Saturday 6 March 2010

பொய்ச் செய்தி தயாரிப்பது எப்படி?


மக்கள் தொலைக்காட்சி
தொலைத்த மனசாட்சி

ஒரு மாற்று ஊடகமாக தன்னை எப்போதுமே காட்டிக்கொள்ள மக்கள் தொலைக்காட்சி நிறுவனம் முயன்று வந்திருக்கிறது. மற்ற ஊடகங்களிலிருந்து மாறுபட்ட ஊடகமாக இருப்பதற்காகவே மற்ற ஊடகங்கள் சொல்லாத செய்தியை புனைந்து சொல்லவும் அந்த நிறுவனம் துணிந்திருக்கிறது.

வியாழனன்று (மார்ச் 4) மாலை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பில், “மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் உ.ரா.வரதராசன் கொலையா? திடுக்கிடும் தகவல்: இன்று இரவு 8 மணிக்கு மக்கள் செய்தியில்,” என்பதாக என்று மீண்டும் மீண்டும் அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு ஊடகங்கள் அவரது மறைவு குறித்த மனசாட்சியற்ற செய்திகளை வெளியிட்டு போதும் போதும் என்கிற அளவிற்கு மக்களைக் குழப்பிவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை.

8 மணிச் செய்தியில் முதல் தகவலாகவே சொல்லப்பட்ட அந்தச் செய்தி, ஒரு ஊடகம் உள்நோக்கத்துடன் எப்படி பல்வேறு காட்சிகளையும், மாறுபட்ட தகவல்களையும் தந்திரமாக இணைத்து ஒரு பொய்ச் செய்தியை உண்மைபோலச் சொல்ல முடியும் என்பதற்கான பாடம் போலவே இருந்தது.

தோழர் உ.ரா.வரதராசன் இறுதி நிகழ்ச்சியையொட்டி பேட்டி அளித்த மத்தியக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், இது ஒரு படிப்பினை என்று, பொது வாழ்க்கையில் ஈடுபடுவோரின் கட்டுப்பாட்டை வலியுறுத்திப் பேசினார். ஆனால் அதனை ‘மக்கள் செய்தி’, உ.ரா.வரதராசன் உள்கட்சி விவகாரத்தால் கொல்லப்பட்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறியது.

அதைத் தொடர்ந்து போரூர் ஏரியைக் காட்டியது. புதனன்று (மார்ச் 3) பெண்கள் சந்திப்பு அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வ.கீதா அளித்த பேட்டியில், உ.ரா.வரதராசன் மீதான கட்சியின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என கூறியக் காட்சியை இணைத்தது. அதன்பின், சடல ஆய்வு அறிக்கையில் உ.ரா.வரதராசன் கழுத்து நெறித்து கொள்ளப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறியது. வாய் மொழி வார்த்தையாக இப்படியொரு சடல ஆய்வு அறிக்கை பற்றி சொல்லிக் கொண்டே பின்னணியில், உ.ரா.வரதராசன் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய ஆங்கிலக் கடிதத்தை காட்சிப்படுத்தியது.

ஏற்கெனவே இந்த செய்திகளை பின்பற்றி வருவோருக்கும், ஆங்கிலம் அறிந்தோருக்கும் மட்டுமே அது வரதராசனின் கடிதம் என்பது தெரியும். மற்றவர்களுக்கோ, ஏதோ அதுதான் சடல ஆய்வு அறிக்கை போலும் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் “நேர்த்தியான” மோசடிக்கு எடுத்துக்காட்டு.

இது மோசடிச் செய்திதான் என்பதை மாநகர காவல்துறையின் மறுப்பு தெளிவுபடுத்திவிட்டது. வியாழனன்று இரவே சில தொலைக்காட்சிகளில் அப்படிப்பட்ட சடல ஆய்வு அறிக்கை எதுவும் வரவில்லை, எந்த ஊடகத்திற்கும் அப்படிப்பட்ட அறிக்கை தரப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது ஒளிபரப்பப்பட்டது. வெள்ளியன்று காலை சில பத்திரிகைகளிலும் இந்த மறுப்பு வெளியானது.

ஒட்டவைக்கப்பட்ட பேட்டி
எழுத்தாளர் வ.கீதாவின் பேட்டியை இந்தச் செய்தியில் இணைத்துக்கொண்டது மற்றொரு மோசடி. இதற்கு அவரே கண்டனம் தெரிவித்து மக்கள் தொலைக்காட்சி செய்தி ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளார். “மார்ச் 3 அன்று நாங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளமுடியவில்லை எனக் கூறி உங்கள் நிருபர் தனி பேட்டி வேண்டுமென கேட்டுக்கொண்டார். எனது அலவலகத்திற்கு வரச்சொல்லி பேட்டி அளித்தேன். அதில் நான், இப்பிரச்சனையில் சிபிஎம் முறையான விசாரணை நடத்தவில்லை என்பதைத்தான் சொன்னேன். செய்தியாளர் சந்திப்பில் வழங்கிய அறிக்கையையும் அவருக்குக் கொடுத்தேன். ஆனால், கொலை என்று உள்நோக்கத்துடன் ஒளிபரப்பப்பட்ட உங்கள் செய்தியில் என்னுடைய பேட்டி இணைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் நானே அப்படி ஒரு தகவலை சொன்னதாக ஒரு கருத்து ஏற்படுத்தப்பட்டது. ஊடக அறம் தரம் தாழ்ந்துவிட்டதையே காட்டுகிறது. தாங்கள் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்று குறிபிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இரவு 10 மணி ஒளிபரப்பில், அந்தச் செய்தி நிறுத்தப்படும் என நிறுவனம் உறுதியளித்ததாகத் தெரிகிறது. ஆனால் மீண்டும் அந்த திட்டமிட்ட பொய்ச் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு வாக்குறுதி மீரப்பட்டதால் இரண்டாவது மின்னஞ்சல் அனுப்பிய கீதா, ‘மக்கள் தொலைக்காட்சியை ஒரு மாறுபட்ட ஊடகம் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லை என்பது தெரியவருகிறது. எனது பேட்டியை தவறாக பயன்படுத்தியதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்,” என்று கீதா கூறியிருக்கிறார்.

ஒரு தலைவர் வேறொரு கண்ணோட்டத்தில் சொன்ன கருத்தை திரித்துக்கூறியது, ஒரு எழுத்தாளரின் கருத்தை தவராகப் பயன்படுத்தியது, வராத ஒரு சடல ஆய்வு அறிக்கை பற்றி கூறிக்கொண்டே அதன் பின்னணியில் கடிதவாசகங்களைக் காட்டியது என நூற்றுக்கு நூறு மோசடியாகவே அந்தச் செய்தி தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பொய்மைகளால் ஊடகத்தை நடத்திச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்கள் தொலைக்காட்சிக்கு ஏன் வந்தது? இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது பொருத்தமான பதிலாகத் தெரிகிறது.

1 comment:

ச.தமிழ்ச்செல்வன் said...

தோழர் அ.கு, உங்கள் இரு கட்டுரைகளையும் தீக்கதிரிலேயே பார்த்தேன்.சரியான நேரத்தில் சரியான கோணத்தில் இரண்டுமே வந்துள்ளன.நீங்கள் குறிப்பிடுவதுபோல இறுதியில் இயக்கம் வெல்லும்.காத்திருப்போம்
ச.த