Thursday 27 September 2007

கவிதை

நேரில் நான் வர...

எல்லாம் தலைகீழாய் நடப்பது கண்டு
எனக்கும் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
நேரில் நான் வர வேண்டும் கொஞ்சம்.

என்ன சொல்கிறாய்...
ஒருவரின் சம்பாத்தியம்
குடும்பம் நடத்தப் போதவில்லை என்பதால்
மனைவியையும் வேலைக்கு அனுப்பினாயா?
வேலைக்குப் போகும் பெண்கள்
ஒழுக்கம் இல்லாதவர்கள் எனும்
பெரியவர்(கள்) சொல் மறந்தாயா?
உன் மனைவி தன் பதி விரதக் கற்பினை
தீக்குளித்து நிரூபிக்கச் சொல்ல
உனக்குக் கற்றுத் தர வேண்டும்- அதற்கு
நேரில் நான் வர வேண்டும்.

எம்பியெம்பிப் படித்த உன் பிள்ளைக்கு
எம்பிபிஎஸ் கிடைக்கவில்லையென்று
என் சன்னதியில் வந்து புலம்புகிறாய்
காரணம் என்னவென்று அறிந்தாயா?
உனக்கும் எனக்கும் பணிந்து
பாத்திரம் தேய்க்கப் பிறந்த
சூத்திரனும் தடையின்றி
சாத்திரம் படிக்க சட்டம் வந்ததால்!
ஆத்திரம் பொங்குகிறதல்லவா?
பதினான்கு வருசம் என் பாதுகையை வைத்தே
என்பதாகையை நாட்டியதாய்க் கூறி
பாராண்ட என் தம்பி பரதன்
வேதம் பயில்வதில் இனி வர்ண
வேற்றுமை இல்லையென அறிவித்து
அன்றைக்கே துவங்கிய வினை இது.
அக்கணமே அந்த அநீதியைஅடியோடு அறுத்துவிட
சம்புகத் தலையெடுத்த என் வாளின்
அடங்காத ரத்த தாகத்தைச் சொல்ல
நேரில் நான் வர வேண்டும்.

ஊனமாய்ப் பிறப்பது முன் ஜென்மப் பாவம்
ஒதுங்கியிருந்து யாசித்திருப்பதே
ஊனமுற்றோருக்கு இடப்பட்ட சாபம்
அதை விட்டு அவர்களும் இன்று
உரிமை கோரினால் வருகிறது கோபம்
மந்தாரைக் கிழவியின் கூன் முதுகில்
வில்லால் அடித்து விளக்கினேன் ஒரு பாடம்
அதனை மறுபடியும் எடுத்துரைக்க
நேரில் நான் வர வேண்டும்.

முன்னேற்றம் எனும் கவர்ச்சி வார்த்தையின்
பின்னால் மறைந்து நின்று
நாட்டின் சுயமரியாதையை
அணுசக்தி உலையில் தள்ளுவதெப்படி?
பண்பாடெனும் பட்டுத்திரைப் பெருமையின்
பின்னால் பதுங்கிக் கொண்டு
சகோதர மக்களைப் பிளப்பதெப்படி?
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து
வாலியைக் கொன்ற காதையை
வக்கனையாய் மறுபடி சொல்ல
நேரில் நான் வர வேண்டும்.

நான் வர வேண்டும்-
நேரில்நான் வர வேண்டும் என்றால்
நான் நடந்து வருவதற்குத்தான்
என் பெயர் சூட்டியபாலம்
அப்படியே இருக்க வேண்டும்.
தப்புத் தப்பாய் நீங்கள்
செய்து வைத்ததையெல்லாம்
நான் வந்து இடிக்கிறேன் நாளைக்கு
என் பெயர் வைத்த பாலத்தை
இடிக்காமல் பார்த்துக் கொள் இன்றைக்கு.

-அ. குமரேசன்

(சேலத்தில் செப்.23 அன்று தமுஎச நடத்திய பாரதி நாள் கவியரங்கில் வாசித்தது)

No comments: