ஓடிடி மேடையில் உலக சினிமா
அனைத்து நாட்டு திரைப்படக் கலைஞர்கள், ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது ஹாலிவுட் திரையுலகின் ‘ஆஸ்கர் விருதுகள்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் ‘அகாடமி விருதுகள்’. 97வது ஆஸ்கர் விழா இந்த மார்ச் 2 அன்று நடந்தது.சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, பெண் நடிகர் ஆகிய ஐந்து விருதுகளை வென்ற ‘அனோரா’ உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அலெக்ஸ் கோகோ, சமந்தா குவான் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள சீன் பேக்கர் படத்தை இயக்கியுமிருக்கிறார். மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட பேக்கர், கடந்த கால, நிகழ்கால, எதிர்காலப் பாலியல் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரிட்டிஷ் அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இப்படத்தின் கதை ஒரு பாலியல் தொழில் பெண் பற்றியதுதான்.
அமெரிக்காவில் ரஷ்ய மக்கள் வாழும் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்த 23 வயது அனோரா ஆடையவிழ்ப்பு நடன – பாலியல் தொழில் விடுதியில் வேலை செய்கிறாள்.. தனது மொழி தெரிந்தவள் வேண்டுமென்று கேட்டு வருகிறான் வான்யா என்ற 21 வயது ரஷ்ய இளைஞன். மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவனான அவன் கேளிக்கை விடுதிகளில் பொழுதைக் கழிப்பவன். ஒரு வாரத்திற்கு 15,000 டாலர் பேரம் பேசி அவனுடைய மாளிகைக்குச் செல்கிறாள் அனோரா. பின்னர் இருவரும் நெருக்கமாகிறார்கள். நெவேடா நகரத்தின் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.
ரஷ்யாவில் இருக்கும் வான்யாவின் பெற்றோர் நிகோலாய்–கலினா திருமணத்தை எதிர்க்கின்றனர். பணபலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள ‘அலிகார்ச்’ எனும் கும்பலைச் சேர்ந்த குடும்பம் அவர்களுடையது (அலிகார்ச் என்பது சோவியத் யூனியன் தகர்ந்து ஆட்சிமுறை மாறியபோது அரசின் சொத்துகளைக் கைப்பற்றி அரண்மனை வாழ்க்கை வாழ்கிற கும்பலுக்கான அடையாளம்).
நியூயார்க்கில் இருக்கும் வான்யாவின் ஞானத்தந்தை டோரோஸ், தனது அடியாட்களான கார்னிக், இகோர் இருவரையும் வான்யாவின் மாளிகைக்கு அனுப்புகிறான். வான்யா ஓடிப் போகிறான். அனோராவை அவமானப்படுத்தும் அடியாட்கள், வான்யா அமெரிக்காவில் நிலையாகக் குடியிருக்க ‘கிரீன் கார்டு’ பெறுவதற்காகத்தான் அவளை மணந்துகொண்டான் என்றெல்லாம் கூறி அவள் மனதைக் கலைக்க முயல்கிறார்கள். அவள் இருவரையும் தாக்கிக் காயப்படுத்துகிறாள் அவர்கள் அவளை அடக்குகிறார்கள். அவளுடைய திருமண மோதிரத்தைப் பறித்துக்கொள்ளும் டோரோஸ், அவளாக விலகிக்கொள்வதற்கு 10,000 டாலர் தருவதாகக் கூறுகிறான். “வான்யாவும் நானும் காதலிக்கிறோம்,” என்கிறாள் அவள். அவனை அவளுடைய முன்னாள் விடுதியில் கண்டுபிடிக்கிறார்கள்.
திருமணம் நெவேடாவில் பதிவாகியிருப்பதால் அது செல்லாது என்று தன்னால் அறிவிக்க முடியாது என நியூயார்க் நீதிமன்றம் கூறிவிடுகிறது. போதையிலும், ரஷ்யாவிலிருந்து வந்துவிட்ட பெற்றோரின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் வான்யா அனோராவைக் கைவிடுகிறான். முதுகெலும்பற்ற அவனையும் அவனுடைய பெற்றோரையும் திட்டுகிற அனோரா வழக்குத் தொடுக்கப் போவதாகக் கூறுகிறாள். “உன்னிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் வழக்குக்கே செலவு செய்ய வைத்துவிடுவேன்,” என்று கலினா ஆணவமாகப் பேசுகிறாள். வேறு வழியின்றி அனோரா விலகல் ஆவணத்தில் கையெழுத்திடுகிறாள். அவளிடம் வான்யா மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிறான் அடியாளான இகோர். தன் மகன் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்கிறாள் கலினா.
அனோராவின் உடைமைகளையும், டோரோஸ் கொடுத்த பணத்தையும் ஒப்படைக்கிறான் இகோர். “மாளிகைக்கு நீ முதலில் வந்தபோது நான் போராடாமல் இருந்திருந்தால் என்னை நீ வன்புணர்ந்திருப்பாய்,” என்று அவள் குற்றம் சாட்ட, அவன் மறுக்கிறான். அவளுடைய வீட்டுக்குக் காரில் அழைத்துச் செல்கிறபோது திருமண மோதிரத்தைத் திருப்பித் தருகிறான். ஏமாற்றம், கோபம் ஆற்றாமை என உணர்ச்சிச் சுழலில் இருக்கும் அனோரா அவனிடம் பாலியலாக நெருங்குகிறாள். பின்னர், அவனுடைய மார்பில் சாய்ந்து அழுகிறாள். உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக, அவளிடம் அடிபட்டிருந்தாலும், அவன் அவளை அணைத்துக்கொள்கிறான்.
பாலியல் விடுதியின் தொடக்கக் காட்சிகள் அதிர வைக்கக்கூடும். அடுத்தடுத்து வரும் திருப்பங்களுக்கு அந்த அதிர்ச்சி தேவைப்படுகிறது. விடுதிச் சூழலை பெருமளவுக்குத் துல்லியத்துடன், அந்தப் பெண்களின் காய வடுக்கள், இயல்பான நடத்தை உட்பட பேக்கர் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார். “எங்களை வைத்துப் பல படங்கள் வந்திருக்கின்றன, விருதுகளும் பெற்றிருக்கின்றன. ஆனால் விருது மேடையில் முதல் முறையாக எங்களுக்கு நன்றி தெரிவித்தவர் பேக்கர்தான்,” என்று பாலியல் தொழிலாளிகள் நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்கள்.
தற்காலிக வசதிகள் வாய்த்தாலும் இவர்களின் வாழ்க்கை எளிதில் மாறிவிடுவதில்லை, பணக்காரக் கும்பல்களின் புத்தியும் போய்விடுவதில்லை என்று திரைமொழியில் சொல்லப்படுகிறது. அனோராவின் அவலம், வான்யாவின் துரோகம் இவற்றோடு, அடியாளானாலும் அரண்மனைக் குடும்பம் அல்லாத எளியவனுக்குள் இருக்கும் நேயத்தைக் காட்டியிருப்பதில் ஒரு வர்க்கப் பார்வையும் வெளிப்படுகிறது.அனோராவாக மிக்கே மேடிசன் சிறந்த நடிகைக்கான விருது பெற்றதன் பொருத்தத்தை நிறுவியிருக்கிறார். வான்யாவாக மார்க் ஐடெல்ஷ்டைன், ஒளிப்பதிவாளர் ட்ரூ டேனியல்ஸ், இசையமைப்பாளர் மேத்யூ ஹீரான் ஸ்மித் உள்ளிட்ட கலைஞர்களும் இணைந்து, படத்தைத் தொகுத்தும் அளித்திருக்கிற சீன் பேக்கரின் புனைவுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
[0]
நன்றி: செம்மலர் ஏப்ரல் 2025 இதழ்