Sunday 23 December 2007







கலைகளோடு கேள்விகளும் சங்கமம்






ந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்த ‘சென்னை சங்கமம்’ பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் உண்டு என்ற போதிலும் அது எதிர்பார்க்கப் படுகிற ஒரு வருடாந்திர கலை விழாவாகியிருக்கிறது என்பதை மறுப் பதற்கில்லை. அந்த நிகழ்வு பற்றிய பல விமர்சனங்கள், அது முழுமை யாகத் தமிழ் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவித்து வளர்ப்பதாக அமைய வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே வந்தன. சிலர், அவர்களைத் தவிர வேறு யார் எதைச் செய்தாலும் அதெல்லாம் போலியானது என்று முகம் திருப்பிக் கொண்டேதான் இருப்பார்கள். சென்னை சங்கமத்தைப் பொறுத்தவரையில் அதனை நடத்துவது தமிழ் மையம் அமைப்புதான் என்றபோதிலும், அரசாங்கத்தின் நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்பும் ஓரளவு இருப்பதால், மக்கள் பணம் கொஞ்சம் அதற்காகத் திருப்பி விடப்படுகிறது என்பதால், கூடுதல் கண்காணிப்புக்கும் கேள்விகளுக் கும் உட்படுத்தப்படுவது இயல்பே.






அந்த இயல்பிலிருந்தே, ‘சென்னை சங்கமம் 2008’ அறி விக்கப் பட்டபோது வரவேற்பு, எதிர்பார்ப்பு, ஐயப்பாடு, மதிப்பீடு என எல்லா உணர்வுகளும் சேர்ந்து மேலெழுகின்றன. தமிழ் மையம் இயக்குனர் களில் ஒருவரும் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிச.7 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஜனவரி 10 முதல் 17 வரை `சென்னை சங்கமம் 2008’ நடைபெற இருப் பதை அறிவித்தார். இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதோடும் இணைந்த பொங்கல் விழாவை யொட்டி இந்தப் பண்பாட்டுச் சங்கமம் நடைபெற உள்ளது என்றார் அவர்.






அடிப்படையில் பிழைப்புக்காகவும், புதிய வாய்ப்புகளுக்காகவும் தலைநகர் வந்து சேர்ந்தவர்கள்தான் சென்னையின் பெரும்பாலான மக்கள். நகரத்தின் ஓட்டத்தில் பொங்கு நுரை போல் வாழ்க்கை மிதக் கிறது. எனவே, தங்களது வேர்களோடு அடையாளப்படுத்திடும் தேடலும் ஏக்கமும் அடியுணர்வாய் இருக்கிறது. விழாக்கால விடு முறைகள் வருகிற போது, சிறப்பு ரயில்கள், கூடுதல் பேருந்துகள் என்று இயக்கினாலும் போதவில்லை என்கிற அளவுக்கு குடும்பம் குடும்பமாகச் சொந்த ஊர்ப் பயணம் மேற்கொள்ளப்படுவதன் அடிப்படை இதுதான். இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய, தாங்கமுடியாத பணச் செலவு என்பதாக, ஆகப் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். வேலை நிலைமை உள்ளிட்ட வேறு பல கார ணங்களாலும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள் நிறையப்பேர். கிராமங்களில் வாழ்வாதாரத்தைப் போலவே வாய்ப்பாதாரமும் நசிந்து போன வர்களாக சலங்கை கட்டிய கால்களின் பழைய நினைவு உறுத் தல்களோடு ஏங்கிக் கிடக்கும் நாட்டுப்புறக் கலை ஞர்களும் ஏராளமாக உள்ளனர். நகர மக்களின் வேர்த் தேடலும், கிராமத்துக் கலைஞர்களின் வெளிச்ச ஏக்கமும் சங்கமிக்கிற ஒரு நிகழ்வாக சென்னை சங்கமம் உருவாகிறது எனலாம்.






முதல் சங்கமத்தைப்போலவே 2008ம் ஆண்டிற்கான சங்கமமும் பூங்காக்கள், வெளி யரங்குகள் போன்ற இடங்களில் நிகழவிருக்கிறது. அதில் சுமார் 725 கலைஞர்கள் பங்கேற் றார்கள். இப்போது 1600 கலைஞர்கள் பங்கேற்கிற சுமார் 60 கலை வடிவங்கள் இடம் பெறுகின் றன. பறையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கரகாட்டம், களிய லாட்டம், கொக்கிலிக்கட்டை, மான் கொம்பாட்டம், வில்லுப்பாட்டு, நையாண்டிமேளம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கணியான் கூத்து, செண்டை, பாவைக்கூத்து, தேவராட்டம், கடவு மாத்தாட்டம், பொம்மலாட்டம், களரி, சிலம்பம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மெரினா கடற் கரைச் சாலை, பெரம்பூர், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் சங்கமப் பெரு வளா கங்களும் அமைக்கப்படுகின்றன.சென்ற முறை கிடைத்த அனுபவங்கள் அடிப் படையில், குறைபாடுகளை தவிர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் கனிமொழி. புதிதாக என்ன செய்யப்படு கிறது? இம்முறை நாட்டுப்புற கலைகளில் பயிற்சி பெற்ற நகர்ப்புற பள்ளி - கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இத்துடன் இணை கின்றன. இதுவும் ஒரு ஆக்கப்பூர்வமான சங்கமம் என்றுதான் சொல்ல வேண்டும்.






செய்தியாளர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவிகள், பள்ளிக் குழந்தைகளும் தங்களது பயிற்சியை உற்சாகம் பொங்க வெளிப்படுத் தியபோது, நாட்டுப்புற கலை வளர்ச்சிக்கான இன்னொரு முனைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. தமிழ் மையத்தின் 15 பயிற்சியாளர்கள் கடந்த 6 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களுக்குச் சென்று 10 விதமான நாட்டுப்புற கலை வடிவங்களை கற்பித்திருக்கிறார்கள் என்று மையத்தின் மற்றொரு இயக்குநர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.






இப்போதும் முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமண்யன், டி.வி.சந்தான கோபாலன், டி.எம். கிருஷ்ணா, சௌம்யா, ரஞ்சனி - காயத்ரி போன்றோரும் `அவிக்னா’ போன்ற பரத நாட்டியக் குழுக்களும் வெளியரங்குகளில் தமது கலைகளை மக்கள் முன் வழங்க இருக்கிறார்கள்.






சங்கமத்தில் பங்கேற்க விரும்பும் புதிய கலைஞர்கள் இம்மாதம் 26, 27 நாட்களில் பிற்பகல் வரையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி அரங்கில் நடைபெறவுள்ள நேரடி தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சங்கம நிகழ்ச்சிகளில் பங் கேற்கலாம் என்றும் அமைப் பாளர்கள் கூறினார்கள்.மாணவர்கள், இளையவர்களுக்கான நடனப் போட்டி ஒன்றும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. ஜனவரி 11 அன்று இந்தப் போட்டி உயர் நிலைப் பள்ளி, மேநிலைப் பள்ளி, இளநிலைக் கல்லூரி என பிரிவு களாக நடத்தப்படும். ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகள் பங்கேற்பவர்கள் திரைப்படப் பாடல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுப்புற பாடல்கள் தேவை எனில் தமிழ் மையம் அலுவல கத்தை ( 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர்) தொடர்பு கொள்ளலாம்.






சென்ற முறை போலவே தமிழ்நாடு இயல் - இசை - நாடக மன்றத்தின் சார்பில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவியரங்குகள், பட்டிமன்றங் கள், இலக்கிய உரைகள், கலை விவாதங்கள் ஆகியன நிகழும் களமாக தமிழ்ச் சங்கமம் அமையும் என்றார் மன்றத் தின் செயலர் கவிஞர் இளையபாரதி.






கேரளத்தின் மாப்ளா இசை, ராஜஸ்தானி நடனம், சூஃபி இசை, கர்நாடகத்தின் நித்யகிரம் போன்ற சில வெளிமாநில கலை நிகழ்ச்சிகளும் இம்முறை சங்கமிக்கின்றன.






சென்றமுறை நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் பார்வை யாளர்களுக்கு உணவு கிடைப்பது ஒரு பிரச்சனை யானது. அதை மனதில் கொண்டு இம்முறை உணவு விழா என்பதும் இந்த சங்கமத்தில் இணைகிறது. நெல்லையின் இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, தலப்பாகட்டி பிரி யாணி, மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா, நாட்டுக் கோட்டை பலகாரங்கள் போன்ற வட்டார உணவுகள் அந்தந்தப் பகுதிகளிலிருந்தே வரவழைக்கப்படுகின்றன. சென் னையின் முன்னணி சமையல் வல்லுநர்கள் அவற்றை ஆரோக்கியமான முறையில், எளிய தள்ளுவண்டிகளிலேயே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் என்று ஹாட் பிரட்ஸ் நிறுவனத்தின் மகாதேவன் தெரிவித்தார்.






நாட்டுப்புற கலைகள் பாதுகாப்பு என்பதில் அவற்றை எந்த மாற்றமுமின்றி அப்படியே வைத்திருப்பது, காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்வது என்ற இரண்டு அணுகு முறைகள் உண்டு. சமூக நீதி, சமூக சீர்த்திருத்தம் போன்ற தமிழக அரசின் கொள்கைகள் சங்கமத்தின் செய்தியாக ஏன் அமையக் கூடாது?






``கலைகளில் மாற்றமே கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும் கலைஞர்கள் அவர்களது விருப்பப்படி நிகழ்த்துவதற்கு சுதந்திரம் உண்டு. அதில் நாங்கள் குறுக்கிடவில்லை சென்ற முறை கூட பல கலைஞர்கள் முற்போக்கான செய்திகளைப் பாடல்கள் மூலம் சொல்லவே செய்தனர்.’’ என்றார் கனிமொழி.






கலைஞர்களின் பொருளாதாரம், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட இந்த மாபெரும் நிகழ்வை, அரசுத்துறைகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களைத் தாண்டி, மக்களுக்கான கலை இலக்கியத்தை அக்கறையும், ஈடுபாடும் உள்ள அமைப்புகளோடும் இணைந்து நடத்தினால் என்ன? இதைப்பற்றி கேட்டபோது, மற்ற கலை அமைப்புகள் தாங்களாக முன் வருவார்களானால் தாராளமாகப் பங்கேற்கலாம் என்று பொதுவாகச் சொல்லப் பட்டது. அத்தகைய அமைப்புகளை இவர்களாக அணுகுகிற விருப்பம் இல்லை போலும். ஏனிந்தத் தயக்கமோ? எனினும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்ச்சங் கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று இளைய பாரதி கூறினார். பங்கேற்பாளராக அழைக்கப்படுவதற்கும், அமைப் பாகவே இணைந்து செயல்படுவதற்கும் வேறுபாடு இருக்கவே செய்கிறது.






இதேபோன்ற கலை இலக்கிய முயற்சிகளை மற்ற அமைப்புகள் மேற்கொண்டால் அதற்கும் அரசுத் துறை களில் ஆதரவு இதேபோல் கிடைக்குமா என்ற கேள்வி இப்போதும் தொடர்கிறது. சென்ற சங்கமத்திற்குப் பிறகு, நாட்டுப்புற கலைஞர்களின் உண்மையான ஆதங்கம் வெளிப்படுத்தப்படவில்லை என்ற உணர்வோடு சென்னையில் தமுஎச நடத்திய பேரணியும், அதன் தொடர் விளை வாக தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை அமைத்ததும் நினைவுக்கு வருகிறது. அத்தோடு இன்னும் அந்த வாரியத்தின் முதல் கூட்டம் கூட கூட்டப்படவில்லை என்பதும் நினைவுக்கு வருகிறது!






அடுத்தடுத்த நிகழ்வுகளின் அனுபவ சங்கமத்தில் புதிய அணுகுமுறைகள் உருவாகட்டும் கலையும் இலக்கிய மும் மக்களுக்கே என மறுபடி மறுபடி உறுதியாகட்டும்.

No comments: