காலை நடையில் பூங்கா நிழலில்
“தோழரே, நேத்து பார்க் என்ட்ரன்சிலே நீங்க ஒரு குரூப்பா நின்னுக்கிட்டு வர்றவங்களுக்கும் போறவங்களுக்கும் ஏதோ நோட்டீஸ் கொடுத்துக்கிட்டு இருந்தீங்க போல இருக்கே… என்ன ஏதாவது போராட்ட அறிவிப்பா?”
இயக்கத்தோடு தொடர்பில்லாதவர் என்றாலும் என்னைத் தோழர் என்றே (சற்று கிண்டல் தொணியில்) அழைக்கிற காலை நடை நேர நண்பர், கடைசிக் கட்டமான மரத்தடி இருக்கை அமர்வின்போது இதைக் கேட்டார்.
நான்கைந்து பேர் கூட இருக்கிறபோது இதைப் பற்றிப் பேசக் கிடைத்த வாய்ப்பை விடுவேனா? அவருக்குப் பதில் சொல்வது போலப் பேசினேன்.
“போராட்டமில்லை. மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துறதுன்னு கட்சியிலே முடிவு செஞ்சு நடந்துக்கிட்டிருக்கு. நாடு தழுவிய அளவிலான முக்கியமான நிலவரங்கள், தமிழ்நாட்டில் மாநில அளவில் மக்களுக்குத் தேவைப்படுகிற நடவடிக்கைகள், நம்ம தொகுதியிலேயே இன்னமும் சரி செய்யாமல் இருக்கிற பொதுவான குறைகள்… இதைப் பற்றியெல்லாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துறதுக்காக இந்த இயக்கம். எல்லாக் கிராமங்களிலேயும் நகரங்களிலேயும் இந்த மாசம் 31 வரை நடக்குது. அதையொட்டி நாங்கள் இங்கே ஒரு குழுவாகப் போய் மக்களைச் சந்திக்கிறோம், துண்டறிக்கை கொடுக்கிறோம், நாங்க சொல்றதைக் கேட்கத் தயாரா இருக்கிறவங்ககிட்ட ஒரு சில நிமிடங்கள் பேசுறோம்… நேத்து இந்தத் தெருவிலே ஒவ்வொரு கடை, ஒவ்வொரு வீடா துண்டறிக்கை கொடுத்துட்டு, கடைசியா பூங்கா வாயிலுக்கு வந்தோம்.”
“ஆமா சார், எங்க வீட்டுல கூட நோட்டீசை வாங்கி வச்சிருந்தாங்க. படிச்சுப் பார்தேன். அட, இந்த ஏரியாவுலதான் இத்தனை வருசமா குடியிருக்கோம், இந்தப் பிரச்சினையெல்லாம் இங்கே இருக்கிறதைத் தெரிஞ்சுக்காம இருந்துட்டோமேன்னு கொஞ்சம் ஷையா கூட இருந்துச்கு.”
இதைச் சொன்னவர் பூங்காவிலேயிருந்து இருபது நிமிடத் தொலைவில் உள்ள வீட்டில் குடியிருக்கிறவரான மற்றொரு நண்பர்.
“தெரிஞ்சு என்ன ஆகப் போகுது சார்? ரியல் சேஞ்ஜ் எதுவும் வரப் போறதில்லை. தோழரோட கட்சியால சும்மா இருக்க முடியாதுல்ல? கட்சி மெம்பர்ஸ் சும்மா இருக்க விடக்கூடாதுல்ல? அதுக்காக இப்படியொரு மூவ்மென்ட்டை நடத்துறாங்க.”
“மாற்றம் தானா வராது. உங்களை மாதிரி விவரம் தெரிஞ்சவங்க ஆதரவு தரணும். விவரம் தெரியாதவங்க தெரிஞ்சுக்கிட்டு ஆதரவு தரணும். அப்பதான் மாத்த முடியும். ஆனா, நேத்து கூட பாருங்க, பொதுவா வீடுகள்ளேயும் கடைகள்ளேயும் சாலையிலேயும் தெருவிலேயும் நாங்க குடுத்த துண்டறிக்கையை வாங்கிப் படிச்சவங்களும் இருந்தாங்க. வாங்கிக்கிட்டு பேச மறுத்தவங்களும் இருந்தாங்க. சில பேரு வாங்க மாட்டேன்னு தலையை ஆட்டினாங்க. இன்னும் சில பேரு தலையை ஆட்டுறது கூட கௌரவக் குறைச்சல்னு கடந்து போனாங்க. இந்த நிலைமையிலே மக்கள் இதிலேயெல்லாம் கவனம் செலுத்த விடாம, அற்பத்தனமான விசயங்களைக் கிளப்பிவிட்டுத் திசை திருப்புற வேலையும் நடக்கும் (ஒன்றிரண்டு உதாரணங்களையும் சொன்னேன்). படிப்படியாதான் விழிப்புணர்வு பரவும்.”
“சரிதான் தோழரே. ஆனா, கம்யூனிஸ்ட் கட்சியும் முந்தி இருந்த மாதிரி இப்ப இல்லை. முந்தி மாதிரி தியாகம் பண்றவங்களை இப்ப பார்க்க முடியலை. தகுதியுள்ளவங்களுக்கு வாய்ப்பு தர்றதில்லை. பிரச்சினைகள்ல சரியான ஸ்டேண்ட் எடுக்கிறதில்லை. நேத்து ஈவ்னிங் கூட நீங்க நாலைஞ்சு பேருதான் இருந்தீங்க. மத்தவங்க நிறையப் பேர் வரலைல்ல...”
வீட்டுக்குக் கிளம்பலாமென்று இருக்கையிலிருந்து எழப் போனவர்கள் மறுபடி அமர்ந்து என் பதிலைக் கேட்க ஆவலானார்கள்.
“கட்சி இப்படித்தான் இருக்குது, கட்சியில இப்படிப்பட்டவங்கதான் இருக்காங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?”
“அதுதான் அடிக்கடி பல பேரும் பேசுறாங்களே. ஏன், உங்க கட்சிக்காரங்களே கூட பேசியிருக்காங்க. என் கிட்டயே பேசியிருக்காங்க… அதை வெச்சுதான் சொல்றேன். ஏன் நானெல்லாம் உங்க கட்சியை கிரிட்டிசைஸ் பண்ணக்கூடாதா?”
“தாராளமா பண்ணலாம். தடையே இல்லை. ஆனால் எந்த அடிப்படையிலே விமர்சனம் பண்றீங்கன்றது முக்கியமில்லையா? ஒண்ணு நீங்களே கட்சியிலே இருந்து, உள்ளே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு விமர்சிக்கணும். வெளியிலே பல பேருக்குக் கட்சி எடுக்கிற நிலைப்பாட்டிலே மாறுபாடு இருக்குது, அதனால இப்படிப் பேசுவாங்க…”
“கட்சியிலே இருக்கிறவங்களே சொல்றாங்கன்னு சொன்னேனே தோழர்...”
“சொல்லியிருக்கலாம். கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள்ல, மக்களுக்காகப் போராட்டங்களை நடத்திக்கிட்டே விஜய் கட்சியோட ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது மாதிரியான முடிவுகள்ல உடன்பட முடியாதவங்க இருப்பாங்க. கட்சிக்குள்ளேயோ, கட்சியோட வழிகாட்டல்ல செயல்படுற அமைப்புகள்ளேயோ அவங்க எதிர்பார்க்கிற இடம் கிடைக்கலைங்கிற கோபத்திலேயும் சில பேரு இருப்பாங்க. உறுப்பினர்களா இருக்கிற பல பேரு இது மாதிரியான நிகழ்வுகள்ல ஏதோ காரணத்தால கலந்துகொள்ளாமப் போறதிலே ஆதங்கப்படுறவங்க இருப்பாங்க. இப்படியெல்லாம் இருக்கிறவங்கள்ல சில பேரு அமைப்பு ஒழுங்கோ, சொந்தக் கட்டுப்பாடோ இல்லாம வெளியே பேசுவாங்க. உங்களை மாதிரியான நண்பர்கள்ட்டயும் சொல்லிப் புலம்புவாங்க. அவங்க சொல்றதை நம்புற நீங்க, என்னை மாதிரி ஆட்களும் இருக்கோம்ல, நாங்க சொல்றதை ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க?“
“ஆனாலும் அந்தக் கால கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்தக் காலத்துக்கும் டிஃபரென்ஸ் இருக்கத்தான் செய்யுது தோழரே. முந்தி…”
“இதுக்கு முன்னாலேயும் இதைப் பத்தி நம்ம சபையிலே பேசியிருக்கோம்னு நினைக்கிறேன். எப்படி அர்ப்பணிப்போட செயல்படுறவங்க கட்சியிலே இருக்காங்களோ, அதே போல மேலோட்டமா பங்கெடுக்கிறவங்களும் இருப்பாங்க. அவங்களும் புரிஞ்சிக்கிடறதுக்காகத்தான் இந்த இயக்கம். அந்தக் காலம் போலவே இந்தக் காலத்திலேயும் வீரத்தோடேயும் அர்ப்பணிப்போடேயும் எளிமையாவும் இயங்குறவங்க பல பேரு இயக்கத்திலே இருக்காங்க. அதைத் தியாகம்னெல்லாம் அவங்களே சொல்லிக்கிடறதில்லை, இயல்பான இயக்க ஈடுபாட்டிலே தியாகம்கிறதெல்லாம் கிடையாது. மத்தவங்க வேணும்னா அவங்களோட ஈடுபாட்டையும், சொந்த ஆதாயம் தேடிக்காம இருக்கிறதையும் தியாகம்னு சொல்வாங்க. இவங்க அந்த அடைமொழி பத்தியெல்லாம் கவலைப்படாம இயக்கத்துக்காக உழைச்சுக்கிட்டு இருப்பாங்க.”
கொஞ்சம் உரக்கவே பேசிவிட்டேன் போலும். இருக்கையைக் கடந்து போனவர்களும் நின்று கவனித்துவிட்டு நடையைத் தொடர்ந்தார்கள். மௌனம் எங்களைக் கவ்விக்கொள்வதைத் தவிர்க்க, சட்டென எழுந்து விரைவாக நடந்து தேநீர்க்கடையை அடைந்தோம்.
