Wednesday, 25 March 2026

திருநர் சட்டம்: இனி என்ன செய்யலாம் என்றால்…

காலை நடையில் பூங்கா நிழலில்




“டிரான்ஸ்ஜெண்டர் லா அமெண்ட்மென்ட் பத்தி நேத்து மின்னம்பலத்துல உங்க கட்டுரையைப் படிச்சேன்… தமிழ்ல இந்த இஸ்யூ பத்தி வந்த முதல் கட்டுரை அதுதான்னு நினைக்கிறேன். நல்லாப் பண்ணியிருக்கீங்க. இன்ட்ரெஸ்ட்டிங்காவும் இருக்குது.”

காலை நடை நேர நண்பரிடமிருந்து அரிதாகத்தான் இப்படிப்பட்ட பாராட்டு கிடைக்கும்.

“நீங்க அதைப் படிச்சதுக்கும், பாராட்டுறதுக்கும் நன்றி. ஏதாவது விமர்சனம் இருந்தாலும் சொல்லுங்க.”

“அந்த மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல. சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஆனா, சொன்ன அளவுல கரெக்ட்டா இருக்கு.”

“இந்தப் புரிதல்தான் வேணும். எப்பவுமே ஒரு கருத்தைப் பத்திப் பேசுறோம், இல்லாட்டி எழுதுறோம்னா எல்லாத்தையும் சொல்லிட முடியாது. பல தகவல்கள் நமக்குத் தெரியாததாக் கூட இருக்கும். இருந்தாலும் சொல்லியிருக்கிற வரைக்கும் சரியா வந்திருக்கான்னுதான் பார்க்கணும். சரியா இல்லைன்னு நினைச்சா அதைத் தயங்காம வெளிப்படுத்தணும். சில பேரைப் பார்த்தீங்கன்னா, நாம சொல்லாம விட்ட தகவல்களைச் சொல்வாங்க, குறிப்பிடத் தவறிய ஆட்களைப் பத்திச் சொல்வாங்க. அதையெல்லாம் சொல்லியிருக்க வேணாமான்னு கேட்பாங்க. இது ஒரு கலாச்சாரமாவே இருக்குது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கணுங்கிற கட்டாயமுமில்லை. அப்படி எதிர்பார்க்கவும் கூடாதுல்ல…”

“என்ன சார், யாரோ அந்த மாதிரி கேட்டு உங்களைச் சீண்டியிருக்காங்க போல இருக்கே?”

பூங்கா மர நிழல் உரையாடலில் கலந்துகொள்ளும் இன்னொரு நண்பரின் கேள்வி.

“குறிப்பா யாரையும் சொல்லலை. ஆனா அடிக்கடி யார்ட்டயிருந்தாவது இப்படிப்பட்ட எதிர்வினை வந்துக்கிட்டுதான் இருக்கு.“

“நேத்து ஈவ்னிங் டிராஸ்ஜெண்டர் ஆக்ட் அமெண்ட்மென்ட் பில்லுக்குக் கண்டனம் தெரிவிச்சும் அதை வித்ட்ரா பண்ணக் கோரியும் பெரம்பூர்ல ஒரு கருத்தரங்கம் நடந்துச்சு போலயே…”

“ஆமா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அதை நடத்துனாங்க. அதுல் நானும் ஒரு பார்வையாளராக் கலந்துக்கிட்டேன். அந்த மக்கள் உணர்ச்சிப் பூர்வமாவும், கூர்மையாவும் பேசினாங்க. சங்கத் தலைவர்களும் மறுக்க முடியாத வாதங்களை முன்வைச்சுப் பேசினாங்க.”

“நீங்க பேசலையா?”

“நிறைவுரை முடிஞ்சதும் நான் ஒரு ஆலாசனையை வேண்டுகோளா முன்வைச்சேன்.”

“ஆனா, அந்த பில்தான் பார்லிமென்ட்டுல பாஸாயிடுச்சே?”

“ஆமா. அந்தக் கூட்டம் நடந்துக்கிட்டிருக்கப்பவே இந்தச் செய்தியும் வந்துருச்சு. மேடையிலேயே அறிவிச்சாங்க. அதையும் சேர்த்துதான் என்னோட வேண்டுகோளைச் சொன்னேன்.“

“என்ன வேண்டுகோள் சார்?”


அதாவது, ‘சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் உள்ள உயர்ந்த இடம் நாடாளுமன்றம்தான். ஆனா அதை விட உயர்வானது ஒன்று இருக்கிறது. அதுதான் இந்திய அரசமைப்பு சாசனம். அதிலே உறுதிப்படுத்தியிருக்கிற தனி மனித உரிமையையும் கண்ணியத்தையும் இந்தப் புதுச் சட்டம் மறுக்கிறது. ஏற்கெனவே 2014இல் உச்சநீதிமன்றம் நால்சா வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கும் வழிகாட்டலுக்கும் முரணாக இது வந்திருக்க்கிறது. அதனால், அரசமைப்பு சாசன அடிப்படையில் இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி திருநர் அமைப்புகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுக்க வேண்டும். அந்த வழக்கில் தமுஎகச தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.‘ இந்த ஆலோசனையைத்தான் வேண்டுகோளா வைச்சேன்.

“நல்லது சார். பார்லிமென்ட்டைத்தான் நாம பெருசா நம்பியிருக்கோம். ஆனா எப்படி இந்த மாதிரி சட்டத்தையெல்லாம் கொண்டு வர முடியுது?”

அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த, அவ்வப்போது எங்களோடு கலந்துகொள்கிற மூன்றாவது நண்பர் கேட்டார். ஆம், அவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர்.

“நம்ம நாட்டைப் பொறுத்தவரையில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவங்களோட மனசாட்சிப்படி வாக்களிக்கிற உரிமையெல்லாம் கிடையாது. அவங்களோட கட்சித் தலைமை, சபையில இருக்கிற கட்சிக் கொறடா மூலம் என்ன ஆணையிடுதோ அதன்படிதான் வாக்களிக்க முடியும். கொறடான்னா தெரியும்ல, சவுக்கு! இங்கிலீஷ்ல விப். அதுவும் சவுக்குதான். அதை மீறி வாக்களிச்சாங்கன்னா கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். மோசமான சட்டம் அது. அதனால, பாஜக தலைமையும் அவங்களோட அணியில இருக்கிற கட்சிகளோட தலைவர்களும் சொன்னபடி சட்ட முன்வரைவுக்கு ஆதரவாத்தான் வாக்களிச்சிருப்பாங்க. ஒரு முன்வரைவோ, தீர்மானமோ வர்றப்பவே அது நிறைவேறுமா நிறைவேறாதான்னு எல்லாரும் முன்கூட்டியே கணிச்சிடலாம்.“

“இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரைக்கும், கட்சித் தலைவருங்க சொல்லாட்டடாலும் இதுக்கு ஆதரவாத்தான் வாக்களிச்சிருப்பாங்க. அவங்க புத்தியிலே இந்த மாதிரி பிற்போக்கான சிந்தனைகள்தானே ஊறிக் கெடக்கு.”

திருநர் நண்பரின் சீற்றச் சொற்கள் வழக்கமான தேநீர்க் கடைக் கூடுகை முடிந்து கலையும் வரையில் எங்களை மௌனமாக்கியிருந்தது.


[0]
முகநூல் பதிவு
படங்கள்: லக்சயா மன்னார்

No comments: