Thursday, 10 September 2026

‘தீக்கதிர்’ செய்தியும் எதிர்வினைகளும்


                                காலை நடையில் பூங்கா நிழலில்


“உங்க தீக்கதிர் பேப்பர்ல வந்த நியூஸ் பத்தி ஃபேஸ்புக்குலேயும் மத்த சோசியல் மீடியாவிலேயும் கடுமையா அட்டாக் பண்ணி எழுதிக்கிட்டிருக்காங்க, நீங்க எதுவும் சொல்லலையே?”


“அசெம்பிளியில் சீஃப் மினிஸ்டர் விஜய் பதிலுரைச் செய்தியையும், அதுக்குத் தரப்பட்டிருந்த தலைப்பையும்தான் நண்பர் கேட்கிறார்.,. உங்களோட பதிலுரையைச் சொல்லுங்க சார்!”


“அதை ஸ்ட்ராங்கா கிரிட்டிசைஸ் பண்றவங்கள்ல இவங்க கட்சிக்காரங்களும் இருக்காங்க… அவங்களுக்கும் மௌனம்தான் பதிலா சார்? இல்லாட்டி இந்த இஷ்யூ அதுவாவே பழசாகி மறைஞ்சுபோயிடும்னு கண்டுக்காம இருக்கீங்களா?”


காலை நடை நேரத்தின் கடைசிக்கட்ட பூங்கா இருக்கை உரையாடலில் மூன்று நண்பர்கள் முன்வைத்த கேள்விகள் இவை. அந்த உரையாடலை அப்படியே தராமல், அவர்களுக்கு நான் சொன்ன பதில்களின் சுருக்கத்தை இங்கே பகிர்கிறேன்:


“அது இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என்று நான் அப்போது கணிக்கத் தவறிவிட்டேன். ஒரு முக்கியமான கட்டுரையை முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயத்திலும் இருந்தேன். ஆகவேதான் அப்போதே என்னுடைய கருத்தைச் சொல்லவில்லை.


தீக்கதிர் அலுவலகத்தின் கட்டமைப்போடு தொடர்புடைய பணிச் சூழல், இயக்க ஈடுபாடு உள்ள ஆனால் இதழியல் பயிற்சி பெறாத ஊழியர்கள் உள்ளிட்ட நிலைமைகளை, அந்த நிலைமைகளோடு சேர்ந்திருந்தவன் என்ற முறையில் நன்கு அறிவேன். 


வேலை சார்ந்த நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. மற்ற பத்திரிகைகளில் இரவு 11 மணி வரையில் வரக்கூடிய செய்திகளைக் கூடச் சேர்த்துவிடுவார்கள். தீக்கதிரிலோ இரவு 8 மணிக்கு மேல் வருகிற செய்தி எதுவானாலும், அது எவ்வளவு முக்கியமானதானாலும், சேர்க்க முடியாது. அப்படிச் சேர்க்க முயன்றால் பதிப்புகள் அச்சிடப்படும் ஊர்களைத் தவிர வேறு எங்கும் பத்திரிகை போய்ச் சேராது.


சில நேரங்களில் பொறுப்புத் தோழர்கள், இயக்கம் சார்ந்த வேறு பணிகளுக்காகச் செல்ல வேண்டியதாகிவிடும். உடல்நலக் குறைவு போன்ற காரணமும் ஏற்படக்கூடும்.


அப்படிப்பட்ட நேரங்களில், இருக்கிற மற்ற தோழர்கள்தான் செய்திகளை இறுதிப்படுத்தி, தலைப்புகள், துணைத் தலைப்புகள் தந்து அச்சுக்கு அனுப்புவார்கள். அதனால் விபத்தாகப் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அபாயநிலைமைகளுக்கு உட்பட்டது என்று சில விளம்பரங்கள் வருமே, அப்படித்தான் இதழியல் பணி.   அரசியல் இயக்கத்தின் பத்திரிகைக்கு, அதிலும் கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகைக்கு, அந்த அபாயநிலைமை கொஞ்சம் அதிகம்.


இந்தப் பின்னணிகளில்தான், திங்கள் கிழமை சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பதிலுரையில் பதில்களே இல்லை என்று சிபிஐ(எம்) செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் இடம்பெறாமல், புதன்கிழமை இதழில் முதல் பக்கத்திலேயே பெரிய அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை வாங்காதவர்கள் இணையப் பதிப்புகளில் அதைப் பார்க்க முடியும்.


இதையெல்லாம் சொல்லி அந்தச் செய்தியையும் தலைப்பையும் நியாயப்படுத்தவில்லை. அரசியல் தெளிவோடு அவற்றைச் சரியான முறையில் “எடிட்” செய்திருக்க வேண்டும்தான். தோழமையோடு அதைச் சுட்டிக்காட்டுவது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.


ஆனால், இப்படி நடந்துவிட்டதற்கு அரசியல் நோக்கம் கற்பிப்பதை ஏற்பதற்கில்லை. அப்படியொரு நோக்கம் இருக்குமோ என்ற ஐயத்தோடு சிலர் இப்படி எழுதுகிறார்கள். சிலர் அவர்களுக்கான அரசியல் உள்நோக்கத்தோடு பரப்புகிறார்கள். இன்னும் சிலர் சொந்தக் கோபதாபத்தோடும் செய்கிறார்கள். வேறு சிலர் “நம்ம பத்திரிகையிலே இப்படி வரலாமா” என்ற நியாயமான ஆதங்கத்தைப் பகிர்கிறாரகள்.  


கட்சிக்கு வெளியே இருப்பவர்கள் எழுதுகிறார்கள், உள்ளே இருப்பவர்களும் எழுதுகிறார்கள், வெளியே போனவர்களும் எழுதுகிறார்கள். அவர்களுடைய மற்ற பல பங்களிப்புகள் சிறப்பானவை. அதற்காக, இப்படிப்பட்ட வெளிப்பாடுகளும் சிறப்பானவையாகவோ, நல்ல எடுத்துக்காட்டுகளாகவோ இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இது எனக்கும் பொருந்தும்தான்…


அதே வேளையில், விஜய் அப்படிப் பேசிய நாளிலேயே உடனுக்குடன் பல தோழர்களும், நான் உட்பட, அதை அவரவர் நடையில் கடுமையாகவும் நகைச்சுவையாகவும் எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறோம். ‘டயலாக் தமிழ்’ காணொளித் தளத்தில் எனது நேர்காணல் அன்று இரவே வந்தது. ‘ஒய் மேன்’ தளத்தில் ஊடகவியலாளர் கவின் மலரும் நானும் உரையாடியதன் ஒளிப்பதிவு மறுநாள் பதிவேற்றப்பட்டது. இப்படி வேறு பல தோழர்களும் செய்திருக்கிறார்கள். 


தீக்கதிர் சந்திக்கும் கடினமான சவால்கள் பற்றியும், குறிப்பிட்ட  செய்திக்கு உள்நோக்கம் கட்டப்படுவது பற்றியும் தோழர் இ.பா. சிந்தன் பொறுப்போடு ஒரு பதிவைச் செய்திருக்கிறார். அந்தச் செய்தியை விமர்சிக்கிறவர்கள் கம்யூனிஸ்ட் எதிரிகள் என்றும் விலைபோனவர்கள் என்றும் சில தோழர்கள் சாடுவதையும் அவர் தனது பதிவில் தள்ளுபடி செய்திருக்கிறார். படித்துப் பாருங்கள். இப்படியான பக்குவங்கள்தான் இயக்கத்தின் அடையாளங்கள்.


அப்புறம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் –  அந்தக் குறிப்பிட்ட செய்தி வந்த மறுநாளே அது தொடர்பான ஆசிரியர் குழு தோழர்களுடன்,  தீக்கதிர் அமைப்புக்கான கட்சித் தலைமை பேசியிருக்கும், கடுமையாக விமர்சித்திருக்கும், எவ்வாறு சரியான அரசியல் புரிதலோடு செயல்படுவது என்று வழிகாட்டியிருக்கும். அரசியல் இயக்க ஏடு என்பதால் இதுவும் அங்கே நடக்கும்.”


–பேசி முடிக்கிற வரையில் கலைந்து போகாமல் கவனிக்கிற பண்பாட்டை வெளிப்படுத்தினார்கள் நண்பர்கள். தேநீர்க்கடையை அடைந்ததும், இன்றைய பேச்சைத் தொடங்கி வைத்தவர், “சார் இன்னிக்கு மட்டும் காஃபியில சுகர் போட்டுக்கோங்க,” என்றார்.


[0]

முகநூல் பதிவு (10 செப்டம்பர் 2026)