இயற்கையும் அறிவியலும் ஒன்றோடொன்று இணைந்ததே. இயற்கையைப் புரிவது அறிவியல். அறிவியலைக் கையாள்வது இயற்கை. இரண்டும் வேறு வேறு அல்ல, ஒன்றுக்கொன்று பகையுமல்ல.
செயற்கையான அறிவியலைக் கைவிட்டு இயற்கையைத் தழுவி வாழ்வதே நலம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அறிவியல் பார்வையோடு வாழ்வதென்பதே இயற்கையாய் வாழ்வதுதான்.
அப்படியானால் அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகள் இயற்கையை அழிப்பதாக வருகின்றனவே என்று கேட்கலாம். இயற்கையை அழிக்கிற ஆராய்சிகள் அறிவியலே இல்லை; தெரிந்தே அந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறவர்கள் பொறுப்புள்ள அறிவியலாளர்களே இல்லை என்றுதான் பொருள். உண்மையான அறிவியல் ஒருபோதும் தீங்கான அழிவியல் ஆகாது.
இயற்கை வேளாண்மை பற்றி இப்போது பேசத் தொடங்கியிருக்கிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்வென்பது வேளாண்மையோடு தொடர்புடையது மட்டுமல்ல. இயற்கை விவசாயம் எனப்படுவது மட்டுமே இயற்கை சார்ந்த அறிவியல் அல்ல.
பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கை சார்ந்த அறிவியல்தான். அதன் முதல் படியில் குடும்பமாக வாழ்வது இயற்கை, அதில் குடும்ப ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பது அறிவியல்.
சமூகத்தோடு கலந்து, சமூகத்திற்காக வாழ்வது இயற்கை. அப்படி வாழத் தொடங்கியதால்தான், அறிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியதால்தான் இத்தனை லட்சம் ஆண்டுகளில், எத்தனையோ பேரிடர்களைக் கடந்து மனிதப் பரிணாமம் தாக்குப் பிடித்துத் தொடர்கிறது. சமூகத்தோடு வாழ்வது சமத்துவ மாற்றங்களுக்காக வாழ்பதாகப் பரிணமிப்பது இயற்கை அறிவியல்.
“உனக்கெதற்கு அரசியல்? உனக்கெதற்குப் பொது வாழ்க்கை? நீ உண்டு, உன் குடும்பம் உண்டு என்று நிம்மதியாக வாழ்ந்திரு” என்று தனிமைப்பட்டு வாழ் அறிவுறுத்த நான்கு பேர் இந்த நவீன தலைமுறைக் காலத்திலும் வலம் வருகிறார்கள். மரம் சருகுகளை உதிர்ப்பது போல இவர்களின் போதனைகளைப் புறந்தள்ளுவதும் இயற்கை அறிவியல்தான்.
விவசாயிகள் தலைமுறை தலைமுறையாச் சேகரித்துச் சேமித்த அறிவுச் செல்வத்தைப் பதுக்கிவிட்டு, உலகச் சந்தைத் தேவைகளுக்காக விதைப்பையும் உழைப்பையும் மாற்றுகிற கார்ப்பரேட் கட்டாயங்களை முறியடிப்பது ஒரு தலையாய இயற்கை அறிவியல்.
சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்து, படிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சாதி சமய வேலிகளை அறுத்து, மருத்துவர், பொறியியலாளர், வழிகாட்டும் தலைவர் என்றெல்லாம் உயர்நிலைகளுக்கு வந்தவர்கள் பற்றிப் படிக்கிறோம், பாராட்டுகிறோம். இனி அப்படியொருவர் வந்துவிட முடியுமா என்ற விசனத்தை ஏற்படுத்துகின்றன, அனைவருக்குமான நுழைவாயிலை அடைக்கும் நுழைவுத்தேர்வுச் சூக்குமங்கள். அதை எதிர்த்துப் போராட்டக் களம் காண்பதும் இயற்கை அறிவியலே.
எவருக்கும் எந்தக் கடவுளையும் நம்புவதற்கு, வணங்குவதற்கு, கடவுளை மறுப்பதற்கு, நம்பாமல் இருப்பதற்கு உள்ள உரிமை இயற்கையானது. அதை மதிப்பது அறிவியலானது. மாற்றங்களும் ஏற்றங்களும் வழிபாடுகளால் வராது, சரியான மாற்று வழிப் பயணங்களால் நிச்சயமாக வரும் என்ற தெளிவு இயற்கையானது, அறிவியலானது.
[0]
–‘தமிழ்த்தேசம்’ கிளப்ஹௌஸ் குழு கூடுகையில் (ஆக.1) தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளரும் இயற்கை வேளாண்மை முன்னணிச் சாதனையாளருமான கு. செந்தமிழ்ச்செல்வன் “அறிவியல் சார்ந்த இயற்கை வாழ்வியல்” என்ற தலைப்பில் உரை வழங்கினார். தொடர்ந்த கலந்துரையாடலின்போது நான் பகிர்ந்த கருத்துகளும், அங்கே விடுபட்ட கூடுதல் சிந்தனைகளும் இவை.
