Sunday, 1 February 2026

பராசக்தி முதல் ஜன கண மன வரை: திரையில் ஒலித்த நீதியின் குரல்கள்

 




நாட்டின் சட்டங்களில் உள்ள போதாமைகளை விமர்சிக்கிற திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சட்டங்களை மதிக்காமல் மீறுகிறவர்களைச் சாடுகிற படங்களும் வந்திருக்கின்றன. கதைகளில் மட்டுமல்லாமல், நடைமுறையில் பல படங்கள் சட்டங்களோடு மோதியிருக்கின்றன.


“சட்டம் ஒரு இருட்டறை“, “சட்டம் என் கையில்” என்றெல்லாம் தமிழில் படங்கள் வந்திருக்கின்றன. அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அதைக் கட்டுப்படுத்தும் தணிக்கை அதிகாரம்  என சட்டமும் சினிமாவும் குறித்துப் பேசுவதற்கு நிறையவே இருக்கின்றன.


குடியரசு தினத்தன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‘ நாளேட்டின் ’சென்னை டைம்ஸ்‘ இணைப்பில் ‘சினிமா‘ஸ டிரைஸ்ட் வித் கான்ஸ்டிடியூஷன்’ (அரசமைப்புடன் சினிமாவின் சந்திப்பு) என்ற தொகுப்பு இதைப் பற்றிப் பேசுகிறது. “அரசமைப்பு சாசனம் குறித்த அனைத்து உரையாடல்களுமே நீதிமன்ற அறைகளில் அல்லது நாடாளுமன்றத்தில் மட்டும் நிகழ்வதில்லை -  நிலைத்து நிற்கக்கூடிய சில உரையாடல்கள் இந்தியத் திரைகளிலும் அரங்கேறியுள்ளன,” என்றுதான் அந்தத் தொகுப்பு தொடங்குகிறது.


நீதிபதி கே. சந்துரு எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வழக்கின் அடிப்படையில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’  அரசமைப்பு சாசனத்திற்கு ஒரு வாழ்த்துரையாக வந்தது. எளிய மக்களும் சட்ட ஆயுதத்தை எடுத்துப் போராடி நாயகர்களாக முடியும் என அந்தப் புத்தகத்தை வாசித்துப் புரிந்துகொண்டதாக, ஒரு நீதிமன்றப் போராட்டத்தையே கதையாக்கி இயக்கிய ஞானவேல் அந்தத் தொகுப்பில் கூறியிருக்கிறார்.


சட்டம் பேசிய படங்கள்


அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் சம வாயப்புக்கு எதிரான சமூகத் தடைகள் பற்றி, மும்பையில் தலித் மக்களுக்கான ஒரு குடியிருப்பை மையமாக வைத்து ரஜினிகாந்த் நடிப்புடன் பா. ரஞ்சித் உருவாக்கிய ‘காலா’, சட்டப்படியான பேருந்து நிறுத்த உரிமைக்காகப் போராடிய ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை வெளிப்படுத்தி மாரி செல்வராஜ் படைத்து தனுஷ் நடித்த ‘கர்ணன்’, சட்டங்கள் மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதங்களாக்கப்படுவதைச் சித்தரித்து ராம் ஜெகதீஷ் தெலுங்கில் இயக்கிய ‘ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ (அரசு எதிர் அடையாளமற்ற ஒருவன்), கல்லூரியில் பயிலும் பழங்குடிப் பெண் தன் தந்தையுடன் சேர்ந்து தனிமனிதச் சுதந்திரத்திற்காகப் போராடும் கதையாக மன்சோரே இயக்கிய கன்னடப் படம் ‘19.20.21’, சாதிப் பாகுபாடுகளை எதிர்த்து ஒரு காவல்துறை அதிகாரி பணியாற்றுவதை அனுபவ் சின்ஹா இந்தியில் சித்தரித்த ‘ஆர்ட்டிகிள் 15’, சாதி மறுப்புக் காதல் உரிமையை சட்டம் உறுதிப்படுத்தினாலும் சாதிய–ஆணாதிக்கச் சங்கிலிகளோடு சமூகம் ஏற்க மறுப்பதை புச்சி பாபு சனா விமர்சிக்கும் ‘உப்பேனா’ (தெலுங்கு), நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி உள்ள உடைமை உரிமைக்கான சவால் பற்றிய ‘காட்டெரா’ (கன்னடம், தருண் கதிர்), ‘லேண்ட்லார்ட்’ (தெலுங்கு, சிவா பய்யய்யா) ஆகிய படங்களை அந்தத் தொகுப்பு எடுத்துக்காட்டியிருக்கிறது.


இதே போல் பேசிய,  பேசப்பட வேண்டிய வேறு பல படங்களும் நினைவுத் திரையில் ஓடுகின்றன. சில படங்கள் எதார்த்தத்திலிருந்து வெகுதொலைவு விலகி, கதாபாத்திரங்களின் வெறும் உணர்ச்சி நாடக அரங்குகளாக நீதிமன்றக் கூடங்களைக் காட்டியிருக்கின்றன. டி. ராஜேந்தர் படம் ஒன்றில், நீதிமன்றத்தில் வாதாடும் வழக்குரைஞர், விஷம் என்று கூறப்பட்ட பாட்டிலில் உள்ள திரவத்தைத் தானே குடித்து, உயிரோடு நிற்பார், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டதும் விரைவாகத் தனது வீட்டுக்குத் திரும்பி விஷத்தை வாந்தியெடுப்பார்! இப்படியான படங்களை நம் விவாத மேடையிலிருந்து இறக்கிவிடலாம்.


வரலாற்று ஆவணம்


நீதிமன்றத்தில் வழக்காடுவதை மையப்படுத்திய கதை என்றால் ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லத்தக்கதாக 1952இல் வந்த ’பராசக்தி’  படத்தைத் தவிர்க்கவே முடியாது. இந்திய அரசமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்த இரண்டாவது ஆண்டில் வெளியான இப்படத்தின் நீதிமன்றக் காட்சியில், கருத்து வெளிப்பாட்டு உரிமை முதல், சமூகச் சீர்குலைவுகள் வரையில் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்கும். திமுக தலைவர்களில் ஒருவராக வளர்ந்துகொண்டிருந்த கலைஞர் கருணாநிதி கதை உரையாடல் எழுதிய அந்தப் படத்தில்தான், “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது,” என்று கூண்டில் நின்று  வாக்குமூலத்தைத் தொடங்குகிற நாயகனாக சிவாஜி கணேசன் அறிமுகமானார். 


தீண்டாமை, போலி ஆன்மிகம் மற்றும் ஏழ்மை குறித்துப் ‘பராசக்தி’ எழுப்பிய கேள்விகள், அரசமைப்பு சாசனம் வலியுறுத்தும் சமத்துவக் கொள்கைகளுக்கு அன்றைய ஒரு கலை வடிவமாக அமைந்தன எனலாம். அக் கேள்விகளின் கூர்மை எந்த அளவுக்கு இருந்தன என்றால், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு பகுதியினர் வற்புறுத்தினர். தணிக்கை வாரியக் கெடுபிடிகளைத் தாண்டியே படம் திரைக்கு வந்தது.


2020இல் வெளியான, ஜே.ஜே. பெட்ரிக் இயக்கிய ‘பொன்மகள் வந்தாள்’ ஒரு பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கும் சட்ட நடைமுறையைக் காட்டியது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்சோ)  தொடர்பான விழிப்புணர்வை இது நீதிமன்ற வாதங்களின் மூலம் முன்வைத்தது.


தந்தைக்காக மகளின் போராட்டம்


கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் 2022இல் வந்த படம் ‘கார்கி’. பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது தந்தையைக் காப்பாற்ற சட்ட விதிகளோடு மகள் போராடுகிற கதையை இந்தப் படம் சொன்னது. சிறிய சாட்சியங்கள் கூட வழக்கின் போக்கை மாற்றிவிட முடியும் என்றும் அந்தப் படம் காட்டியது. சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் மிதிலா நாட்டில் (இன்றைய பிகார்) வாழ்ந்தவர் கார்கி வாசக்னவி. ஒரு தத்துவ அறிஞராக ஆண்களுக்கு சமமாக மன்னன் சபையில் இடம் பெற்றவர். திரைப்படத்தில் சட்ட அறிவின் துணையோடு போராடுகிற பெண்ணுக்கு ஒரு பண்டைக்கால முன்னோடியின் பெயர் வைக்கப்பட்டதில் ஓர் ஆழமும், பெண்ணின் இந்த அறிவாளுமைத் தொடர்ச்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற செய்தியும் இருக்கிறது.


‘நேர்கொண்ட பார்வை’ (2019) அரசமைப்பு சாசனம் வலியுறுத்தும் தனிமனிதத் தன்னுரிமை, உடல் சார்ந்த தன்னாளுமை ஆகியவற்றை முன்னுக்குக் கொண்டுவந்தது. “உறவுகொள்வதில் ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம்”  என்று நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்குரைஞர் நிறுவுவது ஆண் மையச் சமூகத்திற்கு ஒரு செய்தியையும் சொன்னது. தமிழில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் உள்ளிட்டோரின் நடிப்புப் பங்கேற்புடன் வந்த இந்தப் படம், 2016இல் இந்தியில் வெளியான, அமிதாப் பச்சன் நடித்த, அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கிய ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ்த் தயாரிப்பு. தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.


மலையாளத்தில், மோகன்லால் வழக்குரைஞராக நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது 2023இல் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வந்த ‘நெரு’. பார்வைத் திறன் சவால் உள்ள ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். குற்றவாளி யாரெனத் தெரிந்தும் அவனுடைய செல்வாக்கின் காரணமாகத் தப்பிக்க விடப்படுகிறான். நீதிமன்றப் போராட்ம், வலிமையான சாட்சிகள், சட்டத்தின் துணையோடு அந்தப் பெண்ணின் துணிவு, நீதியை நிலைநாட்ட வழக்குரைஞர் தன் சொந்தக் கசப்புகளைக் கடந்து ஒப்படைத்துக்கொள்வது என நெரு படம், சட்டத் திரைப்படங்கள் பற்றிய நம் உரையாடலுக்கு நெருக்கமாக வருகிறது.


உணர்ச்சியா ஆதாரமா?


பிருத்விராஜ் வழக்குரைஞராக நடித்து, டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி 2022இல் வந்தது ‘ஜன கண மன’. இந்த மலையாளப் படத்தின் கதையோட்டம் நிகழ்வது கர்நாடக மாநிலத்தில். பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார் ஒரு பேராசிரியர். பெரும் கொந்தளிப்பு ஏற்படும் நிலையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை உடனடியாகத் தண்டிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழும் சூழலில் அவர்கள் என்கவுன்டர் செய்யப்படுகிறார்கள். சமூகம் அமைதியாகிறது. வழக்குரைஞர் இதை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று, அந்த 4 பேரைக் கொல்வதற்கான அரசியல் சதியாகத்தான் அந்த பாலியல் குற்றமே நடத்தப்பட்டது என்று நிரூபிக்கிறார். உண்மையான ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப்பட வேண்டுமேயன்றி, பொது உணர்ச்சிகளுக்காக சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனை அளிக்கப்படக் கூடாது என்ற கருத்தை அந்தப் படம் பேசியது. ஒரு மாநிலத்து வழக்குரைஞர் வேறு மாநிலங்களில் வாதாட முடியும் என்பதையும் எடுத்துச் சொன்னது.


சமூநீதிக்கு எதிராகவும்…


ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சமூகநீதி ஏற்பாடாகிய இட ஒதுக்கீடு சட்டங்களைக் கொச்சைப்படுத்தும் படங்களும் வந்திருக்கின்றன. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ‘வானமே எல்லை’  போன்ற சில படங்களின் கதைகள் போகிற போக்கில் இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு பறிபோனதான புலம்பல் இடம்பெற்றிருக்கிறது. ஜோதி பாண்டியன் இயக்கத்தில் 1987ல் வந்த ‘ஒரே ஒரு கிராமத்திலே’ நேரடியாகவே இட ஒதுக்கீட்டைக் குற்றம் சாட்டும் கதையாக, நீதிமன்றத்தில் வாதாடும் காட்சியையும் வைத்திருந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று அப்போது எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு படத்திற்குத் தடை விதித்ததும், உச்சநீதிமன்றம் அந்தத் தடையை விலக்கியதும, அந்தப் படத்துக்கும் அதில் நடித்த லட்சுமிக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டதும் தனிக்கதை.


தொழிலாளர் எழுச்சிகள் பற்றிய படங்கள் வந்திருந்தாலும், நீதிமன்றத்தில் தொழிலாளர் சட்டம் சார்ந்த போராட்டங்கள், விவசாயிகளின் சட்ட உரிமைப் குரல்கள், குழந்தைகளின் உரிமைகளுக்கான வாதங்கள் கதைகளாக்கப்பட்டிருப்பதாக பெருமளவுக்குத் தெரியவரவில்லை. தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த ‘தெய்வத் திருமகள்’ அறிவுசார் மாற்றுத் திறனாளிக்கும் ஒரு குழந்தைக்குமான உணர்வார்ந்த உறவை நீதிமன்றம் கொண்டுசென்று நிறுவியது. ஹன்சல் மேத்தா இயக்கிய ‘ஷாஹித்’ என்ற இந்திப் படம், பயங்கரவாதச் செயல்கள் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஏழைத் தொழிலாளர்களை மீட்க நடந்த நீதிமன்றப் போராட்டத்தைப் பேசியது.  ஷாஹித் ஆஸ்மி என்ற மனித உரிமை வழக்குரைஞரின் உண்மைக் கதை அது. தேடி விசாரித்தால் இத்தகைய மேலும் பல படங்களின் விவரங்கள் கிடைக்கக்கூடும்.


வீடுகளுக்கும் கைப்பேசிகளுக்கும் ஓடிடி மேடைகளில்  வரும் ஹாலிவுட் தயாரிப்புகள் உட்பட பல வெளிநாட்டுத் திரைப்படங்கள், நீதிமன்ற நிகழ்வுகளை நம்பகத்தன்மையோடு காட்டுகின்றன. சட்ட நுணுக்கங்களிலும், மனித உரிமைகளிலும் வெளிச்சம் பாய்ச்சும் வகையில் இருக்கின்றன. பொது அக்கறையோடு ரசனைச்சுவையும் கலையழகியலும் இணைகிறபோது சமூகப் பொறுப்புள்ள படைப்புகளாகப் பரிணமிக்கின்றன. என்றென்றும் தொடர வேண்டிய பரிணமிப்பு.

[0]

கீக்கதிர் (பிப்.1) ஞாயிறு இணைப்பாகிய வண்ணக்கதிர் இதழில் எனது கட்டுரை

No comments: