காலை நடையில் பூங்கா நிழலில்
“இன்னிக்கு சினிமா, புத்தகம் இப்படி எதையாச்சும் பத்திப் பேசுவோம்னு நினைச்சேன். ஆனா அரசியல் பேச வைக்கிறீங்களே?”
“எல்லாத்திலேயும் அரசியல் இருக்குதுன்னு எங்களுக்குச் சொன்னதே நீங்கதானே!”
காலை நடை நேர நிறைவுக் கட்டமான பூங்கா உரையாடலில், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துவிட்டது பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரலையில் காட்டமாகப் பேசியிருப்பது பற்றியும் இரண்டு நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அப்போதுதான் நான் மேற்கண்டவாறு கேட்க, அதற்கடுத்துக் கண்டவாறு சொல்லி ஒருவர் என்னை மடக்கினார்.
“முதல்ல என்ன புரிஞ்சிக்கணும்னா, இது மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவுங்கிறதே பாசாங்குதான். உண்மையான நோக்கம் தொகுதி மறுவரையறைதான்.”
“சார் சொல்றது கரெக்ட்தான், ரியலாவே விமன்’ஸ் ரிசர்வேஷன்தான் நோக்கம்னா, ஏற்கெனவே பார்லிமென்ட்டுல பாஸ் பண்ணி இன்னமும் இம்ப்ளிமென்ட் பண்ணாம வெச்சிருக்காங்களே, அந்தச் சட்டத்தை இப்ப நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே?”
எனக்கு வேலை வைக்காமல் இந்த விளக்கத்தைக் கொடுத்த நண்பரை நன்றியுடன் நோக்கினேன்.
“ஒன்ஸ் இது சட்டமாயிடுச்சின்னா, எதிர்காலத்திலே டீலிமிட்டேஷன் பண்ணி எம்.பி. சீட்களை எவ்வளவு அதிகமாக்கினாலும் அந்த மொத்த எண்ணிக்கையிலே தர்ட்டி த்ரீ பெர்சன்ட் பெண்களுக்குத்தான்னு கன்ஃபர்ம் ஆயிடுமே…”
இதையும் அவர்தான் கூறினார். சிலருக்கு இது புதிய தகவலாக இருப்பது அவர்களின் முகத்தின் கேள்விக்குறியாக வெளிப்பட்டது.
“இதுல ஒரு வரலாறே இருக்குது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவு மொதமொதல்ல 1996ஆம் ஆண்டுல தேவ கவுடா தலைமையில் இருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்களவையில் தாக்கல் செஞ்சுது. அது பல காரணங்களால காலாவதியாயிடுச்சு. அப்புறம் பார்த்தீங்கன்னா 1998, 1999, 2002. 2003… இப்படி வாஜ்பாய் அரசாங்கம் கொண்டு வந்துச்சு. ஒருமித்த கருத்து ஏற்படலை. 2010ல மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மாநிலங்களவையில் தாக்கல் செஞ்சது, அதிலே நிறைவேறிடிச்சு. மக்களவையில் தாக்கல் செய்யப்படலை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 2023 செப்டம்பர்ல இவங்க வழக்கப்படி நாரி சக்தி வந்தன் அதினியம்னு சமஸ்கிருதப் பெயர்ல தாக்கல் செஞ்சாங்க, ரெண்டு அவைகள்லேயுமே அது நிறைவேறிடுச்சு. குடியரசுத் தலைவரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். ஆனா நடைமுறைப்படுத்தாமலே வைச்சிருந்தாங்க. பெண்கள் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்கிறது பத்தி பிரதமர் முழங்கி முழங்கிப் பேசுறாரே, அதுல உண்மையாவே அக்கறை இருந்திருந்தா 2024 தேர்தல்ல செயல்படுத்தியிருக்கலாம். அதைச் செஞ்சிருந்தாங்கன்னா மக்களவையிலே 33 சதவீத இடங்களுக்குப் பெண்கள் இப்பவே வந்திருப்பாங்க.”
“ஓ… இவங்க நிறைவேத்தின சட்டத்தை இவங்களே நடைமுறைப்படுத்தலையா? அப்படின்னா இப்ப ஒன்ஸ் அகெய்ன் விமன்ஸ் பில் கொண்டு வந்ததுல கிளியரா பாலிட்டிக்ஸ் இருக்குதுங்க அங்க்கிள்.”
தினமும் எங்களோடு நடையிலும் மரத்தடிப் பேச்சின்போதும் கலந்துகொள்கிற, ஆனால் கருத்துச் சொல்லாத சகோதரி இதைச் சொன்னார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“டீ லிமிட்டேஷன் பில் பாஸ் ஆகியிருந்தா தமிழ்நாட்டுக்கு அதிகமாக எம்.பி. சீட் கிடைச்சிருக்கும்னு நேத்து பிஎம் பேசினாரு. அதிமுக தலைவர் அதைத்தான் சொல்றாரு. எல்லா மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கிறதுதான் நோக்கம்னும் மோடி சொன்னாரு. அதை எதிர்க்கட்சிகள்லாம் சேர்ந்து தடுத்துட்டாங்கன்னாரு.”
இது அந்தப் பெண்ணின் இணையர்.
“சம வாய்ப்பா? முதல்ல இப்படி அதிகாரப் பூர்வ ஒலிபரப்பு, ஒளிபரப்பு ஏற்பாடுகளோட நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்ல? அதே வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கொடுத்திருக்கணும்ல.,. நாங்க ஏன் எதிர்க்கிறோம்னு அவங்க விளக்கியிருப்பாங்கல்ல?”
“அப்படியொரு நியாயமான ஏற்பாடு வந்தாதான் நம்ம டெமாக்ரசியே ஹெல்த்தியாயிடுமே… ஹூம்…”
“எனக்கொரு டவுட்… எதிர்க்கட்சிகள் ஆதரிக்க மாட்டாங்க, வேணும்கிற மெஜாரிட்டி கிடைக்காது, மசோதா தோத்துப் போயிடும்னு அவங்களுக்குத் தெரியாதா?”
“ஏன் தெரியாது… தெரிஞ்சுதான் செஞ்சாங்க. அவங்க ஒண்ணும் ஏமாந்து போகலை. இதையே ஒரு குற்றச்சாட்டா சொல்லிச் சொல்லி, எதிர்க்கட்சிகளை ரிடிகியூல் பண்ணலாம், அவங்களைப் பத்தித் தப்பான எண்ணத்தை ஏற்படுத்தலாம்கிற திட்டம் இதிலே இருக்குதுன்னுதான் அனலிஸ்ட்டுகள் சொல்றாங்க.”
இதைச் சொன்ன நண்பரைப் பார்த்து அங்கீகரித்துத் தலையசைத்தேன். எழுவதற்குத் தயாரானபோது மூளையில் ஒன்று முளைத்தது.
“மாநிலங்களுக்கு சம வாய்ப்புங்கிறது உண்மைன்னா, எனக்கு இந்த நொடியில ஒரு புதுக் கருத்து தோணுது… என்னோட சொந்தக் கருத்து… இந்தியா ஒரே நாடா உருவானதே விடுதலைப் போராட்டத்தாலேதான். சம வாய்ப்புன்னா, பெரிய மாநிலம், சின்ன மாநிலம்னு வேறுபாடு இல்லாம, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரே எண்ணிக்கையிலே நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்னு ஒரு மாற்றத்தைச் செய்யலாமே… இப்ப இருக்கிற ஒன்றிய ஆட்சிக்காக மட்டுமில்லாம எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்….”
“அதாவது தமிழ்நாட்டுக்கு ஐம்பது சீட்டுன்னா, கேரளத்துக்கும் ஐம்பது, உத்தரப் பிரதேசத்துக்கும் ஐம்பது, காஷ்மீருக்கும் ஐம்பது, திரிபுராவுக்கும் ஐம்பது, பெங்காலுக்கும் ஐம்பது, மஹாராஷ்டிராவுக்கும் குஜராத்துக்கும் ஐம்பது ஐம்பது, நாகாலாந்துக்கும் மணிப்பூருக்கும் ஐம்பது ஐம்பது… ஓ… அதிரடியா இருக்கே!”
“சார் சொல்றது ஒரு சிஸ்டமாவே ஆகுதுன்னு வெச்சுக்குவோம், பாப்புலேஷன் அதிகமா இருக்கிற மாநிலத்துக்கு அதிகமான மெம்பர், பாப்புலேஷன் கம்மியா இருக்கிற மாநிலத்துக்குக் கொஞ்சமான மெம்பர்னு இருக்கிற இப்பத்திய நிலைமை இல்லாமப் போயிடும். அதிகமான மெம்பர்ஸ் இருக்கிற மாநிலங்களோட கண்ணோட்டங்கள்தான் பார்லிமென்ட்டுல ஸ்ட்ராங்கா இருக்கும்கிற நிலைமை மாறிடும்… உண்மையான பெரும்பான்மையோட சட்டங்கள் நிறைவேறும்… ஆகா, கற்பனை பண்றதுக்கே நல்லா இருக்கே!”
“ஆனா, நம்ம பாண்டிச்சேரி மாதிரி யூனியன் டெரிட்டரிகளுக்கு என்ன பண்றது? அவங்களுக்கும் இதே எண்ணிக்கைதானா?”
நான் எதிரபார்க்காத கேள்வி இது. என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தபோது–
“முதல்ல இந்த சிஸ்டத்தை ஏத்துக்கிடட்டும். யூனியன் பிரதேசங்களுக்கு என்ன நியாயமான ஏற்பாடுன்னு விவாதிச்சு, எக்ஸ்பெர்ட்டுகள்ட்ட ஒபினியன் வாங்கி நல்ல முடிவு எடுக்க முடியாதா என்ன…”
தொடக்கத்தில், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியதுதானே என்று கேட்டவர்தான் இவ்வாறு கூறி உரையாடலை நிறைவு செய்தார். எங்களின் புதிய உற்சாகத்தைப் புதிரோடு பார்த்தார் நாங்கள் எழுந்து நடந்து சென்றடைந்த தேநீர்க் கடையின் உரிமையாளர்.
