அவரே அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லாத பிரச்சினை ஒன்று இருக்கிறது.
இஸ்ரேல்–ஹமாஸ் மோதலை நிறுத்துவதற்கும், காஸா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல்
ராணுவம் வேட்டையாடுவதைத் தடுக்கவும் என்ன செய்தார்? இந்தியாவுடனும் பாகிஸ்தானுடமான
வர்த்தக உறவுகள் துண்டிக்கப்படும் என்று கூறி நிர்ப்பந்தித்ததாகக் கூறினாரே, அது போல
இஸ்ரேல் அரசிடம் ஏன் கூறவில்லை?
மதம் சார்ந்த தீவிரவாத அமைப்பாகிய ஹமாஸ், 2006இல் நடைபெற்ற பாலஸ்தீன
தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய
நாடுகள் உள்ளிட்ட பல அரசுகள் அதனை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து நிதிஉதவிகளை நிறுத்தின.
ஏற்கெனவே ஆட்சியில் இருந்த ஃபதா கட்சிக்கும் ஹமாஸ்சுக்கும் இடையே வன்முறை மோதல்கள்
வெடித்தன. 2007 முதல் காஸா பகுதி ஹமாஸ் பிடியிலும்,
பி.ஏ. எனப்படும் பாலஸ்தீன நிர்வாகம் ஃபதா கட்டுப்பாட்டிலும் இருந்து வருகின்றன.
பயன்படுத்தாத செல்வாக்கு
இந்தப் பின்னணியில் ஹமாஸ்சுடன் டிரம்போ அவருடைய அதிகாரிகளோ பேச
மாட்டார்கள், அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இஸ்ரேல் அரசுடன் பேசாமல் இருப்பது ஏன்?
இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்படுவது காஸாவின் குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள்
அல்லவா? இந்தப் பிரச்சினையில் தலையிடுகிற அளவுக்கு இஸ்ரேலுடன் நெருக்கமும் செல்வாக்கும்
கொண்டது அமெரிக்க அரசு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும் சண்டையை நிறுத்தவும் டிரம்ப்
முன்வராதது ஏன்?
அவர் எதுவுமே சொல்லவில்லை என்று சொல்லிவிட முடியாதுதான். சண்டை
நிறுத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று செய்திகள்
வந்திருப்பது உண்மை. ஆனால், அப்படியான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியதெல்லாம் சில
கூட்டங்களின் மேடைகளில் பேசிய நேரத்தில்தான். அமெரிக்க அரசின் தலைவராக, இஸ்ரேல் அரசின்
தலைவருடன் அவர் பேசினாரா, வலியுறுத்தினாரா, வர்த்தகத்தைத் துண்டித்துவிடுவேன் என்று
கட்டாயப்படுத்தினாரா? அப்படிப்பட்ட செய்திகள் எதுவும் வரவில்லை.
இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் அடாவடித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அணு ஆற்றல் அறிவியலாளர்கள், ராணுவத் தளபதிகள் உள்பட பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். பதிலுக்கு
ஈரானும் இஸ்ரேல் நகரங்களில் ஏவுகணைகளைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானின் அணு
உலைத் தளங்கள் குறிவைக்கப்பட்டதால் இது பெரும் போராக, அணுகுண்டு வீச்சுகளாக மாறுமோ
என்ற கவலை உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையிலும் டிரம்ப்,விரைவில்
இது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டு சொந்த அரசியலுக்குத்
திரும்பிவிட்டார்.
பார்வையில் மாற்றமின்றி
இந்த மாத நிலவரப்படி
இஸ்ரேல்–ஹமாஸ் போர், மத்திய கிழக்கு மோதல் குறித்த தனது நிலைப்பாட்டில் சில மாற்றங்களைக்
காட்டியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வட்டாரங்கள் தொடர்பான அவருடைய
அடிப்படைப் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என்ற செய்திகளும் வந்துள்ளன.
காஸா நொறுக்கப்படுவது தொடர்பாக இவ்வாண்டு பிப்ரவரியில் கருத்துத்
தெரிவித்த அவர், அந்தப் பகுதி கைப்பற்றப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று
கூறியிருந்தார். காஸாவை யார் கைப்பற்ற வேண்டும் (“டேக் ஓவர்“) என்று சொன்னார் தெரியுமா?
அமெரிக்க ராணுவம்!
எதற்காகக் கைப்பற்ற வேண்டும் என்று சொன்னார் என்பது இதை விட அதிர்ச்சி
தருவது. காஸா மக்களுக்கு அமைதியை நிலைநாட்டித் தருவதற்காக அல்ல, அங்கே இன்னமும் உயிரோடு
இருக்கிற குழந்தைகளின் பசியாறச் செய்வதற்காக அல்ல. மாறாக அந்தப் பகுதியை “மத்திய கிழக்கின்
ரிவியெரா” என மாற்றுவதற்காக!
ரிவியெரா ஆசை
ரிவியெரா என்பது மத்திய தரைக்கடல் பகுதியில், ஒரே நீட்சியான நிலப்பரப்பாக
அமைந்த, இத்தாலிய ரிவியெரா, பிரெஞ்சு ரிவியெரா என, இரு நாடுகளுக்கும் சொந்தமான கடற்கரைப்
பகுதியைக் குறிப்பதாகும். செல்வச் செழிப்பு மிக்க கடலோர சுற்றுலாத் தலம் இது. பல நாடுகளிலிருந்தும்
கடற்காற்று ஓய்வுக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிற இந்தப் பகுதியில் உலக சுற்றுலாச்
சந்தையின் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் தங்கல்/உல்லாச விடுதிகளை அமைத்துள்ளன.
பணக்காரப் பயணிகளுக்கான கிராண்ட் ஹோட்டல், ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல், பெல்மாண்ட் ஹோட்டல் ஸ்பிளெண்டிடோ, ஓட்கெர் கலெக்‘ஷன்,
மெரியாட் இன்டர்நேஷனல், ஹயாட் ஹோட்டல்ஸ் கார்ப்பரேஷன்,அக்கார், பல முன்னணி கார்ப்பரேட்
நிறுவனங்களின் கூட்டமைப்பாகிய தி லீடிங் ஹோட்டல்ஸ் ஆஃப் தி வொர்ல்ட் ஆகியவற்றின் ஆடம்பர
விடுதிகள் இங்கே இருக்கின்றன. இவையன்றி சில குடும்பங்கள் பரம்பரையாக நடத்தி வரும் விடுதிகளும்
இருக்கின்றன.
அதுபோன்ற கடற்கரை சுற்றுலா மையமாக காஸாவை மாற்றுவதுதான் டிரம்ப்
விருப்பம். அந்தப் பன்னாட்டு நிறுவனங்களுககு மத்திய கிழக்குக் கடலோரத்திலும் விடுதிகள்
அமைக்க நிலத்தைக் கைப்பற்றிக் கொடுப்பதுதான் அந்த விருப்பத்தின் உள்நோக்கம். ஆம், காஷ்மீர்
மண்ணைக் கார்ப்பரேட் மனைகளாக மாற்றும் “லட்சியம்” போன்றதுதான்.
இன அழிப்புத் திட்டம்
காஸாவைக் கைப்பற்றி, அந்த நிறுவனங்களும் அவற்றை நாடிவரும் பணக்காரப்
பயணிகளும் நுழைவதற்குத் தோதாக, பாலஸ்தீன மக்களைக் கூண்டோடு வெளியேற்றுவது அந்தத் திட்டத்தின்
இன்னொரு பகுதி. கிட்டத்தட்ட 20 லட்சம் பாலஸ்தீனர்களை அப்புறப்படுத்தி, அண்டை நாடுகளிலும்
இதர பாதுகாப்பான சமூகங்களோடும் இருக்க வைக்கலாம் என்றார் டிரம்ப். அவ்வாறு அனுப்பப்படும் பாலஸ்தீனர்கள் திரும்பி வருவதற்கு
அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், டிரம்பின் இந்த மோசமான மோசடி முன்மொழிவுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன.
“இது ஒரு வகையான இன அழிப்பு போன்றதுதான். பன்னாட்டுச் சட்டத்திற்கு எதிரானதுதான்,” என்று ஐ.நா. சபையின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு விசாரணை
ஆணையத் தலைவர் நவி பிள்ளை எதிர்ப்புத் தெரிவித்தார். “எந்த வகையான இன அழிப்பையும் ஏற்பதற்கில்லை,”
என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்தது. பல்வேறு அரபு நாடுகள், சில மேற்கத்திய
நாடுகளின் அரசுகளோடு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் கண்டித்தன. பல பத்திரிகையாளர்கள்,
கருத்தாளர்கள், சட்ட வல்லுநர்கள் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த எதிர்வினைகளை எதிர்பாராத டிரம்ப், “இது ஒரு பரிந்துரைதான்.
இதை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்,” என்று அறிவித்தார். அத்துடன், யாரும் எந்த பாலஸ்தீனரையும்
வெளியேற்றிவிடவில்லை என்று கூறினார். உலகளாவிய எதிர்ப்பின் காரணமாகத்தான் டிரம்ப் இப்படி
தனது “கைப்பற்றல்” ஆசையின் தொனியைக் குறைத்திருக்கிறார் என்றும் கருத்தாளர்கள் சுட்டிக்காட்டத்‘
தவறவில்லை. அதற்கு ஆதாரமாக, இவ்வாண்டு மார்ச் மாதம் “யாரும் பாலஸ்தீனர்களை வெளியேற்றப்
போவதில்லை” என்று கூறியவர், மே மாதத்தில் மறுபடி முருங்கை மரம் ஏறி, “காஸாவை ஒரு சுதந்திர
மண்டலமாக மாற்ற அமெரிக்கா விரும்புகிறது,” என்று அறிவித்ததை எடுத்துக்காட்டுகிறார்கள்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்திற்கு முன் ஜோ பைடன் முயற்சியில்
சென்ற ஆண்டு ஒரு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அதைத் தொடர்வதில் டிரம்ப்
அக்கறை காட்டவில்லை. தற்காலிக சமரசத்திற்கான பெருமைக்குச் சொந்தம் கொண்டாடுவதில் காட்டுகிற
ஆர்வத்தை, நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அவர் காட்டவில்லை. ஆகவேதான் போர்நிறுத்த
உடன்பாடு முறிந்து போனது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பட்டம் சூட்ட ஆசை
இதுவொருபுறம் இருக்க, இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கியதிலிந்து,
தனக்கொரு “சமாதானத் தூதுவர்” அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் அவர் ஆசைப்படுகிறாராம்.
அதற்கான முயற்சிகளில் உண்மையாக ஈடுபடாமல், அந்த மகுடம் தானாக வந்து தலையில் அமர வேண்டும்
என்றும் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. காஸா மக்களுக்கென செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட
அமைப்புகள் அனுப்பி வைக்கும் உணவு மற்றும் இதர உதவிப் பொருள்கள் உரிய இடத்தைச் சென்றடையவிடாமல்
இஸ்ரேல் ராணுவம் தடுக்கிறது, அழிக்கிறது. இத்தகைய சில நடவடிக்கைகளில் தனக்கு உடன்பாடில்லை
என்பதாக அறிவித்துக்கொண்டாலும், இஸ்ரேல் அரசுக்கு அளித்துவரும் ஆதரவைக் கொஞ்சமும் விலக்கிக்கொள்ளவில்லை.
மாறாக, காஸாவில் “வேலையை முடிக்க” இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்தையும்
அமெரிக்கா அனுப்பும் என்று இந்த ஜனவரியில் கூறியிருக்கிறார். இதனிடையே, சண்டை நிறுத்தப்
பேச்சுவார்த்தைகளில் டிரம்ப் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது என்று சில ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன. “கூறப்படுகிறது” என்றுதான் சொல்ல முடிகிறதேயன்றி திட்டவட்டமாக
உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூவைச் சந்தித்த
பிறகு பேட்டியளித்த டிரம்ப், “போர் நிற்பதைக் காண நான் விரும்புகிறேன். ஏதோவொரு கட்டத்தில்
போர் நின்றுவிடும் என்று நான் நினைக்கிறேன். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,”
என்று கூறினார். போரை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் உதவிகள் நிறுத்தப்படும் என்று
நேதன்யாஹூவிடம் சொன்னதாகச் செய்தியாளர்களிடம் அவர் சொல்லவில்லை.
தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கு டிரம்ப் முயல்வதன் நோக்கம் கூட, செய்தித் தலைப்புகளில் இடம்பெறுவதுதானேயன்றி மோதலை
நிலையாக முடிப்பதற்குரிய ஆழமான முயற்சிகளை மேற்கொள்வதல்ல என்று உலக அரசியல் விமர்சகர்கள்
கூறுவது கவனத்திற்குரியது. நிலையான போர் முடிவு ஏற்பட்டுவிட்டால் பிறகு எப்படி “ரிவியெரா
ரியல் எஸ்டேட்” கடையைத் திறக்க முடியும்?
No comments:
Post a Comment