Friday 4 June 2010

கம்யூனிசம் என்றால் 3


கம்யூனிசம் ஈவிரக்கமற்ற ஒரு கொடுங்கோண்மை என்று நம்பவைக்க முயல்வோர் தங்களது வாதத்துக்கு ஆதரவாக மேற்கோள் காட்டுவது தியானென்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்வு. கம்யூனிச ஆதரவாளர்களுக்கும் கூட சற்று சங்கடத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவது அந்த நிகழ்வு. சைனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அந்தப் பெரிய திடலில் 1989-ம் ஆண்டு நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் நிகழ்வு அது. தாக்கியவர்கள் அந்நாட்டு ராணுவமாகிய மக்கள் விடுதலைப் படையினர். தாக்கப்பட்டவர்கள் மாணவர்கள்.

ஊடகங்கள் அன்று அந்த நிகழ்வை எப்படி சித்தரித்தன? இன்றளவும் அதை எப்படி சித்தரிக்கின்றன?

சைனாவின் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன. எங்கும் ஊழல் தாண்டவமாடியது. இதனால் மாணவர்கள் ஆவேசமடைந்தார்கள். அவர்கள் தியானென்மென் மைதானத்தில் திரண்டு, ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போராட்டம் தொடங்கிய சில நாட்கள் கழித்து, அவர்கள் மீது சைனா அரசு ராணுவத்தை ஏவி, ஈவிரக்கமில்லாமல் அடித்து நொறுக்கியது. போராட்டத்தை ஒடுக்கியது... கம்யூனிச நாட்டில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்காது, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு அனுமதியிருக்காது என்பதற்கு தியானென்மென் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு என்றுதான் ஆகப்பெரும்பாலான ஊடகங்கள் சொல்லிவருகின்றன. இன்று சைனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்களைப் பாராட்டுகிறபோது கூட, ஆனாலும் தியானென்மென் சதுக்கத்தை மறந்துவிடுவதற்கில்லை, என்று ஒரு இறுதிக்குறிப்பு சேர்க்க மறப்பதில்லை.

மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மைதான். சைனா அரசும் அதை மறுத்ததில்லை. ஆனால் என்ன நடந்தது? எதனால் அப்படியொரு சூழல் உருவானது? அதை மட்டும் இவர்கள் திட்டமிட்டே மறைத்துவிடுவார்கள். அல்லது ஒரு பக்கத்து உண்மையை மட்டும் சொல்லி மறுபக்கத்தை இருட்டடிப்புச் செய்துவிடுவார்கள்.

சைனாவும் ஒரு கம்யூனிச நாடு அல்ல; கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள நாடுதான், சோசலிசத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிற நாடுதான். அதிலும், முன்னுதாரணமாக உருவாகி வந்த சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோசலிச அரசுகளும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சரியான நடைமுறைகளுக்காக மிக கவனமாக அடியெடுத்துவைத்துக்கொண்டிருக்கிற நாடு சைனா. தற்போது அந்நாட்டு கம்யூனிட் கட்சி அரசு கடைப்பிடிக்கும் வழிமுறைகள் சரிதானா, அது சோசலிச அமைப்பைக் கட்டுவதற்கு உதவுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் வரலாறுதான் பதில்சொல்லவேண்டும்.

ஜனநாயக அரசுகள் ஆள்வதாகச் சொல்லப்படுகிற அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் உண்மையிலேயே ஜனநாயகம் இருக்கிறதா? அமெரிக்காவில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் பாரக் ஒபாமா, அடுத்த தேர்தல் வரும் வரையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் விவாதித்து ஏற்க மறுக்கிற ஒரு நடவடிக்கையை அவர் தனது தனியதிகாரத்தால் செயல்படுத்தலாம். தேர்தலுக்கு முன் இஸ்ரேல் அரசின் ரவுடித்தனத்தைக் கட்டுப்படுத்தப்போவதாகக் கூறி ஆதரவு திரட்டிய அவர் இப்போது அமெரிக்க அரசின் பாரம்பரியப்படி இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதற்கு முன்வரவில்லை என்பதை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். மக்களின் வரிப்பணத்தை எடுத்து, அங்கே நிர்வாகக் கோளாறுகளால் நொடித்துப்போன தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்குகிறாரே, அதைச் சொல்லலாம். இவருக்கு முன்பிருந்த புஷ், தன்னிச்சையாக இராக் நாட்டிற்குள் ராணுவத்தை அனுப்பி அந்நாட்டின் தலைவர் சதாம் உசேனை சிறைப்பிடித்து, தூக்கில்போட வைத்தாரே... அதையும் சொல்லலாம். இவர்களுடைய இப்படிப்பட்ட அத்துமீறல்கள்தானே உலகெங்கும் பரவிச் செயல்படுகிற பயங்கரவாதிகளுக்கு ஆகாரமாக அமைகின்றன?

இந்தியாவில் மன்மோகன் சிங் தனது ஆட்சிக்காலத்தில் யாருடனும் உடன்பாடுகள் செய்துகொள்ளலாம்; அதற்கெல்லாம் அவர் மக்களுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலே பல நடவடிக்கைகளை இந்திய பிரதமர்கள் தன்னிச்சையாக எடுக்க முடியும். பிரதமர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரையில், மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்படவில்லையானால், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களால் அவர்களைப் பதவியிலிருந்து இறக்கிவிட முடியாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள் என்று கவர்ச்சிகரமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாடுகளில் மக்களின் அதிகாரம் இவ்வளவுதான்.

சோசலிச நாடுகளில் இந்த நிலைமை இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சரியாகச் செயல்படவில்லை என்று மக்கள் கருதுவார்களானால் அந்த உறுப்பினரை வீட்டுக்கு அனுப்புவதற்காக என்றே தேர்தல் நடத்தப்படும். இன்றைய சூழலில் இதுவே பெருமளவுக்கு உண்மையான மக்கள் அதிகாரமாக இருக்கிறது. இதிலேயும் குறைபாடுகள் இருக்கலாம்; ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி அது பற்றி தனது மாநாடுகளில் விவாதிக்கிறது; நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது; உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன; புதிய அணுகுமுறைகள் வகுக்கப்படுகின்றன.

முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் தேர்தல்களில், சுரண்டல் சக்திகளுக்கு மிக விசுவாசமாக இருக்கப்போவது யார், அதை மக்கள் உணராமல் மிக புத்திசாலித்தனத்துடன் காய் நகர்த்தப்போவது யார் என்பதுதான் முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதலாக இருக்கிறது. முதலாளித்துவ அமைப்பில் யாரும் என்ன குற்றமும் செய்யலாம் - ஆனால் மாட்டிக்கொள்ளக்கூடாது. அப்படி மாட்டிக்கொண்டால் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புக்கே இடைஞ்சலாகிவிடும். ஆகவே, தப்பு செய்வதற்குத் தண்டனை கிடையாது, மாட்டிக்கொள்வதற்கே தண்டனை.

சோசலிச நாடுகளில் மக்கள் பிரதிநிதி தவறு செய்யமாலிருப்பதை உறுதிப்படுத்தவும், அப்படித் தவறு செய்தால் வெளியேற்றவும் சட்டங்கள் உள்ளன; அவை செயல்படுத்தப்படுகின்றன. இப்படியொரு அதிகபட்ச ஜனநாயகம் சீனாவில் இருப்பதை மேற்கத்திய சந்தை ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அது அவர்களது தங்குதடையற்ற சுரண்டல்களுக்கும், சூறையாடல்களுக்கும், பண்பாட்டு ஆக்கிரமிப்புகளுக்கும் முட்டுக்கட்டை. ஆகவே, எப்படியாவது இதை ஒழித்துக்கட்ட எல்லாவிதமான வழிமுறைகளையும் கையாள்கிறார்கள்.

சீனாவில் அவர்கள் கையாண்ட வழிமுறை, மாணவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் - குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பயின்ற மாணவர்களிடையே, அந்த மேற்கத்திய வாழ்க்கை முறைகளின் மீது ஏற்பட்ட ஒரு ஈர்ப்பையும், சீனாவின் நிர்வாக முறைகளில் உள்ள குறைபாடுகளின் மீது ஏற்பட்ட மனக்குறையையும் பயன்படுத்தி கொம்பு சீவிவிடப்பட்டது. சீன கல்வி அமைப்புகளில் மாணவர்களின் மனக்குறைக்குக் காரணமான குறைபாடுகள் இருந்தன என்றாலும், அதை எதிர்த்து மாணவர்கள் அவ்வளவு பெருந்திரளாகக் குவிந்ததன் பின்னணியில் மேலே கூறிய கொம்பு சீவல்கள்தான் மிகுதியாக இருந்தன. மேற்கத்திய ஊடகங்கள் சீனாவில் மாணவர்கள் இப்படியொரு போராட்டத்தில் குதிக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து தயாராக இருந்தன என்பதிலிருந்தே இந்தக் கொம்பு சீவல் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.

கொம்பு சீவிவிட்டது யார்? வேறு யார் - நவீன முறையில் உலகை ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமெரிக்க அரசுதான். வெளிநாடுகளில் இப்படிப்பட்ட நாசவேலைகளைச் செய்வதற்கென்றே இருக்கும் சிஐஏ உளவு அமைப்புதான்.

மாணவர்களின் குறைகளைக் கேட்கவும், உரிய மாற்று ஏற்பாடுகளுக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசு தயாராகவே இருந்தது. அழைப்பு விடுத்தது. ஆனால், மாணவர்களின் பெயரால் கிளப்பிவிடப்பட்ட போராட்டத்தின் இலக்கு சீன அரசாங்கத்தையே கவிழ்ப்பதாக இருந்தது. அதன் மூலம் உலகின் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற சுரண்டல் ஆதரவு முதலாளித்துவ அரசு அமைப்பை நிறுவுவதற்குக் குறிவைக்கப்பட்டது. திட்டமிட்டே வன்முறை தூண்டப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட மாணவர்கள், முன்பின் யோசிக்க முடியாதவர்களாக களத்தில் இறக்கிவிடப்பட்ட நிலையில் வன்முறை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துச் சுழற்றினார்கள். அரசுக் கட்டடங்களைத்தகர்ப்பது, ராணுவத்தினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களைக் கொலை செய்வது என்றெல்லாம் அந்த வன்முறை ஆட்டம் பரவியது. முன்பு மாவோ தலைமையில், ஒட்டுமொத்த சமுதாயத்தை முற்போக்கான திசையில் கொண்டுசெல்வதற்காகவும், அதிகபட்ச சமத்துவ நடைமுறைகளை நிறுவுவதற்காகவும் நடந்த புரட்சி இயக்கத்தில் வன்முறைகள் கையாளப்பட்டன. அதுவும், முளைவிட்டுக்கொண்டிருந்த சமத்துவ சமுதாய அமைப்பையே சீர்குலைப்பதற்காக அந்த மாணவர்களின் கைகளில் ஒரு வன்முறை ஆயுதம் தரப்பட்டதும் ஒன்றல்ல.

ஆகவேதான், அது வெறும் மாணவர் போராட்டமல்ல, பெரும் அரசியல் சூழ்ச்சியின் ஒரு அத்தியாயம் என்பதால்தான், சீன அரசு வேறு வழியின்றி அதனைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. வெளிநாட்டு உதவியோடு ஆட்சியமைப்பையே கைப்பற்றுவதற்கு எந்த நாட்டில் இப்படிப்பட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டாலும் அந்த நாட்டு அரசு இதே போன்ற நடவடிக்கையைத்தான் எடுக்கும்.

மாணவர்கள் தாக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியதுதான். ஆனால் அப்படியொரு மோதலுக்கு அவர்களது இளம் வயதுக்கே உரிய துடிப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் அல்லவா இதற்குப் பொறுப்பு? மாணவர்கள் கலகம் வெற்றியில் முடிந்தால் சீன அரசைத் தனது கையில் போட்டுக்கொள்ளலாம், போராட்டம் அடக்கப்பட்டால் அதற்கான பழியை சீன அரசின் மீது சுமத்தலாம் என்று விளையாடிப்பார்த்தவர்கள் அல்லவா இதற்குப் பொறுப்பு? கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள சீன அரசு, அன்றைய சூழல் உருவானதற்குக் காரணமான சில பின்னணிகளை ஆராய்ந்து, பல்வேறு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டது. உலகம் முழுவதும் ஜனநாயகக் காவலர்கள் என்ற புனைப்பெயரில் இயங்கும் கம்யூனிசப் பகைவர்களும், அவர்களது எதிரொலிகளான கார்ப்பரேட் ஊடகங்கள் இதைச் சொல்வதில்லை.

இந்தியாவில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கம் வளரவில்லை? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

1 comment:

vimalavidya said...

The ruling leaders of China and Communist party leaders all personally went to the students place and had hours together discussions with the students.They all persuaded the students to given up the struggle..the motive behind the "assemble" is obvious>>You have rightly exposed the what actually happened..The word"democracy" is always misused by the capitalists news media in this way only.