Sunday 20 June 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடும் உள்ளூர் பெட்டிக்கடையும்


செம்மொழியான தமிழ் மொழிக்கு உலக மாநாடு தொடங்க இருக்கிறது. கோவை நகரம் மாநகராட்சியான பின்னரும் இதுவரை காணாத அளவிலும் வேகத்திலும் பல உள் கட்டுமான வசதிகளை இந்த மாநாட்டிற்காகப் பெற்றிருக்கிறது. வானொலியில் தொலைக் காட்சியில் ஊர் ஊராய்ச் சுற்றிவரும் கருத்துப் பரப்பு வாகனங்களில் கணினி வழி இணையத் தொடர்புகளில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல் ஒலிக்கிறது. மாநாட்டுத் தேதிகளில் நடைபெற இருந்த ஒரு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டிருக்கிறது. எல்லாமாகச் சேர்ந்து, மாநாடு பற்றிய ஒரு எதிர்பார்ப்பு, முன்னெப் போதையும் விட கூடுதலாக ஏற்பட்டிருக்கிறது.

அந்த எதிர்பார்ப்பு சார்ந்த உரையாடல் களில் மாநாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் நெருங்கும் காலத்தில் ஆளுங்கட்சிக்கு மற்றொரு பிரச்சார ஏற்பாடுதான் இது, இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தீர்க் கப்படாத நிலையில் இப்படியொரு மாநாடு தேவையில்லை என்றும் எதிர்மறை எண்ணங் கள் சற்று அழுத்தமாகவே ஒலிக்கின்றன. அலங்கார ஊர்திகள், நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் என ஒரு திருவிழாவாக நடந்து முடிவதில் என்ன பயன் என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

அறிஞர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளி கள் ஆகியோர் மட்டும் அரங்குகளில் கூடி விவாதித்துக் கலைவதாக இல்லாமல், பொதுமக்களும் உற்சாகமாகப் பங்கேற்கிற ஏற்பாடு என்ற வகையில் திருவிழாக் கொண் டாட்டமாக நடப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. எந்த மக்கள் தொடர்பாகப் பேசப்படுகிறதோ அந்த மக்கள் பார் வையாளர்களாகக் கூட அவற்றில் பங்கேற்க முடிவதில்லை என்பதுதான் பொதுவாக இப்படிப்பட்ட மாநாடு களின் அனுபவம். மக்களின் பணத்தில் நடத்தப்படுகிற இந்த மாநாட்டில், அணிவகுப்புகளையும் கலை நிகழ்ச்சி களையும் காண்பதற்காகவேனும் பொது மக்களில் ஒரு பகுதியினர் வருகிறார்கள் என்றால் அது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், ஆய்வுரைகளின் ஒட்டுமொத்த பலன்களை தமிழ் மக்கள் வருங்காலத் தில் அறுவடை செய்ய முடியும் என் றால்தான் இது ஒரு வெற்றிகரமான மாநாடாக வரலாற்றில் பதிவாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அறுவடை மக்களுக்குச் சொந்த மாக வேண்டும் என்ற அக்கறையோடுதான், மாநாட்டைப் புறக்கணிக்காமல், அதே வேளையில் விளம்பரச் சோதியில் ஐக்கியமாகி விடாமல் கலந்துகொள்கிற அணுகுமுறை தேவைப்படுகிறது. இது மேலும் ஒரு பட்டம் சூட்டுவிழாவாகவே முடிந்துவிடக்கூடாது என்ற அக்கறையோடு மார்க்சிய இயக்கம் பங்கேற்கிறது. தீக்கதிர் நாளேட்டின் சார்பில் மாநாட்டுக்கான சிறப்பு மலர் வெளியிடப் பட்டிருப்பது அப்படிப்பட்ட பங்கேற்புதான். செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டி யது என்ன கேள்வியை முன்வைக்கும் சிறு புத்தகத்தை விநியோகித்த தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் சக்திக்கு உட்பட்டு மக்களிடையே மாற்றுச் சிந்தனைகளை எடுத்துச் சென்றது. இதற் கென்றே சென்னையில் மாநிலக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட கோவைப் பயணம் மேற்கொண்ட முதல மைச்சர் கலைஞர், இது ஆளுங்கட்சியின் விழா என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக் கூடாது என்று கூறி, அந்த எண்ணத்தை ஏற் படுத்தும் வகையில் இருந்த விளம்பரங்களை அகற்றப் பணித்தார்; மாநாட்டுக் கருத்துக்களே விளம்பரங்களில் இடம்பெற வேண்டும் என்று அறிவித்தார். சென்னையில் அரசின் தலைமைச் செயலகத்திலிருந்து தமுஎகச வெளியிட்ட புத்தகம் தேவை என்று தேடி வந்து வாங்கிச் சென்றனர். இவையெல்லாம் மேற்கூறிய மாற்றுச் சிந்தனை முயற்சிகளுக்குக் கிடைத்த சிறு வெற்றிதான்.

இதற்காகப் பெருமைப்பட்டுக்கொண்டு இனி எல்லாம் தானாய் நடந்துவிடும் என்று ஓய்ந்திருப்ப தற்கில்லை. அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் அரசின், சமுதாயத்தின் செயலாகவும் மாறி யாக வேண்டும். அதற்கான இயக்கங்கள் தொடர வேண்டும். தொடரும்.

செம்மொழியான தமிழ்மொழியாம் பாடலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழிசை இல்லை, தமிழின் நாட்டுப்புற இசை இல்லை, மேற்கத்திய பாணியில் இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண் ணோட்டம் (காதோட்டம்?) இருக்கும்தான். ஆனால், தமிழின் இலக்கிய மரபுப் பெருமை யோடும் உலகளாவிய உறவை வலியுறுத்தும் வரிகளோடும், முதலமைச்சர் கோர்த்திருக்கும் இந்தப் பாடலை மூத்த பாடகர் டி.எம். சவுந் தரராஜன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்க இன்றைய இளம் பாடகர் கள், நாட்டுப்புற பாடல்களில் புகழ்பெற்ற சிலர் வரையில் பங்கேற்று நிறைவு செய் துள்ளனர். அடுத்த தலைமுறையினரின் நவீன இசை நாட்டம், தமிழிசை, நாட்டுப்புற கருவி கள் என பன்முகக் கலவையோடு ஏ.ஆர். ரஹ் மான் இசையமைத்திருப்பதாகவே தோன்று கிறது.

வலைத்தளங்களில், தமிழ் இனி அழி வதைத் தடுக்க முடியாது என்றும், தமிழை யாராலும் அழிக்க முடியாது என்றும் வாத-எதிர்வாதங்கள் பதிவாகின்றன. சந்து பொந்துகள் முதல் பெரும் வளாகங்கள் வரை யில் எனப் பரவியிள்ள தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள் (அரசு நிர்ணயித்த கட்டணங் களையே வசூலிக்க ஒப்புக்கொண்டாலும் கூட) தமிழை அழித்துவிடும்... அம்மா அப் பாவை மறைத்து மம்மி டாடி என அழைக்கு மாறு குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பெற் றோர்கள் அழித்துவிடுவார்கள்... மிச்சத்தை இந்த மாநாடு கவனித்துக்கொள்ளும்... இப் படியான கருத்துக்கள் உலாவருகின்றன. பல சுனாமிகளைத் தாங்கி, தாண்டி வாழ்ந்துவரும் தமிழ் இன்று மின்னணு ஊடகத்திலும் ஏறிக்கொண்டுவிட்டதால் அது ஒருபோதும் அழியாது என்ற நம்பிக்கைகளும் வெளிப்படு கின்றன.

தானாய் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பது பழையபொய். அரசு நிர்ணய கட் டணத்திலோ, அல்லது கல்வியிலேயும் சுதந் திரச் சந்தை திறந்துவிடப்பட்டோ ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் தொடருமானால், அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் தரமான கல்வி கிடைக்கிறது என்ற நம்பிக்கைக்கு இட மில்லாமல் போகுமானால் என்ன ஆகும் என்ற கேள்வியைக் கேட்காமல் இருப்பதற்கில்லை.

கல்வி அப்பட்டமான வர்த்தகமாக்கப் பட்டுவிட்டது என்பது ஒருபுறம். வர்த்தகம் என்பது திறந்த சந்தையாகவே இருக்க வேண்டும் - பெட்ரோலியப் பொருள்களானா லும் பங்குச் சந்தையானாலும் சரக்குகளின் விலையை அரசாங்கம் நிர்ணயிப்பது என்பதே இருக்கக்கூடாது, உலகச் சந்தை நிலவரங் களுக்கு ஏற்ப அது தானாகவே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மன்மோ கனப் பொருளாதாரக் கொள்கை நாளை கல்வி வர்த்தகத்திலும் ஆக்கிரமிக்கத்தானே செய் யும்? அதை எதிர்க்காமல் சமச்சீர் கல்வி யையோ தமிழ்வழி கல்வியையோ எப்படி வேரூன்றச் செய்ய முடியும்? மற்ற துறைகளில் உலகமய வேட்டைக்கு ஒப்புதல் தெரிவித்து விட்டு கல்வியில் தமிழைக் காப்பாற்றி விடலாம் என்று நினைப்பது ஏமாற்றுவேலை யாகிவிடாதா? மக்களை ஏமாற்றுகிற வேலை மட்டுமல்ல, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிற வேலையுமல்லவா இது? சுற்றிலும் நெருப்பு பற்ற வைக்க அனுமதித்துவிட்டு, அதற்குத் தானும் சேர்ந்து கொள்ளிக்கட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு, அந்த நெருப்பு தனது குடிசையை மட்டும் விட்டுவைக்கும் என்று எதிர்பார்ப்பது பகுத்தறிவுக்கும் ஒவ்வாத செயலாயிற்றே?

விஷயம், பிரச்சனை, ஆட்சேபனை போன்ற சில சொற்கள் இன்னும் விடமாட் டேன் என்று தொற்றிக்கொண்டிருந்தாலும், சமஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழைப் பெரிதும் மீட்க முடிந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், இன்றைய உலக மயச் சுரண்டல் ஏற்பாட்டில், அடிப்படை யான சமூகச் சிந்தனை கூட இல்லாதவர்களாக இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள
். அவர்களது மூளைகளில் ஆங்கில மோகக் கறை ஏற்றப்படுகிறது (ஆம், இது மூளைச் சலவை அல்ல, மூளைக் கறைதான்). அது முன்பு படை பலத்தால் நாடுகளை வளைத்த பிரிட்டிஷ் ஆங்கிலம் அல்ல, இன்று பொரு ளாதாரக் கெடுபிடி பலத்தால் நாடுகளை வளைய வைக்கிற அமெரிக்க ஆங்கிலம். இதையெல்லாம் வளர்ச்சியின் விலை என்று இறும்பூது எய்திக்கொண்டு, அப்புறம் எப்படி தமிழைக் காப்பாற்றுவது?

இன வேறுபாடுகளைக் களைவதற்கு மாறாக, இன அடையாளங்களையே அழித்து ஒழிப்பதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆதிக்க இனங்களின் அடக்குமுறைகளை விடவும் கொடூரமாக இன்றைய உலமயப் பொருளாதாரம் கரசேவை செய்துகொண் டிருக்கிறது. அதன் சரக்குகள் தங்குதடையில் லாமல் எல்லா நாடுகளின் நுகர்வோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்கேற்ற வகையில், வாழ்க்கை முறை உள்ளிட்ட பண் பாட்டுத் திணிப்புகள் அரங்கேற்றப்படு கின்றன. இந்திய/தமிழக குக்கிராமங்களின் பெட்டிக்கடைகளிலும் கோக், பெப்சி, லேய்ஸ் வகையறாக்கள்தான் ஆக்கிரமித்துள் ளன. கோக், பெப்சி, கூல்டிரிங்க் என்ற சொற் களின் மேலாண்மையில் கருப்பட்டி பானகம் போன்ற உள்ளூர்ச் சொற்களும் காணாமல் போய்விட்டனவே! லேய்ஸ் ஆதிக்கத்தில் வறுவல் என்ற சொல்லே மறைந்துவிட்டதே! இது அப்படியே அரசு நிர்வாகம், நாடாளு மன்றம், நீதித்துறை என்று பரவிக் கால் பரப்புவதைத் தடுக்க வழி என்ன? தமிழிலேயே சிந்தித்து, தமிழிலேயே கண்டுபிடித்து, தமிழிலேயே செயல்படுத்தி உலகத்திற்கு வழங்க முடியும் என்று அறிவியல் தமிழை வளர்க்காமல் மாநாட்டுக் கொண்டாட்டத் தால் மட்டும் செம்மொழியைப் பாதுகாக்க முடியுமா? வர்த்தக உலகத்தினர், தங்களது பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைப்பதற்குத் தயங்குவது கூட இந்த உலகமய அடையாள அரசியலோடு பின்னிப் பிணைந்ததே அல்லவா?

சுற்றிவளைத்து, இன்றைய உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத் தோடும் இணைந்ததே மொழி, இன அடை யாளப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக் கான போராட்டமும். உலகத் தமிழ் செம் மொழி மாநாடு இதையெல்லாம் நேரடியாக விவாதிக்கும் என்று விளையாட்டாகக் கூட கற்பனை செய்வதற்கில்லை. ஆனால், அரங்க ஆய்வுரைகளில் இது பற்றிய சிந்தனை களாவது வெளிப்பட வேண்டும். அந்தச் சிந்தனைகள், செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ற கேள்விக்கான விடைகளுக்கு வீரியம் ஊட்டுவதாக அமைய வேண்டும்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுச் சின் னங்களில் உயர்ந்துநிற்கிறார் வள்ளுவர். மாநாட்டின் உரைகளும், கருத்துப் பரிமாற் றங்களும் இறுதிப் பயனாளிகளான மக்களைச் சென்றடைகிறபோது உண்மை வாழ்க்கையில் செம்மொழித் தமிழ் நிமிர்ந்து நிற்கும்.

2 comments:

Unknown said...

உங்கள் கனவு பலிக்கக்கடவதாக!

Unknown said...

அன்புள்ள தோழர்,

தோழமைக் கரம் நீட்டி எப்பொருள் குறித்தும் நாங்கள் கேட்க உங்களது வலைப்பூவில் ’பின் தொடரிகள்’ (followers) இணைப்பை ஏற்படுத்த வேண்டுகிறேன். தொடர்புக்கு வேறு வழியில்லாததால் இந்த இடுகையின் பின்னூட்டல் வழியாகவே இதை தெரிவித்ததற்காக மன்னிக்கவும்.