Thursday, 19 March 2026

‘ஈரானிடம் ஏற்கெனவே தோற்றுவிட்டது அமெரிக்கா!’ போர் அரசியல் ஆய்வாளரின் அதிரடி அறிவிப்பு

 



“அவர்களிடம் மறுகட்டுமானம் செய்து கொள்வதற்கு எதுவுமே மிஞ்சியிருக் காது.” ஈரான் மீது நீசப் போர் தொடுத்தி ருக்கிற டொனால்டு டிரம்ப் இவ்வாறு அறிவித்திருக்கி றார். ஈரானின் அணு ஆயுத வல்லமையை அழிப்பதே நோக்கம் என்று தொடக்கத்தில் கூறியவர், இப்போது இவ்வாறு கூறுவதன் பொருள் அந்நாட்டின் வாழ்வா தாரக் கட்டமைப்புகளை முற்றாகத் தகர்ப்பதே என எவரும் புரிந்துகொள்ளலாம்.

ஈரான் பத்தாண்டு காலம் பின்னுக்குத் தள்ளப் படும், கற்காலத்திற்குத் திரும்பிச் செல்லும், இதுவே கடைசிச் சந்தர்ப்பம்… இவையெல்லாம் அவருடைய போர்க்கூச்சல்கள்.  ஈரானிடமிருந்து மற்ற நாடுகள்  ஒரு துளி எண்ணெய் வாங்கினாலும் கடுமையான வரி விதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அப்பட்டமாக உலகத்தையே மிரட்டியிருக்கிறார்.

உண்மையில் இவையெல்லாம், தெருச் சண்டையில் தோற்றுக்கொண்டிருப்பவனின் ஆத்திரக் கூப்பாடுகளைப் போன்றவையே. இதை உறுதிப்படுத்துவதாக, “அமெரிக்கா ஏற்கெனவே போரில் தோற்றுவிட்டது,” என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார் பிரவீன் சஹானி. இந்திய ராணுவத்தில் பீரங்கிப்படைத் தளபதியாக பணியாற்றி, முன்னணி நாளேடுகளில் பாதுகாப்புத் துறைச் செய்தி யாளராக எழுதி வந்தவர் தற்போது ‘ஃபோர்ஸ்’ (படை)  என்ற பத்திரிகையை நடத்துகிறவரான சஹானி போர்  அரசியல் தொடர்பான அலசல்களைச் செய்து வருகிறார்.

பழையதும் புதியதும்

இந்த மார்ச் 10இல் அவர் வெளியிட்ட காணொலிப் பதிவில், தொழில்நுட்பமும் இலக்குத் திட்டமும் சார்ந்த  மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்து களைக் கூறியிருக்கிறார்.


அமெரிக்கா இன்னும் பழைய காலத்துப் பெரிய ஆயுதங்களையே நம்பியி ருக்கிறது.  ஈரானோ தனது போர்த்திறனை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் வளர்த்துக் கொண்டுள்ளது,” என்று அவர் கருதுகிறார். மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்க அரசின் தலையீடுகள் நெடுங்காலமாகத் தொடரும் கதை. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் ஒரு தீராப் பகை. அணுகுண்டுகள் தயாரிக் கப்படுவதாகக் கூறிக்கொண்டாலும், மூல நோக்கம் என்னவோ எண்ணெய் வள ஆக்கிரமிப்புதான்.

டிரம்ப்பின் சவடால்களையும் கள நிலவரத்தையும் அலசியுள்ள பிரவீன் சஹானி பின்வரும் அவதானிப்புகளைப் பகிர்ந்திருக்கிறார்: அமெரிக்கா இன்னும் இரண்டாம் உலகப்போர் காலத்தின், பனிப்போர் யுகத்தின் ‘இயங்கு ஆற்றல்’ (கைனடிக் எனர்ஜி)) அடிப்படையிலான போர்முறையையே நம்பியிருக்கிறது. பெரிய போர் விமானங்களாலும் விமானந்தாங்கிக் கப்பல்களாலும் ஏவுகணைகளாலும்  தாக்குவதே இயங்கு ஆற்றல் முறை.

ஈரான், சீனா போன்ற நாடுகளோ தகவல் – நுண்ணறிவு அடிப்படையிலான நவீன போர் முறைக்கு மாறிவிட்டன. ஈரான் சிறு சிறு தாக்குதல்கள் என்ற வியூகத்தை விரிவாகக் கையாளுகிறது. அமெரிக்காவிடம் இருப்பது போன்ற பெரிய விமானப் படைகள் இல்லையென்றா லும், அதி நவீன ஆயுதப் பறவைகளும் (ட்ரோன்கள்), ஏவுகணைகளும் கொண்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளை, மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஈரான் ட்ரோன்கள் முறியடிக்கக் கூடியவை.

பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் பெரிய கப்பல்களை ஈரானின் சிறிய வேகப்படகுகளால் எளிதில்  செயலிழக்கச் செய்ய முடியும்.

உடன்பாட்டுப் பிடிமானம்

ஈரான் தனித்து விடப்படவில்லை. சீனாவுடன் செய்து கொண்டுள்ள 25 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பிடிமானம் இருக்கிறது. சீனாவின் ஏஐ, இணைய வழிப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) ஆகியவை  பின்பலமாக உள்ளன. இந்த ஆற்றல் அமெரிக்காவின் தகவல் தொடர்பு வலையமைப்புகளைச் சிதைக்கக் கூடியது. அப்போது அமெரிக்கப் படைகளால் தங்களது நவீன ஆயுதங்களை  ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முடியாமல் போகும்.

ஈரான் தனது சொந்த மண்ணில் போர் புரிகிறது. அமெரிக்கா பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவி லிருந்து படைகளையும் தளவாடங்களையும் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள (சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட) நாடுகளைக் குறிவைத்து ஈரான்  தனது ஏவுகணைகளைத்  திருப்புமானால் அந்த அரசுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கும். ஈரான் ஒரு பெரிய நிலப்பரப்பையும் வலிமையான ராணுவத்தையும் கொண்டிருப்பதால், டிரம்ப் ஒருபோதும் வெற்றியை முழுமைப்படுத்த முடியாது.

அமெரிக்காவின் பழைய காலத்துப்  படைபலம், ஈரா னின் புதிய காலத்துப் போர்த்திறனுக்கு முன்னால் எடுபடாது என்ற கணிப்புக்கு வருகிறார் சஹானி.

இந்த வாதம் எடுபடுமா?

ஈரான் அரசின் உச்சத் தலைவர் ஆயதுல்லா சையது  அலி ஹொசைனி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன், பேரப் பிள்ளைகள், உயர்நிலை அதிகாரிகள் கடந்த பிப்ரவரியில் அமெரிக்க–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இந்தியாவுக்கு வந்து திரும்பிக்கொண்டிருந்த ஈரானின் ராணு வக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி மூழ்கடித்தது. உள்நாட்டில் அரசை எதிர்த்துப் பல இயக்கங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்கா ஏற்கெனவே தோற்றுவிட்டது என்ற வாதம் எடுபடுமா?

ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் தளபதிகளையும் துல்லியமாகத் தாக்கி அழித்ததால் அரசியல் தலைமையை வலுவிழக்கச் செய்துவிட்டதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சஹானியும் வேறு பல கருத்தாளர்களும் சொல்வது போல, ஈரான் வலுவிழந்திருப்பதாகத் தோன்றினாலும், அவர்கள் கட்டமைத்திருக்கிற நவீன போர்முறை அழிந்துவிடவில்லை. எதிரியின் வேட்டைக்குத் தாக்குப் பிடித்து வாழும் வேட்கை வற்றிவிடவில்லை.  புதிய தலைவராக, காயங்களுடன் தப்பிய காமேனி யின் மகன் செய்யது மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. வாரிசு முறையில் நியமிக்கப் படுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளபோதிலும், போர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அது ஏற்கப்பட்டிருக்கிறது.


வரலாற்று அத்தியாயம் 


இங்கே  கொஞ்சம் வரலாற்றுப் பக்கத்தைப் பார்க்கலாம். 1953இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தவரான பிரதமர் முகமது மொசாதேக் அமெ ரிக்க, பிரிட்டன் உளவுப் படைகளால் நீக்கப்பட்டார்.  அப்போது மன்னராக இருந்தவரும் ஷா என்று அழைக்கப்பட்டவருமான முகமது ரெசா பஹ்லவி  கையில் முழு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.

மொசாதேக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது ஏனென்றால், வெனிசுலா போன்ற கதைதான். அவர் ஈரானின் எண்ணெய் வயல்களையும் நிறுவனங்களையும் அரசு டைமையாக்குவதில் ஈடுபட்டார். அவற்றைத் தங்கள் பிடியில் வைத்திருந்த அமெரிக்க, பிரிட்டிஷ் நிறுவனங்க ளுக்கு அந்த நடவடிக்கைகள் ஆத்திரமூட்டின. முழுமையான மக்களாட்சியை நிறுவுவதற்கும் அவர் முயன்றதால் வெறுப்பிலிருந்த ஷா அமெரிக்க சதிகளுக்கு உடந்தையாக இருந்தார். 

இந்த அதிரடிகள் ஈரானிய மக்களுக்கு ஆழமான அரசியல் காயத்தை ஏற்படுத்தின. அது 1979இல் மாபெரும் கிளர்ச்சிக்குத் தலையாய காரணமாக அமைந்தது. இஸ்லாமியப் புரட்சியாக நடந்ததில் அமெரிக்காவின் ஜிம்மி கார்ட்டர் அரசு ஆதரவுடனான மன்னராட்சி தூக்கி எறியப்பட்டாலும், மத குருவின் உச்சத் தலைமையும், நாடாளுமன்றமும் இணைந்த ஆட்சி முறை நிறுவப்பட்டது. உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது மத வல்லுநர்கள் குழு.


அக்குழுவில் இடம்பெறத் தகுதியுள்ளவர்களை உச்சத் தலைவரே முடிவு செய்வார், எனினும் குழுவை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். 


வெற்றிகரமான பின்வாங்கல்கள்


ஆக, டிரம்ப்பின் லட்சியம்  அவர் கூறுவது போல  அணு ஆயுதங்களை ஒழிப்பதல்ல, எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதுதான்.


இன்று இந்தியா உள்பட பல நாடுகளிலும் ஏற்பட்டிருக்கிற பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முழுமுதற் காரணம் டிரம்ப்பின் அடாவடிதான். “நாங்கள் சரணடைவோம் என்று டிரம்ப் நினைப்பது வெறுங்கனவு, போர் நிறுத்தத்திற்கோ பேச்சு வார்த்தைக்கோ இடமில்லை, அமெரிக்காவுக்குத் துணைபோகாத வரையில் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது” என்று ஈரான் தலை வர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் தோல்வி என்றால், இன்றைய சூழலில் அது பிற நாடுகளின் அரசியல் தன்னாளுமைக்கு வெற்றி என்றே பொருள். “போரில் வென்றுவிட்டோம்,” என்கிறார் டிரம்ப். இதற்கு முன்பும், வெற்றி வெற்றி என்று கூவிக்கொண்டே அமெரிக்காவின் பராக்கிரமப் படைகள் பின்வாங்கிய அத்தியாயங்கள் உண்டு. 

வியட்நாம் எல்லையிலிருந்து 18 ஆண்டுகளுக்குப் பின் 1973இல் பின்வாங்கினர் (அப்போது அமெரிக்க அரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன்). இராக்கில் நுழைந்து 8 ஆண்டு கள் இருந்தவர்கள் 2011இல் நாடு திரும்பினர் (பாரக் ஒபாமா). ஆப்கானிஸ்தானில் புகுந்திருந்தவர்கள் 2021இல் மூட்டையைக் கட்டினர் (ஜோ பைடன்). 

உள்நாட்டில் மனித உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட நிலைமைகளுக்கு எதிரான குமுறல்கள் இருக்கின்றனதான். சில குழுக்களுக்கு டிரம்ப் அரசின் கரிசனமும் உண்டு. தன்னெழுச்சியாகப் போராடுகிறவர்கள் தற்போதைய போர்ச்சூழலில் ஒருமைப்பாட்டு உணர்வோடு அமெரிக்க–இஸ்ரேல் கூட்டுக் கயமையை எதிர்க்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிப் போக்குகள் தெளிவுபடுத்துகிற உண்மை –  அமெரிக்காவிக்குத் தற்காலிக முன்னேற்றம் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது; ஆனால் இலக்குச் சண்டையில் டிரம்ப் தோற்றுவிட்டார். தனது அராஜகங்களுக்கு அமெரிக்க மக்களின் ஆதரவையே கூட அவரால் உறுதிப்படுத்த முடியாது.

[0]

தீக்கதிர் நாளேட்டில் (மார்ச் 19, 2026) எனது கட்டுரை

 நா




No comments: