Monday, 2 February 2026

ஹோம்பவுண்ட்: விரட்டப்பட்டு வீடு திரும்பிய சாலையில்…




ந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்காக அனுப்பப்பட்டிருந்த அனுப்பப்படடிருந்த படம் ‘ஹோம் பவுண்ட்’ (வீட்டை நோக்கி). புலம்பெயர்கிறவர்கள், வீட்டுக்குத் திரும்பவும் பெயர்வதில் உள்ள பாதுகாப்பு, அடையாளம், சொந்தத்தன்மை ஆகிய உணர்வுகளைக் கதையாக்கியிருக்கிறது. அத்துடன் இந்தியச் சமுதாயத்தில் வேரோடு புரையோடிப் போயிருக்கும் சாதியம், இன்று உரமிட்டு வளர்க்கப்படும் மதவாதம் ஆகியவற்றைப் பற்றியும் பேச வைக்கிறார் இயக்குநர் நீரஜ் கேவன்.

சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் தலித் குடும்பத்தைச் சேர்ந்த சந்தன் குமார் வால்மீகி, முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த முஹமத் சொயிப் அலி. காவல்துறை தேர்வு எழுதி சீருடை அணியும் கனவோடு புறப்பட்டவர்கள். உலகத்தையே உருக்கிய கோவிட் தொற்றினால் நகரத்திலிருந்து வெளியேறி, தேசிய நெடுஞ்சாலையில் கால்நடையாகவே வீடு திரும்பும் கட்டாயத்தில் தள்ளப்பட்டவர்கள். பயணத்தில் ஒரே இலக்கு, ஒரே பாதை –ஆனால் சுமந்து செல்லும் அடையாளங்கள் வேறு.

கதையில் வெளிப்படையான பெரும் சம்பவங்கள் இல்லை; ஆனால் உள்ளார்ந்த சமூக நிலைமையை உரையாடல்களும் மௌனங்களும் பரப்பி வைக்கின்றன. நாம் யார், நம் நட்பு யார், நம் பகை யார் என்ற கேள்விகள் நம்மோடு பயணிக்கின்றன.

இருவரில் ஒருவனுக்குத்தான் தேர்வில் வெற்றி கிடைக்கிறது. இயல்பான காழ்ப்புணர்வுக்கு உள்ளாகிறான் இன்னொருவன். இந்நிலையில் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட, பொதுப்போக்குவரத்து இல்லாத நிலையில், இருவரும் சொந்த ஊருக்கு, ஒரு லாரியில் மற்றவர்களோடு சேர்ந்து போகிறார்கள். கர்ப்பிணியான ஒரு பெண் இருமுகிறாள், சக பயணிகள் அச்சமடைய, அவளையும் கணவனையும் கீழிறக்கிவிடுகிறான் ஓட்டுநர். இக்காட்சி அடுத்து ஒலிக்கப்போகும் இருமலுக்கு நம்மைத் தயார் செய்கிறது.

உண்மையாகவே 2020 மே 14 அன்று நடந்த நிகழ்வு இது. ராம்புகார் பண்டிட், அவரது நண்பர் முஹமது சப்யுல்லா இருவரும் பிகார் மாநிலத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்குப் போய்க்கொண்டிருந்தபோது, தில்லி - காசியாபாத் எல்லையில் காசிப்பூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் இதே போல நடந்தது. நோய் முற்றிய சப்யுல்லாவை மடியில் வைத்து ராம்புகார் கதறி அழுதுகொண்டிருந்ததை, பிடிஐ செய்தியாளர் அதித் கோஷ் தன் கேமராவில் பதிவு செய்தார். பத்திரிகைகளில் வெளியாகி மனிதநேயர்களை உலுக்கிய அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தில், ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டில் பத்திரிகையாளர் பஷரத் பீர் ‘நெடுஞ்சாலையோரம் ஒரு நட்பு, பெருந்தொற்று மற்றுமொரு மரணம்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியதாகத் தெரிவிக்கிறார் நீரஜ் கேவன்.


கொரோனா தாண்டவத்தாலும், அரசாங்கப் புறக்கணிப்பாலும் புலம்பெயர்ந்தவர்களின் அவலத்தை மட்டும் பேசியிருந்தால் இந்தப் படம் வழக்கமான ஒன்றாகியிருக்கும். ஆனால் அந்தச் சாலையின் வழியாகப் பயணிக்கையில் கொரானாவினும் கொடிய சாதிய, மதவாதக் காட்சிகளைக் காண வைத்திருக்கிறார்கள் இயக்குநரும், அவரோடு இணைந்து திரைக்கதையை உருவாக்கிய பஷரத் பீர், சுமித் ராய், உரையாடலை எழுதிய வருண் குரோவர், ஸ்ரீதர் துபே ஆகியோரும்.

சாதியாகவும் மதமாகவும் சந்தித்த அவமதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கு காவல்துறை வேலை கைகொடுக்கும் என்பதே நண்பர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதன் அதிகாரக் கழிகள் எளிய மக்களைத் தாக்குவதற்குத்தான் சுழல்கின்றன என்று அவர்கள் உணர்கிற இடமும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கியவன் அதன் பசிக்கு இரையாகிறான். அவனுடைய உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரும் நண்பன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கிறான். அதைத் தொடர்ந்து அவன் என்ன செய்கிறான் என்ற புதிர் மிகுந்த திருப்பம் வருகிறது. அந்தக் கதாபாத்திரம் சுயநலத்தோடு செயல்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படக்கூடிய நிலையில், கம்பி மீது சமநிலை செய்து நடக்கிற சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர். அந்த சாகசம், அன்பின் பிணைப்பாக அல்லாமல் வாழ்க்கையோடு கலந்த உணர்வார்ந்த உறவாக நட்பை உயர்த்திப் பிடிக்கிறது.

கதை கடந்த காலத்துக்கும் தற்காலத்துக்குமாக பயணிப்பதால் திரையனுபவமாக அந்தப் புதிரில் கூடுதல் சுவையேறுகிறது. மகனின் சடலத்தைப் பார்த்து உறைந்து போகிற தாய், பின்னர் அந்த நண்பனின் மார்பில் சாய்ந்து அழுகிறார். நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இத்தகைய சதையும் உயிர்ப்புமான இடங்கள் படம் நெடுகிலும் அமைந்திருக்கின்றன. இயக்குநரின் முதல் படம் ‘மசான்’ –அதுவும் வாரணாசி பின்னணியில் மரணம், சாதியம் பற்றிப் பேசியது.

முற்போக்கான எண்ணங்கள் கொண்ட, அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகிறவளாக நண்பர்களில் ஒருவனின் காதல் இணை சித்தரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இஷான் கட்டர், விஷால் ஜேத்வா, ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்கள் நிச்சயமாக கடுமையான பயிற்சிகளை எடுத்திருக்க வேண்டும் – இல்லையேல் அவர்களின் நடிப்பு இவ்வளவு இயல்பாக இருந்திருக்காது. தனித்துப் பிரித்துச் சொல்ல முடியாதபடி ஒருங்கிணைகின்றன பிரதிக் ஷா ஒளிப்பதிவு, நரேன் சந்திரவாக்கர், அமித் திரிவேதி இசை, நிதின் பெய்ட் படத்தொகுப்பு.

இறுதியாக அறநெறி சார்ந்த ஒரு வினா எழுகிறது. அதற்கான விடை பார்வையாளர்களின் விவாதத்திற்கு விடப்படுகிறது. அந்த விவாதம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், தமிழ் உள்ளிட்ட குரல்பதிவுகளோடுகுரல் பதிவுகளோடு வெளியாகியுள்ள இந்த இந்தி மொழிப் படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு முந்தைய கட்டம் வரையில் வந்து உலகத்தின் கவனத்தைப், உலக அளவில் கவனம் பெற்றதில் வியப்பில்லை என்ற முடிவுக்குத்தான் வரும்.

[0]

‘செம்மலர்‘ பிப்ரவரி 2026 இதழில் ‘ஓடிடி மேடையில் உலக சினிமா பக்கத்தில் எனது கட்டுரை.

No comments: