இறப்புக்குப் பின் ஆவிகளோ ஆன்மாக்களோ வேறு எங்கேயும் போகாமல் இறப்புக்கு முன் வாழ்ந்த மனி தர்களுடனேயே தான் இருக்கின்றன. “மீடியம்” எனப்படும் தொடர்பாளர்கள் அல்லது தொடர்புக்கருவி களின் மூலம் புலனுக்கெட்டாத அந்த ஆவிகளுடன் பேச முடியும். சோழிகளை உருட்டிப்போடுவது, எழுத்துகள் உள்ள கட்டங்களில் டம்ளரை நகர வைப்பது போன்ற பல மீடியத் தொடர்பு வழிகள் இருக்கின்றன.

இதுவரையில் மீடியம்களில் “உண்மையான”(?) ஆவிகள் வந்து பேசியதில்லை. ஆனால் அப்படிப் பேசுவதாக பீதி சினிமாக்களும் சிரிப்பு சினிமாக்களும் மனிதர்களால் தயாரிக்கப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றன.

பாவ புண்ணிய மறுபிறவி

ஒரு பிறவியில் செய்த புண்ணியங்களுக்கும் பாவங்களுக்கும் ஏற்ப மறுபிறவி அமையும் எனக் கூறுகிறது இந்தக் கோட்பாடு. இந்து மதம் உள்ளிட்ட பல சமயங்களில் இந்த நம்பிக்கை இருக்கிறது. கதைகளின் வழியாகவும் சடங்குகள் மூலமாக வும் புகுத்தப்படுகிறது.

பள்ளிக் கூடத்து மாணவர்களிடையே பேசுகிற போது, முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் அதற்குத் தண்டனையாக அடுத்தபிறவியில் உடல் ஊனங்களுடன் பிறக்கிறார்கள் என்று ஒரு அவதாரப்புண்ணியவான் சொல்ல முடிந்ததல் லவா? இந்தப்பிறவியில் இப்படி மாற்றுத்திறனாளி களை அவமதிக்கிற பாவத்திற்கு மறுபிறவில் என்ன தண்டனை என்னவோ?

வெளியேற்றம்

மாபெரும் மனித உடலைப்போன்றது பேரண்டம். மனிதர்களும் மற்ற இனங்களும் உடலின் உயிரணுக்கள். உடலில் உயிரணு ஒன்று இறந்துவிட்டால் அது சீழாகவோ, சளியாகவோ, மலமாகவோ வெளியேற்றப்படுகிறது. அதே போலத்தான் ஒருவர் மாண்டுவிட்டால் வெளி யேற்றப்படுகிறார்.

அறிவியல் கருத்தோ என்று குழம்ப வைக்கிற, உயிரியல் செயல் முறைகளோடு இணைத்து உருவகப்படுத்துகிற இந்தக் கருத்தாக்கத்தை வெளியேற்றக் கோட்பாடு என்று குறிப்பிடு கிறார்கள். உடலிலிருந்து வெளியேற்றப்படும் உயி ரணுக்கள் கழிவறையையோ, குப்பைத்தொட்டி யையோ அடைகின்றன. அதேபோல், பேரண்டத்தி லிருந்து வெளியேற்றப்படுகிறவர்கள் வேறெங்கோ போய்ச் சேர்வார்கள் என்ற மயக்கத் தையும் இந்தக் கோட்பாடு ஏற்படுத்துகிறது.

தன்மையம்

எந்தவொரு நிகழ்வுப்போக்கிலும் தன்னை மட்டுமே மையப்படுத்திப்பார்க்கிறவர்கள் உண்டு. இந்தக்கோட்பாடு அப்படித் தன்னைத்தானே மையப்படுத்திக் கொள்வதைச் சார்ந்தது தான். இதன்படி, ஒருவருடைய பிறப்போடு தொடங்குகிற இந்தப் பேரண்டம், அவருடைய இறப்போடு முடிந்து போகிறது. அவரவர் உணர்வுகளும் அனு பவங்களும் நினைவுகளும் சார்ந்ததுதான் இந்தப் பேரண்டம். அவரவர் மரணத்திற்குப் பிறகு பேரண்டமும் மறைந்துபோகும். மற்ற மனி தர்களுக்கும் இதர உயிரினங்களுக்கும் பேரண்டம் இயங்கிக்கொண்டிருக்கும் என்றாலும், ஒருவர் இறப்பதோடு அவரது அனுபவம் முடிந்து போகிறது, அதனோடு சேர்ந்து பேரண்டமும் முடிந்து போகிறது.

அறிவியல் உலகம் இதை ஏற்கவில்லை, சமயத் தலைமைகளும் இதை அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே தன்னோடு சுருங்கிப்போயி ருக்கக்கூடிய, பல தனி மனிதர்களை இது ஈர்த்திரு க்கிறது. அவர்கள் தன்மையச் சிந்தனைகளோடு தனிமைப்பட்டிருக்கிறார்கள்.

சொர்க்கம் நரகம்

வாழும்போது நன்மை செய்கிறவர்கள் மறுமை யில் சொர்க்கத்திற்கும், தீமை செய்கிறவர்கள் நரகத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்து, கிறிஸ்துவம். இஸ்லாம் உள்பட பல சமயங்களில் பல வடிவங்களில் இருக்கிறது. வாழும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கா கவே இந்தப்போதனை என்று சொல்லப்படுகிறது. தனக்குத் தீங்கிழைத்த வரைப்பார்த்து, “நீ நரகத்துக்குத் தான் போவாய்,” என்று வயிறெரிந்து சாபம் கொடுப்பது பரவலாக இருக்கிறது. எப்படியானாலும், மரணத்திற்குப் பிறகு வேறொரு உலகத்தில் மற்றொரு வாழ்க்கை இருக்கிறது என்ற கருத்தாக்கம் வலியுறுத்தப்படுகிறது.

இவையன்றி மரிப்பிற்குப் பிந்தையநிலை குறித்துப் பேசுகிற வேறு பல கற்பிதங்களும் இருக்கின்றன. ‘நிகிலியம்’ என்ற கோட்பாடு. நமது இறப்பு நிகழ்வது இந்தப் பேரண்டத்தில் தான், இறப்புக்குப் பின் வேறொரு பேரண்டத்திற்குப் போய்விடுவோம் என்கிறது “பலவுலகக்கோட் பாடு”. உலகமே மனதின் கருத்தாக்கம் தான், இறந்துவிட்டதாக மனம் தான் நினைக்கிறது, உண்மையில் வாழ்க்கை தொடர்கிறது என்று “மாயை” கோட்பாடு சொல்கிறது. 

 உடல் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதே இறப்பு. மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் படிப்படியாகச் செயல்பாட்டை இழக்கிற நடைமுறை தான் மரணம் என்கிறது அறிவியல். உயிரணுக்களின் வளர்சிதை மாற்றம், உறுப்புகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம், வெளித்தூண்டலுக்கு வினையாற்றுதல், உடல்நிலை பராமரிப்பு, உடலமைப்பு பேணுதல், தகவமைத்துக்கொள்ளுதல் ஆகிய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு முறை தான் உயிர் என்றும் அறிவியல் தெளிவுபடுத்து கிறது. இந்தச் செயல்பாடுகள் ஓய்கிறபோது உடலியக்கம் நின்று போகிறது. உயிர் என்று தனியாக உடலில் எங்கும் இல்லை. மூச்சு நின்ற பிறகு உயிர் வேறு எங்காவது போவதற்கோ, திரும்பி வருவதற்கோ வாய்ப்பில்லை. உயிரின் பிரதிநிதியாக ஆவியோ, ஆன்மாவோ சுற்றி வருவதாகக் கூறப்படுவது கற்பனையே. 

அப்படியானால், இறப்புடன் எல்லாமே முடிந்துவிடுமா? மறுவாழ்வு என்பதே கிடையாதா? இருக்கிறது! உடல் தானம் செய்தால், மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுவதன் மூலம் வாழலாம். இறந்தவரின் இதயம் சில மணி நேரம் துடித்துக்கொண்டுதான் இருக்கும், அதை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறவருக்குப் பொருத்தினால் வாழலாம். கண்தானம், சிறுநீரக தானம் என உறுப்பு தானம் வழங்கி வாழலாம். சக மனிதர்களுக்காக, சமுதாயத்திற்காக, உலகத் திற்காக நம்மை ஒப்படைத்துக் கொண்டால் வாழ லாம். இவ்வுலக வாழ்க்கை உண்மையானது என்று புரிந்துகொண்டு இது வீணாகக்கடந்து போகவிடக் கூடாது என்ற உறுதியோடு இயங்கினால் மர ணத்திற்கு முன் வாழும் வாழ்க்கை பொருள் பொதிந்ததாகும். மரணத்திற்குப்பின் என்ன என்ற குழப்பம் கலைந்து போகும். 

-‘தீக்கதிர்‘ 13-10-2024 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை.