Friday 27 April 2012

“சதம்” அடித்ததற்காக பதவியா?


ச்சின் டெண்டுல்கர் நாட்டின் பெருமைக்குரிய ஒரு விளையாட்டு வீரர்தான். உலக அளவிலான போட்டிகளில் இந்திய அணி திணறிடும்போது சச்சினின் மட்டை கைகொடுக்காதா என்று எதிர்பார்த்து, அது நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ந்திருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்தான் நான். பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நூறாவது நூறு அடித்த அசாதாரண சாதனையை எண்ணி, ஏதோ நானே அதைச் செய்தது போலத் தலையை உயர்த்திக்கொள்கிறவன்தான் நான். 

உலகச் சாதனை செய்த கிரிக்கெட் நட்சத்திரம் என்ற ஒரு பெருமைக்காக அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி... அதை என்னால் ஏற்க முடியவில்லை. நாடாளுமன்றம் மக்களின் பிரச்சனைகளுக்காக, மக்களோடு கலந்து இயங்குகிற, மக்கள் தொண்டர்களும் தலைவர்களும் பங்கேற்க வேண்டிய இடம். மக்களவை உறுப்பினர்களை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து சச்சின் எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்ததில்லை, களம் இறங்கியதில்லை. ஒரு முறை சிவசேனை கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். மும்பை நகரிலிருந்து பிற மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என்று சிவ சேனா கூச்சலிட்டுக்கொண்டிருந்தபோது “மும்பை இந்தியர்கள் எல்லோருக்குமே சொந்தம்தான்” என்று கருத்துக் கூறினார் சச்சின். அப்போது சிவ சேனா தலைவர் பால் தாக்கரே தனது பத்திரிகையில் சச்சினைத் தாக்கி எழுதினார். நாடு முழுவதும் சச்சினுக்கு ஆதரவாகக் கைகள் உயர்ந்தன.

அதன் பின், இப்படிப்பட்ட “சர்ச்சைகளில்” இறங்காமல் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துவதில் கவனமாக இருந்தார் சச்சின். அரசியல், சமுதாயம் சார்ந்த கூர்மையான பிரச்சனைகளில் இளைய தலைமுறையினர் பலர் ஆழ்ந்த அக்கறை கொள்ளாமல், அவர்களது சிந்தனைகள் கிரிக்கெட் ஸ்கோர் போர்டுகளோடு சுருக்கப்பட்டதில் அவருக்கும் பங்கு உண்டு.

ஒரு வேளை அவர் ஏதேனும் சமுதாயப் பணிகளையும் செய்து வந்திருக்கிறார் என்றால் சொல்லுங்கள், நான் திருத்திக்கொள்கிறேன். ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை கொடுத்தார், அன்னதானம் செய்தார், மருத்துவ உதவி செய்தார், குடிசைப்பகுதி குழந்தைகளோடு கிரிக்கெட் விளையாடினார் என்பது போன்ற சேவைகளைச் சொல்லாதீர்கள்...

உலக விளையாட்டரங்கில் இந்தியாவின் பெருமிதம் சச்சின் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அதற்காக மக்கள் பிரதிநிதிகள் சபையில் இடம் என்பது கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர். கோடிக்கணக்கில் அவருக்கு இந்திய அரசு பணம் பரிசளித்திருக்கிறது. இப்போதும் ‘பாரத ரத்னா’ போன்ற நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவிக்கட்டும். குடியரசுத்தலைவர், பிரதமர், எதிர்க்கட்சிகள் என அனைவரும் அவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்துப் பாராட்டிப் பெருமைப்படுத்தட்டும்.

விளையாட்டை விட்டுவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின் அவர் மக்கள் பிரச்சனைகள் பற்றிப் பேசலாம் அலலவா, விளையாட்டுத் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தலாம் அல்லவா... என்று சிலர் கேட்கலாம். அப்படியெல்லாம் ‘விளையாட’ முடியாது. விளையாட்டை விட்டுவிட்டு, அல்லது விளையாடிக்கொண்டே அப்படிப்பட்ட சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவர் வெளிப்படுத்தட்டும். மக்களின் பிரதிநிதியாகவே நாடாளுமன்றத்திற்கு வரட்டும். யார் வேண்டாம் என்கிறது?

சச்சின் மட்டுமல்லாமல் மூத்த திரைப்படக் கலைஞர் ரேகா, தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என்று செய்திகள கூறுகின்றன. இப்படிப்பட்ட கவுரவ நியமனங்களால் நாடாளுமன்றத்தின் கவுரவம் உயர்வதில்லை, மாறாக மக்களுக்காகப் போராடுகிறவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதே என் கருத்து. என் சொந்தக் கருத்து.

1 comment:

SATHISH PANDIAN said...

Not only you , Many people cannot accept this except those who are mad on this guy. One more added in the crowd to sleep........