Sunday 9 December 2007

விவாதம்

கால்மேல் கால் போட்டால்
கடவுளுக்கு அவமதிப்பா?

லத்தையே காப்பாற்றும் கடவுளுக்கு இப்போதெல்லாம் ரொம்பவும்தான் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. ஆளுக்காள் கடவுளைக் காப்பாற்ற அவதாரம் எடுப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. பாவம் கடவுள், அவர் படைத்த அற்ப மானிடர்களின் தயவால்தான் அவரே மண்ணில் இடர் நீங்கி நிம்மதி பெற வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்காமல் விட மாட்டேன் என்று சிலர் கிளம்புவதைப் பார்க்கும் போது, தாங்கள் கடவுளை விட சக்தி வாய்ந்தவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. தப்பித் தவறி கடவுள் என்றொரு சக்தி எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாக இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அந்தக் கடவுளின் கவுரவத்தைக் காப்பாற்றுவதாய் மனிதப் பதர்கள் தொடை தட்டுவது, அந்தக் கடவுளின் சுயமரியாதைக்கு எவ்வளவு பெரிய அவமானம்!

ஆனால், திரைப்பட நடிகை குஷ்பு கடவுளை அவமதித்துவிட்டாராம். எப்படி அவமதித்தாராம்? அலங்கரிக்கப்பட்ட ஒரு அம்மன் சிலை. அதன் முன்பாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் குஷ்பு. செய்யலாமோ? அதுவும் எப்படி? அம்மனுக்கு முதுகு காட்டிக் கொண்டு! அதுவும் எப்படி? கால் மேல் கால் போட்டுக் கொண்டு! அதுவும் எப்படி? செருப்புக்காலோடு! - இப்படியொரு புகைப்படம் பத்திரிகைகளில் வந்தது. அவ்வளவுதான் வந்தது ஆவேசம் ஆன்மீகக் காவலர்களுக்கு.

அய்யய்யோ கடவுளுக்கு அவமதிப்பு என்று கூச்சலிட்டார்கள். குஷ்பு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அறிக்கைகள் விடுத்தார்கள். அவரை அலைக்கழிக்கும் நோக்கத்தோடு ஆங்காங்கே நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு கள் தாக்கல் செய் திருக் கிறார்கள். கரு ணையே வடி வானவர் கடவுள் என்று என்றும் இவர் கள் தான் கதாகாலட்சேபங்களில் உபந் நியாசம் செய் கிறார்கள்!

இத்தனைக்கும் அது “நிஜமான” கடவுள் சிலை அல்ல. அது, கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும், தினமும் பூசைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சாமி அல்ல. ஏதோ ஒரு திரைப்படத்தில் இடம் பெறுகிற தற்காலிக சிலை அது. அதன் முன்னால் குஷ்பு உட்கார்ந்து பேசுவது அந்தப் படத்தில் இடம் பெறுகிற காட்சி.

ஆக, சினிமாவில் தோன்ற சான்ஸ் கிடைத்த சாமிக்கு முன் நடிகை இப்படி செருப்போடு கால் மேல் கால் போட்டுப் பேசியதால், கடவுள் பாதுகாப்புப் படையினர் இப்படி வெறுப்போடு வழக்கு மேல் வழக்குப் போடுகிறார்கள். அந்தப் படத்தை வெளியிட்ட பத்திரிகை மீதும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். முன்பு கற்புக் காவலர்கள் வழக்குகளால் குஷ்புவை அலைக்கழிக்க முயன்றார்கள். இப்போது கடவுட் காவலர்கள். இவர்களைப் பொறுத்த வரையில், சிலையின் முன் செருப்புக் காலோடு உட்கார்ந்தவர் குஷ்பு என்பதைத்தான் முக்கிய விவகாரம். ஒரு இஸ்லாமியப் பெண் இப்படி இந்துச் சாமியை அவமதிப்பதாவது...

யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்ற மன உளைச்சலுக்கு ஆளாகிற பேர்வழிகள், யாராவது பிரபல புள்ளி மீது வழக்குத் தொடுத்து விளம்பரம் தேடுவது அடிக்கடி நடப்பதுதான். தமிழ்நாட்டில் ராமன் பெயரைச் சொல்லியும் போணியாகாத மதவெறிக் கலாச்சாரத்தை, இந்த விளம்பரத்தின் மூலமாகவாவது மக்கள் தலையில் கட்ட முடியுமா என்று முயன்று பார்க்கிறார்கள்.

கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்பது உடல் சார்ந்த வசதி சம்பந்தப்பட்ட பழக்கம். அவ்வாறு உட்கார்வது அதிகாரத்தின் வெளிப்பாடாக, அந்த°தின் அடையாளமாகச் சித்தரிப்பது பண்பாட்டு அபத்தம். பெரியவர்கள் முன் சிறியவர்களும் ஆண்களின் முன் பெண்களும் கால் மேல் கால் போட்டு உட்கார்வதை ஆணவச் செயலாகக் கூறுவது ஒரு பண்பாட்டு அடக்குமுறை. உடலின் இயல்பான தேவையைப் பண்பாட்டின் பெயரால் சிறுமைப்படுத்துவது அநாகரிகம்.

செருப்புக் காலோடு அமர்வது என்பதும் அந்தந்த இடம் சார்ந்த தேவையைப் பொறுத்தது. கோயில் வாசலில் செருப்பைக் கழற்றிவைத்து உள்ளே சென்று, பூசையின் போது கடவுளை நினைக்க மாட்டாமல் செருப்புக்கு என்ன ஆனதோ என்று கவலைப்படுகிறவர்கள் உண்டு. இவர்களது மற்ற கோரிக்கைகளோடு அந்தச் செருப்பைப் பாதுகாக்கிற வேலையும் கடவுளுக்கு வந்து சேர்கிறது பாருங்கள். உடல் நலம் கருதி வீட்டுக்கு உள்ளேயே செருப்புப் போட்டுக் கொண்டு நடமாட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்தக் காலத்தில் போய் திரைப்படக் காட்சிக்காக ஒரு கலைஞர் இப்படி உட்கார்ந்ததைப் பிரச்சனையாக்குகிறவர்களின் மன நலம் விசாரணைக்கு உரியது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக வகையறாக்கள் நடத்துகிற கூட்டங்களின் மேடைகளின் பின்னணியில் கடவுள் உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதையும், தலைவர்கள் அந்தக் கடவுள்களுக்கு முதுகு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்தத் தலைவர்களில் வசதியாகக் கால் மேல் கால் போட்டுத்தான் உட்கார்கிறார்கள், அந்தக் கால்களில் செருப்பு அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், கோயில் வாசலை விட, கூட்ட மேடை அருகில் செருப்பைக் கழற்றிப் போடுவது கொஞ்சமும் பாதுகாப்பில்லை (செருப்புக்கு) என்பது. அவர்களெல்லாம் கடவுளை அவமதிப்பவர்கள்தானா?

கோட்பாட்டுப்படி பார்த்தால் கடவுள் எங்கேயும் நீக்கமற நிறைந்திருப்பவராயிற்றே... அப்படியானால் எங்கேயுமே செருப்புப் போட்டு நடமாடக் கூடாதே! இதோ இந்தக் கட்டுரைக்கும் இதைப் படிக்கிற உங்கள் கண்களுக்கும் நடுவே கூட கடவுள் இருக்கிறார். எதற்கும், காலில் செருப்பு அணிந்திருந்தால் கழற்றி வைத்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்.

செருப்பு அணிந்தவர்கள், கழற்றி வைத்தவர்கள், நடைபாதைக் கடையில் கூட செருப்பு வாங்க இயலாதவர்கள், வார் அறுந்ததால் கைவிடப்பட்ட (கால்விடப்பட்ட?) ரப்பர் செருப்பை எடுத்து ஊக்கு குத்தி இணைத்துப் பயன்படுத்துகிறவர்கள் எல்லோரையும் தாங்குவது நம் பூமி. நம்பிக்கையாளர்கள் பூமியை பூமாதேவி என்றே வணங்குகிறார்கள். இனி இந்த பூமியின் மேல், அந்த ஊக்குப் போட்ட செருப்பைக் கூட அணிந்து நடக்கக் கூடாது என்பார்களா?

இவர்களுக்கு உண்மையாகவே கடவுளின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை இருக்கிறதா? அப்படியானால், கடவுளை அரசியலுக்கு இழுத்து தேர்தல் பிரச்சார வஸ்துவாகப் பயன்படுத்துவோர் மீதல்லவா கோபம் வரவேண்டும்? அவர்கள் பல மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடரலாம்.

பல தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் சாமிப் படங்களைப் பயன்படுத்துகின்றன. லட்சுமியைச் சிதறடிக்கிற லட்சுமி வெடி சிவகாசி பட்டாசுத் தயாரிப்பில் முக்கிய இடம் பெறுவது. அதெல்லாம் கூடாது என்று சொல்வார்களா?

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அண்மையில், மலம் அள்ளுவது போன்ற இழிவான தொழில்களில் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தள்ளிவிடப்படுவது பற்றிக் குறிப்பிடும்போது, அது ஒரு புனிதமான செயல் என்றாராம். அவர் மீதல்லவா வழக்குப் போட்டிருக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் சரியாகத்தான் கேட்டிருக்கிறார். அது ஒரு புனிதமான செயல் என்பதால்தான் வாழை இலையைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தச் சொல்வதாக லோக குருக்கள் சொல்லக்கூடும். மோடி இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லட்டும், அந்தப் புனிதமான செயலைச் செய்ய நான் நீ என்று சங் பரிவார தலைவர்கள் முன் வருகிறார்களா என்று பார்ப்போம்.

கண்முன் வாழ்கிற மனிதர்கள் அவமதிக்கப்படுவதை விட, கற்பனைக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதைத்தான் மதவாதிகள் பெரிய பிரச்சனையாக்குகிறார்கள். தமிழக முதலமைச்சர் கடவுள் நம்பிக்கை தொடர்பான தமது சிந்தனையை வெளிப்படுத்தினால் அதற்காக தலையும் நாக்கும் பலி கேட்கிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வழக்குப் பதிவு செய்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்தைத் திரிசூலத்தால் குத்திக் குதறிப்போட முயல்கிறார்கள். ஓவியரை நாட்டை விட்டே விரட்டுகிறார்கள். எழுத்தாளர் பேசும் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். இதில் மத வேறுபாடே கிடையாது.

உண்மையில், செருப்போடு கால் மேல் போட்டு உட்கார்வது கடவுளுக்கு அவமதிப்பு அல்ல. இருபத்தோராம் நூற்றாண்டு நவீன காலத்தில் இதையெல்லாம் கூட விவகாரமாக்குவது, பன்முகப் பண்பாட்டின் விளை நிலமாகப் புகழப்படும் இந்த நாட்டிற்குத்தான் பெரும் அவமானம்.

No comments: