இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது கொள்கை உடன்பாட்டுக் கூட்டின் அடிப்படையில் அல்ல. அன்றைய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு ஆளுநர் ஆட்சியின் பெயரால் குடியரசுத் தலைவர் ஆட்சியின் வழியாக ஒன்றிய ஆளுங்கட்சியின் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் அந்த ஆதரவு அளிக்கப்பட்டது.
இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆகவேதான் ஆட்சியிலும் பங்கேற்கவில்லை, தவெக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியிலும் கம்யூனிஸ்ட்டுகள் இணையவில்லை.
மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி என்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் நிலைப்பாடுகளுக்கு மாறான சில கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தவெக அரசு எடுத்திருக்கிறது – அது வரவேற்கத்தக்கதே. ஆனால், மதவாத அரசியலுக்கு எதிராக வலுவான குரல் தவெக தலைவரான முதலமைச்சரிடமிருந்து ஒலிக்கவில்லை, அடுத்த மட்டத் தலைவர்களிடமிருந்தும் ஒலிக்கவில்லையே?
சமூகநீதி நல்ல லட்சியம்தான் – ஆனால் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் தேவையென்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கோரி வந்திருக்கின்றன. முந்தைய ஆட்சிகளும் அதை ஏற்கவில்லை, இந்த அரசும் அதை ஏற்பதாக அறிவிக்கவில்லையே? சமூகநீதியை நோக்கிய ஒரு வழியாகிய இடஒதுக்கீடு கொள்கை பற்றிய ஆவணத்தில் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் விடுபட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்தபிறகு, தார்மீகப் பொறுப்பேற்பதாக அமைச்சர் சொன்னதோடு விட்டுவிட்டார்களே? இந்தக் கூட்டணியில் இணைவதற்கான வலுவான தளம் அமையவில்லை.
ஒன்றிய அரசு திணித்திருக்கிற நீட் தேர்வு வேண்டாம் என்பதே தனது நிலைப்பாடு என்று தவெக கூறுகிறது. அந்த நீட் தேர்வை எதிர்த்து நடந்த போராட்டங்களைக் காவல்துறை மூலம் ஒடுக்க முயன்றதைப் பார்த்தோம். நேற்று கூட, விவசாயிகள் போராட்டத்தின்போது, வெயிலுக்காகப் பந்தல் போட முயன்றதைக் காவல்துறையினர் தடுத்துவிட்டார்கள், விவசாயிகள் கீற்றுகளைத் தலைக்கு மேல் பிடித்தபடி போராட்டம் நடத்தியதை ‘புதிய தலைமுறை’ செய்தியில் காட்டினீர்கள். எந்த நம்பிக்கையில் கூட்டணியில் இணைவது?
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்கள் இயல்பாக வந்ததல்ல. எப்படிப்பட்ட நிலைமைகளில் இடைத்தேர்தல் வரும் என்று நமக்குத் தெரியும். செயற்கையாக அந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சில நாட்களிலேயே பதவி விலகி தவெகவில் சேர்ந்ததால்தான் இந்த இடைத்தேர்தல். அவர்களையே மறுபடி வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பதில் என்ன அரசியல் அறம் இருக்கிறது?
ஒருவேளை அவர்கள் வெற்றிபெற்றால், அடுத்தடுத்த இடைத்தேர்களிலும் கட்சி மாறி வந்தவர்களை நிறுத்தி அவர்களும் வெற்றிபெற்றால், பெரும்பான்மை பலத்திற்கு இடதுசாரிகள் உள்பட மற்ற கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று கூட தவெக தலைமை நினைக்கலாம்.
இடைத் தேர்தலில் போட்டி என்பதே இந்த அரசின் மீதான ஒரு விமர்சனம்தான். இந்த முடிவு யாருக்குச் சாதகம் என்ற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. சட்டமன்றத்தில் ஏற்கெனவே நான்கு கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் – அவர்கள் என்ன பேசுகிறார்கள், யாருக்காகப் பேசுகிறார்கள் என்று மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் லாவணியும் பாட்டுப்போட்டியும் நடத்திக்கொண்டிருப்பதை மக்கள் கவனிக்கிறார்கள். ஆகவே இடதுசாரிகளின் இந்த முடிவு மக்களுக்குத்தான் சாதகம்.
சட்டமன்றத்தில் இடதுசாரிகள் குரல் மேலும் வலுவாக ஒலிப்பது இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே நன்மையளிக்கும். மக்களின், உழைப்பாளிகளின், தலித்துகளின், பெண்களின், நலிவுற்றோரின் குரலாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒலிப்பார்கள்.
அந்த நோக்கத்துடன்தான் இடைத்தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த வாய்ப்பை தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தவெக ஆட்சியமைத்தபோது இருந்த “ஃபிரெஷ்” நிலைமை இப்போது இல்லை. ஆண்டுக்கணக்கில் அல்ல, நாட்கணக்கில்தான் ஆகியிருக்கிறது என்றாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை.
எடுத்துக்காட்டாக மின்வெட்டு – தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக அப்படிச் சொல்கின்றன என்கிறார் ஒரு அமைச்சர். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனே, அதிகாரிகள் சரியான தகவல்களை அமைச்சர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதிகாரிகளை அரசு ஆள்கிறதா அல்லது அரசை அதிகாரிகள் ஆள்கிறார்களா என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழல்களில்தான் இடதுசாரிக் கட்சிகள், முதலில் சொன்ன காரணத்திற்காக இந்த ஆட்சியை ஆதரித்துக்கொண்டே இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட நிலைப்பாடு இது – இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது?
ஆட்சி தொடர வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்கிற தேர்தல் அல்ல இது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களுடைய கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
தொகுதி நிலவரங்களின் சதவீதக் கணக்குகளைத் தாண்டி இரண்டு கருத்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது வரையில் தமிழகத்திலும் நாடுதழுவிய அளவிலும் நிலவிய அரசியல், சமூகச் சூழல்களைப் பொறுத்து கூட்டணிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. அந்த அரசியல், சமூகத் தேவைகள் நிறைவேறின என்றாலும், கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கான போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்திவந்தார்கள் என்ற போதிலும், கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவம் பின்தங்கிவிட்டது என்ற தோற்றமும் ஏற்பட்டது. இப்போது அந்தத் தோற்றத்தை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல்.
அடுத்து – முன்னெப்போதையும் விட இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது மக்களின் பார்வை அதிகரித்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறைகளையும் செயல்பாடுகளையும் மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். இதனை இடதுசாரிக் கட்சிகள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அரசியல், சமூகக் கண்ணோட்டங்களைக் கொண்டுசெல்வார்கள்.
–‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘நேர்படப்பேசு’ (செப்டம்பர் 15) விவாதத்தில் நான் கூறியவை.