Monday, 27 April 2026

பண்பாட்டுத் தளமா, பொருளாதாரக் களமா?

எதிர்வினையும் இயக்கவிழியும் 

“விலைவாசி உயர்வு, வரிக் கெடுபிடி, மானிய வெட்டு போன்ற பொருளாதாரப் பிரச்சினைகள் மெலெழும்போதெல்லாம் உடனுக்குடன் எதிர்வினையாற்றுகிற நம் கட்சி, மொழி, சாதி போன்ற சமூகப் பிரச்சினைகள் முன்னுக்கு வருகிறபோது உடனுக்குடனோ அதே தீவிரத்துடனோ எதிர்வினையாற்றுவதில்லையே… ஏன்?”


முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில், பல்வேறு துறைகளில்  செயல்படும் தோழர்களுக்காக அரசியல் பயிலரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. வகுப்புரை முடிந்த பின், கேள்விகளை எழுத்துப்பூர்வமாக முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  ‘தீக்கதிர்’ பிரதிநிதியாகக் கலந்துகொண்ட நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.


ஆசிரியராக வந்திருந்தவர், மாநிலச் செயற்குழு உறுப்பினரும் “டி.எல்.” என்றழைக்கப்பட்டவருமான தோழர் தே. லட்சுமணன். ஒவ்வொரு கேள்வியாக, கேட்டவரின் பெயரைக் குறிப்பிடாமல் வாசித்து, விளக்கங்க்ள் அளித்தார். என்னுடைய கேள்வியை, பெயர் சொல்லியே வாசித்துக் காட்டினார். ஓரிரு நிமிட மௌனத்திற்குப் பிறகு இவ்வாறு பதிலளித்தார்:


“உண்மைதான் தோழர். பலருடைய மனதிலும் இருக்கிற, ஆனால் கேட்கத்  தயங்குகிற ஒன்றைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். வர்க்கக் கட்சி என்ற முறையில் பொருளாதார அடிப்படையில்தான் சமுதாயம் கட்டப்படுகிறது என்ற மார்க்சியப் பார்வை நம் இயக்கத்திற்கு இருக்கிறது. ஆகவே பொருளாதார விவகாரங்களில் உடனடியாகத் தலையிடுவது இயல்பாகிவிட்டது. அதே வேளையில் பொருளாதாரம் என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல. சமுதாயக் கட்டுமானத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் அது இருக்கிறது என்கிறபோது, சமூகமும் பண்பாடும் சார்ந்த விவகாரங்களிலும் அதே அளவுக்குத் தலையிட்டாக வேண்டும்.


“இப்போதும் அந்தப் பிரச்சினைகளில் தலையிடத்தான் செய்கிறோம் என்றாலும், அதை மேலும் அழுத்தமாக, நீங்கள் சொல்கிற அந்தத் தோற்றம் மாறத்தக்க அளவுக்குச் செய்தாக வேண்டும். தற்போதைய நிலைமைக்குக் காரணங்கள் என்ன, புதிய அணுகுமுறைகள் என்ன என்பதையெல்லாம் நான் மட்டும் சொல்லிவிட முடியாது. நிச்சயமாக இதைக் தலைமைக்குழு கவனத்திற்குக் கொண்டு செல்வேன். கட்சித் தலைமையிலும் அனைத்து மட்டங்களிலும் விவாதித்துதான் அதையெல்லாம் முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன், அந்த விவாதம் அக்கறையோடு  தொடங்கியிருக்கிறது. உறுதியாக அது பலனளிக்கும்.”


சில எடுத்துக்காட்டுகளையும் கூறி தனது பதிலை நிறைவு செய்தார். எனது வினாவுக்கு முக்கியத்துவம் அளித்தது, நேர்மையான விளக்கத்தை அளித்தது இரண்டுமாகச் சேர்ந்து அவர் மீதும் ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் நான் கொண்டிருந்த மதிப்பு பல மடங்கானது.


இன்று பலரும் கேட்கிறார்கள், ஏன் அமைப்புக்கு உள்ளே இருப்பவர்கள் கூடக் கேட்கிறார்கள்: ”வர்க்கக் கட்சியாக இருந்துகொண்டு, சாதி ஆணவம், மதவாதம், பிராமணியம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, மொழித்திணிப்பு, மாநில உரிமை மீறல், சனாதனம்… போன்றவற்றிற்கு முன்னிலை அளித்து, பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளுவது சரியா?”


கட்சிக்குள் நடந்த விவாதம் சரியான அணுகுமுறைகளை வகுப்பதற்கு இட்டுவந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. இந்தப் பிரச்சினைகளில் கூட அடியாதாரமாக இருப்பது பொருளாதாரம்தான். ஆனால், பொருளாதாரம் என்றால் வெறும் ரூபாய் பைசா சங்கதி மட்டுமல்ல என்ற புரிதலோடு கட்சியின் இன்றைய எதிர்வினைகள் அமைகின்றன. “எந்தப் பிரச்சினையானாலும் கடைசியில் பொருளாதாரத்துக்கு வந்துவிடுகிறீர்களே,’‘ என்று கேட்கிறவர்களையும் பார்க்க முடிகிறது.


பொருளாதாரமே அடிவாரம், சமூகப் பண்பாட்டுக் களங்கள் மேற்கட்டுமானம் என்பது ஓர் அறிவியல் உண்மை. பாழடைந்த கட்டடத்தைத் தகர்த்து மாற்றிக் கட்ட வேண்டுமானால், நேரடியாக அடிவாரத்தை இடிக்க முடியாது – அப்படிச் செய்தால் இடிபாடுகள் நம் மேலேயே விழுந்து புதைத்துவிடும். மேற்கூரை, உள்ளறை, சுற்றுச்சுவர் என்று இடித்துதான் அடிவாரத்துக்குப் போக வேண்டும். சமூகப் பண்பாட்டுத் தளங்களில் தலையிடுவதும் அப்படித்தான். 


பெருமிதத்தையும் நம்பிக்கையையும் தருகிற இந்த வளர்ச்சிப்போக்கு ஏதோ என் ஒருவனது  கேள்வியால்தான் உருவானது என்ற அறியாமை மமதை எனக்கில்லை. அவரவர் மொழியில், அவரவர் வழியில், அவரவர் வாய்ப்பில் இதைக் கேட்டிருக்கக்கூடிய எத்தனையோ தோழமைகளோடு எனது குரலும் இணைந்திருக்கிறது என்ற நிறைவுணர்வு இருக்கிறது.

[0]

‘தமிழ் தேசம்’ குழுவின் இணையவழிக் கூடுகையில் (ஏப்.26), “இன்றைய இளைஞர்களும் நாளைய தலைவர்களும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் க. உதயசங்கர் உரையாற்றினார். தொடர்ந்த கலந்துரையாடல் பொழுதில் வந்த ஒரு கருத்துக்கான எனது எதிர்வினையின் செதுக்கல் இது.