Saturday, 18 April 2026

சவால் முடிவில் சுதந்திரம்! 'மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா'


 

                                இந்தித் திரைப்படம் – 2014


ருவர் விந்தி விந்தி நடப்பதை, திக்கித் திக்கிப் பேசுவதை, திரும்பத் திரும்ப “என்ன சொன்னாய்” என்று காதில் கைவைத்துக் கேட்பதை, குறுக்கும் நெடுக்குமாய்க் காரணமின்றி நடப்பதை… நகைப்புக்குரிய நடத்தைகளாகச் சித்தரித்த திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. சமூக வக்கரிப்பின் அந்தப் பிரதிபலிப்புகளுக்கு மாற்றாக, சமூக மனசாட்சிக்கான குரலாகவும்  படங்கள் வருகின்றன. அத்தகைய ஒரு கலைப் படைப்புதான் 2014இல் இந்தியாவில் உருவாகி உலக அரங்குகளுக்குச் சென்ற ‘மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’.

மார்கரிட்டா என்பது ஒரு மது. அதனை நேரடியாக அல்லாமல் உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா) மூலம் அருந்துவது ஒரு சவால். ஆயினும் இறுதியில் அந்த பானத்திற்குரிய சுவை சுகமான அனுபவமாகிவிடும். அதே  போல ஒரு மாற்றுத் திறனாளி தனது இயற்கையான உணர்வுகளுக்கு ஏற்படும் சவால்களை மீறிச் சிறகடிப்பதை இந்தப் படம் பேசுகிறது.

தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் துடிப்பான இளம்பெண் லைலா. மூளை முடக்குவாதம் இருப்பதால், கைகளைப் பயன்படுத்துவது, தெளிவாகப் பேசுவது உள்ளிட்ட உடற்செயல்பாடுகள் கடினமானவை; சக்கர நாற்காலியில்தான் அவளது உலகம் பயணிக்கிறது. ஆனால், இசையமைக்கும் திறனும் எழுத்தார்வமும் உள்ள அவளது மனம் எதற்கும் கட்டுப்படாதது. அந்த மனதில் அந்த வயதுக்கே உரிய காதல் உணர்வும் பாலியல் விருப்பமும் குடிகொள்கின்றன. இந்த இடத்திற்கு வருவதன் மூலம், மாற்றுத் திறனாளிகளின் உடல் நிலைகளுக்கு அப்பால் உணர்வுச் சிக்கல்கள் பற்றிய கவன ஈர்ப்பைக் கோருகிறது படம்.

கல்லூரி இசைக்குழுவில் ஒரு மாணவனைக் காதலிக்கிறாள் லைலா. அதை  வெளிப்படுத்தும்போது  நிராகரிக்கப்படுகிறாள். அந்த வலி தன்னை முடக்கிவிட அவள் அனுமதிக்கவில்லை. அது அவளுடைய எல்லையை விரிவுபடுத்துகிறது.

மேல் படிப்பிற்காக நியூயார்க் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறாள். ஒப்பீட்டளவில் அங்கே கிடைக்கும் சுதந்திரம், இந்தியச் சூழலில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் வெளிகளை அவளுக்குப் புரிய வைக்கிறது. படம் பார்க்கிறவர்களுக்கும்தான்.

நியூயார்க்கில் லைலாவுக்கு, பார்வை மாற்றுத் திறனாளியும் பாகிஸ்தான்–பங்களாதேஷ் பெற்றோருக்குப் பிறந்தவளுமான கானும் நெருங்கிய தோழியாகிறாள். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.  நாகரிக சமுதாயம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ள தற்பாலின ஈர்ப்புக்கு, இவர்களும் அப்பாற்பட்டவர்களல்ல என்று காட்டப்படுகிறது. அந்த உறவு அளவோடு, கலைக் கண்ணியத்துடன் படமாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தோழியை அழைத்துக்கொண்டு தில்லி வரும் லைலா, பெற்றோரிடம் அறிமுகப்படுத்த, அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகிறாள் கானும்.

அதேவேளையில், அமெரிக்காவில் தன்னுடன் புரிதலோடு பழகும் ஜாதேர் என்ற இளைஞன் மீதும் லைலாவுக்குக் காதல் ஏற்படுகிறது. இதை மறைக்காமல் தெரிவிக்கிறபோது, கானும் காழ்ப்புணர்வுக்கு ஆளாகிறாள். “இதை எதுக்கு என்னிடம் சொன்ன,” என்று அவள் கேட்க, “உன்னிடம் எதையும் மறைக்க விரும்பல,” என்று இவள் பதிலளிக்கிற இடம் தோழமைக்கே உரியது.

மகளை ஒரு குழந்தையாகவே கருதும் தாய் சுபாங்கினி கபூர், அவளுடைய புதிய மாற்றங்களையும், சுதந்திர வேட்கையையும் கண்டு தவிக்கிறார். அவற்றை ஏற்கத் தடுமாறுகிறார். கோபமான சண்டையாகவும் மாறுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் கடைசி மணித்துளிகளுக்காகக் காத்திருக்கும்போது, லைலாவிடம், “நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போய்விடு,” என்கிறார். அவர் சரியான புரிதலுக்கும் பரிவுக்கும் வந்துவிட்டதை, அவ்வாறு விளக்குகிற வசனம் ஏதுமில்லாமலே புரிந்துகொள்கிறோம். தாய்–மகள் பிணைப்பும் பிரிவும் உணர்வுப்பூர்வமானது.

நியூயார்க்குக்குத் வரும் லைலா, தந்தையிடம் “அப்பா இன்னிக்கு நான் வெளியே போகணும்,” என்று கூறுகிறாள். “எங்கே” என்று அவர் கேட்கிறபோது, “எனக்கு ஒரு டேட் இருக்கு,”  என்கிறாள். காதல் இணையுடன் ஊர் சுற்றப் போவதை அவள் இப்படித் தெரிவித்ததும், பயணத்திற்குத் தந்தை உதவுகிறார். அமெரிக்காவின் இந்தச் சமூக ஏற்புக்கு இந்தியத் தகப்பனும் பழகிவிட்டதை அந்த இடம் சித்தரிக்கிறது. அவள் தனது “டேட்டிங்”  துணையாக யாரைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பது சுவாரசியமான முடிவு. விடுதலையும், சுயமரியாதையைத் தொலைக்காத சுயநேசமும் கலந்த சுதந்திரத்தின் அழகிய வெளிப்பாடு அது.

லைலாவாக கல்கி கோய்ச்லின் நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதற்காக அவர் சக்கர நாற்காலியிலேயே வாழ்வது, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு முறையையும் உடல் மொழியையும் பயிலுவது என ஆறு மாதங்கள் தீவிரப் பயிற்சி எடுத்தாராம். தோழியாகவும் காதலியாகவும் வரும் சயானி குப்தா நடிப்பும் அப்படித்தான். பார்வை மாற்றுத் திறனாளிகளின் பள்ளிக்குச் சென்று, அவர்களின் கண்கள் நிலைகொள்வது, பொருள்களைத் தடவிப் பார்த்துக் கண்டறிவது உள்ளிட்ட செயல்முறைகளைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கினாராம். தாயாக ரேவதி தன் பல்லாண்டு அனுபவத்துடன் நுட்பமான உணர்வுகளை முகமாற்றங்களிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையை எழுதி இயக்கியவர் சோனாலி போஸ். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரி மாலினி சிப் என்பவர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.  சிறந்த எழுத்தாளர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான களப் போராளி. ஒருமுறை அவர் சோனாலியிடம், "மக்கள் என்னை ஒரு மாற்றுத்திறனாளியாகப் பார்க்கிறார்கள், ஆனால் ஒரு மனுசியாக எனக்கிருக்கும் உணர்வுகளை யாரும் கவனிப்பதில்லை," என்று கூறினார். குறிப்பாக, "எனக்கு ஒரு 'செக்ஸ் லைஃப்'  இருக்கக் கூடாதா," என்ற அவரது நேரடியான கேள்வி தன்னைப் பெரிதும் பாதித்தது என்றும், இந்தக் கதையின் கரு விளைந்த இடம் அதுதான் என்றும் சோனாலி கூறியிருக்கிறார்.

கதையை உயிர்ப்புள்ள காட்சி வடிவமாக்குவதில் ஒளிப்பதிவாளர் ஆனி மிசாவா, கதை நகர்வுகளோடு ஒன்ற வைப்பதில் இசையமைப்பாளர் மைக்கி  க்ளேரி, பார்வையாளர்கள் இணைந்து பயணிக்கச் செய்வதில் தொகுப்பாளர் மோனிஷா பால்தவா ஆகியோர் பங்களிப்பு அருமையான துணையாகியிருக்கின்றன. துணிந்து இப்படத்தில் முதலீடு செய்த விஸ்காம் 18 மோஷன் பிக்சர்ஸ், இஷான் டாக்கீஸ் நிறுவனங்கள் பாராட்டுக்குரியவை. ஒட்டுமொத்த ஒத்துழைப்பில் படத்திற்கும் கோய்ச்லின், மைக்கி க்ளேரி உள்ளிட்ட கலைஞர்களுக்கும் தேசிய திரைப்பட விழா உள்பட  பன்னாட்டு மேடைகளிலும் விருதுகள் வந்து சேர்ந்தன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஃபிரேம்லைன்’ என்ற உலக எல்.ஜி.பி.டி.க்யூ. திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் சிறப்பு விருதை இந்தப் படம் வென்றது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்தபோது, தமிழில் 2019இல்  ராம் இயக்கத்தில், மம்மூட்டி,  சமுத்திரகனி, குழந்தை நட்சத்திரம் சாதனா, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி மீரா ஆகியோர் நடிப்பில் வந்த ‘பேரன்பு’ படம் நினைவுக்கு வந்தது. தாயின் அரவணைப்பை இழந்த பெண் குழந்தையின் பாலியல் தேவையைப் புரிந்துகொண்டு, அதை எப்படி நிறைவேற்றுவது ஒரு தகப்பன் தவிக்கிற கதை அது. “மார்கரிட்டா படத்தைப் பார்த்தபோது இத்தகைய கதைகளை இந்தியச் சமுதாயத்திற்காக உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தேன்,” என்று ராம் கூறியதும் நினைவுக்கு வந்தது.

‘மார்கரிட்டா’ வசதியான நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த லைலாக்களைப் பற்றி யோசிக்க வைத்ததென்றால், ‘பேரன்பு’ வாடகைக் கார் ஓட்டுரான அமுதன் போன்ற எளிய குடும்பங்களைச் சேர்ந்த பாப்பாக்கள் பற்றிச் சிந்திக்க வைத்தது. இரண்டுமே திரையரங்க வெளியீடுகளிலும் வெற்றி பெற்றன. இன்னும் வரட்டும் இத்தகைய படைப்புகள். 

[0]

ஊனமுற்றோர் உரிமைக்குரல்காலாண்டிதழில் (ஏப்ரல், மே, ஜூன் –2026) எனது கட்டுரை