Saturday, 25 October 2025

பேசிக்கொண்டே போகிறார் ட்ரம்ப், பேசாமலே இருக்கிறார் மோடி - இதுதான் ராஜதந்திரமா?

 


நினைவில் வாழ்கிற ஒரு தலைவர் அல்லது கலைஞர் பற்றிப் பேசுகிறபோது சிலர், ‘அவர் என்னிடம் தனியாக அப்படிச் சொன்னார். தனிப்பட்ட முறையில் அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்’ என்று கூறுவதுண்டு. அவர்கள் சொல்வது உண்மையா இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வழியின்றி நமக்குத் திகைப்பாக இருக்கும். கிட்டத்தட்ட அதே திகைப்பு இப்போது நமக்கு அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பைக் கேட்கிறபோது ஏற்படுகிறது.


தீபாவளியையொட்டி ட்ரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த செவ்வாயன்று (அக்.21) தொலைபேசியில் உரையாடினார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். வெள்ளை மாளிகையிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

‘மேகா’ என்ற ஓர் இயக்கம்! 

மக்கள் வகைப்பாடு தொடர்பாக பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்திய வம்சாவளியினர் 52 லட்சம் பேர் அமெரிக்கக் குடிமக்களாகவே வாழ்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறை கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களையும் (என்.ஆர்.ஐ) சேர்த்து மொத்தம் 56.9 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் ஆசியர்களில் இரண்டாவது பெரிய குழுவாக இந்தியர்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டில் இந்தியர் மக்கள்தொகை இந்த அளவுக்குக் கணிசமாக இருப்பதன் வெளிப்பாடுதான் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்.



இங்கே கூடுதலாக ஓர் இணைப்புத் தகவல்: ‘‘அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்குவீர்’’ என்ற முழக்கத்தை எழுப்பிவரும் இயக்கத்தினர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இனத்தூய்மைவாதம் பேசுகிற இந்த இயக்கம், பூர்வீக அமெரிக்கர்கள் தவிர்த்து மற்ற இனத்தவர்கள் வெளியேற வேண்டுமென்று வற்புறுத்துகிறது.

குடியேறி வந்தவர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான பகையுணர்வை அந்த இயக்கம் வளர்க்கிறது. அமெரிக்காவின் அரசமைப்பு சாசனத்தைத் திருத்தி, ஒரு கிறிஸ்துவ நாடாக அறிவிக்க வேண்டுமெனப் பரப்புரைக்கிறது. இந்த முழக்கம் 1980-களிலேயே ரொனால்டு ரீகன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கிளப்பியதுண்டு என்றாலும், ‘மேகா’ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த இயக்கத்தை 2020-ம் ஆண்டுத் தேர்தலின்போது பெரிய அளவில் வளர்த்துவிட்டவர் – வேறு யாருமல்ல, திருவாளர் ட்ரம்ப்தான்.


மோடி உறுதியளித்தாரா?
தீபாவளிப் பட்டாசுகளுக்குப் பின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ட்ரம்ப், மோடியுடன் பேசியது பற்றிக் கூறினார். “இருவரும் பண்டிகை வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாகப் பேசினோம்” என்றும் கூறினார்.

மேலும், “சில சிறந்த உடன்பாடுகளின் கீழ் இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கப்போவதில்லை என மோடி எனக்கு உறுதியளித்தார். ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை மோடியும் விரும்புகிறார்” என்று, ஏற்கெனவே சொல்லி வருவதை மறுபடியும் குறிப்பிட்டார். வர்த்தக அடிப்படையில் பேசித்தான் இந்தியா–பாகிஸ்தான் போரைத் தன்னால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் ட்ரம்ப் கூறினார்.

கடந்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த மூன்றாவது தொலைபேசி உரையாடல் இது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது தன்னுடைய தலையீட்டால்தான் என்று ட்ரம்ப் கூறியிருப்பது எத்தனையாவது தடவை என்று கேட்டால் ஊடகங்களுக்கே சற்றுத் தடுமாற்றம் ஏற்படும். அத்தனை தடவை திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு தடவை கூட பிரதமர் மோடி நேரடியாக இது பற்றி எதுவும் சொன்னதில்லை. இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள்தான் அதெல்லாம் இல்லை என்று மறுத்து வந்திருக்கிறார்கள்.



இப்போதும் தீபாவளி உரையாடலை மோடி உறுதிப்படுத்தியிருக்கிறார். தனது ‘எக்ஸ்’ பதிவில் ட்ரம்ப் அழைத்துப் பேசியதற்கு மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். “இரு நாடுகளின் ஜனநாயகம் உலகத்திற்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கிறோம்,” எனப் பொதுவான, அரசுறவு சார்ந்த பகிர்வுதான் அந்தப் பதிவில் இருக்கிறது. வர்த்தகம் தொடர்பாகவோ, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது பற்றியோ ஏதேனும் பேசியதற்கான குறிப்பு ஏதுமில்லை.

ஆயினும், இருவருக்கும் இடையே அத்தகைய உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்திருக்கிறார். ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி எந்தவொரு உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். “நிலையற்ற எரிசக்திச் சூழ்நிலையில் இந்தியாவின் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதே நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இறக்குமதிக் கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன’’ என்று அவர் விளக்கமளித்தார்.

மௌனம் ஏனோ?

இது ஏற்கத்தக்க அதிகாரபூர்வ விளக்கம்தான், அரசுடன் கலந்து பேசாமல் இதை அவராக வெளியிட்டிருக்க மாட்டார்தான். ஆயினும், உள்நாட்டு விவகாரங்கள் எது வந்தாலும் அது பற்றிச் செய்தியாளர்களுடன் பேசுவதில்லை என்ற விரதத்தைக் கடைப்பிடிக்கும் பிரதமர் மோடி, வெளிநாட்டுறவு தொடர்பான பிரச்னையிலும் பதிலளிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் தள்ளிவிட்டு, மௌனம் காப்பது ஏன்? அதில் என்ன “ராஜதந்திரம்” இருக்கிறது? ட்ரம்ப்பின் இப்படியான தடாலடிகள் வரும்போதாவது, செய்தியாளர்கள் வழியாக உங்கள் குடிமக்களுடன் “மனதின் குரல்’’ நடத்தலாமே பிரதமர் அவர்களே?




ஆனால், மௌனத்தின் குரலாக அவர் வெளியிட்டுள்ள பதிவு வர்த்தகம் பற்றியும், ரஷ்ய எண்ணெய் பற்றியும் வெளிப்படையாகப் பேசாமல், பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றை மட்டும் வெளிப்படுத்துகிறது. இது, ட்ரம்ப்பின் தன்னிச்சையான, எல்லாமே தன்னால்தான் நடக்கிறது என உரிமை கோரும் பாணியிலான அறிவிப்புகளுக்கு நேரடி பதில் அளிப்பதைத் தவிர்க்கிற இந்தியாவின் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காட்டுகிறது என்று உலக அரசியல் நடப்புகளைக் கவனிப்போர் கூறுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25+25 சதவிகிதம் வரி விதிப்பு யுத்தத்தை ட்ரம்ப் தொடங்கியது தெரிந்ததுதான். அந்தப் போரை நிறுத்திக்கொள்ள வேண்டுமானால் ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.


எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியா கொடுக்கும் பணத்தைக் கொண்டுதான் உக்ரைன் மக்களைக் கொன்றொழிக்கும் ஆயுதங்களை ரஷ்யா வாங்குகிறது, அதைத் தடுப்பதற்காகவே டாரிஃப் கெடுபிடி என்று காரணம் கூறினார் ட்ரம்ப். ஆனால், அடுத்தடுத்த செய்திகள், அவருடைய உண்மையான நோக்கம் அமெரிக்காவிடமிருந்து அதிக எண்ணையை இந்தியா வாங்க வைப்பதுதான், அமெரிக்க எண்ணை நிறுவனங்களின் முதலாளிகளை மனம் மகிழச் செய்வதுதான் என்று காட்டிவிட்டன.
தேர்தலுக்காக டாரிஃப் கெடுபிடி!

அத்துடன் அமெரிக்காவில் அடுத்தடுத்து நாடாளுமன்ற (காங்கிரஸ்) அவைகளுக்கான உறுப்பினர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகள் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் வரவுள்ளன. டாரிஃப் கிடுக்கிப் பிடிகளால் மற்ற நாடுகளை இணங்கிப்போக வைத்துவிட்டால், அதனால் பெருகக்கூடிய செல்வாக்கு வாக்கு வங்கியில் வரவுகளை அதிகரிக்கச் செய்கிற அரசியலுக்குப் பயன்படும் என்ற கணக்கு ட்ரம்ப்புக்கும் அவரது குடியரசுக் கட்சிக்கும் இருக்கிறது.

டாரிஃப் குண்டுவீச்சால் கடும் இடிபாடுகளை, அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ள இந்தியத் தொழில்கள் சந்திக்கின்றன. இந்நிலையில்தான், உள்நாட்டுத் தயாரிப்புகளையே மக்கள் வாங்கவும், வணிகர்கள் விற்பனை செய்யவும் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர்.

அதற்குத் தோதாக, முன்பு இந்தியாவின் வளர்ச்சிக்கே இதுவொரு முக்கியத் தேவை என்று நியாயப்படுத்தப்பட்ட ஜ.எஸ்.டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. பெரும்பாலான பொருள்களுக்கு 5%, 12%, 18%, 28% என்ற நான்கடுக்குக் கட்டமைப்பிலிருந்து 5%, 18% என்று இரண்டடுக்காக மாற்றப்பட்டன.


பண்டிகைப் பரிசாம்!

இதை மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். குழந்தையிடமிருந்து பறித்து வைத்துக்கொண்ட ஒரு விளையாட்டுப் பொருளை ஒரு நெருக்கடியை சமாளிப்பதற்காக மறுபடியும் கொடுத்து, இது உனக்குப் பரிசு என்று சொல்வது போல் இல்லையா இது?


இருந்தபோதிலும், இந்தத் தீபாவளிக்கு நாடு முழுவதும் பல்வேறு பொருள்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகியிருக்கிறது, அதற்கு ஒரு முக்கியமான காரணம் ஜி.எஸ்.டி குறைப்புதான் என்று வர்த்தகர் சங்கங்கள் கூறுகின்றன. அதை மறுப்பதற்கில்லை. இத்தனை நாட்கள் அப்படிப்பட்ட பொருளாதார சுழற்சியை முடக்கியதற்கு யார் பொறுப்பேற்பது?

எவ்வாறாயினும், பண்டிகைக் கால விற்பனையை மட்டும் வைத்து ஆண்டு முழுக்க உள்நாட்டுச் சந்தை நிலவரம் இப்படியே இருக்கும் என்று கூற முடியாது. மேலும், டாரிஃப் கெடுபிடியால் தேங்கிடும் பொருள்களையும் பொருளாதாரத்தையும் இதனால் ஈடுகட்டிவிட முடியாது என்று வணிகவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உள்நாட்டில் ஒரு பேரலையாக வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, பெரும்பான்மையான எளிய–நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்துவது, அவர்கள் கையில் தாராளமாகப் பணப் புழங்கச் செய்வது, இதற்கெல்லாம் வழிவிடும் வகையில் கார்ப்பரேட்டுகளின் வேலைநீக்க மோகத்தை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளோடு இணைய வேண்டும்.

ஒரு பேச்சுக்காக, உண்மையாகவே இவற்றுக்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்துக்கொண்டால், நோக்கம் நிறைவேறுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆகவே, அமெரிக்காவுடனான வணிகத்தை மீட்பதும், ஏற்றுமதிகளை மறுபடி உறுதிப்படுத்துவதும் ஒரு நடைமுறைத் தேவையாகவும் இருக்கிறது. இன்றைய உலகமய வணிகக் களத்தைப் பொறுத்தவரையில் இந்த மீட்பு முயற்சியில் தவறில்லை.


 வர்த்தகப் பேச்சும் உச்சிமாநாடும்!

இந்தப் பின்னணியில்தான் இந்தியா–அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த மாதம் 26 முதல் 28 வரையில் மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. அதில் ட்ரம்ப் கலந்துகொள்ள இருக்கிறார் (ஆசியான் அமைப்பு தனது முக்கிய உரையாடல் கூட்டாளியாக அமெரிக்காவை அங்கீகரித்துள்ளது. அந்த அடிப்படையிலேயே அமெரிக்க அரசுத் தலைவர்கள் உச்சி மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறார்கள். இப்போது ட்ரம்ப்).
வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டின்போது மோடியும் ட்ரம்ப்பும் சந்திக்கிற வாய்ப்பு அமையும் என்றும், அது வர்த்தகப் பேச்சுக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மாநாட்டிற்கு மோடி நேரில் வரவில்லை என்றும், இணையவழி காணொளியில் அவர் உரையாற்றுவார் என்றும் ஆசியான் தலைவரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் தீபாவளி சார்ந்த விழாக்களில் மோடி கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, அவரால் மாநாட்டிற்கு நேரில் வர இயலவில்லை என்று தனக்குக் கூறப்பட்டிருப்பதாகவும் அன்வர் தெரிவித்திருக்கிறார். ஊடகங்களும் அரசியல் பார்வையாளர்களும் சுட்டிக்காட்டுவது, இரு நாட்டுப் பேச்சுவார்த்தை இறுதி வடிவத்தை அடைவதற்கு முன் அரசுத் தலைவர்கள் சந்திப்பதில்லை என்ற. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கப்படியே ட்ரம்ப்புடனான சந்திப்பை மோடி தவிர்க்கிறார் என்பதாகும்.

அத்துடன், சும்மாவே, அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று விளம்பரப்படுத்தத் தயங்காதவரான ட்ரம்ப், மாநாட்டுக்குப் பிறகும் அவ்வாறு நடந்துகொள்ள அதிக வாய்ப்பிருப்பதாலும் சந்திப்பு தவிர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது, உள்நாட்டில் கட்டியிருக்கும் பிம்பத்திற்கு இடையூறாகிவிடும் என்ற எச்சரிக்கையும் இருக்கக்கூடும்.


 என்ன நிபந்தனைகள்?

இதனிடையே, பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஏற்படும் உடன்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மரபணு நீக்கப்படாத சோளம், சோயாபீன்ஸ் உள்ளிட்ட வேளாண் விளைச்சல்கள், பாலாடைக் கட்டி முதலான பால் தயாரிப்புகள், பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயு ஆகிய எரிசக்தி மூலங்கள் என அமெரிக்காவிலிருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்குப் “பரிசாக” டாரிஃப் விகிதங்கள் பழைய நிலைமைக்கு இறக்கப்படும்.

குறிப்பாக வேளாண் மற்றும் பால் பொருள்களுக்கு இந்தியச் சந்தையை அகலமாகத் திறந்துவிடுவது, உள்நாட்டு விவசாயத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது விவசாயிகளை மறுபடியும் போராட்டக் களத்தில் திரளச் செய்துவிடும்.


இன்னொரு பக்கம், உலகக் களத்தில், பாலஸ்தீன மக்களுக்கு அமெரிக்க ஆதரவோடு இஸ்ரேல் அரசு இழைத்துவரும் அநீதிகளுக்கு மோடி அரசு “அதிகாகாரப்பூர்வமாக“ எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை. சமநிலைப்படுத்தும் அணுகுமுறையுடன், பொதுமக்கள் உயிரிழப்பையும் மனிதநேய நெருக்கடியையும் ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறது, உதவிப் பொருள்கள் அனுப்பி வருகிறது. ஐ.நா பொதுச்சபையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோருதல், பாலஸ்தீனம்–இஸ்ரேல் என இரு நாடுகளையும் அங்கீகரித்தல் ஆகிய தீர்மானங்களுக்கு ஆதரவாகவே இந்திய தூதர் வாக்களித்திருக்கிறார். 


இவை வரவேற்கத்தக்கவையே என்ற போதிலும், அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியாவின் வெளிப்படையான கண்டனம் அறம் சார்ந்த வலிமையை பாலஸ்தீனத்திற்கு வழங்கும். அதை வழங்குவதில் என்ன தயக்கம்? எதற்காகத் தயக்கம்? அமெரிக்காவிடமிருந்து டாரிஃப் தாக்குதல் வருவதற்கு முன், அதன் உலக அரசியலுடன் ஒத்துப் போகிற நிலைப்பாட்டை மேற்கொண்டதுதான் காரணமா?

இவையெல்லாம் கற்பனையான கேள்விகள், வீண் குற்றச்சாட்டுகள் என்றால், ட்ரம்ப் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளிவிட்டு, இவற்றைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசுங்களேன் பிரதமர் அவர்களே?

[0]

விகடன் ப்ளஸ் (அக்.24) கட்டுரை






Monday, 20 October 2025

வரலாறு முக்கியம் அன்பரே...



 “நானும் வரலாற்றைப் படிச்சுட்டுதான் உங்க கூட ஆர்கியூ பண்றேன், தெரிஞ்சிக்கிடுங்க.”

காலைநடை நிறைவின் பூங்கா உரையாடலில் அண்மை நாட்களாகக் கலந்துகொள்ளும் நண்பர் சொன்னார். இன்றைய பேச்சு கொஞ்சம் சூடேறியதன் தாக்கம் தெரிந்தது. இத்தனைக்கும் இன்று நாங்கள் பேசியது, உள்நாட்டு விவகாரம் அல்ல, காஸா கொலைக்களம் பற்றி.

“படிக்கிறீங்கன்றது மகிழ்ச்சி. ஆனா, படிச்சுட்டுப் பேசறதாலேயே நீங்க சொல்றது உண்மையா இருக்கணும்கிறது இல்லை.”

“அதான பார்த்தேன், புதிர் போடாமப் பேச மாட்டீங்களே! வரலாறு படிச்சுட்டுப் பேசுறாருங்கிறதை அக்ரீ பண்றீங்கன்னா, அவரு உண்மையைச் சொல்றாருன்னுதானே அர்த்தம்?”

இது தொடக்கத்திலிருந்தே உரையாடலில் பங்கேற்கும் கூட்டாளி.

“வரலாற்றுப் புத்தகம் படிக்கிறது முக்கியம். அது யார் எழுதுனதுங்கிறது அதை விட முக்கியம். அப்பதான் அது உண்மையான வரலாறுதானா, இல்லை இட்டுக்கட்டுனதான்னு புரிஞ்சிக்க முடியும்.”

“டூ யூ ஸே ஐ அம் லையிங்? அப்ப நான் உண்மையைச் சொல்லைன்னு சொல்றீங்களா?”

“இல்லை. உண்மையான வரலாற்றைச் சொல்ற புத்தகம் உங்களுக்குக் கிடைக்கலைன்னு சொல்றேன்.”

பாலஸ்தீன நிலவரத்தை விவாதப் பொருளாக்கிய நண்பர், மழைச் சூழலிலும் எழுந்த சூட்டைத் தணிக்க எங்களைத் தள்ளிக்கொண்டு போனார் டீக் கடைக்கு.

Friday, 17 October 2025

பைசன் - காளமாடன்


மாரி செல்வராஜ் படமென்றால் இரண்டு எதிர்பார்ப்புகளுடன் போகலாம் – அடர்த்தியான கதை கிடைக்கும், சுவையான திரையனுபவம் வாய்க்கும். இப்போது ‘பைசன் காளமாடன்’ மறுபடி அந்த இரண்டையும் வழங்குகிறது.

கபடி ஆட்டத்தில் வீட்டுக்கு வீடு நாட்டம் வைத்திருக்கிற ஒரு சிற்றூர் வனத்தி. சிறுவயதிலிருந்தே உடலின் அணுக்களெல்லாம் கபடியாக இருக்கும் கிட்டன். விளையாட்டுக் களத்தில் சந்திக்க நேரிடும் பொறாமைகளையும் சூதுகளையும் அவன் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான் என்று கதை போயிருந்தால் இது வழக்கமானதொரு ஸ்போர்ட்ஸ் சினிமா.

கபடிக் களத்தில் இரு அணிகளும் ஒன்றையொன்று காலைப் பிடித்து இழுப்பதிலும் ஏறிச்சென்று அடிப்பதிலும் உள்ள மோதல் வெளிப்படையானது. ஆனால், வாழ்க்கைக் களத்தில் மூச்சைப் பிடித்து ஆடுகிற கபடியாட்டத்தில் உள்ள சமூக மோதல் நுட்பமானது, ஆனால் வன்மம் நிறைந்தது. எதற்காக என்றே தெரியாமல் தலைமுறைகளாகத் தொடரும் அந்தப் பகையில் எத்தனை பழிகள், எத்தனை பலிகள்! அவற்றை, அன்றைய நெல்லை மாவட்ட சாதிக் கலவங்களின் பின்னணியோடு காட்சிவிளைவுகளாகப் பதிவு செய்திருப்பதால் இது புதியதொரு சோசியல் சினிமா.

1990களின் முற்பகுதியில் உலக கபடிப் போட்டி மைதானத்தில் இந்திய அணியில் ஒருவனாக கிட்டன் ஆடுவதை அவனுடைய ஊர் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கிறது. நமக்கும் அந்த முதல் காட்சி கறுப்பு வெள்ளையிலேயே வருகிறது. அந்த இடத்திற்கு அவன் எப்படிப்பட்ட தடைகளையெல்லாம் தாண்டி வந்தான் என்ற முன்கதை பல வண்ணத்தில் தொடர்கிறது. பொதுவாக முன்கதை க.வெ.யிலும், பின் கதையைப் ப.வ.விலும் பார்த்து வந்திருக்கிற நிலையில் இதுவே மாறுபட்ட அனுபவத்திற்குத் தயார்ப்படுத்துவதாக இருக்கிறது.

அத்துடன், அவன் லட்சியத்தில் வெற்றிபெற்றுவிட்டது முதலிலேயே தெரிந்துவிடுவதால் என்ன ஆகுமோ என்ற பரபரப்புக்கு மாறாக, எப்படி அது ஆகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தொற்றுகிறது.

கபடி ஆட்டம் திரும்பத் திரும்ப வருகிறது – முடிவுகளை ஊகிக்க முடிந்தாலும் அலுப்பூட்டவில்லை. பாடிவருகிறவர்களின் காலைக் கிட்டன் பிடிதது இழுப்பதும் தன்னைப் பிடிக்கிறவர்களிடமிருந்து பாய்ந்து நடுக்கோட்டைத் தொடுவதும் ஒரே மாதிரியான சித்தரிப்பாக இருக்கிறது – அது கொஞ்சம் சலிப்பூட்டுகிறது.

சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் பேச்சு, கதையின் இலக்கை நோக்கி இழுக்கிறது என்றாலும், கொஞ்சம் எதார்த்தக் குறைவாக இருப்பதாகவும் தோன்றுகிறது. அந்த இடங்களில் இயக்குநர் கதாபாத்திரங்களின் ஊடாக வராமல், கதாபாத்திரங்களின் மேலே அமர்ந்துகொள்கிறார்.

ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே மைய எதிரி சாதியம்தான் என்றும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. சில பேர், திரும்பத் திரும்ப சாதிப் பிரச்சினைதானா என்று இந்நேரம் சமூக ஊடகங்களில் ஏற்றியிருப்பார்கள். முன்பொரு விவாதத்தில், எது வரைக்கும் சாதியைப் பேசுவீர்கள் என்ற கேள்விக்கு, சாதி இருக்கும் வரை என்று நான் பதிலளித்தது நினைவுக்கு வருகிறது.
படத்தின் கூடுதல் சிறப்பு, ஒரே சமூகத்திற்கு உள்ளேயே வேறு காரணங்களால் ஏற்படும் ஏற்பின்மையும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. “நான் எதுக்காக இதை (அரிவாளை) எடுத்தேன் என்பதையே தெரிந்துகொள்ளாமல், எல்லோருமே தூக்குறானுக,” என்று, தொடக்கக் காலத்தில் ஆயுதமேந்தி ஒதுக்கப்பட்டோர் தலைவனாக உருவெடுத்த பாண்டியராஜா கூறுவதும் ஒரு சமூகப் படப்பிடிப்புதான்.

கிட்டனின் அக்காள் ராஜியும் அவனை நேசிக்கும் ராணியும் வலிமையான பாத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராணிக்கு ஏற்பாடு செய்யப்படும் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட்டதும் உறவுப் பெண்களின் முகத்தில் தெரியும் மலர்ச்சி, கபடிப் போட்டியை ஊர்ப் பெண்களும் உட்கார்ந்து ரசிப்பது – எல்லாமே அழகு.

பாண்டியராஜா மீது கொலைவெறியோடு திரியும் வேறு சமூகப் பெரிய மனிதன் கந்தசாமி, தனிப்பட்ட முறையில் விளையாட்டின் மீது கொண்டுள்ள பற்று, அதன் அடிப்படையில் கிட்டனுக்கு அளிக்கும் ஆதரவு மற்றுமொரு உண்மை நிலவரம். 

“எதுக்காக சண்டைங்கிறதை விட யாரு யாருகூட சண்டை போடுறாங்கங்கிறதுதான் முக்கியமானது,” எனும் வசனமும் கூட முக்கியமானது. நிறைய யோசிக்க வைப்பது. இருவருக்குமே மரணத்தைப் பரிசளிக்கும் அந்தச் சண்டை, கிட்டனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது திரைக்கதையின் நெருக்கமான பின்னல். 

படத்தில், பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வேறுபாட்டு விதி முறிக்கப்படுகிறது. அது மையக்கதை அல்ல, ஆனால் தமிழ் சினிமாவில் அரிதான கதை.

மகனின் கபடிக் காதலைத் தகப்பன் ஏற்க மறுப்பதன் ஆழத்தில் புதைந்திருக்கும் அச்சம் நியாயமானது. ரத்தச் சகதியில் மூழ்கும் கிராமத்திலிருந்து ஓடும் கிட்டனுக்கு காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட காட்சிகள், விரிந்த நனவாக வேண்டிய கனவுகள். 

துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா, ராஜிஷா என நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் வீடுகட்டி ஆடியிருக்கிறார்கள். 

நிகழ்வுகளின் வேகத்தையும் பதைப்பையும் நமக்குக் கடத்துவதில் உரையாடல்களுக்கு நிகராக எழிலரசு ஒளி ஓவியமும், நிவாஸ் கே. பிரசன்னா ஓங்கார இசையும், மாரி செல்வராஜ், அறிவு இருவரின் பாடல்களும், சக்தி திரு நேர்த்தித் தொகுப்பும் பங்களித்திருக்கின்றன. அந்தக் காட்டெருது (பைசன்) தலை உள்பட கிராமத்துக் குலசாமி அடையாளங்கள், ஜப்பானில் கபடிப் போட்டி என்பதால் சூழல் பொருத்தமாகவும் நிற்கிற புத்தர் சிலை… இயக்குநருக்கே உரிய முத்திரைகள்.

மொத்தத்தில் – பார்க்கவும் பரிந்துரைக்கவுமான படம்.

-

Wednesday, 15 October 2025

பொது இடங்களின் சாதிப் பெயர் நீக்கமும் கோவை மேம்பாலமும்! - முரண்பாடுகள் மக்களின் பார்வையை மாற்றுமா?!

 


தமிழ்நாட்டில் பொது இடங்களின் பெயர்களில் சாதிப் பின்னொட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை நவம்பர் 19-க்குள் நிறைவு செய்ய வேண்டுமென்ற அரசாணை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சமூகநீதியை நோக்கித் தமிழ்ச் சமுதாயம் செல்வதில் முக்கியமான முன்னேற்றம் என அதற்காக நிற்பவர்கள் இதை வரவேற்கிறார்கள். அந்த ஆணை அனுப்பப்பட்ட அக்டோபர் 8-ம் நாளுக்கு மறுநாளே அதிகாரபூர்வமாக நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த, குறிப்பிடத்தக்க சிறப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள, மாநிலத்தின் மிக நீளமான மேம்பாலத்திற்கு “ஜி.டி.நாயுடு” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதென்ன முரண்பாடு என்ற கூர்மையான விமர்சனங்களை இது ஈர்ததிருக்கிறது.

நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அடையாளமாக இருந்தார். பெயரில் ‘நாயுடு’ என்று இருப்பதால், வெறும் ‘ஜி.டி’ என்று மேம்பாலத்திற்குப் பெயர் வைக்க முடியுமா? இப்படி அவர் பெயரை வைத்தால்தான், அவர் இன்னார் என்று அறியப்படுவார். இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு அறியப்பாட்டார்களோ, அப்படியே பெயர் வைத்தால்தான் அவர்களைக் குறித்து வரக்கூடிய சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். இவற்றை விதிவிலக்காகக் கருத வேண்டும்" என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.


                                        அமைச்சர் தங்கம் தென்னரசு


ஜி.டி.நாயுடு என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ள கோபால்சாமி துரைசாமி ஒரு மாறுபட்ட அறிவியலாளர் என்று மக்கள் அறிவார்கள். அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல... குறைந்த முதலீட்டில் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கு முன்னுதாரணம் படைத்தவர் என்பதாலே மக்களால் அறியப்பட்டவர். அவருடைய அந்தப் பங்களிப்புதான் அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமேயன்றி சமூகப் பின்னணியல்ல.

அரசின் நோக்கமும் இதுதான் என்கிறபோது, பின்னொட்டு எதற்கு? அமைச்சர் கேட்பது போல “ஜி.டி மேம்பாலம்” என்று பெயர் சூட்டுகிறபோது, அது யாருடைய பெயர்ச்சுருக்கம், அவர் என்ன செய்தார் என்ற கேள்விகளைத் தலைமுறைகள் எழுப்புவார்கள். அவர்களுக்கு விளக்கமளிக்கிறபோது, அது சாதியைக் கழற்றிவிட்டு சாதனையைக் கொண்டாடுவதாகும்தானே?

மேலும், வேறு பல தலைவர்களும் சாதிப் பின்னொட்டுடன்தான் பரவலாக அறியப்பட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பழக்கம்தான். புதிய முயற்சி அறிமுகமாகிறபோது தடுமாற்றம் ஏற்படும், ஆனால், காலப்போக்கில் புதிய பெயர்கள் தங்கிவிடும். ஏற்கெனவே உள்ள பெயர்களில் சாதிப் பின்னொட்டுகளை நீக்குவது என்ற முடிவை, புதிதாக வைக்கப்படும் பெயர்களுக்கும் பொருத்தலாம். பழக்கத்தின் ஆற்றலுக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு – பெயர் மாற்றத்திற்குப் பிறகும் பல ஆண்டுகள் மெட்ராஸ் என்றே விளிக்கப்பட்டது, இன்று பேருந்துகளில் “சென்னை” என்று சொல்லிப் பயணச்சீட்டைக் கோருவது இயல்பாகிவிட்டதல்லவா?

விவாதங்களை இணைக்கும் பாலம்!

ஜி.டி பாலம் இது பற்றிய விவாதங்களை இணைத்திருக்கிறது. முதலமைச்சர் சட்டமன்றத்தில் இவ்வாண்டு ஏப்ரல் 29 அன்று, ‘காலனி’ போன்ற ஆதிக்கச் சின்னங்களை நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அக்டோபர் 8 அரசாணை, மாற்றுப் பெயர் பரிந்துரைகளோடு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஜூலை 7 அன்று முதலமைச்சர் மற்றோர் அரசாணையை வெளியிட்டார். தமிழ்நாட்டில் (ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட) மாநில அரசின் பல்வேறு அங்கங்களின் கீழ் இயங்கிவரும் பள்ளி/கல்லூரி மாணவர் விடுதிகளின் சாதி அடையாளங்களை நீக்கி, “சமூகநீதி விடுதி“ என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுவதற்கு அந்த ஆணை வழிசெய்தது. மாணவர் சமூகத்தில் சாதி வேற்றுமைகளைத் தடுக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஆணையத்தின் ஒரு பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

‘தமிழகத்தில் ஏறக்குறைய 1.79 லட்சம் மாணவர்கள் தங்கிப் பயிலும் 2,739 அரசு விடுதிகள் இருக்கின்றன. தலைவர்களின் பெயர்களில் இயங்கும் விடுதிகளுக்கு அந்தப் பெயர்களோடு “சமூக விடுதி” என்று சேர்ப்பதற்கும் வழி செய்யப்பட்டது. மாணவர் மனங்களில் சாதிப் பாகுபாட்டு உணர்வு புகுத்தப்படுவதைக் கவலையோடு கவனிப்பவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள்.


பொதுப் பெயர்கள்!


தற்போதைய ஆணையின்படி, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், குளங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், வருவாய் கிராமங்கள் ஆகியவற்றின் பெயர்களில் சாதி அடிப்படையில் இழிவுபடுத்தக்கூடிய சொற்கள் இருக்குமானால் அவற்றை நீக்க வேண்டும். ‘ஆதிதிராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான் குளம்’, ‘பறையர் தெரு,’ ‘சக்கிலியர் சாலை’ என்பன போன்றவற்றைப் பொதுப் பெயர்களாக மாற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் வரம்புக்கு உட்பட்ட பொது இடப்பெயர்களை ஆராய வேண்டும். ஊராட்சிகளின் கிராமசபையையும், நகராட்சி–மாநகராட்சிகளின் பகுதி சபையையும் கூட்டி பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். எடுக்கப்படும் முடிவுகளை மாவட்ட அரசிதழில் வெளியிட வேண்டும். மறுப்பு இருப்பவர்கள் 21 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கலாம். பெயர் மாற்றத்திற்குப் பிறகு ஆதார், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.




ஒருவேளை, இந்த சபைகளில் பழைய பெயரை மாற்ற ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால்? நெடுங்காலமாக உயர் பிரிவுகள் எனப்படும் சாதிகளையும் (அய்யர், பிள்ளை, முதலியார், நாயக்கர், செட்டியார்… இன்ன பிற), இடைநிலைச் சாதிகளையும் (தேவர், நாடார், வன்னியர்… உள்ளிட்டவை) பின்னொட்டுகளாகக் கொண்ட பெயர்களை மாற்ற அந்த மக்கள் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். இது குறித்த திட்டவட்டமான வழிகாட்டல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இழிவுபடுத்தும் வகையிலான அடையாளங்களை நீக்குவது முதன்மையான நோக்கம் என்கிறபோது, அந்தப் பெயர்களை மாற்றிவிட்டு, மற்ற பிரிவுகளின் பெயர்கள் தொடரும் என்றால் அதுவும் ஒரு பாகுபாடாகிவிடாதா? சாதியத்தையும் அதன் மையப்புள்ளியாகிய தீண்டாமையையும் ஒழிப்பதை நோக்கி ஓரடி எடுத்துவைப்பது எளிதானதல்ல என்று புரிகிறது.


ஆதிக்கம் தொடர அனுமதியா?


ஆணையின் மற்றொரு போதாமையையும், சாதிய எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “தீண்டாமையின் குறியீடாக இருக்கிற பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்கிற வழிகாட்டு நெறிமுறைகள், ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற பெயர்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதாக உள்ளது,” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறுகிறது.


                                           எடப்பாடி பழனிசாமி


“சென்னை மாநகராட்சி துவங்கி அனைத்து மாவட்டங்களிலும் சாதிப் பெயர் சூட்டப்பட்டுள்ள பல பொது இடங்கள் இன்றும் இருக்கின்றன. அரசு ஆவணங்களிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதி ஆதிக்கத்தின் அப்பட்டமான அடையாளமாகும். களத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றால் இப்பெயர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்கிறது இந்த வழிகாட்டு நெறிமுறை. இது ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற சாதிப் பெயர்கள் மேலும் பல காலம் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துவிடும்” என்று இந்த அமைப்பின் அக்.9 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில், தனி மனிதர் யாருடைய பெயருமின்றி “பிராமணர் தெரு” என்று இருக்கிறது. மற்றொரு பகுதியில் “வன்னியர் தெரு” இருக்கிறது. பல ஊர்களில் “ரெட்டி தெரு”, “நாயக்கர் தெரு”, “ஐயர் தெரு”, “முத்துராஜா தெரு”, “பிள்ளைமார் தெரு”, “பிள்ளை குடியிருப்பு”, ‘முதலியார் தெரு”, “முதலிமார் தெரு”, “நாடார் குடியிருப்பு”, “சாணார் தெரு“, “நாட்டுக்கோட்டை செட்டியார் தெரு”, “நகரத்தார் தெரு” என்றெல்லாம் இருப்பதாக ஊடக அன்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தந்த வட்டார ஆதிக்க சாதிகளின் பெயர்கள் என்பதால் களத்தில் பிரச்னை இருக்காதுதான். அதற்காக அத்தகைய பெயர்கள் அப்படியே தொடர்வது, அந்த அடையாளங்களையும், சாதிய மேலாதிக்க உணர்வையும் தொடரச் செய்வதாகிவிடாதா? தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான அடையாளங்களை நீக்கிவிட்டு, “உயர்சாதி” என்று சொல்லிக்கொள்ளும் பிரிவினரின் பெயர்களை அனுமதிப்பது பாகுபாடாகிவிடாதா? அது இந்தச் சிறப்பான திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை அடிபடச் செய்துவிடாதா? பெயர்ப்பலகை வைக்கப்பட்டாலும்… பல ஆண்டுகளுக்கு முன் அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு சாலை இப்போதும் நடைமுறையில் பழைய பெயரிலேயே குறிப்பிடப்படுவதை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச்செயலாளர் க. சுவாமிநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

அதற்குக் காரணம் புதிய பெயர் தலித் சமூகத் தலைவராக இருந்தவருக்கு உரியது. அவர் முன்பு ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர். மாற்றப்பட்ட பெயர் “பாபு ஜெகஜீவன் ராம் சாலை”. மாற்றப்பட்ட பிறகும் வெகுவாகப் புழக்கத்தில் இருப்பது “பெல்ஸ் ரோடு”. சென்னையிலேயே “ஈ.வெ.ரா. பெரியார் சாலை” இன்னமும் “பூந்தமல்லி நெடுஞ்சாலை” என்றும், “பாரதி சாலை” இப்போதும் “பைகிராஃப்ட்ஸ் சாலை” என்றும், “காமராசர் சாலை“ தொடர்ந்து “பீச் ரோடு” என்றும் புழங்கிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது.


இவர்கள் சாதி வேற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்ற தற்செயல் ஒற்றுமையும் இருக்கிறது. சட்டப்பூர்வ பதிவுகளில் இவர்கள் இருந்தாலும், நடைமுறையில் பழைய பெயர்களே புழங்குவது தற்செயலானதுதானா? மாற்றப்பட்ட பெயர்களை மக்கள் மனங்களில் பதியவைக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன?


குறிப்பிட்ட சாலையின் இரு முனைகளிலும் “பாபு ஜெகஜீவன் ராம் சாலை” என்ற பெயர்ப்பலகைதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் “பெல்ஸ் ரோடு” என்றே அறிவிக்கின்றன. பெயர்ப் பலகைகளில் தமிழ் தலையாய இடம் பெற ஆணையிடப்பட்டது போல இதற்காகவும் நடவடிக்கை எடுக்கலாமே? அழைப்பிதழ்களில் புதிய பெயரையே பயன்படுத்துமாறு மக்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரையில் சொல்லிக்கொண்டே இருக்கலாமே?

வரவேற்கத்தக்க ஒரு செயலை மேற்கொள்வது, அதற்கான தொடர் வேலைகளோடும் இணைவதே வெற்றிக்கு வழி. பரிந்துரையிலும் போதாமை அரசு பரிந்துரைத்திருக்கிற மாற்றுப் பெயர்களும் விமர்சிக்கப்படுகிறது. திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், பாரதியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்ற தமிழறிஞர்கள், தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தலாம் எனறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ள பெயர்களில் அம்பேத்கர், சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் பெயர்கள்கூட இல்லாததை எப்படி ஏற்க முடியும் என்று சுவாமிநாதன் கேட்கிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, இது தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரை எல்லா இடங்களுக்கும் சூட்டுவதற்கான தந்திரம் என்கிறார்.

ஆயினும், எடுத்துக்காட்டுக்காகத்தான் சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதேயன்றி இவைகளை மட்டுமே சூட்ட வேண்டுமென ஆணையிடப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் விளக்கியிருக்கிறார். முன்னதாக, அக்டோபர் 8 அன்று தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட ஆணையில். "இந்த மாற்றங்கள் சாதி நடுநிலைமையையும் சமூக ஒருமைப்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்புடைய வேறு நடுநிலையான பெயர்களைச் சூட்டுவதற்கான நெகிழ்வுத்தன்மை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது" என்று இருக்கிறது.

இது ஏற்கத்தக்கதுதான் என்றாலும், அதிகாரபூர்வமான விளக்கமாகவே வெளியிட்டு, அம்பேத்கர், சிங்காரவேலர் உள்ளிட்டோரைக் குறிப்பிட்டிருக்கலாமே? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே? உதாரணமே சொல்லாமல் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருந்த தலைவர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள், நதிகள், பூக்களின் பெயர்களைச் சூட்ட வழிகாட்டியிருக்கலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வருமானால் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்படும் என்கிற அளவுக்குப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் நினைவுபடுத்திக்கொள்ள விரும்பாதது என்னவென்றால், இதற்கு முதல் அத்தியாயம் எழுதியவர் அ.தி.மு.க–வை உருவாக்கியவரான எம்.ஜி.ஆர் என்ற வரலாற்றைத்தான். அவர் முதலமைச்சராக இருந்தபோது 1978 அக்டோபர் 3 அன்று இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


                                                க. சுவாமிநாதன்

எம்.ஜி.ஆரை மறக்கலாமா எடப்பாடி?

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளையும் உட்படுத்திய அந்த ஆணை, சென்னையிலும் மதுரையிலும் வேறு சில பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தொடங்கிய வேகத்தில் தொடராமல் போனதால், அவரது மறைவுக்குப் பின் அ.தி.மு.க அரசு அதைத் தொடர்வதற்கு முனைப்புக் காட்டாததால், பெரும்பாலான இடங்கள் சாதிப் பெயரைச் சுமந்துகொண்டே இருக்கின்றன.

அப்போதே கூட, இதற்குத் தங்களுடைய எதிர்ப்பைக் கேலியாக வெளிப்படுத்தியவர்கள் இருந்தார்கள். ஒரு பகுதியில் “குட்டி செட்டித் தெரு” என்று இருந்தது, தற்போதைய நடவடிக்கையால் அது “குட்டி தெரு” என்று மாறிவிட்டதே என்று பட்டிமன்றங்களில் கூட கிண்டலடித்தார்கள். தெருக்களின் பெயர்களில் சாதியை நீக்குவதால் மக்களின் மண்டைகளில் ஆக்கிரமித்திருக்கும் சாதி நீங்கிவிடுமா என்று ஆழ்ந்த தீவிரத்தோடும் கேள்வி கேட்கப்பட்டது.

இப்போதும் அதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு வகைகளில் சாதியப் பாம்பின் நாக்கு தன்னை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது, சாதி ஆணவக் கொலைகள் தொடர்கின்றன, சாதி பார்த்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன, வாடகைக்கு வீடு பார்க்கப் போனால் கூட “நீங்க என்ன ஆளுக” என்று கூச்சமே இல்லாமல் கேட்கிறார்கள்.


                எம்.ஜி.ஆர்.

 

“ஃபார் வெஜிடேரியன்ஸ் ஒன்லி” என்று அறிவிப்பை ஒட்டிவைத்து, “நான்–வெஜிடேரியன்ஸ்” குடியேறவிடாமல் கதவடைக்கிறார்கள். முக்கால் நூற்றாண்டு அனுபவம் அதையெல்லாம நிறுத்துவதற்கு வழி செய்யாமல் பெயர்களை மாற்றுவதால் என்ன பயன் என்று பதிவிடப்படுகிறது. மலர்களின் பெயர் சூட்டுவதால், சாதி நாற்றம் மறைந்துவிடுமா என்ற கேள்வியை சமூக ஊடகத்தினர் பரப்புகிறார்கள். அவர்களில் பலர் சாதி அடையாளம் கெட்டியாக இருப்பதை ஆதரிக்கிறவர்கள்.

அப்படிப்பட்ட உள்நோக்கமின்றிக் கேட்பதாகவே வைத்துக்கொள்வோம். தமிழ்நாடே அதற்குப் பதிலளிக்கும். பெரியாரியமும் பொதுவுடைமை அமைப்புகளும் இதர முற்போக்கு இயக்கங்களும் வளர்த்துவிட்ட மாண்புமிக்க மரபு ஒன்று இருக்கிறது. குறிப்பாக திராவிட இயக்கம் தனி மனிதர்களின் பெயர்களிலும் பொது இடங்களிலும் சாதிப் பட்டங்களைத் தூக்கி எறிவதை ஒரு தீவிரப் பரப்புரை இயக்கமாகவே மேற்கொண்டது.

சாதியும் கடவுளும் ஒட்டியிருந்த பழைய பெயர்களை விடுத்து, அறிவுடை நம்பி, மாறன், நன்னன், மகிழ்நன், முல்லை வேந்தன் என அழகிய தமிழ்ப்பெயர்களை விழா நடத்திச் சூட்டினார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதியை ஒட்டிக்கொள்ளாத தலைமுறைகள் கடந்த முக்கால் நூற்றாண்டில் தலையெடுத்திருக்கின்றன. இதன் பொருள் அவர்கள் முழுமையாக சாதிப்பற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டவர்கள் என்பதல்ல.

தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்டிக்கொள்வதில்லையே தவிர, திருமணப் பத்திரிகைகளில் தங்களுடைய தந்தைகள், தாத்தாக்கள் பெயர்களை சாதியோடு அச்சிட மறப்பதில்லை. மரண அறிவிப்புகளிலும் அப்படித்தான். இவ்வாறு தாங்கள் “என்ன ஆளுக” என்று தெளிவாகக் காட்டிக்கொள்கிறார்கள். (தாயோ, பாட்டியோ அப்படி அடையாளப்படுத்தப்படுவதில்லை. ஆண்தான் சாதிக்கான பாலினம்!)


                                        தலைமைச் செயலர் முருகானந்தம்

அவர்களின் பெயர்களில்…

சாதி அடையாளத்துடன் அறியப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை அப்படியே தொடர வேண்டியதில்லை என்ற கருத்தை இது பற்றிய இணையவழி விவாதத்தில் முன்வைத்தேன். அப்படியானால் இடதுசாரிகள் உட்பட பல இயக்கங்களின் தலைவர்களது பெயர்களில் அந்த அடையாளம் இருக்கிறதே என்று கேட்டார்கள் 

“ஒன்று –தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்த சாதி மறுப்பு இயக்கம் போல அதே தீவிரத்துடன் மற்ற மாநிலங்களில் நடைபெறவில்லை. இன்னொன்று –அப்படிக் குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியும் என்ற புரிதலோடு இருந்திருக்கிறார்கள். ஆனால், மாறிவரும் சமூகச் சூழலில் இனிமேலும் அப்படி அடையாளப்படுத்த வேண்டியதில்லை. புதிய தலைமுறைத் தலைவர்கள் இந்த அணுகுமுறையோடுதான் செயல்படுகிறார்கள்” என்று பதிலளித்தேன்.

மற்ற மாநிலங்களில் இத்தகைய இயக்கங்கள் நடந்ததில்லை என்று குறிப்பிடுகிறபோது, இப்போதும் கூட, தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை போல பிற மாநிலங்களில் தொடங்கவில்லை என்ற காட்சியும் தெரிகிறது. தமிழ் மண்ணுக்கே உரிய சாதிப் பாகுபாடற்ற தொண்மைப் பண்பாட்டின் தொடர்ச்சி, இன்று இந்த மண்ணைக் குதறிப்போட முயலும் சவால்களுக்கிடையே, நாடு முழுவதற்குமான முன்னுதாரணமாகியிருக்கிறது.


                                                 அவருடைய பங்களிப்பை நினைவூட்டும்

                                                 தொழில்துறை அருங்காட்சியகம்


பெயரை நீக்குவதால் மட்டும் சாதியம் ஒழிந்துவிடுமா என்ற இறுதிக் கேள்விக்கு வருவோம். நாடு தழுவிய சட்டபூர்வ நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு இயக்கங்கள், மக்களின் வாழ்நிலையை உயர்த்திடும் கல்வி–பொருளாதாரச் செயல்பாடுகள் என்று பல முனைகளில் இடையறாத லட்சிய முயற்சிகள் மேற்கொண்டால்தான் இலக்கை அடைய முடியும்.


பயணத்தைத் தொடங்கினால்தானே அது நடக்கும்? அப்படியொரு பயணத் தொடக்கம்தான் இந்த அரசாணை. போதாமைகளையும் தெளிவின்மைகளையும் களைந்து, தயக்கங்களையும் சமரசங்களையும் தகர்த்து மாற்று முயற்சிகளை முடுக்கிவிட்டால் பயணத்தின் வெற்றி நிச்சயம்.

[0]

விகடன் ப்ளஸ் (அக்டோபர் 14) கட்டுரை











Friday, 3 October 2025

Azure: மிரளவைக்கும் ‘அஜூரன்’ - பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் தளம்!

 


மைக்ரோசாஃப்ட் அஜூரைப் பயன்படுத்தி கணக்கற்ற தொலைபேசித் தொடர்புகளைத் தொகுக்கலாம், படியெடுக்கலாம், எந்த மொழியில் பேசியிருந்தாலும் வேண்டிய மொழிக்குப் பெயர்க்கலாம், பகுப்பாய்வு செய்யலாம்!

இஸ்ரேல் கையில் ’மைக்ரோசாஃப்ட் அஜூர்’!

தகவல்களுக்காகவும் கருத்துப் பகிர்வுகளுக்காகவும் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில், நாம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு பொருள் பற்றிய விவரமும் விலையும் எத்தனை நாட்களில் கிடைக்குமென்ற குறிப்பும் முன்னால் வந்து நிற்கும். நமக்கு இந்தப் பொருள் தேவையென்பது எப்படி இவர்களுக்குத் தெரியும் என்று வியப்பாக இருக்கும். குறிப்பிட்ட தரவுத் தளம்   நாம் அதிலே தேடிப்பார்த்த தரவுகளைத் தொடர்புள்ள விற்பனை நிறுவனத்திற்குத் தெரிவிக்கிறது, ஆகவேதான் நம் அனுமதியைக் கேளாமலே “என்னை வாங்கிக்கொள்கிறாயா” என்று கேட்கும் விளம்பரம் வருகிறது என்று தெரிந்தபோது வியப்பிலிருந்து விடுபட்டோம். 


இது வணிக நோக்கத்திற்காக நம்மை வேவு பார்க்கிற வேலையல்லவா

என்று விமர்சித்தோம். தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் வேறு

யாருக்கும் பகிரப்படுவதில்லை என்று சமூக ஊடகத் தளங்களில்

அறிவிப்புகள் வந்தன.


நம் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் செயல்படும் உலகின் முன்னணி

தரவு மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட். அது பல நாடுகளின்

அரசுகளுடன், அவர்களது பல்வேறு துறைகளுக்கான செயற்கை

நுண்ணறிவு (ஏஐ) ஏற்பாடுகள் உள்ளிட்ட தனது சேவைகளுக்கு வணிக

ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. இப்போது, இஸ்ரேல் பாதுகாப்புத் துறைக்கு

அளித்து வந்த சில சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறது.

சேவைகளை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்த விதிககளை

இஸ்ரேல் ராணுவம் மீறக்கூடும் என்ற  “கவலையுடன்” இந்த முடிவை அந்த

நிறுவனம் அறிவித்திருக்கிறது.


புலனாய்வுச் செய்தியால் எடுத்த முடிவு

‘தி கார்டியன்’, ‘+972 மேகசின்’, ‘லோக்கல் கால்’ ஆகிய ஊடகத் தளங்கள்

கூட்டாக நடத்திய ஒரு புலனாய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள

செய்திகளைத் தொடர்ந்து கடந்த வியாழனன்று (செப்.25) இந்த அறிவிப்பை

மைக்ரோசாஃப்ட் வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ‘தி கார்டியன்’

பிரிட்டனிலிருந்து வெளியாகும் சுதந்திர ஊடகமாகும் (தனிப்பட்ட

உரிமையாளர்கள் என்றில்லாமல் வாசகர்களின் நன்கொடைகளைக்

கொண்டு இயங்குவது). ‘+972 மேகசின்’, ‘லோக்கல் கால்’ இரண்டும்

இஸ்ரேல் நாட்டிலிருந்தே வெளியாகின்றன.


மைக்ரோசாஃப்ட்டின் ‘அஜூர்’ என்ற தகவல் சேகரிப்பு – சேமிப்புக்கான ‘கிளவுட்’ தளத்தை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தி, பாலஸ்தீன மக்களைக் கண்காணிக்கிறது என்ற உண்மையை அந்தக் கூட்டுப் புலனாய்வு அம்பலப்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 65,000 பேர்களில் அந்த ‘அஜூர்’ கண்காணிப்புக்கு உள்ளானவர்களும் இருந்திருப்பார்கள்.

எதிர்ப்பும் மறுப்பும்

"பெருமளவில் பொதுமக்களைக் கண்காணிக்க எங்கள் சேவைகள்

பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி,

எங்கள் சேவை நிபந்தனைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை

உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்துடனான

இந்த முடிவையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்," என்ற

அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் நிர்வாகக்குழு

துணைத் தலைவருமான பிராட் ஸ்மித் வெளியிட்டிருக்கிறார். நிறுவன

ஊழியர்களுக்கு  வலைப்பூ பதிவாக அனுப்பப்பட்டிருக்கிறது.

                                                பிராட் ஸ்மித்

இதை ஏன் ஊழியர்களுக்கான வலைப்பூ பதிவாக அனுப்ப வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அது அவர்களது நிர்வாக ஏற்பாடுகளில் ஒன்றாக இருக்கலாம். நிறுவனத்தின் இந்த முடிவின்படி ஊழியர்கள் செயல்பட வேண்டும், குறிப்பிட்ட சேவைகளை இனி இஸ்ரேல் ராணுவத்துக்கு வழங்கக்கூடாது என்று ஆணையிடுவதற்காகவும் செய்திருக்கலாம். இவற்றை விட முக்கியமான வெறொரு பின்னணியும் இருக்கிறது. கடந்த காலத்தில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பலர் நிறுவனத்திற்கு உள்ளேயே ஒரு குற்றச்சாட்டாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.


அப்படியெல்லாம் அஜூர் கிளவுட் பொதுமக்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தவில்லை என்று நிர்வாகம் மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிய பல ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கியது. நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக அவர்கள் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்தது. தங்களுடைய பணிகள் அப்பாவி மக்களைப் பலியிடுவதற்குப் பயன்படுத்தப்படுவதை ஏற்க மறுத்துப் பல ஊழியர்கள் தாங்களாக வேலையிலிருந்து விலகினார்கள்.


இந்த ஊழியர்களில் பாலஸ்தீனப் பின்னணி கொண்டவர்களும், பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களுடன் தொடர்புடையவர்களும் உண்டு. நிறுவனத்திற்கு உள்ளேயே இத்தகைய கருத்துக் கொண்ட ஊழியர்களை ஒருங்கிணைப்பதற்காக, ‘நோ அஜூர் டு அபார்த்தீட்’ (இனத் தீண்டாமைக்கு அஜூர் கூடாது) என்ற பெயரில் ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது. ஆகவேதான் ஊழியர்களுக்கு வலைப்பூ தகவல்.


ஊடகப் புலனாய்வைத் தொடர்ந்து இப்போது, வாஷிங்டன் நகரைச் சேர்ந்த

கோவிங்டன் & பர்லிங் எல்எல்பி  என்ற சட்ட நிறுவன நிறுவனத்தையும், பெயர்

அறிவிக்கப்படாத ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும்

சேவைகள் பயன்பாடு தொடர்பான வெளித் தணிக்கையில்

மைக்ரோசாஃப்ட் ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.


முந்தைய கதைகள்


இதற்கு முன்பு, அமெரிக்காவைச் சேந்த கூட்டுறவு நிறுவனமான ‘அசோசியேட்

பிரஸ்’ (ஏ.பி.) கடந்த மே மாதம் வெளியிட்ட  செய்தியில், இஸ்ரேலிய

ராணுவத்தின் ‘அலகு 8200’ என்ற உளவுப் பிரிவு காஸாவில் கண்காணிப்புக்கு

மைக்ரோசாஃப்ட் சேவைகளைப் பெரிய அளவில் பயன்படுத்துகிறது என்று

தெரிவித்திருந்தது. அப்போது, அந்தத் தகவல் குறித்து நிறுவன உள் தணிக்கை

நடத்தப்பட்டதாக மைக்ரோசாஃப்ட் கூறியது.


                                                இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ


2023 அக்டோபரில் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகக்

கொண்டுசெல்லப்பட்ட  இஸ்ரேலியர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான

முயற்சிகளுக்கு உதவ இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட

ஏஐ கருவிகளும் தரவுச் சேகரிப்பு–சேமிப்பு சேவைகளும் விற்கப்பட்டன.

ஆனால் காஸா மக்களைக் குறிவைக்கவோ, துன்புறுத்தவோ தனது

சேவைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அந்த

உள்தணிக்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று,

அந்த ஏ.பி.  செய்திக்கான பதிலாக மைக்ரோசாஃப்ட் அப்போது கூறியது.

இப்போது மூன்று ஊடகங்களின் புலனாய்வுச் செய்தியைத் தொடர்ந்து

குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.


பிராட் ஸ்மித் அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்புத்துறைக்கான தனது

சேவைகள் குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று

கூறியிருக்கிறார். “நிறுவனத்தின் சேவை நிபந்தனைகள் பொதுமக்களைப்

பெருமளவில் கண்காணிப்பதற்கு எமது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்கின்றன. அதன்படி சில சேவைகளைக்

கட்டுப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது,” என்று அவர் கூறியிருக்கிறார்.


எதற்கெனத் தெரியாதாம்


இஸ்ரேலிய ராணுவம் தனது சேவைகளை எதற்காகப் பயன்படுத்துகிறது

என்று தனக்குத் தெரியாது என்று மைக்ரோசாஃப்ட் கூறி வந்திருக்கிறது.

ஒப்பந்தங்களில் உள்ள வாடிக்கையாளர் தனியுரிமை பாதுகாப்பு விதிகள்

காரணமாக, மூன்று ஊடகங்களின் ஆகஸ்ட் செய்தியறிக்கையில்

வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் நிறுவனத்திற்குத் தெரியாது என்று

ஸ்மித் கூறினார். இந்த விதிகள் காரணமாக தனது தொழில்நுட்பத்தை

இஸ்ரேலிய இராணுவம் எதற்குப் பயன்படுத்துகிறது என்று கண்டறிய

வழியில்லை என்றும் பலமுறை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


காஸா இனப் படுகொலைகளைக் கண்டு உலகமே பதறுகிறது, உரத்த குரலில் கண்டிக்கிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் இப்படி நழுவலான விளக்கங்களைத் தரலாமா என்ற விமர்சனமும் உலக அரங்கில் ஒலித்து வந்தது. இந்த நிலையில்தான் மைக்ரோசாஃப்ட்  முந்தைய நிலைப்பாட்டிலிருந்து சற்றே விலகி, இப்போது சில சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதை அறிவித்திருக்கிறது.


ஆனால் இந்த முடிவு, தற்போது டொனால்டு டிரம்ப் ஒரு காஸா போர்நிறுத்தத்

திட்டத்தை வெளியிட்டு ஹமாஸ் அமைப்புக்குக் கெடு நிர்ணயித்திருக்கிற

நிலையில், இஸ்ரேலிய ராணுவ வழிமுறைகளில் என்ன தாக்கத்தை

ஏற்படுத்திவிடும்? அப்படியொன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது.

ஏனென்றால்.  குறிப்பிட்ட சில மைக்ரோசாஃப்ட் சேவைகளுக்கான சந்தாக்கள்

மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் அரசும் பாதுகாப்புத் துறையும்

நாட்டின் சொந்த இணையப் பாதுகாப்புக்காக மற்ற அனைத்து

மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இதனை ஸ்மித் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


முடக்கப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகள் எவை?  இஸ்ரேலிய ராணுவத்தின் எந்தக் குறிப்பிட்ட பிரிவுகள் அவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருக்கிறது? இவற்றை அவர் தெளிவுபடுத்தவில்லை. நெதர்லாந்து நாட்டில் நிறுவனத்தின் அஜூர் தரவுச் சேமிப்பகங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஏஐ சேவைகளையும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பயன்படுத்துவது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்துவந்துள்ளன என்று மட்டும் அவர் பதிவிட்டிருக்கிறார்.


அஜூர சாகசங்கள்


 ‘அஜூர்’ (இந்தப் பெயரே பண்டைக் கதைகளின் ஒரு போராயுதம் போல

ஒலிக்கவில்லை?) பற்றித் தெரிந்துகொள்வது இதைப் புரிந்துகொள்ள உதவும்.

இது பலதரப்பட்ட ‘கிளவுட்’ சேவைகளை வழங்குகிறது. இவற்றில் கிட்டத்தட்ட

வரம்பே இல்லாத டிஜிட்டல் சேமிப்பகம், திறன் மிகுந்த ஏஐ செயல்களும்

குறிப்பிடத்தக்கவை. இவற்றைக் கொண்டு கணக்கற்ற தொலைபேசித்

தொடர்புகளைத் தொகுக்லாம், படியெடுக்கலாம், எந்த மொழியில்

பேசியிருந்தாலும் வேண்டிய மொழிக்குப் பெயர்க்கலாம்,

பகுப்பாய்வு செய்யலாம்.


மைக்ரோசாஃப்ட்டின் அஜூர் கிளவுட் சேவைகள் பல நாடுகளின் பாதுகாப்புத்

துறைகளிலும், ராணுவப் பணிகளிலும் ஏராளமான முக்கியச்

செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அஜூரின் விரிவடையும்

நுட்பமும், பன்முகத் தன்மையும், பாதுகாப்பான கூறுகளும், எல்லையில்லா

ஏஐ திறன்களும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.


                                                காஸா


ராணுவத்திற்கு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இடம்–காலம் என்ற

வரம்புகள் இல்லாமல்  அந்தத் தரவுகளைச் சேமிப்பதும் முக்கியமான தேவை.

அந்தத் தேவையை அஜூரன் நன்றாகவே நிறைவேற்றுகிறான். சேகரித்து,

சேமித்து வைத்த தகவல்களை எப்போது வேண்டுமானாலும்

நொடிப்பொழுதில் கண்டெடுத்துப் பகுப்பாய்வு செய்வதற்கும்

(அதற்காகத்தானே சேமிக்கிறார்கள்), அச்சுறுத்தல்களைக் கணிப்பதற்கும்,

அதிலிருந்து திட்டங்களை வகுப்பதற்கும் அஜூரனை ஒரு வியூக

ஆலோசகனாக்கிக்கொள்ள முடியும்.


ஒரு நாடு இப்படிப்பட்ட தரவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வதோடு, பிற நாடுகளின் பாதுகாப்புத் துறைகளோடும், முப்படைத் தலைவர்களோடும் ஒரே கிளவுட் தளம் வழியாகப் பாதுகாப்பாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். போர் மேலாண்மையோடு இணைந்ததாக, படையினரின் பயிற்சிகளுக்குத் துணையாக  மெய்நிலை சண்டைக்களச் சூழல்களை உருவாக்க முடியும். கணினிப் பறவையை (ட்ரோன்) இயக்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்ய வைக்க முடியும். இவற்றை ஒருங்கிணைத்து அனைத்துப் படைகளுக்கும் அனுப்ப முடியும்.


கொள்கை (என்பதாக) இருக்கிறது


இப்பபடிப்பட்ட கிளவுட் சேவைகளை வழங்கும் உலகளாவிய பெரும்

கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்கள் வெகுமக்கள் கண்காணிப்புக்கும்

அது போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான பிற செயல்களுக்குப்

பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கைகளை வைத்துள்ளன. ஒரு நாட்டு

அரசுடன் அல்லது ராணுவத்துடன் வணிகப் பேச்சு இறுதியாகி, விற்பனை

ஒப்பந்தம் போடப்படும்போது, இந்தக் கொள்கையை ஒரு விதியாகச்

சேர்க்கின்றன. ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த மென்பொருள்களைப்

பெருந்தொகை கொடுத்து வாங்குகிற நாடுகளின் அரசுகள் அல்லது

ராணுவங்கள் நடைமுறையில் என்ன செய்வார்கள், எந்த அளவுக்கு

அந்த விதிகளை மதிப்பார்கள் என்று விளக்காமலே புரியும்.


                                                பெகாசஸ்


’பெகாசஸ்’ நினைவிருக்கிறதா?  ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கி உலகம்

முழுதும் விற்றிருக்கிற உளவு மென்பொருள் அது. இணையத்தின் வழியாக 

ஊடுருவி நம்மைக் கேட்காமலே நம் கைப்பேசியில் தானாகவே ‘டவுன்லோடு’

ஆகி, தன்னைத்தானே ‘இன்ஸ்டால்’ செய்துகொள்ளக் கூடியது அது.

நான் நலம், நீங்கள் நலமா என்ற குசல விசாரிப்புகள் முதல்

முக்கிகியமான தகவல் பரிமாற்றங்கள் வரையில் ஒற்றறிந்து

மேலிடத்திற்குத் தெரிவிக்கிற செயலி. அதைத் தயாரிக்கும் என்எஸ்ஓ குழுமம்

என்ற கணினியியல் ஆயுத நிறுவனம் கூட, மக்களைக் கண்காணிப்பதற்கு

அது பயன்படுத்தப்பட மாட்டாது என்ற விதி தனது ஒப்பந்தங்களில்

இருப்பதாகத்தான் சொல்லிக்கொண்டது.


ஆனால், உலகம் முழுதும் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூகப்

போராளிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என கிட்டத்தட்ட 50,000

பேர், இந்தியாவில் சுமார் 300  பேர்,  பெகாசஸ் கண்காணிப்புப் பட்டியலில்

இடம்பெற்றிருந்தார்கள். பல நாடுகளின் ஊடகவியலாளர்கள் இதற்கென

இணைந்து உருவாக்கிய ‘நாடுகளிடை ஊடகக் கூட்டமைப்பு’ இதைக்

கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்தியாவில் இது

தொடர்பான வழக்கு இன்னமும் முடிவடையவில்லை. இதற்காக

அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை அறிக்கையும் குடிமக்கள்

கவனத்திற்கு வெளியிடப்படவில்லை. இதில் கவனிக்க வேண்டிய ஒரு கூடுதல்

தகவல், என்எஸ்ஓ குழுமம் ஒரு இஸ்ரேலிய நிறுவனம்!


ஒண்ணும் செய்யாது!


ஆஜூர் விவகாரத்துக்கு வருவோம். சில சேவைகளை முடக்கிய மைக்ரோசாஃப்ட் நடவடிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த, பெயர் வெளியிடப்படாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “இந்த முடிவு இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்பாட்டுத் திறன்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறினாராம். ஏ.பி. செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் அரசு தனது நாட்டில் தயாராகி பிற நாடுகளுக்கு விற்பனையாகும்

உளவு மென்பொருள்களையும், பிற நாட்டு நிறுவனங்களிடமிருந்து

வாங்குகிற செயலிகளையும் சோதித்துப் பார்ப்பதற்கு, பாலஸ்தீன

மக்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறது என்று பாலஸ்தீனர்கள்

நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள் என அல்ஜசீரா செய்தி

நிறுவனம் தெரிவிக்கிறது.


                                                                    அஜூர்


இப்போது ஒரு மைக்ரோசாஃப்டின் அஜூர், ஒரு போராயுதமாகவே பயன்படுத்தப்பட்ட செய்தி கசிந்திருக்கிறது. வேறு எத்தனை கணினியல் கார்ப்பரேட் கனவான்கள்  எந்தெந்த நாடுகளுக்குக் கண்காணப்பு ஆயுதங்களைச் செய்துகொடுத்தார்களோ? அவற்றில் எத்தனை மென்பொருள்கள் பிற நாட்டு மக்களையும், எத்தனை மென்பொருள்கள் சொந்த நாட்டுக் குடிகளையும் கண்காணிக்கிற வன்பொருள்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனவோ?

இஸ்ரேல் பற்றிப் பேசும் வேளையில் இந்தியாவிலும் வில்லங்கமான ஒரு விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ‘வாட்ஸ்அப்’ தகவல் பகிர்வுத் தளத்திற்குப் போட்டியாக ‘அரட்டை’ என்ற சுதேசி செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் தனியார் நிறுவனமான ‘ஸோஹோ’ (ZOHO) கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அரசு அலுவலர்களின் மின்னஞ்சல் சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

அரசமைப்பு சாசனத்திலிருந்து சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்குவது உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தங்களை வெளிப்படுத்தியவரான ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஸோஹோ நிறுவனத்திடம் அரசுத் தகவல்களைக் கையாளும் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இது, தரவுப் பாதுகாப்புக்கும் அமைப்பு சார்ந்த நடுநிலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனம் எழுந்திருக்கிறது. இங்கேயும் ஒருவகைக் கண்காணிப்பு மென்பொருள் முடுக்கிவிடப்படுகிறதோ என்ற கவலை இயல்பாகவே எழுகிறது!

[0][0][0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பு (அக்டோபர் 2) கட்டுரை