Saturday, 11 April 2026

ஜனநாயகன்: நிழல் சண்டையும் நிஜக் கவலையும்


வெக தலைவர் விஜய் நடித்த கடைசிப் படம் என்ற அறிவிப்பால் மிகுந்த எதிர்பார்பையும், வசூல் பரப்பையும் ஏற்படுத்தியிருப்பது ‘ஜனநாயகன்’. அதற்கு இன்னமும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. விஜய் கட்சியின் தலைவர்கள் அரசியல் காரணத்தைக் கூறுகிறபோது, தமிழ்நாட்டுத் தேர்தல் கள பரப்புரையாக திமுக மீதும் குற்றம் சாட்டுகின்றனர். மற்ற பிரச்சினைகளில் கொள்கை எதிரி எனப்படுவோரை மேம்போக்காகத் தொட்டும் தொடாமலும் கடக்கிறவர்கள், இந்தத் திரைப்பட வியாபார விசயத்தில் மட்டும் பாஜக தலைவர்களையும் குற்றம் சாட்டுகிறார்கள். என்ன கொள்கையோ என்ன எதிரியோ.

இந்நிலையில் அதன் சில காட்சிகள் திருட்டுத்தனமாகக் கசியவிடப்பட்டுள்ளன. அது வணிக ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் செயல் என்ற கண்டனம்  கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ப. ரஞ்சித் உள்ளிட்ட பல கலைஞர்களிடமிருந்தும் இதர ஆளுமைகளிடமிருந்தும் வந்துள்ளது.

அதே வேளையில், கசிந்திருக்கும் அந்தச் சில காட்சிகளில் கூட குறிப்பிட்ட சிறுபான்மை மதம் சார்ந்தவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தச் சித்தரிப்பும் கூட சமூக அறமற்ற செயல் என்ற ஆதங்கம் இயக்குநர் அமீர் உள்ளிட்டோரிடமிருந்து வந்துள்ளது.

கசிவுக் காட்சிகளை நான் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவுமில்லை. ஆனால். அமீர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு நிச்சயமாக இடமிருக்கிறது என்பதைத் திரையுலக வட்டாரத் தகவல்களும் சமூக ஊடகப் பகிர்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. 

இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் மறுதயாரிப்பு என்று கூறப்படுகிறது. தனது கடைசிப் படத்திற்கு ஒரு அசலான ஆக்கத்தை, அருமையான கற்பனைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு படநிறுவன வாசற்படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் தமிழ்க் கதைஞர்களிடமிருந்து பெற விஜய் அக்கறைப்படாதது விசனப்படத் தக்கதுதான்.

“மூலப் படத்தில் வில்லன் கதாபாத்திரமும் அவனோடு தொடர்புடைய சில காட்சிகளும் குறிப்பிட்ட மத அடையாளத்தோடு சித்தரித்திருப்பவார்கள். தமிழில் இயக்குநர் ஹெச். வினோத் சமூகப் பொறுப்புணர்வுடன் வில்லனை மத அடையாளமில்லாமல் பொதுவாகச் சித்தரித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கசிந்த காட்சிகள் அதற்கு மாறாக இருப்பதுதான் அமீர் போன்றவர்களின் அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது,” என்கிறார் திரைச் செய்தியாளரான ஒரு  நண்பர்.

தீவிரவாதம் என்றாலே குறிப்பிட்ட மத அடையாளத்தைத் தூக்கலாகக் காட்டுகிற உத்தியைத் தமிழ் சினிமாவிலும் ஒரு மலிவான ஏற்பாடாக எப்போதோ தொடங்கிவிட்டார்கள். ஆயுதம் ஏந்துகிறவர்களின் தோற்றம், பயன்படுத்தும் குறியீடுகள் எல்லாமாகச் சேர்ந்து, நாயக பிம்பக் கட்டுமானத்துக்காக என, புரிதலும் பொறுப்பும் இல்லாத  பழைய வில்லன் பிம்பக் கட்டுமானம் இன்னமும் தொடர்கிறது. வணிக ரேஸ் மைதானத்தில் வெற்றிக் குதிரை என்று நம்பவைக்கப்பட்டுள்ள இந்தச் சூத்திரத்தைப் புதிய, இளைய இயக்குநர்களும் தொடர்வது ஒரு கலையவலம்தான். அந்த அவலத்தின் அடியில், நல்ல கலையாக்கத் திறனுடன், கற்பனை வளத்துடன், மக்களின் நல்லிணக்க வாழ்வில் நாட்டமும் சமூக மாற்றத்திற்கான பொறுப்ணர்வும் கொண்ட பல படைப்பாளிகள் புதையுண்டு திணறுகிற கொடுமையும் இருக்கிறது.

மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் ஒரு தலைவரின் படத்தில், குறிப்பிட்ட பிரிவினரைத் தாழ்த்திக் காட்டும் காட்சிகள் இடம்பெறுவது முரணாக இருக்கிறது என்பதே விமர்சிப்பவர்களின் வாதம். விஜய் படங்களை விரும்பிப் பார்த்து வந்திருப்பவன், குறைகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டியும் வந்திருப்பவன், ‘மெர்சல்’ படம் விவகாரத்துக்கு உள்ளாக்கப்பட்டபோது தமுஎகச நடத்திய கண்டனக் கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் அவர்களது வாதம் எனக்குச் சங்கடத்தைத் தருகிறது. திரைப்பட ரசனையைத் தாண்டி சமூகத் தாக்கம் பற்றிய கவலை தொற்றிக்கொள்கிறது. என்ன வேலை இது மிஸ்டர் ஜனநாயகன் என்று கேட்க வைக்கிறது.

சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதற்கு, படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய சித்தரிப்புகள் குறித்து தணிக்கைக் குழு விளக்கம் கேட்டிருப்பது ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. அந்த சர்ச்சைகளும் கசிந்தால் தேவலை. பிளவுக் கருத்துகளையும் பகைமைப் பார்வைகளையும் திட்டமிட்டே புகுத்திய சில படங்களுக்குச் சான்றிதழ் வழங்கத் தயங்காத தணிக்கைக் குழு இந்தப் படத்தில் இவ்வளவு கறார் காட்டுவது ஏன் என்ற கேள்வி பின்தொடர்கிறது.

இந்த முரண்களோடு இன்னொன்றையும் கவனிக்கிறேன். உள்ளடக்கம் சார்ந்து சமூக அக்கறையோடு விமர்சிக்கிறவர்கள் காட்சிகள் கசியவிடப்பட்ட அநீதியையும் கண்டிக்கிறார்கள். கசியவிடப்பட்டதைக் கண்டிக்கிற யாரும் அந்த உள்ளடக்க அநீதிக்குள் போகவில்லை.

தொழில்நெறி என்ற முறையில்  சொல்வதானால் – படக்காட்சிகள் கசியவிடப்பட்டது வன்மையான கண்டனத்திற்கு உரியது. கலைநெறி என்ற முறையில் சொல்வதானால் – பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் பற்றிய எதிர்மறை பிம்பத்தை வலுப்படுத்தும் மலிவான வணிக உத்தி இந்தப் படத்திலும் இருக்கிறதென்றால் அது எதிர்க்கப்பட வேண்டியது.

[இன்றைய காலை நடை நேர நிறைவுக் கட்டத்தில் பூங்கா மர நிழல் இருக்கையில் நீண்ட நேரம் அமரவைத்துவிட்ட உரையாடலில் நான் சொன்னவற்றின் பிழிவு]

[0]

முகநூல் பதிவு (ஏப்ரல் 11, 2026)