இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகளோடும் மொழிபெயர்ப்பு முன்னேற்றங்களோடும் 22 மொழிகளையுமே ஒன்றியத்தில் செயல்படுத்த முடியும். அதை செயல்படுத்தாததற்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது?
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில், தேசத்தந்தை ‘மகாத்மா காந்தி’ பெயரை பா.ஜ.க அரசு நீக்கிவிட்டதால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனல் வீசியது. கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைப் புகலிடமாக ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம் திகழ்ந்துவருகிறது. அதில் இருந்த தேசத்தந்தை ‘மகாத்மா காந்தி’ பெயரை நீக்கவும், அதன் உள்ளடக்கத்தை நீர்த்துப் போகச் செய்யவும் ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது.
அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். அதற்காக, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி-க்கள் மீது உரிமை மீறல் புகாரை பா.ஜ.க எம்.பி-க்கள் அளித்ததுடன், அது தொடர்பாக விளக்கம் கேட்டு எட்டு எம்.பி-க்களுக்கும் பா.ஜ.க அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
எளிய மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வாதாடியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நோட்டீஸ். ஆனால், அது தொடர்பான விவாதங்களில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டிய பிரதமர், நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாட்டிலேயே இல்லை. அவர் விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்கு பறந்துசென்றுவிட்டார். ‘அவருக்கு யார் நோட்டீஸ் கொடுப்பது?’ என்ற வேதனைக் கேள்விகள் எழுகின்றன.
டிசம்பர் முதல் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், அணுசக்தித் துறையில் தனியார் நுழைவு, காப்பீட்டுத் தொழிலில் 100 சதவிகித வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட சட்டங்கள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
தாய்மொழிகளில் பேச்சு
இத்தனைக்கும் மத்தியில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் மாநில மொழிகளில் அதிகமாக இருந்தன என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. ஒன்றிய ஆட்சியாளர்களின் மொழித்திணிப்புக் கொள்கையின் விளைவாக, மாநில மொழிகள் அவமதிக்கப்பட்டு, புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியில் பெயர்சூட்டப்பட்ட அந்தச் சட்டங்கள் குறித்து பல உறுப்பினர்கள் தங்களின் தாய்மொழிகளில் உரையாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் தனது தாய்மொழியில் பேசினால், அதை அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் மற்ற உறுப்பினர்களால் கேட்க முடியும். அதற்கான மொழிபெயர்ப்பு வசதி இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததன் பின்னணியில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இப்படியொரு நல்ல ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். இதுவும், மொழிபெயர்ப்பு வசதியுமாகச் சேர்ந்து, பல உறுப்பினர்கள் தங்கள் மொழிகளில் பேச முன்வந்திருக்கிறார்கள்.
மொத்தம் 535 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 160 உரைகள் முழுமையாக அல்லது பகுதியளவில் மாநில மொழிகளில் அமைந்தன. அதில் முதலிடம் தமிழ்தான். தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்ததாக மராத்தி. அதில், 43 உரைகள். வங்க மொழியில் 25 உரைகள். பிற மொழிகளில் 42 உரைகள் வந்திருக்கின்றன என்று மக்களவைச் செயலகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய மழைக்காலக் கூட்டத்தொடரில் தமிழில் 13, மராத்தியில் 12, வங்கத்தில் 10 என்ற அளவில் பேச்சுகள் இருந்தன என்றும் அந்தத் தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.
22 மொழிகளில் பேசலாம், கேட்கலாம்!
இதற்கு முன் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில்தான் உடனடியாகப் பேச முடியும் என்ற நிலைமை இருந்தது. அதற்குக் காரணம், போதுமான மொழிபெயர்ப்பாளர்கள் நியமனமும், மொழிபெயர்ப்பு வசதிகளும், அதற்குத் தோதான பிற ஏற்பாடுகளும் இல்லாததுதான். இந்தியோ, ஆங்கிலமோ தெரிந்திருப்பவர்கள் அந்த ஏற்பாடுகளை எதிர்பார்க்காமல் பேச முடியும். தனது மாநில மொழியில் பேச விரும்பும் உறுப்பினரோ, முன்கூட்டியே அதற்கு அனுமதி கோரி கடிதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், மொழிபெயர்ப்பாளரை ஈடுபடுத்துவது உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்.
“வட்டார மொழிகளில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குத் துணை செய்யக்கூடிய சிறப்பான ஏற்பாடு இப்போது வந்துவிட்டது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நடைபெறும் நாட்களில் மொத்தம் 84 மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். முந்தைய தொழில்நுட்பப் பிரச்னைகளும் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டன. ஆகவே, முன்கூட்டியே அனுமதி கோர வேண்டியதில்லை" என்கிறார் செயலக அதிகாரி ஒருவர்
கேரள சி.பி.ஐ (எம்) டாக்டர். ஜான் பிரிட்டாஸ் (மாநிலங்களவை)
தற்போது நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மொத்தம் 37 உறுப்பினர்கள் இந்தியும் ஆங்கிலமும் அல்லாத மொழிகளில் பேசியிருக்கிறார்கள். போடோ, மணிப்புரி, சந்தாலி, அசாமி, உருது, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பேசியிருக்கிறார்கள் (செய்தி: ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ –டிசம்பர் 24).
22 அலுவல் மொழிகளில் நேரடியாக மொழிபெயர்க்கும் நடைமுறை 2023 டிசம்பர் 11இல் தொடங்கப்பட்டது. கேள்வி நேரத்தின்போது தொடங்கிய அந்த ஏற்பாட்டில் முதலில் 10 மொழிகள்தான் இடம்பெற்றன. பின்னர், மேலும் இரண்டு மொழிகள் சேர்க்கப்பட்டன. இப்போது இந்தியாவின் 22 மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பேச முடியும், கேட்க முடியும்.
எளிதாக, தெளிவாக, கூர்மையாக..!
அடுத்தபடியாக, அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களால், அவர் பேசுவதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு மொழியில் பேசியதை, சொந்த மொழியில் பெயர்த்து, அதைக் கேட்பதை விட, சொந்த மொழியிலேயே நேரடியாகக் கேட்பது எளிமையானதாக, இனிமையானதாக, துல்லியமானதாக இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா என்ன?
அதே போல் நாம் தமிழில் பேசுவதை, மற்ற உறுப்பினர்கள் தாங்கள் செட் செய்த மொழிகளில் கேட்க முடியும். என்னுடைய மொழியில் பேசும்போது அந்தப் பேச்சு தங்குதடையில்லாமல் இருக்கும். மனந்திறந்து விவாதிக்க முடியும். ஆகவேதான், இந்த வசதி செய்யப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது” என்றார்.
பல மொழிகள் பேசப்படும் எந்தவொரு நாட்டிலும் அதன் மக்களவையில் இதே போன்ற வசதி இருந்தாக வேண்டும் என்று கூறும் சச்சிதானந்தம், “இப்போதும் கூட, நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இரண்டு மொழிகள் மட்டும்தான் பேச முடியும் என்று இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இவ்வாறு 22 மொழிகளிலும் பேசவோ கேட்கவோ முடியும் என்ற ஏற்பாடினை இப்படிப்பட்ட நாடாளுமன்றக் குழுக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” என்ற வலியுறுத்தலையும் முன்வைக்கிறார்.
இதைப் பற்றிக் கூறும் அதிகாரிகள், மக்களவையின் இந்த மொழிபெயர்ப்புச் சேவை, தற்போது பிரதமரின் கூட்டங்கள், பல்மொழி நிகழ்வுகள், நாடாளுமன்ற அமைப்புகளின் மாநாடுகள், அரசின் கொள்கை ஆய்வு அமைப்பான நிதி ஆயோக் ஆகியவற்றின் சந்திப்புகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மற்ற செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. இங்கெல்லாம் சென்றிருக்கிற இந்த ஏற்பாடு, ஏன் இன்னமும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டங்களுக்கு வரக்கூடாது? தமிழக எம்.பி-யின் வலியுறுத்தல் விரைவில் வழிமுறையாக வேண்டும்.
மக்களவையில் ஒலிக்கும் இந்த மாற்றத்தில் இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது. விடுவேனா என்று தொடர்கிற இந்தி மொழித் திணிப்பு பிடிவாதங்களுக்கு எதிரான ஒரு சிறிய செய்திதான் அந்த முக்கியத்துவம்.
நாடாளுமன்றம் வீற்றிருக்கிற அதே தில்லியிலிருந்து ஒரு செய்தி. கிழக்கு தில்லியின் மயூர் விஹார் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சிப் பூங்காவில் சிறுவர்களுக்கு ஒருவர் சில மாதங்களாகக் கால்பந்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். சமீபத்தில் அங்கு சென்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ரேணு சவுத்ரி, "எங்கள் பணத்தைச் சாப்பிடுகிறாய். ஆனால், எங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இருக்கிறாயே. இரண்டு மாதங்களில் இந்தி கற்றுக்கொள்ளவில்லையென்றால் உன் நாட்டுக்கே போய்விட வேண்டும்" என்று மிரட்டியிருக்கிறார். அந்த காணொளிப் பதிவை சமூக ஊடகங்களிலும் அவர் பரப்பியிருக்கிறார்.
தலைநகர் தில்லியின் அப்படிப்பட்ட குடியிருப்புப் பகுதியில், ஆகப் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயேதான் பேசிக்கொள்கிறார்கள். ஆகவே, அந்தத் தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளருக்கு உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இதுதான் யதார்த்தம். ஆனால், அந்த பா.ஜ.க கவுன்சிலர் தனது மொழி மீதான அக்கறையிலிருந்து அந்த மிரட்டல் வேலையைச் செய்யவில்லை.
வெறும் விளம்பரத்துக்காகவும், தனது அரசியல் செல்வாக்கைக் காட்டிக்கொள்ளவுமே அப்படி நடந்துகொண்டிருக்கிறார். பா.ஜ.க தலைமை தலையிட்டதைத் தொடர்ந்து, அந்த கவுன்சிலர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மாமன்ற உறுப்பினரின் நோக்கம் எதுவானாலும், பா.ஜ.க மற்றும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மொழிக் கொள்கையிலிருந்தே இது வருகிறது.
அதேபோல, சென்னை விமானநிலையத்தில் பாதுகாவலர் பணி ஒப்பந்தத்தின் கீழ் சீருடையோடு இருக்கிற ஒருவர், தமிழ்நாட்டுப் பயணிகளைப் பார்த்து, ஏன் இந்தி படிக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது, பரவலான கண்டனத்திற்கு உள்ளானது.
‘அமித் ஷாவே அப்படித்தான்!
2020-ம் ஆண்டில் ஆயுஷ் அமைப்பின் செயலர் வைத்ய ராஜேஷ் கோட்டேச்சா மருத்துவர்களுக்கான இணையவழி முகாம் ஒன்றை நடத்தினார். அதில் அவர் இந்தியில் பேசியபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசக் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் கோபமாக, “இந்தி தெரியாது என்றால் வெளியேறிவிடுங்கள்” என்று சொல்ல, அது தமிழ்நாட்டில் “இந்தி தெரியாது போடா” என்ற எதிர்ப்பியக்கமே எழுவதற்கு இட்டுச் சென்றது. இப்படி நிறைய உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
அந்தத் தென்னாப்பிரிக்கரைப் போன்ற வெளிநாட்டவர்களிடம் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து வட மாநிலங்களுக்கு வருகிறவர்களிடமும், இந்தி தெரியாது என்றால் வெறுப்போடு அணுகுகிற கலாசாரம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது ஒரே மொழி ஆதிக்கச் சிந்தனை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏன், ஒன்றிய உள்துறை அமைச்சரே அப்படித்தான் பேசுகிறார். ‘இந்தி‘தான் இந்தியாவின் தொடர்பு மொழி என்று நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் (2022) உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பின்னர் ஒரு நிகழ்வில், ‘இந்தியை உள்ளூர் மொழிகளுக்குப் போட்டியாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் கொண்டுவருகிறோம்’ என்றும் அவர் பேசியிருக்கிறார்.
ஓம் பிர்லா, தயாநிதி மாறன்
ஆங்கிலத்துக்கு மாற்றாக அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிதான் என்று கொண்டுவர வேண்டும். ஒன்றியத்தில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகளோடும் மொழிபெயர்ப்பு முன்னேற்றங்களோடும் 22 மொழிகளையுமே செயல்படுத்த வேண்டும். நாட்டின் உயர்ந்த அமைப்பான, சட்டங்களை உருவாக்குகிற, மக்கள் பிரதிதிதித்துவ சபையான நாடாளுமன்றத்தில் சாத்தியமாகிறது என்றால், ஆட்சி நிர்வாகத்தில் முடியாதா?
ஒன்றிய அரசுக்கும், மாநில/ஒன்றியப் பகுதி அரசுகளுக்கும் இடையேயான தொடர்புகளுக்கும் அதைக் கொண்டுவர முடியாதா? ஏன் முடியாது? மாநிலங்களின் கூட்டாட்சி, அனைத்து மொழிகளுக்கும் சம இடம் என்ற மக்களாட்சி விழுமியங்களை மதித்து ஏற்றுக்கொண்டால் நிச்சயம் முடியும்!
[0][0][0]
-விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பில் (டிசம்பர் 26) எனது கட்டுரை
No comments:
Post a Comment