Saturday, 31 May 2025

எங்கிருந்து வந்தார்கள் மாவோயிஸ்ட்டுகள்? பேசத் தயாராக இருந்தும் அவர்களை சுட்டுக்கொல்வது ஏன்?


காஷ்மீரின் பஹல்காம் படுகொலைகள், பயங்கரவாதக் குழுவின் பதுங்கிடங்களில் விமானப்படையின் துல்லியத் தாக்குதல், ஒரே மனிதராக எழுந்து இந்திய மக்கள் வெளிப்படுத்திய ஒருமைப்பாடு… இவற்றுக்கிடையே உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, பெரிய அளவுக்குப் பேசப்படாத, நடவடிக்கை சத்திஸ்கரின்  அபுஜ்மத் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் மீதான தாக்குதல். பல நாட்களாகவே அந்தப் பகுதியில் துணை ராணுவமும் மாநிலக் காவல்துறையும் கூட்டு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. மே 21 நடவடிக்கையில் குறைந்தது 27 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பசவராஜூ என்று அழைக்கப்பட்டவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் நம்பல்லா கேசவ் ராவ்.


மாவோயிஸ்ட்டுகள் இல்லாத நாடாக மாற்றுவது என்ற அறிவிப்புடன் 2019ஆம் ஆண்டில் ‘ஆபரேஷன் ஜீரோ’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. சுமார் 10,000 துணை ராணுவத்தினர் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில காவல் துறையிலிருந்து 2,000 பேர் இறக்கிவிடப்பட்டனர். அதன் கீழ், கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் ககர்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. ககர் என்ற பகுதியை இலக்கு வைத்த நடவடிக்கை அது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்பட்டு 30 பேர் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 16 அன்று கங்கர் பகுதியில்  29 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். 


கடந்த 17 மாதங்களில் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையும், சரணடைந்தவர்கள் எண்ணிக்கையும் பெரிதும் அதிகரித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டில் மட்டும் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் செய்திகளை வெளியிட்டுள்ள பல ஊடகங்கள், கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே மாவோயிஸ்ட்டுகள்தானா, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டார்களா என்று கேட்டுள்ளன.


என்கவுன்டர் என்றால்…


நடவடிக்கையின்போது நடந்த மோதல்களில் இந்தச் சாவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இது ஆள்பலம், ஆயுதபலம் ஆகிய இரண்டிலும் குறைவாக இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட “என்கவுன்டர்” தாக்குதல்களே என்று மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன. என்கவுன்டர் என்றால் இரு தரப்பினரின் சந்திப்பு என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. நடைமுறையில் இரு தரப்பினரின் மோதலைக் குறிப்பிடுவதற்கு அந்தச் சொல் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இங்கே, காவல் துறையினர் எதிர்த் தரப்பை ஆயுதமின்றி நிறுத்திய பிறகு சுட்டுக் கொல்வதுதான் என்கவுன்டர் என்றாகிவிட்டது. 


அப்படிப்பட்ட என்கவுன்டர்தான் இப்போது மாவோயிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்டடதாகக் கூறப்படுகிறது. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு மாறாக இப்படிக் கொலை செய்வதா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) உள்பட பல கட்சிகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன. “மாவோயிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பல முறை விடுத்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. மத்திய அரசும் பாஜக தலைமையிலான சத்திஸ்கர் அரசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வரவில்லை,” என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கூறியிருக்கிறது. 


“ஒன்றிய உள்துறை அமைச்சர் காலக்கெடுவை மறுபடி வலியுறுத்தியதும், சத்திஸ்கர் முதலமைச்சர் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையில்லை என்று அறிவித்ததும் மனித உயிர்கள் பறிக்கப்படுவதைக் கொண்டாடும் ஒரு பாசிச மனநிலையைப் பிரதிபலிக்கின்றன,” என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது. மேலும், “மாவோயிஸ்ட் கொள்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற போதிலும், அரசு உடனடியாக அவர்களுடைய பேச்சுவார்த்தை  வேண்டுகோளை ஏற்கவும், துணை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் வலியுறுத்துகிறோம்,” என்று அக்கட்சி குறிப்பிட்டிருப்பதும் கவனத்திற்குரியது.


“மாவோயிஸ்ட் தலைவரைக் கைது செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் சுட்டுக்கொன்றது, ஜனநாயக நெறிகளில் அரசுக்கு எந்த அளவுக்கு உறுதிப்பாடு இருக்கிறது என்ற கவலைகளை ஏற்படுத்துகிறது. என்கவுன்டர்கள் குறித்து ஒரு சுயேச்சையான நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று சிபிஐ வலியுறுத்தியிருக்கிறது. என்கவுன்டர்களைக் கண்டித்துள்ள மற்ற கட்சிகள், அமைப்புகளும் இதே போன்றுதான் அறிவித்திருக்கின்றன.


பேச்சுவார்த்தை வேண்டுகோள்


மேற்படி ஆபரேஷன்கள் தொடங்கியதிலிருந்தே பல முறை மாவோயிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அண்மை நாட்களில் ஏற்பட்ட இழப்புகளைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் மேலும் முனைப்புடன் வைக்கப்படுகிறது. மாவோயிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபய், “நாங்கள் எப்போதுமே அமைதிப் பேச்சுக்குத் தயார். அதற்கு சாதகமான சூழலை (மத்திய/மாநில அரசுகள்) உருவாக்க வேண்டும்,” என்று கோரியிருக்கிறார். 



ஆபரேஷன் கொலைகளை நிறுத்த வேண்டும், புதிய ஆயுதப்படை முகாம்கள் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.  குடிமைச் சமூகக் குழுக்களும் மக்கள் இயக்கங்களுமாக சுமார் 300 அமைப்புகள் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

தெலங்கானாவில் அமைக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதிபதி சந்திரகுமார், உறுப்பினர் பேராசியர் ஹரகோபால் உள்ளிட்டோர்  முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து, தெலங்கானா–சத்திஸ்கர் எல்லைப்பகுதியில் துணை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தை நடத்துமாறும் மத்திய அரசை வலியுறுத்தக் கேட்டுக்கொண்டனர். மாவோயிஸ்ட் பிரச்சினையை சட்டம்–ஒழுங்கு விவகாரமாகப் பார்க்கக்கூடாது, அதுவொரு சமூகப் பிரச்சினை என்று அவர்களிடம் கூறிய முதலமைச்சர், சண்டை நிறுத்தம் பற்றியோ, ஒன்றிய அரசுடன் பேசுவது பற்றியோ எதுவும் சொல்லாமல் அனுப்பிவிட்டார்.

இது பழக்கமாகிவிட்டால்

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டிற்கு பேட்டியளித்த மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஹரகோபால், “மாவோயிஸ்ட் இயக்கத்தால் எழுந்துள்ள கேள்விகளுக்கு என்கவுன்டர்கள் மூலம் பதிலளித்துவிட முடியாது. துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது அரசுக்கு வழக்கமாகிவிட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னது போல மாவோயிஸ்ட் கட்சியை “ஒழித்துவிட்ட” பிறகும் கூட நிறுத்த முடியாமல் போகக்கூடும். இதே படைபலம் பின்னர் எதிர்க்கட்சிகள் மீதும், கருத்து மாறுபடுவோர் மீதும், குடிமைச் சமூகத்தின் மீதும் திருப்பிவிடப்படலாம்,” என்று கூறினார்.

இதற்கு முந்தைய காலங்களிலும் மாவோயிஸ்ட், மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் குழுக்களிடமிருந்து பேச்சு வார்த்தை வேண்டுகோள்கள் வந்ததுண்டு. முந்தைய அரசுகளும் அவற்றைப் புறக்கணிக்கவே செய்தன. நடந்த ஓரிரு பேச்சுவார்த்தைகளும் நிலையான மாற்றத்திற்கு வழியமைக்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, உள்நாட்டுக் கலகம் நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று கூறினார். 

வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரி வன்முறைகளில் ஈடுபட்ட அமைப்புகளுடன் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேச்சு நடத்தின. ஆனால், அதே அளவுக்கு, மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் பேச்சு நடத்த முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் ‘வீக் ஷனம்’ தெலுங்குப் பத்திரிகையின் ஆசிரியரும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளைக் கவனித்து வருபவருமான என். வேணுகோபால். “தலைவர்கள் வீழலாம். ஆனால் கோபம்? அநீதிகள் நீடிக்கிற வரையில் இப்படிப்பட்ட இயக்கங்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். அவற்றை நாம் மாவோயிசம் என்று சொல்லாமல் போகலாம், ஆனால் அந்த இயக்கங்கள் இருக்கும்” என்றும் கூறுகிறார் அந்தக் கவிஞர்  (‘தி வயர்‘).

கதவு மூடல்?

அடுத்த ஆண்டு மார்ச் 26க்குள் “ஜீரோ மாவோயிஸ்ட் நாடாக இந்தியாவை மாற்றுவோம்” என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கான கதவை மூடிவிட்டதாகக் கருதப்படுகிறது.  பலருடைய எண்ண ஓட்டம் இதுதான்:  “மாவோயிஸ்ட்டுகள் முன்நிபந்தனை விதிக்கக்கூடாது என்று கூறுகிற அரசு, அவர்கள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும், சரணடைய வேண்டும் என்று முன்நிபந்தனை விதிக்கிறது. கோதாவில் மிக வலிமையுடன் இருக்கிறவர்தானே முதலில் விட்டுத் தருவார், அந்தப் பெருந்தன்மைப் பண்பை அரசு வெளிப்படுத்தலாமே? இரு தரப்பினரும் இப்படி பிடிவாதமாக இருப்பது எங்கே கொண்டுபோய் விடுமோ?”

மாவோயிஸ்ட்டுகள் எங்கேயிருந்து வந்தார்கள் என்று பார்க்லாம். உலகம் முழுவதுமே நிலவும் சமுதாய சமத்துவமின்மை, சிறு பகுதியினரின் நிலக் குவிப்பு, பெரும் பகுதியினரிடம் காணி நிலமும் இல்லாமை,  அவலங்களின் மூல(தன)மாகிய உழைப்புச் சுரண்டல், அரசுகளுக்குச் சுரண்டல் கூட்டங்களுடன் உள்ள உடந்தை உறவு ஆகிய நிலைமைகள்தான் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு  அடிமனை. இந்தியாவில் இவற்றுடன், தனித்துவமான சாதிப் பாகுபாடும் சேர்ந்திருக்கிறது.

ஒரு சமுதாயத்தின் ஆளும் வர்க்கம் (ஆளும் கட்சியல்ல) எது, அதன் தன்மையும் வலிமையும் என்ன, மக்களின் தயார் நிலை எப்படி இருக்கிறது… இவற்றை ஆராய்வதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வழிமுறைகளை வகுக்கின்றன. எங்கே தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும், எங்கே ஆயுதம் ஏந்தி எதிரிகளோடு மோத வேண்டும் என்று தீர்மானிக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்றப் பங்கேற்பு என்ற, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான இடைக்காலப் பாதையை ஒரே அமைப்பாக இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் தேர்ந்தெடுத்தது. அந்தப் பாதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), 1964இல் அதிலிருந்து பிரிந்து உருவான  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐ–எம்), இரண்டும் செல்கின்றன. இந்தப் பிரிவு ஏன் ஏற்பட்டது என்பது வேறு வரலாறு. இப்போது இவ்விரு கட்சிகளும் மக்கள் பிரச்சினைகளில் கூட்டாகவே செயல்படுகின்றன.

விலகிய பாதை

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இந்த நாடாளுமன்றப் பாதையை, மேற்கு வங்கத்தில் சாரு மஜூம்தார், கனு சன்யால், மற்றும் ஜங்கல் சந்தால் உள்ளிட்டோர் எதிர்த்து வந்தனர். சீனாவில் மாவோ என்றழைக்கப்பட்ட மா சே துங் தலைமையில் நடைபெற்றது போன்ற ஆயுதக் கிளர்ச்சியே தீர்வு என்று நம்பினர். 1967 மே 23இல், நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஒரு நிலப் பிரச்சினையில் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சிக்கு இந்த மூவரும் தலைமை தாங்கினர். காவல்துறையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  நடந்த மோதலில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், மே 26இல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையிரின் துப்பாக்கிச் சூட்டிற்கு, பழங்குடிப் பெண்களும் குழந்தைகளும் உ ட்பட 11 பேர் பலியாகினர்.

1969இல் நக்சல்பாரி கிளர்ச்சியில் பங்கேற்றவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) (சிபிஐ–எம்எல்) என்ற அமைப்பைத் தொடங்கினர். கிராமத்தை மையமாக வைத்து, குறிப்பிட்ட வட்டாரத்தைக் கைப்பற்றி, நகரப் பகுதிகளை முற்றுகையிடுவது, தேர்தல் பாதையில் செல்லாமல் ஆயுதங்களால் தாக்கும் வழியில் செல்வது, சீனாவில் நடந்தது போல நீண்ட காலம் தாக்குப் பிடித்து ஆயுதங்களால் அரசுப் படைகளை பலவீனப்படுத்தும் “மக்கள் போர்” என்ற வழியைப் பின்பற்றுவது என்ற அணுகுமுறைகள் வகுக்கப்பட்டன.

இதெல்லாம் நடந்துவிடும் என்று நம்புகிற அளவுக்கு இந்திய ஆளும் வர்க்கத்தையும் அதன் வலிமையையும் மக்கள் தயார்நிலையையும் மதிப்பிட்டிருந்தார்கள் என்பதே இதன் பொருள். இந்தக் கோட்பாடுகளை வகுத்ததில் சாரு மஜூம்தார் தலையாய பங்கு வகித்தார். நக்சல்பாரி கிராமத்திலிருந்து புறப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்த நக்சல்பாரிகள், நக்சலைட்டுகள், நக்சல்கள் என்ற சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன.

“தேர்தல் பாதை திருடர் பாதை” என்று விமர்சித்தும், வாக்களிக்காதீர் என்று கேட்டுக்கொண்டும்,  தேர்தல்கள் வரும்போதெல்லாம் சுவர்களில் எழுதி வைத்தார்கள். பெரும்பகுதி மக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு வாக்குச் சாவடிகளுக்குப் போனார்கள்.

தொடக்கத்தில் வலுவாகவே இருந்த இக்கட்சி நாளடைவில் பல சிறு குழுக்களாக உடைந்து பிரிந்து வலுவீனமடைந்தது. கோட்பாட்டு மாறுபாடுகள், அமைப்பு சார்ந்த பிரச்சினைகள், இவற்றோடு அரசாங்கத்தின் கடுமையான ஒடுக்குமுறைகள் காரணமாகவும் அந்த உடைப்புகள் நிகழ்ந்தன.  அடிப்படையில் மக்கள் ஆதரவு விரிவாகக் கிடைக்கவில்லை என்ற காரணமும் இருந்தது. தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மீதும், அரசாங்க அமைப்புகள் மீதும் பல அதிருப்திகள் இருந்தாலும், நம் மக்களில் பெரும்பான்மையோர் தேர்தல் பாதையைப் புறக்கணித்துவிடவில்லை. இதைப் புரிந்துகொள்ளத் தவறினார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

சிவப்புத் தாழ்வாரம்

2004ஆம் ஆண்டில் பல குழுக்கள் ஒன்றாக இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சியை உருவாக்கின. இதுதான் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் செயல்படுகிற முக்கியமான மாவோயிஸ்ட் கட்சியாகும். இத்தகைய அமைப்புகள் குறிப்பாக சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பழங்குடியினர் மிகுதியாக வசிக்கும் பகுதிகளிலும் பரவியுள்ளன. இந்தப் பகுதிகள் "சிவப்புத் தாழ்வாரம்" (ரெட் காரிடார்) என்று அடையாளப்படுத்தப்படுகின்றன.

இந்திய அரசை வீழ்த்துகிற போர் என்று, பல இடங்களில் அரசுப் பணியாளர்களை வர்க்க எதிரியின் ஆட்களாகக் கருதித் தாக்குவது, காவல்துறையினரின் வாகனங்களைக் கண்ணி வெடிகளால் தகர்ப்பது, கிராமங்களிலும் பழங்குடிப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கான திட்டப் பணிகளைத் தடுப்பது என்ற வழிகளில் சில குழுக்கள் இறங்கின. 2009 ஜூன் 22 அன்று இந்திய அரசு இக்கட்சியை, 1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. ஆயுத வழியில் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுவது என்ற பாதையில், 2000ஆவது ஆண்டிலிருந்து இன்று வரையில் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று ‘சௌத் ஆசியன் டெரரிசம் போர்ட்டல்’ என்ற இணையப் பதிவகம் தெரிவிக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரியும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டவருமான எம்.ஏ. கணபதி, “அடிப்படையில் ஒரு சித்தாந்தப் போராட்டம்தான் மாவோயிஸ்ட் இயக்கம். ஆனால் இன்று அது தனது  ஈர்ப்பை இழந்துவிட்டது. படித்த இளைஞர்களுக்கு அதில் ஆர்வமில்லை,” என்று கூறுகிறார். “மக்களிடையே விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன. கைப்பேசி, சமூக ஊடகப் பயன்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. வெளி உலகத் தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. புதிய சமூக மெய்நடப்புகளுடன் இணையாமல் மாவோயிஸ்ட்டுகள் காடுகளுக்குள் பதுங்கியிருந்து செயல்பட முடியாது,” என்கிறார் அவர் (பிபிசி).

உள்துறை அமைச்சக அறிக்கை, மாவோயிஸ்ட் தொடர்பான வன்முறை   நிகழ்வுகளின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 1,136 ஆக இருந்தது, 2023இல் அது 48% சரிவடைந்து 594 ஆகக் குறைந்துவிட்டது, சாவு எண்ணிக்கை 397 ஆக இருந்தது 65% சரிந்து 138 ஆகக் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கிறது. பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு 2022இல் நடந்ததை விட 2023இல் சிறிது அதிகரித்திருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


இடது தீவிரவாத வன்முறைகளைப் பொறுத்தவரையில் 2023இல் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது சத்திஸ்கர்தான். நாடு முழுதும் நடந்த அத்தகைய வன்முறைகளில் 63% அந்த மாநிலத்தில்தான் நடந்தன. மொத்த உயிரிழப்புகளில் 66% அங்கேதான் நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக வருவது ஜார்கண்ட் (வன்முறைகள் 27%, சாவுகள் 23%) என்றும் அமைச்சக அறிக்கை கூறுகிறது.  மஹாராஷ்டிரா, ஒடிஷா, மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங்கள் பின்னால் வருகின்றன.


கனிமக் கோணம்!


இந்தப் பின்னணியில், மாவோயிஸ்ட்டுகள் மீது தொடரும் நடவடிக்கைகளுக்கு வேறொரு கோணத்தைக் காட்டுகிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், அதுதான் கனிம வளம் என்ற கோணம்! ஏராளமான கனிம வளத்தைப் பெற்றிருப்பது சத்திஸ்கர் மண். நாட்டிலேயே வெள்ளீயச் செறிவுகளும், அதற்கான வார்ப்பு மணலும் உற்பத்தியாகிற ஒரே மாநிலம் அதுதான். நாட்டின் மொத்த வெள்ளியக் கனிமத்தில் 36% அங்கு இருக்கிறது. உயர் ரக  கச்சா இரும்பு (20%), நிலக்கரி (18%), டோலோமைட் (11%) ஆகியவையும் அந்த மாநிலத்தில் அமோகம். வைரம், பளிங்கு வளமும் 4% இருக்கிறது.


ஆகவே அந்த வளங்களில் பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. ஆனால் “ஜல் ஜங்கள் ஜமீன்” (நீர், வனம், நிலம்) வளங்கள் மக்களுக்கே சொந்தம் என்ற கருத்தாக்கத்தோடு பழங்குடி மக்களின் ஆதரவைத் திரட்டி வைத்திருந்த மாவோயிஸ்ட் இயக்கம் சுவராக நிற்க, பன்னாட்டு நிறுவனங்களால் நுழைய முடியாமல் இருந்தது.


இப்போது, அந்த இயக்கம் வலுவிழந்துள்ள நிலையில், அந்த வளங்களுக்கான சுரங்கங்களை அந்த நிறுவனங்கள் தோண்டத் தொடங்கும், அதற்கான ஏல விற்பனைகள் வேகம் பிடிக்கும். ஆகவே, வன்முறையற்ற அமைதிக்காகத்தான் என்கவுன்டர்கள் நடந்தனவா என்ற கேள்வி எழுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் என்கவுன்டர்களிலிருந்து கனிமவளங்களும், மக்கள் வாழ்வும் பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி தொடர்கிறது.


இலக்குகள் நிறைவேற


நவீன, நாகரிக உலக சமுதாயத்தில் வன்முறைப் பாதைகளில் இனியும் இலக்குகளை அடைய முடியாது. இதனை, துணிவும் தியாகமும் தரிசாகப் போக விட்டுக்கொண்டிருக்கிற மாவோயிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் உணர்ந்தாக வேண்டும். எந்த மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்கிறார்களோ அந்த மக்களின் நலனின் உண்மையிலேயே முழு அக்கறை இருக்குமானால் பாதையை மாற்றிக்கொள்ளவும், வெகுமக்கள் இயக்கங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் இணையவும் தயாராக வேண்டும்.


மறுபடி மறுபடி இந்தச் சூழல்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால், வெறும் என்கவுன்டர்களால் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது என்பதை அரசும் புரிந்துகொண்டாக வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுகள் காண்பதற்கு முன்வர வேண்டும். சாதியப் பாகுபாடு உள்ளிட்ட நிலைமைகளை மாற்ற உண்மையாக அக்கறை கொள்ள வேண்டும்.


ஜீரோ என்கவுன்டர் நாடாக மாற்றுவதற்குக் கால வரம்பு நிர்ணயித்தால், அதை நோக்கிச் செல்லலாம் – எல்லோருமாக.

[0]

‘விகடன் டிஜிட்டல்’ தளத்தில் இன்று (மே 31) எனது கட்டுரை


Wednesday, 28 May 2025

அப்படிக் கேட்டவர்களுக்கு அவர்கள் சொன்ன பதில்



ங்கள் கொண்டாட்ட முகங்களைப் பார்க்கத்தான்  வந்தேன். இங்கேயோ உங்களின் போராட்ட முகங்களையும் சேர்த்துப் பார்க்கிறேன். தப்பிய குற்றவாளிகளையும் பிடிக்கும் வரை “விட மாட்டோம் விட மாட்டோம்” என்ற உங்கள் முழக்கத்தில் எத்தனை போராட்ட உறுதி!


பொள்ளாச்சிக் கொடுமை பற்றிய செய்திகளை ஒரு பத்திரிகையாளராகவும் நாட்டின் குடிமக்களில் ஒருவராகவும் பின்தொடர்ந்து வந்தபோது ஒன்றைக் கவனித்தேன். சமூக ஊடகங்களில் பலர் பதிவு செய்தார்கள், வெளியேயும் பேசினார்கள். “பொண்ணுக பொண்ணுகளா இருந்தா ஏன் இப்படியெல்லாம் நடக்கப்போகுது?” “பொண்ணுக வெளியே போகாம வீட்டிலேயே இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?” “பொண்ணுக ஆசைப்படாம இருந்தா இப்படியெல்லாம் நடக்காதே?”


இந்த வழக்கில் மட்டுமில்லை, பெண்கள் பாதிக்கப்படும் எந்தப் பிரச்சினை வந்தாலும் அடங்கியிருக்கச் சொல்கிறவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பதாக இருந்ததுதான் தொடக்கத்தில் நீங்கள் போட்ட ஆட்டம்! என்ன ஆட்டம் அது! அடங்க மாட்டோம் என்ற அந்த ஆட்டத்தில் உங்களின் கொண்டாட்டம், உரிமை, சுதந்திரம் எல்லாம் வெளிப்பட்டதைப் பார்த்தேன். எனக்கு அதில் ஒரே ஒரு வருத்தம், அது போல என்னாலும் ஆட முடியலையே! ஆனால் உணர்வுப்பூர்வமாக மனசுக்குள் நானும் ஜிங்கு ஜிங்குனு குத்தாட்டம் போட்டேன்!




வரவேற்கத் தக்க தீர்ப்பு வந்ததன் பின்னணியில் தடயங்களையெல்லாம் சேகரித்து விசாரணையை முறையாக நடத்திய புலனாய்வாளர்கள், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய வழக்குரைஞர்கள், கவனமாக உள்வாங்கிய நீதிபதி என எல்லோருக்கும் பங்கிருக்கிறது. அவர்களுக்குப் பாராட்டுகள்.


திசைதிருப்பல் முயற்சிகளை மீறி வழக்கு நடைமுறைகளும், விசாரணைகளும் வாதங்களும் சிறப்பாக அமைந்ததற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் பெண்கள் அமைப்புகளின் ஒன்றுபட்ட போராட்டம். மேலோட்டமாகக் கடத்திவிட முடியாது என்ற கட்டாயத்தை ஏற்படுத்திய போராட்டம் அது. போராடும் எல்லாப் பெண்களுக்கும் நம்பிக்கையளித்து வழிகாட்டியிருக்கிற உங்களுக்கு வாழ்த்துகள். 




“ஒன்றிணைந்தோம், நீதி கிடைக்கப் பெற்றோம்!  ஒன்று கூடுவோம், பெற வேண்டிய நீதியை உறுதி செய்வோம்! ,” என்று இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழிலும், பின்னாலிருக்கும் பதாகையிலும் என்று இருப்பது மிகமிகப் பொருத்தம். கூடுதலாக நான் சேர்த்துச் சொல்கிறேன், பெண் சுயமரியாதைக்கும், பாலின சமத்துவத்துக்குமான தொடர் இயக்கங்களில் ஒன்றுகூடுவோம் –  ஆண்களும்.


ஒரு விருப்பத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கே ஒரு வரலாறாகிவிட்டது, அதன் பின்னணியிலிருந்து தீர்ப்பு வரையில் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும், மாணவப் பருவத்திலேயே பாலின சமத்துவ எண்ணங்களை விதைக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது பள்ளிகளில் ஒரு வரலாற்றுப் பாடமாக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு இதைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதில் சிக்கல் இருக்குமானால், ஆசிரியர்கள் தாங்களாக இதைச் செய்ய வேண்டும்.


[0]


“பொள்ளாச்சி வெற்றியின் கடந்து வந்த பாதையும் செல்ல வேண்டிய தொலைவும்” என்ற தலைப்பில் அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சென்னையில் நேற்று (மே 27) நடத்திய “ஒன்று கூடல்” நிகழ்வில் எனது வாழ்த்துரை.


(முதல் படம்: உரிய நடவடிக்கை கோரி 2019இல் கோவையில் பெண்கள் நடத்திய மனிதச் சங்கிலி இயக்கம். இரண்டாவது படம், இந்த ஒன்று கூடல் நிகழ்வில் ‘தீக்கதிர்’ செய்தியாளர் கவி மணி எடுத்தது.)


Friday, 23 May 2025

அதென்ன ஆப்ஸ்டெட்ரிக் ஃபிஸ்டுலா?

 



ப்ஸ்டெட்ரிக் ஃபிஸ்டுலா என்றால்  “மகப்பேறு புரைப்புண்” என்று புரிந்துகொள்கிறேன். தமிழில் இது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்று தெரியவில்லை. பிரசவப் புரை நோய்?

குழந்தைப் பிறப்பின்போது பிறப்புப் பாதையில் ஏற்படும் கிழிசல், பிளவு பெரிய புண்ணாக மாறிக் காலமெல்லாம் பெண்ணை வலியோடு துன்புறுத்திக்கொண்டே இருக்கும். குறிப்பாக சிறுநீர்ப்பாதைக்கும் மலப்பாதைக்கும் இடையே இந்தப் பிளவு ஏற்படுவதால், சிறுநீர் மலம் திடீர்த்திரெனக் கட்டுப்படுத்த இயலாததாக வெளியேறும். 

பிரசவ வலி முடிந்துபோக, அதற்குப் பின் தொடரும் வலி.

சிசு வெளியே வருவதற்கு மிக அதிக நேரம் ஆவது, காயம் ஏற்படுவது, இடுப்புப் பகுதி குறுகலாக இருப்பது ஆகிய காரணங்களால் புண் ஏற்பட்டு புரையோடிப் போகிறது. மருத்துவமனைக்குத் தாமதமாகக் கொண்டுசெல்லப்படுவதும், உடனடியாக சரியான சிகிச்சை கிடைக்காமல் போவதுமான காரணங்களும் இணைகின்றன. சிறுவயதுத் திருமணம் உள்ளிட்ட நிலைமைகளில் பதின்பருவத்திலேயே கருத்தரிப்பதும் இதற்கு இட்டுச்செல்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், சமூகத்தின் அவமதிப்புகளுக்கும் குடும்ப வசவுகளுக்கும் அஞ்சி வெளியே சொல்வதில்லை. இதனால் வேதனையோடு நடமாடுகிறார்கள். சிகிச்சையும் எடுத்துக்கொள்ள முடியாமல் போகிறது. மருந்துகள், அறுவை என  மருத்துவ வழிகள் இருந்தும் பயனில்லாத நிலை. பொருளாதார இழப்புகளும் உளவியல் சிக்கல்களும் உத்தரவாதம்.

சிறு வயதிலிருந்தே  ஊட்டச்சத்து குறைபாடு மகப்பேறு புரைப்புண் ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். ஆம், வறுமை நிலைமை ஒரு முக்கியமான குற்றவாளி. அந்தக் குற்றவாளியை நடமாட விட்டிருக்கிற பெரிய குற்றவாளி யார்?  எதற்கெடுத்தாலும் இதையே சொல்கிறீர்களே என்று சிலர் கேட்பார்கள் என்றாலும், விதியின் மேல் பழிபோட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்றாலும், உண்மையான பெரிய குற்றவாளி யாரெனெச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது – முதலாளித்துவ சுரண்டல் சமுதாயம்தான்.

இன்று (மே 23) உலக மகப்பேறு புரைப்புண் ஒழிப்பு தினம். இதற்கான விழிப்வுணர்வைப் பரப்ப வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை எப்போது அந்த மூலக் குற்றவாளி பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும்? 


Wednesday, 21 May 2025

பல மீன் ஊருணியும் பண்பாட்டுப் பன்மையும்



பூமி  அழகாக இருப்பது கடல்களாலா, காடுகளாலா, ஆறுகளாலா?  புத்துயி ர்ப்போடு இருப்பது தாவரங்களாலா, விலங்குகளாலா, நுண்ணுயிரிகளாலா? குழந்தைகளும் சொல்வார்கள் –இவை யனைத்தும் கலந்திருப்பதால்தான் என்று. இயற்கைப் பன்மைத்துவம் போலவே இன்றி யமையாதது, மனிதர்களது பண்பாட்டுப் பன்மைத்துவம். 

இது குறித்த விழிப்புணர்வை விரிவாக்குதல் உரையாடலையும் பரிமாற்றங்களையும் ஊக்குவித்தல், உலக அமைதியை நிலை நாட்டுவதில் பண்பாட்டின் பங்கை எடுத்துக் காட்டுதல் என்ற நோக்கங்களுடன் ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) 2005இல் ‘உலக பண்பாட்டுப் பன்மைத்துவ நாள்’ தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கடுத்த ஆண்டிலிருந்து மே 21 அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பற்பல பண்பாடுகள் உள்ள சமுதாயங் களில்  மரியாதையும் ஒத்துழைப்பும் பரிவும் அக்கறையும் மேலோங்குகின்றன. இதோ இதற்கோர் உடனடிச் சான்று: பஹல்காம் தாக்குதல்களைத் தொடர்ந்து மதம், மாநிலம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து இந்திய மக்கள் ஒரே மனிதராக எழுந்தார்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக நின்றார்கள். அந்தப் பதற்றத்துக்குள் ஊடுருவி பகைமை அரசியலைக் கிளறிவிட முயன்றவர்களை ஒதுக்கினார்கள்.

சான்றாக சில நாடுகள்

 பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டாலும், பண்பாடுகள் செழித்திருக்கும் நாடுகளுக்கு நம்பிக்கையோடு முதலீடுகள் வருகின்றன. சுற்றுலா உள்ளிட்ட தொழில்களும் வணிகங்களும் வளர்கின்றன. பலவகை நுகர்பொருள்கள், நவீன வசதிகள் சேர்கின்றன. ஒரு வட்டாரத்தில் வேறு வட்டாரத்து ஆடைகள் புழக்கத்திற்கு வருவதன் பின்னாலிருப்பது வெறும் சந்தை ஏற்பாடு மட்டுமல்ல, அவற்றின் அழகு அல்லது நடமாட்ட வசதியை மக்கள் ஏற்பதும்தான். தமிழகப் பெண்களிடையே சுடிதார், பேண்ட், சட்டை பரவலானதில் அவை இலகுவானவை, பாதுகாப்பானவை என்ற உணர்வும் உண்டல்லவா?

பண்பாட்டுப் பன்மைத்துவத்தை மதிக்கிற சமுதாயம்  அனைத்து சமூக வாழ்க்கை முறைகளையும் உள்ளணைத்து வரவேற்பதாக இருக்கும். சுரண்டலே மூச்சாகக்  கொண்ட முதலாளித்துவ சமுதாய அமைப்பிலேயே கூட இதுவொரு முற்போக்கான கூறு.  இதில் குறிப்பிடத்தக்கதாக கனடா நாட்டை உலகம் சுற்றிகள் கூறுகிறார்கள். அதற்கான குடியேற்றக் கொள்கையின் அடிப்படையில் “பன்முகப் பண்பாட்டுப் பாதுகாப்புச் சட்டம்”, “இனப் பாகுபாட்டு தடைச் சட்டம்” என உள்ளன. ஒப்பீட்டளவில் ஆஸ்திரேலியா  சிறப்பான குடியேற்ற விதிகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக “பன்முகப் பண்பாட்டு ஆஸ்திரேலியா” என்ற கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் சில வெள்ளையின மேலாதிக்கவாதக் குழுக்கள் பாகுபாடு பேசுவதும், அவ்வப்போது தாக்குதல்கள் நடப்பதும் செய்திகளாகின்றன. ஆனாலும் ஒட்டுமொத்த சமுதாயம் அவர்களைப் புறக்கணிக்கிறது. “குடிமை உரிமைகள் சட்டம்” இனம், நிறம், மதம், பாலினம், தேசியம் என்ற அடிப்படைகளில் பாகுபடுத்தப்படுவதைக் குற்றமாக அறிவித்திருக்கிறது. முக்கியமான ஒரு திட்டம், குடியேற்றவாசிகள் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நிலையான குடியுரிமை வழங்குவதாகும். இப்போது இத்தகைய உரிமைகளில் கை வைக்கும் முயற்சிகள் நடந்தாலும் அது எளிதானதாக இல்லை.

சிங்கப்பூரின் இன ஒருமைப்பாடு, இருமொழிக் கல்வி, இங்கிலாந்தின் சமூக சகவாழ்வுக் கொள்கை, இன உறவுகள் சட்டம் ஆகியவையும் நல்ல தளங்களாக அமைந்துள்ளன. இவ்வாறு வேறு சில நாடுகளும் எடுத்துக்காட்டுகளாகக்கூடும்.

சோசலிச நாடுகளில்

சமத்துவத்தை அடிப்படை லட்சியமாகக் கொண்ட சோசலிச நாடுகளின் முக்கியமான பணியே பண்பாட்டுப் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதுதான். ஏகாதிபத்தியத் தூண்டுதலோடு சில குழுக்கள் பிரிவினைக் கலவரங்களில் இறங்குகிற, அரசுகள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கிற செய்திகள் வருவதுண்டு. ஆனால், ஒற்றைத்துவ ஆதிக்க நோக்கத்தோடு பெரும்பான்மை இனம்–மதம்–மொழி சார்ந்தோர் சிறுபான்மையினரை ஒதுக்குவதும், அதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பதுமான காட்சிகள் இல்லை.

அண்மைக் காலமாக இந்நாடுகளில் மதம் சாராதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் 56 இனப் பிரிவுகள் இருக்கின்றன. 90 சதவீதத்தினரான ஹான் சைனீஸ் மக்களுடன் திபெத்தியர், உய்குர், மோங்கோல், ஜூவாங், மஞ்ச்சு உள்ளிட்ட இதர பிரிவினர் இணக்கமாக வாழ்கின்றனர். பல்வேறு மொழிகள், மரபுகள், விழாக்கள், உணவுகள், உடைகள் சீனாவின் பன்மைத்துவத்தை அழகாகப் பிரதிபலிக்கின்றன.

கியூபா சமுதாயம் பூர்வீகக் குடிகளின் மரபுகளோடு ஆப்பிரிக்க, ஸ்பானிய தாக்கங்களின் கலவையான பண்பாட்டைப் பேணுகிறது. பெரும்பான்மை மதம் ரோமன் கத்தோலிக்கம். சாண்டேரியா என்ற மதமும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இரு பிரிவினருமே இரு பிரிவு ஆலயங்களுக்குச் செல்வார்கள். பிராட்டஸ்டண்ட், இஸ்லாம், பௌத்தம், பஹாய் மதங்களைப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். எல்லாப் பிரிவினருமே விரும்பிச் செயல்படுத்துகிற  பாரம்பரியமான ஒற்றைப் பண்பாடு ஒன்று உண்டு –ஊரே கூடி ஆடும் நடனம்!

54 இனப் பிரிவுகள் வாழும் வியட்நாமில், கின் (வியட்) மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஹமாங், சாம், டே உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்கள் மொழி, உடை, இதர பாரம்பரியங்களின் பன்முக அழகைப் பராமரித்து வருகிறார்கள். கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசில் ஆகப் பெரும்பாலோர் (99 சதவீதம்) கொரிய இனத்தவர். “கடவுள் அறியப்படாதது, அறிய முடியாதது” என்று கருதும் ‘கடவுள் கருத்தற்றவர்கள்’ 58 சதவீதத்தினரும், கடவுள் மறுப்பாளர்கள் 15 சதவீதத்தினரும் உள்ள இந்நாட்டில் சியோண்டோ, ஷாமன், பௌத்தம், கிறிஸ்துவம் சார்ந்த சிறுபான்மை மதத்தினரும் தங்களின் நம்பிக்கைகளோடு இருக்கிறார்கள்.

லாவோஸ் நாட்டில்   ‘லாவோ லூவும்’ (தாழ்நில சமூகம்) பிரிவினர் மக்கள்தொகையில் பாதியாக இருக்கின்றனர். இவர்களுடன் ‘லாவோ தியோங்’ (மேட்டுநில சமூகங்கள்), லாவோ சுங் (மலைவாழ் பழங்குடிகள்) உள்ளிட்ட 49 இனக்குழுக்கள் உள்ளன. தேரவாத பௌத்தம் பெரும்பான்மை மதம் (65 சதவீதம்). பூர்வீகக் குடிகள் சார்ந்த மதங்களும், கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களும் உள்ளன. பாரம்பரிய நெசவும் இசையும் நடனமும் லாவோ பண்பாட்டுடன் ஒருங்கிணைந்தவை.




இந்தியக் கனி

பண்பாட்டுப் பன்மைத்துவத் தடங்கள் இந்தியாவின் வரலாறு நெடுக அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வாழ்க்கை முறைகள் சார்ந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் விளைந்த கனிதான் சுதந்திர இந்தியா. கீழடி, சிந்துவெளி என்று தொடங்கித் தழைத்த நாகரிகங்கள் பங்களித்திருக்கின்றன. தடகளத்தில் ஓடுகிறவர்களுக்கு அதில் தோண்டப்படும் குழிகள் தடையாவது போல, ஒற்றைக் கலாச்சாரவாதிகளின் அத்துமீறல்கள் சவால்களாகின்றன. அவற்றைத் தாண்டி இந்திய மக்கள் நாட்டையும் பாதுகாத்து, பன்மைத்துவப் பண்பாட்டையும் உயர்த்துகிறார்கள்.

அந்த அடித்தளத்தில் ஊன்றப்பட்டதுதான் இந்திய அரசமைப்பு சாசனம். நம்பிக்கைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாடு, பண்பாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இந்தப் பாரம்பரியத்திலிருந்தே அரசமைப்புச் சாசனம் உறுதிப்படுத்துகிறது. 22 அலுவல் மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கும் இதுவே அடிவாரம்.

இது பற்றி ஒரு கருத்தரங்க மேடையில் உரையாளர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவையில் அருகே  அமர்ந்திருந்த ஒரு பெரியவர், “பல மீனு கிடந்தா ஊருணி; பல மனுசர் இருந்தா ஊரு,” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி வியக்க வைத்தார். நிகழ்வு முடிந்ததும் அவருடன் பேச்சுக்கொடுக்க எண்ணியிருந்தேன், ஆனால் முன்னதாகவே எழுந்து போய்விட்டார். கிராமங்களில் தேடினால் இப்படி ஏராளமாகக் கிடைக்கும். 

ஆதிக்கவாதிகளின் செயல்களோ மிரள வைக்கின்றன. சாதித் தூய்மை, பாலினப் பாகுபாடு, மதவாதம் என்று எத்தனை அடையாள அரசியல் மிரட்டல்கள்! உணவையும் அரசியலாக்கினார்கள். ஒன்றிய ஆட்சியில் இருக்கிறவர்களே வீசுகிற பன்மைத்துவ ஒவ்வாமை வார்த்தைகளைக்  கேட்கிறோம். சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டும் அகங்காரத்திலும், கல்வியில் மும்மொழித் திணிப்பு மூர்க்கங்களிலும் இருப்பது பன்மைத்துவப் பகைமையே அல்லவா?

பஹல்காம் வெறியாட்டத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களைத் தாக்கிய, நாடே வரவேற்ற நடவடிக்கைக்கு “சிந்தூர்” என்று மதத்தோடு இணைக்கிற பெயர் சூட்டப்பட்டது. சுமங்கலிகளின் மங்கலச் சின்னம் நெற்றியில் வைக்கும் பொட்டில் இருக்கிறதென்ற, அந்தப் பெயரின் பழமை அடையாளமும் பெண் சுதந்திரத்திற்கு எதிரான ஒற்றைத்துவத் திணிப்புதான்.

நாடு முழுவதுக்கும் வரப்போவதாக ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறுகிற பொது சமூகச் சட்டம், உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.  அது சிறுபான்மை மக்களின் பண்பாட்டு அடையாளங்களையும், அனைத்துப் பெண்களின் இணைத் தேர்வுச் சுதந்திரத்தையும் பறிக்கிறது, மண வாழ்க்கை குறித்து  முடிவு செய்வதை அதிகாரிகளிடம் விடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

வரலாற்றுப் புத்தகத்தில்

உலக வரலாறு எனும் புத்தகம் திறந்தே இருக்கிறது. மூன்று கண்டங்களுக்கு விரிந்து 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது ஓட்டோமான் பேரரசு. கடைசிக் காலத்தில் ஒற்றைக் கலாச்சார வெறியோடு பன்முகப் பண்பாடுகளைக் கொடூரமாக ஒடுக்கிய அந்தப் பேரரசு 1922இல் காணாமல் போனது. 51 ஆண்டுகாலம் ஐரோப்பாவில் வலிமையாகக் கோலோச்சிய ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசு, முதலாம் உலகப்போர் முடிவடைந்ததோடு தகர்ந்துபோனது. அதற்கொரு முக்கியமான காரணம் ஜெர்மன், ஹங்கேரியக் கலாச்சாரங்கள் மற்ற தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமைகளை ஒடுக்கியதேயாகும். 

இந்திய மண்ணில் மௌரியர், குப்தர், சோழர், தில்லி சுல்தானகம், விஜயநகரம், முகலாயர் என  பல பேரரசுகள், பல தலைமுறைகள் தொடர முடிந்ததற்கு ஒரு காரணம் வெவ்வேறு பகுதி மக்களின் பண்பாட்டு அடையாளங்களை அனுமதித்ததுதான் (அனல்வாத–புனல்வாத அநீதி போன்றவை விதிவிலக்கு).   அவற்றின் வீழ்ச்சிக்குக் காரணம் உள் பலவீனங்களும் வெளிநாட்டவர் படையெடுப்புகளும்தான். 

இதைப் பற்றியெல்லாம் நிதானமாக அமர்ந்து விவாதிப்பதற்கோ, அனைவரும் ஏற்கத்தக்க சரியான கொள்கைகளை வகுப்பதற்கோ தேவைப்படுவது –அது எங்கே என்று தேட வைப்பது– ஜனநாயகப் பண்பாடு. ஆகவே, பண்பாட்டுப் பன்மைத்துவத்தைப் பழுதின்றிப் பாதுகாக்கிற பொறுப்பு, முற்போக்கு இயக்கங்களோடு சேர்ந்து, இதுவரையில் அதைப் பாதுகாத்து வந்திருக்கிற இந்திய மக்களின் தோள்களுக்கு வந்திருக்கிறது.

[0]

நன்றி: ‘தீக்கதிர்’ மே 21, 2025 

Monday, 12 May 2025

டூரிஸ்ட் ஃபேமிலி


 


தை பல முறை பார்த்ததுதான். ஒரு குடியிருப்புப் பகுதிக்குப் புதிதாக வருகிற ஒருவன் படிப்படியாக அனைத்துக் குடும்பங்களிலும் தங்களில் ஒருவனாக ஏற்கப்படுகிறான்.


கதாபாத்திரங்கள் பல படங்களில் வந்திருப்பவர்கள்தான். பல வீடுகளிலும் பல வகை மனிதர்கள்.

ஆனாலும் புத்தம் புதிய திரையனுபவத்தைத் தருகிறது இந்த சுற்றுலாக் குடும்பம். அந்தக் குடும்பமே குடியிருப்புவாசிகளின் நேசத்தை வெல்வதும் புதுசுதான்.

உள்நாட்டுப் படுகொலைச் சூழலில் அடைக்கலம் தேடி வந்தவர்கள், பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் வாய்ப்புகளுக்காக வந்தவர்கள் - இருவர்க்குமிடையே பெரும் வேறுபாடு உண்டு. “கள்ளத்தோணி” பயணத்தில் வந்தது மட்டுமே ஒற்றுமை. முதல் காரணத்திற்காக வந்தவர்களைப் போல இரண்டாவது காரணத்திற்காக வந்தவர்கள் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை, ஆதரவைப் பெறுவதில்லை.

இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து இரண்டாவது காரணத்திற்காக ராமேஸ்வரம் வரும் தர்மதாஸ் - வசந்தி குடும்பத்திற்குத் தொடக்கத்திலிருந்தே, கைது செய்யாமல் விட்டுவிடுகிற காவல்துறை அதிகாரியில் தொடங்கி, சென்னையில் குடியேறும் பகுதியில் வாழ்கிறவர்கள் வரையில் ஆதரவு கிடைக்கிறது.

இப்படித்தான் முடியும் என்று ஊகிப்பது போலவே முடிவடைகிற படங்கள் ஒரு அலுப்பையும் ஏமாற்றத்தையும் தரும். ஊகிப்பது போலவே முடிவடைகிற இந்தப் படம் ஒரு வியப்பையும் நிறைவையும் தருகிறது. ஊகித்த முடிவை நோக்கிக் கதை எப்படி நகர்கிறது பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பைத் தருகிறது. எப்படி?

ஒரு குண்டுவெடிப்போடு அந்தக் குடும்பத்தைத் தொடர்புபடுத்தித் தேடலைத் தொடங்கும் காவல்துறையினர் அவர்களை நெருங்க நெருங்க ஒரு புதிர்ச்சுவை இணைகிறது.

நாட்டைவிட்டுப் புலம் பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளான குடும்பத்தின் பின்னணியை, கட்டாயச் சூழலைத் தொட்டுக்காட்டவும் முயலவில்லை. திரைக்கதையில் அதற்கான மெனக்கிடல்களுக்கு இடமளிக்கப்படவில்லை. எல்லாமே எளிதாக நடக்கின்றன. ஆகவே அவர்களோடு ஓர் உணர்வார்ந்த ஈடுபாடு ஏற்படுவதற்கு அதிகக் காட்சிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவது காரணத்திற்காக வந்தவர்களை எடுத்துக்கொண்டதால் கதையைப் பின்னுவதற்கு நகைச்சுவையை இழையாக்கியிருப்பது பொருந்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்விட்டு, மனம்பிடித்துச் சிரிக்க முடிகிற படமாக வந்திருக்கிறது.

சசிகுமார் இப்படிப்பட்ட படங்களில்தான் நடிப்பதென்று முடிவு செய்துவிட்டாரா, அல்லது இப்படிப்பட்ட படங்களுக்கு அவரைப் பிடித்துப்போடுகிறார்களா? இணையராக சிம்ரன், மச்சானாக யோகிபாபு, மகன்களாக வரும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், அண்டை வீட்டார்களாக வாழும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா, பகவதி, ஆய்வாளர் ரமேஷ் திலக் என அனைவரும் ஈர்க்கிறார்கள். அவர்களில் சிலரின் தனிக் கதைகள் சேர்த்துக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கதைகள் வெகுதொலைவு விலக்கிவிடவில்லை.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதி, சான் ரோல்டன் இசையமைப்பு, பரத் விக்கிரமன் படத்தொகுப்பு எல்லாமே இளையோரின் கலைத்தொழில் முதிர்ச்சிக்குச் சான்றளிக்கின்றன. புதிய முயற்சிக்குத் துணைசெய்த மில்லியன் டாலர் தயாரிப்புக் குழுமம் பாராட்டுக்குரியது. அந்தத் துணையை நியாயமான முறையில் பயன்படுத்தியிருக்கும் புதிய இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் வரவேற்புக்குரியவர்.

குடியிருப்புவாசிகள் எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசுவதை விசாரணைக்கு உட்படுத்தும் காவல்துறை அதிகாரியிடம், “இந்தத் தமிழ் பேசுறதுதான் உங்களுக்குப் பிரச்சினையா, இல்லை தமிழ் பேசுறதே பிரச்சினையா,” என்று அந்தப் பெரியவர் கேட்பதில் என்னவொரு சமகால மொழித்திணிப்பு அரசியல் விமர்சனம்! படம் பற்றிய எல்லா விமர்சனங்களிலும் சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற காட்சி இது.

மற்றொரு கேள்விதான் மையக்கரு. அதற்கான தேவையை உணர்த்தும் வகையில், அந்தக் குடும்பம் ஒதுக்கப்படுவது போன்ற காட்சிகளோ வசனங்களோ இல்லாதது ஒரு பெருங்குறை. இருந்தபோதிலும் சிந்தனையில் பதிகிற கேள்வி அது: “யார் சொன்னது, நீ அகதின்னு?”

யார் சொன்னது, தமிழ் சினிமா உலகத் தரத்திற்குப் போகாதுன்னு?