Wednesday, 1 July 2026

மக்கள் மனதில் வாசம் செய்யும் மண்வாசனைப் படைப்பாளி



ரங்கத்திரை உயிர்ப்புற்றதும் "என் இனிய தமிழ் மக்களே..." எனக் கூப்பிய கரங்களுடன் கனிவும் கம்பீரமும் கலந்து விளிக்கும் அந்தக் குரல், குறிப்பிட்ட கதைக் கருவை மட்டுமா சொன்னது? “இந்த நிலைமைகளைப் பற்றி நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்,” என்ற வேண்டுகோளையும் அல்லவா விடுத்தது! அப்படிச் சொல்வதற்கும் மக்கள் கேட்பதற்கும் நிறைய வைத்திருந்தார் “பாசத்திற்குரிய பாரதிராஜா” 


தேனி அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17இல் பெரிய மாயன்–கருத்தம்மாள் மகன் சின்னசாமியாகப் பிறந்து, சென்னை  திரைநகரத்தில் இயக்குநர் இமயமாகப் படர்ந்து, 2026 ஜூன் 10இல் விடைபெற்றவர் தமிழ் சினிமாவுக்கு விட்டுச்சென்றவை தனித்துவப் பங்களிப்புகள். புகழஞ்சலி செலுத்தும் எல்லோருமே குறிப்பிடுவது, தமிழ் சினிமாவைப் படப்பிடிப்புக் கூடங்களின் வெப்ப வெளிச்சத்திலிருந்து விடுவித்து  வயல் வரப்புக் குளுமை வழியாக கிராமத்துக்குள் இட்டுவந்ததைத்தான். காட்சிப் படிமங்களில் மட்டுமல்லாமல், கதாபாத்திரங்கள் நடமாடுவதில் நிலவிய நாடக மேடைக்குரிய நடைகளிலும் மாற்றத்திற்கு வழியமைத்தார்.


திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டும் உலகளாவிய சில முன்னோடிகள்: தனி மனித இயல்புகளையும் வர்க்க முரண்களையும்  மண் மணம் தோய்த்து ஜப்பான் திரைமொழியை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் அகிரா குரோசாவா. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலிய சினிமாவை வீதிகளுக்குக் கொண்டுவந்து “நியோ ரியலிசம்” சித்தரிப்புக்கு முன்னுரை எழுதியவர் விட்டோரியோ டீ சிகா. உலக அரங்குகள் இந்திய சினிமாவுடன் இந்தியர் வாழ்வையும் பேசவும் வைத்தவர் சத்யஜித் ரே. ஸ்வீடன் படங்களில் காதல் வஞ்சகம் மரணம் ஆன்மீகம் ஆகியவற்றை மெய்யியல் மேடையேற்றியவர்  இங்மார் பெர்க்மேன். அமெரிக்காவின் குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் வாழ்வோரது பண்பாடுகளைப் பதிவு செய்து “வெஸ்டர்ன் சினிமா” என்ற வகைப்பாட்டுக்கு வழியமைத்தவர் ஜான் ஃபோர்ட். அவர்களது ஆக்கங்களில் உள்ள இக்கூறுகளை பாரதிராஜா படைப்புகளில் காணலாம்.


ஊரில் ஒரு சுகாதார ஆய்வாளராக வேலை முறை வாழ்க்கையைத் தொடங்கியவர்,  நாடகங்களில் தொடர்ந்தவர், நடிப்பு ஆசையுடன் கோலிவுட் வளாகத்தில் நுழைந்தவர், இயக்குநராகப் பரிணமித்தார். மிகு ஒப்பனையற்ற அசல் முகங்களை கேமரா முன்  உலவவிட்டார். பாடல் காட்சிகளில் மட்டும் படம் பிடிக்கப்பட்ட வயல் வரப்புகளைத் தாண்டி கிராமத்துக்குள் கேமரா பயணிக்கச் செய்தார். பல கிராமங்களில் படப்பிடிப்புக்கென்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன –அதற்கு “கிளாப்” அடித்தவர் பாரதிராஜாதான்.


சமூகத்தில் புரையோடிய சாதிப் போலிமையின் கன்னத்தில் அறைந்தவர், அழகுப் பதுமைகளைப் புதுமைப் பெண்ணாய் சீறியெழ வைத்தவர், முதலாளியம் வளர்த்துவிட்ட சமூக அமைப்பில் தனி மனிதர்களுக்குள் குற்றமுறு உளவியல் புகுந்திருப்பதை வெளிப்படுத்தியவர், அரசியல் கள வஞ்சகங்களை அம்பலப்படுத்தியவர், அரசாங்க அலுவலக அலட்சியங்கள் பற்றிய பொதுமக்கள் ஆதங்கத்தை ஒலித்தவர், கிராமம் நகரம் கடலோரம் என ஊர்களின் உட்புறம் இன்னமும் இன்னமும் ஊடுருவிச் செல்ல முன்வாசல் அமைத்தவர்… அனைத்தும் உண்மை.


கூடுதலாக எனது  ஓர் அவதானிப்பு – வழக்கமான தமிழ் சினிமாவுக்கான பாதையை மட்டுமல்ல, மாறுபட்ட சினிமாவுக்கான போக்கையும் மாற்றியவர். சிறப்புத் திரையிடல்களில் மிகச் சில பேர் மட்டுமே பார்த்துச் சிலாகித்தால் போதுமென்ற கண்ணோட்டக் குறுக்கலையும் தகர்த்தவர். கதைக் கூர்மையும் கலை நேர்மையும் உள்ள படைப்புகளுக்காகத் திரையரங்குகளுக்கு வெகுமக்கள் திரளை ஈர்க்க முடியுமென்று நிறுவியவர்.


1977இல் புதிய அழகியலால் அவரைக் கவனிக்க வைத்த ‘16 வயதினிலே’ தொடங்கி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘நிறம் மாறாத பூக்கள்’ மலர்ந்து, ‘கிழக்கே போகும் ரயில்’ தடதடத்து ஓடி, யார் தடுத்தாலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்று கால் நனைத்து, ‘சிவப்பு ரோஜாக்கள்’ மணந்து, ‘டிக் டிக் டிக்’ ஒலித்து, ‘வேதம் புதிது’ வாசித்து, ‘முதல் மரியாதை‘ செலுத்தி, ‘கடல் பூக்கள்’ தூவி, ‘கடலோரக் கவிதைகள்’ எழுதி, ‘புதுமைப் பெண்’ புறப்பட்டு, தன் தாயின் பெயரை எல்லோருமாக ‘கருத்தம்மா’ என உச்சரிக்க வைத்து, 2020இல் நிறைவாக உறுதிப்படுத்திய ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரையில், இடையிடையே தெலுங்கில் நான்கு, இந்தியில் ஒன்று உள்பட, மொத்தம் 46  முத்திரைகள்.


முதல் படைப்பும் பெருமளவு பங்களிப்பும் தமிழில்தான் என்றாலும் முதன்முதலில் சிறந்த மாநிலமொழிப் படத்துக்கான தேசிய விருது பெற்றது தெலுங்கில் குல விவக்‌ஷலனு கண்டிஞ்சின (சாதிப் பாகுபாடுகளைச் சாடிய) ‘சீதாகோகா சிலுகா’ (1981).  அதன் பின் ‘முதல் மரியாதை’ (1985), ‘வேதம் புதிது’ (1987), ‘கருத்தம்மா’ (1994). ‘அந்தி மந்தாரை’ (1996) , ‘கடல் பூக்கள்’ (2001) ஆகியவையும் தேசிய விருதுகள் பெற்றன. ‘16 வயதினிலே’ (1977), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘மண்வாசனை’ (1983) ஆகியவை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன.


எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு 1981இல் அவருக்குத் தனது உயரிய ‘கலைமாமணி’ விருது வழங்கியது. இந்திய அரசின் நான்காவது உயரிய குடிமை விருதாகிய பத்மஸ்ரீ 2004இல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான  ஒன்றிய அரசு சார்பில், குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமால் வழங்கப்பட்டது.  ‘ஃபிலிம் ஃபேர்’ பத்திரிகை முதல்முறையாக உருவாக்கிய சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல விருதுகள் வந்து சேர்ந்தன. 2020இல் லண்டன் நகரில் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில், ‘பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் இணைந்து  உலக தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்புக்கான சிறப்பு விருதினை வழங்கின. 


இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவர் தேர்ந்தெடுத்த கதைக் கருக்களும், உருவாக்கிய கதை மாந்தர்களும்,  வெளிப்படுத்திய கலை வேலைப்பாடுகளும்தான். ஒவ்வொன்றையும்  பேசலாம் என்றாலும் ஒரு சோற்றுப் பதமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

   

அழகியலோடு உள்ளடக்கப் புரட்சி


தமிழ் சினிமா வரலாற்றை பாரதிராஜாவுக்கு முன்னும் பின்னும் என இரு பருவமாகப் பிரித்த படம்தான் புதியதோர் அழகியல் பறைசாற்றலாக வந்த '16 வயதினிலே'.   நடிப்பவர்களுக்கு ஏற்றப்பட்ட அளவிலா ஒப்பனைப் பளபளப்புக்கு  நிறுத்தற்குறி போட்டுவிட்டு, வியர்வைப் பிரதிபலிப்போடு மயிலு (ஸ்ரீதேவி), சப்பாணி (கமல்), பரட்டை (ரஜினிகாந்த்) என எளிய மனிதர்களின் நேர்மறை, எதிர்மறைத் தன்மைகளை மேற்பூச்சு இல்லாமல் திரையில் படியெடுக்கச் செய்தார். நகரத்திலிருந்து ஊடுருவி அத்துமீறியவனை மயிலு சொன்னபடி சப்பாணி “பளார்னு” அறையும் இடத்தில் என்னென்ன அதிர்வுகள்!


திகில் உளவியல்


பலவண்ணத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் கச்சிதமாகக் கையகப்படுத்தினார் பாரதிராஜா. கிராமியக் கதைகளில்தான் வல்லுநர் என்று எல்லோரும் நினைத்திருக்க “சிவப்பு ரோஜாக்கள்” பதியம் போட்டார். நகரமும் நகரம் சார்ந்தவர்களும் நடமாட, இளம் பெண்களை இரையாக்குகிறான் ஒரு குற்றவெறியன். அவனை நாயகன் வீழ்த்துவதான  கதையல்ல, கதை நாயகனே அவன்தான்! அவனை (கமல்) நாயகி (ஸ்ரீதேவி) எதிர்கொள்ளும் திருப்பங்களுடன் திகிலை எகிற வைத்த படம்.


ஒளிப்பதிவு, இசைப்பதிவுடன் இதர தொழில்நுட்பங்களும் சரிவிகிதத்தில் அமைந்திருந்த அந்தப் படத்தை நண்பர்கள் குழுவாகச் சென்று பார்த்தோம். ஒருவன் கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது: “டேய், நம்பவே முடியலையே… தமிழ்லேயா இப்படியெல்லாம் படமெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!”


மதக் கரை மீறும் காதல் அலை

மதக் கடலின் கரை கடக்கும் காதலை ஆழமான சமூகக் கேள்விகளுடன் முன்வைத்த திரை ஓவியம் ‘அலைகள் ஓய்வதில்லை’.  நட்சத்திரங்களாக உருவான கார்த்திக், ராதா இருவரையும் அறிமுகப்படுத்திய படம். அத்துடன், அது வரையில் கவர்ச்சிப் பிம்பமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சில்க் சுமிதா, கணவனின் தடைகளை மீறி அந்தக் காதலுக்குக் கைகொடுக்கும் அண்ணியாக வந்திருப்பார்.


'வேதம் புதிது'  ஆழமாக ஊன்றியிருக்கும் சாதிப் பாகுபாட்டையும், அதைக் கெட்டிப்படுத்தும் போலி ஆன்மீகத்தையும் கூண்டில் நிறுத்தியது. வேதம் புதிது கண்ணன் என்றே அடையாளம் பெற்ற எழுத்தாளரின் “தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா” என்ற உரையாடல் எக்காலத்திற்கும் எந்தச் சமூகத்திற்கும் பொருந்துவது. ஊரகங்களில் கரடுதட்டிக் கிடக்கும் நிலவுடைமைத்துவத்தின் அதிகார அடுக்குகளைத் தோண்டியெடுத்தது ‘புது நெல்லு புது நாத்து’. நெப்போலியன், சுகன்யா ஆகிய திறன் மிக்க கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.

கல்லானாலும் கணவன் எனும் புனித போதனைகளைக் காலாவதியாக்கியது ‘புதுமைப் பெண்’. குற்ற வழக்கிலிருந்து கணவனை மீட்பதற்கு ஒரு பெண் நடத்துகிற போராட்டம் வெற்றி பெறுவதைத் திரையரங்கில் கண்டு மகிழ்ந்த மக்கள், அவளிடம் அவன் கேட்கிற கேள்வியால் அவளைப் போலவே துடித்துப் போவார்கள், அவள் எடுக்கிற முடிவை அங்கீகரிப்பார்கள். இயக்குநரின் ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமாகியிருந்த ரேவதி இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துத் தன் நட்சத்திர ஆளுமைக்கு முன்னுரை எழுதியிருப்பார்.

முழு மரியாதை

பாரதிராஜா படம் என்றாலே கருத்தும் கலையும் கலகலப்பும் சமநிலைக் கலவையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை மேலும் வலுப்படுத்தியது ‘முதல் மரியாதை’.  வீட்டில் நிறைந்த செல்வம், ஊரில் மிகுந்த மதிப்பு இருந்தாலும், மலைச்சாமி தனது குடும்பத்தில் மனைவி பொன்னாத்தாளின் அவமதிப்புக்கே உள்ளாகிறார். அன்பிற்காக ஏங்கும் அவருடைய உள்ளத்தில் ஆதரவை இசைக்கிறாள் படகோட்டிப் பெண் குயிலு.  நடுத்தர வயதைத் தாண்டி ஏற்படும் உறவுக் கதையின் ஊடாக, வர்க்க  வேறுபாட்டு ஆணவத்துக்குப் பாலின வேறுபாடு இல்லை என்ற நிலவரம் நுணுக்கமாகப் பதிவாகியிருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, மிகை என்ற விமர்சனத்துடன் குறிப்பிட்ட வகை நடிப்புகளிலேயே கட்டி வைத்திருந்த சங்கிலியிலிருந்து விடுதலை செய்த படமாகவும் அடையாளம் பெற்றது.

மாறுபட்ட உச்சரிப்புகளுடன் வில்லன் கதாபாத்திரங்களிலேயே அறியப்பட்டவராக இருந்த சத்யராஜ், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் கதாநாயகனாகப் படியேறிய படம்  ‘கடலோரக் கவிதைகள்’. கடலோரக் கிராமத்தைச் சுற்றிவந்த கேமரா, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான காதலைக் காட்டியது. கல்லையும் பஞ்சாக மாற்றும் வலிமை காதலுக்கு இருப்பதை ரவுடி சின்னப்ப தாஸ், ஆசிரியர் ஜெனிஃபர் (ரேகா) கதையாகக் கூறுகிறது.

பெண் சிசுக்கொலையிலிருந்து தப்பிப் பிழைத்து மருத்துவராக வளர்ந்த நாயகி, அதற்கு எதிரான இயக்கமாகவே மாறுகிறாள் ‘கருத்தம்மா’ படத்தில். ஒரு தொண்டனின் விசுவாசத்தைத் தனது பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு தன்னலத் தலைவனின் கயமையைக் கதையாக்கி முதலாளிய அரசியலின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது ‘என் உயிர்த் தோழன்’.

பதிவான தடங்களில் பின்தங்கிவிடாமல்  அவர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்ததற்கு இன்னொரு சாட்சி  2008ல் வந்த ‘பொம்மலாட்டம்’. ஒரு திரைப்பட இயக்குநர் தனது நாயகிப் பெண்ணை ஊரார் கண்ணிலிருந்து மறைக்க முயல, தொடரும் நிகழ்வுகள் குற்றமயமாகின்றன. வாழ்க்கைக்  கயிறுகளில் பொம்மைகளாகத் தனி மனிதர்கள் ஆட்டுவிக்கப்படும் வேடிக்கையைச் சித்தரித்த புலனாய்வுக் கதைப்படம் அது. இந்தித் திரையுலகின் நானா படேகர் அதில் இயக்குநராக நடித்திருப்பார். இந்தப் படம் பாரதிராஜாவின் நவீன கலை நுட்பக் கையாளுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

2013ல் ‘அன்னக்கொடி’, கள்ளச் சாராய அரசியலும், அதைவிட மயக்கம் மிகுந்த சாதி ஆணவமும் ஒரு காதல்கொடியை அறுக்க வெறிகொண்டு அலைவதைக் காட்டியது. 

2020இல் இயக்குநரின் இறுதிப்படமாக வந்தது ‘மீண்டும் ஒரு மரியாதை’. முந்தைய படங்களில் கிராமம், நகரம், கடலோரம் என நிலப்பரப்புகளை மாற்றியதன் தொடர்ச்சியாக இதில் அவர் வெளிநாட்டிற்கே சென்றிருப்பார். மையப் பாத்திரத்தில் அவரே நடித்திருப்பார். லண்டனில் ஆதரவற்ற துயரத்துடன் வாழ்கிறார் ஒரு முதியவர்.  காதலில் ஏமாற்றப்பட்டதால் இளமையிலேயே தனிமையின் மூலையில் ஒதுங்குகிறாள் ஒரு பெண். இருவருக்கும் உருவாகும் உறவில் ஒரு கவித்துவ அழகியல் இருக்கும்.

இந்தப் படம் கூறும் முதுமைக்காலத் தனிமைத் துயரம் திரைக்கு வெளியேயும் பாரதிராஜாவைக் கவ்விக்கொண்டது. குறிப்பாக, மகன் மனோஜ் இதய அறுவை சிகிச்சை பலனளிக்காத நிலையில் சென்ற ஆண்டு மார்ச் 25 அன்று தனது 48வது வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து மனதளவில் மிகவும் வலுவிழந்தவரானார். மிகுந்த அன்பு கொண்டிருந்த, திரையுலகிலும் தனது வாரிசாக உருவெடுக்க வேண்டுமென்ற ஆசையுடன், ‘தாஜ்மகால்’ (1999) படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திய மகனின் அகால மரணமும் வேறு சில குடும்பச் சூழல்களுமாக அவர் ஆறாத வேதனையிலேயே மூழ்கியிருந்தார்.

கடைசிப் படத்தில் முதியவருக்குத் துணையாகும் நாயகியைப் போல், கடைசிக் கட்டத்தில் இயக்குநருக்குத் தெம்பூட்டும் வல்லமை அவரது கலைக்கு மட்டுமே இருந்தது. இன்னொரு படத்தை உருவாக்கும் கனவும் அவருக்கு இருந்தது, அது நிறைவேறும் வரையில் இளையவர்களின் இயக்கத்தில் சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

களப் போராளியாக

திரைஒளியில் முற்போக்குக் கருத்துகளை வெளிப்படுத்தியது போலவே, பொதுவெளியிலும் நியாயங்களுக்காகப் போராட்டக் களமிறங்கினார் பாரதிராஜா. 2002இல், கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை வழங்க் மறுத்தபோது, நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கில் தமிழ்த் திரையுலகினரைத் திரட்டி, கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி அவர் நடத்திய போராட்டம் முக்கியமான பேசுபொருளானது.

இயற்கைச் சமநிலைப் பாதுகாப்பு அக்கறையுடன் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான நெடுவாசல் கிளர்ச்சி முதலியவற்றில் முன்னின்றார். 2009இல் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட உயரிய 'பத்மஸ்ரீ' விருதைத் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். 


2018இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது 13 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, அன்றைய அதிமுக அரசின் கெடுபிடிகளை மீறி அங்கே சென்று மக்களைச் சந்தித்தார். “தன் சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்துவது என்ன மாதிரியான ஜனநாயகம்? துப்பாக்கிக் குண்டுகளால் மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது" என்ற அவரது ஆவேச முழக்கம் ஊடகங்களில் ஒலித்தது. 


அதற்கு முந்தைய ஆண்டில் சென்னை  மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்பதற்காக தன்னெழுச்சியாக இளைஞர்கள்த் திரண்டிருந்த இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து நின்றார். 


2018இல் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், களஞ்சியம், கௌதமன், லெனின் உள்ளிட்ட சக கலைஞர்களின் பங்களிப்போடு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அதன் தொடக்கவிழாவில், “இது சினிமா சங்கம் அல்ல. தமிழர்களின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைக் காப்பதற்கும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்குமான அசல் மக்கள் இயக்கம்" என்று பறைசாற்றினார். இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக்க முயற்சி உள்ளிட்ட மத்திய அத்துமீறல்களுக்கு எதிரான தமிழ்த் திரையுலகின் ஆவேசக் குரலாக அந்த மையம் ஒலித்தது.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்று, நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்காகவும் திரையுலகத் தொழிலாளர் நலன்களுக்காகவும் பாடுபட்டார். திரைப்படங்கள் வெளியாவதில் நியாயமற்ற முட்டுக்கட்டைப் பிரச்சினைகள் வந்தபோது, கலைக்குடும்பத்தின் மூத்தவராகத் துணை நின்றார்.


தத்துவத் தளம்


இந்தப் போராட்டக்குணம், அவர் மதித்த மார்க்சியத் தத்துவத்திலிருந்து வந்தது என்றும் கூறலாம். தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளின் அழைப்புகளுக்கு அவர் மதிப்பளித்ததன் பின்னணியும் இதுவே.


‘செம்மலர்’ ஏட்டிற்காக அவரை நேர்காணல் செய்வதற்கென சென்னை பார்ஸன் வளாகத்தில் அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அறையில் இருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தபோது செங்கொடி இயக்கத்தின்பால் அவருக்கிருந்த அன்பையும் மதிப்பையும் புரிந்துகொள்ள முடிந்தது. நேர்காணலில் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்: “கிராமியக் கதைகளைச் சொல்வதில் புதிய அழகியல் அனுபவங்களைக் கொடுக்கிறீர்கள். அவ்வாறு அழகாகச் சித்தரிக்கிறபோது நிலவுடைமைச் சமூக அமைப்பும் அதன் நடைமுறைகளும் பெருமைப்படுத்தப்படுகின்றனவா?”


தனக்கே உரிய அடர் குரலில் அவர் பதிலளித்தார்: “இல்லை. நிலவுடைமைச் சமூக அமைப்பின் சிறுமையைத்தான், அது அழுகிக் கிடப்பதைத்தான் என் வழியில் காட்டுகிறேன்.” இந்த பதிலின் நேர்மைக்கு அவருடைய படங்களே  சாட்சி.


கலைக்கூட்டணியாக அவருடன் பயணித்த கதையாளர் ஆர். செல்வராஜ், இசைஞர் இளையராஜா, ‘நிழல்கள்’ படத்தில் அறிமுகமான கவிஞர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் நிவாஸ், தன்னுடைய கண் என்று அவரே கூறிய கண்ணன், எழுத்தாளர் நடிகர் இயக்குநர் கே. பாக்கியராஜ் உள்ளிட்டோரின் பங்களிப்புகள் குறித்தே தனித்தனியாக எழுத முடியும். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், முத்துலிங்கம், நா.காமராசன், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகிய ஆளுமைகளின் பாடல்களும் அவர் படங்களுக்குத் துடிப்புச் சேர்த்தன. இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், தேவேந்திரன், ஜீ.வி. பிரகாஷ் மற்றும் பல்வேறு துறைகளிலும் புதியவர்களோடு இணையாக நின்று இயக்கியிருக்கிறார். 


பாரதிராஜா அளித்துள்ள மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு படைப்பு  இருக்கிறது. தன் இனிய தமிழ் மக்களுக்குப் புத்துணர்ச்சித் திரைப்படங்களை வழங்கி, அத்தகு ஆக்கங்களில் ஈடுபடும் லட்சியத்தோடு புறப்படுகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டி, நட்சத்திரப் புகழ் மக்களுக்கான போராட்டங்களிலிருந்து விலக்கி வைத்துக்கூடாது என்றும் வழிகாட்டி – ஒரு நிறைவான கலைவாழ்வுக்கு முன்னுதாரணம் என்ற படைப்புதான் அது.


[0]


செம்மலர்ஜூலை 2026 இதழில் எனது கட்டுரை


Wednesday, 17 June 2026

வீரம் எனப்படுவது யாதெனின்



வீரம் பற்றிய ஒரு கருத்தரங்கிலும் அதைத் தொடர்ந்த கலந்துரையாடலிலும் பங்கேற்கிற வாய்ப்புக் கிடைத்தது. சிறப்புரையாளர் வரலாற்று ஆவணங்களிலிருந்தும் இலக்கியப் படைப்புகளிலிருந்தும் ஆதியில் காட்டு விலங்குகளை வென்று அடக்கியது முதல் போர்க்களங்களில் எதிரிகளோடு பொருதியது வரையில் விரிவான எடுத்துக்காட்டுகளை முன்வைத்தார். உண்மையிலேயே அந்தத் தகவல்கள் மெய்சிலிர்க்கச் செய்தன, அவற்றைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்ட மெனக்கிடல்கள் வியந்து பாராட்ட வைத்தன.


அதே வேளையில் வீரம் என்ற கருத்தாக்கம் பற்றிய ஒரு சிறிய கருத்துப் பரிமாற்றத்தையும் அங்கே நிகழ்த்த முடிந்தது. நிகழ்வின் மையப் பொருள் அது அல்ல என்பதால், சில மாற்றுக் கருத்துகளைக் கேள்விகளாக மட்டும் வெளிப்படுத்தினேன். உரையாளரும், அந்தக் கோணத்தில் அதுவரை யோசிக்கவில்லை எனத் தெரிவித்து, நிச்சயமாக அது விரிவாக விவாதிக்க வேண்டிய ஒன்று  என்று கூறினார். அந்த மாற்றுக் கருத்துகளை, தோழர்களின் விவாதத்துக்காக தமுஎகச சிறப்பு மலராகிய இந்த அரங்கில் முன்வைக்கிறேன். 



பொதுவாக உலகம் முழுக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் ‘வீரம்’ என்ற சொல் எப்போதும் தசை வலிமையோடும், ஆயுதங்களைச் சுழற்றுவதோடும், எதிராளியை வீழ்த்துவதோடும், முடிந்தால் கொன்றுவிடுவதோடும் தொடர்புபடுத்தியே பதிக்கப்பட்டிருக்கிறது.  வரலாற்று அத்தியாயங்களுக்குள் ஒரு பின்னோக்கிய பயணம் மேற்கொண்டால்,  வீரம் ஒரு நிலையான தத்துவமல்ல என்று புலப்படும். அது அந்தந்தக் காலத்தின் மாறிய உழைப்பு முறைகளோடும், உற்பத்தி  உறவுகளோடும் கலந்து உருவான லட்சியமாக இருந்து வந்திருப்பது தெரிய வரும். குறிப்பாக, ஆண்ட வர்க்கங்கள் தங்களின் ஆளுமையை நிறுவிக்கொள்வதற்காக, ஆளப்பட்ட வர்க்கங்களின் மேல் வீரத்தைச் சுமத்தினார்கள் என்றும், அந்தச் சொல்லுக்கு எவ்வாறெல்லாம் உணர்ச்சியூட்டிய பொருள்களைப் புகுத்தினார்கள் என்றும் புரியவரும்.


உடலின் தசை வலிமையைக் கொண்டாடும் ஆதிக்கப் பார்வையிலிருந்து விலகி,  அறத்தின் குரலாக வீரம்   உருமாறியிருக்கிற பரிணாம வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே இந்த உரையாடலின் நோக்கம். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டக் களத்திலும் மனித உரிமைத் தளத்திலும் செயல்படுவோருடன் சேர்ந்து நிற்கிற ஊடகவியலாளர் என்ற முறையில் இந்தச் சுருக்கமான பகிர்வு. ஆய்வுப் புலத்தில் ஆழமாகவும் அகலமாகவும் இயங்குவோர் இதனை இன்னும் பல மடங்கு அடர்த்தியாக, ஆதார வலிமையோடு ஆக்கித் தருவார்களானால் அதுவொரு பெரும்பங்களிப்பாக அமையும். 


ஆதி மனிதர் போராட்டம்


மனித வரலாற்றின் தொடக்கப் புள்ளியில், வீரம் என்பது எவ்வகையிலும் பெருமையடித்துக்கொள்வதை, அல்லது,  பிறரை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் அன்றாடப் பசிக்காக வேட்டையாடி உணவைத் தேடவும், அதே பசியோடு தங்களை வேட்டையாட வரும் விலங்குகளிடமிருந்து தம்மையும் தம் கூட்டத்தையும் காத்துக்கொள்ளவும் இயற்கையோடு போராட வேண்டியிருந்தது. அது உயிர் பிழைப்பதற்கான அடிப்படைத் தேவை.  அங்கு விலங்கோடு மோதியது  வலிமையையும் துணிவையும் காட்டுவதற்காக அல்ல, மாறாக தாமும் தம் இனமும் அழிந்துவிடாமல் பூமியில் தக்கவைத்துக் கொள்வதற்காகவே. அது இயற்கையான, இன்றியமையாத வாழ்க்கை முறை.


அடிமைச் சமூக குரூரம் 


சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்து, அடிமை முறை கால்பரப்பிய காலத்தில் வீரத்தின் முகம் குரூரமாக மாற்றப்பட்டது. ரோம் போன்ற அடிமைச் சமூகங்களின் கொடூர அடையாளமான 'கிளாடியேட்டர்' மோதல் மைதானங்கள் இதற்கு சாட்சி. விலங்குகளோடும், தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டு சாகும்படி அடிமைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மனிதர்கள் சரிவதைக் கண்டு, மாட மாளிகைகளில் அமர்ந்திருந்த ஆண்டான்கள் மதுக்கோப்பைகளோடும், மங்கையர் உடனிருப்போடும் ரசித்து மகிழ்ந்தனர். இங்கு அடிமைகளின் வேறு வழியற்ற  போராட்டத்திற்கு வீரம் என்று ஆளும் வர்க்கத்தால் பெயரிடப்பட்டதே தவிர, உண்மையில் அது உல்லாசத்திற்காக உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கி வேடிக்கை பார்த்த அதிகாரத்தின் வக்கிரமே அன்றி வேறில்லை.


கட்டாயப் பலியாடுகள்


நிலவுடைமைத்துவ மன்னராட்சிக் காலத்தில், அரசர்களின் பேரரசு எல்லை விரிவாக்கக் கனவுகளுக்காக எளிய குடிமக்கள் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்பட்டனர். வீட்டுக்கு ஒரு ஆண் வந்தாக வேண்டும் என்ற கட்டளைகளுக்கு உணர்ச்சிகரமாக கதைகளால் புனிதம் ஏற்றப்பட்டது.  போர்க்களம் சென்றாக வேண்டிய நிலைமை இங்கு தனிமனித விருப்பத்தால் உருவானதல்ல; மாறாக, மறுத்தால்  நடுவீதியில் கழுத்து வெட்டப்படும் அல்லது மரணமே மேல் என எண்ண வைக்கும் கொடூரமான  சிறைவாசம் என்ற அரச கட்டளைக் கட்டாயத்தால் விளைந்தது. 


அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்களின் பேராசைக்காக, முகமறியா இரு நாட்டுச் சாமானியர்கள், தனக்கும் எதிரே வருபவனுக்கும் என்ன சண்டை என்றே அறியாதவர்களாகக் போர்க்களத்தில் மோதி மாண்டனர். அதற்காக, எதிரியின் வாளால் குத்துப்பட்டது மார்பிலா முதுகிலா என்று தாய் தேடுகிற உணர்ச்சிக் காட்சிகள் புனையப்பட்டன. 


அதிகாரத்தின் சதுரங்க ஆட்டத்தில் பலியாக்கப்பட்ட எளியோரின் இந்த வலுக்கட்டாயச் சாவுகளுக்கு ஆளும் வர்க்கம் 'வீர மரணம்' என்று மகுடம் சூட்டியது. மாண்டவர்களின் அடுத்த தலைமுறையையும் போருக்குத் தள்ள அந்த மகுடத்தைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.


நவீன ராணுவம்


பிற்காலத்தில் உருவெடுத்த நவீன  ராணுவச் சேவையிலும் இதே நிலைமை நுட்பமான வடிவில் தொடர்கிறது. போர்க்களத்தின் அசாதாரணச் சூழலில், எல்லைகளைக் காக்கும் துணிவோடு நிற்கும் தனிமனிதர்களின் மனநிலை மதிக்கத்தக்கதே. பனி சூழ் மலைச் சிகரங்களில் இயற்கை, எதிரிப்படை இரண்டின் தாக்குதல்களும் எந்த வடிவத்திலும் வரும் என்ற புரிதலுடன் காவல் நிற்பவர்களின் மனத்துணிவு எளிமையானதல்ல.


ஆனால், உலகளாவிய சந்தை ஆக்கிரமிப்பு சார்ந்த அரசியல் பகடை நகர்த்தல்களுக்காகவும், ஆயுத வியாபாரிகளின் தணியாத லாபத் தாகத்திற்காகவும், அந்தந்த நாடுகளின் எதேச்சதிகார அரசியல் தலைமைகளின் சுயநலக் கணக்குகளுக்காகவும் யாரையோ சுட்டுக் கொல்ல வேண்டிய – அல்லது யார் மீதோ டிரோன்களை ஏவ வேண்டிய கட்டாயங்களுக்கு இன்றைய படைச் சிப்பாய்கள் தள்ளப்படுகிறார்கள். தங்களுக்குள் எந்தப் பகையும் இல்லாத எளிய மனிதர்கள், சீருடை அணிந்துகொண்டு தங்களுடைய அதிகாரிகள் அல்லது அரசுத் தலைவர்கள் ஆணையிட்டதற்காகக் கொன்று குவிப்பது எப்படி உண்மையான வீரமாகும்? இந்தக் கேள்வி இன்று உலகெங்கும் எழுகிறது. உண்மையில் இப்படிக் கேட்பதில் இருக்கிறது வீரம்.


மனசாட்சி வீரம்


இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், இன்றைய நவீன உலகில் வீரத்திற்கான வரையறை முற்றிலும் மாறுகிறது. எதேச்சதிகார அரசுகளின் அநீதியான போர்களை நிராகரிப்பதும்,  படைகளில் சேர மறுப்பதும் இன்றைய காலத்தின் மகத் துணிச்சலான செயலாகின்றன. குறிப்பிட்ட வயதில் கட்டாய ராணுவ சேவை இன்றும் பல நாடுகளில் உயிரோடு இருக்கிறது. அந்த நாடுகளில், ராணுவத்தில் சேரவும் பிற நாட்டு மக்களைக் கொல்லவும் மனச்சான்றின்படி மறுப்பது சமகாலத்தின் பேரறம். இத்தகைய அறத்துணிவிற்காக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போர் பலர். அவர்கள் வெளிப்படுத்தியது வீரம். அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி சிறை வாயில்கள் முன் கூடி ஆர்ப்பாட்டம் செய்து குரலெழுப்புவதும் இன்றைய உண்மையான அற வீரம்.


உண்மையே ஒரு வீரமாய்


வீரம் பற்றிய புகழ்பெற்ற ஒரு குட்டிக்கதை உண்டு. இரு பெரும் நாடுகளின் அரசுத் தலைவர்கள் விருந்தினர்களாகச் சந்திக்கிறார்கள். எந்த நாட்டின் படையினருக்கு உண்மையிலேயே வீரம் அதிகமாக இருக்கிறது என்று அவர்களுக்குள் விவாதம் ஏற்படுகிறது. ஒருவர் தன் படையாள் ஒருவரை வரவழைத்து மாளிகையின் உச்சியிலிருந்து தரையில் குதிக்கச் சொல்கிறார். அவரும் அதே போல் குதித்து மடிகிறார். “பார்த்தீரா என் ஆளின் வீரத்தை” என்று அந்தத் தலைவர் கேட்கிறார். இந்தத் தலைவர் தன் படையாளை வரவழைக்கிறார். அதே போல் மாளிகை உச்சியிலிருந்து குதிக்கச் சொல்கிறார். அவரோ, “தலைவரே, எதற்காக அப்படி மேலே சென்று குதிக்க வேண்டும்,” என்று கேட்கிறார். அவரைப் போகச் சொல்லிவிட்டு, “ஆணையிட்டது நான்தான் என்றாலும் என்னிடமே கேள்வி கேட்டாரே,  அதுவல்லவா வீரம்,” என்று இந்தத் தலைவர் கேட்கிறார். இந்தக் குறுங்கதையில் பெரும் செய்தி இருக்கிறதல்லவா?


ஆயுதங்கள் சத்தமிடும் போர்க்களங்களை விட, இன்று சித்தாந்த ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் கார்ப்பரேட்-அதிகார பீடங்கள் தொடுக்கும் போர்கள் மிக ஆபத்தானவை. இத்தகைய அதிகார பீடங்களுக்கு உவப்பில்லாத உண்மைகளை நெஞ்சுறுதியோடு உலகின் முன் உரக்கப் பேசுவதுதான் இன்றைக்கு வீரம். தடையாணைகளுக்குக் கட்டுப்படாமல் மறுநாளைய ஒரு போராட்டத்திற்காக நள்ளிரவில் தெருக்களில் சுவரொட்டிகளை ஒட்டுகிற எளிய தொண்டர்களிடம் இருக்கிறது வீரம்.


ஆளும் வர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், அவர்களின் பணநாயகத்திற்கும், பதவி மற்றும் வருவாய் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாய்ப்புகளுக்கும் மசியாமல், எளிய மக்களுக்காகத் தொடர்ந்து பேசுவதும் எழுதுவதும் களமாடுவதும் சமகாலத்தின் ஆகச்சிறந்த போர்க்குணமாகும். கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்க்கும் வீரம்.


ஆம், பிறரை ஒடுக்குவதிலோ, வன்முறையை ஏவுவதிலோ, அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு ஆயுதம் ஏந்துவதிலோ முழு வீரம் இல்லை.  தனக்காக அல்லாமல் பிறருக்காக, ஒடுக்கப்பட்டோருக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலைக்காக, அறத்தின் பக்கம் நின்று சமரசமின்றிப் போராடுவதே முழுமையான வீரம். தசைகளின் வலிமையிலிருந்து தொடங்கி, இன்று மனசாட்சியின் குரலாகவும், அறத்தின் போர்க்குணமாகவும் பரிணமித்திருக்கிறது வீரம்.


[0]


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மதுரை புறநகர் மாவட்டக்குழு கோர்த்துள்ள இலக்கிய மலர்தொகுப்பில் எனது கட்டுரை.

Monday, 15 June 2026

அன்பின் வலிமையைப் பேசும் ‘ஹபீபி’

 


சினிமா பார்க்கப் போய், வாழ்க்கையைப் பார்க்கிற அனுபவம் மிக அரிதாகவே வாய்க்கும். ‘ஹபீபி’ (அன்பே) அந்த அனுபவத்தை வழங்குகிறது. 


சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, கவிக்கோ அரங்கில் ‘தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒரு படத்தில் ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் இடம் பெறுமானால் கதாநாயகனுக்கு ஒரு நல்ல நண்பனாகவோ,  தெருவோரம் கறிக்கடை வைத்திருப்பவனாகவோ வருவான். அல்லது ஏதாவது பயங்கரவாதக் கும்பலில் சேர்ந்து சூழ்ச்சிகளில் இறங்குவான். நாயகனுக்கு தேசபக்த வீரன் என்ற பிம்பத்தைக் கட்டுவதற்காக இவன் கையில் வெடிகுண்டு தரப்பட்டிருக்கும்.  பெண் பாத்திரம் என்றாலோ நாயகியின் நான்கைந்து தோழிகளில் ஒருத்தியாகக் கறுப்பு அங்கியோடு வந்து போவாள்.



இஸ்லாமிய மக்களின் உண்மை வாழ்க்கை நிலையைத் துளியளவும் தொடாத அந்த வகையறாக்களிலிருந்து மாறுபட்டு, ஒரு குடும்பத்தின் வழியாக இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்விடத்துக்கு இட்டுச் செல்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகியவற்றுக்குப் பிறகு அவர் உருவாக்கியுள்ள இந்தப் படம் அவர் பெயர் சொல்வதாக மட்டுமல்லாமல், உலக மேடையில் தமிழ் சினிமாவின் பெயர் சொல்வதாகவும் வந்துள்ளது. 


ஒட்டுமொத்த நாட்டிலிருந்து ஊரைக் காட்டுவது ஒரு கதை உத்தி. இது ஒற்றை ஊரிலிருந்து நாட்டைக் காட்டுகிறது.  கடையநல்லூர் என்பது கதை மனிதர்கள் நடமாடுவதற்கான ஓர் ஊர். உண்மையில் அதன் தெருக்களிலும் வீடுகளிலும் தெரிவது நாட்டின் விரிந்த சமுதாயம். ஊர் மக்கள் பேசுவது நம்மைத் தாமிரபரணியில் நனைக்கும் தமிழ். ஆயினும் அது பொதுமொழியாக  ஒலிக்கிறது!


கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டது அந்தக் குடும்பம். தொழிலிலும் சந்தையிலும் முதலாளிய ஆக்கிரமிப்பின் நவீன வரவுகளால் நசிவைச் சந்திக்கிறது. மற்றவர்கள் வேறு வேறு தொழில்களுக்கும் வெளிநாட்டு வேலைகளுக்குமாக மாறிவிட, ஒரு குடும்பத்தின் மூத்தவர் முகமது யூசுஃப், கைத்தறியைக் கைவிட மனமின்றி அதிலேயே உழைத்துக்கொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் உறவுக் கசப்புகளுக்கும் சில கட்டாய முடிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றன.


யூசுஃப்பின் தம்பி ஒரு வளைகுடா நாட்டிற்குப் பயணமாகிறான். அங்கிருந்து பணம் வரத் தொடங்குகிறது. குடும்ப நிலையும் வீட்டின் தோற்றமும் மாறுகின்றன. இதே போல் வெளிநாடு சென்ற பலரிடமிருந்தும் பாய்கிற பணத்தின் புழக்கத்தால், புதிய தேவைகளுக்கான கடைகளும் பிற கட்டடங்களுமாக  ஊரின் மேனியும் பளபளப்பாகிறது.


வெளிநாட்டுப் பண வருவாய் புதிய வாழ்க்கையைக் கொடுத்ததா, இல்லையேல் பழைய வாழ்க்கையையும் பறித்துக்கொண்டதா? இதைத்தான் அந்த முகங்கள் கதையாகப் பேசுகின்றன. மிகைக் கொண்டாட்டமோ, வறட்டுத் துக்கமோ இல்லாமல் ஊர்ப்புறத்து வாய்க்கால் நீரோட்டமாய் சீராகச் சொல்லியிருப்பது சிறப்பு.


வெளிநாட்டுப் பயணம் நம்பிக்கையளித்தாலும், புறப்பாடு மகிழ்ச்சிகரமாக இல்லை. அத்தனை பேர் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில், மனைவியிடம் அந்தரங்கமாகப் பேசி ஒரு முத்தத்தோடு விடைபெற முடியாமல் போகிற சூழல் பிரிவுத் துயரினும் பெரியதோர் ஏக்கமே.




இவர்களுக்கு அடுத்த தலைமுறையாய் வருகிறவர்கள் அபு என்கிற அபுதாஹிர், நிலா என்கிற நிலோஃபர். இருவருக்கும் பள்ளிப் பருவத்திலேயே காதல் அரும்புகிறது. இவன் எளிய கைத்தறிக் குடும்பத்தையும், அவள்,  வசதிகளைச் சேர்த்துக்கொண்ட “சொசைட்டி” குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். ஒரே மார்க்கத்தினர்தான் என்றாலும் தடுப்புச் சுவராக நிற்கிறது வர்க்க வேறுபாடு.


காதல் விதியின்படி, காதலியின் கடைக்கண் பார்வைக்காகக் காதலன் எந்த எல்லைக்கும்  போகத் துணிகிறான். வர்க்க வேறுபாடும் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எந்த எல்லையிலும் நிற்கத் தயாராகிறது. சொசைட்டிக் குடும்பங்களின் ஆட்களிடம் அபு வசமாக மாட்டிக்கொள்வதுடன் இடைவேளை விடப்படுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பது அடுத்த காட்சியாக அல்லாமல்,  உச்சக் காட்சிக்கு முன் புளியவிளாருடன் வருகிறது. என்ன நடந்தது என்று தொட்டுக் காட்டுவது கூட திறமையாகக் கோர்க்கப்பட்டுள்ள திரைக்கதையைக் காட்டிக்கொடுப்பதாகிவிடும். 


தண்டிக்கப்படுகிற ஒருவனுக்குத் தாங்க முடியாத ஒரு தொகையைத் தண்டமாக விதிக்கிறது கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம். “தாங்காது” என்று சொல்லச் சொல்ல,  “தாங்கும்” என்று சொல்கிற வரையில் முதுகுத் தோல் கன்றிப்போகும் அளவுக்குப் புளியவிளாரால் அடிக்கத் தீர்ப்பளிக்கிறது. “தாங்கும், என் பிள்ளையை அடிக்காதீய” என்று தகப்பன் அழுது வேண்டுகிற இடத்தில் கண்கள் கலங்காமல் இருக்காது.


தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போதே மரணமடைகிறார் யூசுஃப்.  காக்குழி (தறியில் கால்களை இயக்குவதற்கான குழி) தகர்க்கப்பட்டதால் நொந்துபோனவரின் உடல் முழுக்குழிக்குள் இறக்கப்படுகிறது. அப்போது அங்கே ஓடிவரும் நண்பர் கதறுகிற இடம், இந்த மண்ணில் மத வேலி கடந்த நட்பு அடக்கமாகிவிடாமல் இருப்பதைக் காட்டுகிறது. இப்படிப் படம் நெடுகிலும் உறையவும் நெகிழவும் வைக்கிற சித்தரிப்புகள் ஏராளம். 


சடலத்தைத் தூக்கிச் செல்வதற்கு முன் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள், படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் தனது சமூகப் பழக்கத்துடனான தொடர்பை நினைவூட்டும்.


நிலோஃபரைப் பிரிய வேண்டியிருக்குமே என்று வளைகுடாப் பயணத்தை மறுத்து வந்த அபு இடைக்காலத்தில் அதற்கு ஒப்புக்கொண்டு புறப்படுகிறான். அவனுக்கு வயதாகிறது. பணம் சேர்ந்துவிட்டதால் சொசைட்டிக் குடும்பங்களுக்கு நிகராகிவிட்ட நிலையில், திருமணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள். “பொண்ணு என்ன முடிவெடுக்கிறாங்கிறது முக்கியம்லா,” என்று பர்வீன் தகப்பன் சொல்கிற இடம், இஸ்லாத்தில் பெண்ணின் கருத்துக்குத் தரப்படும் இடத்தைத் தெரிவிக்கிறது. அபு, பர்வீன் இருவருமாகச் சேர்ந்து சென்ற உணவகத்தில், அவன் சொன்னதற்கு மேல் அவள் தனக்குப் பிடித்த உணவைக் கொண்டுவரக் கூறுகிறாள். திடீர் நிதி நெருக்கடியால் திருமணமே சிக்கலாகிவிட குடும்பப் பேச்சுவார்த்தை முறிகிறது. அதன் பின் தன்னைச் சந்திக்க வருகிறவனிடம் அவள் கேட்கிறாள்: “நீ ஏன் அங்கே எனக்காகப் பேசலை?”  புதுயுகப் பெண்ணின் தன்னாளுமை வெளிப்பாடுகள் இவை.


பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள பாங்கு சிறப்பானது. இதற்கு முரணான நடைமுறை நிகழ்வு ஒன்றும் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறபோது, வார்த்தைகள் தடித்துவிட வீட்டுப் பெண்கள் முன்னால் வருகிறார்கள். அவர்களைத் தடுக்கிற ஆண்கள் சொல்கிறார்கள்: “நாங்க பெரியவங்க பேசிக்கிட்டிருக்கோம்லா? பொம்பளைக எதுக்கு வாரீக?” பெண்களைப் பெரியோராய்க் கருதாத, எல்லாச் சமூகங்களிலும் காணக்கூடிய பாலினப் பாகுபாடு இங்கேயும் ஊறிப்போயிருப்பது காட்சிப்படுகிறது.


முந்தைய ஒரு கட்டத்தில் ஊரிலிருந்து வருகிற தம்பி ஒவ்வொருவரையும் உறவு சொல்லி அழைத்து அவர்களுக்காக வாங்கிவந்த பரிசுப் பொருள்களை வழங்குகிறான். பிந்தைய ஒரு கட்டத்தில் அவனுடைய மனைவி அபுவிடம், “உன் நெருக்கடியை சமாளிக்க ஊர்ல யார் யார்ட்டயோ பணம் கேட்டியே, இந்த சாச்சிகிட்ட  கேக்கணும்னு தோணலையில்ல,” என்று கேட்டு நகைகளை எடுத்து வைக்கிறாள். மொத்தக் குடும்ப உறவுகளும் பாசத்தின் வாசத்தில் உரிமையோடு உறவாடும் இத்தகைய கட்டங்கள் மனதில் ஈரமாகக் குடியேறுகின்றன.


இந்த மக்கள் பற்றிய செய்தியை மற்றவர்களுக்குத் தருவதோடு, “நாலு சுவருக்குள்ள வாழுறது மட்டும் வாழ்க்கையில்ல” என்று சொல்வதில் இவர்களுக்கும் ஒரு செய்தி இருக்கிறது.



கதையையும் கருத்தையும் கலை வடிவாகச் செதுக்கித் தருவதில் இயக்குநர் தலைமையிலான குழுவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஊரை ஊராகக் காட்டுகிறது மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு. பாடல் வரிகளை ஏந்தித்தருகிறது சாம் சிஎஸ் இசை. நாகூர் ஹனிஃபா குரலை மீளுருவாக்கமாக ஒலிக்கிற ஏஐ தொழில்நுட்பம் கூடுதல் விருந்து.


வெகுமக்கள் ரசனையை மதித்து, அதேவேளையில் கொச்சைப்படுத்திவிடாமல்   உருவாக்கியிருப்பது சமூக அக்கறையுடனான படைப்பு நேர்மை. அபு தாஹிரைப் புதுமுக நடிகர் ஈஷா உள்வாங்கியிருப்பது தெரிகிறது. யூசுஃப் பாத்திரத்தில் கஸ்தூரி ராஜா முத்திரை பதித்திருக்கிறார். நிலோஃபராக மாளவிகா, பர்வீனாக தனஸ்ரீ சுதாகரன், சாச்சி சாலிஹாவாக அனுஸ்ரேயா ராஜன் உள்பட எல்லோருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 


கதையின் கால ஓட்டத்திற்கேற்ப கலைஞர்கள், குறிப்பாக நாயக நடிகர்,  உடல் தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் செல்லும் கார் பதிவு எண், கையால் கடிதம் எழுதி நல விசாரிப்பு, கேசட் ஒலிப்பதிவில் தகவல் பகிர்வு, நவீன ஆண்டிராய்டு கைப்பேசித் தொடர்பு என அரங்கப் பொருள்களும் அந்த ஓட்டத்தில் இணைகின்றன. 


சில இடங்களில் நீளத்தை நறுக்கி “நறுக்” என்றாக்கியிருக்கலாம், ஆங்காங்கே நடிகர்கள் நிற்பதிலும், வசனங்களை நிறுத்திப் பேசுவதிலும் நாடகமேடைத் தன்மை தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். ஆயினும்,  ஒட்டுமொத்தத்தில், வாழ்க்கை சார்ந்த, புதிய தோட்டத்தில் குரான் வரிகளைப் பாடுவது, பெண்களின் தனித் தொழுகை என பல்வேறு  நடைமுறைகளைக் கோர்த்திருக்கிற  செறிவான ஆக்கமே.


இதற்கெல்லாம் வலுவான தளமாக கதை, திரைக்கதை, உரையாடலை உயிரோட்டத்துடன் படைத்திருக்கிறார், தயாரிப்புக் குழுவிலும் ஒருவரான வி.எஸ். முஹம்மத் அமீன். இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்குமான இயக்கங்களில் முன்னரங்கில் நிற்கிற இவரது திரையரங்க வருகை கவனிக்கத்தக்கது.


நம் ஊரில், பக்கத்துத் தெருவில், அண்டை வீட்டில் இருக்கிறவர்கள்தான். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை நிலை பலருக்கும் தெரியாது. அதைத் தெரிய வைக்கிறது, நம்மவர்கள் என்று தெளியவும் வைக்கிறது படம். இப்படி வாழ்கிறவர்களுடனான தோழமையின் வேரில் அமிலம் ஊற்ற முயல்கிறவர்கள் பற்றி, அப்படிப்பட்ட காட்சியோ பேச்சோ ஏதுமின்றியே எச்சரிக்கையோடும் இருக்கச் செய்கிறது ‘ஹபீபி’.


[0]


‘தீக்கதிர்’ ஜூன் 15 இதழில் எனது கட்டுரை


Saturday, 6 June 2026

‘கரப்பான்’ மக்கள் கட்சிகள் : உலக மேடைக் காட்சிகள்

வீட்டின் சமையலறையில், படுக்கையறையில், குளியலறையில் ஓடிப் பதுங்கும் கரப்பான்களைக் கண்டவுடன் பலருக்கு ஒருவித அச்சமும் அருவருப்பும் ஏற்படும். உடனே, தொலைக்காட்சி விளம்பரப் படத்தில் வரும் பெண் செய்வது போல “ஹிட்” மருந்தடித்துவிட்டு நிம்மதியாய்ச் சாயாதவர்கள் எத்தனை பேர்?


அந்த அடர் செம்பழுப்பு நிறப் பூச்சியினம் 15 கோடி ஆண்டுகளாகவும் அதன் மூதாதையினத்திலிருந்து கணக்கிட்டால் 32 கோடி ஆண்டுகளாகவும் பூமியில் தாக்குப்பிடித்து வாழ்கின்றது. பெரும் இயற்கைச் சீற்றங்களாலேயே எதுவும் செய்ய முடியாத அந்த இனத்தை வெறும் ‘ஸ்பிரே’ பூச்சிக்கொல்லியால் ஒழித்துவிட முடியுமா என்ன?

கரப்பான்கள் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பிற பூச்சிகளையும், ‘வேக்குவம் கிளீனர்” கண்களுக்குத் தப்பித்துத் தரையில் பரவியிருக்கும் கெட்டுப்போன உணவுத் துகள்களையும் உட்கொள்கின்றன. அதன் மூலம் வீட்டுக்கு உள்ளே நன்மை செய்கின்றன. பறவைகளுக்கும் பல்லிக ளுக்கும் தவளைகளுக்கும் கரப்பான்கள் ஊட்ட உணவாகின்றன. அதன் மூலம் வீட்டுக்கு வெளியே இயற்கை உணவுச் சங்கிலி அறுபடாமல் பங்காற்றுகின்றன.

இதெல்லாம் தெரிந்திருந்தால் இந்திய தலைமை நீதிபதி, “வேலையில்லாமல் கரப்பான் பூச்சிகளைப் போல அலையும் இளைஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்காததால் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாகவும் மாறி எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்” என்று சொல்லியிருக்கமாட்டார்தான். அவர்களை ஒட்டுண்ணிகளோடும் ஒப்பிட்டவர், எதிர்க் குரல்கள் குறித்து வெறுப்பும் அசூயையும் பரப்புவோர்தான் மெய்யான ஒட்டுண்ணிகள் என்றும் புரிந்துகொண்டிருப்பார்தான்.

ஆயினும் அவர் தேசத்திற்கு ஒரு நன்மையே செய்தார். மாற்றங்களின் ஊற்று தாங்களே என்றறியாமல் ஒதுங்கியிருந்த நவீனத் தலைமுறைகளை எழ வைத்துவிட்டாரே!

அதுவே அடையாளம்!

“ஆம், நாங்கள் கரப்பான்கள்தான்,” என்று, அமெரிக்காவில் இருந்து அபிஜித் தீப்கே சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டார். அது பெருங்காற்றுப் போல பரவி, இந்தத் தலைமுறையினர் தங்களைக் கரப்பான்களாகத் தயங்காமல் அடை யாளப்படுத்துகிறார்கள். வாய்ப்புப் பாதைகளை அடைத்து, மதவாத–சாதியப் போதையேற்றி, கார்ப்பரேட் பீடாதிபதிகளுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.

“கரப்பான் மக்கள் கட்சி” (சிஜேபி) என்ற இயக்கம் இணையவழி அரசியல் நையாண்டிக் குழுவாக உருவானது. சில நாட்களிலேயே பாஜக தளத்தை விடப் பல மடங்கு ஆதரவைப் பெற்றது. அந்தக் குழு அரசியல் நையாண்டிக்கலையின் புதிய பரிணாமங்களை அறிமுகப்படுத்தியது. சமூக ஊடகங்களில் “ரீல்” துணுக்குகள் வெள்ளமாய்ப் பாய்கின்றன!

சிரிக்க வைப்பதோடு, ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் மனுவில் லட்சக்கணக்கானோரின் கையெழுத்துகளைத் திரட்டிய “சீரியஸ்” பணியையும் மேற்கொண்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவரான அபிஜித் தீப்கே அறிவித்தது போல இது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அல்ல. இது சுரண்டலுக்கும் கூட்டுக் களவு முதலாளியத்திற்கு எதிரான இளைஞர் களின் சீற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளமே, மக்கள் மன்றமே என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அதற்கு எதிர்வினையாக சிஜேபி இணையத் தளத்தையும், அதன் எக்ஸ் வலைத்தள கணக்கையும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69(ஏ) பிரிவின் கீழ் முடக்கியது. இந்த இணையப் பக்கத்தின் உள்ளடக்கங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக உளவுத்துறை அளித்த பரிந்து ரையின் அடிப்படையில் அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு ஆய்வு செய்து முடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்படி மின்னியல் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிஜேபி பொதுக் களத்திற்கு வந்துவிட்டது! அதன் இணையத்தளத்தை முடக்கியது ஏன் என்று இப்போது உச்சநீதிமன்றமே அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது!

தலைநகரில் போராட்டம்

இத்தகைய பின்னணிகளோடுதான், சனிக்கிழமையன்று (ஜூன் 6) தலைநகர் தில்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை சிஜேபி அறிவித்திருக்கிறது. அமைச்சர் உடனடியாகப் பதவி விலகுதல், தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், தொடர்புடைய தேர்வு முகமை மற்றும் அமைச்சக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தல், சில அதிகாரிகள் இடமாற்றம் போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் ஏற்க இயலாதவை என்ப தால் முழு விசாரணை நடத்தப்படுதல், மாணவர்களின் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நீதியும் நிதியும் கிடைக்கச் செய்தல், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்காகவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வருகிற அபிஜித்தை வரவேற்பதிலும் பேரணியிலும் பங்கேற்க லட்சக் கணக்கானோர் பதிவு செய்திருக்கிறார்கள். பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமே கூட இடையூறு ஏற்படக்கூடாது என்று அறிவித்துள்ள அவர், விமான நிலையத்துக்கு யாரும் வர வேண்டாம் என்றும் நேரடியாகப் போராட்டக் களத்துக்கு வருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தில்லியில் வந்து இறங்கியதும் நேரடியாக உரிய காவல்நிலையம் சென்று பேரணிக்கு அனுமதி கோரும் கடிதத்தை அளிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக் கிறார். தில்லியில் கால் வைக்கிறபோதே தன்னைக் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்றும், ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுவது உறுதி என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, இந்தியாவில் சிஜேபி பணிகளை ஒருங்கிணைப்பதற்கென மூன்று புதிய செய்தித்தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். சௌரவ் தாஸ் (புலனாய்வுப் பத்திரிகையாளர்), விஜேதா தஹியா (எழுத்தாளர், அரசியல் ஆய்வா ளர்), அஷுதோஷ் ரங்கா (மேலாண்மை ஆலோசகர்) ஆகியோரே அவர்கள். அடுத்தடுத்த நிகழ்வுகளை நாடே எதிர்நோக்கி யிருக்கிறது.

நகைப்பின் வலிமை

சும்மா சிரிக்க வைக்கிற சித்தரிப்புகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்ற கேள்வியும் விவாதங்களில் ஒலிக்கிறது. அரசியல் களத்தில் எப்போதுமே நையாண்டிக் கலைக்கு ஒரு செல்வாக்கு உண்டு. நம் ஊரின் தெருக் கூத்துகளில் கோமாளிகள் ஊரின் பெரிய பண்ணையார்களைப் போட்டு வாங்கு வார்கள்! அதே வசனங்களை நாயக நடிகர்கள் பேசினால் கலவரமாகிவிடும்!

அதிகாரத்தின் மீதான கசப்பையும், சமூகச் சிக்கல்கள் மீதான வெறுப்பையும், அங்கத நடையில் எதிர்கொள்ளும் உத்தி உலகத்திற்குப் புதியதல்ல.

மரித்தோர் கட்சி:

ஆம், செத்துப் போனவர்களின் கட்சி (பார்ட்டியா மியோட்டிர்விஹ்) என்றே ஒரு அமைப்பு ரஷ்ய நாட்டில் உருவானது! மாற்றுக் கருத்து கள் அடக்கப்படுவதை எதிர்த்து 2017இல் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. மாக்சிம் எவ்ஸ்திரோப்பொவ் என்பவர், “புடின் ஆட்சியில் உயிரோடு இருப்பவர்கள் பேச முடிவதில்லை. நாங்கள் எங்களை இறந்து போனவர்களாக அறிவித்துக்கொள்கி றோம்,” என்று பதிவிட்டார்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மண்டையோடு முகமூடிகளை அணிந்துகொண்டு, மருத்துவமனைகளின் பிணவறைகள், இடுகாடுகள் முன்பாக நிற்பார்கள். போர் எதிர்ப்புப் பதாகைகளை ஏந்தியிருப்பார்கள். இத்தகைய செயல்பாடுகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.

புடின் அரசு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளா மல் தடை விதித்தது. ஏவ்ஸ்ட்ரோப்போவ் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று.

கட்சி என்றே ஒரு கட்சி!


ஜெர்மனி நாடு “கட்சி” (தி பார்ட்டேய்) என்ற சுருக்க மான பெயரிலேயே அடையாளம்பெற்ற ஓர் இயக்கத்தைக் கண்டது. இது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவும் செய்துகொண்டது.

மற்ற பெரிய கட்சிகள் தங்களது சமூகப் பொறுப்புகளாக “உழைப்பு, சட்டத்தின் ஆட்சி” என்றெல் லாம் மாமூலாக அறிவித்துக்கொண்டு நடைமுறையில் பணக்காரர்களுக்குத்தான் தொண்டாற்றுகின்றன. அதை அம்பலப்படுத்தும் வகையில், “உழைப்பு, சட்டத்தின் ஆட்சி, விலங்கு பாதுகாப்பு, மேட்டிமைவாதிகளின் முன்னேற்றம் மற்றும் அடிமட்ட ஜனநாயக முன்முயற்சிக்கான கட்சி” என்று நீண்ட பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரச் சீர்குலைவுகளால் வெறுத்துப் போயிருக்கும் மக்கள் இவர்களை ஆதரிப்பதால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இக்க ட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன!

குப்பைத் தொட்டி கட்சி:

பிரிட்டன் தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிடுபவர் ஜொனாதன் ஹார்வி. அவர் தொடங்கிய கட்சியின் பெயர் ‘கவுண்ட் பின்ஃபேஸ் பார்ட்டி’ (பிரபுத்துவக் குப்பைத்தொட்டி முகக் கட்சி). அரசியல் குப்பைகளை அகற்ற வேண்டியுள்ளது என்ற பொருள்படும்படி ஜொனாதன் ஹார்வி தன் தலையில் ஒரு குப்பைத் தொட்டியைக் கவிழ்த்துக்கொண்டுதான் பரப்புரை மேடைகளுக்கு வருவார்.

பிரிட்டனின் மாறி மாறி ஆட்சியில் இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளின் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் இவருக்கு ஆயிரக்கணக்கில் வாக்களிக்கிறார்கள்.

தரவுத் தளங்களில் தேடினால் இப்படி மேலும் பல நையாண்டிக்கட்சிகள் பற்றித் தெரிய வரக்கூடும். அவை பெரும்பாலும் தனிப்பட்ட சிலரது நகைச்சுவை வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

இந்தியாவின் கரப்பான் மக்கள் கட்சி அவற்றிலிருந்து மாறுபடுகிறது. சிஜேபி–யின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது, ஒன்றிய பாஜக அரசு டிஜிட்டல் நையாண்டிகளைக் கண்டு மிரண்டு போயிருப்பதைக் காட்டுகிறது. அவ்வாறு மிரள வைத்ததில் செம்பழுப்புப் பூச்சிகளுக்கு ஓர் அரசியல் மதிப்பு உருவாகி யிருக்கிறது.

[0]

தீக்கதிர்ஜூன் 6 - 2026 இதழில் எனது கட்டுரை

Sunday, 31 May 2026

வள்ளுவரை ஆடையின்றி நிறுத்த முடியுமா?


காலை நடையில் பூங்கா நிழலில்…

“கொஞ்ச நாளா அடங்கியிருந்துச்சு. இப்ப மறுபடி பிரச்சினை கிளப்புறாங்களே…?” –காலை நடை நேர நிறைவில் வழக்கமாக அமரும் இருக்கையை அடைந்ததும் ஆதங்கத்தோடு நண்பர் கேட்டார்.


“என்னென்னமோ பிரச்சினைகளைக் கிளப்புறாங்க, நீங்க எதைச் சொல்றீங்க?” புதியது கேட்கும் ஆர்வத்தோடு நான் கேட்டேன்.


“கவர்னர்  ஆஃபீசுல திருவள்ளுவர் காவி டிரஸ்ஸில் இருக்கிற மாதிரி பேனர் வெச்சிருந்திருக்காங்க. போதாக்குறைக்கு நெத்தியில பட்டை வேற. இதுக்கு முன்னாடியும் ரவி பீரியட்ல நடந்துச்சு, இப்பவும் நடக்குது.” கைப்பேசித் திரையில் செய்தியைக் காட்டியபடி சொன்னார் நண்பர்.


“மதச்சார்பு வரிகளையும் சேர்த்து வந்தே மாதரம் பாடுறதுக்கு, ஒன்றிய அரசாங்கத்தோட சுற்றறிக்கையைக் காரணம் காட்டினாங்க. வள்ளுவருக்கு காவி உடை மாட்டி விடணுன்னும் மேலேயிருந்து ஆணை வந்துச்சான்னு தெரியலை…”


“இல்லை. இது இப்பத்திய கவர்னரே எடுத்த முடிவுதான் போல இருக்கு. எல்லாக் காலத்துக்கும் பொதுவான வள்ளுவர் ஒரு சனாதனிதான்னு அவர் பேசினதா ஒரு நியூஸ் வருது பாருங்க.” –அதற்குள் தன்னுடைய கைப்பேசித் திரையையும் உயிர்ப்பித்த மற்றொரு நண்பர் அதையும் காட்டினார்.

“சார், உங்களுக்கே தெரியும், நான் ஹிண்டுதான். ஹிண்டுவா இருக்கிறதுல பெருமைப்படுறவன்தான். ஆனா இப்படியெல்லாம் செய்றதை என்னால ஏத்துக்க முடியலை. இப்படியெல்லாம் செஞ்சு எல்லா ஹிண்டூஸ் பத்தியும் தப்பான கருத்தை ஏற்படுத்துறாங்க.”


“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவிச்சிருக்காரு. வேற பல தலைவர்களும் விமர்சனம் பண்ணியிருக்காங்க. ஆனா சீஃப் மினிஸ்டர் விஜய் கம்முனு இருக்காரே…”


“அமைச்சர் அருண்ராஜ் இப்படியெல்லாம் திருவள்ளுவரைக் களங்கப்படுத்தாதீங்கன்னு பதிவு போட்டிருக்கிறாரு, நல்ல விசயம். ஆனா, இது அவரோட சொந்தக் கருத்துங்கிற மாதிரி போயிடக் கூடாது. முதலமைச்சரே சொன்னால் அதிகாரப்பூர்வமாவும் இருக்கும். அவங்க கட்சிக்கு மரியாதையாவும் இருக்கும்.”


“அவங்க ஆட்சிக்கும் கம்பீரமா இருக்கும். ஆனா, அதைப் பத்தியெல்லாம் அவரு கேர் பண்றாரான்னே தெரியலையலையே...”

“இன்னும் இது மாதிரி நிறைய வரத்தானே போகுது. அப்ப என்ன  செய்றாருன்னு பார்க்கலாம். ஆனா ஒண்ணு…”


“முழுசா சொல்லி முடிங்க சார். என்னாது அது?”


“வள்ளுவரோட அங்கிக்கு வேற வண்ணம் பூசுறதும் சரி, அதைக் கண்டுக்காம விடுறதும் சரி, ரெண்டுமே அவரை ஆடையே இல்லாம நிறுத்துற வேலைதான். ஆனா, திருக்குறளே அவருக்கு வலுவான  அங்கிதான்றதை மறந்துடுறாங்க.”


அந்தக் கணத்தில் கவ்விய மௌனம், வழக்கமான தேநீர்க்கடையை அடைந்து டீ, காஃபி என்று கேட்கிற வரையில் நீடித்தது.


Friday, 15 May 2026

சுருக் செய்திகள் நறுக் கருத்துகள்



“காங்கிரஸ், அதிமுக பிரிவினரின் பதவிக் கோரிக்கைகளால் விஜய் அமைச்சரவை அமைப்பதில் தாமதம்

-அரசியல் மரியாதையைத் தந்த கட்சிகளுக்கு அப்பால்  புதுசா அவங்களா வந்து ஆதரிக்கிறவங்களுக்கு நன்றி மட்டும்தான், பதவிப் பசிக்கெல்லாம் இரை போட மாட்டோம்னு அறிவிக்கிற நேர்மையை ஜனநாயகன்ட்ட காணோமே! சரி, அந்தச் செய்திக்குப் பக்கத்துல இருக்கிற தலைப்பையும் வாசியுங்க...

“அமைச்சரவை அமைப்பதில் தாமதத்தால் குடிமைத் திட்டங்கள் முடக்கம்”

-நேர்மையா அப்படி அறிவிச்சிருந்தாருன்னா இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காதுல்ல... இப்ப பாருங்க, அமைச்சர் பதவி கேட்கிறவங்க எந்தத் துறை வேணும்னும் நெருக்கடி கொடுப்பாங்கல்ல...  எப்படியோ மக்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் ரொம்ப நாள் முடங்காம இருந்தா சரி... அடுத்த செய்தி?

“ஊழலை ஒழிக்கக முதலமைச்சர் மூன்று மாத காலம் கெடு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா"

-வாங்குறதெல்லாம் அதுக்குள்ள வாங்கி முடிச்சுக்குங்கன்னு சொல்றதா ஆகிடக் கூடாது!அடுத்தது?

பாலின சமத்துவம் என்பது மத உரிமைகளுக்குக் கிடையாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்"

-பெண்களைப் பின்னால் தள்ளி ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கிற பாலினப் பாகுபாட்டுக்கு அடைக்கலம் தர்றதே மத ஏற்பாடுகள்தான். மத நம்பிக்கைகள்ல தலையிட முடியலைன்னு சொன்னா புரிஞ்சிக்கிடலாம். தலையிட மாட்டோம்னு சொன்னா, இந்த அநீதிக்கு அரசாங்கமும் அடைக்கலம் கொடுக்குதுன்னுதான் அர்த்தம். உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்புச் சொல்லுதுன்னு பார்ப்போம்....

“10 நாள் புதிர் விலகியது: கேரள முதலமைச்சர் பொறுப்புக்கு சதீசன் தேர்வு”

-முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி அரசுகள் கொண்டுவந்த பல அரசியல் பண்பாடுகளையும் நடைமுறைகளையும் காங்கிரஸ் அரசுகள் குலைக்க முயன்றதில்லை. இவரும் அப்படியே தொடர்கிறாரான்னு பார்ப்போம்”

[0]

-காலை நடை நிறைவின் பூங்கா உரையாடலில், ஒரு நண்பர் பத்திரிகைச் செய்திகளின் தலைப்புகளை மட்டும் வாசிக்க வாசிக்க, நான் உடனுக்குடன் வெளிப்படுத்திய கருத்துத் தெறிப்புகள் இவை. புனைவுப்படம்: ஜெமினி ஏஐ

Thursday, 14 May 2026

பஞ்ச், நாக் விளையாட்டு


 


“சேஞ்ச் இருக்கும்னு சொன்னாங்க, எக்ஸ்சேஞ்ச் இருக்குமோன்னு மக்கள் சந்தேகப்படுறாங்க.”

“இது குதிரை வேகத்தில் ஓடுற அரசு,  குதிரை பேரத்தில் ஈடுபடுற அரசு அல்ல.”

நம்பிக்கை வாக்கெடுப்பு உரைகளில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பஞ்ச் (டயலாக் அல்ல), முதலமைச்சர் விஜய் நாக் (அவுட் அல்ல) இரண்டும் இந்தச் சட்டமன்றத்தில் விறுவிறுப்புச் சுவைகளுக்குப் பஞ்சமிருக்காது என்று காட்டுகின்றன. நம் கவலை இப்படி அதிரடியும் எதிரடியுமாகப் போய்விடக் கூடாது என்பதே.

மக்கள் மொத்தமாகத் தூக்கி ஆட்சிப் பொறுப்பை தவெக–விடம் தந்துவிடவில்லைதான். ஆனால் மக்களுக்காக வாதாடும் எதிர்க்கட்சிப் பொறுப்பை திமுக–விடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அரசு என்ன செய்தாலும் எதிர்ப்பதே கொள்கையென முந்தைய ஆட்சியின் எதிரணி செயல்பட்டது போல அல்லாமல், மக்களின் வலியுணர்ந்து, ஆள்வோரின் அத்துமீறல்களைத் தோலுரித்துக் காட்டும் பொறுப்பு அது.

கம்யூனிஸ்ட்டுகளும் விசிக, இயூமுலீ கட்சியினரும், அரசு அமைப்பதற்காக அளித்த நெருக்கடி நேர ஆதரவு, அரசின் தவறுகளுக்கான ஏற்பாக இருக்காது என்று அறிவித்திருக்கிறார்கள். போராடுவது அவர்களுக்குப் புதிதல்ல.

அதிமுக–விடம் இதைச் சொல்லிப் பயனில்லை.  அவர்கள் மக்கள் நலனுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதற்குமில்லை. அவர்களுக்குள்ளான அடிதடியில் ஏற்படும் சட்டைக் கிழிசல்களைத் தைப்பதற்கே நேரம் போதாது.

இது சிறுபான்மை அரசுதான் என்று ஒப்புக்கொண்டு அறிவித்த நேர்மை, சிறுபான்மை மக்களுக்கான அரசு என்ற  சொல் விளையாட்டாக மட்டும் கடந்துவிடுவதற்கு விஜய் அமைச்சரவை இடமளிக்கக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்பதை நிறுவிக்காட்டுவது, அவர்களைத் தாக்குகிற பெரும்பான்மை மதவாத அரசியல் நடவடிக்கைகளை உறுதியாகக் கை மறித்துத் தடுப்பதில் இருக்கிறது. பெரும்பான்மைச் சமயம் சார்ந்த மக்களுக்கும் பாதகமான ஆணைகளையும் சட்டங்களையும் அதே போல் தடுப்பதில் இருக்கிறது.

சின்ன விமர்சனம் கூடச் செய்ய மாட்டோம் என்ற, பதவியேற்புக்கு முந்தைய நாட்களின் உத்தி தற்காலிகமானதாகவே இருக்கட்டும். இல்லையேல், முதலமைச்சரைச் சுற்றியுள்ளவர்கள் யாருக்கோ பிரதிநிதிகள்தான் என்று சமூகவியலாளர்கள் விடுத்த எச்சரிக்கை உண்மையாகிவிடும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியது நன்று. நாடு முழுவதுமே முன்பிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை மீட்டமைக்க வலியுறுத்தும் குரலும் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒலிக்க வேண்டும். அதுதான், அனிதாவுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தியதற்கு நியாயம் செய்வதாக இருக்கும்.

மறுபடி சொல்கிறேன், கூட இருக்கிற பொருளாதாரப் புலிகள் சொல்வதைக் கேட்டு அரசாங்கம் கடன் வாங்குவது பற்றிய குழப்பங்களில் மூழ்காதீர்கள். வாங்கிய கடன்கள் மாநிலத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு உதவின என்று புரிந்துகொள்ளுங்கள். முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டு வருவதால்தான் தமிழ்நாட்டுக்குத்  தொடர்ந்து கடன்கள் கிடைத்தன என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

35 சதவீத வாக்குகள் பெற்ற எங்களை, 75 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விமர்சிப்பதா என்ற சொத்தை வாதம் கைதட்டல் பெற்றுத் தரலாம், கைகொடுக்காது. ஒரே ஒரு சதவீத வாக்குகள் பெற்றவர்கள் கூட அரசை விமர்சிக்க முழு உரிமையும் தகுதியும் பெற்றவர்கள்தான்.

அத்தகைய விமர்சன உரிமையோடுதான், உங்கள் ஆட்சி அமைவதற்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசுப் பதவியில் ஜோதிடர் நியமிக்கப்பட்டதற்கு உடனடியாகக் கண்டனம் வெளியிட்டது. சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் ராஜகுருவை வீட்டோடு நிறுத்திக்கொள்ளச் சொன்னார். மற்ற சிலரும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான இந்தச் செயலைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்கள். வெளியே சமூக ஊடகங்களிலும் மீம்ஸ்கள் வைரலாகின.

அதற்கெல்லாம் மதிப்பளித்து, நியமித்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அவரை அனுப்பி வைத்தது பாராட்டுக்கு உரியது. இது எதிர்க்கட்சிகளுக்கு முதல் வெற்றிதான் என்றாலும் உங்களுக்குத் தோல்வி என்று நினைத்து மனம் மருள வேண்டாம். நியமனத்தை விலக்க மறுத்திருந்தால்தான் தோல்வியாகியிருக்கும். பகுத்தறிந்து முடிவெடுப்பவராகக் கட்ட முயலும் பிம்பத்தைக் கலைப்பதாகியிருக்கும்.


உங்களுக்குக் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையிலும், தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய கேட்டினைத் தடுக்கும் வகையிலும் ஆதரவளிக்க முன் வந்த இயக்கங்கள் சுயநலமின்றி முன்வைக்கும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வாருங்கள். அவர்களின் ஆதரவால் உங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

திமுக எதிர்ப்பு என்பதை ஏதோ புனிதமான கொள்கை போலக் காட்டிக்கொண்டு அப்பட்டமான ஆசைகளோடு “ஆதரிப்போர்” வரிசையில் எழுந்துநின்றவர்களுடனான சகவாசத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.

அரசியல் அக்கறை இல்லாதவர்கள் என்று கருதப்பட்ட கணிசமான மக்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை உங்களின் பக்கம் ஈர்த்ததன் மூலம் அரசியல் களத்திற்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் எதிர்கால சமூக–அரசியல் வளர்ச்சிக்கு அது தளம் அமைத்துத் தரக்கூடும். இடதுசாரிகளும் மற்ற மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் சரியான வழிமுறைகளோடு அவர்களை அணுகும்போது அது புதிய நம்பிக்கை வெளிச்சங்களைப் பாய்ச்சும்.



Friday, 8 May 2026

டீ பிரேக்


 

அதுவும் இதுவும் இரண்டுமே

விளைவதும் வருவதும்

தோட்டங்களில் இருந்துதான். ,

ஒன்று விதைகளாய்

இன்னொன்று இலைகளாய்.


எங்கே எப்போது

எப்படி கண்டறியப்பட்டன?

உலாவும் கதைகள் விதவிதமாய் 

இரண்டையும் விட சுவைசுவையாய்!


சென்ற இடமெல்லாம்

கருஞ்சிவப்பிலும் கடுங்கசப்பிலுமே

நாவோடு உறவாடுகின்றன.


இங்கே மட்டும்

கள்ளிச்சொட்டுப் பாலும்

கருப்பட்டியோ கரும்புச் சர்க்கரையோ

கலந்துவிட்டதைப் பேசுவதே கூட

தனிக்கதைதான் தனிச்சுவைதான்.

அளவான தூளில்

கச்சிதமான கலவையில்

சரியான சூட்டிலா இருக்கிறது

பானங்களின் சுவை?


நட்டநடுச் சாலையில்

சந்திக்க நேர்ந்தாலும்

“வாங்க டீ, காஃபி

சாப்பிட்டுப் போவோம்”

அன்பும் கலந்த அந்தப்

பகிர்வில் அல்லவா!  


இங்கே கூடுதலாய்

எளியோர் தோழமையென

டீ கிளாஸ்

மேட்டினர் சகவாசமென

காஃபி கப்

அடையாளமானதைப் பேசினால்

கிடைக்குமொரு பண்பாட்டு வரலாறு.


கலப்பே இல்லாத உயர்தர காஃபி

கணக்கான சதவீத சிக்கரி காஃபி

கனமிகு மணத்தோடு அடர்ந்த டீ

கணப்பொழுது விழிப்புக்கு சாதா டீ


தொலைக்காட்சி நிகழ்ச்சி

எதற்காகவோ அதற்காகவும்

கொஞ்சம் விடப்படும் இடைவெளிகளில்

செய்திகளுக்காகப் புரட்ட வைக்கும்

நாளேடுகளின் முதல் பக்கங்களில்

நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்


பசுமை போர்த்திய செடிகளை

கைபடாத நவீன எந்திரங்களை

தயாரிப்பின் உலகத் தரங்களை

விரிவாய்க் காட்டிச் சொல்கின்றன


அவைகள் அல்லது அவர்கள்

சுருக்கியும் சொல்ல மறந்தது

இலைகளையும் விதைகளையும்

பார்த்துப் பார்த்து

பறித்துப் பறித்து

கொண்டுவந்து சேர்த்திடும்

உழைப்பாளிகளின் கைகளை.


[0][0][0]


அரசியல்கள அதிர்வுகளுக்கிடையே கூடிய ஓர் இணையத்தள (சிங்காரவேலர்-ஜீவா-நாவா முப்பெரும் பள்ளிகள்) கருத்தரங்கம்-கலந்துரையாடல் தொடக்கத்தில் அன்பரொருவர், “என்ன டீ, காஃபி எதுவும் கிடையாதா” என்று விளையாட்டாய்க் கேட்க, பேச்சுகளுக்கு நடுவே அங்கேயே நான் தயாரித்து நிகழ்ச்சியின் நிறைவில் பரிமாறிய கவிதை.