Friday, 10 July 2026

மர்மத்தைக் கண்டுபிடிக்க ஓர் ஓட்டம்! - ‘ரன்’


னக்கு ஏற்படுத்தப்பட்ட பயங்கரமான நிலைமைகளிலிருந்து சக்கர நாற்காலிச் சிறுமி ஒருத்தி வெற்றிகரமாகத் தப்பித்து ஓடும் கதைதான் “ஓடு” (ரன்). நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிற இந்த 2020ஆம் ஆண்டுத்  திரைப்படம் பற்றிய தகவலில் “ஹாரர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆவி, பேய், காட்டேரி சங்கதிகளோ, நடுங்க வைக்கும் அதிரடிக் காட்சிகளோ கிடையாது. ஆயினும் இறுதி வரையில் நாம் என்ன நடந்தது, நடப்பது என்ன என்ற ஒரு பதைப்போடு அமர்ந்திருக்கிறோம். ஹாரர் படம் என்பதற்கான ஒரு மாறுபட்ட அனுபவத்தைப் பெறுகிறோம். 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாவட்டத்தில் பாஸ்கோ நகரத்தில் ஒரு மருத்துவமனை. கவலைக்குரிய அளவுக்குக் குறைந்த எடையோடும், பல்வேறு உடல் குறைபாடுகளோடும் பிறந்த தன் குழந்தையை உயிர்வளிப் பெட்டிக்குள் காணும் டயான், “இவள் உயிர் வாழ்வாளா” என்று மருத்துவர்களிடம் கண்ணீர் மல்கக் கேட்பதிலிருந்து கதை தன் ஓட்டத்தைத் தொடங்குகிறது. 

17 ஆண்டுகள் ஓடிய பிறகு, தனது உடலின் ஓர் அங்கமாகவே சக்கர நாற்காலி மாறிவிட்ட நிலையில் வளைய வருகிறாள். வாஷிங்டன் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுதிவிட்டு, சேர்க்கைக் கடிதத்துக்காகக் காத்திருக்கிறாள். கடிதம் வருகிறது – அவளுடைய விண்ணப்பம் மறுக்கப்படுகிறது என்ற தகவலோடு. அவள் மனம் நொந்துவிடாமல் ஆறுதலாக அரவணைத்துக்கொள்கிறாள் தாய் டயான். 

சமூக மதிப்பு 

கால்கள் முடங்கியதோடு வேறு பல சிக்கல்களுடனும் இருக்கும் க்ளோ மீது டயான் பொழியும் அன்பும், அக்கறை மிகுந்த பராமரிப்பும் சமூகத்தில் அவளுக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமையாகிவிட்ட பெண்ணை வளர்க்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் கம்பீரமாக நடமாடுகிறாள், திரையரங்கம் உள்பட எல்லா இடங்களுக்கும் மகளை அழைத்துச் செல்கிறாள். 


நாட்கள் இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடைக்குச் சென்று வரும் டயான் மேசையில் வைக்கும் மளிகைகள் பையில், தனக்கான குமிழி மாத்திரை பாட்டிலும் இருப்பதைக் கவனித்து அதை வெளியே எடுத்துப் பார்க்கிறாள் க்ளோ. அதில் தன்னுடைய பெயர் இல்லாமல் அம்மாவின் பெயர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். மருந்துக் கடையில் ரசீது போடுவதற்காகத் தனது பெயரை எழுதிவிட்டார்கள் என்று டயான் சமாளிக்கிறாள். க்ளோ சந்தேகத்துடனும் துறுதுறுப்போடும் சொந்தப் புலனாய்வைத் தொடரும்போது, தன் பெயரிலேயே வந்த பாட்டிலின் சீட்டைக் கிழித்துப் பார்த்தால் உள்ளே டயானின் பெயர் உள்ள சீட்டு ஒட்டப்பட்டிருக்கிறது. 

கணினியில் கூகுள் மூலம் அந்த மருந்து எதற்காக என்று அறிய முயல்கிறாள் – ஆனால் வீட்டில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்திற்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்கிறாள். அரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது “டாய்லட் போய்வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வரும் க்ளோ, சாலையின் எதிர்ப்புறம் இருக்கும் மருந்துக் கடைக்குச் சக்கர நாற்காலியிலேயே செல்கிறாள். கடைக்காரரிடம் விசாரிக்கிறபோது குறிப்பிட்ட அந்த மருந்து, நாய்களுக்குக் காலில் அடிபடும்போது செலுத்தப்படுவதற்கானது என்றும், மனிதர்களுக்குச் செலுத்தினால் கால்கள் செயலிழக்கும் என்றும் தெரிந்துகொள்கிறாள். மகளைத் தேடி அங்கே வந்துவிடும் டயான், ஏதோ சொல்லிச் சமாளித்து அழைத்துப் போகிறாள். 

அவிழும் மர்மம் 

அடுத்த நாள், டயானின் அலமாரி இழுவறைக்குள் தேடும் க்ளோ, பல நாட்களுக்கு முன்பே பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த சேர்க்கை அனுமதிக் கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அத்துடன் 17 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கோ மருத்துவமனையில் சிசுக்கள் மாற்றப்பட்டது பற்றிய செய்தி வந்திருந்த பத்திரிகைக் காகிதம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறாள். தான்  டயானின் மகளல்ல, மருத்துவனையிலிருந்து கடத்தி வந்து வளர்க்கப்படுகிறவள் என்ற பயங்கரமான உண்மையையும் கண்டுபிடிக்கிறாள். 

மறுநாள், தனது மாடி அறையின் கதவைத் திறக்க முடியாதபடி அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறாள். அசைக்க முடியாத கால்களோடு உடலால் நகர்ந்து நகர்ந்து சன்னல் வழியாக வெளியே கூரை ஓட்டில் விழுகிறாள். கொஞ்சம் பிசகினாலும் தரையில் விழுந்து அடிபடக்கூடும் என்ற அபாயநிலையிலும், கூரை மீது உடலால் நகர்ந்து நகர்ந்து அடுத்த அறை வழியாக முன்னேறி, தனது அறைக் கதவைத் திறக்கிறாள். 

வீட்டிலிருந்து தப்பித்துச் செல்லும் க்ளோவுக்கு உதவும் அஞ்சல்துறை ஊழியரின் கழுத்தில் டயான் நச்சு மருந்து ஊசியைச் செலுத்திக் கொல்கிறாள். காயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கும் க்ளோவை, அரை மயக்க நிலையிலேயே சக்கர நாற்காலியில் வைத்துக் கையில் துப்பாக்கியோடு கடத்துகிறாள்.  அங்கே நடக்கிற அடுத்தடுத்த பரபரப்புகளின் உச்சத்தில், காவலர்களால் சுடப்படுகிறாள். ஐந்து ஆண்டுகள் கடக்கின்றன. மாற்று மருந்துகள், பயிற்சிகள் உதவியோடு மெல்ல மெல்ல தானே எழுந்து நடக்கப் பழகுகிறாள் க்ளோ.  அதே மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் டயானைச் சந்திக்கும் க்ளோ, முன்பு அவள் தனக்கு என்ன செய்தாளோ அதையே அவளுக்குத் திருப்பிச் செய்கிறாள். 

டயான் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொண்டாள்? தனக்குப் பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட கதியால் உடைந்து போனவள், 'முன்சாசன் சிண்ட்ரோம் பை பிராக்சி' எனப்படும் மனநோய்க்கு உள்ளாகிறாள். இந்நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் (பெரும்பாலும் தாய்மார்கள்), தங்களின் குழந்தைகளோ, குடும்பத்து முதியவர்களோ தங்களையே சார்ந்திருக்கிற நோயாளிகளாகத்தான் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்காகக் குழந்தைகளின் உடல் நலத்தைத் திட்டமிட்டே  சீர்குலைப்பார்கள்.  அல்லது அவர்களுக்குப் பரிதாபத்துக்குரிய நோய் இருப்பதாகப் பிம்பத்தை உருவாக்குவார்கள். 

இப்படியொரு போதை

 “அடடா, இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிக் குழந்தையை இந்தத் தாய் எவ்வளவு அர்ப்பணிப்போடு வளர்க்கிறார்," என்று சமூகத்திடமிருந்து கிடைக்கும் பாராட்டையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிற ஒரு போதைக்கு அவர்கள் ஆட்படுகிறார்கள். 

ஓர் உடலியல் மாற்றுத் திறனாளியின் சாகசமாக ஓடத் தொடங்கி, இன்னோர் உளவியல் மாற்றுத் திறனாளியின் சதியைப் பற்றிய கதையாக முடிகிறது படம். பல்வேறு நாடுகளிலும் திரைப்படத் திறனாய்வாளர்களின் பாராட்டையும், திரையரங்குகளில் வணிக வெற்றியையும் பெற்ற இந்தப் படம் ஒரு விமர்சனத்துக்கும் உரியதுதான். மாற்றுத் திறனாளியாக இருந்து மீள்கிற ஒருவரது மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு மாறாக, பழி உணர்வை முன்வைத்துவிட்டார்கள். க்ளோ எடுக்கிற முடிவுக்கான வாத நியாயங்கள் இருக்கின்றன என்பதும் உண்மையே. 

க்ளோவாக நடித்த கீரா ஆலன் உண்மையாகவே கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிதான். அவரது நடிப்புத் திறன் சிறப்பாக வெளிப்படுகிறது. டயானாக வரும் சாரா பால்சன் நடிப்பில், மகள் தன்னிடமிருந்து விலகிவிடக்கூடாது என்ற துடிப்பும், அதற்காக சூழ்ச்சிகளுக்குத் தயங்காத முனைப்பும் நுட்பமாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் ஹில்லாரி ஸ்பேரா, இசையமைப்பாளர் டோரின் போரோடேல், தொகுப்பாளர்கள் நிக் ஜான்சன், வில் மெரிக் உள்ளிட்ட சக கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்கு நிறைவைச்  சேர்த்திருக்கின்றன. 


இயக்குநர் அனீஷ் சாகந்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முதல் படமான “செர்ச்சிங்” (தேடல்), கடத்தப்பட்ட தன் மகளை ஒரு தந்தை கணினியையும் கைப்பேசியையும் வைத்தே கண்டுபிடித்து மீட்கிற விறுவிறுப்பு நிறைந்த கதையைக் கொண்டிருந்தது. 

மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்ப்பது அளவில்லாத பரிவை அல்ல, சக மனிதராக சம மரியாதையோடு நடத்தப்படுவதைத்தான் என்ற உண்மையை இந்தப் படம் மாறுபட்ட கோணத்தில் சொல்கிறது. மிகையான பாசம் உடைக்கப்பட வேண்டிய ஒரு வகை அடிமைக் கூண்டுதான் என்றும் எடுத்துக்காட்டுகிறது.

[0]

மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நடத்திடும் ‘உரிமைக்குரல்’ காலாண்டிதழில் எனது கட்டுரை