Sunday 16 September 2007

திரைப்பட விமர்சனம்


அம்முவாகிய நான்

பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களது வாழ்க்கையைக் கூறும் திரைப்படங்கள் ஏற்கெனவே பலவகைகளில் வந்துள்ளன. அவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட படம் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிடக் கூடிய படமும் அல்ல.

கதாநாயகியாகிய அம்முவை விட, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திப் பணம் ஈட்டும் ராணியம்மாவின் பாத்திரப்படைப்பு மாறுபட்டது. சம்பந்தப் பட்ட பெண்களின் மீது கனிவு, அக்கறை என அம்முவின் அந்த வளர்ப்புத் தாய் மனம் கவர்கிறாள். நிஜத்தில் இப்படிப் பார்க்க முடியுமா என்பது வேறு விவகாரம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து கள்ளிப்பாலுக்கு பலியாவதற்கு பதிலாக தகப்பனால் அந்த இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறவள் அம்மு. அதே போல், கணவனாலேயே வருமானத்திற்காக அங்கே கொண்டுவந்து விடப் படுகிறாள் இன்னொரு பெண். இப்படிப் பட்ட இடங்களின் இன்னொரு பக்கத் தைக் காட்டும் காட்சிகள் இவை. வயதும், பால்வினை நோயும் முற்றிப்போக இரவோடிரவாகக் காணாமல் போய்விடுகிற பெண்கள் பற்றிய தகவலும் மனித நேய நெஞ்சங்களைத் தொடக்கூடியது.குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தச் சூழலில் வாழும் அம்முவுக்கு, தனது “தொழில்” தவறானது என்ற உறுத்தல் ஏற்படவில்லை என்பதிலும் ஒரு இயல்பான பதிவு.

எழுத்தாளனாகிய கௌரி சங்கர், இப்படிப் பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாவலாக்கி சமுதாயத்தில் கேள்விகளை எழுப்பும் நோக்கத்துடன் அந்த வீட்டிற்கு வருகிறான். அங்கே அம்முவின் வெகுளித்தனம் பிடித்துப் போக, அவளையே திருமணம் செய்து கொள்கிறான். சமூக நிலைமைகள் அப்படி யெல்லாம் இத்தகைய புரட்சிகர தம்பதிகளை நிம்மதியாக வாழ விட்டு விடுவ தில்லை. எதிர்பார்த்த கதைப் போக்குதான் என்றாலும், உண்மையின் பிரதிபலிப் பாய் உள்ளத்தில் குத்துகிறது.

அம்முவின் திருமண வாழ்க்கை தெரிந்ததும் அவளை முன்னாள் “வாடிக்கையாளர்” மனப்பூர்வமாக வாழ்த்துவது இப்படி பலவகைப் பட்ட மனிதர்களைக் கொண்டதுதான் சமுதாயம் எனக் காட்டுவதாக உள்ளது.

கௌரி சங்கரின் படைப்புகளுக் கான அங்கீகார விருது ஒவ்வொரு முறையும் தள்ளிப் போகிறது. அம்முவின் கதையையே சொல்லும் நாவலுக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தும், விரு துக்குப் பரிந்துரைக்கும் இறுதி அதிகா ரம் கொண்ட ஒரு பெரிய மனிதன் அதற்குக் கேட்கிற விலை, இப்படிப்ப பட்டவர் களும் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் சித்தரிப்பு. படத்தில் ஒரு கொலை வருகிறது. அதற்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பது இறுதி வரையில் புதிராகவே வைக்கப்படுவது, தமிழ் சினிமாவில் அரிதாகக் கிடைக்கும் சுவாரசியம்.

இது போன்ற பாத்திரம் என்றால் ஆர். பார்த்திபன்தான் என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது. அதற்கு முழு நியாயம் செய்திருக்கிறார். சவால் மிக்க அம்மு கதாபாத்திரத்தைத் துணிச் சலுடன் ஏற்று வெற்றிபெற்றிருக்கிறார் பாரதி. ராணியாக சாதனாவும் சாதித் திருக்கிறார்.

எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு ஒரு ஓவியம் போல் இக்கதைக்கான சூழலை அருமையாக உருவாக்கித்தந்திருக் கிறது. சாகு கலை இயக்கமும், சபேஷ்-முரளி இசையும் அதற்கு ஒத்துழைத் திருக்கின்றன. “அதிருதில்ல” என்று மிரட்டாமலே அதிர்வுகளை ஏற்படுத்தி நம்பிக்கையூட்டும் படங்களின் வரிசை யில் கதை - திரைக்கதை எழுதி இயக்கி யுள்ள பத்மாமகன் தனது படைப்பையும் சேர்த்திருக்கிறார்.
-அ.கு.

No comments: