Monday, 27 July 2026

விருதுகளால் விசிறிவிடப்படும் வெறுப்பரசியல்



லை, இலக்கியப் படைப்பாக்கத்தில் தலையாய இடம் வகிப்பது அரசியல் சமூக விமர்சனம் ஆகும். அந்த வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஒரு சிறப்பான வளர்ச்சி நிலைதான், ஏற்கெனவே வந்த படைப்புகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் மறுவாசிப்புக்கும் மறுவிமர்சனத்துக்கும் உட்படுத்துவது.

எந்தவொரு வரலாற்றுப் பதிவையும் அவரவர் கண்ணோட்டத்தில் மறுவிமர்சனத்திற்கு உட்படுத்தும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அது ஆரோக்கியமான தொடர் விவாதங்களுக்கும் புதிய தெளிவுகளுக்கும் இட்டுச்செல்ல வேண்டும்.

புனிதம் தகர்த்த நாவல்

2009ஆம் ஆண்டில் ஹிலாரி மாண்டல் எழுதிய ‘உல்ஃப் ஹால்’ (ஓநாய் மண்டபம்) என்ற ஆங்கில நாவல் வெளியானது. 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட எட்டாம் ஹென்றி அமைச்சரவையில் தலைமை அமைச்சராக இருந்த தாமஸ் மோர் ஒரு புனிதப் பிறவியாகவே சித்தரிக்கப்பட்டவர். தாமஸ் க்ராம்வெல் என்ற ஓர் எளிய மனிதர் தலைமை அமைச்சரின் போலித்தனங்களை உரித்துத் தாமஸ் மோரின் புனிதப் பிம்பத்தைக் கலைப்பதுதான் அக் கதையின் கரு.

ஆங்கில இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும் விவாத அலைகளைக் கிளப்பிய அந்த நாவல் பின்னர் புக்கர் பரிசு உள்பட, உலகளாவிய பல விருதுகளைப் பெற்றது. கத்தோலிக்கத் திருச்சபையின் பிடியிலிருந்து அரசு விடுபட்டதைச் சித்தரித்த புனைவு என்று திறனாய்வாளர்கள் பாராட்டினார்கள்.
பிபிசி நிறுவனம் 2015இல் அந்தக் கதையைத் தொலைக்காட்சித் தொடராகவும் தயாரித்தது. உலக மேடைகளில் இப்படி வேறு பல படைப்பாக்கங்களையும் காண முடியும்.

இந்தியாவில், 1984இல் வெளியான ‘ரண்டாமூழம்’ மலையாள நாவலில், மகாபாரதக் கதையைப் பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் கண்ணோட்டத்தில் சொன்னார் எம்.டி. வாசுதேவன். அந்த நாவல் பாஞ்சாலி மீது பீமன் கொண்ட உண்மையான காதலை விவரித்தது.

மிக முக்கியமாக, போரின் கொடூரங்கள் குறித்த பதற்றத்தையும் உறுத்தலுணர்வையும் ஏற்படுத்தியது. மலையாள இலக்கிய உலகம் அதற்கு வயலார் விருது உள்ளிட்ட மரியாதைகளை அளித்து மகிழ்ந்தது.

தமிழில் இராமாயணத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்திய ‘இராவண காவியம்’ (புலவர் குழந்தை – 1946), பெண்ணின் சுயமரியாதை உணர்வை வேறு கோணத்தில் சொன்ன ‘அகல்யை’ (1934), ‘சாபவிமோசனம்’ (1943) (புதுமைப்பித்தன்),

மன்னர்களின் சாகசத்தையும் சல்லாபத்தையும் விவரித்த கதைகளுக்கு மாறாக அந்நாள் மக்களின் கதைகளைப் பேசிய ‘உப பாண்டவம்’ (எஸ். ராமகிருஷ்ணன்) என குறிப்பிடத்தக்க பல படைப்புகள் வந்துள்ளன.

மூவேந்தர்களையும் பரம்புமலை பாரியையும் பற்றிய முந்தைய பாடங்களிலிருந்து விலகி, சமவெளிப் பேரரசுகளின் மண்ணாதிக்க வெறியோடு போராடிய மலைக்காட்டு மக்கள் தலைவனின் மூலமாக அவர்களின் வாழ்வியலையும் நமக்குக் காட்டியது “வேள்பாரி” (சு. வெங்கடேசன், 2018).

அதைப் படித்த பல குடும்பங்களில் குழந்தைகளுக்குக் கதை மாந்தர்களது பெயர்கள் சூட்டப்படுகிற பெரும் அங்கீகாரம் அந்த நாவலுக்கு இன்றளவும் கிடைத்தவண்ணம் உள்ளது.>

கட்டபொம்மனும் ஹைதரும்

திரைப்படங்களிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கொள்ளைக்காரனாகவே சித்தரிக்கப்பட்டு வந்தவனை, விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயமாக முன்வைத்தது சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில், சக்தி கிருஷ்ணசாமி எழுத்தில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” (1959).

மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்ததற்காக மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்லப் புறப்பட்டு பின்னர் மனசாட்சியின் தண்டனைக்கு உள்ளாகிறவனின் கதையைக் காட்டிய ‘ஹே ராம்’ (கமல்ஹாசன், 2000) ஒரு வகை மறுவிமர்சனம்தான்.

காஷ்மீர் மண்ணை மீட்கும் நாயகர்களின் சாகசங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு, அடக்குமுறைகளால் அல்லாடும் எளிய மக்களின் துயரத்தைத் திரைக்குக் கொண்டு வந்த இந்திப் படம் ‘ஹைதர்’ (2014).
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற “ஹேம்லட்’ நாடகத்தைத் தழுவி பஷாரத் பீர், விஷால் பரத்வாஜ் எழுதி, பின்னவரின் இயக்கத்தில் ஷாஹித் கபூர், தபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

1919இல் பஞ்சாப் மண்ணின் ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் திரண்டிருந்த மக்களைத் துப்பாக்கிக் குண்டுகள் தீருமட்டும் கொன்று குவித்துக் குதூகலமடைந்தவன் ஜெனரல் டயர். அவனைச் சுட்டுக்கொன்ற உத்தம் சிங் ஒரு பழிவாங்கும் தீவிரவாதியாகவே காட்டப்பட்டு வந்திருக்கிறார். அவரது ஆழ்ந்து ஆராயும் திறனையும், அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொந்தளித்த துணிவையும் சொன்னது 2021இல் ஓடிடி தளத்திற்கு நேரடியாக வந்த ‘சர்தார் உத்தம்’. கதையாக்கம் சுபேந்து பட்டாச்சார்யா, ரிதேஷ் ஷா, முதன்மைப் பாத்திரத்தில் விக்கி கௌஷல், இயக்கம் சுஜீத் சர்க்கார்.

பகை மூட்டப் படங்கள்

இப்படிப்பட்ட மறுவிமர்சனப் படைப்புகள் வரலாற்றுப் பரப்பின் புதிய எல்லைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. மாற்றி யோசிக்கும் கலையைக் கற்றுத் தருகின்றன. நலமான மாற்றங்களுக்கு வித்திடும் விவாத வயலைப் பண்படுத்துகின்றன. ஆனால்
மறுவிமர்சனம் என்ற போர்வையில் அப்பட்டமான வெறுப்பரசியல் நெருப்பை வளர்க்கிற, மக்களிடையே பகைமையைைக் கிளறிவிடும் கைங்கரியங்களில் சிலர் இறங்குகிறார்கள்.

ஏதோ காரணத்தால் நேரடியாகவோ மறைமுகவோ தங்களை ஒப்படைத்துக்கொண்ட அமைப்புகளின் திட்டங்களுக்கு ஏற்பக் கதைகளை உருவாக்குகிறார்கள். நம்புவதற்காக சில உண்மைகளோடு நம்ப வைப்பதற்கான பொய்களைக் கோர்த்துச் செய்கிறார்கள்.

கலையும் அரசியலும் எப்போதும் தனித்தனியாக இயங்குவதில்லைதான். ஆனால், அதிகார பீடத்தின் குரலாகக் கலை மாறும்போது, அது தனது உயிராதாரச் சுதந்திரத்தை இழக்கிறது, நேர்மையைத் துறக்கிறது, அரசாங்கப் பரப்புரைக் கருவியாகச் சுருங்குகிறது.

காந்தி மறுகொலை

விடுதலைப் போராட்டக் காலத்தில், பல்வேறு இயக்கங்கள் தங்களது வழிகளில் இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தன. அப்போது காந்தி மேற்கொண்ட வன்முறையற்ற பாதை நாட்டின் பெருந்திரளான மக்களை ஈர்த்தது, போராட்டத்தில் ஈடுபட வைத்தது. அந்நேரத்தில் அவரோடு முரண்பட்டவர்களும் பின்னர் இதை ஏற்றுள்ளார்கள்.

விடுதலை வரலாற்றின் அழுத்தமான அத்தியாயங்களில் ஒன்றாக அது பதிவாகிவிட்டது. ஆனால், அவருடைய அந்தப் பாதையால்தான், சாவர்க்கர் கையில் எடுத்த ஆயுதமேந்திய பாதை பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும், அதனால்தான் சாவர்க்கரின் லட்சிய பாரதம் உருவாகாமல் போய்விட்டதாகவும் விவரிக்கிறது ‘சுதந்திரிய வீர் சாவர்க்கர்’ என்ற திரைப்படம் (2024). சாவர்க்கரின் லட்சிய பாரதம் என்பது இந்துராஷ்டிரம் எனப்படும் ஒற்றை மத ஆதிக்க அரசுதான். இந்திய மக்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் அதை நிராகரித்தார்கள்,

எல்லா மதத்தினருக்கும் சொந்தமான, மதமே இல்லாதவர்களுக்கும் உரியதான நாடு இது, இதன் அரசு மதச்சார்பற்றது என்று அறிவிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நிறுவினார்கள். ஆனால், சாவர்க்கரை கதாநாயனாக்கி, காந்தியை வில்லனாக்கியிருக்கிறார் உட்கர்ஷ் நைதானி என்பவரோடு சேர்ந்து கதையை எழுதியவரும், சாவர்க்கர் பாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் ரந்தீப் ஹூடா.

நியாயப்படுத்தப்படும் அநியாயம்

ஒரு வரலாற்றுத் தேவையாகவும், அரசியல் உடன்பாடாகவும் கொண்டுவரப்பட்ட 370ஆவது சட்டப் பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு நிலையை வழங்கியிருந்தது.

2019இல் பாஜக அரசு அதை விலக்கிய நடவடிக்கையை மையமாகக் கொண்டது ‘ஆர்ட்டிகிள் 370’. மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியான கதாநாயகன் காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளையும் துவம்சம் செய்கிற மாமூலான ஆக்‌ஷன் படம்.

உற்று நோக்கினாலோ, அந்தச் சட்டத்தை விலக்க மத்திய அரசு முடிவு செய்தது, அதற்கு எதிர்ப்புவராமல் தடுப்பதற்காகப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தது, மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களைச் சிறையில் அடைத்தது போன்ற செயல்கள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தலைவர்கள் ஊழல் பேர்வழிகளாகவும், சட்டத்தைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தியவர்களாகவும் வடிக்கப்பட்டிருப்பார்கள்.
இது யாருக்கு முதுகு சொறிந்துவிடுகிற வேலை என்று சொல்லத் தேவையில்லை. யமி கௌதம், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்க, ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே படத்தை இயக்கியிருக்கிறார்.

அதிரடி அடாவடி

“கோலிவுட்” திரைவட்டாரம் என்ன இதற்கெல்லாம் சளைத்ததா என்று காட்டுவது போல் 2024இல் வந்தது ‘அமரன்’. சிவ அரூர், ராகுல் சிங் இருவரும் இணைந்து எழுதிய ‘இந்தியாவின் அச்சமற்றோர்: நவீன ராணுவ நாயகர்களின் உண்மைக் கதைகள்’ (India’s Most Fearless: True Stories of Modern Military Heroes) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேஜர் முகுந்த் வரதராஜனின் சில அனுபவங்களை உணர்ச்சிகரக் காட்சிகளும் இது மனித உரிமை மீறல் இல்லையா என்று கேட்க வைத்த நிகழ்வுகளும் கலந்து திரைக்கதையாகச் சொல்லும் படம் இது.

பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களது துணிச்சலான செயல்களையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லைதான்.
ஆனால், மறுதரப்பினரின் வாதங்களை மருந்துக்கும் தொட்டுக்காட்டாத ஒரு தரப்புத் தீர்ப்புகளை ஏற்பதற்குமில்லை. அப்படியான தீர்ப்பைத்தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி பங்கேற்புடன் இந்தப் படம் அளித்தது. இதைக் கூட்டாகத் தயாரித்தது – கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ்.

“சில உண்மைகளைக் கூறுவதே நோக்கம்”, “யாரையும் தாக்குகிற எண்ணம் ஏதுமில்லை”, “ஒரு வணிகத் திரைப்படத்துக்கான விறுவிறுப்பு நிகழ்வுகள் இருப்பதால் தயாரித்தோம்”... என்றெல்லாம் படங்களைத் திரைக்கு அனுப்பியவர்கள் சொல்கிறார்கள். ஆனால்,
ஏற்கெனவே எண்ணற்ற வணிகப் படங்கள் மக்கள் மனங்களில் பயங்கரவாதிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும், இரக்கமற்ற சதிகாரர்கள் என்றும், அந்நிய சக்திகளின் ஏவலர்கள் என்றும் பிம்பங்களைக் கட்டிவைத்திருக்கின்றன. நாயகர்களை வீரர்களாகவும் தேச பக்தர்களாகவும் காட்டுவதற்காக உறுத்தலே இல்லாமல் அந்தப் பிம்பங்கள் கட்டப்பட்டன.

இதன் சமூக விளைவுகளை யாராவது சொல்லிக் காட்டினால், “சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்,” என்று கூறிப் பதுங்கிக்கொள்வார்கள்.
அவ்வகைப் படங்கள் மறைமுகமாகவும் துண்டுதுண்டாகவும் கட்டிய எதிர்மறைப் பிம்பங்களை நேரடியாகவும் ஒட்டுமொத்தமாகவும் நிலைப்படுத்துகிற கைங்கரியத்தைத்தான் வீர் சாவர்க்கர்களும் ஆர்ட்டிகிள் 370களும் அமரன்களும் செய்கின்றன.

அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள்

கொடுமை என்னவென்றால், இவ்வகைப் படங்களுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. “கட்” இல்லாமல் தணிக்கைச் சான்றிதழும், தேசிய விருதுகளும் வழங்குவது வரையில் அந்த அங்கீகாரம் நீள்கிறது.

2024ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இந்த ஜூலை 18 அன்று ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டன. அதில் –
காந்தியை வில்லனாக்கிய ‘வீர சாவர்க்கர்’ இயக்குநர் ரந்தீப் ஹூடாவுக்குச் சிறந்த முதல் பட இயக்குநர் விருது, காஷ்மீர் மக்களுக்கு சிறிதளவேனும் நம்பிக்கை ஒளி தந்த 370 சட்டவிதி நீக்கப்பட்டதை நியாயப்படுத்திய ‘ஆர்ட்டிக்கிள் 370’ சிறந்த திரைப்பட விருது, அதில் நடித்த யமி கௌதமுக்குச் சிறந்த நடிகைக்கான விருது, காஷ்மீர் முஸ்லிம் மக்களைப் பயங்கரவாதிகளாகவும், அவர்களை இராணுவத்தினர் தேடிக் கொன்று கொண்டாடுவது சரியென்றும் சித்தரித்த ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளன

சமூக அக்கறையாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான இப்படங்களுக்கு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டதில் ஒரு உள்ளார்ந்த அரசியல் செய்தி இருக்கிறது.

காலப்போக்கில், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும் நோக்கங்களுக்கும் துணை போகும் படங்களுக்கே அங்கீகாரம் அளிக்கப்படும் என்பதே அந்தச் செய்தி. ஏற்கெனவே இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதுப் பட்டியலை அமைச்சகம் நிறுத்திவைத்த நடவடிக்கை கூட இந்தச் செய்திக்கான முன்னோட்டமே.

“எடுத்தால் இரண்டரை மணி நேரப் பொழுதைப் போக்கடிக்கிற படங்களாக எடுங்கள், இல்லையேல்
பகைப் புகை மூட்டம் கிளப்பும் படங்களாக எடுங்கள்,” என்ற அறிவிக்கப்படாத நிபந்தனையும் அந்தச் செய்தியில் அடங்கியிருக்கிறது.

உலக அரங்கில் இந்திய சினிமா தனக்கான மரியாதையை, சமூகப் பொறுப்புள்ள, நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற படங்களால் பெற்றது. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியக் கலையுலகினர் என்ன செய்யப்போகிறார்கள்? 

[0]

‘தீக்கதிர்’ ஜூலை 26 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் எனது கட்டுரை