Thursday, 12 February 2026

எந்த டிவி என்ன சொன்னாலும்…

தொழிலாளி வர்க்க உணர்வோடு மட்டுமல்லாமல் தேசப்பற்றோடும் வாழ்த்துகிறேன்: நாடுதழுவிய அளவில் இன்று (பிப்ரவரி 12) நடந்துகொண்டிருக்கும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்க. அனைத்துத் துறைகளின் தொழிலாளர்கள் தங்களுடைய தொடர் இயக்கங்களால் பெற்ற உரிமைகளை உறுதிப்படுத்திய 29 சட்டங்களைச் சிதைத்துக் கொண்டுவரப்பட்டுள்ள 4 தொகுப்புகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியே இந்தப் பொது வேலைநிறுத்தம்.


பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றிய ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக இருப்பது புதிய தகவலல்ல. இருந்தாலும் கூட,  “நடுநிலையோடு” (!), இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஓரிரு வார்த்தைகளுடன் செய்தியாவது சொல்கின்றன.


ஆனால், தமிழ்நாட்டில் “அந்த டிவி” சில நாட்களுக்கு முன், புகுத்தப்படும் சட்டத் தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு “நன்மை“ அளிக்கிற அம்ஜங்கள் என்னென்ன இருக்கின்றன என்று ஒரு தனிக் கோர்ப்பை ஒளிபரப்பியது. மொத்தம் 12 நிமிடங்கள் ஓடுகிற அந்தக் கோர்ப்பில் முதல் 11 நிமிடங்கள்,  தொழிலாளர்களுக்கு அந்தரத்தில் ஒரு சொர்க்கம் உருவாக்கப்படுவதாக ஒரு கனவை விதைக்க ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி ஒரு நிமிடம் இருக்கிறபோது, “அய்யய்யோ நம்ம நடுநிலை ஒப்பனை என்னாவது” என்ற கவலை ஏற்பட்டிருக்கும் போல, ஒன்றிரண்டு விதிகள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக இருப்பதாகக் ”கூறப்படுகிறது” என்றும், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டார்கள்.


இனிப்பான கிரீம் தடவப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்ன சட்டத் தொகுப்புக்குள் கெட்டுப்போன கேக் இருப்பதைச் சொல்லவில்லை. முன்பு 100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஒரு நிர்வாகம் முன்னறிவிப்பின்றி, அரசிடம் அனுமதி பெறாமல் வேலை நீக்கம் செய்யவோ, நிறுவனத்தை மூடவோ முடியும் என்றிருந்த விதி  அழிக்கப்பட்டிருக்கிறது. 300 தொழிலாளர்கள் வரையில் இருந்தால் கூட அப்படி வெளியேற்றவும் கதவை மூடவும் முடியும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கேக்கைக் குப்பைத் தொட்டியில் போட வைப்பதற்காகத்தான் வேலைநிறுத்தம்.


8 மணி நேர வேலை என்ற வரம்பை விலக்கி, 12 மணிநேரம் வரையில் நீட்டிப்பதற்கான சட்டங்களை மாநில அரசுகள் கொண்டுவர வழிசெய்யப்பட்டிருக்கிறது. உழைப்பாளிகள் வேலைப் பொழுதும், ஓய்வுப் பொழுதும் போக, வாழ்வதற்கான பொழுதில் இரண்டு மணி நேரம் வெட்டுப்படுவதைத் தடுப்பதற்காகத்தான் இந்த வேலைநிறுத்தம்.


ஊழியர்களை எப்போது வேண்டுமானாலும் தெருவில் நிறுத்தலாம் என்ற கார்ப்பரேட் ஆசைக்கு ஏற்ப, காண்டிராக்ட் முறை, வெளியாட்கள் பணிமுறை ஆகிய, ஏற்கெனவே பல நிறுவனங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கிற, விதிகள் வரையப்பட்டிருக்கின்றன. அவற்றை அழிக்க வைப்பதற்காகவும் இந்த வேலைநிறுத்தம்.


நாட்டில் உழைக்கும் படையாக இருப்பவர்கள் 60 கோடிப்பேர். அவர்களில் வெறும் 6 சதவீதம் பேர்தான், நிறுவனப்பூர்வ அமைப்பாக அணிதிரட்டப்பட்டவர்கள். மற்றவர்களின் சமூகப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களுக்காகவும்தான், அந்த 6 சதவீதத்தைச் சேர்ந்தவர்களும் நடத்துகிற இந்த வேலைநிறுத்தம்.


பட்டுவாடா பார்ட்னர்கள் (அப்படித்தான் நிர்வாங்கள் குறிப்பிடுகின்றன) உள்ளிட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களும், திட்டங்கள் சார்ந்த பணியாளர்களும் கைவிடப்படுகிறார்கள். அவர்களுக்கு, அமைப்பாய்த் திரண்ட தொழிலாளர்கள் கைகொடுப்பதுதான் இந்த வேலைநிறுத்தம்.


நிலையான வேலை என்பதே எதிர்காலத்தில் கடந்தகாலக் கதையாகிவிடும். அப்படி நிகழாமல் தடுப்பதற்காகத்தான் நிகழ்காலத்திய நிலையான வேலைகளில் இருப்போரின் சகோதர உணர்வுடனான இந்த வேலைநிறுத்தம்.


இயற்கைச் சீற்றங்கள் முதல் செயற்கையான இறக்குமதி வரித் தள்ளுபடிகள் வரையில் இழப்புகளுக்கு உள்ளாக்கப்படும் விவசாயிகளுக்கும், குறைந்தளவுப் பாதுகாப்புகளும் பறிக்கப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளி வர்க்கம் தோள்கொடுக்கும் தோழமையோடு இந்த வேலைநிறுத்தம்.


செய்திகளைத் திறமையோடு தயாரிக்கும் உழைப்பாளிகளின் தலைகள் மீதும் இந்தக் கத்திகள் தொங்குவதை உணரட்டும். நிர்வாகக் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டுமென்றாலும், தங்களுக்காகவும் கூடப் போராட்டக் களம் காண்போருடன் அறம் சார்ந்த ஒருமைப்பாட்டை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்தட்டும்.


போராட்டங்களில் பங்கேற்காமல், அவற்றின் பலன்களை அனுபவிக்கத் தயங்காதவர்களுக்கும் இன்றைய இயக்கம் வர்க்க உணர்வை ஏற்படுத்தும். அது,  சுரண்டல் பெருநிறுவனஙகள் முதல் அவர்களுக்குத் துணைபோகும் அதிகார பீடங்களுக்கும் ஒரு சேதியைச் சொல்லும்.


No comments: