Monday 3 September 2007

அறிவியல் மேதைகளோடு ஒரு மல்லுக்கட்டு


விஞ்ஞானிகளா, விபரீத ஞானிகளா?

மெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு இடதுசாரிக் கட்சிகள் தேசபக்த நேர்மையோடு முயன்று வருகின்றன. இந்தியாவின் கைகளிலும் கால்களிலும் கயிறுகட்டி பொம்மலாட்டம்போல் இயக்கக்கூடிய அந்த உடன்பாட்டை எப்படியாவது இந்தியர்களின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஏஜெண்டுகளும் செய்து வருகிற முயற்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த முயற்சிகள் நேரடியாகவும் இருக்கும், சில நேரங்களில், தாங்கள் செய்வதன் ஆழ - அகலங்களை உணர முடியாத மேதாதி மேதைகளின் மூலமாகச் செய்யப்படும் மறைமுக முயற்சிகளாகவும் இருக்கும்.


இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று அந்த உடன்பாட்டிற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்த சிந்தனையைத்தான் ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ நிலை எடுப்பதும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த விஞ்ஞானிகள் ஒருபடி மேலேபோய் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். “அரசியல்வாதிகள் மேற்படி உடன்பாட்டை கடத்திச் செல்லவிடக் கூடாது,” என்பதாக எச்சரித்திருக்கிறார்கள். உடன்பாட்டிற்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பிற்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். “பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையை சந்தேகிப்பதா,” என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.


“அரசை ஆதரிப்பவர்கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் பிரதமரின் நேர்மையை சந்தேகிப்பது ஒரு தேசிய அவமானம்,” என்று அணு உலைகள் திட்டக் குழுவின் முன்னாள் இயக்குநர் ஏ.கே.ஆனந்த் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இடதுசாரிக் கட்சிகளைத்தான் குறிப்பிடுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள் என்று சிலவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஆயுதத் திட்டங்கள் தொடரும் என்றும், நமது அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சியை எவ்விதத்திலும் இந்த உடன்பாடு பாதிக்காது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த உடன்பாடு குறித்து ஒரு முடிவெடுக்க என உயர்மட்ட அரசியல் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசே ஒப்புக் கொண்டுவிட்டப்பிறகு, இப்படிப்பட்ட கருத்துக்களை சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளின் சொந்தக்கருத்து என தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.


பிரதமரின் நேர்மை பற்றி யாரும் கேள்வி எழுப்பவுமில்லை, சந்தேகம் தெரிவிக்கவுமில்லை. இந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதில் அவர் பிடிவாதமாக இருப்பது நாட்டின் நலனைக் காவுகொடுத்துவிடும் என்று அச்சம் தெரிவிப்பது பிரதமரின் நேர்மையை சந்தேகப்படுத்துவதாகாது. மாறாக, தேவையின்றி பிரதமரின் நேர்மை குறித்த விவகாரமாக இதை மாற்ற முயல்வதுதான். இடதுசாரிகளின் நேர்மையைக் கொச்சைப்படுத்துகிற செயல். இவ்வாறு திடீரென உடன்பாட்டை நியாயப்படுத்திக் கூட்டறிக்கை விடுகிற விஞ்ஞானிகளின் உள்நோக்கம் என்ன, “எதிர்பார்ப்பு” என்ன என்ற சந்தேகம்தான் எழுகிறது.


இதே உடன்பாட்டின் பாதகங்கள் குறித்து, அது வளர்ச்சியை மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் மிக உயர்ந்த சுயமரியாதையாகிய இறையாண்மை எனப்படும் உயர் தன்னாளுமை உரிமை என்பதையே கேலிக்குள்ளாக்குகிறது என்பது பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, பல விஞ்ஞானிகளே கூட சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள். அணு சக்தி ஒழுங்கமைப்பு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன், மும்பையின் பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் ஏ.என்.பிரசாத், அணு சக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே.ஐயங்கார் போன்றோர் மிகுந்த கவலையோடு இந்த உடன்பாட்டை எதிர்த்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு கட்ட அணு சக்தி வளர்ச்சியையும் அமெரிக்காவின் ஆணைக்கு உட்படுத்திவிடும் உடன்பாடு இது என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அவர்களும் விஞ்ஞானிகள்தான்.


இந்த 123 உடன்பாடு வெறும் தொழில்நுட்பப் பரிமாற்றப் பிரச்சனையல்ல. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாட்டின் இறையாண்மையோடு சம்பந்தப்பட்ட அரசியல் நுட்பப் பிரச்சனை. உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கக்கூடிய நாசகர நடவடிக்கைகளுக்கு இந்தியாவையும் உடன்பட வைக்கிற அரசியல் நுட்பம் இதில் பொதிந்திருக்கிறது. ஆகவேதான் இதனை வெறுமனே அறிவியல் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெற்றவர்களிடம் விட்டுவிடாமல், மக்களோடு மக்களாய் கலந்து செயல்படுகிற அரசியல் தலைவர்களின் பொறுப்பில் விடவேண்டும் என, மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கக்கூடிய எல்லோரும் சொல்கிறார்கள்.


அதைச் செவிமடுக்காதவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஒலிக்கும் குரல், அறிவியல் ஆய்வாளர்களின் குரலாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் குரலாகத்தான் ஒலிக்கிறது

1 comment:

vimalavidya said...

The dangers of the treaty should be realised by the students community at first and then the intellectuals particularly teachers.
THE RIGHT thinking people should take the message of LEFT views to them immediately.
All organisations should carry the propaganda war without any delay -vimala vidya from London