அதுவும் இதுவும் இரண்டுமே
விளைவதும் வருவதும்
தோட்டங்களில் இருந்துதான். ,
ஒன்று விதைகளாய்
இன்னொன்று இலைகளாய்.
எங்கே எப்போது
எப்படி கண்டறியப்பட்டன?
உலாவும் கதைகள் விதவிதமாய்
இரண்டையும் விட சுவைசுவையாய்!
சென்ற இடமெல்லாம்
கருஞ்சிவப்பிலும் கடுங்கசப்பிலுமே
நாவோடு உறவாடுகின்றன.
இங்கே மட்டும்
கள்ளிச்சொட்டுப் பாலும்
கருப்பட்டியோ கரும்புச் சர்க்கரையோ
கலந்துவிட்டதைப் பேசுவதே கூட
தனிக்கதைதான் தனிச்சுவைதான்.
அளவான தூளில்
கச்சிதமான கலவையில்
சரியான சூட்டிலா இருக்கிறது
பானங்களின் சுவை?
நட்டநடுச் சாலையில்
சந்திக்க நேர்ந்தாலும்
“வாங்க டீ, காஃபி
சாப்பிட்டுப் போவோம்”
அன்பும் கலந்த அந்தப்
பகிர்வில் அல்லவா!
இங்கே கூடுதலாய்
எளியோர் தோழமையென
டீ கிளாஸ்
மேட்டினர் சகவாசமென
காஃபி கப்
அடையாளமானதைப் பேசினால்
கிடைக்குமொரு பண்பாட்டு வரலாறு.
கலப்பே இல்லாத உயர்தர காஃபி
கணக்கான சதவீத சிக்கரி காஃபி
கனமிகு மணத்தோடு அடர்ந்த டீ
கணப்பொழுது விழிப்புக்கு சாதா டீ
தொலைக்காட்சி நிகழ்ச்சி
எதற்காகவோ அதற்காகவும்
கொஞ்சம் விடப்படும் இடைவெளிகளில்
செய்திகளுக்காகப் புரட்ட வைக்கும்
நாளேடுகளின் முதல் பக்கங்களில்
நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்
பசுமை போர்த்திய செடிகளை
கைபடாத நவீன எந்திரங்களை
தயாரிப்பின் உலகத் தரங்களை
விரிவாய்க் காட்டிச் சொல்கின்றன
அவைகள் அல்லது அவர்கள்
சுருக்கியும் சொல்ல மறந்தது
இலைகளையும் விதைகளையும்
பார்த்துப் பார்த்து
பறித்துப் பறித்து
கொண்டுவந்து சேர்த்திடும்
உழைப்பாளிகளின் கைகளை.
[0][0][0]
அரசியல்கள அதிர்வுகளுக்கிடையே கூடிய ஓர் இணையத்தள (சிங்காரவேலர்-ஜீவா-நாவா முப்பெரும் பள்ளிகள்) கருத்தரங்கம்-கலந்துரையாடல் தொடக்கத்தில் அன்பரொருவர், “என்ன டீ, காஃபி எதுவும் கிடையாதா” என்று விளையாட்டாய்க் கேட்க, பேச்சுகளுக்கு நடுவே அங்கேயே நான் தயாரித்து நிகழ்ச்சியின் நிறைவில் பரிமாறிய கவிதை.
