Friday, 4 April 2025

அனோரா: ஒரு பாலியல் தொழிலாளியும் ‘அலிகார்ச்’ அற்பனும்

 ஓடிடி மேடையில் உலக சினிமா

 


னைத்து நாட்டு திரைப்படக் கலைஞர்கள், ரசிகர்களால்  எதிர்பார்க்கப்படுவது ஹாலிவுட் திரையுலகின் ‘ஆஸ்கர் விருதுகள்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் ‘அகாடமி விருதுகள்’.  97வது ஆஸ்கர் விழா இந்த மார்ச் 2 அன்று நடந்தது.சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, பெண் நடிகர் ஆகிய ஐந்து விருதுகளை வென்ற ‘அனோரா’ உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அலெக்ஸ் கோகோ, சமந்தா குவான் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள சீன் பேக்கர் படத்தை இயக்கியுமிருக்கிறார். மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட பேக்கர், கடந்த கால, நிகழ்கால, எதிர்காலப் பாலியல் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரிட்டிஷ் அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இப்படத்தின் கதை ஒரு பாலியல் தொழில் பெண் பற்றியதுதான்.

அமெரிக்காவில் ரஷ்ய மக்கள் வாழும் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்த 23 வயது அனோரா ஆடையவிழ்ப்பு நடன – பாலியல் தொழில் விடுதியில் வேலை செய்கிறாள்.. தனது மொழி தெரிந்தவள் வேண்டுமென்று கேட்டு வருகிறான் வான்யா என்ற 21 வயது ரஷ்ய இளைஞன். மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவனான அவன் கேளிக்கை விடுதிகளில் பொழுதைக் கழிப்பவன். ஒரு வாரத்திற்கு 15,000 டாலர் பேரம் பேசி அவனுடைய மாளிகைக்குச் செல்கிறாள் அனோரா.  பின்னர் இருவரும் நெருக்கமாகிறார்கள். நெவேடா நகரத்தின் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.

ரஷ்யாவில் இருக்கும் வான்யாவின்  பெற்றோர் நிகோலாய்–கலினா திருமணத்தை எதிர்க்கின்றனர். பணபலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள ‘அலிகார்ச்’ எனும் கும்பலைச் சேர்ந்த குடும்பம் அவர்களுடையது (அலிகார்ச் என்பது சோவியத் யூனியன் தகர்ந்து ஆட்சிமுறை மாறியபோது அரசின் சொத்துகளைக் கைப்பற்றி அரண்மனை வாழ்க்கை வாழ்கிற கும்பலுக்கான அடையாளம்).

நியூயார்க்கில் இருக்கும் வான்யாவின் ஞானத்தந்தை டோரோஸ், தனது அடியாட்களான கார்னிக், இகோர் இருவரையும் வான்யாவின் மாளிகைக்கு  அனுப்புகிறான். வான்யா ஓடிப் போகிறான். அனோராவை அவமானப்படுத்தும் அடியாட்கள், வான்யா அமெரிக்காவில் நிலையாகக் குடியிருக்க ‘கிரீன் கார்டு’ பெறுவதற்காகத்தான் அவளை மணந்துகொண்டான் என்றெல்லாம் கூறி அவள் மனதைக் கலைக்க முயல்கிறார்கள். அவள் இருவரையும் தாக்கிக் காயப்படுத்துகிறாள் அவர்கள் அவளை அடக்குகிறார்கள். அவளுடைய திருமண மோதிரத்தைப் பறித்துக்கொள்ளும் டோரோஸ், அவளாக விலகிக்கொள்வதற்கு 10,000 டாலர் தருவதாகக் கூறுகிறான். “வான்யாவும் நானும் காதலிக்கிறோம்,” என்கிறாள் அவள். அவனை அவளுடைய முன்னாள் விடுதியில் கண்டுபிடிக்கிறார்கள்.

திருமணம் நெவேடாவில் பதிவாகியிருப்பதால் அது செல்லாது என்று தன்னால் அறிவிக்க முடியாது என நியூயார்க் நீதிமன்றம் கூறிவிடுகிறது. போதையிலும்,  ரஷ்யாவிலிருந்து வந்துவிட்ட பெற்றோரின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் வான்யா அனோராவைக் கைவிடுகிறான். முதுகெலும்பற்ற அவனையும் அவனுடைய பெற்றோரையும் திட்டுகிற அனோரா வழக்குத் தொடுக்கப் போவதாகக் கூறுகிறாள். “உன்னிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் வழக்குக்கே செலவு செய்ய வைத்துவிடுவேன்,” என்று கலினா ஆணவமாகப் பேசுகிறாள்.  வேறு வழியின்றி அனோரா விலகல் ஆவணத்தில் கையெழுத்திடுகிறாள். அவளிடம் வான்யா மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிறான் அடியாளான இகோர். தன் மகன் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்கிறாள் கலினா. 

அனோராவின் உடைமைகளையும், டோரோஸ் கொடுத்த பணத்தையும் ஒப்படைக்கிறான் இகோர். “மாளிகைக்கு நீ முதலில் வந்தபோது நான் போராடாமல் இருந்திருந்தால் என்னை நீ வன்புணர்ந்திருப்பாய்,” என்று அவள் குற்றம் சாட்ட, அவன் மறுக்கிறான். அவளுடைய வீட்டுக்குக் காரில் அழைத்துச் செல்கிறபோது திருமண மோதிரத்தைத் திருப்பித் தருகிறான். ஏமாற்றம், கோபம் ஆற்றாமை என உணர்ச்சிச் சுழலில் இருக்கும் அனோரா அவனிடம் பாலியலாக நெருங்குகிறாள். பின்னர், அவனுடைய மார்பில் சாய்ந்து அழுகிறாள். உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக, அவளிடம் அடிபட்டிருந்தாலும், அவன் அவளை அணைத்துக்கொள்கிறான்.

பாலியல் விடுதியின் தொடக்கக் காட்சிகள் அதிர வைக்கக்கூடும். அடுத்தடுத்து வரும் திருப்பங்களுக்கு அந்த அதிர்ச்சி தேவைப்படுகிறது. விடுதிச் சூழலை பெருமளவுக்குத் துல்லியத்துடன், அந்தப் பெண்களின் காய வடுக்கள், இயல்பான நடத்தை உட்பட பேக்கர் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார். “எங்களை வைத்துப் பல படங்கள் வந்திருக்கின்றன, விருதுகளும் பெற்றிருக்கின்றன. ஆனால் விருது மேடையில் முதல் முறையாக எங்களுக்கு நன்றி தெரிவித்தவர் பேக்கர்தான்,” என்று பாலியல் தொழிலாளிகள் நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்கள்.

தற்காலிக வசதிகள் வாய்த்தாலும் இவர்களின் வாழ்க்கை எளிதில் மாறிவிடுவதில்லை, பணக்காரக் கும்பல்களின் புத்தியும் போய்விடுவதில்லை என்று திரைமொழியில் சொல்லப்படுகிறது. அனோராவின் அவலம், வான்யாவின் துரோகம் இவற்றோடு, அடியாளானாலும் அரண்மனைக் குடும்பம் அல்லாத எளியவனுக்குள் இருக்கும் நேயத்தைக் காட்டியிருப்பதில் ஒரு வர்க்கப் பார்வையும் வெளிப்படுகிறது.

அனோராவாக மிக்கே மேடிசன் சிறந்த நடிகைக்கான விருது பெற்றதன் பொருத்தத்தை நிறுவியிருக்கிறார். வான்யாவாக மார்க் ஐடெல்ஷ்டைன், ஒளிப்பதிவாளர் ட்ரூ டேனியல்ஸ், இசையமைப்பாளர் மேத்யூ ஹீரான் ஸ்மித் உள்ளிட்ட கலைஞர்களும் இணைந்து, படத்தைத் தொகுத்தும் அளித்திருக்கிற சீன் பேக்கரின் புனைவுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது. 

[0]

நன்றி: செம்மலர் ஏப்ரல் 2025 இதழ்


Wednesday, 2 April 2025

நாடு முழுவதும் விவாதிக்கப்பட்ட மதுரை மாநாட்டுக்கான விவாதம்




“என்ன சார், மதுரைக்குப் போகலையா நீங்க? உங்க கட்சி ஆல் இண்டியா மாநாட்டுக்குப் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்…”

காலை நடையின் வழக்கமான கடைசிக் கட்டமான பூங்கா அமர்வில் நண்பர் கேட்டார்.

“வெளியூர்ப் பயணமெல்லாம் இப்ப சாத்தியமில்லையே. சென்னைக்குள்ளேயே நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு இப்பதான் போக ஆரம்பிச்சிருக்கேன். மாநாடு எப்படி போய்க்கிட்டு இருக்குதுன்னு இங்கேயிருந்தே கவனிப்பேன்…”

“அது என்ன…? டிராஃப்ட் பொலிடிக்கல் ரிசொல்யூசன்… அதுக்கு யார் வேணும்னாலும் திருத்தம் சொல்லலாம்னு சொல்றாங்களே…”

“ஆமா. கட்சியோட முக்கியமான செயல்பாடு அது. நடப்பு அரசியல் நிலைமையையும் சமுதாய நிலைமையையும் எப்படி கணிக்கிறது, அதுக்கேத்த மாதிரி என்ன அணுகுமுறையை வகுக்கிறது… இதிலேயெல்லாம் கட்சிக் கிளைகளில் இருக்கிற எல்லா உறுப்பினர்களும் பங்களிக்கிற ஏற்பாடு. பொதுவெளியிலே வெளியிடுறதால கட்சிக்கு வெளியே இருக்கிறவங்களும் கருத்துகளை அனுப்பலாம். நீங்க கூட அனுப்பலாம். எந்தத் தேதிக்குள்ள அனுப்பணும்னு கூட அறிவிச்சிருந்தாங்களே...”

”அதையெல்லாம் என்ன செய்வீங்க?”

“வந்திருக்கிற ஆலோசனைகள், திருத்தங்களை அதுக்குன்னே அமைக்கப்பட்டிருக்கிற குழு தொகுத்துக் கொடுக்கும். மாநாட்டிலே பிரதிநிதிகளா கலந்துக்கிடுறவங்க அதையெல்லாம் விவாதிப்பாங்க. அரசியல் தீர்மான முன்வரைவிலே எதையெல்லாம் அப்படியே வைச்சிக்கலாம், எதையெல்லாம் மாத்தலாம்னு பேசுவாங்க. பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் நிறைவேறும். அடுத்த மாநாடு வரையில் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் இருக்கும். கம்யூனிஸ்ட் இயக்கங்களோட தனித்துவம்னு இதைச் சொல்லலாம்.”

“நீங்க உங்களோட கருத்துகளை எழுதி அனுப்பிட்டீங்களா?”

“ஓ… அனுப்பிட்டேன். நான் இருக்கிற கிளையிலே நடந்த விவாதத்திலேயும் பங்கெடுத்துக்கிட்டேன்.”

“இன்னிக்கு இருக்கிற கவர்மென்ட்டை எப்படிச் சொல்றது… பாசிசமா, நியோ பாசிசமான்னு ஒரு விவாதம் ஓடிச்சே. அது பத்தி உங்க ரீயாக்சன் எதையும் நான் பார்க்கலையே?”

“கிளையிலே சொல்லியிருக்கேன்… ”

“இல்லை, நிறைய இன்டெலெக்சுவல்ஸ் அதை கிரிட்டிசைஸ் பண்ணி எழுதியிருக்காங்க… அதுக்கெல்லாம் பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.”

“ஒரு கட்சியோட மாநாட்டிலே விவாதிச்சு முடிவெடுக்கப்போற ஒரு நிலைப்பாடு பத்தி நாடு முழுக்க இப்படியொரு விவாதம் வந்தது எனக்குத் தெரிஞ்சு, அண்மைக் காலத்திலே இதுதான் முதல் முறை. இது ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையா? இப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் வரும்னு தெரிஞ்சுதானே கட்சி அதைப் பொதுவிலே வெளியிட்டுச்சு? சரியா சொல்லணும்னா, அப்படி வரட்டும்னுதான் வெளியிட்டுச்சு. அது நடந்திருக்கு. இப்ப அதையெல்லாம் வைச்சு மாநாட்டிலே விவாதிக்கிறது நடக்கும்.“

“இது தேவையில்லாத கான்ட்ரவெர்ஸியோன்னு நினைக்கிறேன். லெஃப்டிஸ்ட் வியூ உள்ளவங்க கூட கடுமையா ரியாக்ட் பண்ணியிருக்காங்க. சில பேரு சிபிஎம் பிரச்சினையை சாஃப்டாக்குது, காம்ப்ரமைஸ் பண்ணுதுன்னுலாம் எழுதுறாங்க. சோசியல் மீடியாவுலேயும், மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுலேயும் பார்த்தேன்…“

“சார், ஒரு விசயம் புரிஞ்சிக்கிடுங்க. இந்தியாவிலே கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கினதிலிருந்தே இப்படி நடந்துக்கிட்டு வருது. இந்த நாட்டு ஆளும் வர்க்கத்தை, அரசியல் நிலையை, சமுதாய அடிப்படையை எப்படிப் புரிஞ்சிக்கிடுறது, எப்படி வகைப்படுத்துறது... இப்படி ஆழமான விவாதங்களும் கருத்து மோதல்களும் நடந்திருக்கு. இப்ப நடக்கிறது ஒண்ணும் புதுசு இல்லை. ஒரு முக்கிய முடிவெடுக்கிறப்ப, இப்படிப்பட்ட கருத்து மோதல்கள் இல்லாட்டி எப்படி? என்ன சில பேர் கருத்து வேறுபாடுங்கிற தளத்திலே நின்னு நிதானமா வாதம் செய்திருக்காங்க. சில பேரு இதைச் சாக்கா வைச்சுக்கிட்டு கட்சியைத் தாக்குறாங்க. கடந்த காலத்திலே ஜாதிக்கட்சின்னு பேசலையா என்ன? இப்ப அதை வேற மாதிரி சொல்லி வேற கலர் பூசுறாங்க. எப்பவும் போல இப்பவும் அதையெல்லாம் உதறிட்டு, தப்பான முடிவுகளை மாத்திக்கிட்டு. சரியான முடிவுகளோட போய்க்கிட்டே இருப்போம்.“

“எல்லாரும் கேட்கிறதைத்தான் இப்ப நானும் கேட்கிறேன்….”

–குறுக்கிட்டார் எப்போதும் உடன் வந்தாலும் அரிதாகவே பேசுகிற நண்பர்.

“இவ்வளவு பெர்ஃபெக்டா தீர்மானிச்சு எல்லாம் பண்றீங்க… ஆனா கட்சி இன்னும் பெரிய அளவுக்கு வளரலையே… ஏன் சார்? தப்பான முடிவுகள் எடுத்ததாலதான்னு சொல்லலாமா?”

“சரியான முடிவுகளோட செயல்படுறதுக்கும், முன்னேறுறதுக்கும், வளர்றதுக்கும் என்னவெல்லாம் தடையா இருக்குதுன்னும் சொல்லியிருக்கோமே… அந்த நிலைமைகளுக்கு ஏத்த மாதிரி அனுசரிச்சிக்கிட்டுப் போறதா அணுகுமுறையை மாத்தியிருந்தா அதுதான் சமரசம். அப்படியெல்லாம் சமரசம் பண்ணிக்கிடாம இயங்குறோம் பாருங்க, அது எங்க சாகசம்.”

“விட்டுக்கொடுக்க மாட்டீங்களே…”

“விட்டுக்கொடுக்கிறது, கொடுக்காம இருக்கிறதுங்கிற பிரச்சினையே இல்லை. நீங்க சொன்ன கோணத்திலேயும் மாநாட்டுப் பிரதிநிதிகள் விவாதிப்பாங்கன்னு நான் சொன்னதிலிருந்தே புரிஞ்சிக்கிடலாமே… குறைபாடுகள் என்னங்கிறது பத்தியும் விவாதிப்பாங்க. அதெல்லாம் இருக்கட்டும். உங்க கருத்து என்னன்னு சொல்லுங்களேன்…”

“ஹஹஹா… உங்க மாநாட்டு முடிவு வரட்டும் சார், சொல்றேன். சரி, பார்க்குல நம்ம சிட்டிங் டைம் முடிஞ்சிருச்சு. புறப்படுவோம். முக்கியமான விசயம் பேசினோம், அதனால டீக்கடை விசிட்டோட முடிச்சுக்குவோம். அதுக்கு முன்னாடி நீங்க இப்ப கடைசியா என்ன சொல்றீங்க?”

“இன்னிக்கு ஆரம்பிக்கிற மாநாட்டைத் தலைமைப் பொறுப்புகள்ல இருந்து நடத்திக்கொடுக்கிறவங்க, எல்லா மாநிலங்கள்லயிருந்தும் பிரதிநிதிகளா வந்திருக்கிறவங்க, பார்வையாளர்களாக் கலந்துக்கிட்டு கவனிக்கப் போறவங்க, பொது நிகழ்ச்சிகள்ல ஆதரவாப் பங்கெடுக்கிறவங்க, மதுரைக்கு இன்னொரு பெருமைன்னு மாநாட்டை நல்லா நடத்த உழைச்சிக்கிட்டு இருக்கிறவங்க, தொண்டர்களா பணி செய்யப் போயிருக்கிறவங்க, நாடு முழுக்க விவாதிச்ச விசயங்களோட மாநாட்டிலே பேசுவாங்கன்னு எதிர்பார்ப்போடு பிரதிநிநிதிகளை அனுப்பி வைச்சிருக்கிறவங்க, மாநாட்டையொட்டி பல ஊர்கள்லேயும் பலவிதமான பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்துனவங்க, ஆறாந்தேதி நடக்கப்போற பேரணியிலே நடைபோடப் புறப்படுறவங்க, கருத்து வேறுபாடுகளைக் கட்சி மேல இருக்கிற அக்கறையால வெளிப்படுத்தியிருக்கிறவங்க… அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்னு சொல்றேன்.”

Monday, 24 March 2025

கடலில் விழுந்த விண் ஓடக்கூடு, தெறிக்கும் கேள்வித் துளிகள்






சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தில் புளுகிய டிரம்ப், களமிறங்கிய எலான் மஸ்க்! நாசாவில் தனியார் ஆதிக்கம்?


லகம் முழுதும் மக்கள் மனங்களில் ஒரு பதற்றத்தைப் பதித்து, நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அறிவியல் நிகழ்வு சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் இருவரது விண்வெளிப் பயணம். சென்ற ஆண்டு ஜூன் 5 அன்று விண்ணில் பாய்ந்து, அவர்கள் சென்ற  விண் ஓடத்தில் ஹீலியம் கசிந்து, பிற தொழில்நுட்பக் கோளாறுகளும் சேர்ந்து, அனைத்து நாட்டு விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இணைந்து, எப்போது திரும்புகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து, இறுதியில் வேறொரு விண் ஓடத்தில் திரும்பி வந்து, இந்த மார்ச் 18 அன்று வெற்றிகரமாகக் கடலிறங்கினார்கள்.


இந்த 286 நாள் அனுபவம் ஆராய்ச்சி உலகத்திற்குப் பயனுள்ள பல தகவல்களைப் பெற்றுத் தரும். அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுகிறவர்கள், ஆண்டவன் செயல் என நம்புகிறவர்கள் எல்லோருமே  மகிழ்ந்தார்கள், நிம்மதியடைந்தார்கள். அதிலும் இந்தியாவில், இங்கேயிருந்து சென்ற குடும்பத்தின் வாரிசு சுனிதா என்பதால் கொண்டாட்ட உணர்வு கூடுதலாக இருந்தது.


‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்களின் ஒட்டுமொத்த இயக்கத்தில் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண் ஓடத்தில் சுனிதா, வில்மோர் இருவரும் புறப்பட்டது முதல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண் ஓடத்தின் டிராகன் கூடு அவர்களுடன் ஃபுளோரிடா கடலில் விழுந்தது வரையில் தேதி வாரியாக  செய்தித் தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. ஆகவே அவற்றை இங்கு மறுபடியும் பகிர வேண்டியதில்லை. டிராகன் கூடு “ஸ்ப்ளாஷ்டவுன்” ஆனபோது பல மடங்கு வேகத்தில் தெறித்த கடல்நீர் (அப்படித் தெறிக்கும் என்பதால்தான் இந்தப் பெயர்) போல, பல வினாக்களும் விடைகளும் தெறிக்கின்றன. அதன் சில துளிகளைப் பிடித்துவைக்கலாம்.

சிக்கிக்கொண்டார்களா?

முதல் துளி, எல்லோருடைய பதற்றத்தையும தணியவைத்துத் திரும்பி வந்தது 58 வயது சுனிதா வில்லியம்ஸ் மட்டுமல்ல. 61 வயது புச் வில்மோர் கூடத்தான். அவர்களுடன், ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் பணி செய்துகொண்டிருந்த அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோரும், அவர்களது பணிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் அதே விண் ஓடத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள். அப்படி நால்வரும் திரும்பி வரும் வகையில் நாசா வல்லுநர்கள் புதிய திட்டத்தை வடிவமைத்திருந்தார்கள். குழுவின் கேப்டன் என்பதால் சுனிதா பெயர் முன்னிலைக்கு வருவது இயல்பு. ஆனால், அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்க்கும் நலம்நாடிகளுக்கும் ஏற்பட்ட அதே பதற்றமும் கவலையும் புச் வில்மோர் சார்ந்தோருக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா?


ஆனால், விவரம் அறிந்தவர்கள் அப்படிப் பதற்றமும் கவலையும் அடைந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அறிவியல் தளத்தில் இயங்குகிறவர்கள் வெகு இயல்பாகவே செய்திகளைக் கவனித்து வந்தார்கள். ஏனென்றால், பெரும்பாலோர் நம்ப வைக்கப்பட்டது போல, எட்டு நாள் திட்டமாக மட்டுமே சென்றிருந்த சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனரில் விபத்தாக ஏற்பட்ட கோளாறுகளைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொள்ளவில்லை. தினசரிச் செய்தித் தலைப்புகளில் நரம்பு துடிக்க வைக்கப்பட்டது போல அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கிறார் அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞான் பிரசார் சபா மூத்த அறிவியலாளருமான தா.வீ. வெங்கடேஸ்வரன் (நியூஸ் 18 நேர்காணல்).


நாசா நிர்வாகமும் அந்த இருவரும் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்றோ, அவர்களை மீட்பதில் சிரமம் இருக்கிறது என்றோ அறிவிக்கவில்லை. அடுத்தடுத்து சில தேதிகளை முடிவு செய்து, தவிர்க்கவியலாத இயற்கையான சூழல் உள்ளிட்ட காரணங்களால் அதைத் தள்ளிப்போட்டு வந்தார்களேயன்றி அவர்களைக் கைவிட்டுவிடவில்லை.


மாறாக, “இருக்கிறதுதான் இருக்கிறீர்கள், கூடுதலாக அங்கேயே இருந்து ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருங்கள் என்று உற்சாகத்துடன் ஈடுபடுவதற்கான வேலையைத்தான் அளித்தார்கள். இரண்டாவது முறையாகச் சென்றிருந்த 58 வயது சுனிதா, 61 வயது வில்மோர் இருவருமே, இத்தனை வயதுக்கு மேல் இப்படியொரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கப் போவதில்லை என்ற புரிதலோடும், ஆராய்ச்சியாளர்களுக்கே உரிய உற்சாகத்தோடும், கால நீட்டிப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவ்வாறு அங்கே தங்க வைத்திருக்க முடியாது – அதற்கான விண்வெளிச் சட்ட விதிகள் இருக்கின்றன,” என்கிறார் தா.வீ.வெ.

அங்கிருந்தே பேட்டி

பொதுவாக ஆறு மாத கால ஆராய்ச்சிக்கு என்று அனுப்பப்படும் குழுக்களைப் போலவே இவர்களும் அங்கே ஏற்கெனவே இருந்த அமெரிக்க–ரஷ்ய ஆராய்ச்சியாளர்களோடு இயல்பாகத் தங்கியிருந்தார்கள். அழைத்துப் போவதற்கு அடுத்த வண்டி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்காமல், தங்களின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். “நாசாவால் கைவிடப்பட்டுவிட்டதாக நாங்கள் உணரவில்லை, இங்கே சிக்கிக்கொண்டுவிட்டதாகவும் நினைக்கவில்லை. இயல்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் கவலைப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். கவலைப்பட வேண்டியதில்லை,” என்று இடையில் விண்வெளி நிலையத்திலிருந்தே பேட்டி கொடுத்தார் சுனிதா.


அது ஏதோ நம் ஊரின் அரசு வானொலி, தொலைக்காட்சியில் சில விவசாயிகள் தோன்றி, “அரசாங்கம் கொண்டு வந்த திட்டத்தால எங்க வயல்ல இப்ப நேரடியா தங்கம் வைரம் வெள்ளி அறுவடை செய்றோமுங்க,” என்று “தாங்களாகவே” முன்வந்து பேட்டி கொடுப்பார்களே, அதைப் போன்றதல்ல. கடந்த பிப்ரவரி 7 அன்று சிபீஎஸ்நியூஸ் (CBSNEWS) தொலைக்காட்சியின் செய்தியாளர் வில்லியம் ஹார்வுட் கேட்ட கேள்விக்கு சுனிதா கூறிய பதில் இது. இணையத்தின் தகவல் தேடல் தளங்களில் அந்தப் பேட்டி காணொளியாகவே கிடைக்கிறது.


பிறகு ஏன் “சிக்கிக்கொண்டுவிட்டார்கள்” என்ற எண்ணம் எங்கும் பரவியது? தானாக எதுவும் நடக்காதல்லவா – அந்த எண்ணம் பரப்பப்பட்டது. அப்படிப் பரவட்டும் என்றே முதலில் தூவிவிட்டவர் டொனால்ட் டிரம்ப்! இரண்டு ஆராய்ச்சியாளர்களும் விண்வெளி நிலையத்தில் இணைந்தபோது, அமெரிக்காவில் அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்போது டிரம்ப், “நமது அருமையான இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டு வருவதற்கு ஜோ பைடன் அரசு எதுவும் செய்யவில்லை. நான் தேர்ந்தெடுககப்பட்டால், என் நண்பரும் விண்வெளிப் பயணங்களை நடத்துகிறவருமான எலான் மஸ்க் வசம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பேன். அவர் அவர்களை மீட்பார்,” என்று போகிற இடமெல்லாம் பேசினார்.


‘எக்ஸ்’ தகவல் பகிர்வுத் தளத்தின் முதலாளி எலான் மஸ்க்கும், தன் பங்கிற்கு, விண்வெளிச் சந்தையிலும் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்று புரிந்துகொண்டவராக, டிரம்ப்பின் புளுகுக்கு ஆதரவாகப் பேசினார். “எங்கள் டிராகனை அனுப்பி சுனிதாவையும் வில்மோரையும் மீட்டு வருவேன்,” என்று முழங்கினார். இதையெல்லாம் எதிர்த்துப் பேசுவதற்கான வலிமையும் தெளிவும் இல்லாதவராக ஜோ பைடன் இருந்ததும் இது பரவுவதற்குத் தோதாக அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தது. இப்படியாக இவர்கள், பைடனைத் தாக்குவதற்காக, அறிவியலாளர்களை மட்டுமல்லாமல், அறிவியலையே அவமானப்படுத்தினார்கள்.


“சிக்கிக்கொண்டார்கள்” என்று செய்தி பரப்புவதில் ஒரு ”கிக்” இருக்கிறது என்று பல ஊடக நிறுவனங்கள் இதையே ஊதிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே கூறியது போல, இந்தியாவில் (முன்பு கமலா ஹாரிஸ் விசயத்தில் மிகைப் பாசத்தோடு யாகமெல்லாம் நடத்தப்பட்டது போல) அந்த ‘கிக்’ வணிகம் நன்றாக எடுபட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில ஊடகங்கள் மட்டுமே நாசா என்ன சொல்கிறது என்று, உணர்ச்சிவசப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு வந்தன.

நாசாவில் தனியார்

தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். மறுபடி வெள்ளை மாளிகைக்குள் புகுந்தார். அந்த வேகத்தோடு, தன் வாக்குறுதிப்படி இருவரையும் மீட்பதற்காக விண்வெளிக்கு அனுப்புவதற்குத் தனியார் நிறுவன ஓடங்களைப் பயன்படுத்தலாம் என்று நாசாவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். எலான் மஸ்க்கின் ஓடம் தேர்வு செய்யப்பட்டது (வேறு யாரும் போட்டியிடுவதற்கான “வெளி” இருந்ததா என்று தெரியவில்லை). இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துகொள்வது நல்லது – நாசா வளாகத்தில் தனியார் நுழைவு புதிதல்ல. அமெரிக்கச் சூழலில் அது வியப்புக்கு உரியதும் அல்ல. நிறுவனத்திற்கான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரித்துக் கொடுப்பது, பல பணிகளை ஏற்றுச் செய்வது என சிறிதும் பெரிதுமாகப் பல தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கின்றன. 


சுனிதா, மோர் இருவரும் இந்த முறை விண்வெளிக்குச் சென்றதே கூட,  விமானத் தயாரிப்பாளர்களான போயிங் நிறுவனம், எதிர்கால விண்வெளிப் போக்குவரத்து வணிகத்துக்காக வடிவமைத்த ஸ்டார்லைனர் விண் ஓடத்தின் திறனைச் சோதிப்பதற்காகத்தான். ஆம், தனியார் நிறுவனத்தின் தயாரிப்பை இயக்கிப் பார்ப்பதற்குத் தனது இரண்டு அறிவியலாளர்களை அனுப்பியது நாசா. அதில் இருந்த முக்கியமான கோளாறுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் போயிங் நிறுவனத்திற்கு நாசாவிடமிருந்தும் சுனிதா, மோர் ஆகியோரிடமிருந்தும் பெரியதொரு உதவி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


ராக்கெட் லேப், ப்ளூ ஆரிஜின், வர்ஜின் கேலக்டிக், ஏர் பஸ், லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ரோப் க்ரூமன் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் செயற்கைக் கோள் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல் உள்பட விண்வெளிச் சந்தையில் ஈடுபட்டிருக்கின்றன. இவர்களில் போயிங் கொஞ்சம் முன்னால் இருக்கிறது. தற்போதைய “மீட்பு” சாகசம் மூலமாக ஸ்பேஸ் எக்ஸ் முன்னுக்கு வந்திருக்கிறது. ஆகவே, நாசா வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அறிவியல் என்னாகும்?

இப்போது பல்வேறு மட்டங்களிலும் கவலையோடு புருவங்களைஉயர்த்தி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. தளவாடங்கள் தயாரிப்பு, விண் ஓடங்கள் வடிவமைப்பு, ஆராய்ச்சிக் கூடம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொண்டால் கேடில்லை, விண்வெளி ஓடங்களை இயக்குவது, விண்வெளி நிலையத்தையே நிறுவி நிர்வகிப்பது என்றெல்லாம் தனியார் நிறுவனங்கள் புகுந்துவிடுமானால்  எதிர்கால விண்வெளி அறிவியலின் நிலைமை என்ன ஆகும்?


தற்போதுள்ள அனைத்து நாட்டு விண்வெளி நிலையம் பெயருக்கேற்ப அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானதாகும். 1998ஆம் ஆண்டில் அதனைக் கட்டியமைத்ததில் அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இரு நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. வேறு பல நாடுகளின் பங்களிப்பும் உண்டு. ஆயினும் உலகத்திற்குப் பொதுவானதாக அது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ‘இஸ்ரோ’ நேரடியாக அதன் கட்டுமானத்தில் பங்களிக்கவில்லை என்றாலும், விண்வெளி ஆராய்ச்சிகளில் கூட்டுச் சேர்ந்து பங்கேற்று வருகிறது. அந்த நிலையத்தைப் பயன்படுத்துவதிலும் கூட, ஒரு பகுதியில் அமெரிக்க அரசின் சட்டங்களும் இன்னொரு பகுதியில் ரஷ்யச் சட்டங்களும் நடைமுறையில் இருக்கும். அங்கே என்ன நடந்தாலும் இந்த நாடுகளுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.


பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில், தாழ்வான சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையத்தின் செயல்பாடு அடுத்த ஐந்தாண்டுகளில் முடிவுக்கு வரப்போகிறது. அதில் உள்ள தொழில்நுட்பங்கள் பழையதாகிவிட்டதால் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகின்றன. ஆகவே, காலாவதியாகப் போகிற இந்த நிலையத்தின் செயல்பாட்டை, 2030ஆம் ஆண்டில் நிறுத்திவிடுவதென்று நாசா, ரோஸ்கோஸ்மோஸ் இரு நிர்வாகங்களும் முடிவு  செய்திருக்கின்றன. அதனை பசிபிக் பெருங்கடலில் விழ வைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அல்லது அப்படியே விண்வெளியில் நொறுங்கிப்போக விடப்படலாம். விண்குப்பைகள் குறித்த கவலைகள் இருப்பதால் அதை என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


புதிய விண்வெளி நிலையம் முன்போலக் கூட்டு முயற்சியில் கட்டப்படுமா என்று இரு தரப்பிலிருந்தும் தகவல் எதுவும் இல்லை. ஆனால் தனித்தனியே தங்களது சொந்த நிலையங்களைக் கட்டுவது குறித்து நாசா, ரோஸ்கோஸ்மோஸ் இரண்டுமே திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதில்  அமெரிக்க–ரஷ்ய அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்ற பின்னணியும் இருக்கிறது.


விண்வெளி நிலையத்திற்காகப் பெருமளவில் முதலீடு செய்ய முன்பு தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலையில் அரசுகளின் நிதியளிப்போடு 27 ஆண்டுகளுக்கு முன் ஐஎஸ்எஸ் கட்டப்பட்டது. அதன் காலம் முடிந்த பிறகு தங்களின் நிலையங்களைக் கட்டுவதற்கு விண்வெளி கார்ப்பரேட்டுகள் தயாராக இருக்கிறார்கள்.  நாசாவைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து புதிய நிலையத்தைக் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் முனைப்புக் காட்டி வருகிறது. ஆக்ஸியம் ஸ்பேஸ், நானோராக்ஸ் இவற்றுடன் ஏற்கெனவே பார்த்த ப்ளூ ஆரிஜின், நார்த்ராப் க்ருமன் ஆகிய நிறுவனங்களும் போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

குளங்களை ஆக்கிரமித்தது போல

உலக நாடுகளுக்கெல்லாம் –ஏன் நம் பேரண்டத்திற்கே பொதுவான– விண்வெளி, இங்கே ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்த  நிறுவனங்களின் வளாகங்களைப் போல, தனியார் துண்டு விரிக்கும் சந்தைக் களமாக மாறுமானால் அந்த நிர்வாகங்கள் எந்த நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படும்? அவற்றின் சொந்தச் சட்டங்கள்தானே நடைமுறைப்படுத்தப்படும்? விண்ணில் குவியும்  குப்பைகள் பற்றிக் கவலைப்படுவார்களா? உலக அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகள் என்னாகும்? அவர்கள் எலான் மஸ்க்குகளின் வணிக இலக்குகளுக்குச் செயல்திட்டம் வகுக்கிறவர்களாக மாற்றப்பட்டுவிட மாட்டார்களா?


அரசு சார்ந்த நிறுவனங்களின் பயணம் அறிவியல் கண்டுபிடிப்புகளை நோக்கியதாக இருக்க, தனியார் நிலையங்கள் ஏற்பாடு செய்யும் விண்வெளிப் பயணங்களின் நோக்கம் (விண்வெளிச் சுற்றுலா நெடுந்தொலைவுக் கனவாகிவிடாது என்றாலும்) வணிகமயமாக்குவதாக மட்டும்தானே இருக்கும்? அப்படியொரு நிலைமை தலைதூக்குமானால், விண்வெளி அறிவியலே ஒரு கட்டத்தில் ‘ஸ்ப்ளாஷ்டவுன்’ ஆகிவிடாதா? அக்கறையுள்ள அறிவியலாளர்கள் அதை மீட்பதற்கு முயல்வார்கள்தான், அது பெரும் போராட்டமாக அல்லவா இருக்கும்?


இன்னொரு முக்கியமான கேள்வி –  நிலையங்களிலும் அங்கே செல்கிற விண் ஓடங்களிலும் மோசமான விபத்துகள் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம் – அப்போது யார் பொறுப்பேற்பார்கள்? ஸ்டார்லைனர் பிரச்சினைக்குப் பிறகு, யாருக்காக சுனிதாவும் வில்மோரும் அங்கே போனார்களோ அந்த போயிங் நிர்வாகம் பெறுப்பேற்கவில்லை. நாசா வல்லுநர்கள்தான் அவர்களைக் கொண்டுவந்தார்கள்.


ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா கார் நிறுவனங்களின் தொழிலாளர்கள் பாதுகாப்பு, மோசமான பணிச்சூழல், அதிக வேலை நேரம், பங்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் அதிரடிகள், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என மாற்றிய பிறகு செய்த மாற்றங்கள், தொழிற்சாலைகளில் கட்டுப்படுத்தப்படாத கரிமவாயு வெளியேற்றத்தால் சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்குப் பங்களிப்பு ஆகிய பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எலான் மஸ்க் மேல் உண்டு. இதற்கே பொறுப்பேற்காதவர், விண்வெளி விபரீதங்களுக்குப் பொறுப்புத்துறப்பு அறிவிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?


‘ஸ்ப்ளாஷ்டவுன்’ தெறிப்பு நீர் முகத்தை உதறிக்கொள்ள வைக்கிறது.

•••••••••••••••


(‘விகடன்’ இணையப் பதிப்பில் மார்ச் 23, 2025இல் வெளியாகியுள்ள எனது கட்டுரை)








Sunday, 16 March 2025

ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்


 
காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும்  கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள்.


எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா. செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின,


பா.செ‘யின் படைப்புலகம் சார்ந்தே உரைத் தலைப்புகள். அவரது அல்புனைவுகளில் பெண்ணியம் மற்றும் சமூகப் பங்களிப்புகள் பற்றிப் பேசினார், இதே தலைப்பு தனக்கும் பொருந்தக் கூடியவரான கமலாலயன். சில பதிவுகளைப் பகிர்ந்தபோது சில மணித்துளிகள் தொடர்ந்து பேச இயலாமல் உறைந்தார். குறிப்பாக, இந்தித் திணிப்புக்கு எதிராக 1960களில் ஏற்பட்ட எழுச்சியில் ஒரு தளநாயகராகவே பா.செ. பங்களித்தது பற்றிச் சொல்லி வந்தவர், தமிழக வரலாற்றின் அந்த மகத்தான அத்தியாயம் இலக்கியப் புனைவுகளில் கொண்டுவரப்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டபோது அடுத்த சொற்களுக்காகத் தவித்தார். தனது தொழிற்சாலை அனுபவங்கள், உயரரிகாரியின் எச்சரிக்கை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்றவர்கள் பழிவாங்கப்பட்டது குறித்த நினைவுகளையும் பா.செ. கட்டுரைகள் கிளறிவிட்டதைத் தெரிவித்து, அத்தகைய பல போராட்டங்கள் புனைவுகளாக்கப்படாமல் இருப்பதன் வேதனையை ஒரு படைப்பாளிக்கே உரிய உறுத்தலுணர்வுடன் வெளிப்படுத்தினார்.




பா.செ. புனைவுகளில் நடமாடும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்திப் பேசினார், உண்மை வாழ்க்கையின் அத்தகைய மனிதர்களைத் தேடும் உந்துதலை இளம் எழுத்தாளர்களுக்கு எப்போதும் வழங்குகிறவரான ச. தமிழ்ச்செல்வன். பா.செ. வாழ்க்கையோடு கலந்த பாட்டியும் அம்மாவும் கரிசல் கிராமங்களின் உயிரோட்டமான பெண்களும் அவருடைய சிறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டினார். அவர்களின் பாடுகளையும் வலிகளையும் அழுகைகளையும் எவ்வளவு துல்லியமாகக் கவனித்து உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார் என்று சொல்லிவந்தவர், ஒரு கதையில் சித்தரிக்கப்படும் அவலச் சூழலைப் பகிர்ந்தபோது கண்ணீர் முட்டிக்கொள்ள, பேச்சைத் தொடர முடியாமல் தடுமாறினார். தண்ணீர் எடுத்துக்கொடுக்கப்பட்ட பிறகு, அதைப் பருகிவிட்டு, மனதை ஆற்றிக்கொண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உரையைத் தொடர்ந்தார். நம் வீடுகளில், பக்கத்து வீடுகளில், தெருக்களில், ஊர்களில் இப்படிப்பட்ட பெண்களைப் பார்த்திருக்கிறோமே, இதே போலக் கவனித்திருக்கிறோமா என்ற குறுகுறுப்பை அவையினருக்குக் கடத்தினார் என்றால் மிகையில்லை.


சங்கத்தின் மாவட்டச் செயலாளர், நாடகக் கலைஞர் அசோக் சிங் நினைவுரையாற்றினார். பா.செ. வாழ்க்கையின்நினைவுக் குறிப்புகளாக அல்லாமல், பா.செ.பேச விரும்பிய பண்பாட்டுத் தளப் போக்குகளை நினைவில் கொண்டு புதிய கண்ணோட்டத்தில் விவாதிக்க வேண்டிய சிந்தனையை முன்வைத்தார். மொழி உள்பட எந்தவொரு பண்பாட்டு அடையாளத்தையும் நாம் எதிர்க்கவில்லை, ஆதிக்கத்தைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்றார். 


வரவேற்புரையோடு, தேர்ந்தெடுத்த தலைப்புகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரையாகவும் சுருக்கமாக வழங்கினார் மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு. இந்தத் தலைப்புகளைத் தேர்வு செய்ததே அவர்தான் என்று தெரியவந்தது. தலைப்புகளை மட்டுமல்ல, யாரிடம் அவற்றை ஒப்படைக்கலாம் என்று தேர்வு செய்ததிலும் அவருடைய அனுபவமும் அக்கறையும் பொதிந்திருக்கின்றன.





நன்றி நவில வந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர்களில் ஒருவருரான வழக்குரைஞர் அஜிதா, எழுத்தாளர், களச் செயல்பாட்டாளர் என்பதற்கெல்லாம் முன்பாக பா.செ. தனது மாமா என்று தெரிவித்தார். பற்பல வாழ்க்கை நிலைகளுக்கு மாறினாலும் வர்க்க அடிப்படையில் எளிய மக்களின் பக்கம் நிற்பதில் ஒருபோதும் மாறாமல் நின்றார். அவரது கதாபாத்திரத் தேர்வுகளும் மொழிப்போராட்டம் புனைவாக்கப்படாதது பற்றிய மனக்குறையும் சேர்ந்து, பணியும் பணியில் சந்திக்கும் மக்களும் சார்ந்த எழுத்தாக்கங்களில் இனி தானும் ஈடுபடும் உறுதியை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தினார்.


எண்ணிய எண்ணியாங்கு எய்தலாகும் என்ற நம்பிக்கையோடு அரங்கில் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் முற்போக்குச் சிந்தனையாளர், மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன். 


மானுட மாண்பும் வர்க்க உணர்வும் வேறு வேறு அல்ல,  ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று உணர்த்திய நிகழ்வு எனப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அங்கிருந்து விடைபெறும்போதே உதித்திருந்தது.



Saturday, 15 March 2025

கூடுதலாக ஒரு மொழி கற்பதில் என்ன தவறு?



“மூ
ணாவதா ஒரு மொழியைக் கத்துக்கிடறதுல என்ன சார் தப்பு?”


பல நாட்களாகக் காலை நடையில் சினிமா, சொந்த ஊர் நிலவரம், நண்பர்களுடைய கதை என்று பேசிக்கிட்டு கடந்துகொண்டிருந்தோம்.. எழுதிப் பதிவு செய்வது போல எதுவும் அமையவில்லையே என்று நினைத்துக்கொள்வேன். இன்று காலையில், நண்பரின் கேள்வியில் அது அமைந்தது.

”மூணு மொழியில்லை, முப்பது மொழி கூட கத்துக்கலாம். தப்பே இல்லை. தடையும் இல்லை. ஆனா எந்த மொழியையும் ஆசைப்பட்டுக் கத்துக்கணும். வற்புறுத்திப் படிக்க வச்சா அது கத்துக்கிடற மொழி ஆகாது, கட்டாயமாத் திணிக்கிற மொழியாத்தான் இருக்கும்…”

“குழந்தைகள் எக்ஸ்ட்ராவா ஒரு லாங்குவேஜ் கத்துக்கிடறதுக்கு சிரமப்படுவாங்கன்னு நீங்களா ஏன் அவங்களை அண்டர்எஸ்டிமேட் பண்றீங்க? அதிலேயும் இந்தக் காலத்துப் பசங்க ரொம்ப ஸ்மார்ட்… ஈஸியா கத்துக்குவாங்க…”

“உண்மைதான்… குழந்தைகளோட மூளை இயற்கையாவே புத்துணர்ச்சியோட எதையும் வாங்கிக்கிடும். அந்தப் புத்துணர்ச்சி வறண்டு போகக்கூடாது. அறிவியல், கணிதம், வரலாறு, இலக்கியம், கலைன்னு அவங்களோட வயசுக்கு ஏத்த மாதிரி கத்துக்கிட வேண்டியது நிறைய இருக்கிறப்ப, எதுக்கு செயற்கையா, கூடுதலா இன்னொரு மொழியைக் கத்துக்கிடறதுல அந்த இயற்கையான திறமையைச் செலவு செய்யணும்?”

“அப்படின்னா ஏற்கெனவே தெரிஞ்சிருக்கிற லாங்குவேஜஸ் மட்டும் போதும், எங்கே போனாலும் அதை வச்சே சமாளிக்கட்டும்னு சொல்றீங்களா?”

“அப்படில்லாம் யாரும் சொல்லலை. எங்கேயாவது போறோம்னா அங்கே தேவைப்படுற மொழியை இயல்பா நாம கத்துக்கிடுவோம். அங்கே நிறைய காலம் வாழப்போறோம்னா வேலை பார்க்கிற இடத்தில மட்டுமில்லாம ஊர்க்காரங்களோட பழகுறதுக்கும் அந்த மக்களைப் புரிஞ்சிக்கிடறதுக்கும் அந்த மொழி ஒரு பாதை மாதிரி இருக்கும்கிறதால நிச்சயமா கத்துக்கிடுவோம். அதிலேயும் இலக்கிய ஆர்வம் இருந்துச்சுன்னா, அந்த மக்களோட கதைகளையும் கவிதைகளையும் ரசிச்சு வாசிக்கிறதுக்கு அந்த மொழியை விரும்பிக் கத்துக்கிடுவோம். அப்படிக் கத்துக்கிடறது மூளைக்கு சுகமா இருக்கும், சுமையா இருக்காது.“

“அதெல்லாம் எக்ஸெப்ஸனலா சில பேரு செய்றது. மத்தபடி சின்ன வயசுலேயே ஆரம்பிச்சாத்தான் வளர வளர மூணாவது லாங்குவேஜ்ல எக்ஸ்பெர்ட்டாவே வளருவாங்க.”

“சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருக்கீங்கல்ல? மாமல்லபுரம்?”

“அடிக்கடி டெல்லி, மும்பைன்னு போயிட்டு வர்றவனாச்சே, சென்ட்ரல் ஸ்டேஷன் தெரியாம இருக்குமா? மாமல்லபுரத்துக்குக் ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலிஸ் சேர்ந்து போயிருக்கோம்.”

“சென்ட்ரல்ல வண்டி உள்ளே வர்றப்ப, சுமைத் தொழிலாளிகளைக் கவனிச்சிருக்கீங்களா? ஒவ்வொரு பெட்டியிலேயிருந்தும் இறங்குறவங்களைப் பார்த்ததுமே அவங்க எந்த மாநிலத்துக்காரங்கன்னு புரிஞ்சிக்கிட்டு அவங்களோட மொழியிலேயே பேசுவாங்க. மாமல்லபுரத்துல வழிகாட்டியா தொழில் செய்றவங்க, சுற்றுலா வந்தவங்களோட மொழியிலேயே விளக்கம் கொடுப்பாங்க. அதெல்லாம் சின்ன வயசுலேயிருந்து கட்டாயப்படுத்திக் கத்துக்கிட்டது இல்லை. இதுதான் வாழ்க்கை அமைச்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி கத்துக்கிட்டவங்கதான்.”

“அந்த மாதிரி வேலைகளுக்குத்தான் எக்ஸ்ட்ரா லாங்குவேஜஸ் தேவைன்னு நீங்க சொல்றீங்கன்னு எடுத்துக்கிடறதா?”

“இதே மாதிரி தொழில், வணிகம், கல்வி, ஆராய்ச்சின்னு வல்லுநரா இருக்கிறவங்க பல மொழி அறிஞ்சவங்களா அசத்துறாங்க. குழந்தைகளோட மூளைக்கு மட்டுமில்லை, வளர்ந்த பெரியவங்களோட மூளைக்கும் புது மொழிகளை எளிதாக் கத்துக்கிடுற இயற்கையான ஆற்றல் இருக்குறதைச் சொல்றேன்னு எடுத்துக்குங்க.”

“இது யோசிக்க வேண்டிய பாயின்ட்தான்.”

“யோசிக்கிறதுதான் முக்கியம். யோசிக்க விடாமலே, எதிர்காலத் தலைமுறையோட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுறாங்க, வாய்ப்புகளைத் தடுக்கிறாங்க, வட மொழி மேல வெறுப்பை வளர்க்கிறாங்கன்னு பேசி வெறுப்பைக் கொட்டுறாங்களே அதைப் பத்தியும் யோசிங்க. இது மாதிரியெல்லாம் அறிவியல்பூர்வமா அவங்க ஏன் யோசிக்க மாட்டேங்கிறாங்கன்றதையும் யோசிங்க.“

“மத்த பல ஸ்டேட்டுகள்ல த்ரீ லாங்குவேஜ் பாலிசி இருக்கிறப்ப இங்கே மட்டும்…” –இது எப்போதும் எங்கள் உரையாடலைக் கவனித்துக்கொண்டே நடக்கிற, எப்போதாவது பேச்சுக்கொடுக்கிற இரண்டாவது நண்பர்.

“எந்த மாநிலமா இருந்தா என்ன? எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்றேன்.”

“சரிங்க சார். ஸ்கூல்லேயே ஆரம்பிக்காம வேற வேற மொழிகளை எப்பதான் கத்துக்கிடறது?” –மறுபடியும் முதலாமவர்.

“என் நண்பர் ஒருத்தர், எழுபது வயசுல தெலுங்கு படிச்சுக்கிட்டு இருக்காரு, கேட்டா அருமையான இலக்கியங்கள் தெலுங்குல இருக்குதுன்னு சொல்றாரு. எனக்குக்கூட ஏதாவது ஒரு புது மொழி படிக்கணும்னு விருப்பம் இருக்கு. எதைப் படிக்கலாம்னு நண்பர்கள்கிட்ட விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் திறமையாளர்கள்… கட்டாயப்படுத்தித் திணிக்காமலே கூடுதலா பல மொழிகள் தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களும் கூட தேவையையொட்டியும் அவங்களா தேர்வு செஞ்சும்தான் படிச்சாங்க.”

“அதுவும் நிஜம்தான். எந்த ஸ்டேட்டுக்குப் போனாலும் அந்த லாங்குவேஜ்லேயே பேசுறங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்.“

“அது மட்டுமில்லை, அவங்க யாரும் மும்மொழி கத்துக்கிடறதுல தப்பு இல்லைன்னு பேசிக்கிட்டு இருக்கிறதில்லை, எனக்கு ஏழு மொழி தெரியும் எட்டு மொழி தெரியும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறதில்லை. ரொம்பவும் அறிவாளியா மாறி இந்தி வேணாம்னுட்டு உங்க சினிமாக்களை மட்டும் ஏன் இந்தியில டப்பிங் பண்றீங்க, ஏன் இந்தி சினிமா நடிகர்களை ரசிக்கிறீங்கன்னு எல்லாம் கேட்கிறதும் இல்லை. அப்புறம்…”

“ஓகே, ஓகே. கடை வந்துருச்சு. சூடா காஃபியோட கூலாயிடுவோம். வழக்கம் போல சர்க்கரை இல்லாமத்தானே?”

“இப்ப பால் இல்லாமலும்.”

Sunday, 9 March 2025

சாதியைப் பேசிய தமிழ் சினிமா:அன்று முதல் இன்று வரை

 




 

லயங்கள் முதல் நாடகங்கள் வரையில் எங்கும் சாதியம் மிகக் கடினமாகப் புரையோடியிருந்த காலம் இருந்தது. ஆலயத் தேர்கள் சேரிக்குள் நுழைந்ததில்லை, நாடகக் கொட்டகைகளுக்குள் சேரி மக்கள் நுழைந்ததில்லை – நுழைய விடப்பட்டதில்லை. அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளுக்கே வந்த கூத்துக் கலைஞர்கள்தான் நாடக விருந்தளித்தார்கள்.

இப்படியிருந்த தமிழ் மண்ணின்  கலைக்களத்தில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது சினிமா.  அனைத்து சமூக மக்களும் ஒரே கூடத்தில் அமர்ந்து படம் பார்க்கிற சூழல் ஏற்பட்டது ஒரு மகத்தான மாற்றம். அனைத்துத் தரப்பினரும் அரங்கிற்கு வந்தால்தான் வெற்றிபெற முடியுமென்ற வணிகத்தோடு இணைந்த கலையாக்கமாக இருந்தது மட்டுமே இதற்குக் காரணமல்ல. நாட்டின் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்ததாக இங்கே பிராமணர் அல்லாதோர் இயக்கம், சுயமரியாதை இயக்கம், ஆதி திராவிடர் இயக்கம், பொதுவுடைமை இயக்கம். ஒரு பகுதி தேசிய இயக்கம் ஆகியவை ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்தும் திரையரங்குகள் இவ்வாறு உருவெடுத்தன.

திரையரங்குகள் கொண்டுவந்த இந்த மாற்றம் திரைப்படங்களில் உடனடியாகப் பிரதிபலித்துவிடவில்லை. தொடக்கத்தில் மேடை நாடகங்களும் புராணக் கதைகளுமே படமாக்கப்பட்டன. ஆகவே அந்தப் படங்களின் கதாபாத்திரங்கள் சாதியக் கோபுரத்தின் மேல் தட்டுகளில் தங்களை வைத்துக்கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய பிரச்சினைகள்தான் பேசப்பட்டன. மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அன்றைய படங்களில் முக்கியத்துவமற்ற துணைப் பாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள்.

 

நந்தனார்கள்

 

பக்திக் கதைகளில் ஒன்றாக மக்களிடையே பரவியிருந்த நந்தனார் வரலாற்றைத் திரைக்குக் கொண்டுவரும் முயற்சிகளும் தொடங்கின. 19ஆம் நூற்றாண்டில் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய கதை நாடக மேடைகளிலும் வலம் வந்துகொண்டிருந்தது. அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில், ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் அறிமுகமாகாததால் மௌனப்படங்கள் மட்டுமே  வந்துகொண்டிருந்த காலத்தில், 1923இல்  ஒரு ‘நந்தனார்’ வந்தது. படச்சுருளில் ஒளியோடு ஒலியும் பதிவாகி பேசும் படங்கள் வரத்தொடங்கிய பிறகு, 1930இல் கதாபாத்திரங்கள் வாய்திறந்து பேசிய ‘நந்தனார்’ வந்தது. 1935இல் ‘பக்த நந்தனார்’ வந்தது – அதில், தன் தனித்துவமான குரலால் தமிழ் மக்களைச் சுண்டியிழுத்தவரான கே.பி. சுந்தராம்பாள் நந்தனாராக நடித்திருந்தார். இந்தப் படங்கள் ஓரளவுக்குத்தான் வணிக வெற்றியைப் பெற்றன. 1942இல், திரை வணிக நுட்பங்கள் அறிந்தவரும் பத்திரிகையாளருமான எஸ்.எஸ். வாசன் தனது ஜெமினி நிறுவனத்திற்காகத் தயாரித்த, எம்.எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா உள்ளிட்டோர் நடித்த, முருகதாஸ் என்ற முத்துசாமி ஐயர் இயக்கிய ‘நந்தனார்’  மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.

 

ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான சிவபத்தர்  நந்தன், கிராம மக்களுடன்  தஞ்சையின் திருப்புன்கூர் கோவிலுக்குச் செல்கிறார். கோவிலையும் கூட அவர்கள்  தரிசிக்கவிடாமல் நந்தி சிலை மறைக்கிறது. அவரது பத்தியைக் கண்டு சிவன் ஆணையிட நந்தி   விலகிக்கொள்ளும் அதிசயம் நடக்கிறது. ஊர் திரும்பும் நந்தன் தொடர்ந்து நிலவுடைமையாளரான வேதியரின் நிலத்தில் உழைக்கிறார். ஒருநாள் சிதம்பரம் கோவிலுக்குச் செல்ல அனுமதி கேட்க, அவரை அனுப்ப மனமில்லாத வேதியர், 40 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த பிறகுதான் போக முடியும் என்ற கடுமையான நிபந்தனையை விதிக்கிறார். வயலில் நிற்கும் நந்தன் தன்னால்   எப்படி முடியும் திகைத்துப்போய், சிவன் பெருமையைப் பாடியபடியே மயங்கி விழுகிறார். சிவனின் அருளால் அந்த ஒரே இரவில் 40 ஏக்கரிலும் பயிர் விளைகிறது. நந்தனின் பக்திச் சிறப்பை அறியும் வேதியர் அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். சிதம்பரத்தில், அவர் நெருப்பைக் கடந்து தனது பறையர் நிலையை நீக்கி புனித உடல் பெற்றால்தான் கோவிலுக்குள் நுழைய முடியும் என்று பிராமணப் பூசாரிகளில் சிலர் தடுக்கிறார்கள். சிவனைத் துதித்தபடி நெருப்பில் இறங்கி, புனிதச் சாம்பல் பூசப்பட்ட உடலோடு வெளியே வரும் நந்தனாரை இறைவன் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்.

 

ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருந்த தடைகளைச் சித்தரித்தாலும், இன்னொரு பக்கம், சிவபக்தியின் காரணமாக, கருப்பசாமி கோயில் விழாவில் ஆடுகள் பலியிடப்படுவது தவறு என்று பரப்புரை செய்து சேரி மக்களை நந்தன் மாற்றுவது போன்ற காட்சிகளும் இருந்தன. பறையர் அடையாளத்துடனேயே நந்தனால் இறைவனை அடைய முடியவில்லை. பறையர் எழுச்சியாக அல்லாமல் பக்தியின் முதிர்ச்சியாகப் படம் முடிந்தது. இருப்பினும், ஒரு பழைய கதையைச் சார்ந்து தீண்டாமை பற்றி ஏதோவொரு கோணத்தில் பேசிய படமாக அது அமைந்தது. (நாடகங்களாலும் திரைப்படங்களாலும் தமிழகத்தில் பரவியிருக்கிற நந்தனார் கதை உண்மையான வரலாறல்ல, நந்தனுக்கு அப்படிப்பட்ட கொடுமைகள் செய்யப்படவில்லை, கோபாலகிருஷ்ண பாரதியார் உண்மைக் கதையை மாற்றிவிட்டார் என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.)

 

புறப்பட்ட புதிய கதைகள்

பக்தியிலிருந்து மாறுபட்ட சில புதிய முயற்சிகளும் சிறிய அளவில் தொடங்கின. 1939ல் வெளியான ‘தியாகபூமி’ அப்படிப்பட்டதுதான். அதுவும் எஸ்.எஸ். வாசன் தயார்த்ததுதான்.  கல்கி எழுதி, கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் பாபனாசம் சிவன், எஸ்.டீ. சுப்புலட்சுமி நடித்திருந்தார்கள். மையப் பாத்திரமான சாம்பு சாஸ்திரி, புயலால் பாதிக்கப்பட்ட சேரி மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பார். ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படிச் செய்து புனிதத்தைக் கெடுப்பதா என்று சக பிராமணர்கள் அவரை சமூகத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். கதை பிறகு அவரது மகளின் வாழ்க்கை, அவளுக்குத் துரோகமிழைக்கும் கணவன் மனம் திருந்துவது, இருவருமாக தேசிய இயக்கத்தில் இணைவது   என்றெல்லாம் போகும், இறுதியில் சாஸ்திரி தனது பேத்தியுடன் சேரிக்குத் திரும்பிச் செல்வதாக முடியும். மையக் கருவாக சாதிப் பாகுபாட்டை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ஒரு முக்கிய நிகழ்வாக அதை முன்வைத்த வகையில், சாதிப் பிரச்சினையை அப்போதே தொட்டுக்காட்டிய தமிழ்ப் படமாக இது அடையாளம் பெற்றது.




வளர்ந்து வந்த திராவிட இயக்கம் சார்ந்த பலர் திரைப்படத் துறைக்கு வந்தார்கள். அவர்களுடைய படங்கள் இயக்கம் முன்வைத்த சமூக சமத்துவம் உள்ளிட்ட கருத்துகளைக் கொண்டிருந்தன. அண்ணா முதலியோரின் கைவண்ணம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. கலைஞர் கருணாநிதி எழுத்தில், சிவாஜி கணேசன் அறிமுகமான, நேரடியாக சமூக விமர்சனம் செய்த ‘பராசக்தி’ படம் அரசியலாக ஒரு திருப்புமுனை. ஆயினும், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்தோர் தயாரித்த பல படங்கள் சாதிப் பிரச்சினைகளை ஆழமாக வெளிப்படுத்தத் தவறின.

1956இல் லீனா செட்டியார் தயாரிப்பில், டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான ‘மதுரை வீரன்’ படம், ஒரு பகுதி மக்களால் குலசாமியாக வணங்கப்படுகிறவனைப் பற்றிக் காலங்காலமாக வழங்கிவரும் நாட்டுப்புறக் கதையை எடுத்துக்கொண்டது. ஆனால், சாதியைக் கடந்து காதலித்த குற்றத்திற்காக மாறு கை மாறு கால் வெட்டப்பட்ட மூலக் கதையைப் படத்தில் அடியோடு மாற்றியிருந்தார்கள்.




படக்கதையின்படி ஒரு மன்னரின் மகன்தான் அவன், ஆனால் அரசுக்கு ஆகாத குழந்தை என்ற சோதிடரின் எச்சரிக்கையால் காட்டில் விடப்பட்டு, செருப்பு தைக்கிற குடும்பத்தால் வளர்க்கப்படுகிறான், இளவரசி பொம்மியைக் காதலித்து சதிகளை மீறி கைப்பிடிக்கிறான், பிறகு ஒரு தளபதியாக மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் நுழைகிறான், நாட்டிய மங்கை வெள்ளையம்மாவுடன் சேர்ந்து  எதிரிகளை வீழ்த்துகிறான்,  பொறாமைக்கார அமைச்சர்கள் பொய்யாகப் போட்டுக்கொடுக்க, அவனுக்குத் தண்டனை அளிக்கிறார் மன்னர். ஒரு கையும் காலும் வெட்டப்பட்ட நிலையிலும் கூட்டத்தில் பதுங்கியிருந்த ஒரு திருடனைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுவிட்டு, கடமையைச் செய்த மனநிறைவோடு தன்னைத்தானே கழுத்தை வெட்டி உயிரிழக்கிறான் வீரன், அவனோடு தங்களையும் மாய்த்துக்கொள்ளும் பொம்மியும் வெள்ளையம்மாவும் அவனோடு சொர்க்கத்தில் இணைகிறார்கள். புழங்கிவரும் கதை இப்படி மாற்றப்பட்டாலும், தங்களுடைய தலைவனாக இருந்தவனைப் பற்றிய படம் என்று, குறிப்பாக அருந்ததியர் மக்கள்  கொண்டாடினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களிடையே எம்ஜிஆர் செல்வாக்கும், அவர் மூலம் திமுக செல்வாக்கும் வளர்வதற்கு அந்தப் படம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

 

போற்றிய படங்கள்

 

இப்படி அப்போதொன்றும் இப்போதொன்றுமாக சில படங்கள் வந்தன என்றாலும், பேசும்பட ஒலிப்பதிவு நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் சமுதாய முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையான சுவரான சாதியம் பற்றிப் பேசுவதைப் பொறுத்த வரையில் தமிழ் சினிமா மௌனப் படமாகவே இருந்து வந்தது. எப்போதேனும் வந்த சில மாறுபட்ட படங்களும் மேலோட்டமாகவே சாதிப் பிரச்சினைகளை அணுகின.

 

சிவாஜி கணேசன்,ஜெயலலிதா நடிக்க மாதவன் இயக்கிய ‘பட்டிக்காடா பட்டனமா’, விஜய்காந்த், சுகன்யா நடித்து ஆர்.வி.  உதயகுமார் இயக்கத்தில் வந்த  ‘சின்ன கவுண்டர்’, அதே இயக்குநரிடமிருந்து ரஜினிகாந்த், மீனா நடித்து வெளியான ‘எஜமான்’, விஜயகுமார், குஷ்பு நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்த ‘நாட்டாமை’ உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க படங்கள், குறிப்பிட்ட இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த நாயகர்களின் பெருமைகளைப் போற்றின. அவர்களின் நியாயமான செயல்களால் பிற சாதி மக்களும் அவர்களை வணங்குவார்கள். ‘எஜமான்’ படத்தில் ஊர்தலைவர் வானவராயன் நடந்துசெல்லும் பாதையில் அவர் காலடி பட்ட மண்ணை எடுத்து எளிய மக்கள் நெற்றியில் பூசிக்கொள்வார்கள். கிராமத்துக் கதை என்ற பெயரில் இப்படிப்பட்ட படங்கள்  நிலவுடைமைத்துவப் பெருமையை நிலைநாட்டவே முயன்றன.




 

கமல்ஹாசன் தயாரித்து நடித்த, அவருடன் சிவாஜி கணேசன், ரேவதி, நாசர் நடித்த, பரதன் இயக்கத்தில், படைப்பு என்ற வகையில் பலவகையான பாராட்டுகளுக்கும் உரியதாக ‘தேவர் மகன்’ வந்தது. ஆனால், ஊரின் பெரிய மனிதரான பெரியசாமித் தேவர், அவரை அவமானப்படுத்தும் அவரது சாதியைச் சேர்ந்தவனான மாயத்தேவன், தந்தையின் பெருமையை மீட்கும் மகன் சக்திவேல் என்ற கதைப்பாட்டையில் பிற பிரிவுகளின் மக்களை  விசுவாசிகளாக மட்டுமே சித்தரித்தது. பிராமணக் குடும்பத்தவரான வாலி எழுதி, தலித் குடும்பம் சார்ந்தவரான இளையராஜா இசையமைத்த “போற்றிப் பாடடி பொண்ணே” பாட்டு குறிப்பிட்ட சமூகத்தினரது நிகழ்வுகளில் அவர்களது தேசியகீதம் போல ஒலிக்கிறது.

 

சேரன் இயக்கத்தில், ஹென்றி தயாரித்த ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் பார்த்திபன், மீனா, விஜயகுமார் நடித்திருந்தார்கள். தலித் இளைஞனான பாரதி, தேவர் சாதியைச் சேர்ந்தவரும் நிலவுடைமையாளருமான வெள்ளைச்சாமியிடம் வேலை செய்கிறான். அவரது மகள் கண்ணம்மாவுக்கு  அவன் மீது  காதல் மலர்கிறது. ஆனால் பெரியவர் மீதான விசுவாசத்தால் அவன், அவளை விரும்பினாலும் கூட, ஒதுங்குகிறான். சாதி வேறுபாடு பார்க்காதவரான பெரியவர், அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று கண்டுபிடிக்கிறார். அவள் தற்கொலை செய்துகொள்ள, சிதையில் பாரதி குதித்து தன்னையே   எரித்துக்கொள்கிறான். அவனைத்தான் கண்ணம்மா காதலித்தாள் என்று அப்போதுதான் தெரியவருகிறது. சாதி வேலி தாண்டிய காதல் எதிர்கொள்ளும் சவாலைச் சொல்ல வந்த படம், சமூக நிலவரங்களுக்குள் ஆழமாக இறங்காததுடன், விசுவாசத்தையே முன்வைத்தது. ஒரு பஞ்சாயத்தில் தன் சாதியைச் சேர்ந்தவனுக்கே தண்டனையளிக்கும் பெரியவரைக் கும்பிட்டு நன்றி தெரிவிப்பவர்களாகவே  சேரி மக்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

 

படித்து வாங்கிய பட்டமா?

 

தமிழ் சினிமாவின் கலை வெளிப்பாட்டில் புதுப்பாதை போட்டவர்களில் முக்கியமானவரான பாரதி ராஜா இயக்கி சத்யராஜ், அமலா, சாருஹாசன் நடித்த படம் ‘வேதம் புதிது‘.





பாலுத் தேவர் –  பேச்சி இவர்களது மகனான சங்கரபாண்டி, புரோகிதரான நீலகண்ட சாஸ்திரியின் மகள் வைதேகி இருவரும் காதலிக்கிறார்கள். சாஸ்திரி மகளை தன் சாதிக்காரனுகே திருமணம் செய்துவைக்க முயல்கிறார். தப்பித்துவிடும் வைதேகி, தான் இறந்துவிட்டதாக நம்பவைத்துவிட்டு ஒரு வன அலுவலரிடம் அடைக்கலமாகிறாள்.. ஒரு சிற்றருவியில் சங்கரபாண்டியைச் சந்திக்கும் சாஸ்திரி தன் மகளின் சாவுக்கு அவன்தான் காரணமெனக் குற்றம் சாட்டுகிறார். தவறி விழுந்துவிடும் சங்கரபாண்டியைக் காப்பாற்ற முயல்கையில் அவரும் விழுந்துவிட சாதி கடந்து இருவரும் சடலங்களாக இணைகிறார்கள். வைதேகியின் தம்பி சங்கரன் உறவினர்களால் புறக்கணிக்கப்படுகிறான். அவனுக்கு பாலுத் தேவர் அடைக்கலம் அளிக்கிறார். இப்படியாகப் பின்னப்படும் கதையில், பாலுத்தேவரிடன் சங்கரன், ”பாலுங்கிறது உங்க அம்மா அப்பா வச்ச பேரு,. தேவர்ங்கிறது படிச்சு வாங்கின பட்டமா” என்று கேட்பான். இறுதியில் அவனும் தன் சாதி அடையாளமான பூணூலைக் கழற்றி எறிவான். பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை என்றாலும் ஒரு குலுக்கலை ஏற்படுத்திய படம் இது.

 

பாரதிராஜாவிடமிருந்து புறப்பட்டவரான மணிவண்ணன், தனது ‘அமைதிப்படை’ படத்தில், “அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது கொலம்பஸ்னு சொல்ற, இந்த சாதிக் கருமாந்திரத்தை எவன் கண்டுபிடிச்சான்,” என்று கேட்க வைத்திருந்தார்.. ‘ஆண்டான் அடிமை’, ‘முதல் வசந்தம்’, ‘தோழர் பாண்டியன்’, ‘வீரப்பதக்கம்’ ஆகிய படங்களில் தலித் பிரச்சினை உள்ளிட்ட சாதிச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருந்தார். 2014ல் வந்த ‘ஜீவா’ படத்தின் மூலம், கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக்கொண்டு, சாதிப்பாடு எப்படி ஒரு திறமையாளனின் கனவைப் பொசுக்குகிறது என்று காட்டியிருப்பார் இயக்குநர் சுசீந்திரன்.

 

சூப்பர் ஸ்டார்கள் பேசுகிறபோது

 

கதை வழியாக சாதிப் பிரச்சினையைப் பேசுவதில் பெரிய அசைவு ஏற்படாதா என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, இதோ வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது பா. ரஞ்சித் வருகை. அவருடைய முதல் படமான, தினேஷ் முதலியோர் நடித்திருந்த ‘அட்டக் கத்தி’ (2012), சாதிப் பாகுபாடுகள் பற்றி விவாதிக்கவில்லை என்றாலும், சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதியில் வாழும் தலித் குடும்பங்களைக் கதாபாத்திரங்களாகக் காட்டியிருந்தது.  2014இல் கார்த்தி நடிப்பில் வந்த ‘மெட்ராஸ்’, வட சென்னையின் ஒரு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளால் மூட்டிவிடப்படும் மோதல்களைக் காட்டியது. அத்துடன், அம்பேத்கர் சொன்னது போல், தடைகளை மீறி முன்னேறுவதற்குக் கல்வி தேவை என்ற செய்தியையும் அழகாகச் சொன்னது. தலித் கதை என்றால் அவலங்களும் துயரங்களுமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? ரஜினிகாந்த் நாயகப் பாத்திரத்தில் நடித்த ‘கபாலி’ (2016), அவருடைய ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் விறுவிறுப்பும் சாகசங்களுமாக, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வென்றவனின் கதையைச் சொன்னது.

 

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அந்தப் படம் பற்றியே ஒரு கேள்வி வந்தது. உடன் பங்கேற்றவர், ரஜினிகாந்த்தை வைத்து, வழக்கமான மசாலாப் படமாக எடுத்து தலித் பிரச்சினையைப் பேசிவிட முடியுமா என்று கேட்டார். கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கிற ஒரு நடிகரின் மூலம் தலித்துகள் நிலைமை பற்றிய சில செய்திகள் சொல்ல வைக்கப்படுகிறபோது, அத்தனை கோடிப் பேரிடம் அந்தச் செய்திகள் போகின்றன, அது முக்கியமானது என்று நான் என் கருத்தைக் கூறினேன். அந்தக் கருத்து சரிதான் என்ற உறுதிப்படுத்தியது அடுத்து ரஜினியே நடித்து  2018ல் வந்த ‘காலா’. நில உரிமையோடு தலித் மக்களின் முழு விடுதலை லட்சியம் இணைந்திருப்பதையும் சொல்லிச் சென்றது.




 

2021ஆம் ஆண்டில் ஆர்யா, பசுபதி, துஷாரா நடித்து வெளியான ‘சார்பட்டடா பரம்பரை’, 1975இன் அவசரநிலை ஆட்சிக்காலப் பின்னணியில், அன்றைய வடசென்னையின் குத்துச்சண்டைப் போட்டிக் களத்திற்கு அழைத்துச் சென்றது. தலித் இளைஞனான கபிலன் புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் மீறி வெல்கிறான். திமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோரை உலாவவிட்ட அந்தப் படம், அவசரநிலை ஆட்சியை எதிர்த்துச் சிறைக்கும் சென்ற மார்க்சிஸ்ட்டுகளை மருந்துக்கும் காட்டவில்லை. ஆயினும் “இனிமே நம்ம காலம்தான்” என்று தலித் உரிமைக் களத்தில் நிற்போருக்கு நம்பிக்கை அளித்தது உண்மை. 2022இல் துஷாரா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன் நடிப்புப் பஙகேற்புடன் வந்த ‘ஒரு நட்சத்திரம் நகர்கிறது’ படம் கதை, கலை இரண்டிலுமே மிகவும் மாறுபட்ட அனுபவத்தைத் தந்தது, மாறாத சாதியம் பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்தது. பலருக்குள்ளும் ஊறியிருக்கிற ஆண்ட பரம்பரைப் பெருமையைச் சிதறடித்தது. கூடவே தற்பாலின ஈர்ப்பாளர்களின் உளவியலை கண்ணியமான முறையில் புரிந்துகொள்ளக் கோரியது.

 

2024இல் விக்ரம், பசுபதி உள்ளிட்டோரின் பங்களிப்போடு வந்த ‘தங்கலான்’, கோலார் தங்கவயலைக் களமாக்கி, அங்கே தங்கம் கிடைப்பதைக் கண்டுபிடித்தவர்களே தலித்துகள்தான் என்று நெஞ்சுயர்த்தச் செய்தது. அதனூடாக, தலித்துகளுக்குப் பூணூல் போட்டுவிட்டுக் கலகம் செய்த ராமானுஜரின் முயற்சியைத் தொட்டுக்காட்டி, அது பலனளிக்கவில்லையே என்று யோசிக்க வைத்தது. சாதிபேத விதிகளை எதிர்த்துக் கிளம்பிய புத்த இயக்கத்தின் மீது ஆதிக்கவாதிகளுக்கு இருந்த ஆத்திரத்தை, தலை வெட்டப்பட்ட புத்தர் சிலை மூலமாக உணர்த்தியது.

 

அடையாளங்களாக

 

ரஞ்சித் திறந்துவிட்ட பாதையில் இன்று குறிப்பிடத்தக்க அடையாளம் பெற்றுவிட்ட இயக்குநர்கள், தமிழ் சினிமாவுக்கும் புதிய அடையாளம் சேர்த்து வருகிறார்கள். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு, கலைப்புலி தானு தயாரிப்பில், தனுஷ் உள்ளிட்டோரின் நடிப்புடன் வெற்றிமாறன் உருவாக்கிய ‘அசுரன்’, அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில், ஒரு எளிய விவசாயத் தொழிலாளியை பணக்காரத் திமிரோடு சாதி வெறியும் இணைந்து குற்றவாளியாக்கிச் சிறைக்கு அனுப்பிய சூழலைப் படம் பிடித்துக் காட்டியது. 2023, 2024 இரு ஆண்டுகளிலும் விஜய் சேதுபதி, சூரி பங்கேற்பில், இரண்டு பாகங்களாக வந்த ‘விடுதலை’ சாதி ஒடுக்குமுறைக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிராகக் களமிறங்கிய கம்யூனிஸ்ட்டுகள் பற்றியும், அணுகுமுறைகள் தொடர்பான விவாதங்கள் பற்றியும் ரசிகர்களுக்குப் புதிய சிந்தனைகளைக் கொடுத்திருக்கிறது.




 

ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி நடித்து 2018இல் வெளியான அந்தப் படம், சாதி ஆணவத்தின் அருவருப்பை அம்பலப்படுத்தியது. கல்வியின் தேவையைச் சொல்லி, தனிப்பட்ட பழிவாங்கல், வன்முறை என்ற பாதைக்குப் போகாமல் கவித்துவமான மனிதத்துவத்தை உயர்த்திப் பிடித்தது. 2021இல், தனுஷ், நட்ராஜ், சரவணன் நடிப்பில் வந்த அவரது ‘கர்ணன்’, இந்த மக்கள் வன்முறைப் பாதைக்குப் போகிற நிலை எப்படி யாரால் ஏற்பட்டது என்று காட்டுகிறது. ஊரில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்படுவது, காவல்துறை அதிகாரிகளிடையே புரையோடிய சாதி என பல கூறுகள் நேர்த்தியான கலைப் பின்னலாகவும் முன்வைக்கப்பட்டன. 2024ல் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்திருந்த மாமன்னன் படம், அரசியல் களத்தில் தலித் மக்களின் கொடி ஊன்றப்படுவதை, நம் ஊரில் நடந்த நிகழ்வுகள் போல உணர வைத்தது.

 

2021இல் ஞானவேல் இயக்கிய, சூர்யா, மணிகண்டன் நடித்த படம் ‘ஜெய்பீம்’. ஒரு திருட்டுக் குற்றம், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவனின் மீது, அவன் அந்தச் சமூகத்தவன் என்பதாலேயே சுமத்தப்படுவதை வெளிச்சப்படுத்தியது.. விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டவனுக்கு என்ன ஆனது என்று வழக்குரைஞர்  சந்துரு விசாரிக்கப் புறப்பட, தெரியவரும் உண்மைகள் உறைய வைக்கின்றன, உறைந்து   கெட்டிப்பட்டிருக்கும் அமைப்பைத் தகர்க்கப் புறப்பட்டிருப்போரோடு இணைந்திடத் தூண்டுகின்றன.




 

2022இல் தீபக் இயக்கத்தில் ரோஹிணி, தமிழரசன், ஸ்ரத்தா உள்ளிட்டோரின் நடிப்பில் வந்தது  ‘விட்னஸ்’.  ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் கழிவறைத் தொட்டியில், அடைப்பை நீக்குவதற்காக இறக்கிவிடப்பட்ட  இளைஞர், நச்சுவாயுத் தாக்குதலில் உயிரிழக்கிறார். தாய் இந்திராணியின் உறுதியான போராட்டத்தின் விளைவாக, இந்தப் பணியில் ஏன் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இறக்கிவிடப்படுகிறார்கள் என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது. நீதிமன்ற விசாரணைக்கும் போகிறது. நவீன நாடகக் காட்சி போன்ற கடைசிச் சித்தரிப்பு சமுதாயத்தில் பெரும் சவாலாக இருக்கும் அரசியல்வாதி – தொழிலதிபர் – அதிகாரி கூட்டு பற்றிய உண்மையையும் யோசிக்க வைத்தது.

 

அடுத்தடுத்து இவ்வகையான படங்கள் இத்தனை வந்திருக்கின்றனவா என்ற வியப்புக் குறி  நிமிர்கிறது. ஆனால், ஓராண்டில் சராசரியாக வரும் படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகிறபோது, இத்தனை படங்கள்தான் வந்திருக்கின்றனவா என்ற வினாக்குறியாக வளைகிறது.தமிழ் சினிமா வளர்ச்சியின் முற்பகுதியில் அதற்குப் பங்களித்த இயக்கங்கள் போல, இன்றைய இயக்கங்களும் தலித் எழுச்சியும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. ஆம், அரசியல்–பண்பாட்டுக் களம் கலை–இலக்கியத்திற்குப் பங்களிக்கிறது, அதற்குக் கைமாறாக கலை–இலக்கியம் அரசியல்–பண்பாட்டுக் களத்திற்குப் பங்களிக்கிறது. மாறுபட்ட பல்வேறு கதைக்கருக்களைத் தேர்வு செய்யாமல் பழைய தடங்களிலேயே தமிழ் சினிமாவை ஓட்டிக்கொண்டு போக முடியாது என்ற சூழல் உருவாகியிருப்பது நன்னிலை. இது தொடரும், விரியும் என்ற நம்பிக்கையைத் தருகிற இந்தப் படைப்பாளிகள் பெற்றிருப்பது முன்னிலை.

                                                    *************

-தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வரும் ‘அணையா வெண்மணி’ மார்ச் 2025 இதழில் எனது கட்டுரை.