வீட்டின் சமையலறையில், படுக்கையறையில், குளியலறையில் ஓடிப் பதுங்கும் கரப்பான்களைக் கண்டவுடன் பலருக்கு ஒருவித அச்சமும் அருவருப்பும் ஏற்படும். உடனே, தொலைக்காட்சி விளம்பரப் படத்தில் வரும் பெண் செய்வது போல “ஹிட்” மருந்தடித்துவிட்டு நிம்மதியாய்ச் சாயாதவர்கள் எத்தனை பேர்?
அந்த அடர் செம்பழுப்பு நிறப் பூச்சியினம் 15 கோடி ஆண்டுகளாகவும் அதன் மூதாதையினத்திலிருந்து கணக்கிட்டால் 32 கோடி ஆண்டுகளாகவும் பூமியில் தாக்குப்பிடித்து வாழ்கின்றது. பெரும் இயற்கைச் சீற்றங்களாலேயே எதுவும் செய்ய முடியாத அந்த இனத்தை வெறும் ‘ஸ்பிரே’ பூச்சிக்கொல்லியால் ஒழித்துவிட முடியுமா என்ன?
கரப்பான்கள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பிற பூச்சிகளையும், ‘வேக்குவம் கிளீனர்” கண்களுக்குத் தப்பித்துத் தரையில் பரவியிருக்கும் கெட்டுப்போன உணவுத் துகள்களையும் உட்கொள்கின்றன. அதன் மூலம் வீட்டுக்கு உள்ளே நன்மை செய்கின்றன. பறவைகளுக்கும் பல்லிக ளுக்கும் தவளைகளுக்கும் கரப்பான்கள் ஊட்ட உணவாகின்றன. அதன் மூலம் வீட்டுக்கு வெளியே இயற்கை உணவுச் சங்கிலி அறுபடாமல் பங்காற்றுகின்றன.
இதெல்லாம் தெரிந்திருந்தால் இந்திய தலைமை நீதிபதி, “வேலையில்லாமல் கரப்பான் பூச்சிகளைப் போல அலையும் இளைஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்காததால் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாகவும் மாறி எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று சொல்லியிருக்கமாட்டார்தான். அவர்களை ஒட்டுண்ணிகளோடும் ஒப்பிட்டவர், எதிர்க் குரல்கள் குறித்து வெறுப்பும் அசூயையும் பரப்புவோர்தான் மெய்யான ஒட்டுண்ணிகள் என்றும் புரிந்துகொண்டிருப்பார்தான்.
ஆயினும் அவர் தேசத்திற்கு ஒரு நன்மையே செய்தார். மாற்றங்களின் ஊற்று தாங்களே என்றறியாமல் ஒதுங்கியிருந்த நவீனத் தலைமுறைகளை எழ வைத்துவிட்டாரே!
அதுவே அடையாளம்!
“ஆம், நாங்கள் கரப்பான்கள்தான்,” என்று, அமெரிக்காவில் இருந்து அபிஜித் தீப்கே சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டார். அது பெருங்காற்றுப் போல பரவி, இந்தத் தலைமுறையினர் தங்களைக் கரப்பான்களாகத் தயங்காமல் அடை யாளப்படுத்துகிறார்கள். வாய்ப்புப் பாதைகளை அடைத்து, மதவாத–சாதியப் போதையேற்றி, கார்ப்பரேட் பீடாதிபதிகளுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.
“கரப்பான் மக்கள் கட்சி” (சிஜேபி) என்ற இயக்கம் இணையவழி அரசியல் நையாண்டிக் குழுவாக உருவானது. சில நாட்களிலேயே பாஜக தளத்தை விடப் பல மடங்கு ஆதரவைப் பெற்றது. அந்தக் குழு அரசியல் நையாண்டிக்கலையின் புதிய பரிணாமங்களை அறிமுகப்படுத்தியது. சமூக ஊடகங்களில் “ரீல்” துணுக்குகள் வெள்ளமாய்ப் பாய்கின்றன!
சிரிக்க வைப்பதோடு, ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் மனுவில் லட்சக்கணக்கானோரின் கையெழுத்துகளைத் திரட்டிய “சீரியஸ்” பணியையும் மேற்கொண்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவரான அபிஜித் தீப்கே அறிவித்தது போல இது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அல்ல. இது சுரண்டலுக்கும் கூட்டுக் களவு முதலாளியத்திற்கு எதிரான இளைஞர் களின் சீற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளமே, மக்கள் மன்றமே என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதற்கு எதிர்வினையாக சிஜேபி இணையத் தளத்தையும், அதன் எக்ஸ் வலைத்தள கணக்கையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69(ஏ) பிரிவின் கீழ் முடக்கியது. இந்த இணையப் பக்கத்தின் உள்ளடக்கங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக உளவுத்துறை அளித்த பரிந்து ரையின் அடிப்படையில் அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு ஆய்வு செய்து முடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்படி மின்னியல் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிஜேபி பொதுக் களத்திற்கு வந்துவிட்டது! அதன் இணையத்தளத்தை முடக்கியது ஏன் என்று இப்போது உச்சநீதிமன்றமே அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது!
தலைநகரில் போராட்டம்
இத்தகைய பின்னணிகளோடுதான், சனிக்கிழமையன்று (ஜூன் 6) தலைநகர் தில்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை சிஜேபி அறிவித்திருக்கிறது. அமைச்சர் உடனடியாகப் பதவி விலகுதல், தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், தொடர்புடைய தேர்வு முகமை மற்றும் அமைச்சக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தல், சில அதிகாரிகள் இடமாற்றம் போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் ஏற்க இயலாதவை என்ப தால் முழு விசாரணை நடத்தப்படுதல், மாணவர்களின் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நீதியும் நிதியும் கிடைக்கச் செய்தல், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதற்காகவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வருகிற அபிஜித்தை வரவேற்பதிலும் பேரணியிலும் பங்கேற்க லட்சக் கணக்கானோர் பதிவு செய்திருக்கிறார்கள். பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமே கூட இடையூறு ஏற்படக்கூடாது என்று அறிவித்துள்ள அவர், விமான நிலையத்துக்கு யாரும் வர வேண்டாம் என்றும் நேரடியாகப் போராட்டக் களத்துக்கு வருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தில்லியில் வந்து இறங்கியதும் நேரடியாக உரிய காவல்நிலையம் சென்று பேரணிக்கு அனுமதி கோரும் கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக் கிறார். தில்லியில் கால் வைக்கிறபோதே தன்னைக் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்றும், ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுவது உறுதி என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே, இந்தியாவில் சிஜேபி பணிகளை ஒருங்கிணைப்பதற்கென மூன்று புதிய செய்தித்தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். சௌரவ் தாஸ் (புலனாய்வுப் பத்திரிகையாளர்), விஜேதா தஹியா (எழுத்தாளர், அரசியல் ஆய்வா ளர்), அஷுதோஷ் ரங்கா (மேலாண்மை ஆலோசகர்) ஆகியோரே அவர்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை நாடே எதிர்நோக்கி யிருக்கிறது.
நகைப்பின் வலிமை
சும்மா சிரிக்க வைக்கிற சித்தரிப்புகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்ற கேள்வியும் விவாதங்களில் ஒலிக்கிறது. அரசியல் களத்தில் எப்போதுமே நையாண்டிக் கலைக்கு ஒரு செல்வாக்கு உண்டு. நம் ஊரின் தெருக் கூத்துகளில் கோமாளிகள் ஊரின் பெரிய பண்ணையார்களைப் போட்டு வாங்கு வார்கள்! அதே வசனங்களை நாயக நடிகர்கள் பேசினால் கலவரமாகிவிடும்!
அதிகாரத்தின் மீதான கசப்பையும், சமூகச் சிக்கல்கள் மீதான வெறுப்பையும், அங்கத நடையில் எதிர்கொள்ளும் உத்தி உலகத்திற்குப் புதியதல்ல.
மரித்தோர் கட்சி:
ஆம், செத்துப் போனவர்களின் கட்சி (பார்ட்டியா மியோட்டிர்விஹ்) என்றே ஒரு அமைப்பு ரஷ்ய நாட்டில் உருவானது! மாற்றுக் கருத்து கள் அடக்கப்படுவதை எதிர்த்து 2017இல் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. மாக்சிம் எவ்ஸ்திரோப்பொவ் என்பவர், “புடின் ஆட்சியில் உயிரோடு இருப்பவர்கள் பேச முடிவதில்லை. நாங்கள் எங்களை இறந்து போனவர்களாக அறிவித்துக்கொள்கி றோம்,” என்று பதிவிட்டார்.
இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மண்டையோடு முகமூடிகளை அணிந்துகொண்டு, மருத்துவமனைகளின் பிணவறைகள், இடுகாடுகள் முன்பாக நிற்பார்கள். போர் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியிருப்பார்கள். இத்தகைய செயல்பாடுகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.
புடின் அரசு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளா மல் தடை விதித்தது. ஏவ்ஸ்ட்ரோப்போவ் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று.
கட்சி என்றே ஒரு கட்சி!
ஜெர்மனி நாடு “கட்சி” (தி பார்ட்டேய்) என்ற சுருக்க மான பெயரிலேயே அடையாளம்பெற்ற ஓர் இயக்கத்தைக் கண்டது. இது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவும் செய்துகொண்டது.
மற்ற பெரிய கட்சிகள் தங்களது சமூகப் பொறுப்புகளாக “உழைப்பு, சட்டத்தின் ஆட்சி” என்றெல் லாம் மாமூலாக அறிவித்துக்கொண்டு நடைமுறையில் பணக்காரர்களுக்குத்தான் தொண்டாற்றுகின்றன. அதை அம்பலப்படுத்தும் வகையில், “உழைப்பு, சட்டத்தின் ஆட்சி, விலங்கு பாதுகாப்பு, மேட்டிமைவாதிகளின் முன்னேற்றம் மற்றும் அடிமட்ட ஜனநாயக முன்முயற்சிக்கான கட்சி” என்று நீண்ட பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரச் சீர்குலைவுகளால் வெறுத்துப் போயிருக்கும் மக்கள் இவர்களை ஆதரிப்பதால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இக்க ட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன!
குப்பைத் தொட்டி கட்சி:
பிரிட்டன் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிடுபவர் ஜொனாதன் ஹார்வி. அவர் தொடங்கிய கட்சியின் பெயர் ‘கவுண்ட் பின்ஃபேஸ் பார்ட்டி’ (பிரபுத்துவக் குப்பைத்தொட்டி முகக் கட்சி). அரசியல் குப்பைகளை அகற்ற வேண்டியுள்ளது என்ற பொருள்படும்படி ஜொனாதன் ஹார்வி தன் தலையில் ஒரு குப்பைத் தொட்டியைக் கவிழ்த்துக்கொண்டுதான் பரப்புரை மேடைகளுக்கு வருவார்.
பிரிட்டனின் மாறி மாறி ஆட்சியில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளின் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் இவருக்கு ஆயிரக்கணக்கில் வாக்களிக்கிறார்கள்.
தரவுத் தளங்களில் தேடினால் இப்படி மேலும் பல நையாண்டிக்கட்சிகள் பற்றித் தெரிய வரக்கூடும். அவை பெரும்பாலும் தனிப்பட்ட சிலரது நகைச்சுவை வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
இந்தியாவின் கரப்பான் மக்கள் கட்சி அவற்றிலிருந்து மாறுபடுகிறது. சிஜேபி–யின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது, ஒன்றிய பாஜக அரசு டிஜிட்டல் நையாண்டிகளைக் கண்டு மிரண்டு போயிருப்பதைக் காட்டுகிறது. அவ்வாறு மிரள வைத்ததில் செம்பழுப்புப் பூச்சிகளுக்கு ஓர் அரசியல் மதிப்பு உருவாகி யிருக்கிறது.
[0]
‘தீக்கதிர்’ ஜூன் 6 - 2026 இதழில் எனது கட்டுரை
