Monday, 8 December 2025

உலகளாவிய பண்பாட்டுக் களத்தில் என்ன நடக்கிறது?

 



தொழில் – வணிகம், கல்வி, மருத்துவம், அறிவியல் ஆகியவை சார்ந்து உலக அளவில் அரசியல் களத்தில், சமுதாய வாழ்வில் தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ஒருபக்கம் தாக்கங்களை அங்கீகரித்து ஏற்பவர்கள். மறுபக்கம் மாற்றங்களை மறுத்து எதிர்ப்பவர்கள். இதிலிருந்து சமூக வாழ்க்கையும் கலை இலக்கியமும் சார்ந்த பண்பாட்டுத் தளம் தனித்திருக்க முடியுமா?

உலக அளவில் முன்னுக்கு வந்துள்ள நிகழ்வுப் போக்குகளுக்குள் ஒரு சிற்றுலா சென்று வந்ததில் சில விவாதங்களைக் கேட்க முடிகிறது.

ஏஐ ஒரு சவாலா, சாதகமா?

இன்று இந்த விவாதங்களில் இயற்கையாகவே முதலிடம் பிடித்திருப்பது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி நிலைதான். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிற துறைகளைப் போலவே கலை இலக்கிய மேடைகளில் சரசரவென்று ஏறிவிட்டது ஏஐ. பேனாவுக்கு மாற்றாக தட்டச்சு விசைப்பலகை, பெரிய அரங்கத்திற்குப் போட்டியாகக் கைப்பேசித் திரை என்ற கருவி மாற்றங்களோடு அது நிற்கவில்லை. இசைக் குழுக்கள், பழைய–புதிய பாடல்கள், கதை–கவிதை ஆக்கங்கள், ஓவியம்–சிற்பங்கள், நாடக–திரைப்படங்கள், காட்சியமைப்புகள், நடிப்புக் கலைஞர்களின் பருவத் தோற்றங்கள், நினைவில் வாழ்வோரின் திரை நடமாட்டங்கள், நிறச் சீரமைப்புகள் என ஏஐ கால்படாத இடமே இல்லை.

தேடுகிற தகவல்களைத் தருவது மட்டுமல்லாமல், திருத்தங்களுக்கு ஆலோசனை வழங்குகிற இடத்திற்கும் அது வந்துவிட்டது. ஒரு கதையின் கரு இது, தொடக்கம் இப்படி இருக்கட்டும், இவ்வாறு வளரட்டும், இங்கே முற்றட்டும், இத்தோடு முற்றுப் பெறட்டும் என்ற குறிப்புகளை உட்செலுத்தினால், சில நொடி நேரத்தில் அவரவரின் சித்தரிப்பு நடையிலேயே ஒரு கதையைச் செய்து கொடுத்துவிடும். அதற்கு மேல் படைப்பாளியின் பணி தன் கண்ணோட்டத்தையும், அழகியலையும் பொருத்தமாக இணைத்து நிறைவாக்குவதுதான்..

இப்படியே போனால், பல்வேறு தொழில்களின் பாட்டாளிகள் போல, கலை–இலக்கியத் துறையில் படைப்பாளிகள் வெளியே நிறுத்தப்பட்டு விடுவார்களா? அல்லது அவர்கள் ஏஐ திறனை உள்ளே வாங்கிக்கொண்டு மேம்பட்ட ஆக்கங்களைப் படைத்தளிப்பார்களா? இதனால் மெய்யான படைப்பாற்றல் ஒளிமங்கிவிடாதா? ஒருவரது நுட்பங்களை ஏஐ கருவி வசப்படுத்திக்கொள்ளும், அவருடைய படைப்பைப் போலவே உருவாக்கித் தரும் என்றால், போலிகள் வந்து ஆக்கிரமிக்காதா? நியாயமான கவலைகள்.

இல்லை, போலிகளைக் கண்டுபிடிப்பதற்கே கூட ஏஐ கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் பகிரப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்படும் போலியான ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே ஏஐ செயலிகள் வந்திருப்பது பற்றி ஒரு பேராசிரியர் தெரிவித்தார்.

கலை உலகில், குறிப்பாகத் திரைக்கதையாக்கத்தில் ஏஐ நுழைப்பை எதிர்த்து ஹாலிவுட் எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெருவில் இறங்கினார்கள். 148 நாட்கள் நீடித்த அந்தப் போராட்டம், ஏஐ பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளோடு, அதுவரையில் இல்லாத வகையில் எழுத்தாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற ஒப்பந்தம் ஒன்று தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்போடு ஏற்பட்டது.

கலப்பும் திணிப்பும்

உலகமயமாக்கல் கொள்கைகள், நடைமுறைகளின் தாக்கத்தில் உள்நாட்டளவிலும் உலக அளவிலும் கலை இலக்கியப் பகிர்வுகள் நடப்பது போலவே, பண்பாடுகளின் கலப்பு குறித்த விவாதமும் முன்னுக்கு வந்திருக்கிறது. புதிய கலப்பு அடையாளங்கள், பண்பாட்டுத் தழுவல்கள், மக்களின் ஏற்பு மனநிலைகள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியலும் வணிக உறவுகளும் சார்ந்ததாக ஒரு பண்பாட்டின் கூறுகளை மற்றொன்றின் மீது ஏற்றுவதால் ஏற்படக்கூடிய அழிப்புகள், மக்களின் தன்விருப்ப ஏற்பில்லாத கட்டாயத் திணிப்புகளை மறுக்கும் நியாயமான அடையாளப் பாதுகாப்புக் கேடயங்கள், இதே சூழலிலிருந்து உருவாகும் புதிய அடையாள அரசியல் இயக்கங்கள் ஆகியவையும் பேசுபொருளாகியிருக்கின்றன.

இந்தக் கலந்துரையாடல்கள் கலை இலக்கிய மேடைகளில் நிகழ்த்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) அரங்குகளிலும் நிகழ்கின்றன. 2022 செப்டம்பர் 28 முதல் 30 வரை மெக்சிகோ நகரத்தில் “பண்பாட்டுக் கொள்கைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலக மாநாடு” ஒன்றை யுனெஸ்கோ நடத்தியது. “மோண்டியாகல்ட்” எனப்படும் இந்த மாநாடு 1982இல் முதல்முறையாக நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இரண்டாவது மாநாடு நடைபெற்றது.

பொது நன்மை

அதில், “உலகளாவிய ஒரு பொது நன்மையாக பண்பாடு” என்ற கோட்பாடு ஏற்கப்பட்டது. பண்பாடு உலகத்திற்கே பொதுவான நன்மை, ஆனால் அது ஒற்றைத் தன்மையானது அல்ல, அதன் பன்மைத்துவம் உயர்த்திப் பிடிக்க வேண்டியது என்பதே அதன் அடிப்படை நோக்கம். தமுஎகச பண்பாட்டுப் பன்மைத்துவ உரிமை மாநாடு நடத்தியது நினைவுக்கு வருகிறதல்லவா?

மொழியையும் உணவையும் உடையையும் உள்ளடக்கிய ஒற்றைக் கலாச்சார அடாவடிக்கு எதிராக இந்தியாவில், குறிப்பாகத் தென்னகத்தில், மேலும் குறிப்பாகத் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

புவியின் பல வட்டாரங்களிலும் பண்பாட்டுத் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்கப் போராட்டங்கள் முளைத்துள்ளன. “மேன்மைக்” கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும், மொழி வழியாக அடிமைப்படுத்தும் திணிப்புகளுக்கும் எதிரான கிளர்ச்சிகள் விவாத மேடைகளிலும் பிரதிபலிக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கான முனைப்புகளில், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகளுக்கு எதிரான செயல்களில் பண்பாட்டுப் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உரிமையாக உறுதிப்படுத்துவதன் தேவைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மக்களின் பேச்சாக

இன்றைய அறிவியல் வளர்ச்சிகளோடு இந்தத் தேவைகளை இணைப்பதற்கான உரையாடல்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வட்டாரப் பண்பாட்டு உள்ளடக்கங்களைத் தரவுகளாக இணையத் தளங்களில் பதிவேற்றிச் செழுமைப்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்கள் வழங்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் வசப்படுத்துவது, தகவலறிவின் இடைவெளிகளைச் சுருக்கிக்கொண்டே போவது, மொழிகள் உள்ளிட்ட பன்முகப் பண்பாடுகளை எண்ம உலகில் மேம்படுத்துவதன் மூலமாகவும் உரிமைகளைப் பாதுகாப்பது…

அந்தந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடையேயான கருத்துப் பகிர்வுகளாகவும் சொற்போர்களாகவும் நடந்துகொண்டிருந்த இந்த விவாதங்கள் இன்று குறிப்பிடத்தக்க அளவில் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. மக்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இவற்றைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கிடும் அமைப்புகள், தனிமனிதர்களின் தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள ஓர் அடையாள வெற்றி என்றும் இதைக் கூறலாம். மக்களை உசுப்பிவிடுகிறார்கள், கலகத்தை மூட்டுகிறார்கள் எனவாக ஆதிக்கவாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் மாட்டிவிடும் பட்டைகளை மீறி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

இது படிப்படியாக, சமுதாய அசைவுகளை ஏற்படுத்துவது, அரசுகளைச் செயல்பட வைப்பது, அதை நோக்கிய இயக்கங்களை முடுக்கிவிடுவது என்ற அரசியல் விளைவுகளுக்கும் இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையை களமெங்கும் விரவியிருக்கும் போராட்டத் தடங்கள் அளிக்கின்றன.

[0]

தமிழ்நாடு முறபோககு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பூத்துள்ள சிறப்பு மலரில் ஓர் இதழாக எனது கட்டுரை

Sunday, 7 December 2025

`இனி, உழைக்காமலே சாப்பிடலாம்... சம்பாதிக்காமலே ஊர் சுற்றலாம்!' - எலான் மஸ்க் ஜோதிடம் பலிக்குமா?

 


உழைக்காமலே உட்கார்ந்து சோறு சாப்பிடலாம், உழைத்துப் பணம் சம்பாதிக்காமலே ஊர் சுற்றலாம்… இப்படியொரு எதிர்காலம் வருமானால் யாருக்குத்தான் பிடிக்காது. உண்மையாகவே அப்படியொரு காலம் வருகிறது, பக்கத்தில் வந்துவிட்டது என்று குடுகுடுப்பை அடித்திருக்கிறார் எலான் மஸ்க். தோராயமாக 33 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரரான எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்.

அவர் ‘பீப்பிள் பை டபிள்யூ.டி.எஃப். (People by WTF) என்ற இணையவழி ஒலிபரப்பு மேடை (பாட்காஸ்ட்) நேர்காணலில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தக நிறுவனமான ‘ஸெரோதா’ குழுமத்தின் நிறுவனர் நிகில் காமத் இந்த ஒலிபரப்பு மேடையை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 30 அன்று மஸ்க்கிடம் கேள்விகள் கேட்டவரும் இவர்தான்.

ஒரு கேள்விக்குப் பதிலளித்த மஸ்க், ‘மனிதர்கள் இனி வேலை செய்யத் தேவையில்லை’ என்ற கருத்தைக் கூறினார். மேலும், “அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), எந்திர மனிதவியல் (ரோபோட்டிக்ஸ்) வளர்ச்சி காரணமாக, வேலை ஒரு விருப்பத் தேர்வாக மட்டுமே இருக்கும், கட்டாயமானதாக இருக்காது.

தன்விருப்ப உழைப்பு வீட்டில் காய்கறி வளர்ப்பது போன்ற செயலாக இருக்கும். வேலை ஒரு பொழுதுபோக்காகிவிடும்/ ஏஐ மூலம் உற்பத்தி நடக்கும். அந்த உற்பத்தி மிகவும் அதிகரிக்கிறபோது, பணம் தேவையற்றதாகி, படிப்படியாகப் பொருத்தமற்றதாகிவிடும்” என்றார் மஸ்க். அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளிலேயே இந்த மாற்றங்கள் நிகழும் என்று ஆர்வப் பரபரப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.


இந்தக் கருத்து இந்தியச் சூழலில் கூடுதல் கவனம் பெறுகிறது. அந்த நேர்காணலின் இலக்கு குறிப்பாக பாட்காஸ்ட் நேயர்களான இந்தியர்கள்தான். அடுத்து, ஏஐ ரோபோக்கள் நுழைக்கப்படுகிறபோது எண்ணற்ற தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சம் பரவியிருக்கிறது.


                                        நாராயண மூர்த்தி

14, 18 மணி நேர வேலை!

கூர்மையான மூன்றாவது காரணமும் இருக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா உச்சத்திற்கு வர வேண்டுமானால் பணியாளர்கள் வாரத்தில் 70 மணி நேரம் (வாரம் ஐந்து நாள் வேலை என்ற கணக்கில் ஒரு நாளில் 14 மணி நேரம்) உழைக்கத் தயாராக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் குழுமத்தின் தலைவர் என்.ஆர்.நாராயண மூர்த்தி கூறினார். லார்சன் அன் டூப்ரோ (எல்&டி) குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன். வாரத்தில் 90 மணி நேரம் (ஒரு நாளில் 18 மணி நேரம்) உழைக்க முன்வர வேண்டும் என்று பேசினார்.

இந்தப் பேச்சுகள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. பின்னர், எல்&டி மனிதவளத் துறைத் தலைவர் அளித்த விளக்கத்தில், அலுவலக ஊழியர்களிடையே பேசிய நிறுவனத் தலைவர் நகைச்சுவைக்காகவே அவ்வாறு சொன்னதாகக் கூறினார் என்று விளக்கமளித்தார். தொழிலாளர்களின் உழைப்பு நகைச்சுவைத் துணுக்காகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.


சுவையான கற்பனை!


இந்தப் பின்னணியில்தான், வேலையே செய்யாமல் அனுபவிக்கலாம் என்று மஸ்க் சொன்னது விவாதக் களத்திற்கு வந்திருக்கிறது. உண்மையாகவே, வேலை செய்யாமல் விருந்து சாத்தியமா? உழைப்புக்கும் பணத்திற்கும் தேவையின்றிப் போய்விடுமா? அவரவரும் தத்தமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வேலை செய்வார்கள், அடிப்படைத் தேவைகளுக்காக உழைக்க வேண்டியிருக்காது என்ற சோதிடம் நம்பக்கூடியதா?


மஸ்க்கின் இக்கருத்து ஒரு தொலைநோக்குக் கனவாக, சுவையான கற்பனையாக உற்சாகமூட்டுவதாக அமையுமேயன்றி, குறுகிய காலத்தில் மெய் நடப்பாவதற்கு வாய்ப்பே இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். குறைந்தது அடுத்த 70 ஆண்டுகளில் அதற்கான அறிகுறியே இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். வல்லுநர்களை விடுங்கள், நடைப்பயிற்சிக்காகப் பூங்காவுக்கு வருகிறவர்களுடன் உரையாடுகையில் மஸ்க்கின் கருத்து பற்றிய பேச்சு வந்தபோது, “உழைக்காம சாப்பிடுறது உடம்புல ஒட்டாது,” என்றார்கள்.


                                        டிரம்ப், மஸ்க்

இது பற்றி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது (டிசம்பர் 2). “பணம் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. அது, நீ விரும்புவது உன்னிடம் வந்து சேரும் என்ற மஸ்க் வாக்கு பலிப்பதைத் தடுக்கிறது. ஆசைகள் எல்லாம் குதிரைகளாக மாறுமானால், அவற்றை எங்கே மேய்ச்சலுக்கு விடுவது? அவற்றின் சாணத்தை யார் அப்புறப்படுத்துவது,” என்று அந்தத் தலையங்கம் கேட்கிறது. “ஆசைகள் குதிரைகளாக மாறினால் பிறகு பிச்சைக்காரர்கள்தான் சவாரி செய்வார்கள்” என்ற ஆங்கிலப் பழமொழியை இப்படி நாசூக்காக மாற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களேயானாலும் வரம்புக்கு உட்பட்டவைதான் என்கிறபோது, இத்தகைய ஆசைகள் எப்படி நிறைவேறும் என்பதைத்தான் இப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

உழைப்பால் உருவான இனம் உழைப்பே இல்லாத சமுதாயம் சாத்தியமா? இயற்கையான பொருள்களைப் பறித்தும் வெட்டியும் தோண்டியும் எடுத்துப் பயன்படுத்திய உழைப்புச் செயல் தொடங்கியதால்தான், முதுகெலும்புள்ள ஒரு பாலூட்டி இனங்களில் ஒன்றாக இருந்தது, அறிவார்ந்த மனித இனமாகப் பரிணமித்தது. உழைப்பின் புதுப்புது வடிவங்களில்தான் சமுதாயம் நாகரிகமடைந்தது. உழைப்புச் செயல் ஓய்ந்துவிட்டால் என்னாகும்? பூமியில் டைனோசர்களுக்கு நேர்ந்தது மனிதர்களுக்கும் நேர்ந்துவிடும்.


வருவாய்க்கான வழி மட்டுமல்ல!

விருப்பத்தோடு செடி வளர்க்கும் வேலையைச் செய்தால் போதுமென்ற நிலை இப்போது வருவதாகவே வைத்துக்கொள்வோம். தேவையான பொருள்கள் ஏராளமாக உற்பத்தியாவதாகவும் வைத்துக்கொள்வோம். அவற்றைச் சமச்சீராக அனைவரிடமும் கொண்டுசேர்த்தாக வேண்டும். அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோக அமைப்பு இருந்தாக வேண்டும். பணம் கைமாறாமல் இதெல்லாம் சாத்தியமில்லை. எவரிடமும் பணம் இல்லாத நிலையில் வளங்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை சிலரிடமே குவியும். இப்போதே அவ்வாறு சிலரிடம் வளங்கள் குவிந்திருப்பதுதான், எல்லா ஏற்றத் தாழ்வுகளுக்கும் மூலகாரணம்.


பணம் கைவிடப்பட்டு வளங்கள் ஒரு சிலரிடம் குவியுமானால், அது புதிய சர்வாதிகாரத்துக்குத்தான் அரியாசனம் போட்டுத் தரும். எதுவும் கொடுக்காமல் தானாக எதுவும் வீடு தேடி வந்துவிடாது. ஒரு காலத்தில் அரிசியைக் கொடுத்து அங்கியை வாங்குவது என்ற பண்டமாற்று முறை இருந்தது. தோராயமாக 2,600 ஆண்டுகளுக்கு முன் உலோக நாணயங்கள் வந்தன, பின்னொரு 600 ஆண்டுகள் கழித்து காகிதப் பணம் வந்தது. நாம் எந்த மதிப்புக்குப் பணம் கொடுக்கிறோமோ, அந்த மதிப்புக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவாதம் இருப்பதால்தான் அது செல்லுபடியாகிறது.


 அந்தப் பணத்தைப் பெறுவதற்காகத்தான் மக்கள் வேலை செய்கிறார்கள். முதலாளிகளும் அந்தப் பணத்தைப் பெறுவதற்காகத்தானே உற்பத்திச் சரக்குகளைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்? முந்தாநாள் பண்டமாற்று இருந்தது. நேற்று பணம் வந்தது; இன்று கண்ணால் காண முடியாத மின்னிலக்க ரொக்கம் வந்திருக்கிறது; நாளை வேறொன்று வரலாம்; எது போய் எது வந்தாலும், ஏதோவொரு வடிவத்தில் பணத்தின் இருப்பு தொடர்ந்திருக்கும். அதைப் பெறுவதற்கான உழைப்பும் தொடர்ந்திருக்கும். பொருளாகவோ பணமாகவோ எதையேனும் கொடுக்காமல் எதையும் பெறக்கூடிய எதிர்காலம் நிகழ்காலத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் காணவில்லை.

வேலை ஒரு வருவாய் வழி மட்டுமல்ல, அது மற்ற மனிதர்களுடனான சமூகத் தொடர்பு ஊடகம். வேலை நீக்கப்பட்டால் அந்தத் தொடர்பு அறுந்து தனிமைப்படுவார்கள். அப்போது மனித மனம் உழைக்காமலே கிடைப்பதை நுகர்ந்து களித்திருப்பதை விரும்புமா, அல்லது உழைத்து ஊரோடு உறவாடி வாழ்ந்திருப்பதை நாடுமா?

செயற்கை நுண்ணறிவில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வளங்களுக்கு மனித உழைப்பும் தொடர்பும் தேவை. இவை முற்றிலுமாகத் தானியங்கி மயமாவது அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் சிக்க வைத்துவிடும்.

 

8.30 கோடி வேலைகள் ஒழிக்கப்படும்!


பிறகு ஏன் எலான் மஸ்க் உழைப்பு தேவைப்படாத எதிர்காலம் வருமென நம்புகிறார்? உண்மையில் அவர் அப்படி நம்மைத்தான் நம்ப வைக்க முயல்கிறார். எதற்காக? 

ஏஐ முதலான அறிவியல் கொடைகளை அடங்காத லாப வேட்கைக்காகக் கைப்பற்றுகிற பெருநிறுவனங்களால் உலகெங்கும் மிரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தானியங்கிப் புகுத்தலால் 2023-ல் தொடங்கிய வேலையிழப்புகள், 2027-ல் ஒரு உச்சத்தைத் தொடவிருக்கின்றன.

இந்த ஐந்தாண்டுகளில் 8.30 கோடி வேலைகள் ஒழிக்கப்படும். இதே ஐந்தாண்டுக் காலத்தில், ஏஐ சார்ந்து 6.90 கோடி புதிய வேலைகள் உருவாகும்தான். ஆனால், 1.40 கோடி வேலைகள் போனது போனதுதான். மேலும், தரவுகளைப் பதிவு செய்கிற கணக்கர், எழுத்தர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கும். இதனை உலக பொருளாதார மன்றம் (WEF) தெரிவிக்கிறது.


                                        வேலை

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) தனது அறிக்கையில் (2023), வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் ஏஐ, ரோபோ ஆதிக்கத்தால் நிர்வாகம், அலுவலகம் சார்ந்த வேலையிழப்புகள் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கிறது. அமெரிக்கா, கனடா. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முழுவதுமாகத் தானியங்கி மயமாக்கப்பட்டுவிட்டன.

ஆகவே, அங்கெல்லாம் இவ்வகை வேலைகளில் பெருமளவுக்கு இழப்பு ஏற்படும். வளரும் நாடுகளில் இன்னமும் அந்த அளவுக்குத் தானியங்கி மயமாக்கப்படவில்லை, ஆகவே, வேலையிழப்பும் குறைவாகவே இருக்கும் என்கிறது ஐஎல்ஓ. அதிகமாகப் பறிபோகும் பணிகளில் பெரும்பாலானவை பெண்கள் ஈடுபடும் வேலைகளாக இருக்கின்றன. அதற்கடுத்ததாக இளைஞர்களின் வேலைகள் என்று ஐஎல்ஓ சுட்டிக்காட்டுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் கார்ல் பெனெடிக்ட் ஃப்ரே, மைக்கேல் ஆஸ்போர்ன் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 2013-ல் தங்களின் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அமெரிக்காவின் வேலைகளில் சுமார் 47% அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் தானியங்கியலால் நீக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அந்த இருபதாண்டுக் காலத்தில் முதல் பத்தாண்டுகள் ஏற்கெனவே கடந்துவிட்டன. இவர்களது இந்த அறிக்கைதான் ஏஐ கருவிகளும் ரோபோ எந்திரங்களும் புகுத்தப்படுவது குறித்த விவாதங்களுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தது எனலாம்.

காலியாகும் சிறுகுறு தொழில்கள்!

வேலையிழப்பு என்றால் தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் மட்டுமல்ல. மகா நிறுவனங்கள் பணபலத்தோடு அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உழைப்பாளிகளை வெளியேற்றி லாபத்தை வேட்டையாடுகிறபோது, அதில் சிறுதொழில், குறுந்தொழில் முனைவோரும் சிக்கிக்கொள்கிறார்கள்.


ஊருக்குள் கடனாளியாகி மூடப்படும் பல நடுத்தர, சிறு, குறு தொழிற்கூடங்கள் இந்த வேட்டைக்கு இரையானவைதான். இத்தகைய நிலைமைகள் எண்ணற்றோரின் சொந்த அனுபவமாகிறபோது எந்த அளவுக்குக் கொந்தளிப்புகள் ஏற்படும் என்று எவரும் முன்னுணரலாம். அதில் தண்ணீர் ஊற்றி அணைக்கிற உத்திதான் மஸ்க்கின் ஆரூடம். உழைப்பை உதாசீனப்படுத்தும் நிகழ்ச்சிப்போக்கை அவர், உழைப்பே தேவைப்படாத வளர்ச்சிப்போக்காகக் காட்ட முயல்கிறார். மார்க்ஸ்சும் மஸ்க்கும் இப்படிப்பட்ட கூற்றுகளை விமர்சிக்கிறவர்கள் இந்த லாப வேட்டை வட்டாரத்தைக் கண்டுகொள்வதில்லை.


ஏற்கெனவே பார்த்த தலையங்கம், மஸ்க்கின் கருத்தை, ஒருபோதும் நனவாக மாறாத கனவென்று தள்ளுபடி செய்கிறது. அத்தோடு நிற்கவில்லை, ஒருபடி மேலே போய் அல்லது கீழே இறங்கி, மஸ்க்கின் கனவை, சமுதாய மாற்றத்திற்கான அறிவியல்பூர்வமான செயலாக்கத் தத்துவத்தை வழங்கிய கார்ல் மார்க்ஸ் லட்சியத்தோடு ஒப்பிடுகிறது. “எலானின் வேலைக்குப் பிந்தைய கனவுலகம் அவரை மார்க்ஸ் கூட்டாளியாக்குகிறது. அவரைப் போலவே இவரும் தன் கனவு நனவாவதைப் பார்க்கப் போவதில்லை,” என்று தலையங்கத்தின் துணைத்தலைப்பு சொல்கிறது. உள்ளே, “மஸ்க் தனது கனவின் பாட்டன் மார்க்ஸ் என்றும், அன்பான மாமன் கீன்ஸ் என்றும் தெரிந்துகொள்ளட்டும். அவர்களது முகாமில் தன்னை வைத்துப் பார்ப்பதை அவர் விரும்ப மாட்டார்,” என்று இருக்கிறது.

தலையங்கத்தின் தலைப்பே ‘கார்ல் மஸ்க்’ என்று சுரண்டல் எதிர்ப்புப் போராளிக்கு நிகராக சுரண்டல் கோட்டை அதிபதியை வைக்கிறது. போன நூற்றாண்டின் முக்கியமான பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ். சுதந்திரமான பொருளாதாரக் களத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற முதலாளிய வாதத்தை நிராகரித்தவர்.

நெருக்கடிகளின்போது அரசாங்கம் தலையிட்டு செலவினங்களை அதிகரித்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், தொழில்–வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டவர். முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டல் அமைப்பைப் பாதுகாத்துக்கொண்டே, காயத்திற்கு ஒத்தடம் கொடுக்கிற கோட்பாடுதான் அவருடையது. ஆயினும் உடனடி நிலைமைகளில் அந்த ஒத்தடமும் தேவைப்படத்தானே செய்கிறது? அவருடைய கண்ணோட்டத்தையும் கனவென்று தள்ளுகிறது மேற்படி தலையங்கம்.

மார்க்ஸ் என்ன சொல்கிறார்?

பொன்னுலகம் கனவல்ல இழப்பதற்கு அடிமைச் சங்கிலியைத் தவிர வேறேதும் இல்லாததையும், அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருப்பதையும் காட்டி, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட அறைகூவல் விடுத்தவர் காரல் மார்க்ஸ். 19-ம் நூற்றாண்டில் தனது கடும் உழைப்பாலும் தெளிந்த பார்வையாலும் ‘மூலதனம்’ நூலை உருவாக்கி உலகுக்கு வழங்கியவர். அதில் அவர் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். புதிய நுட்பங்கள் வரலாறு சார்ந்தவை, முற்போக்கான வளர்ச்சியாக வருபவை என்று அங்கீகரிக்கிறார்.


நவீன எந்திரங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகின்றன, அதே வேளையில், தொழிலாளர்கள் அறியாமலே அவர்களுடைய உழைப்பு சக்தியை உரிய அளவுக்கு மேல் உறிஞ்சுவதற்கு வழி செய்கின்றன என்று வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். உழைப்புச் சுரண்டலிலிருந்து கிடைக்கும் உபரி மதிப்புதான் முதலாளியின் உண்மையான லாபம் என்று, அதுவரையில் வேறு எந்தப் பொருளாதார மேதையும் காணத் தவறிய ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்கிறார்.

சுரண்டலற்ற பொதுவுடைமைச் சமுதாயத்தின் மலர்ச்சியில், உணவு உடை மருந்து குடியிருப்பு என, உயிரோடு இருப்பதற்குரிய கட்டாயத் தேவைகளை அடைவதற்காக உழைத்தாக வேண்டுமென்ற என்ற இன்றைய நிலவரம் மறைந்துவிடும்; கல்வி, கலை, குடும்பம், பயணம் என வாழ்க்கையைச் சுவைப்பதற்காக உழைக்கிற பண்பாடு உருவாகிவிடும் என்ற திட்டவட்டமான மாற்றத்தையும் முன்னுரைக்கிறார். அப்படியிருக்க, அவர் ஏதோ உழைக்காமலே உண்ணலாம் என்ற கனவை விதைத்தது போல் அந்தத் தலையங்க ஆசிரியர் சித்தரிப்பதை என்னவென்பது?


 இந்தியாவைப் பற்றித் தப்புத்தப்பாக எழுதியிருக்கிறார் என்று மார்க்ஸ் பற்றிய தப்பான சித்திரத்தைத் தீட்டுவது ஒருபகுதியினருக்கான அரசியல் பொழுதுபோக்காக இருக்கிறது. அந்த “டிரெண்ட்” இந்தத் தலையங்கத்திலும் தொடர்கிறது போலும். ஆனாலும் இது நல்லதுக்குத்தான் – மார்க்ஸைத் தேடவும் தெரிந்துகொள்ளவும் தூண்டுகிறார்களே!

ஏஐ, ரோபோ, தானியங்கி என அளவுக்கு மேல் போனால், மக்கள் வேலையும் பணமும் இல்லாதவர்களாகத் தள்ளப்பட்டால் என்ன நடக்கும்? உழைப்பாளிகள் பொங்கியெழுவார்கள். அது ஒருபுறம் நிகழ்ந்திருக்க, மறுபுறம் வேறொன்றும் நடக்கும். உழைக்கும் மக்கள்தான் அடிப்படையான சந்தைத் திரள் என்கிற நிலையில், வேலையிழப்பால் வருமானத்தை இழக்கிறபோது, அவர்களால் எதையும் வாங்க இயலாமல் போகும். அப்போது முதலாளிகள் தங்கள் உற்பத்திகளை யாரிடம் விற்பார்கள்? அவர்களே தின்று, அவர்களே உடுத்தி, அவர்களே வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பார்களா?


இந்த நிகழ்வுப் போக்கில் முதலாளித்துவமே முட்டுச்சந்தில் நிற்கும்! உழைப்பே தேவைப்படாமல் போய்விடும் என்பவர்கள் முதல், உழைப்புச் சுரண்டலில்லா சமுதாய மலர்ச்சியை நிறைவேறாக் கனவு என்கிறவர்கள் வரையில் இதைப் புரிந்துகொண்டாக வேண்டும். பொது அறிவுக்காக மட்டுமல்ல, அவர்களுடைய நலன்களுக்காகவுமே கூட!

[0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பில (டிசம்பர் 6) எனது கட்டுரை

 


 

Tuesday, 2 December 2025

கோடா: செவித்திறன் இழந்தோரின் செல்ல மகள்

 ஓடிடி மேடையில் உலக சினிமா:


மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பேசும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. அவற்றில் ஒரு மாற்றுப் படம் ‘கோடா’ (ஆங்கிலம், 2021). பல்வேறு விருதுகளை வசப்படுத்தியுள்ள இந்தப் படம், ஒரு மகளின் கதை வழியாக மாற்றுத் திறனாளிகளின் உலகத்திற்குள் கொண்டுசெல்கிறது.


‘சைல்ட் ஆஃப் டெஃப் அடல்ட்ஸ்’ (செவி கேளாப் பெரியவர்களின் குழந்தை) என்ற சொற்களின் முதல் எழுத்துகளிலிருந்து உருவாகிப் புழக்கத்தில் இருக்கும் பதம் ‘கோடா’. இன்னொரு புறம், கோடா என்றால் இசைக் கோர்ப்புக்கான நிறைவுச் சேர்ப்பு என்று பொருள்.

ரூபி ரோஸி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் க்ளவ்செஸ்டர் என்ற கடலோர மீன்பிடி நகரைச் சேர்ந்தவள். நடுக்கடல் சென்று மீன்பிடிப்பில் ஈடுபடும் தகப்பன் ஃபிராங்க், தாய் ஜாக்கி, அண்ணன் லியோ மூவருமே காது கேளாதவர்கள். ஆகவே வாய் பேசவும் இயலாதவர்கள். அன்றாட வாழ்விலும் தொழிலிலும் மற்றவர்களோடு பேச்சு நடத்துவது, பேரம் பேசுவது, மருத்துவர் ஆலோசனை கோருவது அனைத்திலும் அவர்களுடைய குரலாக ஒலிப்பவள் 17 வயது ரோஸிதான்.

தொழிலுக்கு அப்பால், அவளுக்குள் பாட்டுப் பாடுவதில் ஒரு காதல் இருக்கிறது. பாடிக்கொண்டேதான் வேலைகளைச் செய்வாள் – பெற்றோரையும் உடன் பிறந்தவனையும் தவிர மற்றவர்களுக்குத்தான் அது கேட்கும். பள்ளிக்கூடப் பாடகர் குழுவில் இணைகிறாள். அங்கே குடும்பத்தினரின் இயலாமையைச் சொல்லிக்காட்டி அவமதிக்கிறார்கள். சோர்வடைகிறவளுக்கு ஊக்கமாக அமைகிறார் அன்பும் கறாருமான இசையாசிரியர் பெர்னார்டோ.

அவளுக்குக் குழுவில் மற்றொரு பாடகன் மைல்ஸ் உறுதுணையாக இருக்கிறான். இருவரையும், இணைப் பாடகர்களாக வளர்த்து முக்கிய இசைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவும், பெரிய இசைக் கல்லூரியில் சேர்க்கவும் பெர்னார்டோ தீவிரமாக முயல்கிறார்.

இசையின் மீதும் மைல்ஸ் மீதும் ஏற்படும் ஈர்ப்பால் ஒருநாள் குளத்தில் நீந்திக் களிக்கிற நிலையில், அவள் இல்லாமல் மீன்பிடிப்புக்குச் செல்லும் ஃபிராங்க்கும் ஜாக்கியும் லியோவும் நடுக்கடலில் காவல்படையின் எச்சரிக்கையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகச் சிக்கிக்கொள்கிறார்கள். மொழிபெயர்க்க ஆளின்றி நடவடிக்கைக்கு உள்ளாகிறவர்களைப் போராடி மீட்கிறாள் ரோஸி.

அந்த நிகழ்வு, தன் இசைக் கனவுக்குத் தாழ் போட்டுவிட்டு அவர்களுக்குத் துணையாகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தூண்டுகிறது. இந்நேரத்தில் பெருமைக்குரிய இசைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு வருகிறது. ஆசிரியரும் காதலனும் அதை ஏற்க வலியுறுத்துகிறார்கள். பெற்றோர், தங்களுடைய கடந்த காலக் கசப்புகளின் நினைவுகளோடு, அவள் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடுமே என்று கலங்குகிறார்கள்.


இந்த நிலைமையில் கோடாவின் இசைக் கோர்ப்பு இறுதிச் சேர்ப்பு என்னவாகும் என்ற பதைப்பையும் பரிவையும் பார்வையாளர்களின் நெஞ்சங்களில் பதியமிடுகிறார் இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான சியான் ஹெடர்.

தங்களுடைய வாழ்வில் இசையல்ல, ஒலியே இல்லாதவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் புரிந்துகொள்கிறவள் ரோஸி. நண்பனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள். அங்கே பெற்றோரின் அறைக்கு உள்ளேயிருந்து வருகிற, அவர்களால் கேட்க முடியாத, கட்டில் ஓசையைக் கொண்டு நடப்பதைப் புரிந்துகொண்டு அவள் அந்தச் சூழலைக் கையாளுவதையும், அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதையும் வெறும் பாலியல் ரசனையெனத் தள்ளிவிட முடியாது.

‘தி ஃபெமில் பேலியர்’ என்ற பிரெஞ்சுப் படத்தின் கருவை எடுத்துக்கொண்டு அமெரிக்க மீன்பிடிக் குடும்பத்தின் கதையாக உருவமைத்ததில் சிறப்பான வெற்றியடைந்திருக்கிறார் ஹெடர். அந்த வெற்றி அவ்வாண்டின் சிறந்த தழுவல் படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது. ரோஸியின் தாயாக நடித்த ட்ராய் கோட்ஸுர் சிறந்த துணை நடிப்புக் கலைஞர் விருது பெற்றார். அவர் உட்பட, செவி மாற்றுத்திறனாளிகளாக மார்லி மாட்லின், டேனியல் டூரண்ட் ஆகியோரைத் தேர்வு செய்து, அவர்களின் வாழ்வியலை உண்மையாகவும் கலைநேர்த்தியோடும் திரைக்குக் கொண்டுவந்ததற்காகவும் ஹெடர் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றார். 2016இல், இவரது முதல் படமாக வந்த ‘டல்லூலா’ என்ற படமும் ஆதரவற்ற மூன்று பெண்களிடையே உருவாகும் உறவு பற்றிப் பேசி கவனம் பெற்றது.

‘அவங்க உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாங்கன்னா அவங்கதான் தப்புப் பண்றாங்க,” என்று தகப்பனும், “நான் பிறந்ததிலிருந்தே என்னைக் கேலி செய்கிறவங்களைத்தான் பார்த்துட்டு வர்றேன், அந்த நிலைமை உனக்கும் வரக்கூடாது,” என்று தாயும், “நம்ம குடும்பத்தில் உனக்கு மட்டும்தான் காது கேட்குது. நீ ஒருபோதும் தனிமையை உணர மாட்டாய், ஆனால் நாங்கள் தனிமையில் இருப்போம்,” என்று அண்ணனும் சொல்கிறார்கள். சைகை மொழியில் அவர்களும், பேச்சாகவே இசை ஆசிரியரும் நிகழ்த்தும் உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கின்றன.


போட்டிக்காக வந்த இடத்தில், வேறு யாரும் அனுமதிக்கப்படாத அரங்கில், எப்படியோ பெற்றோரும் சகோதரனும் நுழைந்து பால்கனியில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறாள் ரோஸி. அவர்களுக்கும் புரியும் விதத்தில் தன் பாட்டை சைகை கலந்து அவள் பாடுகிற காட்சியில் அந்தப் பாடலின் கவித்துவம் பிரதிபலிக்கிறது.

மீன்பிடிப்புத் தொழிலில் பெரிய கார்ப்பரேட்டுகளின் மோசடிகளைப் புரிந்துகொள்ளும் பிராங்க், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து அனைவரும் பயன்பெறக்கூடிய கூட்டுறவு சங்கம் ஒன்றைத் தொடங்குகிறான். இத்தகைய சித்தரிப்புகள், ஆப்பிள் ஓடிடி தளத்தின் வழியாக, ‘கோடா’ கதைக் களத்திற்கு நம்மை மேலும் நெருக்கமாக்குகின்றன.

[0]

‘செம்மலர்’ டிசம்பர் 2025 இதழில் எனது பதிவு

Monday, 1 December 2025

வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி

 


நாடக மேடை

நாடகத்தின் எதிர்காலம் பற்றிய அக்கறை உள்ளவர்களுக்கு ஒளிமயமான வார்த்தைகளை விடவும் மனநிறைவை அளிக்கக்கூடியது எது? இத்தகைய படைப்புகள் தொடருமானால் இந்தக் கலை கம்பீரமாக நடைபோடும் என்ற நம்பிக்கையை ஊன்றுகிற நிகழ்த்துகைதான் அதைச் செய்ய வல்லது. அப்படிப்பட்ட ஒருத்தியாக வந்திருப்பவள் தமுஎகச–வின் சென்னை கலைக்குழு உலாவ விட்டுள்ள ‘வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி’. பேச்சியும் பிள்ளைகளுமாக இந்த நவம்பரின் மறக்க முடியாததொரு மாலைப் பொழுதை ஆக்கிக் கொடுத்தார்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவார்ந்த, சுவையான ஒரு மாறுபட்ட சுற்றுலாவை அனுபவப் படுத்தும் எண்ணத்தோடு ஒரு காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் ஆசிரியர்கள். அருகிவரும் வன விலங்குகளைக் காண்பதும், அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதுமே பயணத் திட்டம். அந்தப் பக்கம் போகக்கூடாது, இதைத் தொடக்கூடாது, அதைப் பறிக்கக்கூடாது என்று ஏகப்பட்ட கூடாதுகள் விதிக்கப்படுகின்றன. நாமொன்று நினைக்க அவர்கள் ஒன்றைச் செய்வதுதானே குழந்தைகளின் இயல்பு?

தொலைவில் ஒரு பாறையடியில் குட்டிப் புலி ஒன்று எட்டிப் பார்ப்பதைக் கவனித்துவிடும் சிறுமி கௌரி, ஒரு சிறு கல்லை எடுத்து வீச, குட்டி பதுங்கிவிட, நண்பனிடம் அந்த சாகசகத்தைச் சொல்கிறாள். நம்ப மறுக்கும் சதீஷ் அதே போல் சிறு கல்லைப் பாறை மேல் வீசுகிறபோது வனக் காவலரிடம் பிடிபடுகிறார்கள். அவர்கள் செய்தது எப்படிப்பட்ட குற்றம் தெரியுமா என்று கண்காணிப்பாளர் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிக்க முயல, அந்த இரவில் இருவரும் காணாமல் போகிறார்கள்.

பிரச்சினை வேறு வடிவம் எடுக்கிற நிலையில் ஆசிரியர்களும் வனத்துறையினரும் அடர் இருள் காட்டுக்குள் குழந்தைகளைத் தேடிப் புறப்படுகிறார்கள். தகவல் தெரிவிக்கும் ஆசிரியரிடம் நிர்வாகம், “பசங்களின் பாடி கிடைக்கிறப்ப, ஸ்கூல் யூனிஃபார்மைக் கழற்றிவிட்டு கலர் டிரெஸ் போட்டுவிடுங்க,” என்று கட்டளையிடுகிறது! காட்டுமிராண்டித்தனம் எனப்படுவது எங்கே இருக்கிறது என்று உணர்த்துகிற அந்த இடத்திலிருந்து நாடகம் தடம் மாறுகிறது – அதாவது அழுத்தமான வேறு தடத்திற்கு.

நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக கௌரி, சதீஷ் இருவரும் காட்டுக்கு உள்ளே வெகுதொலைவுக்கு வருகிறார்கள். ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்திருக்கும் புதிய உருவத்தை நெருங்குகிறார்கள். அவர்கள் எதற்காக அங்கே வந்தார்கள் என்று அறிந்துகொள்ளும் அந்த உருவம் தன்னைப் போர்த்திக்கொண்டுள்ள கனத்த மேலங்கியை அகற்ற, மார்பிலும் முதுகிலும் பாய்ந்து செருகியிருக்கும் அம்புகள்! இத்தனை அம்புகள் தைத்தும் உயிரோடு இருப்பதைக் கண்டு வியக்கும் குழந்தைகளிடம் தன்னை வனப்பேச்சி என அறிமுகப்படுத்திக்கொள்கிறாள். வனப்பேச்சி என்றால் காட்டின் அரசி. ஒரு காட்டுக்குள் இருந்தாலும் இந்தப் பேரண்டத்திற்கே உரிய பேரண்டச்சி என்றும் தன்னைச் சொல்வார்கள் என்கிறாள்.



தனக்கு “ராட்சசி” என்ற பெயர் இருப்பதையும் தெரிவிக்கிறபோது குழந்தைகள் பயந்து போகிறார்கள். ராட்சசி என்றால் குழந்தைகளைப் பிடித்துப் பிய்த்து வாயில் போட்டு விழுங்கிவிடுவாள் என்று கேட்டுவந்திருக்கிறார்களே! புன்னகையோடு, “இப்படித்தான் என்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். ரட்சை என்றால் காப்பு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் ராட்சசி. அப்படியென்றால் காப்பவள் என்று பொருள்,” என்று வனப்பேச்சி பெயர் மூலம் பற்றி வகுப்பெடுக்கிறாள். “இனியேனும் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் கதைகளைச் சொல்லாதிருப்பீர்களாக,” என்று பெரியவர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் அது.

அவள் வனத்தையும் வனவாழ் மக்களையும் பிற உயிர்களையும் தலைமுறை தலைமுறையாக ரட்சித்து வருகிறவள். அவளுடைய உடலில் அம்புகள் பாய்ந்திருப்பது எதனால்? எவரால்? ராட்சசி தன் கதையைக் குழந்தைகளுக்கு விவரிக்க விவரிக்க, வனங்களை ஆக்கிரமிக்க வந்தவர்கள் ஆதிக்குடிகளை அப்புறப்படுத்திய வஞ்சகங்கள் அரங்கேறுகின்றன. வஞ்சகங்களுக்கு இதிகாச நாயக சாகச முலாம்கள் பூசப்பட்ட அத்தியாயங்கள் கிழிகின்றன. அரச நெறியில் நின்று, முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்து தாக்கும் அறமீறலைச் செய்ய இளவரசன் ராமன் தயங்கியபோது, அவனுடைய வில்லிலிருந்து அம்பை குருநாதரே உருவியெடுத்துத் தாடகையின் முதுகில் தானே செலுத்துவதாக, மறுவாசிப்புப் படைப்பாக்குகிறார் நாடகத்திள் பனுவலர், நெறியாளுகையாளர் பிரளயன்.

வரலாறு நெடுகிலும், ஆதிக்குடிகளை எங்கேயாவது வெளியேற்றிவிட்டுக் கனிமங்களையும் வன வளங்களையும் கார்ப்பரேட் கனவான்கள் சூறையாடுவதற்காகத் தாடகைகளின் முதுகில் குத்தப்படும் இன்றைய அம்புகள் வரையில் அத்தியாயங்களை விரிக்கிறாள் வனப்பேச்சி. ஒரு நல்ல கதை தன்னைச் சொல்லிக்கொள்ளாது, தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் என்ற இலக்கியக் கோட்பாடு ஒன்று உண்டு. நாடக இலக்கியமாகப் படைத்திருக்கும் பிரளயனின் ஆக்கத்தை நடத்தியும் நடித்தும் காட்டுகிறார்கள் குழுவின் கலைஞர்கள்.



“மறைந்திருந்து தாக்குவதுதானே உங்கள் மரபு? இப்போதென்ன நீங்களே நேரடியாகத் தாக்க வருகிறீர்கள்?” –வரலாற்றுத் தடயங்களைக் கொண்ட இந்த வசனம் ரோகிணியின் நாமொழி உச்சரிப்பாலும் உடல்மொழிச் சித்தரிப்பாலும் உயிர்ப்புப் பெறுகிறது. தாடகையாகிய, ராட்சசியாகிய, வனப்பேச்சியாகிய பேரண்டச்சியாக ரோகிணி இப்படியொரு கதாபாத்திரத்திற்காகவே காத்திருந்தது போல உணர்வும் உழைப்பும் நிறைந்து தளும்பும் நடிப்பை வழங்குகிறார். அல்லது, ரோகிணிக்காக வனப்பேச்சிதான் காத்திருந்தாளா?

ஆசிரியர்களாக, பள்ளிக் குழந்தைகளாக, வன அலுவலர்களாக, பழங்குடிகளாக, இதிகாசப் பாத்திரங்களாக கவின் மலர், வெண்மணி, அமலா மோகன், சதீஷ், சாரதா, சரண்யா, ஷ்ருதி, ஜோஸஃபைன், ருக்கு, பிரியதர்ஷினி, அசோக் சிங், மணி சுந்தரம், விதூர் ராஜராஜன், சரண் சந்தோஷ், முகிலன், பிரவின், பிரேம், ராம், சுஜய், பிரேம்நாத், பாரி ஆகியோர் கதையோட்டத்தின் பதைப்புகளையும் செய்திகளையும் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்துகிறார்கள். முன்னொரு காலத்திய நாடகக்காரனாக எனக்கு, அந்த மேடையில் சும்மாவாவது இங்கும் அங்கும் நடக்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கலாமே என்ற சன்னமான ஏக்கம் எனக்கு ஏற்பட்டது!

சென்னை மியூசிக் அகடமி அரங்கின் அந்த அகன்ற மேடையில் ஒரு சின்ன இடத்தையும் விடாமல் கலைஞர்கள் தங்கள் நடன அசைவுகளால், நடமாட்டத்தால், நடிப்புப் போட்டியால் நிறைத்தார்கள், அதைப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் எண்ணம் – மேடை ஆளுகையில் தனித்துவமான தேர்ச்சியுடன் இவர்கள் எங்கேயோ வந்துவிட்டார்கள்.


நடிப்புப் பயிற்சி அளித்ததில் விதூர் ராஜராஜன், மெலடி டோர்சஸ், பழங்குடியினர் அசைவுகளில் ரேணுகா சித்திக், படைப்பாக்க அசைவுகளில் கிருஷ்ணா தேவநந்தன், ஒப்பனையில் சிவா, உடைகள் தேர்வில் சாய், மேடைப் பொருள்களில் அறிவழகன், ஒலியமைப்பில் ஆலம் ஷா, ஒளியமைப்பில் ஷைமன் செலாட் என ஒவ்வொருவரின் ஒத்திசைவும் குறிப்பிடப்பட வேண்டியது. மகிழினி மணிமாறன், மணிமாறன், கவின் மலர், அமலா மோகன் பாடல்கள் அந்த ஒத்திசைவின் குரலாக இணைகின்றன. மணிமாறன், நிஷோக் தாளங்கள் உடன் இழைகின்றன. ஷாஜஹான் விசைப்பலகை மீட்டல்கள் பின்னணியாக இசைகின்றன.

நாட்டின் கலாச்சார மரபு மீட்பு என்ற போர்வையில், பழைய பாகுபாட்டுக் கட்டுக்கதைகளுக்கு முட்டுக்கொடுக்கும் புதிய தந்திரங்களுக்கு ஒரு வலுவான கலைக்கள எதிர்வினைதான் ‘வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி’. கதைக் கருவால் காட்சிகள் பொலிவடைகின்றனவா, காட்சியமைப்புகளால் கதைக் கரு உயிர்பெறுகின்றனவா? இந்தக் கலையின்ப மயக்கத்தில் மூழ்கித் திளைக்க விரும்புவீர்களானால் உங்கள் வட்டாரத்திற்கு வனப்பேச்சியை வரவழைத்து சாத்தியமாக்கிக்கொள்ளுங்கள்.


[0]

-‘செம்மலர்’ டிச ம்பர் 2025 இதழில் இந்நாடகம் பற்றிய எனது வெளிப்பாடு.

Wednesday, 26 November 2025

பி.ஆர்.கவாயின் ஆகச் சிறந்த செயல் - சாதியப் பாறையில் உளிகளைப் பாய்ச்சும் ஓர் அறிக்கை!

 


ந்தியாவின் ஈடற்ற இழிவாக சாதிப் பாகுபாடு இருக்கிறது. அதை ஒழித்துக்கட்டுவது என்பது சில தலைவர்களின் முழக்கமும், இயக்கங்களின் கொள்கையும் மட்டுமல்ல... நாட்டின் சட்டங்களுக்கெல்லாம் அடிவாரமாகிய அரசமைப்பு சாசனத்தின் ஒரு மையமான லட்சியமுமாக அது இருக்கிறது. அதை அடைவதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள ஒட்டுமொத்தப் பயணத்தில் நீதித்துறையின் செயல்பாடு தலையாய ஒன்று.

சாதியக் கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் நீதிமன்றங்கள் பல முன்னுதாரணத் தீர்ப்புகளை அளித்திருக்கின்றன. பல வழக்குகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான ஆணைகளையும் நீதிமன்றங்கள் பிறப்பித்திருக்கின்றன. இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.


பி.ஆர்.கவாயின் சிறந்த பணி!


உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், எவரும் எடுத்துப் படிக்கத்தக்க வகையில், நவம்பர் 2025 ஆவணங்களில் ஒன்றாக இந்த அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றங்களில் சாதி பற்றிய கருத்துகள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை ஆராய்கிறது. இனி என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் அது முன்வைக்கிறது. தலைமை நீதிபதியாக இருந்த பூஷன் ராமகிருஷ்ண கவாய் பணி ஓய்வுபெறுவதற்கு முன் மேற்கொண்ட ஆகச் சிறந்த ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.


உச்ச நீதிமன்றத்தின் ‘ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம்’ (சி.ஆர்.பி) இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது.


1) நீதித்துறையின் சேவைகளில் தொடரும் சாதி சார்ந்த, காலனியாதிக்கக் கால பதவிப் படிநிலைகளுக்கு மாற்றாக, கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நடுநிலையான சொற்களால் அடையாளப்படுத்துதல்.

2) நீதித்துறையின் சாதி குறித்த கருத்தாக்கங்கள்.

3) பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்கான வழிகாட்டி.

4) உயர் நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களிலும் சட்ட ஆராய்ச்சியாளர்களை நியமித்தல்.

5) நீதிமன்ற எழுத்தர்களுக்கும் ஆராய்ச்சி உதவியாளர்களுக்குமான கையேடு.

6) பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தொடர்பான வெள்ளையறிக்கை.

7) செயற்கை நுண்ணறிவு பயன்பாடும் நீதிமன்றச் செயல்பாடும் குறித்த வெள்ளையறிக்கை.

8) சட்ட உதவிப் பாதுகாப்புக் குழுக்களுக்கான பயிற்சிமுறைத் தொகுப்பு.

9) சிறைச்சாலைகளில் மனித உரிமை அடிப்படையிலான சீரமைப்புகளுக்கான வரைபடம்.

10) குழந்தை உரிமைகளும் சட்டங்களும் பற்றிய கையேடு. இப்படியாக, பத்து சி.ஆர்.பி அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.


சாதி, தகுதி, சமத்துவம்!


பொதுவாக, நீதித்துறையில் சமூகநீதி எந்த அளவுக்குச் செயல்படுகிறது என்ற கேள்வி நெடுங்காலமாகத் தொடர்கிறது. உயர்சாதி என்பதாகக் கூறிக்கொள்ளும் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே உயர்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளாவது ஏன் என்று கேட்கப்பட்டு வந்திருக்கிறது. மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவதாலும், அங்கெல்லாம் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருப்பதாலும், அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் உறுதியாகியிருக்கிறது.

தலைமை நீதிபதி பொறுப்பில் பி.ஆர். கவாய் இருந்த ஆறு மாத காலத்தில், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 10 பேர், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 11 பேர் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அவரே, புத்த மதம் சார்ந்த தலித் சமூகத்திலிருந்து முதல் முறையாகத் தலைமை நீதிபதியானவர்தான். அவர் தலைமையிலான தேர்வுக் குழாம் (கொலீஜியம்) 129 பேர்களைப் பரிந்துரைத்தது. அவர்களில் 15 பெண்கள், 13 சிறுபான்மை மதத்தினர் உட்பட 93 பேர் நியமனம் பெற்றார்கள். மற்றவர்கள் ‘உயர்’ பிரிவினர்தான் என்றாலும், இதுவொரு குறிப்பிடத்தக்க முன் நகர்வேயாகும்.

இத்தகைய பின்னணியில்தான், நீதித்துறையின் கண்ணோட்டங்களிலும் செயல்முறைகளிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக, ‘நீதித்துறையின் சாதி குறித்த கருத்தாக்கங்கள்’ பற்றிய அறிக்கை வந்திருக்கிறது.

சி.ஆர்.பி இயக்குநர் அனுராக் பாஸ்கர், மெல்போர்ன் சட்டக் கல்லூரி பேராசிரியர் ஃபர்ரா அஹமது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்சியாளர் பீம்ராஜ் முத்து, மையத்தின் ஆலோசகர் சுபம் குமார் ஆகிய நான்கு பேர் கொண்ட குழு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.




இந்தக் கருப்பொருளில் உச்ச நீதிமன்றக் குழுவின் ஆய்வறிக்கை வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி வந்துள்ள அரசமைப்பு சாசனம் சார்ந்த தீர்ப்புகளில் சாதி, தகுதி, சமத்துவம் ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளை இந்த அறிக்கை ஆராய்கிறது. 63 பக்கங்களில் குழுவினர் சுட்டிக்காட்டுகிற சில முக்கியமான காட்சிகளைக் காண்போம்.

நீ

திமன்றத்தில் முரண்பாடான மொழி பயன்படுத்தப்படுவதையும், சமூக முத்திரை குத்தப்படுவதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல தீர்ப்புகள், பாகுபாடுகள் மலிந்த சமுதாயத்தின் உண்மை நிலையைப் பிரதிபலித்துள்ளன. அவற்றை மாற்றுவதற்கான உந்துதலை அளித்துள்ளன. அதே வேளையில் பல தீர்ப்புகள், சாதியமைப்பு பற்றி எழுதப்பட்ட பழைய சாத்திரங்களும் பாரம்பர்யமான கதைகளும் சொல்கிற விதிகளை எதிரொலிப்பதாகவும் இருந்திருக்கின்றன என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தவறான சொல்லாடல்கள்!

சில நீதிபதிகள், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பற்றிக் கூறுகிறபோது, ஏற்கெனவே சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிற கருத்துகளைப் படியெடுப்பது போலத் தாங்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சமத்துவம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல், தவறான சொல்லாடல்களை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் ஒரு சட்டபூர்வ உரிமையாகிய இட ஒதுக்கீடு பற்றிக் கூறும்போது, அதனை ஓர் “ஊன்றுகோல்” என்று வர்ணித்திருக்கிறார்கள். இந்த மேலோட்டமான வர்ணனை, இட ஒதுக்கீடு நியாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. அந்த மக்களுக்கு ஒரு பரிவான ஏற்பாடு என மற்ற சமூகங்களின் பெருந்தன்மை போல முன்வைக்கிறது. சம உரிமை என்ற அரசமைப்பு சாசனக் கோட்பாட்டோடு பொருந்தாத சித்தரிப்பு இது.


 

அதே போல, இட ஒதுக்கீடு தேவைப்படுகிற பிற்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பழங்குடி சமூகங்களை விளையாட்டு மைதானத்தின் ஓட்டக் களத்தில் ஓடுகிறவர்களோடு ஒப்பிடும் வார்த்தைகளையும் நீதிபதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓட்டத்தில் பின்தங்கிய, ஊனமுற்றோரைப் போன்றவர்கள் என்று சித்தரித்திருக்கிறார்கள். அவர்கள் மீதான பரிவோடு பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக இது ஒலிக்கிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகளை மற்றவர்களோடு ஓட வைத்தது யார், அல்லது எது?

காலங்காலமாக முயல் – ஆமை ஓட்டப் போட்டிக் கதையைச் சொல்லி வருகிறோம். ஆனால், கதையின் கருத்து வேறு என்றாலும், ஆமையையும் முயலையும் ஒரே தளத்தில் ஓட வைத்தது சரியா என்ற கேள்வி அண்மைக் காலமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது ஈசாப் கதைகளில் ஒன்று என்பதால், அதை மாற்ற முடியாதுதான். ஆனால், மாறிவரும் சமுதாயத்தில் அந்தக் கதையும் மறுவாசிப்புக்கு உட்பட்டுதானே ஆக வேண்டும்? நீதிமன்றமும் மறுவாசிப்பு செய்யத்தானே வேண்டும்?


ஆகவேதான், ஆய்வுக் குழுவினர் இப்படிப்பட்ட சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுவதை, இழிவுபடுத்தி முத்திரை குத்தும் செயல் என்று விமர்சித்திருக்கின்றனர். ‘நீதிமன்றத்தின் இந்த மொழி, இடஒதுக்கீட்டாலும் பிற சமூக நீதி நடவடிக்கைகளின் மூலமாகவும் இழிவை நீக்குவதற்கு மாறாக, அதைத் தற்செயலாக மீண்டும் உருவாக்கிவிட்டது’ என்று அறிக்கை வாதிடுகிறது.


‘தகுதி’ என்ற மாயக் கருத்து!


சமூகநீதி தொடர்பான சில வழக்குகளில், ‘தகுதி’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. அது பெரும்பாலும் வரலாறு நெடுகிலும் சாதி அடிப்படையில் சமத்துவம் மறுக்கப்பட்டு வந்திருப்பதைக் கண்டுகொள்ளத் தவறுகிறது. அத்துடன், சாதிப் பாகுபாடுகளின் தாக்கத்தைப் புறக்கணிக்கும் வகையிலும் தகுதி வரையறுக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நீதிமன்றம் தனது தொடக்க காலத் தீர்ப்புகளில், சாதியைத் தொழில்களோடு தொடர்புபடுத்தப்பட்ட, இழிவுபடுத்துவதோடு இணைக்கப்பட்ட, பிடிவாதமாகத் தொடர்கிற, பரம்பரை சார்ந்த அமைப்பு என்று அங்கீகரித்திருக்கிறது. இருப்பினும், பிற்காலத்தில், ’தகுதி’ என்ற கருத்து ஆதிக்கம் செலுத்த அனுமதித்த செயல், இடஒதுக்கீடு கோட்பாட்டின் அழுத்தத்தை நீர்த்துப்போகச் செய்தது என்று அறிக்கை கூறுகிறது.

இன்றளவும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் ‘தகுதி’ என்ற மாயக் கருத்தைத்தான் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். அவர்களிடமிருந்து இந்தத் தகுதி மயக்க வாதம் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததா அல்லது, அங்கேயிருந்து வெளியே வந்து இவர்களிடம் சேர்ந்ததா?



                                        சென்னை உயர்நீதிமன்றம்


உச்ச நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு குறிப்பிடத்தக்கது. டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் எதிர் மகாராஷ்டிரா அரசு என்ற அந்த வழக்கில், 2018 மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பட்டியல் சாதியினர் – பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்தத் தீர்ப்பு அமைந்தது.

குறிப்பாக, புகார் செய்யப்பட்டவர் அரசாங்க அலுவலராக இருப்பாரானால், அவர்களது துறை சார்ந்த உயரதிகாரிகளின் முன் அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு கூறியது. சாதிய ஒடுக்குமுறை தொடர்பான வன்கொடுமை வழக்குகளில் சரியான தீர்ப்புக்கு உதவியாக இருப்பதே, குற்றம் சாட்டப்பட்டவர்களை யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் உடனடியாகக் கைது செய்யலாம் என்ற விதிதான்.

மேற்படி தீர்ப்பு, சட்டத்தின் நோக்கத்தையே முனை மழுங்கடிப்பதாக இருக்கிறது என்று தலித் அமைப்புகளும் பழங்குடியினர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. பல்வேறு அரசியல் கட்சிகளும் அந்த எதிர்ப்பில் இணைந்தன. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஒன்றியத்தின் நரேந்திர மோடி அரசு இறங்கி வந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட்டில் நாடாளுமன்றம் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற, உடனடிக் கைதுக்கான விதி மீட்டெடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது.

எம்.ஆர். பாலாஜி எதிர் மைசூர் மாநில அரசு என்ற வழக்கும் (1963) குறிப்பிடத்தக்கது. அன்றைய மைசூர் அரசு (1973 முதல் கர்நாடக அரசு) கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்தது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட அந்த வழக்கில், இட ஒதுக்கீட்டிற்கு சாதியை மட்டுமே ஒரு அடிப்படையாக வைத்துக்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும் கடும் விமர்சனங்களுக்கும், சமூகநீதிக் கொள்கையில் நீதித்துறை நிலைப்பாடு பற்றிய விவாதங்களுக்கும் இட்டுச்சென்றது.

பின்னாளில் இந்திரா சஹானி வழக்கில் (1992) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டப்படி செல்லும் என்று நிலைநிறுத்தப்பட்டது. அதே வேளையில், இட ஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இவ்வாறு 50 சதவிகிதம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான வரம்பை நிர்ணயித்தது தவறு, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கூடுதலாக இருக்கும் மாநிலங்களில் இந்த வரம்பை உயர்த்துவதற்கு ஏற்ப தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் இப்போதும் தொடர்கிறது.


தமிழ்நாட்டின் 69 சதவிகிதம்!

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் மொத்த அளவை 69 சதவிகிதம் வரையில் உயர்த்தி 1994-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசால் ஆணை வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றம் தனது முந்தைய ஆணையை விலக்கிக்கொள்ளாத நிலையில், அதே ஆண்டில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்த, நாடாளுமன்றம் நிறைவேற்றிய 76-வது சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.


1992-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்திய சமூக சேவகி பன்வாரி தேவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ‘மேல் தட்டினர்’ என்பதால், அப்படிப்பட்ட குற்றத்தை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி ஜெய்ப்பூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இன்றளவும் அந்தப் பெண் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சமூக அநீதி அத்தியாயங்களும் நிறைய இருக்கின்றன.


சாதியப் பாறையில் உளிகளாய்..!


இந்த அறிக்கை, எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய, மாற்றத்திற்கான சில முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது. சாதி தொடர்பான வழக்குகளைக் கையாளும்போது உணர்திறன் மிக்க, நிதானமான பதங்களைக் கையாள வேண்டும்; தரம் தாழ்த்தும் உருவகங்களைக் கையாளக் கூடாது; இந்தியச் சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்குத் தடைக்கல்லாக, ஒரு நீடித்த பிரச்னையாக சாதி இருப்பதை நீதிமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டும்; சமூகநீதி நடவடிக்கைகளின் கட்டாயத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும்; நீதிமன்றம் தனது சொந்த சொற்களஞ்சியத்தை ஆராய்ந்து சமூகநீதிக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் – ஆகியவை குறிப்பிடத்தக்க பரிந்துரைகளாகும்.




இந்தியாவின் சாதிய இறுக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் நீதிமன்றச் சூழலில், உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ள அதன் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தின் சாதியக் கருத்தாக்கங்கள் பற்றிய அறிக்கை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. சனாதனத்துக்கு எதிரானவர் என்று நீதிமன்றத்துக்கு உள்ளேயே காலணி வீசப்பட்டவரான தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பணி ஓய்வுக்கு முன், சாதியத்துக்கு எதிரான இந்த அறிக்கை அப்படியே நின்றுவிடக்கூடாது என்ற அக்கறையுடன், அதன் அடிப்படையில் அணுகுமுறைகளை மேற்கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.


அரசியல், சமூகநீதி இயக்கங்களும் இதைக் கையில் எடுப்பார்கள், எடுக்க வேண்டும். நீதிக்களத்தில் ஏற்படக்கூடிய அசைவுகள் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்கு, சாதியப் பாறையில் உளிகளைப் பாய்ச்சுவதற்கு உதவியாக அமையும், அமைய வேண்டும்!

[0]

‘விகடன் ப்ளஸ்’ (நவ.25) பதிப்பில் எனது கட்டுரை


Thursday, 6 November 2025

சசி தரூர் எழுப்பும் வாரிசு அரசியல் விவகாரம் – மோடியின் குரலுக்கு வலுச் சேர்க்கிறாரா?

 

வாரிசு அரசியல் இந்தியாவுக்குப் புதியதல்ல, அது பற்றிய விவாதங்களும் கூட புதியவையல்ல. இப்போது இதை முன்வைத்திருப்பவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், உயர்நிலைத் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர். கேரளத்தைச் சேர்ந்தவரான இவர் இப்படி ஏதாவது சர்ச்சையைக் கிளப்புவதும் புதிய செய்தியல்ல, ஆயினும் பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாதம் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள், 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று நடைபெற உள்ள சூழலில் சொந்தக் கட்சியையே விமர்சிக்கும் தொனியில் அவர் கருத்துக் கூறியிருக்கிறார். 


காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாகத் தங்களது எதிர்வினைகளை அடக்கி வாசித்துக்கொண்டிருக்க, பாஜக தலைவர்கள் தேர்தல் நேர பம்பர் பரிசு போல இதை எடுத்துக்கொண்டு குறிப்பாக ராகுல் காந்தியைச் சாடுகிறார்கள். தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் ஈடுபட்டுள்ள வேறு பல கட்சிகள் வெளிப்படையாகக் கருத்துக் கூறவில்லை. அந்த மௌனத்தை, நாட்டின் அரசமைப்பு சாசன மாண்பைப் பாதுகாப்பதோடு தொடர்புள்ள மிக முக்கியமான அரசியல் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் களச் சூழலில் இதை ஒரு விவகாரமாக்க வேண்டாம் என்ற நிதானமாக எடுத்துக்கொள்ளலாம்.


பிராஜக்ட் சிண்டிகேட் கட்டுரை


சசி தரூர் இந்தியப் பத்திரிகைகள் எதிலும் இதை எழுதவில்லை. ‘பிராஜக்ட் சிண்டிகேட்’ என்ற பன்னாட்டு கருத்துப் பரிமாற்றத் தளத்தில் எழுதியிருக்கிறார்.  செக் நாட்டின் பிராக் நகரில் இதன் தலைமையகம் உள்ளது. அதன் அக்டோபர் 31 பதிப்பில் ‘குடும்பத் தொழிலாகிவிட்ட இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் அவர் கட்டுரையை எழுதியிருக்கிறார்.


வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது, குடும்பப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அல்லாமல் தகுதிகளின் அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டிய நேரம் இது என்ற கூர்மையான கருத்துகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். “சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா வத்ரா ஆகியோர் அடங்கிய நேரு-காந்தி பாரம்பரியத்தின் செல்வாக்கு, இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றோடு பிணைந்திருக்கிறது. ஆயினும், அரசியல் தலைமை ஒரு பிறப்புரிமையாக இருக்க முடியும் என்ற கருத்தையும் இது வலுப்படுத்தியிருக்கிறது.” என்று எழுதியிருக்கிறார் தரூர்.


“தலைமையைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறைகள் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மையற்றதாக இருக்கின்றன. ஒரு சிறிய குழுவால் அல்லது ஒற்றைத் தலைவரால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு தற்போதைய நிலவரங்களை மாற்றியமைப்பதில் ஆர்வம் இல்லை," என்றும் கூறியிருக்கிறார்.  2022இல் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனவர் சசி தரூர். அந்தத் தேர்தலில்தான் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். விதிகளின் படி அவர்தான் கட்சி அமைப்பின் தலைவர் என்றாலும், பொதுவெளியில் கட்சியின் தலைவர்களாக ராஜீவ் காந்தி  – சோனியா காந்தி இருவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா பெயர்களே கவனம் பெறுகின்றன. 


அனைத்துக் கட்சிகளிலும்

 

கட்டுரையை அவர் நேரு குடும்பத்தோடு  நிறுத்திக்கொள்ளவில்லை. வம்சாவளி வாரிசுரிமை அரசியல் வட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவுகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒடிஷா மாநிலத்தில் மக்களிடையே மிகுந்த செல்வபாக்கைப் பெற்றிருந்தவர் பிஜூ ஜனதா தளம் கட்சியை உருவாக்கியவரான பிஜு பட்நாயக். அவருடையை மறைவுக்குப் பிறகு, மகன் நவீன் பட்நாயக் நாடாளுமன்ற மக்களவையில் காலியான இடத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது நவீன் பட்நாயக்தான் ஒடிஷாவின் நீண்டகால முதலமைச்சராக இருந்து வருகிறார்.


"மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரே, தலைமைப் பொறுப்பைத் தன் மகன் உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்தார். இன்று உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே வெளிப்படையாகவே காத்துக்கொண்டிருக்கிறார்," என்றும் தரூர் கூறியிருக்கிறார்.


"இது உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் நிலைமைக்கும் பொருந்தும். அவருடைய மகன் அகிலேஷ் யாதவ் பிறகு அந்த இடத்திற்கு வந்தார்; இப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் தலைவராகவும் உள்ளார். பிஹாரில், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்குப் பின் அவருடைய மகன் சிராக் பாஸ்வான் வாரிசானார்," என்று  மேலும் சில உதாரணங்களைக் காட்டியிருக்கிறார். ஆயினும், அதே பிஹாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடவில்லை. அணியின் வெற்றி பற்றிய அக்கறையோடு இந்த மௌனம் என்று புரிந்துகொள்ளலாமா?


“ஜம்மு–காஷ்மீரில் மூன்று தலைமுறைகளாக அப்துல்லாக்கள் (தேசிய மாநாடு) தலைமை வகித்து வருகின்றனர். அதன் முக்கிய எதிர்க்கட்சியிலும் (மக்கள் ஜனநாயகக் கட்சி) இரண்டு தலைமுறைகளாக முஃப்திக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பஞ்சாபில், நீண்ட காலமாக பிரகாஷ் சிங் பாதல் வழிநடத்திய சிரோமணி அகாலி தளம் தற்போது, அவருடைய மகன் சுக்பீர் சிங் பாதல் பொறுப்பில் இருக்கிறது. தெலுங்கானாவில், பாரத் ராஷ்டிர சமிதி  நிறுவனர் கே. சந்திரசேகர ராவ் மகனுக்கும் மகளுக்கும் இடையே தலைமைக்கான போராட்டம் தற்போது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில், காலஞ்சென்ற மு. கருணாநிதியின் குடும்பம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டுப்படுத்துகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

துணைக்கண்டம் முழுக்க

தரூர் தனது வாதத்தில், “இந்த வாரிசு அரசியல் போக்கு ஒரு சில முக்கியக் குடும்பங்களோடு சுருங்கிவிடவில்லை.  மாறாக, கிராம ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றத்தின் உயர் நிலைகள் வரை இந்திய ஆட்சிக் கட்டமைப்பில் ஆழமாகப் பிணைந்திருக்கிறது,” என்று கூறுகிறார்.


"நியாயமாகச் சொன்னால், இத்தகைய வாரிசு அரசியல் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது,” எனக்கூறும் தரூர். பாகிஸ்தானில் பூட்டோக்கள், ஷெரீஃப்கள், வங்கதேசத்தின் ஷேக், ஜியா குடும்பங்கள், இலங்கையின் பண்டாரநாயகா, ராஜபக்ச குடும்பங்கள் ஆகிவற்றை சாட்சியமாக்கியிருக்கிறார்.


இவ்வாறு தொகுத்துக் கூறிவிட்டு, “வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. திறமை, அர்ப்பணிப்பு அல்லது வேர்மட்டத் தொடர்புகளுக்கு மாறாக வம்சாவளியால் அரசியல் அதிகாரம் தீர்மானிக்கப்படும்போது, ஆட்சியின் தரம் குறைகிறது. ஒரு திறமை வாய்ந்த ஒரு சிறிய குழுவிலிருந்து தேர்ந்தெடுப்பது ஒருபோதும் நன்மையளிக்காது; அத்துடன் வேட்பாளர்களின் முக்கியத் தகுதி அவர்களின் குடும்பப் பெயராக இருக்கும்போது அது மிகவும் சிக்கலாகிறது," என்கிறார்.


“உண்மையில், வம்சாவளியில் வருகிறவர்கள் எளிய  மக்கள் எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து பொதுவாக விலகியே இருப்பதன் காரணமாக, அவர்கள் தங்கள் தொகுதிகளைச் சேர்ந்தோரின் எதிர்பார்ப்புககளைத் திறம்பட நிறைவேற்றும் தகுதியில் போதாமையுடன் இருக்கிறார்கள். வம்சாவளி முறையை விடுத்து, தகுதி அடிப்படையிலான தலைமைக்கு  மாறுவதற்கு இதுவே சரியான நேரம்.


இதற்கு, சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட பதவிக் கால வரம்புகளை விதிப்பது முதல், அர்த்தமுள்ள உட்கட்சித் தேர்தல்களைக் கட்டாயமாக்குவது வரையிலான அடிப்படைச் சீர்திருத்தங்கள் தேவை. அத்துடன், வாக்காளர்களைத் தகுதியின் அடிப்படையில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கல்வி கற்பிக்கவும் அதிகாரம் அளிக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசியல் ஒரு குடும்பத் தொழிலாக இருக்கும் வரை, 'மக்களின் அரசாங்கம், மக்களால் ஆன அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம்' என்ற ஜனநாயகத்தின் உண்மையான வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போகும்,” என்று தரூர் கட்டுரையை முடித்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்த நேரம்

இயல்பான காலக்கட்டத்தில் இதை அவர் எழுதியிருந்தால்,  அக்கறை மிகுந்த உரையாடல்கள் தொடங்கியிருக்கும். வாரிசு அரசியலின் பின்னணி, அதன் நன்மைகள், தீமைகள் குறித்த ஆழ்ந்த விவாதங்கள் புறப்பட்டிருக்கும். ஆனால், பிஹார் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்கள் அடுத்த ஆண்டில் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் இது பற்றி எழுதியிருப்பதுதான், பொதுவாகப் பல்வேறு கட்சிகளைப் பொறுத்தவரையில் சங்கடமான மௌனத்தையும், பாஜக–வுக்கு மட்டும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இது ராகுல் மீதான நேரடித் தாக்குதல்தான் என்று பாஜக தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள்.


ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுவர முயன்றுள்ள தரூர், ஏன் பாஜக–வுக்குள் பல்வேறு மட்டங்களில் வாரிசுகளின் நடமாட்டம் குறித்து எதுவும் சொல்லவில்லை? பிரதமரின் குடும்பத்தினர் என யாரும் அரசியலுக்கு வரவில்லைதான். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் உ.பி. மாநில சட்டமன்ற உறுப்பினர். ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மகன் துஷ்யந்த் சிங் மக்களவை உறுப்பினர். முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த கோபிநாத் முண்டே மகன் பிரிதம் முண்டே மக்களவை உறுப்பினர். ஹரியானாவின் முன்னாள் பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் யாதவ் மகன் பூபேந்திர யாதவ் ஒன்றிய அமைச்சர். சத்திஸ்கர் முன்னாள் முதல்வர் ரமன் சிங் மகன் அபிஷேக் சிங் மக்களவை உறுப்பினர். மாநில சட்டமன்றங்களிலும் பாஜக அமைச்சரவைகளிலும் இப்படிப்பட்ட வாரிசுகள் பலர் இருக்கிறார்கள். சசி தரூருக்குக் கிடைக்க முடியாத தகவல்கள் இல்லை இவை.


பாஜக–வை விட்டுவிட்டது ஏன் என்று சில ஊடகங்கள் எழுப்பும் கேள்வியை காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் எதிரொலிக்கிறார்கள். அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மக்களவை உறுப்பினரும், ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அலுவலருமான உதித் ராஜ், “வம்சாவளி அணுகுமுறை அரசியலோடு மட்டுமல்லாமல்,  இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பரவியிருக்கிறது. ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராகிறார், ஒரு வணிகரின் பிள்ளை அதே வணிகத்தைத் தொடர்கிறார்.  அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குக் கூறியிருக்கிறார். வருவாய்க்கான தொழில்களோடு மக்கள் சேவைக்கான அரசியல் ஈடுபாட்டை ஒப்பிடலாமா? சரியான வாதங்களை வைப்பதற்கு இவர்களெல்லாம் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.


சரியான பதில் வேறு எங்கோ இருக்கிறது. அதைத் தேடுவதற்கு முன் வேறொரு வேடிக்கையையும் பார்த்துவிடுவோம்

அதிலென்ன வியப்பு?

“வாரிசு அரசியல் இந்தியாவின் கலாச்சாரப் பழக்கம். மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில், தந்தை செய்யும் தொழிலை மகனோ மகளோ தொடர்வது இயல்பு. ஆகவே, அரசியலிலும் ஒரு குறிப்பிட்ட அளவு 'பரிவார் வாத்' (குடும்ப அரசியல்) இருப்பதில் வியப்பில்லை.” –இந்தக் கருத்தைக் கூறியது யார் தெரியுமா? உங்கள் ஊகம் சரிதான், சசி தரூரேதான்!


‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளில் உள்ள வாரிசு அரசியல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களில் பேசியபோது, அதற்குப் பதிலடியாக இதைக் கூறினார் தரூர். “வாரிசு அரசியலை மோடி விமர்சிப்பது முரண்பாடானது. பாஜகவிலும் கூட, உச்சி மட்டத்தில் இருக்கும் சில தலைவர்களைத் தவிர, மற்ற அமைச்சர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் பலர் மூத்த பாஜக நிர்வாகிகளின் மகன்களோ மகள்களோதான்,” என்றார் அவர். 2024 மார்ச் மாதம் இவ்வாறு ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். 19 மாதங்கள் கடந்தபின் தற்போது எழுதியுள்ள கட்டுரையில் வாரிசு அரசியலை விமர்சித்திருக்கிறார்!


உலகம் முழுவதுமே நேரடியாகவோ, சடங்குப் பூர்வமாகவோ வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பிரிட்டனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திற்கே முழு அதிகாரம் என்றாலும், அங்கே மன்னரின் கீழ் குடியரசு என்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறதே! ஜப்பானில் நாட்டின் சின்னமாகவும் மக்கள் ஒருமைப்பாட்டின் குறியீடாகவும் ஓர் அடையாளப்பூர்வ அரசாராட்சி தொடர்கிறதே! இன்னும் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஸ்வீடன்,  நார்வே, டென்மார்க், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் அடையாளப் பூர்வமான அரசராட்சி நடைமுறையில் இருக்கிறது. கனடா நாட்டிற்கு இப்போதும் பிரிட்டன் மன்னர்தான் பெயரளவுக்கு அரசுத் தலைவர்.

அரசமைப்பின் அரண்!

சவூதி அரேபியா, ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், புரூனை ஆகிய நாடுகளில் இன்றளவும் பரம்பரை மன்னராட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அப்படி யாரும் சட்டப்படி வாரிசுரிமை கோரி அரசியலுக்கு வர முடியாது என்பது அரசமைப்பு சாசனத்தின் சிறப்பானதொரு தனித்துவம். இத்தனைக்கும் பல பேரரசர்களின் கொடிகள் பறந்த நாடுகளின் இணைப்பில் உருவான மகத்தான் இந்திய அரசு என்ற போதிலும், இவ்வாறு வாரிசுரிமை அடிப்படையில் அதிகாரத்தைக் கோர முடியாது.


அதாவது, வாரிசுகள் அதிகாரப்பூர்வ  அரசியல் களத்திற்கு வருவதற்குத் தடையில்லை. ஆனால் நடைமுறையில், தலைவர்களின் பிள்ளைகள் என்பதாலேயே கட்சிகளுக்குள் வாய்ப்பு வாசகல்கள் திறக்கப்படுவதைப் பார்க்கிறோம். அதை அந்தந்தக் கட்சிகளின் அடுத்த மட்டத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையில் ஏற்கிறார்கள், பொதுமக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், இங்கே ஜனநாயக முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்ற நிலையில், வாரிசுகளைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் உட்கட்சி மோதல்கள் பெருமளவுக்குத் தவிர்க்கப்படுகின்றன என்ற எதார்த்தத்தையும் புறக்கணிப்பதற்கில்லை.


அப்படிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்கிறார்களா என்பதே கவனிக்கப்பட வேண்டியது. தலைவர் குடும்பம் என்பதை ஒரு அறிமுகத்துக்கு மட்டும் பயன்படுத்தி, பின்னர் அமைப்பு சார்ந்த பணிகளாலும் அரசியல் நிலைப்பாடுகளாலும் தங்களுடைய அசைக்க முடியாத ஆளுமையை நிறுவிக் காட்டியிருப்பவர்களையும் காண்கிறோம். அவ்வாறு வாரிசுளாக வந்தவர்களில் யாரெல்லாம் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், யார் அடையாளமின்றிப் போனார்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய இடத்தில்தான்  சசி தரூர் கண்ணை மூடிக்கொள்கிறார்.


எடுத்துக்காட்டாக, இன்று நாடு தழுவிய அளவில் மதச்சார்பின்மை, சமூக நீதி, மொழி உரிமை உள்ளிட்டவற்றை உயர்த்திப் பிடிப்பதில் தமிழகத்தின் திமுக உள்பட இந்தியா கூட்டணியில் இருக்கும் வாரிசுகள் முத்திரைப் பங்கு வகிப்பதை அதே மாண்புகளுக்காக வாதாடுவதாகக் கூறும் தரூர் ஏற்கிறாரா இல்லையா?   


வாரிசு என்பது மட்டுமே அடிப்படைத் தகுதியாக ஒருவரைக் கொண்டுவருவது ஆரோக்கியமற்ற அரசியல்தான். அதே போல, வாரிசு என்பதற்காகவே வரக்கூடாது என்று தடுப்பதும் உரிமை மறுப்புதான். சமூக உளவியலோடு தொடர்புள்ள இந்த அரசியல் நுட்பம் பற்றிய தெளிவு இந்தியச் சூழலில் மிக மிகத் தேவை. அந்தத் தெளிவை வெளிப்படுத்தாததால், தனிப்பட்ட குமுறல்களிலிருந்தே இதை இந்நேரத்தில் எழுதியிருக்கிறார் என்ற விமர்சனத்திற்குத் தாராளமாக இடமளித்திருக்கிறார் சசி தரூர்.

கொள்கை மனம் விரிய வேண்டும்

இன்னொரு பக்கத்தில், “நீங்கள் மட்டும் அரசியல் களத்திற்கு வந்தால் போதாது, உங்கள் குடும்பத்தினரும் விரும்பி ஏற்று இயக்கத்தில் பங்கேற்க முன் வர வேண்டும். அதற்கேற்ப உங்கள் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் இருக்க வேண்டும்,” என்று இடதுசாரிக் கட்சிகளுக்குள் தோழர்களுக்கு அறைகூவல் விடுக்கப்படுகிறது.


குடும்பமே கட்சிதான் என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு அங்கே ஒரு தனிப் பெருமிதம். அடிப்படையில் மற்ற கட்சிகள் இதை ஏற்கின்றன என்றாலும், உள் ஜனநாயகத்தை மேலோங்கச் செய்வதில், மனக்குறைகளுக்கு இடமில்லாத பங்கேற்புச் சூழலை விசாலப்படுத்துவதில் அந்தக் பெருமிதத்தைக் கையகப்படுத்திடும் கொள்கை மனம் விரியவேண்டும்.

[0]

-விகடன் ப்ளஸ் (நவம்பர் 5) கட்டுரை