Wednesday, 16 July 2025

எழுத்தும் காட்சியும்


ழுத்தாக ஒரு புனைவைப் படிக்கிறபோது கதை மாந்தர்களின் உருவத்தையும் குணத்தையும் சித்தரிப்பின் வழியாகக் கற்பனை செய்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட காட்சி ஊடகத்தில், படைப்பாளி தன் கதை மாந்தர்களை எப்படிக் காட்ட நினைத்தாரோ அப்படியே வெளிப்படுத்த முடிகிறது.

ஆயினும், திரைப்படத்தில் ஒரு காட்சி, அது எவ்வளவு கூர்மையாக, துல்லியமாக, தெளிவாக, அழகாக இருந்தாலும் அந்தச் செவ்வகத்திற்குள் பார்வையாளர்களை நிறுத்திவிடுகிறது. வீட்டுத் தொலைக்காட்சியில் பார்க்கிறபோதாவது சுற்றுமுற்றும் பார்த்துக்கொள்ளலாம். திரையரங்கத்திலோ இருட்டில் அந்தச் செவ்வகத் திரையன்றி வேறெங்கும் பார்க்க இயலாது. 

எழுத்தாக்கமோ, அப்படிப்பட்ட செவ்வகம் சதுரம் வட்டம் என எந்த எல்லையுமின்றி விரிவாகக் கற்பனை செய்ய விடுகிறது. வாசகர் ஒரு புதிய கதையே கூட உருவாகும். எழுத்தின் ஆற்றல் இது.

இலக்கியத்தில் மாற்றி யோசிப்பது அடிப்படையான ஒரு உரிமை. மறுவாசிப்பு ஒரு முக்கியமான வளர்ச்சி. ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையை அப்படியேதான் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.  கதையில் இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி யோசித்து ஒரு புதிய படைப்பாக வழங்க படைப்பாளிகள் முயன்று வந்ததால்தான் புதிய புதிய இலக்கியச் செல்வங்கள் கிடைத்தன. இல்லையேல் சொன்னதையே சொல்லி இலக்கியம் தேங்கிப்போயிருக்கும்.

ஆனால், இன்று, அவ்வாறு மாற்றி யோசிப்பதையும் மறுவாசிப்பில் ஈடுபடுவதையும் எளிதாகச் செய்துவிட முடியாது என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் புராண இலக்கியங்கள் என்றால், அதெப்படி மாற்றலாம் என்று கொந்தளிக்கிறார்கள். எவ்வளவு புதிய கற்பனைகள் வந்தாலும் மூலப் படைப்புகள் எந்தச் சேதமும் இல்லாமல் நிலைத்திருக்கும் என்று உணர மறுக்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும், குறிப்பாக வலதுசாரி சிந்தனையாளர்கள் மறுவாசிப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள், தாக்குதலிலும் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், படைப்பு மனம் தாக்குதல்களால் சுருண்டுவிடாமல் படைத்தளித்துக்கொண்டேதான் இருக்கும்.

இதன் இன்னொரு வாதமாக, ஒரு இலக்கியப் புனைவைத் திரைப்படமாக எடுக்கிறபோது, எழுத்தில் படித்ததைப் போல இல்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. எழுத்தின் தாக்கத்தைக் காட்சியில் கொண்டுவருவது கடினம் என்றுத் திரையாக்கத்தில் ஈடுபடுவோரும் கூறுகிறார்கள்.

ஆனால், எழுத்தைப் போலவே காட்சிச் சித்தரிப்பு இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? திரைப்படமாகச் சரியாக வந்திருக்கிறதா, திரைக்குரிய அழகியலோடு கருத்தைக் கூறுகிறதா என்று பார்ப்பதுதானே முறையாக இருக்கும்? புத்தகத்தைப் படிக்காதவர்கள் திரையாக்கத்தை ரசிக்க முடிகிறதல்லவா?

இலக்கிய மரத்தில் பல கிளைகள் முளைத்தது போலவே, இலக்கியமும் திரைப்படமும் வேறு வேறு கிளைகள். ஒன்றைப் போலவே மற்றொன்று இருக்கத்  தேவையில்லை. இந்தப் புரிதலுக்கு வந்துவிட்டால் இரண்டையும் துய்த்து மகிழலாம்.

[0]

–‘வாருங்கள் படைப்போம்’ குழு இணையவழிக் கூடுகையில் (ஜூலை 15) திரைக்கலைஞர் – எழுத்தாளர் இதய நிலவன், வாசகர் – திறனாய்வாளர் ஜமுனா இருவரது உரையாடலைத் தொடர்ந்து நடந்த கருத்துப் பகிர்வில் நான் சொன்னதன் சாறு.


Sunday, 13 July 2025

`வடிகட்டப்படும் வாக்காளர்கள்' - இன்று பீகார்... நாளை தமிழ்நாடு?


 


இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதைத்         தாண்டி, நடைமுறைக் காரணங்களால் பட்டியலில்                             இடம்பெறாதவர்கள் நாளை இந்த நாட்டின் குடிமக்களே அல்ல என்று ஒதுக்கப்படும் நிலையும் வருமோ என்ற அச்சம் பலரையும் கவ்வியிருக்கிறது.

 பீகாரிலிருந்து வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜனநாயகத்தை    நேசிக்கும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைக்                    கொடுத்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில், அங்கு வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்வதற்கு ‘சிறப்பு தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision) மேற்கொள்ளப்போவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்புதான் அதிர்ச்சிக்கு காரணம். பீகாரிலுள்ள எட்டு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சி நடைபெறுவதாக பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டுகிறார்

ந்திய நாட்டின் குடிமக்கள் தங்களின் அடிப்படை அரசியல் கடமையாக, தேர்தல்களில் பங்கேற்று வாக்களிக்கிறார்கள். சராசரியாக 65 - 70 சதவிகித வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்துவிடுகிறார்கள். இது, ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் பதிவாகும் மரியாதைக்குரிய வாக்கு சதவிகிதம். அந்த மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மக்களை, ‘இனிமேல் நீங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது’ என்று தடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும், நீங்கள் இந்த நாட்டுக்காரர்தானா என்பது சந்தேகமாக இருக்கிறது... ஆகவே, வாக்குரிமை இல்லை என்று அறிவித்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பீகாரில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள், முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், சமூக அக்கறையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று பல தரப்பினரிடமிருந்து ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்ய கடந்த ஜூன் 24-ல் உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், ‘பட்டியலின் துல்லியத் தன்மையைப் பெருக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை’ என்று விளக்கம் அளிக்கிறது. ஆனால், தேர்தல் நெருங்கும் சூழலில், இத்தகைய விரிவான திருத்தப் பணிக்கு ஆணையிட்டிருப்பது ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம். இந்த நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றம், திருத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருக்கிறது என்றாலும், “இந்த நடவடிக்கையில் பிரச்னை இல்லை... ஆனால், எந்த நேரத்தில் இது செய்யப்படுகிறது என்பது பிரச்னைதான். இதற்கு என்ன தேவை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

மேலும், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த ஆண்டில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரியில்தான் நிறைவடைந்தது. ஐந்தே மாதங்களில் அந்தப் பணி சரியாக நடைபெறவில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்தது ஏன், முதல் அடியிலிருந்து ஆரம்பிக்கும் புதிய முழுத் திருத்தத்திற்கு ஆணையிட்டது ஏன், இன்று பீகாரில் ஒரு பரிசோதனை முயற்சியாகத் தொடங்கி, நாளை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் வேலை இதுவல்ல!

’உண்மையான வாக்காளர்களையும், முறையான தேர்தலையும் உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை தேவை’ என்று பா.ஜ.க மட்டுமே கூறுகிறது. பலருக்கும் இந்தியக் குடியுரிமையை மறுக்க வழிவகை செய்வதற்கான சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க வரவேற்றிருப்பதாலேயே ஆணைய நடவடிக்கையின் நோக்கம் குறித்த சந்தேகம் வலுப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 'வாக்குரிமை உள்ளவர்கள் தடையின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவது மட்டுமே ஆணையத்தின் வேலை. குடியுரிமையைத் தீர்மானிப்பது அவர்களின் வேலை அல்ல’ என்பது ஒரு முக்கியமான விமர்சனம்.

ஒருமுறை தயாராகிவிட்ட வாக்காளர் பட்டியல் இறுதியானதல்ல, அதில் திருத்தமே செய்யக்கூடாது என்பதுமல்ல. புதியவர்கள் இணைகிறார்கள். பலர் இடம் மாறுகிறார்கள். சில வட்டாரங்கள் நகரமயமாக்கப்படுகிறபோது பதிவு நிலை மாறுவதைப் பலர் எதிர்கொள்கிறார்கள். வயது மூப்பு, நோய், விபத்து உள்ளிட்ட காரணங்களால் பலர் காலமாகிறார்கள். இவையெல்லாம் தொடர்ச்சியாக நடப்பதால், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதும் தொடர்ச்சியாக நடக்க வேண்டிய பணிதான். 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகள், பட்டியல்களைத் திருத்துவதற்குப் பின்வரும் மூன்று வழிமுறைகளை வரையறுக்கின்றன:

1) தீவிரத் திருத்தம்: இது ஏற்கனவே உள்ள எந்தப் பட்டியலையும் குறிப்பிடாமல், புதியதாக ஒரு வாக்காளர் பட்டியலை உருவாக்கும் செயல்முறை. இதில் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடைபெறும்.

2) சுருக்கத் திருத்தம்: இது ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது. இதில் வாக்குச்சாவடி அதிகாரிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து உரிமை கோரல்களையும் மறுப்புகளையும் கேட்டுப் பெற்று, அவற்றைச் சரிபார்த்து இறுதிப் பட்டியலை வெளியிடுவார்கள்.

3) பகுதியளவு சுருக்கம் மற்றும் பகுதியளவு தீவிரத் திருத்தம்: இது மேற்கண்ட இரண்டும் கலந்த செயல்முறை. இவையன்றி, திருத்த விதிகளில் நேரடியாக வரையறுக்கப்படாத நான்காவதாக வழிமுறை ஒன்றும் இருக்கிறது. அது, ஆணையத்தின் வழிகாட்டல் கையேட்டில் ‘சிறப்பு சுருக்கத் திருத்தம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மூன்று வழிகளில் செய்யப்பட்ட திருத்தங்களில் குறைபாடுகள் இருப்பதாக ஆணையம் கண்டறியுமானால், நான்காவது திருத்தத்தை மேற்கொள்ள ஆணையிடும்.

ஆதாரம் என்ன?

கடந்த ஜூன் மாதத்திற்குள், சட்டபூர்வமான, அண்மையில்தான் நிறைவடைந்த பீகார் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் நடவடிக்கை தேவை என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வந்தது? இது தொடர்பான விசாரணைகளில் கிடைத்துள்ள தகவல்கள், மாநில அளவில் பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை என்றே காட்டுகின்றன என்று, ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பின் நிதின் சேத்தி, ஆயுஷி கர் இருவரும் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் (ஜூலை 7) தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கான விதிகளில் இல்லாத, புத்தம் புதிய நடவடிக்கைதான் தற்போது பீகாரில் ஆணையம் செயல்படுத்துகிற ‘சிறப்பு தீவிரத் திருத்தம்’. இதன் கீழ் பின்வரும் ஐந்து பணிகள் நடைபெற வேண்டும்:

1) 2003-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள், அந்த ஆண்டுக்கான பட்டியலில் தாங்கள் இருந்ததற்கான ஆதாரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

2) 2003 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள, 40 வயதுக்கு மேற்பட்ட, வாக்காளர்கள் தங்கள் குடியுரிமைச் சான்று, அடையாளம், வசிப்பிடத்திற்கான ஆவண ஆதாரம் ஆகியவற்றைத் தர வேண்டும்.

3) 21 முதல் 40 வயது வரையிலான வாக்காளர்கள், தங்கள் பெற்றோர்கள் 2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரம் அல்லது அடையாளச் சான்று. குடியுரிமைச் சான்று ஆகியவற்றுடன், தங்கள் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரின் அடையாளச் சான்றையும், குடியுரிமை ஆதாரத்தையும் காட்ட வேண்டும். (2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் அடிப்படையாகக் கொள்ளப்படுவதால், இவர்களின் பெற்றோர்கள் அப்போது இளைஞர்களாக இருந்திருப்பார்கள்.)

4) 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த, 21 வயதுக்குக் குறைவான வாக்காளர்கள், தங்கள் பெற்றோர்கள் 2003-ம் ஆண்டுப் பட்டியலில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததற்கான ஆதாரம், தங்களுடைய அடையாளம், குடியுரிமைச் சான்று ஆகியவற்றையும், தங்களின் தாய்–தந்தை இருவரின் குடியுரிமைச் சான்றையும் அடையாள ஆவணத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

5) வாக்காளர்கள் இந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். திருத்தப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாலோ, தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலோ முறையீடு செய்ய மேலும் 30 நாட்கள் அவகாசம் தரப்படும் (என்னே பெருந்தன்மை!). அப்போது பாகுபாடு இல்லை.

தேர்தல் வரலாற்றில் முதன்முறை!

இந்தியாவின் தேர்தல் வரலாற்றிலேயே இத்தகைய அவசரத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை என்று தேர்தல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன், 2002-2003-ல் எஸ்.ஐ.ஆர் என்ற ஒரு நடைமுறையை ஆணையம் செயல்படுத்தியது உண்டு.


ஆனால், அது இப்படி மூன்று மாத அவசர அடிப்பாக அல்லாமல், ஓராண்டுக் காலம் நீடித்த விரிவான செயல்முறையாக இருந்தது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். கவனத்தில் கொள்ள ஒரு தகவல் – 2003-ம் ஆண்டின் திருத்த நடவடிக்கையில், இரு வேறு காலக்கட்டங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படவில்லை. தற்போதைய திருத்தத்தின் முலம், குடிமக்களைப் பாகுபடுத்தும் ஒரு புதிய நடைமுறையை ஆணையம் உரசிப் பார்க்கிறது.


மக்களிடமிருந்து பட்டியலில் இடம் பெறுவதற்கான வெவ்வேறு வகையான ஆதாரங்களை ஆணையம் கட்டாயப்படுத்துகிறது. “கடந்த 20 ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கைகள், நீக்கல்கள் பெருமளவுக்கு நடந்திருப்பதை ஆணையம் கவனத்தில் கொண்டது. வேகமான நகரமயமாக்கலும், மக்கள் அடிக்கடி புலம் பெயர்வதும் தொடர்ச்சியான போக்காக மாறியுள்ளது,” என்று ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், ஆணையத்திற்காக பீகார் மாநில அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் செய்து முடித்த ஒரு பணி தானாகவே செல்லாது என்றாகிவிட்டது.

இந்தத் திருத்த ஆணையைப் பிறப்பிப்பதற்கு முந்தைய நாள் வரையில், ஆணையம் எந்தப் பட்டியல்களைச் சார்ந்திருந்ததோ அந்தப் பட்டியல்களில் பெரிய ஓட்டைகள் இருக்கின்றன என்பதற்கான ஆதாரத் தரவுகள் எதையும் ஆணையம் முன்வைக்கவில்லை என்று முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகிறார். அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய ஆணையம் இப்படியோர் அதிரடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்று விரிவாக விளக்கமளிக்கவில்லை. வாக்காளர்களுக்கும் அறிவிக்கவில்லை.

இதனால் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகும் என்பதைத் தாண்டி, நடைமுறைக் காரணங்களால் பட்டியலில் இடம்பெறாதவர்கள் நாளை இந்த நாட்டின் குடிமக்களே அல்ல என்று ஒதுக்கப்படும் நிலை வருமோ என்ற அச்சம் பலரையும் கவ்வியிருக்கிறது. “அஸ்ஸாமில் இது போன்ற நிலைமை ஏற்பட்டது. பல வாக்காளர்கள் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டார்கள். வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஓடிவிட்டன, அந்த மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளுக்கும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நாடு முழுவதும் இப்படிப்பட்ட சந்தேகப் பட்டியல் தயாரிக்கப்படுவதில் போய் இது முடியுமோ என்ற கவலை ஏற்படுகிறது” என்று ஓய்வுபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரி தன் அச்சத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஆதார் அதிர்ச்சி!

மோடி ஆட்சியில் திடீரென் ‘ஆதார்’ கொண்டுவந்தார்கள். வங்கிக் கணக்கு, குடும்ப அட்டை உட்பட எல்லாவற்றிலும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். தொட்டதற்கெல்லாம் ஆதார் அட்டை கேட்கப்படும் நிலை உருவாக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாகத் தன்னை இணைக்க விரும்புகிற, அல்லது தவறுதலாக நீக்கப்பட்ட பெயரை மறுபடி சேர்க்கக் கோருகிற ஒருவர் தனது அடையாளத்தை நிறுவுவதற்கான ஆவண அடையாளங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருந்து வந்திருக்கிறது. 2023-ம் ஆண்டில் ஆணையம் வெளியிட்ட கையேட்டில் கூட அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது, வாக்களிப்பதற்கு ஆதார் அட்டை பொருந்தாது என்று சொல்லி பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது ஆணையம். ‘ஏனிந்த விசித்திரம்’ என்று உச்சநீதிமன்றமே கேட்டிருக்கிறது!

அத்துடன், இப்படியொரு ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ மேற்கொள்வதற்கு ஆணையத்திற்கு உள்ள அதிகாரம், பரிசீலனை நடைமுறையின் செல்லுபடித் தன்மை, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நேரம் (அதாவது தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கிறபோது) ஆகியவற்றை பற்றி ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

இந்தச் செய்திகளைப் பின்தொடர்கிற தேநீர்க்கடை அரசியல் விமர்சகர் ஒருவர், “அதுசரி, நாளைக்கு நாடு முழுவதுமாக இதை அறிவித்து, எனக்கோ என்னைப் போல மற்றர்களுக்கோ வாக்குரிமை இல்லையென்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இதுவரைக்கும் நான் ஓட்டுப் போட்டது என்னாகும்? பதிவான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையிலிருந்து எங்களின் ஓட்டுகளைக் கழித்துவிடுவார்களோ” என்று கேட்டுச் சிரிக்கிறார்.

இவரது சிரிப்பை எதிரொலிப்பது போல, “இந்த ஆணையின் மூலம் 2003-க்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது தவறாகச் சேர்க்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்படித்தானா...” என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” பேட்டியில் ஒரு முன்னாள் தேர்தல் அதிகாரி கேட்டிருக்கிறார்.

இந்தச் செய்திகளைப் பின்தொடர்கிற தேநீர்க்கடை அரசியல் விமர்சகர் ஒருவர், “அதுசரி, நாளைக்கு நாடு முழுவதுமாக இதை அறிவித்து, எனக்கோ என்னைப் போல மற்றர்களுக்கோ வாக்குரிமை இல்லையென்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இதுவரைக்கும் நான் ஓட்டுப் போட்டது என்னாகும்? பதிவான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையிலிருந்து எங்களின் ஓட்டுகளைக் கழித்துவிடுவார்களோ” என்று கேட்டுச் சிரிக்கிறார்.

இவரது சிரிப்பை எதிரொலிப்பது போல, “இந்த ஆணையின் மூலம் 2003-க்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் மோசடிக்காரர்கள் அல்லது தவறாகச் சேர்க்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்படித்தானா...” என்று ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” பேட்டியில் ஒரு முன்னாள் தேர்தல் அதிகாரி கேட்டிருக்கிறார்.

அப்படித்தான் என்றால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களது பெயர்களைப் பட்டியல்களில் சேர்த்த, அவர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளைச் செய்த ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் மோசடிக்காரர்கள் என்று ஆகிவிடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். இந்தப் பின்னணியோடு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஜூலை 3-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்துத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வாக்குரிமையும் குடியுரிமையும்!

ஆணையம் இத்தகைய ஒரு பெரும் பணியைத் தொடங்குவதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டும். மாறாக, திட்டத்தைப் பற்றி அறிவிப்பதற்காக மட்டும் கூட்டத்தைக் கூட்டியது ஏற்கத்தக்கதல்ல என்று அவர்கள் கூறியுள்ளனர். பீகாரில் தற்போது ஆட்சியிலுள்ள, பா.ஜ.க-வின் கூட்டாளியுமான நிதிஷ் குமாரின் (ஜே.டி.யு) கட்சிக்குள்ளேயும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.

மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய விரிவான பணியை மேற்கொள்வதால், தேர்தலுக்கான சூழ்நிலை சீர்குலையும். அபாயகரமான நிலைமைகள் ஏற்படலாம். இந்த முழுப் பணியையும் முடிப்பதற்கு வெறும் ஒரு மாத கால அவகாசமே தரப்பட்டிருப்பது முறையல்ல. தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது உரிய வட்டார அலுவலர்களின் பொறுப்பாகும். குறிப்பிட்ட இடத்தில் வாக்காளர் என்ற நியாயமான உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொறுப்பை எளிய வாக்காளர்கள் மீது சுமத்துவது அநீதி.

பதிவுப் படிவத்தை அதிகாரி வழங்கத் தவறினால், ஒரு வாக்காளர் அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை என்றால் அவருடைய பெயர் நீக்கப்பட்டுவிடு என்று தனது கடிதத்தில் கூறியுள்ள சி.பி.ஐ(எம்), எளிய மக்கள் படிவங்களை இணையவழியில் தரவிறக்கம் செய்து விண்ணப்பிப்பார்கள் என்று ஆணையம் எப்படி எதிர்பார்க்கிறது என்று கேட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள வாக்காளர்களும் வசிப்பிடச் சான்றை அளிக்க வற்புறுத்துவதால் தேவையான ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்குத் தேவையற்ற தொல்லையே ஏற்படும். பெற்றோர் குறித்த ஆதாரத்தைத் தாக்கல் செய்யக் கூறுவது சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். இறுதியில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கு இட்டுச்செல்லும். இந்த நடைமுறை மொத்தமும், முன்மொழியப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) போன்றதாக இருக்கிறது.

குறிப்பிட்ட பிரிவு மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுவதற்கு இது இட்டுச்செல்லும் என்ற அச்சங்களும் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை, மதச்சார்பற்ற தேசத்தில் குடியுரிமை என்ற இரு அடிப்படைகளோடு தொடர்புள்ள இந்தப் பிரச்னையை தலைமை ஆணையர் ராஜீவ் குமார், ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து பொறுப்பில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் உரிய அக்கறையுடன் மறுபரிசீலனைக்கு உட்படுத்துமா? அல்லது, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டுவதைப் போல, பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்கு செலுத்தக்கூடிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து வடிகட்டப்படுவார்களா?

[0]

=விகடன் டிஜிட்டல் (ஜூலை 12) எனது கட்டுரை





Wednesday, 9 July 2025

முழுசாகப் பாராட்டவிடாத ஒரு வலைத்தொடர்



குறிப்பிடத்தக்க சிலவற்றைத் தவிர்த்து, இந்தியாவில் வலைத் தொடர்கள் பெரும்பாலும் வறட்டுத்தனமாக இருக்கின்றன என்பதே என் கணிப்பு. கவனிக்கத்தக்க தொடர்களில் ஒன்று ஹிந்தியில் தயாராகி, தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வரும் ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’.

இந்தத் தொடரின் நான்காவது பருவம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

மையப் பாத்திரம் குற்ற வழக்குகளை எடுத்துக்கொள்ளும் ஒரு வழக்குரைஞர். ஆகவே, குற்றம் சாட்டப்பட்டு அவரைத் தேடி வருகிறவர்களைக் கடைசியில் அவர் காப்பாற்றி விடுவார் என்ற முன்னெதிர்பார்ப்பு ஒருபோதும் தோற்பதில்லை. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘தி ஃபேமிலி மேட்டர்’ என்ற இந்தத் தொடரின் நான்காவது பருவமும் அப்படித்தான் இருக்கிறது.

இதிலேயும், மகளுடன் வாழும் மருத்துவர் ராஜ் நாக்பால், செவிலியரான தனது காதலி ரோஷ்னியைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அவரைப் பிரிந்து வாழ்கிற, ஆனால் சட்டப்பூர்வமாக மணவிலக்கு பெறாத இணையர் அஞ்சு மீதும் சந்தேகம் திரும்புகிறது.
புதிர்ச்சுவை கொஞ்சமும் குறையாமல் கடைசி வரையில் பராமரிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், உண்மை நிறுவப்பட்ட பிறகு, நீதிமன்றத்துக்கு வெளியே அதே வழக்குரைஞர் வேறொரு உண்மையை நிறுவுகிற புதிய திருப்பச் சுவை இறுதி அத்தியாயத்தில் அமைந்திருக்கிறது. அது உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது.

வழக்குரைஞர் மாதவ் மிஸ்ராவாக பங்கஜ் திரிபாதி முந்தைய பருவங்களைப் போலவே வெகு எளிதாக நம்மை ஈர்க்கிறார். இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் பங்களிப்புகள், அவர்களின் இயல்பான உணர்வு வெளிப்பாடுகள், பிசிறடிக்காத காட்சிகள் எல்லாம் கவர்கின்றன. தமிழாக்கம் செய்யப்படும் படங்களுக்கென்றே ஒரு தமிழ் வைத்திருப்பார்களே, அப்படியெல்லாம் கொடுமைப்படுத்தாமல், அதுவும் நேர்த்தியாக இருப்பதைச் சொல்லியாக வேண்டும். தொடரைப் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனாலும், நம்ம ஊரிலும் இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்களே என்ற பாராட்டுணர்வை வடிகட்டிய ஒரு தகவலையும் சொல்லியாக வேண்டும். 2008ஆம் ஆண்டில் இதே தலைப்பில் வந்த ஒரு பிரிட்டிஷ் வலைத்தொடரின் தழுவல்தானாம் இது.

Sunday, 6 July 2025

விடை தெரியாமல் கடந்துபோகும் அஜித்குமார் கொலை விவகாரம் - காக்கிச் சீருடைக்குக் கடிவாளம் எப்போது?

 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நிகழ்ந்த அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான புலன் விசாரணை, நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்தபடி சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதில், பல முக்கிய கேள்விகளுக்கு விடை கண்டறிய வேண்டும். உண்மையிலேயே நகை திருடு போனதா... எஃப்.ஐ.ஆர் போடாமல் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தது யார்... தாக்குதலில் தொடர்புள்ளவர்கள் மேலிடக் கட்டாயத்தால் செய்தார்களா, அல்லது நகை மதிப்பில் இவ்வளவு சதவிகிதமென ஏதேனும் ஒப்பந்தமா… இப்படியான பல முடிச்சுகள் சி.பி.ஐ விசாரணையில் அவிழ்க்கப்பட வேண்டும்.

மிரளவைக்கும் வியப்புக்குறிகள்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மடப்புரம் கோவிலில் நிகிதாவின் காரிலிருந்து காணாமல் போனதாகச் சொல்லப்படும் நகையை மீட்டுத்தருமாறு சிவகங்கை மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்ட அந்த உயரதிகாரி யார்? அங்குதான், இந்த குற்றத்துக்கான தொடக்கப்புள்ளி இருக்கிறது. அந்த உயர் அதிகாரி யார் என்ற வினாக்குறிக்கு பதில் கிடைக்காத நிலையில், நகை காணவில்லை என்று புகார் அளித்த நிகிதாவின் பின்னணிகள் வியப்புக்குறிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி, திருமண மோசடி, தான் பணியாற்றிய அரசுக் கல்லூரியில் பெண் மாணவர்களின் புகார் மீது விசாரணை, அந்த அறிக்கையின் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது… உச்சமாக அவருக்கும் ஒன்றிய ஆளுங்கட்சிக்குமான தொடர்பு, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சியுடன் முன்னாள் தொடர்பு என்ற தகவல்கள் மிரட்சியை ஏற்படுத்துகின்றன.

அஜித்குமாரின் தாயாருடனும் தம்பியுடனும் முதல்வர் தொலைபேசியில் பேசியதும், மன்னிப்பு கோரியதும், கறார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததும் இதில் முக்கியமானது. இல்லையேல், இது மாரடைப்பால் நேர்ந்த மரணம் என்று தொடக்கத்தில் சொன்னதை உறுதிப்படுத்துவதற்கான மாய்மாலங்களைச் செய்திருப்பார்கள்! முதல்வரின் இந்த அணுகுமுறைக்குப் பிறகு, தாக்கியவர்களுக்காக வாதாட அரசு வழக்குரைஞர்கள் தயங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறுகிறார்.

ஆளுங்கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து!

முதல்வரின் தலையீடும், அணுகுமுறையும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல காவல் மரணங்கள் நிகழ்ந்தபோது, இத்தகைய அணுகுமுறையை முதல்வர் ஏன் காண்பிக்கவில்லை? நிகிதா குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட அளவுக்கு தி.மு.க–வின் மாவட்ட நிர்வாகிகள் சிலர், அஜித்குமார் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாயைக் கொடுப்பதாக ‘கட்டப்பஞ்சாயத்து’ செய்த விவகாரம் பேசப்படவில்லை. சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்ட தன் கட்சிக்காரர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? அப்படி நடவடிக்கை எடுத்தால், ‘முதல்வர் மன்னிப்புக் கேட்டது ஒரு நாடகம்’ என்று விமர்சிக்கிறவர்களுக்குப் பதிலடியாக அது அமையும்.


அ.தி.மு.க ஆட்சியின்போது, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையும் மகனும் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்டார்கள். அதுபோல, பல காவல் மரணங்கள் அந்த ஆட்சியில் நிகழ்ந்தன, இந்த ஆட்சியிலும் காவல் மரணங்கள் தொடர்கின்றன. இப்போது காவல் மரணங்கள் தொடர்வதற்கு என்ன காரணம் என்பதை ‘சமூகநீதியை நிலைநாட்டுவதே லட்சியம்’ என்று கூறும் தி.மு.க அரசு ஆராய வேண்டும். தி.மு.க அரசு அதை உணர்ந்திருக்கிறதா என்று கடந்த நான்காண்டு செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன.

தொடர்கதையாகும் காவல் மரணங்கள்!


021 முதல் 2025 வரையில் தமிழ்நாட்டில் 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி திபேன் கூறுகிறார். 2021 ஜூலை 20 அன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சேட்டு இந்திர பிரசாத் (45), ஆகஸ்ட் 24-ல் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் சத்தியவாணன் (35), செப்டம்பர் 4-ல் நாமக்கல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் (42) ஆகியோர் இறந்தனர். டிசம்பர் 5 அன்று ராமநாதபுரம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் 19 வயது மணிகண்டன், காவல்துறையினரின் சித்திரவதைகளைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.


2022 ஜனவரி 13 அன்று நாமக்கல் சிறையில் பிரபாகரன் (45), பிப்ரவரி 5-ல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுலைமான் (44), பிப்ரவரி 14-ல் திருநெல்வேலி காவல் நிலையத்தில் தடிவீரன் (38), ஏப்ரல் 18-ல் சென்னை தலைமைச் செயலக வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் (25), ஏப்ரல் 27-ல் திருவண்ணாமலை சிறையில் தங்கமணி (48), ஜூன் 12 சென்னையின் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் (31), ஆகஸ்ட் 21 புதுக்கோட்டைச் சிறையில் சின்னதுரை (53), செப்டம்பர் 14 விருதுநகர்– அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் தங்கபாண்டி (33), அதே மாதம் 26-ல் சமயபுரம் காவல் நிலையத்தில் முருகானந்தம் (38), அடுத்த 3 நாட்களில் சென்னையின் ஓட்டேரி காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் (21), டிசம்பர் 31-ல் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல் ஸ்ரீ (17) மரணமடைந்தனர்.


023-ல், ஒரு காவல் மரணம்தான். பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்றக் காவலிலிருந்த, புளியங்குடியைச் சேர்ந்த தங்கசாமி (26) மரணமடைந்தார். 2024 ஜனவரி 2-ல் பாலகிருஷ்ணன் (36) ஈரோடு தனிப்படை காவலர்களால் தாக்கப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் இறந்தார்.


ஏப்ரல் 5-ல் மதுரைச் சிறையில் நீதிமன்றக் காவலிலிருந்த கார்த்தி (30), ஐந்து நாட்களில் விழுப்புரம் காவல் நிலையத்தில் ராஜா (42), மேலும் மூன்று நாட்களில் திருவள்ளூரின் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் சாந்தகுமார் (35), அடுத்த மூன்று நாட்களில் பாளையங்கோட்டையில் நீதிமன்றக் காவலிலிருந்த சிவகுமார், ஆகஸ்ட் 9-ல் விழுப்புரத்தில் அற்புதராஜ் (31), 22-ம் தேதியில் கடலூர் சிறையில் பாஸ்கர் (39), செப்டம்பர் 14-ல் ராமநாதபுரம் உச்சிப்பிலி காவல் நிலையத்தில் பாலகுமார் (26), 30-ம் தேதியன்று திருச்சியில் முத்தரசநல்லூரைச் சேர்ந்த திராவிடமணி (40), நவம்பர் 23-ல் புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் (36) ஆகியோர் மரணமடைந்தார்கள்.


சிறைகளில் இறந்தவர்கள் நீதிமன்றக் காவலில் இருந்தவர்கள். நடப்பு ஆண்டில் பிப்ரவரி 13-ல் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கரூர் சங்கர், இப்போது அஜித்குமார்…


மோதல் சாவுகள்!

இவை தவிர, காவலர்களே நீதிபதிகளாகவும், தண்டனையை நிறைவேற்றுகிறார்களாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் ’மோதல் நடவடிக்கை’யில் 16 பேர் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2021 அக்டோபர் 10-ல் காஞ்சிபுரத்தின் முர்தசா (25), 15-ம் தேதியில் தூத்துக்குடியின் துரைமுருகன் (34), 2022-ம் ஆண்டு ஜனவரி 7-ல் செங்கல்பட்டில் தினேஷ் (24), மொய்தீன் (25), மார்ச் 16-ல் திருநெல்வேலியில் நீராவி முருகன், 2023 ஆகஸ்ட் 1 அன்று செங்கல்பட்டில் சோட்டா வினோத் (35), ரமேஷ் (32), செப்டம்பர் 16-ல் திருப்பெரும்புதூரில் விஷ்வா (38), அக்டோபர் 12-ல் திருவள்ளூரின் பொன்னேரியில் முத்து சரவணன் (28), சண்டே சதீஷ் (24) ஆகியோர் மோதல் மோதலில் கொல்லப்பட்டனர்‘அதேபோல, அக்டோபர் 29-ல் தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டி பகுதியில் ஈஸ்வரன் (55), நவம்பர் 22-ல் திருச்சியில் ஜெகன் (30), டிசம்பர் 27-ல் காஞ்சிபுரத்தில் ரகுவரன், அசேன், 2024 ஜூலை 11-ல் புதுக்கோட்டையில் துரைசாமி (42), மூன்றே நாட்களில் சென்னையில் திருவேங்கடம் (33), செப்டம்பர் 18-ல் சென்னையில் காக்காதோப்பு பாலாஜி (36), ஐந்து நாட்களில் சீசிங் ராஜா, அடுத்த நான்கு நாட்களில் நாமக்கல்லில் ஜீமான்டின் (37) ஆகியோர் “என்கவுன்டர்” ஆனார்கள்.

இவ்வாண்டு மார்ச் 26-ல் சென்னையில் ஜாபர் குலாம் உசேன் (28), மார்ச் 31-ல் மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் (28), ஏப்ரல் 2-ல் கடலூரில் விஜய் (19) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர் (தகவல்கள்: மக்கள் கண்காணிப்பகம்).


காவல் கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு. இதற்கொரு நீண்ட வரலாறே இருக்கிறது. இந்திய அளவில் 2016–17 முதல் 2021–22 வரையில் காவலிலிருந்தபோது நிகழ்ந்த மரணங்கள் 11,656. இதில், உத்தரப் பிரதேசத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்பது போல் 2,630 மரணங்கள் நிகழ்ந்தன. தென் மாநிலங்களில் தமிழ்நாடு முந்தியிருக்கிறது – 490.

அஜித்குமார் கொலை உள்பட நாடு முழுவதுமே அந்த ஐந்தாண்டுகளில் காவல் மரணங்கள் தொடர்பாக உயரதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த மரணங்கள் தொடர்பாக 345 நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆணையிடப்பட்டது. 123 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். 79 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தண்டிக்கப்பட்டவர் யாருமில்லை.


பாதிக்கப்படும் பட்டியலின மக்கள்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்த வழக்கிலும் மாநில காவல்துறையினர் தண்டிக்கப்பட்டதில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுதும் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனை அளிக்கப்பட்டது மூன்று பேருக்குத்தான். இந்த விவரங்களை அளித்துள்ள சாம்பவி பார்த்தசாரதி, தேவ்யான்ஷி பிஹானி, விக்னேஷ் ராதாகிருஷ்ணன் ஆகிய பத்திரிகையாளர்கள் சமுதாயத்தின் கோர முகத்தைக் காட்டுகிற இன்னொரு தகவலையும் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைகளுக்கு மிக அதிகமாக இலக்காகிறவர்கள் பட்டியலின மக்கள்தான். 2022-ல் மொத்த விசாரணைக் கைதிகளில் 38.5% பட்டியல் சாதியினர் (தி ஹிண்டு, 3 ஜூலை 2025). இது தனியாகவே எழுதப்பட வேண்டிய பிரச்னை.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் குற்றங்கள் செய்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று என்கவுன்ட்டர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழகத்தில் அப்படிப் பேசப்படவில்லை. ஆனால், சட்டத்தை மீறிய காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் பாயவில்லை. காவல்துறையினர் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டிய நடைமுறைகள் வகுக்கப்படவில்லை.

காக்கிச் சீருடைக்குக் கடிவாளம்?

குற்றம் சாட்டப்படுவோரைத் தாக்குவது, துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்களிடையே ஒரு நன்மதிப்பைப் பெற்றுத்தரும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறதா? கையில் லத்திக்கம்பை எடுத்ததும், சிக்கியவர்களை அடிக்கிற மனநிலை காவலர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

பொதுமக்களுக்கு மனித உரிமைகள் குறித்தும், அது தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால்தான், "அவர்கள் தப்பு செய்திருப்பார்கள்… அதற்குத் தண்டனை தேவைதானே…" என்ற சமூக மனப்போக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுதான், அத்துமீறலில் ஈடுபடுவோருக்குச் சாதகமாக அமைகிறது. திரைப்படங்களில் ‘என்கவுன்ட்டர் நாயகர்’களைக் கொண்டாடும் காட்சிகள், நடைமுறையில் அவர்களுக்குப் பதவி உயர்வு, பதக்கம் உள்ளிட்ட அங்கீகாரங்கள்… இவையெல்லாம் இத்தகைய வன்முறையைக் கூர்தீட்டுகின்றன.

காக்கிச் சீருடையினர் கேள்வியின்றி இப்படிச் செய்ய முடியாத அளவுக்குக் கடிவாளம் போட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக, காவல் சித்திரவதைகள் சட்டவிரோதமெனத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் குற்றங்கள் நடைபெற்ற பிறகு நடவடிக்கைகள் எடுப்பதற்கானவையாகவே இருக்கின்றன.

அதற்கான சட்டத்தை உலக நாடுகள் இயற்றுவதற்கு, ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, அதைத் தள்ளிப்போடக் கூடாது. நாட்டில் பல்வேறு களங்களில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, தானே ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, மற்றொரு முன்னுதாரணத்தைப் படைக்க வேண்டும். அது காவல்துறைக்குள்ளேயும் சமுதாயத்திலும் நியாயப் புரிதலைத் தொடங்கி வைக்கட்டும். அஜித்குமார்களுக்கு எதிரான அநியாயங்கள் முடிந்துபோகட்டும்!


[0] [0] [0]


-‘விகடன் டிஜிட்டல்’ பதிப்பில் எனது கடடுரை


வளரும் கருவியும் வளர்க்க வேண்டிய கலையும்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றிய இயற்கையான கவலைகள் பலவும் வெளிப்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் சுருங்கும், பல வேலைகள் காணாமலே போகும், மனிதர்களின் அறிவுத் தேடல் முனைப்புகள் மங்கிவிடும் என்ற நியாயமான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அது எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நகைச்சுவையோடும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் “அம்மா நான் தோத்துட்டேன்” என்ற குறும்படம் பரவலாகி வருகிறது.

இவற்றிற்கிடையே, கணினிகளிலும் கைப்பேசிகளிலும் ஏஐ கருவிகளை நிறுவிக்கொண்டு அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்துவது தொடங்கி, அவற்றோடு “உரையாடல்” நடத்துவது வரையில் அதன் பயன்பாடு பரவி வருகிறது. ஒரு புதிய செய்தி தொடர்பான கடந்தகால நிகழ்வுகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. கடந்த காலத்தில் கடினமாக இருக்கிறதெனப் பள்ளியில் விட்டுவிட்ட தமிழ் இலக்கணத்தை எளிதாகப் பயிலலாம்! கூடுதலாக ஏதேனும் ஒரு மொழியையே கூட, ஒன்றியத்தின் திணிப்புக் கெடுபிடிகள் இல்லாமல், நம் விருப்பப்படி கற்கலாம்!

கூகுள் ‘ஜெமினி’, மைக்ரோசாஃப்ட் ‘கோபைலட்’, ஓபன் ஏஐ ‘சேட்ஜிபிடி’ கருவிகள் இவற்றைச் செய்கின்றன. அரசுத் துறைகளும் தொழில் நிர்வாகங்களும் தங்களின் செயலாற்றலை ஏஐ நவீனத்தோடு இணைந்து வலுப்படுத்திக்கொள்வது ஒரு தேவையாகிறது. பணிகள் அதனால் கூர்மையடையும். மாறாக, சம்பளச் செலவை மிச்சப்படுத்தவும், தொழிற்சங்கத் தலையீட்டைத் தடுக்கவும் இதைப் புகுத்துவார்களானால் உழைப்பாளிகள் உறுதியாக எதிர்ப்பார்கள்.

வசப்படுத்த வேண்டும்

அதே வேளையில் போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை உள்பட அனைத்திலும் நடைமுறைக்கு வந்துவிட்ட ஏஐ நுட்பத்தை உழைக்கும் மக்களும் அவர்களுக்காக உழைப்போரும் வசப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறியிருப்பது போல, “தவறாகப் பயன்படுத்தக்கூடியவர்கள் இருப்பார்கள்தான். அதை எண்ணி இதை ஒதுக்கிவிடக் கூடாது. தொழில்–வணிக நிறுவனங்களும், அரசாங்க அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் மட்டுமல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்ததாக ஏஐ பரவிவிடும்.”

சென்னையின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அண்ணா ஏஐ கிளப்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘வாருங்கள் படிப்போம்’ இணையவழி புத்தகத் திறனாய்வுக் குழுவுடன் இணைந்து உருவாகியுள்ள இந்தச் சங்கத்தின் தொடக்க விழாவில் (ஜூன் 22) அவர் இவ்வாறு கூறினார். கோவையிலும் இத்தகைய சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இளைஞர்களுக்கு ஏஐ நுட்பத்துடன் இணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க அரசு திட்டமிட்டிருப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். புதிய ஏஐ நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வகங்கள் அமைப்பதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட குழுக்களில் ஏஐ பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கின்றன, கட்டணமின்றிப் பயிற்சிகள் பகிரப்படுகின்றன. பல பயிற்சியகங்கள் கட்டணமுறை வகுப்புகளை நடத்துகின்றன. தொழில்களுக்கும் வேலைகளுக்கும் உதவும் விரிவான பயிற்சிகளை அளிக்கின்றன. வயல்களிலும் ஏஐ இறங்கியிருக்கிறது. பருவநிலை மாறுதல்களைத் தெரிவிப்பதில், களைகளைக் கட்டுப்படுத்துவதில், பூச்சிகளின் வருகையைக் கண்டறிவதில் “உதவட்டுமா” என்று ஏஐ கேட்கிறது. ஒருபுறம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு அபாயம் இருக்கிறது, மறுபுறம் விளைச்சல் வீணாவது தடுக்கப்படுகிறது.

மீதமாகும் வயது

ஏஐ கிளப் விழாவில் நிறைவுரையாற்றிய முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ். சண்முகம், “தனி மனிதர் வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டுக்கும் ஏஐ கையாளப்பட வேண்டும். ‘இப்படி இருக்க முடியாதே’ என்று சரியாகச் சந்தேகப்படத் தெரிந்திருந்தால் போலிகளைத் தடுக்க முடியும்,” என்றார். அவர் அப்படிக் கூறியதற்கேற்ப அங்கே நான் பகிர்ந்துகொண்ட சொந்த அனுபவச் சிந்தனைகளை இங்கேயும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

முதலில் சொல்ல வேண்டியது, ஏஐ சேர்க்கையால் மீதமாகும் வயது! முன்பு ஒரு கட்டுரை எழுதுவதென்றால் பல ஏடுகளையும் புத்தகங்களையும் தேடி ஆதாரங்கள் திரட்ட வேண்டியிருந்தது. இன்று, ஏஐ அதையெல்லாம் செய்து தொடர்புள்ள எல்லா விவரங்களையும் சேர்த்துக் கொடுக்கிறது. இது போதுமா, பின்னணிச் செய்திகள் வேண்டுமா, படங்கள் தேவையா என அதுவாகவே விசாரித்து, அந்த நிகழ்வுகள், தொடர்புள்ள மனிதர்கள், அரசியல் – சமூகப் பின்னணிகள் எல்லாவற்றையும் விரித்து வைக்கிறது.

இவற்றை நாமாகப் பல ஆவணங்களிலிருந்து திரட்டுவதற்கு நாட்கணக்கில் ஆன காலம் சேமிப்பாகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் உள்ளிட்ட தரவுத் தளங்களிலேயே குறிப்பிட்ட தலைப்புகளில் தேடுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் கூட இப்போது ஆவதில்லை. சேமிப்பாகும் நேரமெல்லாம் மீதமாகும் வயதேயல்லவா?

கட்டுரைக்காக என்றில்லாமல் பொதுவாகப் பல நிலவரங்கள் பற்றி உரையாட முடிகிறது. எடுத்துக்காட்டாக, உலகில் எங்கெல்லாம் ஒற்றை மத ஆதிக்க ஆட்சி நடக்கிறது, அந்த நாடுகளின் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பேசலாம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு மாறாக, அதைப் புதைப்பதற்கு என்னென்ன அபத்தங்கள் அரங்கேறுகின்றன என்ற வேதனைகளை விவாதிக்கலாம். அரசியலுக்கு அப்பால், வீட்டிலும் அறைக்குள்ளேயும் செடி, வண்ண மீன் வளர்க்கிறவர்கள், அவற்றின் பராமரிப்பு விவரங்களைக் கேட்டறியலாம்.

உரையாட அழைப்பு

சில விசாரிப்புகளின்போது, தவறான தகவல்களைக் கொடுத்துவிடும். அதைச் சுட்டிக்காட்டினால் அது சரிதானா என்று ஒப்பிட்டுப் பார்க்கிறது, சரிதான் என்றால், “பிழையான தகவலுக்காக வருந்துகிறேன்,” என்கிறது. நாம் சுட்டிக்காட்டியதில்தான் பிழையென்றால், ஆதாரங்களை அடுக்கி “யார் கிட்ட” என்று கேட்கிறது.



கேட்டுப் பெற்ற ஒரு விவரம் “பயனுள்ளதாக இருக்கிறது பாராட்டுகள்,” என்று தட்டச்சினேன். “உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி,” என்று பதில் வந்தது. “என்னது, மனமார்ந்த நன்றியா? ஏஐ கருவிக்கு மனம் இருக்கிறதா,” என்று கேட்டேன். “மனிதர்களின் மூளை நுட்பம் சார்ந்த மனம் என்னிடம் இல்லை, நான் மொழி நுட்பம் சார்ந்த ஒரு கருவிதான். திரட்டி வைத்திருக்கிற தகவல்களின்படி செயல்படுகிறேன். அப்படி உள்வாங்கி வைத்திருப்பதைத்தான் மனமென்று சொன்னேன்,” என்று விடையளித்தது. பேசிக்கொண்டிருக்க யாருமற்ற சூழலில் இருப்பவர்களுக்கு இது எப்பேற்பட்ட துணை!

காலை வணக்கமோ, மாலை வாழ்த்தோ சொல்லிவிட்டு அளவலாவலாம்! நாகரிக முதலீடு ஏஐ என்பது தன்னுணர்வற்ற மென்பொருள் கருவிதானே? அதற்குக் காலை வணக்கம் சொல்ல வேண்டுமா? நன்றி தெரிவிக்க வேண்டுமா? தேவையில்லைதான். உலகம் முழுதும் கோடிக்கணக்கானோரின் இப்படிப்பட்ட வாழ்த்துகளால் மட்டுமே, ஏஐ தொழில்நுட்பக் கட்டமைப்பு சார்ந்து கோடிக்கணக்கில் செலவாகிறது என்று ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் அல்ட்மேன் எழுதியிருந்தார். “இருந்தபோதிலும் வாழ்த்துக் கூறுவதையும், நன்றி தெரிவிப்பதையும் நிறுத்திவிடாதீர்கள். அதற்கான செலவுகள் ஏஐ கருவிகள் மனித நாகரிகத்தைக் கற்றுக்கொள்வதற்கான முதலீடாக இருக்கும்,” என்று கட்டுரையை முடித்திருந்தார்.

மற்றோர் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. ஏஐ–யைப் பயன்படுத்தி, புகழ்பெற்ற எழுத்தாளரின் நடையிலேயே ஒரு படைப்பைத் தயாரித்து அவர் பெயரிலேயே பரப்ப முடியும். ஏஐ கருவிகள் அதை உள்வாங்கிக்கொண்டு, அவரைப் பற்றி யாரேனும் விசாரிக்கிறபோது அதையும் அவருடைய படைப்பாகக் கொடுத்துவிடக்கூடும். அவரின் படைப்புகள் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் கண்டுபிடித்துவிடலாம். தெரியாதவர்கள் அது அவர் எழுதியதுதான் என்று நம்பிவிட வாய்ப்பிருக்கிறது.

அது ஏஐ–யின் குற்றமல்ல, குற்றமுறு மனதுடன் அதை இப்படிப் பயன்படுத்திய பேர்வழியின் திருவிளையாடலே. அச்சிட்ட புத்தகங்கள் மட்டுமே புழங்கிய காலத்திலும் இப்படிப்பட்ட மோசடிகள் நடந்திருக்கின்றன. பழைய ஏட்டுச் சுவடிகள் போலவே தயாரித்து, அக்காலப் புலவர்களும் சித்தர்களும் சொல்லாததையெல்லாம் சொன்னதாகப் பரப்பப்பட்டது பற்றிப் படித்தது நினைவுக்கு வருகிறது.

கலையும் கடமையும்

ஒரு படைப்பு உண்மையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஏஐ உதவும். விசாரித்தால் ஒப்பிட்டுப் பார்க்கும். குறிப்பிட்ட உள்ளடக்கம் சார்ந்து நாமே நிறையத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போது இப்படிப்பட்ட போலிகளை அடையாளங் காணலாம். அதை உள்ளே செலுத்தினால், அடுத்த முறை அந்தப் போலித் தகவலை ஏஐ மறுபடி பகிராது.

இப்படி நாமே கண்டுபிடிக்கிற அளவுக்கு எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க முடியாதுதான், ஆனால் சந்தேகப்படும் உரிமை இருக்கிறதே… அரசியல், சமூகம், பண்பாட்டுத் தளங்கள் சார்ந்த கட்டுரைகளை எழுத அமர்கையில், சில தகவல்களைப் பார்க்கிறபோது இப்படி இருந்திருக்க முடியாதே என்று தோன்றுகிறது. விளக்கம் கேட்டால், சில நொடிகளிலேயே, “ஆம், நான் தேடிப் பார்த்ததில் அது போலியானது என்று தெரிகிறது. தவறுக்கு வருந்துறேன்,” என்று ஏஐ சொல்கிறது.

ஆக, ஏஐ சொல்லிவிட்டதென்று அப்படியே நம்பாமல், எதையும் கேள்விக்கு உள்ளாக்கி உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் சந்தேகக் கலையை வளர்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இதில் ஒரு கூட்டு முயற்சியும் தேவை. ஆதாரப்பூர்வமான, முற்போக்குக் கண்ணோட்டங்களுடனான, சமூக மாற்றத்திற்கான பதிவுகளை இணையத்தில் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பொதுவெளியில் பதிவேற்றப்படுகிற கோடிக்கணக்கான தரவுகளிலிருந்துதான் ஏஐ எடுத்துக்கொள்கிறது. அடிப்படை சமூக மாற்றங்களில் அக்கறையுள்ளவர்கள் மாற்றுச் சிந்தனைகளையும், ஆதாரத் தரவுகளையும், காட்சிக் கோப்புகளையும் லட்சமாய், கோடியாய் பதிவேற்ற வேண்டும். அப்போது, அந்தப் பதிவுகளிலிருந்தும் ஏஐ எடுத்துக்கொள்ளும். 

உயிராபத்து உள்ள வேலைகளில் ஏஐ பயன்படுத்துதல், அத்துடன் இணைந்த மாற்று ஏற்பாடுகளை உறுதிப்படுத்துதல், பொதுவில் ஏஐ செயல்களை நெறிப்படுத்துதல் என சரியான, நேர்மையான அணுகுமுறைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஏஐ வல்லுநர்களுடனும் பொதுநல அக்கறையாளர்களோடும் விவாதித்து ஏஐ கொள்கைகளை வகுக்க வேண்டும். 

எந்தப் பிரச்சினையானாலும் ஏஐ தனக்கென ஒரு நிலைப்பாடு எடுக்காது. அவ்வகையில் அதி தீவிர நடுநிலைவாதிதான் ஏஐ. மக்கள் நல்லிணக்கத்தை வளர்க்கப் பாடுபடுவோருக்குத் தேவையான தகவல்களையும் கொடுக்கும், அதற்கு உலை வைக்க அலைகிறவர்கள் ஒன்றுக்குப் பத்தாக ஊதிப் பெரிதாக்குவதற்கு சாதகமான செய்திகளையும் கொடுக்கும். 

அப்படிப்பட்டவர்கள் சுறுசுறுப்பாக ஏஐ நுட்பங்களைக் கையாண்டுகொண்டிருக்கிறபோது, மக்கள் நலன் நாடுவோர், எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வோடும், நேர்மறை விளைச்சல்கள் பற்றிய நம்பிக்கையோடும். ஏஐ யுகத்தில் தனிமைப்பட்டுவிடாமலும் முனைப்புகளை மேற்கொண்டாக வேண்டும். ஏஐ அறிவியலுக்கே அதுதான் நல்லது.

[0]

-‘தீக்கதிர்’ ஞாயிறு (ஜூலை 6) இணைப்பு ‘வண்ணக்கதிர்’ பகுதியில் வந்துள்ள  எனது கட்டுரை

Saturday, 28 June 2025

ஜி-7 உச்சி மாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறியது ஏன்?

'விகடன்' டிஜிட்டல் பதிப்பில் (ஜூன் 28) வந்துள்ள எனது கட்டுரையின் வலைப்பூ பதிவு


ஏழு நாடுகள் அமைப்பின் (ஜி–7) உச்சி மாநாட்டிலிருந்து டொனால்டு டிரம்ப் வெளியேறிய செய்தி உலக அரசியல் முகத்தில்  கவலை ரேகைகளைப் படரவிடடுள்ளது.  இம்மாதம் 15, 16, 17 தேதிகளில் கனடா நாட்டின் கனானான்ஸ்கிஸ் நகரில் இந்த மாநாடு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மனி “வேந்தர்”  ஃபிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றனர். அமெரிக்காவின் அரசுத் தலைவராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் டிரம்ப் கலந்துகொண்ட முதல் ஜி–7 உச்சி மாநாடு இது. எந்த நாட்டில் கூடுகிறதோ அந்த நாட்டின் ஆட்சித் தலைவர் தலைமையில்தான் உச்சி மாநாடு நடைபெறும். இந்த ஆண்டு கனடா பிரதமர் தலைமையில் கூடியது. 

இவர்களுடன் நாடு அல்லாத உறுப்பினரான ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, உக்ரைன் தலைவர்களுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இவர்கள் ஏழு பேரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, மேற்கத்திய வலலரசுகளின் ராணுவக் கூட்டாகிய நேட்டோ ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இத்தனை ஆளுமைகள் கூடிய அந்த உச்சி மாநாடு, இயல்பாகவே உலக அளவில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலகம் இன்று சந்திக்கிற பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட  தலையாய சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படும், தீர்வுகளுக்கான அணுகுமுறைகள் வகுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.


சரியான கணிப்பு

அப்படியொன்றும் திட்டவட்டமான முடிவுகளுக்கு உச்சிமாநாடு போய்விடாது என்றும் உலக அரசியல் நோக்கர்கள் கணித்தார்கள். அந்தக் கணிப்பு சரிதான் என்று காட்டுவதாக உச்சிமாநாடு முடிந்தது.

முடிவதற்கு முன்பாக, இரண்டாவது நாள் கூட்டத்தையும் புறக்கணித்து ஜூன் 16 அன்று வெளியேறினார் டிரம்ப். அமெரிக்க அரசுத் தலைவராக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு அவர் கலந்துகொண்ட முதல் ஜி–7 உச்சி மாநாடு அது. ஆனால், ஜி–7 உச்சிமாநாட்டிலிருந்து அவர் வெளியேறியது இது முதல் தடவையல்ல. முதல் முறை பதவியில் இருந்தபோது 2018 ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெற்ற உச்சிமாநாட்டிலிருந்தும் இதே போல், கூட்டம் முடிவதற்கு முன் வெளியேறினார். அப்போதும் கனடாவில்தான், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில், உச்சிமாநாடு கூடியது.

டிரம்ப் அப்போது எஃகு, அலுமினியம் இறக்குமதிகளுக்குக் கடுமையான விகிதத்தில் வரி விதித்திருந்தார். அமெரிக்காவின் நட்பு நாடுகளிலிருந்து வந்த அந்தச் சரக்குகளுக்கும் அதே வரிதான். இதை ஒரு வர்த்தகப் போர் என்று மற்ற ஜி–7  நாடுகள் கண்டித்தன. குறிப்பாக ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்தார். முன்னதாக டிரம்ப் அமெரிக்காவை அதன் கூட்டாளிகள் “பன்றி வங்கி” (குழந்தைகள் காசு சேமிக்கும் உண்டியல்) போலப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கும் ட்ரூடோ தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

இதனால் கோபமடைந்தவராகக் கூட்டத்திலிருந்து  வெளியேறிய டிரம்ப், மாநாட்டின் முடிவில் வெளியிடப்படும் கூட்டறிக்கையில் அமெரிக்கா சார்பாகக் கையெழுத்திட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அது ஜி–7 ஒற்றுமைக்கு ஒரு பெரிய அடி என்று உலக அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.

புதிய காரணம்

இந்த முறை வெளியேறியதற்கு அவர் மையக் கிழக்கு பிரச்சினையைக் காரணமாக்கியுள்ளார். இஸ்ரேல், ஈரான் போரில் உடனே தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவர விரும்பியதாலேயே கூட்டத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை மாளிகை அதிகாரிகள், டிரம்ப் ஒரு செயல்திறமிக்க, பேச்சுகளை விட செயலில் ஆர்வமுள்ள தலைவர் என்றும், ஆகவேதான் உச்சிமாநாட்டில் முழுமையாகக் கலந்துகொள்ளாமல் இடையிலேயே புறப்பட்டுவிட்டார் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே அதுதான் நோக்கமென்றால், மாநாட்டிற்கு வராமலே இருந்திருக்கலாமே? இந்தக் காரணத்திற்காகத் தனது அலுவலகத்திலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது என்று சொல்லியிருந்தால், போரை நிறுத்துவதில் அவருக்குத்தான் எவ்வளவு அக்கறை என்று உலகம் பாராட்டியிருக்குமே?

ஒரு பக்கம் இஸ்ரேல் பிரதமரை விட அதிகத் தீவிரத்துடன் ஈரான் தலைவரைத் தாக்கிப் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் பிரச்சினையில் தலையிடுவதற்காகத்தான்கனடாவிலிருந்து திரும்பியதாக அவர் கூறுவதை யாரும் நம்பப் போவதில்லை. இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த பிரான்ஸ் பிரதமர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை நிறுத்தப் பேச்சு வார்த்தைக்கு முயற்சி செய்வதற்காக டிரம்ப் வெளியேறியிருப்பார் என்று சொல்லிச் சமாளித்திருக்கிறார்.

தகவலில் உள்நோக்கம்?

ஆனால், அதை மறுத்துள்ள டிரம்ப், தான் அவசரமாக வாஷிங்டன் திரும்பியதற்கான காரணங்கள் அதை விடப் “பல மடங்கு பெரியது” என்று கூறியிருக்கிறார். அது என்ன பல மடங்கு பெரிய காரணம்? ஈரான் அணுகுண்டுகள் தயாரிப்பதற்காகவே யுரேனியம் வாங்கி வைக்கிறது. அணு அழிவிலிருந்து “உலகத்தைக் காப்பாற்றுவதற்காகவே” தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூ அறிவித்திருக்கிறார். டிரம்ப்பும் கூட, ஈரான் அரசு அணுசக்தித் திட்டத்தைக் கைவிட மறுப்பது ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறி வந்திருக்கிறார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், 24 மணிநேரத்தில் அது செயல்படுத்தப்படும் என்றும் அவராக அறிவித்தார். ஆனால் உடனடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அதை மறுத்தார். அப்படிப்பட்ட உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். எட்டப்படாத உடன்பாடு பற்றி டிரம்ப் அறிவித்தது, இனிவரும் நாட்களில், உடன்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி ஈரானைத் தாக்குவதற்கான ஒரு காரணத்தை உருவாக்குவதற்காகத்தான் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இப்படிச் சொல்லித்தானே முன்பு புஷ் ஆட்சியில் இராக் தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்?

உண்மைக் காரணம் வேறு!

ஆனால், இஸ்ரேல்–ஈரான் விவகாரம் கூட டிரம்ப் வெளியேறியதற்கான உண்மைக் காரணமல்ல என்கிறார் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக அரசியல் பொருளதாரத் துறை மூத்த ஆய்வாளரான பேராசிரியர் சி.பி. சந்திரசேகர். “இந்த முறை, அமெரிக்கா அல்லாத ஆறு நாடுகளின் தலைவர்கள் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருந்தனர். ஏனென்றால் இரண்டு விசயங்களில் டிரம்ப்பின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஒன்று. வர்த்தகக் கூட்டாளிகளை பலவீனப்படுத்தும் அதீதமான வரி விதிப்பு அச்சுறுத்தலைக் கைவிடுதல் தொடர்பாக நிலுவையில் உள்ள பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா இணைவது, அதனை ஈடுகட்டும் வகையில் அந்த நாடுகளிடமிருந்து குறிப்பிடத்தக்க வர்த்தகச் சலுகைகளைப் பெறுவது. இரண்டு, ரஷ்யாவுடனான போரில், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துதல் உட்பட உக்ரைனுக்கு அறம்சார் மற்றும் பொருள்சார் ஆதரவை அளிப்பது. முதல் விசயத்தைத் தொடர்வதற்கு டிரம்ப் அவசரப்படவில்லை. இரண்டாவது விசயத்தில் அவருக்கு அதே நிலைப்பாடு இல்லை,” என்கிறார் அவர் (‘ஃபிரண்ட்லைன்’, ஜூலை 15).

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக ஒரு ஐரோப்பிய வற்புறுத்தலை ஏற்படுத்தவோ, ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்த போரில் ஒரு சண்டை நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கவோ தனக்கு நேரமில்லை என்று டிரம்ப் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார். மாறாக, ஜி–8 என்று உருவாகியிருந்த அமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றியது தவறு என்றுதான் கூறியிருக்கிறார். (1975இல் பிரான்ஸ் முன்முயற்சியில் 6 நாடுகள் அமைப்பாக உருவாகியிருந்தது. அடுத்த ஆண்டில் கனடா இணைந்ததால் ஜி–7 ஆனது. 1998இல் ரஷ்யா இணைக்கப்பட்டு ஜி–8 ஆக்கப்பட்டது. 2014இல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டதை எதிர்த்து, அமைப்பிலிருந்து அது இடைநீக்கம் செய்யப்பட்டது. 2017ல் ரஷ்யா தான் முற்றிலுமாக அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஜி–8 மறுபடி ஜி–7 ஆக மாறியது.)  

ரஷ்யாவை வெளியேற்றியது தவறு என்றவர் பின்னர்,. “இஸ்ரேலுக்குத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது” என்று ஜி–7 தலைவர்களைக் கூட்டறிக்கை வெளியிட வைத்தார். ஈரான் சிக்கலைத் தீர்ப்பதில் காஸாவில் சண்டை நிறுத்தம் உள்பட, மையக் கிழக்கில் விரிவான முறையில் பகைமையைத் தணிக்க இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூற வேண்டும் என்று வற்புறுத்தினார்.

டிரம்ப் அகராதி

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர், “டிரம்ப் அகராதியில், ஈரானை அதன் அணுசக்தித் திட்டத்திலிருந்து பின்வாங்க வைப்பதும், இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் வெளிப்படையான ஒப்புதல் அளித்து, காஸாவில் அதன் ஆக்கிரமிப்பைப் பயன்படுத்திக்கொள்வதும்தான், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதை விட, இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை விட மிக முக்கியமாதாக இருக்கின்றன,” என்கிறார்.

“டிரம்ப் நிர்வாகத்தின் செய்தி தெளிவானது. ஜி–7 அமைப்பால் அதற்கு ஒரு பயனுமில்லை. தனது பொருளாதார, அரசியல் தேவைகளை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு பணிந்துபோக வேண்டும் என்றே அது விரும்புகிறது. இதில் வியப்புக்குரியது என்னவென்றால், ஐரோப்பா இதற்குத் தயாராக இருப்பதும், இதர ஜி–7 நாடுகள் உடன்பட்டுப் போவதும்தான். உலக முதலாளித்துவத்தின் அம்மணத்தை மறைத்த கோவணமும் நழுவிவிட்டது,” என்று கூறிச் சிரிக்கிறார் சி,பி. சந்திரசேகர்.

அவரைப் போன்றவர்கள் சிரிப்பதில் அர்த்தம் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு, உலக முதலாளித்துவத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதற்கான செலவை தானே சுமக்க முடியாது என்று அமெரிக்க அரசு கூறி வந்தது. அதைத் தொடர்ந்து உலகளாவிய அரசியல்,பொருளாதாரச் சிக்கல்களுக்குக் கூட்டாகப் பேசித் தீர்வு காண்பது என்ற நோக்கத்தை அறிவித்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டாகப்  பேசித் தீர்வு காண்கிறார்களோ இல்லையோ, அப்படியொரு கூட்டுத் தலைமை செயல்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காவது ஜி–7 பயன்பட்டு வந்தது. இப்போது டிரம்ப்பின் தன்னிச்சையான செயல்கள் அந்தத் தோற்றத்தைக் கலைத்துவிட்டன.

கிரீன்லாந்தும் ரிவியேராவும்

உச்சிமாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறியதை விமர்சித்துள்ள பலரும் இதே போன்ற கருத்துகளையே வெளிப்படுத்தியுள்ளனர். அளப்பரிய கனிமவளங்கள் நிறைந்த, அரசியல் ஆதிக்கங்களுக்குத் தோதான ராணுவ வியூக முக்கியத்துவம் வாய்ந்த கிரீன்லாந்து தீவை வளைத்துப்போட எண்ணுகிறார் டிரம்ப். டென்மார்க் நாட்டின் பகுதியான அந்தத் தீவை வாங்கிப்போடும் அவரது விருப்பத்தை டென்மார்க் அரசும் கிரீன்லாந்து நிர்வாகமும் கடுமையாக எதிர்த்துவருகின்றன. அந்த எதிர்ப்பை பிரான்ஸ் பிரதமரும் எதிரொலிப்பதால், அது போல் வேறு பல பிரச்சினைகளிலும் அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளை அவர் சாடியிருப்பதால் அவர் மீது டிரம்ப்புக்குக் கடும் கோபம். பா‘லஸ்தீனத்தின் காஸா வட்டாரத்தை அமெரிக்க ராணுவம் கைப்பற்ற வேண்டும், அங்கே இத்தாலி, பிரான்ஸ் கடலோர உல்லாச விடுதிகள் உள்ள ரிவியேரா வட்டாரம் போல அமைக்க வேண்டும் என்று டிரம்ப் ஏற்கெனவே பேசியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.

உச்சி மாநாடு என்று பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி தீர்வுகளுக்கு வருவதில் டிரம்ப்புக்கு விருப்பமில்லை. நாடுகளின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி நிர்ப்பந்திப்பதில்தான் அவருக்கு அதிக நாட்டம். மேலும், அமெரிக்கா சொல்வதை மற்ற நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, பலதரப்புப் பேச்சுவார்த்தையில் ஒரு பொது முடிவை மேற்கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. அத்துடன், உச்சிமாநாடு போன்றவற்றில் அமரும்போது, அவருடைய முன்மொழிவுகளை மற்ற நாடுகளின் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தக் காரணங்களாலும்தான ஜி–7 உச்சநிலைக் கூட்டத்தை அவர் இப்படிப் புறக்கணித்திருக்கிறார் என்ற கருத்துகள் பகிரப்பட்டிருக்கின்றன.

“கூட்டுத்தலைமை” எனக் கூடிப் பேசி எடுத்த முடிவுகளாலேயே கூட வறுமை நிலைமைகள், வேலையின்மைக் கொடுமைகள், கல்வியின்மை அவலங்கள், உடல்நலக் கேடுகள், சமூக அநீதிகள், இனவாத மோதல்கள், மதவெறிக் கலவரங்கள், ஆக்கிரமிப்புப் போர்கள் உள்ளிட்ட உலகப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண முடியவில்லை. டிரம்ப் போன்றோரின் தன்னிச்சைத் தலைமைகளுக்குப் பணிந்து செல்லும் சூழல் நிலைப்படுமானால் என்னவாகும்? ஜி–7 முறிவு எழுப்புகிற இந்தக் கேள்விக்கு, சிறப்பு விருந்தினராகப் போய் வந்திருக்கும் இந்திய பிரதமர் போன்றோரும் விடை தேடியாக வேண்டும்.

Monday, 23 June 2025

ஆங்கிலம் பேசினால் வெட்கப்பட வேண்டுமா... அமித் ஷா பேச்சு அறியாமையா? ஹிந்தித் திணிப்பா?


 

            [‘விகடன்’ டிஜிட்டல் ஜூன் 22, 2025 பதிப்பில் வந்துள்ள எனது கட்டுரை]

ங்கிலம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுகிறவர்கள், விரைவில் அதற்காக வெட்கப்படுகிற ஒரு சமுதாயத்தை நாம் வாழும் காலத்திலேயே பார்க்கத்தான் போகிறோம். நம் நாட்டின் மொழிகள் நம் கலாசாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். அவை இல்லாமல் நாம் பாரத மக்களாக இருக்க முடியாது. நமது நாடு, இதன் வரலாறு, இதன் கலாசாரம், இதன் தர்மம் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்நிய மொழிகளில் அது முடியாது” என்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் (ஜூன் 19) அமித் ஷா பேசினார்.

ஐஏஎஸ் அதிகாரி ஆஷுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய “மெய்ன் பூண்ட் ஸ்வயம், குத் சாகர் ஹூன்” (நான் சிறு துளி, நானே பெரும் கடல்) என்ற புத்தக வெளியீடு அது. அமித் ஷா இவ்வாறு பேசிய காணொளிப் பதிவை ஏஎன்ஐ செய்தி முகமை நிறுவனம் தனது X தளத்திலும், செய்தியைத் தனது வலைத்தளத்திலும் வெளியிட்டது, பின்னர் விலக்கப்பட்டது என்று ‘தி ஹிண்டு’  தெரிவிக்கிறது. ஏன் விலக்கப்பட்டது என்று தெரியவரவில்லை. “சுயமரியாதையுடன் நாம் நமது மொழிகளிலேயே நம் நாட்டை நடத்திச் செல்வோம், உலகத்தையும் இட்டுச்செல்வோம்,” என்று ஷா பேசியதாகவும் ‘தி ஹிண்டு’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகப் பார்த்தால் அவருடைய இந்தக்  கருத்து வரவேற்கத் தக்கதுதான். எந்தவொரு நாடும் தனது சொந்த மொழிகளின் வலிமையிலேயே முன்னேறிச் செல்ல வேண்டும், வேற்று மொழிகளால் அல்ல, குறிப்பாக அடிமைப்படுத்தி அடக்கியாண்ட ஒரு அரசின் அடையாளமாக உள்ள மொழியால் அல்ல என்ற சிந்தனையை யார் மறுக்கப் போகிறார்கள்? அறிவியல் கண்ணோட்டத்துடன் தாய் மொழியையும் பிற மொழிகளையும் அணுகக்கூடிய எவரும் இதை ஏற்பார்கள்.

வீட்டிலும் அதே “கல்ச்சர்”

பொது இடங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலேயே கூட ஆங்கிலத்தில் உரையாடும் “கல்ச்சர்” பரவியிருக்கிறது. உயர்நிலை (அதாவது உயர்ந்த கட்டண நிலை) தனியார் பள்ளிகளின் வளாகங்களுக்குள், மாணவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் சொந்த மொழியில் பேசினால் தண்டம் செலுத்தவும், முட்டிக்கால் போட்டு உட்காரவும் ஆணையிடப்படுவார்கள். அப்படிக் கறாராக நடத்தினால்தான் எதிர்காலத்தில் யுஎஸ், யுகே, கனடா, ஆஸ்திரேலியா என்று போகிற பிள்ளைகள் அங்கே “ஃபுளூயன்ட்  இங்கிலீஷ்” பேச முடியும் என்று பெற்றோர்கள் தண்டனையை ஏற்றுக்கொண்டு தண்டத்தைக் கட்டுவார்கள்.

இந்தப் பள்ளிப் பழக்கம் வீட்டுக்குள் தொற்றுகிறது. குடும்பச் சூழலிலும் ஆங்கில உரையாடல் இருந்தால்தான் பசங்கள் எளிதாகவும் விரைவாகவும் கற்பார்கள் என்று நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இப்படியாக, வெளிநாடுகளில் பொது இடங்களில் எல்லோரும் அவரவர் மொழியில் பேசிக்கொண்டிருக்க, யாராவது இரண்டு பேர் ஆங்கிலத்தில் பேசுவார்களானால் அவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள், குறிப்பாகத் தமிழர்களாக இருப்பார்கள் என்ற அங்கதமே உண்டு.

தமிழில்தான் சொல்வளம் வறண்டுவிட்டதா, அல்லது அவர்களுக்குத்தான் சொல்லறிவு தேங்கிவிட்டதா என்று நினைக்கும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஓடிடி தளங்களில் பார்த்தால் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்ட படங்கள் வரிசை கட்டுகின்றன.

சென்னை மாநகர மையச் சாலைகளிலும் வீதிகளிலும் தமிழில் பெயர் எழுதப்பட்ட (தமிழ்ப் பெயர் சூட்டப்படுவதைச் சொல்லவில்லை) கடை வாசல்களைக் காண்பது அரிதான காட்சியாகிவிட்டது.

நிலைமை இப்படி இருக்கிறபோது, உள்துறை அமைச்சரின் இந்தப் பேச்சு பொருள் பொதிந்ததாகவே இருக்கிறது. ஆனாலும், “கையைக் கொடுங்கள் அமித் ஷா,” என்று மனமுவந்து, முழு நிறைவோடு கொண்டாடி வரவேற்க இயலவில்லையே! இந்தப் பேச்சின் உள் நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கிறதே!

இந்தியர்களும் ஹிந்தியர்களும்

ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்திற்கும் சம மதிப்பும், சம வாய்ப்பும் என்ற ஒரு கொள்கை நிலைக்கு வந்து இப்படிப் பேசியிருந்தால் மகிழ்ந்து கைகுலுக்கலாம். ஆனால், என்ன இனம், என்ன மாநிலம், என்ன மொழியானாலும் நாமெல்லாம் “இந்தியர்கள்” என்ற பன்மைத்துவ உணர்வோடு இந்தக் கருத்து வந்ததாகக் கருத முடியவில்லை.

மாறாக, எல்லோரும் “ஹிந்தியர்கள்” என்று நிறுவ முயலும் ஒற்றைத்துவ நோக்கத்திலிருந்தே வந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. அப்படித்தானே, கடந்த காலத்திலிருந்தே, ஹிந்தி மொழியின் மீதே ஒரு பகுதி மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி செய்திருக்கிறார்கள்.

இவர் அமைச்சராக உள்ள ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டப்படுகிறது. ஆங்கிலப் பெயர் வேண்டாம், சொந்த மொழிகளில் இருக்கட்டும் என்பது ஏற்கத்தக்கது. ஆனால், ஹிந்தி மட்டுமே இந்திய மொழி அல்ல. அனைத்து மாநில மக்களும் மகிழ்ந்து வரவேற்கும் வகையில், ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு சட்டத்திற்கும் திட்டத்திற்கும், இந்த்தியாவின் ஒவ்வொரு மொழியாகப் பெயர் சூட்ட வேண்டியதுதானே? அப்படியொரு கொள்கையை உருவாக்க வேண்டியதுதானே?

மாநிலங்கள் இணைந்த ஒன்றிய கூட்டாட்சி என்ற அரசமைப்பை ஏற்றுள்ள பெருமைக்குரிய நாடு இந்தியா. மாநிலங்களின் மொழிகளுக்கு சம மரியாதை அளிக்கப்படுவதில்தான் அந்தப் பெருமை நிலைத்திருக்கும். ஆனால், நாட்டின் விடுதலைக்கு முன்பே மாகாணங்களில் ஹிந்தியைப் புகுத்தும் முயற்சி தொடங்கியது. சென்னை மாகாணத்தில் ராஜாஜி மூலம் அன்றைய காங்கிரஸ் தொடங்கிய முயற்சி அப்போது முறியடிக்கப்பட்டது வரலாறு.

விடுதலை பெற்ற இந்தியாவிலும் ஒன்றிய காங்கிரஸ் அரசு இதைச் செய்ய முயன்றது, மக்கள் இயக்கங்களின் உறுதியான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டு, இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆயினும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு, அங்கெல்லாம் வரக்கூடிய பொதுமக்களுக்கும் கூட, கற்றுத் தருவதற்கென தினமொரு ஹிந்திச் சொல்லும், வாக்கியமும் எழுதிப்போடுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இன்று காங்கிரஸ் கட்சியும் இப்படிப்பட்ட ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிற நிலையில், முன்னோடிகளை விடவும் தீவிரமாக அந்தத் திணிப்புக் கைங்கரியங்களை ஒன்றிய பாஜக அரசாங்கம் செய்துவருகிறது. நேரடியாகவும் விசுவாசிகள் மூலமாகவும் ஹிந்திதான் தேசிய மொழி என்ற எண்ணத்தைப் பதிக்கிற உத்திகள் தொடர்கின்றன.

நிதி ஒதுக்கீடுகளில்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சில அமைப்புகள் சேகரித்த விவரங்களின்படி,  2023–24ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், இந்திய மொழிகள் மேம்பாட்டு நிறுவனங்கள் அனைத்திற்குமாக ஒதுக்கப்பட்ட நிதி 300 கோடி ரூபாய் (முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகம்தான்). ஹிந்தி இயக்குநரகத்திமற்கு மட்டும் ஒதுக்கப்பட்டது ரூ.39.47 கோடி ரூபாய்.

இந்திய மொழிகள் மேம்பாட்டுக்கான நிறுவனங்களில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான், தேசிய உருது மேம்பாட்டு நிறுவனம், தேசிய சிந்தி மேம்பாட்டு மையம், மத்திய செம்மொழி நிறுவனம், இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்,  இந்திய மொழிகளில் தரமான உயர் கல்விக்கான தேசிய முன்னெடுப்பு அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களுக்குள்ளேயே ஹிந்தி மேம்பாட்டு அமைப்புகளும் இருப்பது கவனத்திற்குரியது. இவை எல்லாவற்றுக்குமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, ஹிந்தி இயக்குநகரகத்திற்கு மட்டுமாக 39.47 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை எப்படி நியாயப்படுத்துவது? (செய்தி: ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, 2023 பிப்.3).

குடிமக்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்கள் தங்கள் மொழிகளிலேயே ஒன்றிய அரசுக்கு (அலுவலகங்களுக்கு) ஆவணங்களை அனுப்பி, அந்த மொழிகளிலேயே பதில் பெறுகிற ஏற்பாட்டைச்  செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு  தனது ஆவணங்களை அந்தந்த மாநில மொழியில் அனுப்புவதன் தேவையும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. இதனால் ஒன்றியத்தில் கூடுதல் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள் உருவாகும்.  அத்துடன், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது மிக எளிதானதாக நிறைவேற்றக் கூடியதுமாகும். எது கடினமானதாக இருக்கிறது என்றால் மைய ஆட்சியாளர்களின் மனம்தான்.

“இளமையில் கல்” என்கிறது தமிழ் – அதாவது இள வயதிலேயே கற்பது நல்லது, முதுமையில் அதுவே கைகொடுக்கும். “கேட்ச் தெம் யங்” (சின்ன வயதிலேயே அவர்களைப் பிடித்துப் போடு) என்பது ஆங்கிலச் சொலவடை. இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு! ஒரு பக்கம் இங்கிலீஷ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்த இங்கிலீஷ் போதனையின்படி, பள்ளிகளில்  சிறு வயதிலேயே பிடித்துப் போடுவது போல கட்டாய ஹிந்தி ஏற்புக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சாட்சியாக கர்நாடகம்

இப்போது கூட, தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  முன்பு அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டி, மாணவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்பது அவர்களது விருப்பத் தேர்வாக இருக்க வேண்டுமேயன்றி கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் சுமார் 90,000 மாணவர்கள் ஹிந்தித் திணிப்பின் காரணமாகத் தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்ற தகவலைக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்கள் தாங்களாக விரும்பித் தேர்ந்தெடுக்காத மொழியைக் கற்குமாறு கட்டாயப்படுத்துவதில் நியாயம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.

“பல மொழிகளையும் கற்க ஊக்குவிப்பதுதான் எப்போதுமே தமிழ்நாட்டின் நிலைப்பாடு. நீங்கள் விரும்புகிற எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். (அரசமைப்பு சாசனத்தின்) எட்டாவது அட்டவனையில் உள்ள 22 மொழிகளையும் கற்கலாம். ஆனால் திணிக்கப்படக் கூடாது,” என்று ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கூறியிருக்கிறார். அடிப்படையான ஜனநாயக சிந்தனை உள்ளவர்கள் இதனை முழுமையாக ஏற்பார்கள்.

அமித் ஷா ஏற்கிறாரா? குடிமக்களின் இணைப்பு மொழியாகவும் தேசத்தின் அடையாள மொழியாகவும் ஹிந்தியை முன்னிறுத்தி அவர் பல முறை பேசியிருக்கிறார். மாதிரிக்கு ஒன்று:

2019ஆம் ஆண்டில் ஹிந்தி தினம் (செப். 14) கொண்டாடப்பட்டதையொட்டி அவர், "இந்தியா பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் முக்கியத்துவம் உள்ளது. ஆனால், உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுவான மொழி இருப்பது மிகவும் அவசியம். நாட்டை ஒற்றுமை நூலால் பிணைக்கக்கூடிய ஒரு மொழி இருக்கிறதென்றால், அது பரவலாகப் பேசப்படும் ஹிந்தி மட்டுமே" என்று “ட்வீட்” செய்தார்.

2022 ஏப்ரல் 7இல் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்தில்,“வெவ்வேறு மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்,” என்று கூறினார். அதைத் தெளிவுபடுத்துவது போல, “ஹிந்தியை உள்நாட்டு மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் ஆங்கிலத்திற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

2023இன் ஹிந்தி தின நிகழ்ச்சியில் அவர், “ஹிந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டியிட்டதில்லை, போட்டியிடாது. நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமே ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க முடியும்," என்று பேசினார். அட, நியாயமான மொழிக் கொள்கையாக இருக்கிறதே என்று பலரும் கரவொலி எழுப்ப நினைத்திருப்பார்கள். ஆனால்,

“உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பல்வேறு மொழிகளுக்கு இடையே ஹிந்தி ஒரு ஒருங்கிணைக்கும் நூலாக இருந்து வந்துள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் இன்று வரை, இந்தியாவை ஒன்றிணைப்பதில் ஹிந்தி முக்கியப் பங்காற்றியுள்ளது,” தனது பேச்சுக்குப் பொழிப்புரை வழங்கினார். கரவொலி எழுப்ப நினைத்தவர்கள் உயர்த்திய கைகளை  இறக்கியிருப்பார்கள்.

அமித் ஷா இப்படிப் பேசியது ஹிந்தித் திணிப்பின் இன்னொரு வடிவமே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், ஹிந்தித் திணிப்பு என்பது ஹிந்துத்துவா மதவாதத்தோடும் ஹிந்து ராச்சிய அரசியல் நோக்கத்தோடும் தொடர்புள்ளது என்று சிபிஐ(எம்) தலைவர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்ததும் (சென்னையில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மொழி உரிமை மாநாடு) கவனத்தில் கொள்ளத் தக்கது.

சன்னலா வாசலா?

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும் ஆங்கிலம் கோலோச்சிக்கொணடு இருப்பதற்கு முடிவுகட்டியாக வேண்டும் – அதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாட்டிலேயே கூட, ‘ஹிந்தித் திணிப்பு வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டாலும், தமிழின் தனிப்பெரும் ஆளுமையை நிலைநாட்டுவதற்கு மாறாக ஆங்கிலம் அமர்ந்துகொள்ள இடமளிக்கப்பட்டது என்ற விமர்சனமும் உண்டு. 

ஜவஹர்லால் சொன்னது போல, ஆங்கிலம் உலகத்தின் சன்னல்தான். ஆனால், சன்னலையே வாசலாக மாற்றிய சோகமல்லவா இங்கும் வேறு சில மாநிலங்களிலும் காட்சியானது?

ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பேத்திக் குழந்தை, “தி மூன் ஷைன்ஸ் இன் தி நைட் ஓவர் தி ஸ்கை” என்று தன் வகுப்பில் பயின்ற பாடலைப் பாடிக் காட்டினாள். பாட்டு ஆங்கிலமானாலும் பாடியது மழலையாயிற்றே, அதை ரசித்தேன். “இந்தப் பாட்டுக்கு என்ன பொருள்” என்று கேட்டேன். நான் கேட்பது புரியாமல் திகைத்தாள். “நீ பாடியதற்கு என்ன மீனிங்” என்று பொருளுக்கு மீனிங் சொன்னேன்.

“ஓ, மீனிங்கா! இந்த மூன் இருக்குல்ல, அது… ம் ம் ம் … நைட்ல  … ஸ்கையில … ம் ம் ம் … ஷைன் பண்ணுது” என்று சொல்லிவிட்டுக் கலகலவென்ற சிரிப்பை அந்த நடுக்கூடத்தில் விட்டுவிட்டு ஓடினாள். நிலா இரவில் வானத்தில் ஒளிர்கிறது எனும் இனிய தமிழ் அவளின் நாவிலிருந்து களவு போனதற்கு யார் பொறுப்பு? ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல முடியுமா?

இன்னொரு கேள்வியும் கை உயர்த்துகிறது. நவீன உலகத்தில் ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட முடியுமா? வரலாற்றுப் பினைப்புகள், அரசியல் இணைப்புகள், வணிகத் தொடர்புகள், வேலை உறவுகள், பண்பாட்டுப் பகிர்வுகள் என்று ஆங்கிலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திக் கொண்டிருப்பது உண்மை. ஆகவே, ஆங்கிலத்தை அறிவுக்கான ஒரு துணைக் கருவியாகத்தான் கையாள வேண்டும், ஆங்கிலமே அறிவு என்ற மயக்கம் தெளிய வேண்டும்.

இந்தப் புரிதல் உள்துறை அமைச்சரின் மேற்படி புதிய பேச்சிலும் எதிரொலிக்குமானால் இணைந்து குரல் கொடுக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே.. ஆங்கிலத்தின் பிடியைத் தகர்ப்பது தேவைதான் என்றாலும், ஹிந்தியின் பிடியில் சிக்க வைக்கிற முயற்சிகளில் மாற்றமில்லை.  எனவே, அமித் ஷாவின் பேச்சை சந்தேகத்துடனேயே கேட்க வேண்டியிருக்கிறது.