Wednesday, 4 March 2026

உச்சத்தில் இருப்பவர்களுக்காகத்தான் உச்சிமாநாடா -ஏஐ?




செயற்கை நுண்ணறிவை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், அதன் நன்மைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல், அபாயங்களைக் கூட்டு முயற்சியால் எதிர்கொள்ளுதல், மனித உரிமைகளை மதிக்கிற நம்பிக்கைக்குரிய முறைகளை உருவாக்குதல் என்ற உறுதியேற்புகளோடு, தலைநகர் தில்லியில் ‘இந்தியா – ஏஐ தாக்கம் உச்சி மாநாடு 2026’ பிப்ரவரி 16இல் தொடங்கி, 20இல் நிறைவடைந்தது.

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்செரஸ்,  20 நாடுகளின் அரசுத் தலைவர்கள், 60 நாடுகளின் அமைச்சர்கள், மைக்ரோசாஃப்ட், கூகுள், ஓப்பன் ஏஐ, டீப்மைண்ட் உள்ளிட்ட 50 உலகளாவிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள், 100 நாடுகளிலிருந்து 3,500 தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றார்கள். நேரடியாகவும் இணையவழியாகவும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட  பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். 

“இன்டர்நெட்டா? நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?”  –1995இல் பொதுத்துறை நிறுவனமாக இருந்த விஎஸ்என்எல் (இப்போது டாடா கம்யூனிகேஷன்ஸ்) பொதுமக்களுக்கான இணைய சேவையைத் தொடங்கியபோது இந்தப் பேச்சு பரவலாக இருந்தது. இன்று? சென்னை  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு காட்சி: தனது  கிராமத்திற்கான வண்டிக்காகக் காத்திருக்கிற ஒரு விவசாயி  ஊரிலுள்ள உறவினருடன் பேசுகிறார்: “மாப்ள, உரம்  பாக்கெட்டை மொபைல்ல போட்டோ எடுத்து சித்தப்பா வுக்கு வாட்ஸ்அப்ல அனுப்பிரு. அவரு ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடுவாரு. இணையம் மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி.

எங்கும் ஏஐ என்பதே பேச்சு

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு புழக்கத்திற்கு  வந்த காலத்திலும், அதன் பயன்கள் பற்றி மிகைப்படுத்திக் காட்டப்படுவதாகப் பலரும் கண்களை மூடிக்  கொண்டார்கள். இன்று அவர்கள் விழித்துப் பார்க்கிறபோது, எங்கும் எதிலும் ஏஐ நடமாட்டம். 

ஒரு பக்கம், ஏஐ ஆதரவாளர்கள் அதன் வருகையால் தொழில்கள் விரிவாகும், வேலைகள் இலகுவாகும்,  மக்களின் வாழ்நிலை மாறிவிடும் என்றெல்லாம் நம்பிக்கைகளைப் பரப்பினார்கள். இதனைப் பயின்றவர்கள் பல இடங்களிலும் நல்ல ஊதியத்தில் பணியமர்த்தப்படுவதை எடுத்துக் காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், ஏஐ  விமர்சகர்கள் அதன் ஆதிக்கத்தால் நடுத்தரத் தொழில கங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும், வேலைகள் பறி போகும், கண்ணுக்குப் புலப்படாத உழைப்புச் சுரண்டல் அதிகரிக்கும் என்ற கவலைகளைப் பகிர்ந்தார்கள். பல  முன்னணி நிறுவனங்கள் கொத்துக்கொத்தாக ஊழி யர்களை வெளியேற்றுகிற செய்திகளை அவர்கள் படித்துக் காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட வாதங்கள் சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் எழுத்தாளர்களுக்கு இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து திருத்த உதவுவது முதல், வணிகர்களுக்குச் சந்தை  நிலவரம் விசாரித்துத் தெரிவிப்பது வரையில் ஏஐ பழக்கமாகிவிட்டது. ஏஐ துணையோடு உயிர்காப்பு அறுவை சிகிச்சைகள் துல்லியமாகச் செய்யப்படுகின்றன. ஏஐ உணர்வியால் கச்சிதமாகக் கவனித்து வேகத்தைக் கட்டுப்படுத்தி விபத்துகளை மட்டுப்படுத்தும் வண்டிகள் சாலைகளுக்கு வர இருக்கின்றன. பள்ளிகளிலேயே ஏஐ பாடங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

வழக்குகளையும் தீர்ப்புகளையும் வகைப்படுத்தித் தொகுப்பதற்கு ஏஐ கருவியைப் பயன்படுத்த உச்சநீதி மன்றம் வழி செய்திருக்கிறது. அதேவேளையில், சில  வழக்குரைஞர்கள் எந்த நீதிமன்றமும் வழங்காத தீர்ப்புகளை ஏஐ கைங்கர்யத்தால் சரியான சட்ட விதிகளோடு உருவாக்கி சான்றுகளாகத் தாக்கல் செய்கிறார்கள், கண்டு பிடிப்பதே சவாலாக இருக்கிறது என்றும் தலைமை நீதிபதி எச்சரித்திருக்கிறார்.

எண்ணற்ற தொழிலாளர்களை ஏதுமற்றவர்களாக மாற்றுகிறபோது, அவர்கள் எப்படி நுகர்பொருட்களை வாங்குவார்கள்? தொழிலாளர்களை எந்திரங்களாக வேலை வாங்குவது போய், எந்திரங்கள் தொழிலா ளர்களாக இறக்கிவிடப்படும்போது அந்த எந்திரங்களே பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்குமா என்ன? சந்தைப் பரப்பு சுருங்காதா? மற்றொரு உலக நெருக்கடிக்கு – ஏன் போர்ச் சூழலுக்கே கூட – இது தள்ளி விடாதா? ஏஐ யுகத்தின் நல்லன ஏற்கவும், தீயன தள்ளவும்  நாடுகளின் அரசுகளும் ஐ.நா. சபையும் என்ன செய்யப் போகின்றன?

தில்லி மாநாடு

இத்தகைய கேள்விகள் சூழ்கிற நிலையில், தெற்கு நாடுகளின் ஏஐ உச்சி மாநாடு தில்லியில் கூடியது முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அரசாங்கத்தால் “மக்கள்”, “பூமி”, “முன்னேற்றம்” ஆகிய மூன்று “சூத்திரங்கள்” மாநாட்டின் மூன்று தூண்களாக ஊன்றப்பட்டன. அத்துடன்,  பொருளாதார வளர்ச்சியும் சமூக நலனும், ஏஐ வளங்களை ஜனநாயகப்படுத்துதல், ஏஐ வழி சமூக அதிகாரம், பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய ஏஐ, மாறிடும்  நிலைமைக்கேற்ப மனிதவள மேம்பாடு, அறிவியலுக்காக ஏஐ, நிலைத்தன்மையும் புத்தாக்கமும் ஆகிய “ஏழு  சக்கரங்கள்” மாநாட்டு வாகனத்திற்குப் பொருத்தப்பட்டன.

அறிவியல் சார்ந்த மாநாட்டிற்கான நோக்கங்களை இயல்பாக அறிவிக்காமல், கலாச்சாரப் பின்னணி பின்னப்  படுவதை “சூத்திரங்கள்”, “சக்கரங்கள்” என்ற சொல்லா டல்கள் காட்டுகின்றன. இந்தச் சொல்லாடல்கள் மதவாதம்  தோய்ந்தவையாகவும் கையாளப்படுவதால் விழிப்போடு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் எல்லோருமே இந்தச் சொல்லரசியலோடு வந்தவர்களென்று சொல்வதற்கில்லைதான்.

முன்னதாக, இந்திய அரசு தனது முதல் ஏஐ ஆளுகைக் கட்டமைப்பு ஒன்றை பிப்.15 அன்று வெளியிட்டது. பயனர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துதல், மனித உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை அளித்தல், அதிகப்படியான சட்டங்களால் புத்தாக்கத்தை முடக்காமல் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழியமைத்தல், ஏஐ தரவுகளில் பாகுபாடற்ற தன்மையை உறுதிப்படுத்துதல், தவறுகள் நடந்தால் பொறுப்பேற்கச் செய்தல், ஏஐ செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை நிறுவும் வகையில் எளிமைப்படுத்துதல், தரவுகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விழிப்புணர்வை வளர்த்தல் ஆகியவை அந்தக் கட்டமைப்பின் கூறுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவம், நிதி போன்ற அதிக  அபாய நிலைமைகள் உள்ள களங்களில் ஏஐ பயன்பாடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். டீப்ஃபேக் போலிப் படங்கள் சிலரை ஆபாசமாகச் சித்தரித்து வக்கிர எண் ணத்தை விசிறிவிட்டது போன்ற குற்றங்களைத் தடுக்கவுமான வழி முறைகளை நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதும் கட்ட மைப்பு விதிகளில் ஒன்றாகும்.

பொதுவாக இவை ஏற்கத்தக்கவை என்றாலும், “தேசியப் பாதுகாப்பு, பொது அமைதி. இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் ஏஐ மூலம் உருவாக்க உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து தணிக்கை செய்வது தளங்களின் சட்டபூர்வக் கடமை,“ என்ற விதி புருவங்களை உயர்த்த வைக்கிறது. ஆட்சியாளர்களுக்கு உவப்பில்லாத கருத்துகளையும் அரசியல் நையாண்டிகளையும் இந்த பாதுகாப்பு,  அமைதி, இறையாண்மை என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி, ஏஐ நிறுவனங்கள் தாங்களாகவே அவற்றைத் “தணிக்கை” செய்யவும், தடுக்கவும் வாய்ப்பாகிவிடுமி. அதிகாரத்துடன் முரண்பட எந்த நிறுவனம் விரும்பும்? மாநாட்டிலேயே சிலர்  இந்தக் கவலையை வெளிப்படுத்தினர். 

சர்ச்சைகள்

ஏஐ என்பதே இணையத் தொடர்பு  சார்ந்ததுதான். ஆனால் மாநாட்டு அரங்கில் இன்டர்நெட் வசதி மிக  மோசமாக இருந்ததாகப் பல வெளி நாட்டுப் பிரதிநிதிகள் மனநிறை வின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜாமர் கருவிகள் இயக்கப்பட்டன. இதனால் அரங்கிற்குள் வைஃபை இணைப்பு முடக்கப்பட்டு, கைப்பேசிகளையும் மடிக் கணினிகளையும் பயன்படுத்த முடியாமல் போனது. உணவோ தண்ணீரோ வாங்குவதற்குப் பணம் செலுத்துவதற்கான செயலிகளைப் பயன்படுத்த முடியாததால், ரொக்கத்துடன் வராதவர்கள் தவித்தனர். பிரதமர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, புதிய சிறிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்தப் புகார்கள்  சமூக வலைதளங்களில் பரவியதை யடுத்து, ஒன்றிய தகவல் தொழில்நுட் பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக ஊடகத்தில், வருத்  தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார்.  ஏனோ பிரதமர் ஏதும் சொல்லவில்லை.

இந்தியக் கண்டுபிடிப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரோபா  நாய், சீனத் தயாரிப்பு என்று தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் வெளியேற்றப்பட்டது. ஏஐ களத்தில் இந்தியாவுக்கு ஒரு  மதிப்பான ‘இமேஜ்’ கட்டுவதற்கு இட்டுச்செல்லக்கூடிய இந்த உலகளாவிய நிகழ்வில், இத்தகைய நிலைமைகள் ஏற்பட்டது அந்த இமேஜ் மீது கறை  படிய வைத்துவிடும்.

அறிவியலாளர் விமர்சனம்


இவற்றைக் காட்டிலும் ஆழ்ந்த கவலைக்குரிய விமர்சனங்களை முன்வைக்கிறார் மூத்த ஆராய்ச்சியாளரும் அறிவியல் எழுத்தாளருமான த.வி.  வெங்கடேஸ்வரன். “புதிய தொழில் முனைவோரும், பன்னாட்டு நிறுவனத்தினரும் உள்பட பல தரப்பினரும் அழைக்கப்பட்டது நல்ல விஷயம்தான். ஆனால் அவர்கள் எல்லோருமே ஒரு சிறு பகுதிதான். அழைக்கப்  படாதவர்கள் யாரென்று பார்த்தால் –தொழிலாளர்கள், விவசாயிகள் அழைக்கப்படவில்லை. டெக்னாலஜிஸ்ட்டுகள் இருந்தார்கள், சயின்டிஸ்ட்டுகள் இல்லை. அதிலும் சமூகவியல் பார்வையோடு ஆராயக்கூடியவர்களைப் பக்கத்திலேயே விட வில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் போல,  மாநாட்டு நன்மையில் ஒரு பகுதி மற்றவர்களுக்கும் போகும். ஆனால், யாருக்குப் பயனளிக்க வேண்டுமோ அந்த எளிய மக்களை மனதில் கொண்டு  திட்டமிடப்படவில்லையே? சிலரது லாபம் மட்டும்தானே மனதில் இருந்திருக்கிறது?”

“சில மேலை நாடுகளைத் தவிர்த்து, ஏஐ பயன்பாட்டில் முன்னேறியுள்ள எல்லா நாடுகளும் அரசாங்கங்கள் முதலீடு செய்ததால்தான் வளர்ச்சி யடைந்தன. இங்கே அது பற்றிப் பேச்சே  இல்லை,” என்றும் அவர் கூறினார்.

“மனி தர்களைப் போல ஏஐ பட்டறிவால் செயல்படுவதில்லை. ஏற்கெனவே தொகுத்தளிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடிக்கணக்கான தரவுகள்தான் அதற்கு அடிப்படை. ஒரு பெரிய நிறுவனத்தின் இடைநிலை மேலாளர் பதவிக்காக வந்த விண்ணப்பங்களை, ஒரு பரிசோதனை முயற்சியாக ஏஐ கருவியில் செலுத்தினார்கள். அது தேர்ந்தெடுத்தவர்கள் எல்லோருமே ஆண்கள். முழுத் தகுதிகள் இருந்தும் ஒரு  பெண்ணைக் கூட அது தேர்ந்தெடுக்கவில்லை. ஏனென்றால் அதனிடம் உள்ள தரவுகளில், அந்தப் பதவி களில் இருந்த பெண்கள் பற்றிய தகவல்களே இல்லை. இதே முறையில்தான் ஏஐ கருவி சாதிப் பாகுபாட்டு டன் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்  டும் வந்திருக்கிறது,” என்று சுட்டிக் காட்டினார்

உச்சத்தில் இருப்பவர்களின் அக்கறைக்கு உரியதாக அமைந்ததால்தான் உச்சி மாநாடோ என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. சமுதாய நிலைமைகளோடு தொடர்பில்லாத, மாற்றங்கள் பற்றிய சிந்தனையில்லாத ஒரு மாநாடு, எவ்வளவு தடபுடலாக நடத்தப் பட்டாலும் வெறும் கண்காட்சிச் சடங்காகக் கடந்துவிடும். திட்டவட்டமாகத்  திசை காட்டும் ஏஐ மாநாடுகள் வரலாற்றில் நிலைபெறுவது, இதெல்லாம் மேலிடத்தவர்களுக்கானது என்று  விட்டுவிடாமல், தங்களின் அன்றாடத்தில் தலையிடுவது, வருங்காலத்தை  வகுப்பது என்ற புரிதலுக்கு வருகிற பொதுமக்களின் கையில்தான் இருக்கி றது.

[0]

தீக்கதிர்  நாளேட்டின் வண்ணக்கதிர் இணைப்பில் எனது கட்டுரை