Friday, 14 August 2026

காவிரி பங்கீடு, தொகுதி மறுவரையறை: ஒரு வேண்டுகோள், ஓர் அழைப்பு, இரு புறக்கணிப்புகள்!


 

முக்கியமான ஒரு பிரச்னை முன்னுக்கு வருகிறபோது, அதில் பொது அணுகுமுறையை உருவாக்குவதற்கென அரசாங்கம் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவதுண்டு. அதை ஏற்று அப்படிப்பட்ட கூட்டங்கள் நடப்பதும் உண்டு,

அத்தகைய கூட்டங்களுக்கு அரசு அழைப்பு விடுப்பதும், கட்சிகள் பங்கேற்பதும் நடந்திருக்கின்றன. இப்போது, மேகதாது அணை விவகாரத்தின் பின்னணியில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பொது அணுகுமுறையை வகுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஜோசப் விஜய் அரசு ஏற்கவில்லை.

மற்றொரு கூர்மையான விவகாரமாக மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்ட முன்வரவை ஒன்றிய அரசு மறுபடியும் கொண்டுவரக்கூடும் என்ற நிலையில், அதில் மாநிலத்தின் குரலாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.


தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பிரச்னையில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட மறுக்கும் முதலமைச்சர் விஜய், மற்றொரு முக்கியமான பிரச்னைக்காக இப்படியொரு கூட்டத்தைக் கூட்டியது ஏன்? அந்தக் கூட்டத்தைக் கூட்டாததற்காகப் பழி வாங்குவது போல இந்தக் கூட்டத்தை ஐந்து கட்சிகள் புறக்கணித்தது ஏன்?
தவறவிட்ட செய்தி!

காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் எல்லாக் கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன. தனது நிலைப்பாடும் அதுவேதான் என்று தவெக–வும் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒருமித்த குரல் ஒலிக்கிறது என்ற செய்தியை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும், ஏன் புதிய வழக்கை எடுத்துக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றத்துக்குமே கூட, கொண்டுசென்றிருக்க முடியும். ஒருமித்த குரலின் தாக்கம் எப்போதுமே வலுவானதாக அமையும். அந்த வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை விஜய் அரசு தவறவிட்டுவிட்டது.


அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுத்ததில் ஒரு பக்குவமின்மை வெளிப்பட்டது என்றால், அதற்காக த.வெ.க தரப்பிலிருந்து கூறப்பட்ட காரணங்கள் இரு மடங்கு பக்குவமின்மையை வெளிப்படுத்தியது. எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “சட்டமன்றமே அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் ஒரு மன்றம்தான். அங்கு ஏற்கெனவே மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இருக்கிறார்கள். எனவே, தனியாக மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டத் தேவையில்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கர்நாடக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியது என்ற செய்தியை அவர் கவனிக்கவில்லை போலும். இறுதிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் விவாதிப்பதற்கும், தேர்தலில் ஓர் இடம் கூடப் பெற முடியாமல் போகிற கட்சி உட்பட, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூடி விவாதிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.


சட்டமன்றக் கூட்டம் அலுவல் சார்ந்தது. அனைத்துக் கட்சிகள் கூட்டமோ, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த அரசியல் முக்கியத்துவத்தை உருவாக்கத் தேவையில்லை என்று த.வெ.க நினைக்கிறது என்றால், இன்னமும் உரிய அரசியல் பயிற்சி பெறாததுதான் காரணமா அமைச்சர் அவர்களே?
ஒருமித்த கருத்து?

அமைச்சர் இன்னொரு காரணத்தையும் கூறினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறுவார்கள், அதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியாமல் போகும் என்றார். மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுவதுதான் ஜனநாயக மாண்பு! அனைவரும் ஒரே கருத்தை ஒப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு கட்சியும் தனக்கெனத் தனி அணுகுமுறையைக் கொண்டிருக்கும், அந்த அடிப்படையில்தான் அதன் கருத்துகள் வெளிப்படும்.

ஒரே கருத்தாக வராதபோது பெரும்பான்மையாக முன்வைக்கப்பட்ட கருத்து எதுவோ அதுவே பொதுக்கருத்தாக மாறும். இந்த ஜனநாயகத்தை மதிக்கத் தயாராக இல்லையா இந்த அரசு? அமைச்சர் கூறும் காரணத்தை ஏற்பதானால், சட்டமன்றக் கூட்டமே கூட மாறுபட்ட கருத்துகள் ஒலிக்கும் இடம்தானே? அதையும் வேண்டாம் என்று தள்ளிவிடலாமா?

ஒருமைப்பாடு உள்ளக் கருத்துகள் வரப்போவதில்லை என்ற முன்முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நலன் சார்ந்த முக்கியமான கலந்துரையாடலை நடத்த மறுக்கப்பட்டது என்றால், அதில் ஜனநாயகம் இல்லை, நல்ல மாற்றத்திற்கான அறிகுறியும் இல்லை.


ஆலோசனைகளுக்கு அணை!
அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அதில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, எந்தப் பிரச்னைக்காக அந்தக் கூட்டம் கூட்டப்படுகிறதோ, அதை நன்கு ஆராய்ந்திருக்கக்கூடிய தனிப்பட்ட வல்லுநர்கள், தொண்டு அமைப்புகள் உள்ளிட்டோரும், அரசாங்க அழைப்பின் பேரில் பங்கேற்க வாய்ப்புண்டு. அப்போது மேலும் திட்டவட்டமான தீர்வுகளை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என்ன தயக்கம்?


அத்துடன், தற்போது மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அங்கே முன்வைப்பதற்கான வலுவான வாதங்களுக்கான ஆலோசனைகளும் அந்தக் கூட்டத்தில் வந்திருக்கும். வறட்டுக் கவுரவப் பிடிவாதத்தால் அந்த ஆலோசனைகளுக்கு அணை போடப்பட்டுவிட்டது.

இப்படியெல்லாம் யோசிக்கவில்லை என்று த.வெ.க தலைமை சொல்லக்கூடும். அப்படியானால், இந்தப் பிரச்னையை “வெற்றிகரமாக” மேலாண்மை செய்த பெருமை தனக்கு மட்டுமே வந்து சேர வேண்டும் என்ற குறுகிய நோக்கமே காரணமாகிறது. அப்படிதானா? கர்நாடகத்தில் பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்ததால், தமிழகத்திற்கும் கேரளத்துக்கும் புதுச்சேரிக்குமான காவிரி நீர் தற்போதைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அதை வேண்டுமானால் தனது அணுகுமுறைக்குக் கிடைத்த “வெற்றி” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.


எதிர்க்கட்சிகள் வரவில்லை!
இதற்குச் சற்றும் குறையாத ஒரு தவறான முடிவாகவே, தொகுதி மறுவரையறை சட்ட முன்வரவை குறித்து ஆலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததையும் பார்க்க வேண்டியிருக்கிறது.



 

அதற்கான காரணங்கள் மேம்போக்கானவை அல்லதான். தனது கட்சிக்கென நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், தமிழகத்தின் கவலையையும், சட்ட முன்வரைவு கைவிடப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலையும் ஒரே குரலாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கதே.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளின் தலைமைகளுக்கு முறைப்படி கடிதம் அளித்து, நோக்கத்தை எடுத்துச்சொல்லி, கூட்டத்திற்கு அவர்களை அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, நேரடியாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததில் நிச்சயமாக ஒரு நெறிமீறல் இருக்கிறது. அந்த நெறிமீறலுக்கும் அரசியல் பயிற்சியின்மைதான் காரணமா?


இருந்தபோதிலும், நடைமுறைச் சடங்குகளைவிட நாட்டு நிலவரங்கள் தலையானவை என்ற புரிதலோடு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அழைப்பு விடுத்ததில் உள்ள நெறிமீறலைச் சுட்டிக்காட்டிவிட்டு, எடுத்துக்கொண்ட பொருள் மீது பேசியிருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை சட்ட முன்வரைவு இன்னும் தாக்கல் செய்யப்படவே இல்லை. இந்த நிலையில் எதற்காக இந்தக் கூட்டம் என்று – குறிப்பாக அதிமுக தரப்பில் – கேட்கப்படுகிறது.

ஆனால், கடந்த ஏப்ரலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோற்கடிக்கப்பட்ட சட்ட முன்வரைவை, கொஞ்சம் ‘டிங்கரிங்’ வேலை செய்து மறுபடியும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பா.ஜ.க முடுக்கிவிட்டிருப்பதாக வெளிப்படையாகத் தகவல்கள் வருகின்றன. அப்படியிருக்க, சட்ட முன்வரைவைக் தாக்கல் செய்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று காத்திருப்பது முறைதானா? வருமுன் காப்பதற்குத் தயாராக வேண்டாமா?

ராகுல் ஏற்பாடா?
அரசியலாக இன்னொரு காரணம் இருப்பதாகப் பேசப்படுகிறது. அதாவது, இந்தச் சட்ட முன்வரைவு தொடர்பாக தி.மு.க நிலைப்பாடு என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டாராம். அவரது தூண்டுதலால்தான் இக்கூட்டம் கூட்டப்பட்டது என்கிறார்கள். தி.மு.க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதாக வரும் ஊகச் செய்திகள் போல இதுவும் ஊக அடிப்படையிலேயே இருக்கிறது.


ஒருவேளை அது உண்மை என்றே வைத்துக்கொள்வோம் – கூட்டத்தில் கலந்துகொண்டு அதை அம்பலப்படுத்தலாமே? தனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று அங்கே உரத்து உரைக்கலாமே? வேறு சிலர் வேறு ஐயப்பாடுகளைப் பகிர்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடனான முந்தைய உறவு முறிந்துவிட்டதால், திமுக இப்போது பாஜக–வுக்கு சாதகமாக நகரக்கூடும், சட்ட முன்வரைவை ஆதரிக்கக்கூடும் என்ற ஊகங்கள் அடிபடுகின்றன. இது உண்மையாக இருக்குமானால், காங்கிரஸ் மீதுள்ள (நியாயமான) கோபத்திற்காக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிற செயல்களில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுகிறது.

பொருள் என்ன?
கடந்த முறை, இந்த நடவடிக்கைகளை அடியோடு எதிர்த்தது தி.மு.க. இப்போது, முந்தைய வடிவத்திலேயே சட்ட முன்வரைவு வருமானால் எதிர்ப்போம் என்று சொல்கிறார்கள். அதன் பொருள் என்ன?


அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்களாம். அப்படியானால், 816 உறுப்பினர்களாக அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்பதால் அதை ஏற்கலாம் என்ற கருத்தில் திமுக தலைவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது ஆதாரமற்ற ஊகமாகக் காற்றில் கரைந்துபோக வேண்டும் என்றே கூட்டாட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.


பெரிய கவலைகள்

ஏனென்றால், எண்ணிக்கை விதிதத்தைத் தாண்டி, அதைவிடவும் கவலைக்குரிய கூறுகள் தொகுதி மறுவரையறை நகர்வில் இருக்கின்றன. அதில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கிறபோது, தமிழ்நாட்டிற்குக் கூடுதல் உறுப்பினர்கள் (59) கிடைப்பார்கள் என்றாலும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவ பலம் கணிசமாக அதிகரித்துவிடும். அதைப் பயன்படுத்தி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கக்கூடிய நடவடிக்கைகளைச் சட்டமாக்கிவிட முடியும், கூட்டாட்சிக் கோட்பாடு புறந்தள்ளப்படும் என்று அரசமைப்பு சாசனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தற்போதுள்ள ஏற்பாட்டிலேயே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைக் கீழிறக்கி வேலைகளைக் குறைக்கிற விபி–ஜி ராம் ஜி என்று வேறொரு சட்டத்தைக் கொண்டுவர முடிகிறது. வந்தே மாதரம் தேசியப் பாடல் என்று கொண்டுவர முடிகிறது. தற்போதைய பலம் அதிகரிக்குமானால் வேறு எப்படிப்பட்ட சட்டங்கள் வருமோ?

ஒற்றை மதம் சார்ந்த நாடாக மாற்றுவதை நோக்கிய நகர்வுகளை எளிதாக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று, அரசமைப்பு சாசனம் கூறுகிற அரசின் மதச்சார்பின்மைத் தன்மையில் பிடிப்புள்ளவர்கள் அஞ்சுகிறார்கள்.


இத்தகைய ஆழமான, நாட்டின் எதிர்காலக் கட்டமைப்பு சார்ந்த அச்சங்கள் உள்ள சூழலில், அதற்கெல்லாம் இடமளிக்க மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் மேடையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தியிருக்க முடியும். இதில் தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன என்ற எண்ணத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்பது மாநில நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு தொடர்புள்ள அக்கறை. அப்படி ஒன்றுபட்டிருக்கவில்லை என்பதில் ஒன்றிய ஆளுங்கட்சி தனக்குச் சாதகம் என்று எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு செய்தி இருக்கிறது.


எப்படியோ, தமிழ்நாட்டு நலன் சார்ந்த ஒரு முக்கியப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அரசு மறுத்ததிலும், மற்றொரு முக்கியப் பிரச்னையில் முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததிலும் கைவிடப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தான். மாநில அரசியல் உடல்நலம் சீர்குலைந்திருப்பதன் அறிகுறியே இது!

[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் (13 ஆகஸ்ட் 2026)  எனது கட்டுரை

 


 

 


 

 

 





Thursday, 13 August 2026

அமைச்சர் மரிய வில்சன் கவனத்திற்காக மட்டுமல்ல...


 
மிழ் மொழியின் சொல்வளம், இலக்கியச் சிறப்பு, பண்பாட்டு நெறி ஆகியவற்றை வியந்து போற்றிய, தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ அறிஞர்களில் சிலர்

வீரமாமுனிவர்: "தமிழ் மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது; அதன் இலக்கண அமைப்பும் சொல்வளமும் உலகளாவிய வியப்பைத் தருபவை," என்று தமிழைப் புகழ்ந்தார். முதன்முதலில் சதுரகராதியைத் தந்ததுடன், 'தேம்பாவணி' என்ற காவியத்தையும் படைத்துத் தமிழ் காப்பிய உலகிற்குப் பங்களித்தார்.


ஜி.யு. போப்: "நான் இறக்கும்போது என் கல்லறையில் 'ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்' என்று எழுதப்பட வேண்டும்" என்று அறிவித்தார். திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் கொண்டுசென்று, தமிழின் அறக்கோட்பாடுகளையும் மெய்யியலையும் உலகறியச் செய்தார்.


கால்டுவெல்: "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலின் மூலம், தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் துணையின்றித் தனித்து இயங்கும் தனித்தியங்கும் பண்பு கொண்டது என்று எடுத்துக்காட்டினார். மற்ற சில திராவிட மொழிகளுக்குத் தாயாகவும் தமிழ் திகழ்வதையும் அறிவியல் பூர்வமாக நிறுவினார்.


ஹென்றி ஹென்றிக்ஸ்: தமிழ் அச்சுக்கலையின் தந்தை என்றழைக்கப்படும் இவர், தமிழில் முதன்முதலில் நூல்களை அச்சிட்டு, தமிழ் எழுத்து வடிவம் அச்சு ஊடகத்திற்குள் நுழைய வழிவகுத்த ஒரு முன்னோடி.


ரெவரெண்ட் பாப்லி: "திருக்குறள் மனிதகுலத்தின் பொதுவான அறநூல். அதில் காணப்படும் கருத்துகள் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது காலத்திற்கோ மட்டும் கட்டுப்பட்டவை அல்ல" என்று  போற்றியவர்.


தனிநாயக அடிகள்: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைத் தோற்றுவித்தவர். தமிழின் தொன்மையையும் செம்மொழித் தகுதியையும் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். "உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு இயற்கையையும் மனித நேயத்தையும் காதலையும் அறத்தையும் பாடிய மொழி தமிழ்" என்று பன்னாட்டு மாநாடுகளில் பறைசாற்றியவர்.


தமிழைப் புகழ்வதோடு நிற்காமல், அகராதிகள், இலக்கண நூல்கள், அச்சு வடிவங்கள், மொழிபெயர்ப்புகள் மூலமாகத் தமிழ் மொழியை நவீனத்தின் வாகனத்தில் பயணிக்கச் செய்வதிலும் தலையாய பங்காற்றிய, கிறிஸ்துவர்களான, பைபிள் படித்த வேறு பல கிறிஸ்துவ முன்னோடிகளும் உண்டு.



இந்த விவரங்கள், தனக்கும் தமிழ்ப்பற்று உண்டு என்று சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சனின் கூடுதல் கவனத்திற்காக. அதேவேளையில் அவருடைய கவனத்திற்காக மட்டுமல்ல. 


[0]

-முகநூல் பதிவு


Wednesday, 5 August 2026

பறையில் அதிர்ந்து, குத்தாட்டத்தில் உதிர்ந்த பாலினப் பாகுபாடு




சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எதிராக அமைந்திருக்கும் பெரியார் சிலையிலிருந்து, கடற்கரைக்கு இட்டுச் செல்லும் சிவானந்தா சாலை அன்றைய நள்ளிரவில் பல வண்ணமாய் மலர்ந்திருந்தது. இயற்கையின் வண்ணங்கள் வேறுபடலாம், ஒருபோதும் ஏற்றத்தாழ்வாய் மாறுபடுவதில்லை என்று எடுத்துக்காட்டுகிற சிறியதொரு அணிவகுப்புதான் அந்த மலர்ச்சிக்குக் காரணம். 


கடந்த ஜூலை 4 அன்று பல்வேறு செய்திகளை உள்ளடக்கியதாக  “பாலின சமத்துவ நடை” மேற்கொள்ளப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மத்திய சென்னை மாவட்டக் குழு அந்த நேரத்தில் அந்த இடத்தில் இந்த லட்சிய நடையில் கலந்துகொள்ள அழைத்திருந்தது.


அந்த அழைப்பிதழை நான் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்து வேடிக்கை பார்க்க வந்திருந்த நண்பர் கேட்டார், “ஒட்டுமொத்த சமத்துவ சமுதாயம்தானே கம்யூனிஸ்ட்டுகளின் லட்சியம் என்று சொல்கிறீர்கள். பொருளாதாரத்தில்  ஏழை பணக்காரர், சாதியில் மேல் கீழ், மதத்தில் பெரும்பான்மை சிறுபான்மை, கல்வியில் அரசுப் பள்ளி தனியார் மெட்ரிகுலேசன் ஸ்கூல் … இப்படி நிறையப் பாகுபாடுகள் இருக்கிறபோது, பாலின சமத்துவத்துக்காக மட்டும் ஏன் இந்த நடை?”


அழைப்பிதழ் எனக்கு வந்தபோதே ஏற்பட்ட சிந்தனையைச் சொல்வதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்ததாகக் கருதி அதை அவருடன் பகிர்ந்தேன். “இயற்கையின் இன்னொரு விலங்கினமாகிய மனிதர்களிடத்தில்தான் நீங்கள் சொல்கிற எல்லாப் பாகுபாடுகளும் இருக்கின்றன. அத்தனைக்கும் மூத்தது பாலினப் பாகுபாடுதான். நிலம், விளைச்சல், சொத்து என்று வந்த பிறகு செல்வம் தேடிக் கொண்டுவருபவன் ஆண், அதைப் பாதுகாத்து அவனுடைய வாரிசைப் பெற்றெடுத்து ஒப்படைப்பவள் பெண் என்ற ஏற்பாடுதான் முதல் பாகுபாடு. ஆகவேதான் அந்த முதல் சமத்துவமின்மைக் கோட்பாடு தகர்வதற்காக இந்தப் பாலின சமத்துவ உறுதிப்பாடு.”


நண்பரிடம் சொன்னது சரிதான், சரிதான் என்று உரக்க ஆமோதித்தது “டர்ர டக்கர டர்ர டக்கர” என்று முழங்கத் தொடங்கிய பறை. அதை இசைத்தவர்கள் அதற்குரிய பயிற்சியுடன் ஆடினார்கள் என்றால், கேட்டவர்கள் அதற்குரிய எழுச்சியுடன் ஆடினார்கள். உடலின் ஒத்துழையாமை காரணமாக ஆட முடியாதவர்கள் கூட தலையையோ கையையோ காலையோ அசைத்தபடி அந்த ஆட்டத்தில் பங்கேற்றார்கள். அடுத்தடுத்த கலைக்குழுக்கள் வந்து தங்கள் திறன்களை வெளிப்படுத்த,  ஒரு மையமான இலக்கை நோக்கித் தொடங்கிய தமது பயணம் இந்தப் பிள்ளைகளால் இவ்வாறாகவும் தொடர்வது கண்டு, சிலை வடிவாகவே சிலிர்த்திருப்பார் தந்தை பெரியார்.



தமிழ் மண்ணில் இந்தச் சிந்தனைகளைக் கிளறிவிட்ட அவரது சிலைக்கு மாலையணிவித்து நடை இயக்கத்தைத் தொடங்கிவைத்தார் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத். உயர்ந்த செங்கொடிகள் வழிநடத்த, ஒருங்கிணைத்தார் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா.



பாலினம் என்றால் பெண்ணும் ஆணும் மட்டுமல்ல, திருநங்கை, திருநம்பி,  மற்றுமுள மாறுபாலினத்தவரும்தான் என்ற அறிவார்ந்த புரிதல் இன்று வளர்ந்திருக்கிறது. அந்தப் புரிதல் அங்கேயும் ஒளிர்ந்தது.


“நீங்களெல்லாம் வந்து பங்கேற்பதால்தான் இந்த நடை இயக்கம் முழுமை பெறுகிறது,” என்று நான் சொன்னேன். அதற்குத் தனது ஏற்பைக் கைகுலுக்கலால் தெரிவித்தார் திருநங்கைச் செயல்பாட்டாளர் அக்னி. 


அந்த எழில்மிகு வண்ணக் கலவையை ஒற்றியெடுத்தது போல, அணிவகுப்பின் முன்பாக பல வண்ண விளக்குகளின் குடைகள் ஏந்திச் செல்லப்பட்டன. பாகுபாட்டு இருளின் பொழிவைத் தடுத்த வெளிச்சக் குடைகள்!


நடை என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது என்றாலும், அங்கிருந்து புறப்பட்டவர்கள் எல்லோரும் நடந்தார்கள் என்று சொல்வதற்கில்லை.  அவரவர்க்கு  வந்தபடியும், ஆட்டக்காரர்களுக்கு ஈடுகொடுத்தபடியும், ஆட முடியாதவர்கள் அடுத்த முறையாவது தாங்களும் ஆட வேண்டுமென ஆசைப்பட்டபடியும் ஆடிக்கொண்டேதான் சென்றார்கள்!  மகளிர் அமைப்பினர், தொழிலாளர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர்கள், வணிகர்கள் எனப் பன்முகப் பிரதிநிதித்துவத்தோடு ஆடினார்கள். அந்த ஆட்டத்தில் உதிர்ந்து விழுந்தது வியர்வைத் துளிகளோடு, வயது வேறுபாடும், அறிமுகமாகாத பெண்களும் ஆண்களும் திருநர்களும் சேர்ந்து கும்மாளம் போடுவதாவது என்ற, காலமெல்லாம் ஒட்டவைக்கப்பட்டு வந்துள்ள சமூக அசூயையும்தான்.



தானும் இடுப்பை அசைத்துக்கொண்டே நண்பர் கேட்டார்: “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு ஏன் இந்த இரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்?”




“சமத்துவம் என்றால் அன்றாட நடைமுறைகளிலெல்லாம் ஊடுறுவ வேண்டுமல்லவா? இரவில் ஊர் சுற்றுவதென்றால் அது ஆண்களுக்கானது என்ற சமூக விதி ஒன்று இருக்கிறதல்லவா? அதை உடைப்பதற்காகத்தான், இரவுகள் எங்களுக்காகவும்தானடா என்று பெண்கள் தங்கள்  உரிமையை நிலைநாட்டிக்கொள்வதன் குறியீடுதான் இந்த ராப்பொழுது நடை.”


அந்த விளக்கத்தை அப்படியே எதுகை மோனையோடு எதிரொலித்தன அணிவகுப்பு முழக்கங்கள். அத்துடன் பெண்களின் நியாயங்களை வலியுறுத்துகிற, மாதரை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துகிற, சாதி ஆணவ வன்மங்களைத் தடுக்கும் சட்டம் இயற்றிடக் கோருகிற, இயற்கையின் பாலினப் பன்மைத்துவத்தைக் கற்பிக்கிற, அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்குக் குழந்தைககளுக்கு உள்ள உரிமைகளை எடுத்துரைக்கிற முழக்கங்கள் அவை.




சாலை முடிவில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா, பாலின சமத்துவ உறுதியேற்பை முன்மொழிந்தார்கள். பறையிசைப் பின்னணியோடு அனைவரும் வழிமொழிந்தார்கள்.


“பாலின சமத்துவத்துக்கான இந்த நடை, அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் ஏவிவிடுகிற  அனைத்து ஆதிக்கங்களையும் ஏறி மிதிக்கப் புறப்பட்டிருக்கிறது,” என்று தன் வாழ்த்துரையில் நயம்படக் குறிப்பிட்டார் சம்பத்.


இந்த நடை மாரத்தான் ஓட்டம் போல தொலைவிலும் பரப்பிலும் விரிவடைய வேண்டும், நாளை தமிழகம் முழுவதும் பரவ வேண்டும், நாளை மறுநாள் நாடுதழுவிய இலக்குகளைச் சென்றடைய வேண்டும் என்ற பெருங்கனவுப் பயிர் மனதில் விதைக்கப்பட்டது. சில மீட்டர் தொலைவில் அலையடித்த வங்கக் கடல் அதற்கு நீரூற்றியது.


[0]

செம்மலர்’ ஆகஸ்ட் 2026 இதழில், சென்னை பாலின சமத்துவ நடை பற்றிய எனது சித்தரிப்பு


படங்கள்: கவி மணி


Monday, 3 August 2026

அறிவியல் சார்ந்த இயற்கை வாழ்வா, இயற்கை சார்ந்த அறிவியல் வாழ்வா?


யற்கையும் அறிவியலும் ஒன்றோடொன்று இணைந்ததே. இயற்கையைப் புரிவது அறிவியல். அறிவியலைக் கையாள்வது இயற்கை. இரண்டும் வேறு வேறு அல்ல, ஒன்றுக்கொன்று பகையுமல்ல.


செயற்கையான அறிவியலைக் கைவிட்டு இயற்கையைத் தழுவி வாழ்வதே நலம் என்றெல்லாம் பேசுகிறார்கள். அறிவியல் பார்வையோடு வாழ்வதென்பதே இயற்கையாய் வாழ்வதுதான்.


அப்படியானால் அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகள் இயற்கையை அழிப்பதாக வருகின்றனவே என்று கேட்கலாம். இயற்கையை அழிக்கிற ஆராய்சிகள் அறிவியலே இல்லை; தெரிந்தே அந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறவர்கள் பொறுப்புள்ள அறிவியலாளர்களே இல்லை என்றுதான் பொருள். உண்மையான அறிவியல் ஒருபோதும் தீங்கான அழிவியல் ஆகாது. 


இயற்கை வேளாண்மை பற்றி இப்போது பேசத் தொடங்கியிருக்கிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்வென்பது வேளாண்மையோடு தொடர்புடையது மட்டுமல்ல. இயற்கை விவசாயம் எனப்படுவது மட்டுமே இயற்கை சார்ந்த அறிவியல் அல்ல.


பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கை சார்ந்த அறிவியல்தான். அதன் முதல் படியில் குடும்பமாக வாழ்வது இயற்கை, அதில் குடும்ப ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பது அறிவியல்.


சமூகத்தோடு கலந்து, சமூகத்திற்காக வாழ்வது இயற்கை. அப்படி வாழத் தொடங்கியதால்தான், அறிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியதால்தான் இத்தனை லட்சம் ஆண்டுகளில், எத்தனையோ பேரிடர்களைக் கடந்து மனிதப் பரிணாமம் தாக்குப் பிடித்துத் தொடர்கிறது. சமூகத்தோடு வாழ்வது சமத்துவ மாற்றங்களுக்காக வாழ்பதாகப் பரிணமிப்பது இயற்கை அறிவியல்.


“உனக்கெதற்கு அரசியல்? உனக்கெதற்குப் பொது வாழ்க்கை? நீ உண்டு, உன் குடும்பம் உண்டு என்று நிம்மதியாக வாழ்ந்திரு” என்று தனிமைப்பட்டு வாழ் அறிவுறுத்த நான்கு பேர் இந்த நவீன தலைமுறைக் காலத்திலும் வலம் வருகிறார்கள். மரம் சருகுகளை உதிர்ப்பது போல இவர்களின் போதனைகளைப் புறந்தள்ளுவதும் இயற்கை அறிவியல்தான்.


விவசாயிகள் தலைமுறை தலைமுறையாச் சேகரித்துச் சேமித்த அறிவுச் செல்வத்தைப் பதுக்கிவிட்டு, உலகச் சந்தைத் தேவைகளுக்காக விதைப்பையும் உழைப்பையும் மாற்றுகிற கார்ப்பரேட் கட்டாயங்களை முறியடிப்பது ஒரு தலையாய இயற்கை அறிவியல்.


சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்து, படிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சாதி சமய வேலிகளை அறுத்து, மருத்துவர், பொறியியலாளர், வழிகாட்டும் தலைவர் என்றெல்லாம் உயர்நிலைகளுக்கு வந்தவர்கள் பற்றிப் படிக்கிறோம், பாராட்டுகிறோம். இனி அப்படியொருவர் வந்துவிட முடியுமா என்ற விசனத்தை  ஏற்படுத்துகின்றன, அனைவருக்குமான நுழைவாயிலை அடைக்கும் நுழைவுத்தேர்வுச் சூக்குமங்கள். அதை எதிர்த்துப் போராட்டக் களம் காண்பதும் இயற்கை அறிவியலே.


எவருக்கும் எந்தக் கடவுளையும் நம்புவதற்கு, வணங்குவதற்கு, கடவுளை மறுப்பதற்கு,  நம்பாமல் இருப்பதற்கு உள்ள உரிமை இயற்கையானது. அதை மதிப்பது அறிவியலானது. மாற்றங்களும் ஏற்றங்களும் வழிபாடுகளால் வராது, சரியான மாற்று வழிப் பயணங்களால் நிச்சயமாக வரும் என்ற தெளிவு இயற்கையானது, அறிவியலானது.


[0]

–‘தமிழ்த்தேசம்கிளப்ஹௌஸ் குழு கூடுகையில் (ஆக.1) தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளரும் இயற்கை வேளாண்மை முன்னணிச் சாதனையாளருமான கு. செந்தமிழ்ச்செல்வன் “அறிவியல் சார்ந்த இயற்கை வாழ்வியல்” என்ற தலைப்பில் உரை வழங்கினார். தொடர்ந்த கலந்துரையாடலின்போது நான் பகிர்ந்த கருத்துகளும், அங்கே விடுபட்ட கூடுதல் சிந்தனைகளும் இவை.





Sunday, 2 August 2026


வினாத்தாள் கசிவுகள் வெறும் குற்றச் செயல்கள் மட்டுமல்ல, அவை நம் நாட்டின் கல்வி நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சீரழிக்கும் செயல். லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பு, பெற்றோரின் கனவு, சமூகத்தின் எதிர்காலம் ஆகியவற்றை ஒரே தேர்வு முறையின் மீது குவித்துவைத்திருக்கும்போது, அந்த முறையின் ஒவ்வொரு குறைபாடும் தேசியப் பிரச்னையாகவும் மாறுகிறது.

அதனால்தான், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளில் தொடர்ச்சியாக வெளிப்பட்ட முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள், நிர்வாகக் குளறுபடிகள் வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக அல்லாமல், கல்விக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் பிரச்னைகளாகவும் மாறியிருக்கின்றன.

இதற்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் முன்னெடுத்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, தேர்வு முறையை ஆய்வு செய்து சீர்திருத்தப் பரிந்துரைகளை வழங்க நந்தன் நீல்கேனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இன்னொரு புறம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்க வகைசெய்யும் சட்ட முன்வரைவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நந்தன் நீல்கேனி இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முன்னணிப் பெயர். தற்போது இயல்பானதாகிவிட்ட யுபிஐ பணப் பரிமாற்றம், டிஜிட்டல் முறையில் பணம்  செலுத்துதல் போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்த அரசுக்கு வழிகாட்டல்கள் வழங்கியவர். தேசத்தின் மக்களை வெறும் அடையாள எண்களாக்கி, அதைப் பெறுவதற்கு அலையவிடும் ஆதார் அட்டைக்கு ஆலோசனை கூறியவரும் இவர்தான். முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் குழுமத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.


அவர் தலைமையிலான குழு அரசுக்கு என்ன ஆலோசனைகளை வழங்கப் போகிறதோ? பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுகிற சம்பிரதாயம் பின்பற்றப்படலாம். எப்படியானாலும், மாணவர்கள் மன உளைச்சலின்றித் தேர்வுகளைச் சந்திக்க உதவிடும் வகையில் அந்தக் குழுவுக்கு சில ஆலோசனைகளை முன்வைக்கலாம்.


முதல் அங்கீகாரம்


இந்திய உயர்கல்விக் களமும், நாட்டின் வருங்காலத்தைக் கட்டவிருக்கும் மாணவ சமூகமும் நிகழ்காலத்தில் ஒரு தீவிரமான நம்பிக்கையின்மைச் சூழலை எதிர்கொண்டிருப்பதை முதலில் குழு அங்கீகரிக்க வேண்டும்.  தேசிய அளவிலான தேர்வுகளை நடத்திக்கொடுப்பதற்காக அமைக்கப்பட்டது ‘தேசிய தேர்வு முகமை’ (என்டிஏ). அனைத்துவகை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான ‘நெட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை என்டிஏ நடத்துகிறது. இந்தத் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள், தேர்வு முறையின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன.


‘நீட்’ தேர்வே கல்லூரிகளையும் பல்கலைகளையும் தாண்டி தனியார் பயிற்சிக் கூடங்கள் (கோச்சிங் சென்டர்) கோடிக்கணக்கில் அமோக வசூல் நடத்தும் ஏற்பாடாகத்தான் இருக்கிறது என்று மாணவர்–இளைஞர் சங்கங்களின் தலைவர்களும் கல்வி அக்கறையாளர்களும்  சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒன்றிய கல்வியமைச்சகத்தின் உயர்கல்வித்துறை “கட்டுப்பாட்டில்” செயல்படும் தன்னாட்சி நிறுவனமான தேசிய தேர்வு முகமைக்கு, வினாத்தாள் அச்சிடுதல் உள்ளிட்ட முக்கியமான பல பணிகளை மேற்கொள்ளத் தனியார்  “சேவைகள்”  பெருமளவுக்குத் தேவைப்படுகின்றன. சொந்தமான ஊழியர்கள் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வெளியார் நியமனங்களையே  சார்ந்திருக்கிறது. ஆகவே என்டிஏ கட்டமைப்பிலேயே முறைகேடுகள் நுழைவதற்கான எலிவளைகள் இருக்கின்றன. இதையும் நீல்கேனி குழு ஒப்புக்கொள்ள வேண்டும், அரசுக்குச் சுட்டிக்காட்டவும் வேண்டும். 


ஒரே கட்டத் தேர்வு ஏன்?


கோடிக்கணக்கான மாணவர்கள், தொடக்கப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலுமாக 12 ஆண்டுகள் ஒவ்வொரு வகுப்பாகப் பல கட்டங்களில் படித்து உள்வாங்கியிருக்கும் உயிரியல் அறிவை, 3 மணி 20 நிமிட நேரத்தில் ஒரே கட்டமாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடை முறை இப்போது இருக்கிறது. மருத்துவ அறிவியல் தேர்வுக்கான இந்த அறிவியல்பூர்வமற்ற நடைமுறை மாணவர்களுக்குப் பெரும் மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது. நிர்வாக அடிப்படையிலும் அது தேவையற்ற நெருக்கடியைத் தருகிறது.


இதனை மாற்றி, முதல்நிலைத் தேர்வு (ப்ரீலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெய்ன்ஸ்) என இரண்டு கட்டங்களாகப் பிரிப்பது மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். நிர்வாகப் பணிகளும் இலகுவாகும். மாணவர்களின் அடிப்படைத் தகுதியை அளவிடுவதாக முதல்நிலைத் தேர்வு, அவர்கள் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று மதிப்பிடுவதாக முதன்மைத் தேர்வு.




ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை எப்படி  கூட்டாட்சி மாண்புக்கு எதிரானது என்று விமர்சிக்கப்படுகிறதோ, அதே போல் ஒரே நாடு, ஒரே தேர்வு என்பதும் அனைத்து அதிகாரங்களையும் ஒரே அமைப்பிடம், அதுவும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருக்கிற அமைப்பிடம் குவிப்பதற்கே வழி செய்கிறது. அது கல்வி மேம்பாட்டுக்கு ஆபத்தானது. இதைத் தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சிறிய புள்ளியில் ஏற்படும் தவறு, நாடு முழுவதையும் பாதிக்கும் நிலையை அனுமதிக்கக்கூடாது என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.


மாணவர் மனங்களில் சுமையேற்றப்படுவது ஒருபுறமிருக்க, நாட்டின் அரசமைப்பு சார்ந்த கூர்மையான நிலைமை ஒன்றும் இருக்கிறது.  உயர்கல்வி வழங்குவதிலும் அதற்காக மாணவர்களைத் தயார்ப்படுத்துவதிலும் மாநிலங்களின் கல்வித்துறைகளுக்கு உள்ள தகுதியை நீட், நெட் இரண்டும் கேள்விக்கு உட்படுததுகின்றன.


எடுத்துக்காட்டாக, இந்தியாவின் ஒரு சிறப்பான மருத்துவ சுற்றுலாத் தலமாகத் தமிழ்நாடு அடையாளம் பெற்றிருக்கிறது. பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழ்நாட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் இரண்டிலுமே பணியாற்றும் மருத்துவர்கள் இந்த வளர்ச்சியில் பங்களித்திருக்கிறார்கள். பல நாடுகளின் மருத்துவமனைகளில் இங்கிருந்து படித்துச் சென்றவர்கள் பணியாற்றுகிறார்கள்.


இவர்கள் கடந்த பத்தாண்டுகளில் நீட் எழுதித் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் அல்ல. அதற்கு முன் மாநில உயர்கல்வித்துறை நடத்திய நுழைவுத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள்தான். தமிழ்நாட்டில் 2007இல் அன்றைய முதலமைச்சர் கலைஞர், நுழைவுத் தேர்வையே விலக்கி, 12ஆம் வகுப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் மருத்துவம் பயிலலாம் என்று கொண்டுவந்த நடைமுறையில் பயின்றவர்கள்தான். மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற நிலைமைகள் இருந்திருக்கக்கூடும்.


ஆக, மாநிலங்களின் கல்வித்துறைப் பணியையும் தேர்வுத் தகுதியையும் அவமதிக்கிறது நீட். ஆகவே உயர்கல்வி,  மாணவர் சேர்க்கை இரண்டிலுமே மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உரிய தன்னாட்சியையும் அதிகாரத்தையும் மீட்டளிப்பதாக நீல்கேனி குழுவின் பரிந்துரைகள் அமைய வேண்டும். ஒன்றிய-மாநில கூட்டாட்சிக் கோட்பாட்டு மேன்மைக்கு ஏற்ப தேர்வு முறைகளைப் பரவலாக்குவதற்குப் பரிந்துரைக்க வேண்டும்.



தேசிய முகமைக்குத் தேவை தன்னாட்சி


என்டிஏ ஒரு அமைச்சகத்தின் கீழுள்ள முகமையாக அல்லாமல், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) போன்ற தன்னாட்சி அமைப்பாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்ட, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தடுக்கப்பட்ட, தன்னாளுமை உள்ள அதே வேளையில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகக் கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும்.


போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பல தனியார் மையங்களை வாடகைக்கு எடுத்துத்தான் நீட், நெட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது முறைகேடுகளுக்கு உத்தரவாதமான வசதியாகிறது. இதற்கு மாற்றாக, நாடு முழுவதும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் கொண்ட அரசாங்கம் சார்ந்த நிலையான தேர்வு மைய உட்கட்டமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைக்க வேண்டும்.


தொழில்நுட்பப் பாதுகாப்பு


நீல்கேனியின் தொழில்முறை அனுபவத்துக்கு இங்கேதான் மிக முக்கியமான வேலை இருக்கிறது. வினாத்தாள் உருவாக்கம், விநியோகம், விடைத்தாள்கள் பெறல், மதிப்பீடு என எல்லாப் படிகளிலும் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் கட்டமைப்பை உருவாக்கியாக வேண்டும். வினாத்தாள் கசிய முடியாத  குறியாக்கம் (என்கிரிப்ஷன்), கைரேகை உள்ளிட்ட உயிரியல் அளவை (பயோமெட்ரிக்)  வருகைப்பதிவு, தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்தின் வழியே சாத்தியப்படுத்த வேண்டும். எத்தனை பாதுகாப்பான தொழில்நுட்பமானாலும், அதை உடைக்கத் தெரிந்த கில்லாடிகள் வருவார்கள்தான். மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் போல சந்தேகம் தொடரும்தான். நீல்கேனி இதையும் ஆராய்ந்து நம்பகமான தடுப்பணைகளுக்கு வழி செய்ய வேண்டும்.


இது தொடர்பாக, தில்லி ஐஐடி மேனாள் இயக்குநர் வி. ராம்கோபால் ராவ் எழுதியுள்ள கட்டுரை (டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூலை 28), வாசகர்கள் மட்டுமின்றி நீல்கேனி குழுவின் கவனத்திற்கும் உரியது. கல்வி உரிமைக்காக இயங்கிடும் களச்செயல்பாட்டாளர்களும் பல்வேறு ஆலோசனைகளைத் தெரிக்கிறார்கள். மாணவர் அமைப்புகளும் இதில் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கின்றன. நேர்முகக் கூட்டங்களாக, தனிப்பட்ட சந்திப்புகளாக, இணையவழி ஆவணங்களாக அவற்றையெல்லாம் கோரிப் பெறுவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்வது ஆலோசனைக் குழுவின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும்.



நிச்சய வழி


இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே, ஒரு வகையில் ‘நீட்’, ‘நெட்’ தேர்வுகள் இனி நிலைத்துவிடுமோ என்ற கையறு நிலையிலிருந்தே முன்வைக்கப்படுகின்றன. அமைச்சர் பதவி விலகுதல், வழக்குகள் விலக்கப்படுதல், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ஆகிய கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதில் கூட, நீட் நிலைப்பதற்குத் தடையில்லை என்ற ‘திருப்தி’  இருக்கக்கூடும்.


ஆனால். உண்மையிலேயே நிலையான, நிச்சயமான நீர்வு என்றால் – இந்தத் தேசிய நுழைவுத் தேர்வுகளை நிலையாக நீக்குவதுதான்.   மாநிலங்களின் கல்வித்துறைகளுடைய மாண்பையும், தேர்வுகளை நடத்தும் தகுதியையும் மாணவர்களது திறன் வளர்க்கும் ஆற்றலையும் அங்கீகரிப்பதுதான். ஒன்றியக் கையை விலக்கிக்கொண்டு, மாநிலக் கல்வித்துறைகளிடமே பொறுப்பை ஒப்படைப்பதுதான். கல்வியே மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்படுவது மேலும் அருமையான வழி. போராட்டம்  முழு வெற்றியடைவது அப்போதுதான்.


மாநிலங்களே தேர்வுகளை நடத்தியபோது மாணவர்களின் அலைச்சலும், முறைகேடு வாய்ப்புகளும் மிகுதியாக இருந்ததால்தான் நீட், நெட் தேர்வுகளைக் கொண்டுவர வேண்டியிருந்ததாகத்தானே ஒன்றிய அரசு கூறியது? பிறகு எப்படி மாநிலங்களிடமே விட முடியும் என்ற கேள்வி எழலாம். முறைகேடுகள் ஊடுருவ வழியின்றி மாநிலத் தேர்வுகள் அல்லது நேரடி மாணவர் சேர்க்கைகள் நடைபெறுவதற்கு ஏற்ற ஆலோசனைகளை நீல்கேனி குழு அளிக்கலாம். ஒன்றிய ஆட்சியாளர்கள் அதை ஏற்கச் செய்வதற்கான நாடுதழுவிய போராட்டம் தேவைப்படுலாம், உறதியாக அது வெற்றி  பெறும்.

[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் எனது கட்டுரை


Monday, 27 July 2026

விருதுகளால் விசிறிவிடப்படும் வெறுப்பரசியல்



லை, இலக்கியப் படைப்பாக்கத்தில் தலையாய இடம் வகிப்பது அரசியல் சமூக விமர்சனம் ஆகும். அந்த வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஒரு சிறப்பான வளர்ச்சி நிலைதான், ஏற்கெனவே வந்த படைப்புகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் மறுவாசிப்புக்கும் மறுவிமர்சனத்துக்கும் உட்படுத்துவது.

எந்தவொரு வரலாற்றுப் பதிவையும் அவரவர் கண்ணோட்டத்தில் மறுவிமர்சனத்திற்கு உட்படுத்தும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அது ஆரோக்கியமான தொடர் விவாதங்களுக்கும் புதிய தெளிவுகளுக்கும் இட்டுச்செல்ல வேண்டும்.

புனிதம் தகர்த்த நாவல்

2009ஆம் ஆண்டில் ஹிலாரி மாண்டல் எழுதிய ‘உல்ஃப் ஹால்’ (ஓநாய் மண்டபம்) என்ற ஆங்கில நாவல் வெளியானது. 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட எட்டாம் ஹென்றி அமைச்சரவையில் தலைமை அமைச்சராக இருந்த தாமஸ் மோர் ஒரு புனிதப் பிறவியாகவே சித்தரிக்கப்பட்டவர். தாமஸ் க்ராம்வெல் என்ற ஓர் எளிய மனிதர் தலைமை அமைச்சரின் போலித்தனங்களை உரித்துத் தாமஸ் மோரின் புனிதப் பிம்பத்தைக் கலைப்பதுதான் அக் கதையின் கரு.

ஆங்கில இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும் விவாத அலைகளைக் கிளப்பிய அந்த நாவல் பின்னர் புக்கர் பரிசு உள்பட, உலகளாவிய பல விருதுகளைப் பெற்றது. கத்தோலிக்கத் திருச்சபையின் பிடியிலிருந்து அரசு விடுபட்டதைச் சித்தரித்த புனைவு என்று திறனாய்வாளர்கள் பாராட்டினார்கள்.
பிபிசி நிறுவனம் 2015இல் அந்தக் கதையைத் தொலைக்காட்சித் தொடராகவும் தயாரித்தது. உலக மேடைகளில் இப்படி வேறு பல படைப்பாக்கங்களையும் காண முடியும்.

இந்தியாவில், 1984இல் வெளியான ‘ரண்டாமூழம்’ மலையாள நாவலில், மகாபாரதக் கதையைப் பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் கண்ணோட்டத்தில் சொன்னார் எம்.டி. வாசுதேவன். அந்த நாவல் பாஞ்சாலி மீது பீமன் கொண்ட உண்மையான காதலை விவரித்தது.

மிக முக்கியமாக, போரின் கொடூரங்கள் குறித்த பதற்றத்தையும் உறுத்தலுணர்வையும் ஏற்படுத்தியது. மலையாள இலக்கிய உலகம் அதற்கு வயலார் விருது உள்ளிட்ட மரியாதைகளை அளித்து மகிழ்ந்தது.

தமிழில் இராமாயணத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்திய ‘இராவண காவியம்’ (புலவர் குழந்தை – 1946), பெண்ணின் சுயமரியாதை உணர்வை வேறு கோணத்தில் சொன்ன ‘அகல்யை’ (1934), ‘சாபவிமோசனம்’ (1943) (புதுமைப்பித்தன்), மன்னர்களின் சாகசத்தையும் சல்லாபத்தையும் விவரித்த கதைகளுக்கு மாறாக அந்நாள் மக்களின் கதைகளைப் பேசிய ‘உப பாண்டவம்’ (எஸ். ராமகிருஷ்ணன்) என குறிப்பிடத்தக்க பல படைப்புகள் வந்துள்ளன.

மூவேந்தர்களையும் பரம்புமலை பாரியையும் பற்றிய முந்தைய பாடங்களிலிருந்து விலகி, சமவெளிப் பேரரசுகளின் மண்ணாதிக்க வெறியோடு போராடிய மலைக்காட்டு மக்கள் தலைவனின் மூலமாக அவர்களின் வாழ்வியலையும் நமக்குக் காட்டியது “வேள்பாரி” (சு. வெங்கடேசன், 2018).

அதைப் படித்த பல குடும்பங்களில் குழந்தைகளுக்குக் கதை மாந்தர்களது பெயர்கள் சூட்டப்படுகிற பெரும் அங்கீகாரம் அந்த நாவலுக்கு இன்றளவும் கிடைத்தவண்ணம் உள்ளது.>

கட்டபொம்மனும் ஹைதரும்

திரைப்படங்களிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கொள்ளைக்காரனாகவே சித்தரிக்கப்பட்டு வந்தவனை, விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயமாக முன்வைத்தது சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடிப்பில், சக்தி கிருஷ்ணசாமி எழுத்தில், பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” (1959).

மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்ததற்காக மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொல்லப் புறப்பட்டு பின்னர் மனசாட்சியின் தண்டனைக்கு உள்ளாகிறவனின் கதையைக் காட்டிய ‘ஹே ராம்’ (கமல்ஹாசன், 2000) ஒரு வகை மறுவிமர்சனம்தான்.

காஷ்மீர் மண்ணை மீட்கும் நாயகர்களின் சாகசங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு, அடக்குமுறைகளால் அல்லாடும் எளிய மக்களின் துயரத்தைத் திரைக்குக் கொண்டு வந்த இந்திப் படம் ‘ஹைதர்’ (2014). ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற “ஹேம்லட்’ நாடகத்தைத் தழுவி பஷாரத் பீர், விஷால் பரத்வாஜ் எழுதி, பின்னவரின் இயக்கத்தில் ஷாஹித் கபூர், தபு உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

1919இல் பஞ்சாப் மண்ணின் ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் திரண்டிருந்த மக்களைத் துப்பாக்கிக் குண்டுகள் தீருமட்டும் கொன்று குவித்துக் குதூகலமடைந்தவன் ஜெனரல் டயர். அவனைச் சுட்டுக்கொன்ற உத்தம் சிங் ஒரு பழிவாங்கும் தீவிரவாதியாகவே காட்டப்பட்டு வந்திருக்கிறார். அவரது ஆழ்ந்து ஆராயும் திறனையும், அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொந்தளித்த துணிவையும் சொன்னது 2021இல் ஓடிடி தளத்திற்கு நேரடியாக வந்த ‘சர்தார் உத்தம்’. கதையாக்கம் சுபேந்து பட்டாச்சார்யா, ரிதேஷ் ஷா, முதன்மைப் பாத்திரத்தில் விக்கி கௌஷல், இயக்கம் சுஜீத் சர்க்கார்.

பகை மூட்டப் படங்கள்

இப்படிப்பட்ட மறுவிமர்சனப் படைப்புகள் வரலாற்றுப் பரப்பின் புதிய எல்லைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. மாற்றி யோசிக்கும் கலையைக் கற்றுத் தருகின்றன. நலமான மாற்றங்களுக்கு வித்திடும் விவாத வயலைப் பண்படுத்துகின்றன. ஆனால் மறுவிமர்சனம் என்ற போர்வையில் அப்பட்டமான வெறுப்பரசியல் நெருப்பை வளர்க்கிற, மக்களிடையே பகைமையைைக் கிளறிவிடுகிற கைங்கரியங்களில் சிலர் இறங்குகிறார்கள்.

ஏதோ காரணத்தால் நேரடியாகவோ மறைமுகவோ தங்களை ஒப்படைத்துக்கொண்ட அமைப்புகளின் திட்டங்களுக்கு ஏற்பக் கதைகளை உருவாக்குகிறார்கள். நம்புவதற்காக சில உண்மைகளோடு நம்ப வைப்பதற்கான பொய்களைக் கோர்த்துச் செய்கிறார்கள்.

கலையும் அரசியலும் எப்போதும் தனித்தனியாக இயங்குவதில்லைதான். ஆனால், அதிகார பீடத்தின் குரலாகக் கலை மாறும்போது, அது தனது உயிராதாரச் சுதந்திரத்தை இழக்கிறது, நேர்மையைத் துறக்கிறது, அரசாங்கப் பரப்புரைக் கருவியாகச் சுருங்குகிறது.

காந்தி மறுகொலை

விடுதலைப் போராட்டக் காலத்தில், பல்வேறு இயக்கங்கள் தங்களது வழிகளில் இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தன. அப்போது காந்தி மேற்கொண்ட வன்முறையற்ற பாதை நாட்டின் பெருந்திரளான மக்களை ஈர்த்தது, போராட்டத்தில் ஈடுபட வைத்தது. அந்நேரத்தில் அவரோடு முரண்பட்டவர்களும் பின்னர் இதை ஏற்றுள்ளார்கள்.

விடுதலை வரலாற்றின் அழுத்தமான அத்தியாயங்களில் ஒன்றாக அது பதிவாகிவிட்டது. ஆனால், அவருடைய அந்தப் பாதையால்தான், சாவர்க்கர் கையில் எடுத்த ஆயுதமேந்திய பாதை பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும், அதனால்தான் சாவர்க்கரின் லட்சிய பாரதம் உருவாகாமல் போய்விட்டதாகவும் விவரிக்கிறது ‘சுதந்திரிய வீர் சாவர்க்கர்’ என்ற திரைப்படம் (2024). சாவர்க்கரின் லட்சிய பாரதம் என்பது இந்துராஷ்டிரம் எனப்படும் ஒற்றை மத ஆதிக்க அரசுதான். இந்திய மக்கள் தங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் அதை நிராகரித்தார்கள்,

எல்லா மதத்தினருக்கும் சொந்தமான, மதமே இல்லாதவர்களுக்கும் உரியதான நாடு இது, இதன் அரசு மதச்சார்பற்றது என்று அறிவிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நிறுவினார்கள். ஆனால், சாவர்க்கரை கதாநாயனாக்கி, காந்தியை வில்லனாக்கியிருக்கிறார் உட்கர்ஷ் நைதானி என்பவரோடு சேர்ந்து கதையை எழுதியவரும், சாவர்க்கர் பாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் ரந்தீப் ஹூடா.

நியாயப்படுத்தப்படும் அநியாயம்

ஒரு வரலாற்றுத் தேவையாகவும், அரசியல் உடன்பாடாகவும் கொண்டுவரப்பட்ட 370ஆவது சட்டப் பிரிவு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு நிலையை வழங்கியிருந்தது. 2019இல் பாஜக அரசு அதை விலக்கிய நடவடிக்கையை மையமாகக் கொண்டது ‘ஆர்ட்டிகிள் 370’. மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியான கதாநாயகன் காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளையும் துவம்சம் செய்கிற மாமூலான ஆக்‌ஷன் படம்.

உற்று நோக்கினாலோ, அந்தச் சட்டத்தை விலக்க மத்திய அரசு முடிவு செய்தது, அதற்கு எதிர்ப்புவராமல் தடுப்பதற்காகப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தது, மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களைச் சிறையில் அடைத்தது போன்ற செயல்கள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தலைவர்கள் ஊழல் பேர்வழிகளாகவும், சட்டத்தைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தியவர்களாகவும் வடிக்கப்பட்டிருப்பார்கள். இது யாருக்கு முதுகு சொறிந்துவிடுகிற வேலை என்று சொல்லத் தேவையில்லை. யமி கௌதம், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்க, ஆதித்ய சுஹாஸ் ஜம்பாலே படத்தை இயக்கியிருக்கிறார்.

அதிரடி அடாவடி

“கோலிவுட்” திரைவட்டாரம் என்ன இதற்கெல்லாம் சளைத்ததா என்று காட்டுவது போல் 2024இல் வந்தது ‘அமரன்’. சிவ அரூர், ராகுல் சிங் இருவரும் இணைந்து எழுதிய ‘இந்தியாவின் அச்சமற்றோர்: நவீன ராணுவ நாயகர்களின் உண்மைக் கதைகள்’ (India’s Most Fearless: True Stories of Modern Military Heroes) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேஜர் முகுந்த் வரதராஜனின் சில அனுபவங்களை உணர்ச்சிகரக் காட்சிகளும் இது மனித உரிமை மீறல் இல்லையா என்று கேட்க வைத்த நிகழ்வுகளும் கலந்து திரைக்கதையாகச் சொல்லும் படம் இது.

பாதுகாப்புப் படையினர் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களது துணிச்சலான செயல்களையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லைதான்.
ஆனால், மறுதரப்பினரின் வாதங்களை மருந்துக்கும் தொட்டுக்காட்டாத ஒரு தரப்புத் தீர்ப்புகளை ஏற்பதற்குமில்லை. அப்படியான தீர்ப்பைத்தான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி பங்கேற்புடன் இந்தப் படம் அளித்தது. இதைக் கூட்டாகத் தயாரித்தது – கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ்.

“சில உண்மைகளைக் கூறுவதே நோக்கம்”, “யாரையும் தாக்குகிற எண்ணம் ஏதுமில்லை”, “ஒரு வணிகத் திரைப்படத்துக்கான விறுவிறுப்பு நிகழ்வுகள் இருப்பதால் தயாரித்தோம்”... என்றெல்லாம் படங்களைத் திரைக்கு அனுப்பியவர்கள் சொல்கிறார்கள். ஆனால்,
ஏற்கெனவே எண்ணற்ற வணிகப் படங்கள் மக்கள் மனங்களில் பயங்கரவாதிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும், இரக்கமற்ற சதிகாரர்கள் என்றும், அந்நிய சக்திகளின் ஏவலர்கள் என்றும் பிம்பங்களைக் கட்டிவைத்திருக்கின்றன. நாயகர்களை வீரர்களாகவும் தேச பக்தர்களாகவும் காட்டுவதற்காக உறுத்தலே இல்லாமல் அந்தப் பிம்பங்கள் கட்டப்பட்டன.

இதன் சமூக விளைவுகளை யாராவது சொல்லிக் காட்டினால், “சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்,” என்று கூறிப் பதுங்கிக்கொள்வார்கள்.
அவ்வகைப் படங்கள் மறைமுகமாகவும் துண்டுதுண்டாகவும் கட்டிய எதிர்மறைப் பிம்பங்களை நேரடியாகவும் ஒட்டுமொத்தமாகவும் நிலைப்படுத்துகிற கைங்கரியத்தைத்தான் வீர் சாவர்க்கர்களும் ஆர்ட்டிகிள் 370களும் அமரன்களும் செய்கின்றன.

அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள்

கொடுமை என்னவென்றால், இவ்வகைப் படங்களுக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. “கட்” இல்லாமல் தணிக்கைச் சான்றிதழும், தேசிய விருதுகளும் வழங்குவது வரையில் அந்த அங்கீகாரம் நீள்கிறது.

2024ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இந்த ஜூலை 18 அன்று ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டன. அதில் –
காந்தியை வில்லனாக்கிய ‘வீர சாவர்க்கர்’ இயக்குநர் ரந்தீப் ஹூடாவுக்குச் சிறந்த முதல் பட இயக்குநர் விருது, காஷ்மீர் மக்களுக்கு சிறிதளவேனும் நம்பிக்கை ஒளி தந்த 370 சட்டவிதி நீக்கப்பட்டதை நியாயப்படுத்திய ‘ஆர்ட்டிக்கிள் 370’ சிறந்த திரைப்பட விருது, அதில் நடித்த யமி கௌதமுக்குச் சிறந்த நடிகைக்கான விருது, காஷ்மீர் முஸ்லிம் மக்களைப் பயங்கரவாதிகளாகவும், அவர்களை இராணுவத்தினர் தேடிக் கொன்று கொண்டாடுவது சரியென்றும் சித்தரித்த ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளன

சமூக அக்கறையாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான இப்படங்களுக்கு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டதில் ஒரு உள்ளார்ந்த அரசியல் செய்தி இருக்கிறது.

காலப்போக்கில், ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும் நோக்கங்களுக்கும் துணை போகும் படங்களுக்கே அங்கீகாரம் அளிக்கப்படும் என்பதே அந்தச் செய்தி. ஏற்கெனவே இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருதுப் பட்டியலை அமைச்சகம் நிறுத்திவைத்த நடவடிக்கை கூட இந்தச் செய்திக்கான முன்னோட்டமே.

“எடுத்தால் இரண்டரை மணி நேரப் பொழுதைப் போக்கடிக்கிற படங்களாக எடுங்கள், இல்லையேல் பகைப் புகை மூட்டம் கிளப்பும் படங்களாக எடுங்கள்,” என்ற அறிவிக்கப்படாத நிபந்தனையும் அந்தச் செய்தியில் அடங்கியிருக்கிறது.

உலக அரங்கில் இந்திய சினிமா தனக்கான மரியாதையை, சமூகப் பொறுப்புள்ள, நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற படங்களால் பெற்றது. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியக் கலையுலகினர் என்ன செய்யப்போகிறார்கள்? 

[0]

தீக்கதிர்ஜூலை 26 ஞாயிறு இதழ்வண்ணக்கதிர்இணைப்பில் எனது கட்டுரை