Thursday, 5 March 2026

தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் மார்க்சியத்தின் கொடை



சென்னை கன்னிமாரா நூலக நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் கம்பீரமாக நிற்கிற அந்தச் சிலையைப் பார்ப்பவர்களுக்கு, அவர் எப்படி உலகெங்கும் உழைப்புச் சுரண்டல்களோ, வர்க்க வேறுபாடுகளோ, மத ஆதிக்கங்களோ, சாதி வன்மங்களோ இல்லாத சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதற்கு அறிவியல்பூர்வமான வழியமைத்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்வது சிலருக்கு மிரட்சியாக இருக்கிறது. எதையாவது கண்டு மிரள்கிறவர்கள் குய்யோ முய்யோ என்று புலம்பிப் பதுங்குவார்கள். அதைப்போல அந்தச் சிலர் மார்க்ஸ்சுக்கு எதற்காக இங்கே சிலை, அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் என்று புலம்பினார்கள்.


மிழ்நாட்டின் விவசாயக் களத்தில் உழைத்தவர்கள் துண்டை இடுப்பில்தான் கட்டிக்கொள்ள வேண்டும், ஆண்டையர் எதிரே வந்தால் அந்தத் துண்டு கக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்ற பண்ணையடிமை நிலைமை இருந்தது. அதே துண்டு இன்று கம்பீரமாகத் தோளில் வீற்றிருக்கச் செய்தவர் மார்க்ஸ். உலகின் மற்ற பல நாடுகளைப் போல, ஆலையடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்கு வேலை நேரம் உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தியவர் மார்க்ஸ். மொழிவழி மாநிலங்களாக அமைக்க செங்கொடி இயக்கம் வலியுறுத்தியதன் மூலம் தமிழ்நாடெனும் அடையாளம் பெற்றிடப் பாதையமைத்தவர் மார்க்ஸ். நாட்டின் விடுதலை இயக்கத்தை, கம்யூனிஸ்ட்டுகள் மூலம் முழுச் சுதந்திரமே லட்சியம் என முழங்க வைத்து, தமிழ்நாட்டு மக்களுக்கும் அதை அனுபவமாக்கியவர் மார்க்ஸ்.


ஒரு நாடு, அதில் ஒரு மாநிலம் தனது வரலாற்றை அரசியல், இலக்கியம், பொருளாதாரம், மக்கள் வாழ்நிலை, மாற்றங்களுக்கான இயக்கம் ஆகியவற்றால்தான் எழுதுகிறது. அதை எழுதுவதில் மார்க்சியத்தின் அறிவார்ந்த பங்களிப்புகள் இருக்கின்றன. அண்மையில் இணையவழியில் ‘எம்இஎல்எஸ்’ (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின்) என்ற குழு நடத்திய ‘மார்க்சியமும் தமிழும்’ என்ற உரையரங்கத்தின் பின்னூட்டமாகச் சிந்தனைகள் விரிந்தன.


இலக்கியச் சுவடிகளில்


மார்க்சிய வருகைக்கு முன், தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் பக்தியைப் புகட்டுவதாக, மன்னர்களின் சாகசத்தைப் போற்றுவதாக, ரசனை சார்ந்ததாகவே அணுகப்பட்டன. மார்க்சிய வெளிச்சம் பாய்ந்த பிறகுதான் இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்ற பார்வை வலுப்பெற்றது. படைப்பாளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பில் புத்தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு படைப்பு, அது உருவான காலத்தின் மக்கள் வாழ்க்கையை, பொருளாதார நிலைமையை, வர்க்கச் சூழலை எந்தக் கோணத்தில் அணுகுகிறது, எவ்வாறு வெளிப்படுத்துகிறது என ஆய்வு செய்யும் முறை முன்னுக்கு வந்தது.

அரசுகள் பேரரசுகளானதையும், அதற்காக நடந்த போர்களையுமே வரலாறாகச் சொல்லிக்கொண்டிருந்த போக்கைத் தடுத்து, எளிய மக்களின் வாழ்வியலை மையப்பொருளாக வாசிக்க வைத்தது மார்க்சியம்.  சிங்காரவேலர் தொடங்கி, ஜீவா, நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன், கைலாசபதி, கே. முத்தையா, ஜெயகாந்தன் என பலரும்  மார்க்சிய நோக்கில் இலக்கியங்களை மறுவாசிப்பு செய்வதை அறிமுகப்படுத்தினார்கள். நா. வானமாமலை தொடங்கிய 'ஆராய்ச்சி', இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தாமரை’, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘செம்மலர்’ ஆகியவற்றின் பங்களிப்பு தலையாயது.


அரசியல் அணுகுமுறைகளில் மாறுபட்டாலும் மக்கள் சார் இலக்கிய ஆக்கங்களை வெளியிட்ட ‘மன ஓசை’,‘நிழல்’,  ‘புதிய கலாச்சாரம்’, ‘புதிய ஜனநாயகம்’ உள்ளிட்ட ஏடுகளின் பணியும் குறிப்பிடப்பட வேண்டியது. இடதுசாரி சிந்தனையாளர் விஜய பாஸ்கரன் தொடங்கிய ‘சரஸ்வதி’, டி. செல்வராஜ் முயற்சியில் வந்த ‘சாந்தி’ ஆகியவையும், அவை போன்ற பல சிற்றிதழ்களும் இந்த அணியில் இணைகின்றன. தமிழில் தொடங்கப்பட்ட, இன்றும் தொடர்கிற, இப்போதும் புதிதாகப் பூக்கிற சிற்றிதழ்களில் பெரும்பாலானவை மார்க்சிய கண்ணோட்டம் கொண்டவையே என்றால் மிகையில்லை.


முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தில் 'முற்போக்கு' என்ற சொல் வேரூன்றத் தொடங்கிவிட்டது. அத்துடன் இணைந்ததாக, மிகைப் புனைவைத் தாண்டி, பாடுபடும் மக்களின் பசியையும் போராட்டத்தையும் அவர்கள் எதிர்கொண்ட சாதிய ஒடுக்குமுறைகளையும், பெண்கள் எதிர்த்து நின்ற ஆணாதிக்க அடக்குமுறைகளையும், நடுத்தர வர்க்க மக்களின் நொறுங்கிய கனவுகளையும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்தார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அழகுகளையும் பதிவு செய்தார்கள். இவ்வகை ஆக்கங்கள் “மெய்நடப்பியல் இலக்கியம்” – அதாவது “யதார்த்த இலக்கியம்” – என்றே பெயர் பெற்றன. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் இப்படிப்பட்ட உள்ளடக்கங்களோடு எழுதுகிற வளர்ச்சியும் ஏற்பட்டது. 


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் தமிழில் சமத்துவக் கருத்துகளைத் திரைப்படப் பாடல்களின் வழியாக வழங்கினார். வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன், கி. ராஜநாராயணன், கு. சின்னப்ப பாரதி, தொடர்ந்து பங்களித்துக்கொண்டிருக்கும் பொன்னீலன், அருணன், ந. முத்துமோகன், ச. தமிழ்ச்செல்வன், சு. வெங்கடேசன், இரா. காமராசு, ஆதவன் தீட்சண்யா போன்ற படைப்பாளிகள் மார்க்சியச் சிந்தனைகளை நாவல்களிலும் சிறுகதைகளிலும் திறனாய்வுகளிலும் கையாண்டுள்ளனர். இடச்சுருக்கம் கருதியே இந்த அளவில் பெயர்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இன்றைய  இளம் எழுத்தாளர்கள் பலரும் இந்தப் பணிகளைத் தொடர்கிறார்கள்.


சமூகப் போராட்டத்தில் 




மொழியை ஒரு போராட்டக் கருவியாகவும் மாற்றிய மார்க்சியம் தமிழின் பெருமையை மேலும் ஒளிரச் செய்தது எனலாம். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாதர், மாணவர், இளைஞர், மாணவர் சங்கங்கள், எழுத்தாளர், கலைஞர், அறிவியல் ஆர்வலர் இயக்கங்களின் மேடைகளிலும் களங்களிலும் வெளியீடுகளிலும் தமிழ் மிக எளிய, அதே சமயம் மேலும் வீரியமிக்க வடிவத்தைப் பெற்றது. அது, சமூக மாற்றத்திற்கான கருவியாக மொழி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது. 


தமிழகத்தின் சாதியக் கட்டமைப்பையும் நிலவுடைமைத்துவ உறவுகளையும் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிறவர்கள் சமூக நீதிக்கான உரையாடல்களுக்குக் கோட்பாட்டு வலிமையளிக்கிறார்கள். பாலின சமத்துவச் சிந்தனைகளை, மறு உற்பத்தி உரிமை போன்ற அடிப்படையான பெண்ணியக் கருத்தாக்கங்களைத் தமிழ் மக்களிடம் கொண்டுசென்றதில் கே.பி. ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், எழுத்தாளர் லட்சுமி உள்ளிட்டோரின் பங்கு தலையாயது. இன்று வாசுகி, பாலபாரதி, சுகந்தி, வ. கீதா, அம்பை, மங்கை உள்ளிட்டோரும் ஏராளமான இளந்தலைமுறையினரும் அரும்பணியாற்றி வருகிறார்கள். 


சொற்கொடை


மார்க்சிய இயக்கம் தத்துவத்தோடு இணைந்ததாக செறிவான ஒரு கலைச்சொல் களஞ்சியத்தையும் தமிழுக்கு வழங்கியுள்ளது. முன்பு குறைவாகவே புழக்கத்தில் இருந்த அல்லது வேறு பொருள்களில் கையாளப்பட்ட சொற்களை, புதிய அரசியல் – சமூக – பொருளாதாரப் பின்புலத்தில் மார்க்சியம் வடிவமைத்தது. 


“தோழர்” என்ற சொல் தமிழுக்குப் புதிதல்ல. சங்க இலக்கியங்களில் விளிக்கப்படுவதுதான். ஆனால், அதற்கொரு கம்பீரத்தை ஏற்றி, அரவணைப்பு, போராட்டத் துணை நம்பிக்கை, பாலினப் பாகுபாடற்ற அரவணைப்பு, பதவிநிலை ஏற்றத்தாழ்வற்ற மரியாதையை ஊட்டியது மார்க்சிய இயக்கம்.


மார்க்சியத்தின் அடிப்படை பொருளாதாரம் என்பதால், உற்பத்தி முறைகள் சார்ந்த பல சொற்கள் புத்துருவம் கொண்டன. “வர்க்கம்” என்ற வார்த்தை முன்பு வகைப்படுத்துவதற்காகவும், கணிதக் குறியீடாகவுமே பயன்படுத்தப்பட்டது. மார்க்சிய இயக்கம் கரம் உயர்த்தியதைத் தொடர்ந்து உழைப்பு, உடைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகவே பொருள் பெற்றது. சுரண்டல் வர்க்கம், உழைக்கும் வர்க்கம், பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்ற கூட்டுச் சொற்கள் இணைந்தன. உலகச் சந்தை ஆக்கிரமிப்பு இணைந்த அரசியல் ஆதிக்க அரசுகளுக்கு ஏகாதிபத்தியம் என்ற பெயரைச் சூட்டியது தமிழின் மார்க்சியம்.



தொழிலாளரிடமிருந்து களவாடப்படுவதால் உண்டாகும் உண்மையான லாபத்தைக் குறிக்கும் “உபரி மதிப்பு” என்ற சொல்லாடல் உருவானது. மார்க்சிய சொல்லாடல்களைத் தமிழ்ப்படுத்திய “உற்பத்தி உறவுகள்”, “பொருள்முதல்வாதம்” என்ற சொல்லாடல்களும், மார்க்சியத்தின் அறிவியல் கண்ணோட்டத்துடன் நிலைபெற்றன. “இயக்கவியல் பொருள்முதல்வாதம்”, “வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” என்ற சொல்லாக்கங்கள் புதிய பொருள் விளக்கம் அளிக்கின்றன. திசைச் சொற்களை ஏற்கும் தமிழின் பண்புக்கு ஏற்ப ஜிந்தாபாத், ஒர்க்கர்ஸ் யூனிட்டி, லால் சலாம் ஆகியவற்றையும் மார்க்சிய இயக்கம் கையாளுகிறது.


கலை–இலக்கியத்தில்


கலை, இலக்கியத் துறையில் புதிய விமர்சன முறைகளை உருவாக்க இவை உதவின. மார்ச்சிய விமர்சனம், மார்க்சியக் கண்ணோட்டம் என்ற ஆய்வு முறைகள் தமிழுக்கு வளம் சேர்த்தன. “முற்போக்கு” என்ற சொல் தொன்றுதொட்டு இருப்பதுதான். மார்க்சியம் அதற்குத் தனித்துவமான பொருளைக் கூட்டியது. இதிகாசங்களையும் புராணங்களையும் மதம் சார்ந்த இலக்கியங்களையும் மறுவாசிப்பு செய்வதை ஒரு பண்பாட்டுத் தள இயக்கமாகவே மேற்கொண்டிருப்பது மார்க்கியம்.


நாடகம், திரைப்படம் ஆகிய கலைச் சித்தரிப்புகளிலும் மார்க்சியக் கருத்துகள் ஆளுமை செலுத்துகின்றன. கம்யூனிஸ்ட்டுகளே உருவாக்கக்கூடியவை ஒருபுறமிருக்க, பொழுதுபோக்குக்காகவும், வணிக நோக்கத்துடனும் தயாரிக்கப்படுவனவற்றிலும் நாயகப் பாத்திரங்கள் சமத்துவம், பொதுவுடைமை என்றெல்லாம் பேச வேண்டியிருக்கிறதே!  


சமூக அமைப்பு தொடர்பான “அடிக்கட்டுமானம்”, “மேல்கட்டுமானம்”, “அந்நியமாதல்” என்ற சொற்கள் கலந்தன. உள்ளூர், உள்நாடு, உலக நாடுகள் என எங்கும் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் திரள்கின்ற போராளிகளுடன் வெளிப்படுத்துகிற “ஒருமைப்பாடு” ஒரு  சொல்லாடலாக மட்டுமல்லாமல் உழைப்பாளி வர்க்கப் பண்பாடாகவும் வேரூன்றியிருக்கிறது.


மார்க்சிய இயக்கத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் பரவியது. புரட்சிக்கான நேர்மையையும் அர்ப்பணிப்பையும் கண்டதால் தமிழ்நாடு என்ற பெயருக்காகப் பசமுதாய மாற்றம் தானாக ஏற்பட்டுவிடுமா? “புரட்சி” நடந்தாக வேண்டும். செங்கொடிகளின் கீழ் உரக்க ஒலிக்கும் “புரட்சி ஓங்குக” என்ற முழக்கம் மாட்டினிப் போராட்டம் மேற்கொண்ட சங்கரலிங்கனார், தன் மறைவுக்குப் பின் உடலைக் கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்கக் கேட்டுக்கொண்டார்.


இன்றைக்கும் தமிழ் உரிமை பாதுகாப்புக்காகவும், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்தும், மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடித்தும் போராடுகிறவர்களோடு மார்க்சியர்கள் தோள் சேர்ந்து நிற்கிறார்கள். தமிழ் செழிப்பதற்குத் தமிழர்கள் செழித்திருக்க வேண்டும் என்ற தெளிந்த பார்வையோடு மக்களுக்கான இயக்கங்களை மேற்கொள்கிறார்கள்.


இதர உள்ளடக்கங்களோடு மொழி மேம்பாட்டுக்கான நூல்களை வெளியிடுவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதி புத்தகாலயம் ஆகியவையும் கீழைக்காற்று, விடியல் உள்ளிட்ட இதர இடதுசாரி இயக்கங்கள் சார்ந்த பதிப்பகங்களும், அலைகள், எதிர், பனுவல், பரிசல், முரண், புலன் இன்னபிற, சிவப்புச் சிந்தனையாளர்களால் நடத்தப்படும் பல வெளியீட்டகங்களும் மொழி வளர்ச்சி, தமிழ்நாடு மாநில உரிமைகள் தொடர்பான முக்கியமான நூல்களை வெளியிட்டுப் பங்காற்றி வருகின்றன.


ஆசான்கள் சொன்னது


மார்க்சியம் மொழியை ஒரு தொடர்புக்கான ஊடகமாக மட்டும் கருதாமல், சமூக விளைச்சலாகவும் பார்க்கிறது. மனித உழைப்பிலிருந்தே மொழி உருவானது என்கிறது. கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் இருவரும் எழுதிய “ஜெர்மன் தத்துவம்” என்ற நூலில் உள்ள சிறப்பான கருத்து இது: "உணர்வைப் போலவே பழமையானது மொழி; பிற மனிதர்களுக்காக இருக்கிற நடைமுறை சார்ந்த ஓர் உணர்வு மொழி;   அந்த ஒரே காரணத்தினால் உண்மையில் அது தனிப்பட்ட முறையில் எனக்காகவும் இருக்கிறது."


இந்தப் புரிதலோடு மார்க்சிய இயக்கம், உணர்வு வெளிப்பாட்டுக்கான மொழியை உணர்ச்சிப்பூர்வமாக உயர்த்தித் தொழுவதில்லை, வெறும் கருவியாகக் கீழிறக்கிப் புறக்கணிப்பதுமில்லை. தமிழும் தமிழ் மண்ணும் மார்க்சியத்தோடு கொண்டுள்ள உறவின் குருதிக் கதகதப்புக்கு இதுவே காரணம்.

[0]

செம்மலர் மார்ச் 2026 இதழில் எனது கட்டுரை

 

No comments: